நடிகர் பிளேட் “வெஸ்லிக்கு” 3 ஆண்டு சிறை ! இது தீர்ப்பு !!!
ஏப்ரல் 25, 2008 இல் 12:30 பிற்பகல் (ALL POSTS, சினிமா, சுவையானவை)
Tags: சினிமா, தீர்ப்பு, ஹாலிவுட்
நாற்பத்து ஐந்து வயது நடிகரான, பிளேட் புகழ், வெஸ்லி வரி செலுத்தாததால் மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.
டாக்டர் ராஜசேகர் கேள்விப்பட்டால் இது தாண்டா தீர்ப்பு என ஒரு படம் எடுத்திருப்பார். அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது பிரபல நடிகர் வெஸ்லி ஸ்னைப்ஸ் க்கு.
அமெரிக்காவின் ஃபுளோரிடா நீதிமன்ற நீதிபதி ஹோட்ஜஸ் இந்த தீர்ப்பை வழங்கினார்.
தன் தவறுக்கு வெஸ்லி மன்னிப்பைக் கோரியபோதும், வரியை அனைத்து விதமான தாமத, வட்டி, அபராதங்களுடன் ( சுமார் $17 மில்லியன் ) கட்டுவதாக உறுதியளித்த போதும் நீதிபதி அசரவில்லை.
வழக்கறிஞர், “பாவம் அப்பாவி அப்பா அவர், அவருக்கு ஐந்து பிள்ளைகள் வயது வெறும் 1 முதல் 19 வரை. மூன்று மனைவிகள், இரண்டு முறை விவாகரத்தானவர்” என்றெல்லாம் கெஞ்சியும் மசியவில்லை.
எனது “ஒரு வயது” மகள் நான் இல்லாமல் தூங்க மாட்டாள் தயவு செய்து மன்னியுங்கள் என வேம்பயர் வெஸ்லி பம்மியதும் பயனளிக்கவில்லை.
வேண்டுமென்றே சட்டத்தை ஏமாற்றுவதற்காக வரியைக் கட்டாமல் இருந்த குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என மனுநீதி சோழனாகியிருக்கிறார் நீதிபதி.
இந்த தீர்ப்பு தனி மனித விருப்பு வெறுப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒட்டு மொத்த அமெரிக்க வாழ் மக்களுக்கும் வரி செலுத்தாவிடில் என்ன நேரும் என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்வதற்காக வழங்கப்படுகிறது என அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டார் நீதிபதி.
எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளைக் குற்றம் சொல்லிச் சொல்லியே மேடையில் உரையாற்றும் நம்மூர் பெரும் தொப்பைகள் (எத்தனை நாளைக்குத் தான் பெருந்தலைகள் என்றே சொல்வது ) இதையெல்லாம் கவனித்து, நம்மூர் நடிகர் நடிகைகளில் வரி செலுத்தாதவர்களை ஜெயிலில் அடைக்க வழி செய்தால் நலம்.
அப்படியே நீதிபதிகளும் நீதிமன்றங்களில் ரசிகர் மன்றங்கள் அமைக்காமல் நடிகர் மீதான வழக்குகளை நேர்மையாய் அணுகி, வெறும் பண விஷயம் தானே (அதை தனியே பெட்டியில் வாங்கிக் கொள்ளலாம்) என கருதாமல் இருத்தலும் அவசியம்.
அப்படிச் செய்தால் மாத சம்பளம் வாங்கும் (அப்பாவி) மக்கள் மட்டுமே ஒழுங்காய் வரி செலுத்தும் நிலை மாறி எல்லோரும் வரி செலுத்தும் நிலை உருவாகும்.








உண்மைத்தமிழன் சொன்னது,
ஏப்ரல் 25, 2008 இல் 3:07 பிற்பகல்
//எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளைக் குற்றம் சொல்லிச் சொல்லியே மேடையில் உரையாற்றும் நம்மூர் பெரும் தொப்பைகள் (எத்தனை நாளைக்குத் தான் பெருந்தலைகள் என்றே சொல்வது ) இதையெல்லாம் கவனித்து, நம்மூர் நடிகர் நடிகைகளில் வரி செலுத்தாதவர்களை ஜெயிலில் அடைக்க வழி செய்தால் நலம்.//
சேவியர் எதுக்கு நடிகர், நடிகைகள்..?
மேலே நீங்கள் சொன்ன நம்மூர் பெரும் தொப்பைகள்தான் முதலில் ஜெயிலில் அடைக்கப்பட வேண்டியவர்கள்..
நம் நாட்டில் தொழிலதிபர்களைவிட, நடிகர், நடிகைகளைவிட அதிகமாக வரி ஏய்ப்பு செய்து வாரிச் சுருட்டுவது சாட்சாத் மக்கள் சேவை செய்யும் அரசியல்வாதிகள். அவர்களை மீறி இங்கே எதுவும் நடக்காது..
அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்துத்தான் நடிகர், நடிகைகள் இன்ன பிற பணக்காரர்கள் அனைவரும் வரி ஏய்ப்பிலிருந்து தப்பிக்கிறார்கள்.
வருடாவருடம் ஆட்சி மாறியவுடன் வணிகவரி, வருமான வரி என்று பல வரித் துறைகளிலும் வரிகள் தள்ளுபடி செய்யப்படுவதைக் கேள்விப்படுகிறீர்களே..? என்ன காரணம்?
3 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் எனில் அதில் 50 லட்சம் இனாமாக கொடுத்தால் போதும்.. அது தள்ளுபடியாகிவிடும்.
நம் நாட்டு வங்கிகளின் தள்ளுபடி செய்யப்பட்டக் கடன்களின் ஆதிமூலத்தை தோண்டித் துருவிப் பாருங்கள். பின்னணியில் ஏதாவது ஒரு அரசியல்வாதி நிச்சயம் இருப்பார். கட்சிகளின் அரசியலும் நீக்கமற கலந்திருக்கும்.
இது மாதிரியான செய்திகளைப் படித்து நமக்கு நாமே பெருமூச்சுவிட்டுக் கொள்ள வேண்டியதுதான்..
மாயாவதி கேஸ் என்ன ஆச்சு சேவியர்..?
இப்போது அந்த அம்மையார் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்..
உச்சநீதிமன்றம் ஆதாரம் உண்டு. விசாரணையைத் துவக்குங்கள் என்று சொல்லியும் அம்மையார் மனம் இறங்கவில்லை. பதவியையும் துறக்கவில்லை.. முடிந்ததைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வரவிருந்த நாளில், வாதாட வேண்டிய மத்திய அரசின் தலைமை வக்கீல் இல்லாத ஒரு பாட்டி எங்கோ செத்துவிட்டதாகச் சொல்லி எஸ்கேப்பாகிறார். அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் தலைவலியால் அவருக்கு அடுத்தவரிடம் பைலை தருகிறார். பைலை வாங்கிய மூன்றாவது வக்கீல், பைலை கோர்ட்டில் சமர்ப்பிக்க மட்டும்தான் எனக்கு உரிமை. வாதாட எனக்கு உரிமையில்லை என்று சொல்லி கோர்ட் ஹாலில் மெளனிக்கிறார்.
எதிர்வாதங்களை எடுத்து வைக்க உரிமையுள்ள மத்திய அரசு ஆட்சிக் கட்டிலில் நிம்மதியாக குறட்டை விட்டுத் தூங்க வேண்டியிருப்பதால், உ.பி.யின் ஏழை அம்பேத்காரான மாயாவதியின் தயவு அவர்களுக்குத் தேவையிருப்பதால் கண்டு கொள்ளாமல் லூஸில் விட்டிருக்கிறது. நீதிபதிகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை.. எழுத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் இன்னமும் எழுத்திலேயே வாசம் செய்கின்றன.
அம்மா மாயாவதியோ இந்த வருடம் அதிகமாக வரி கட்டிய முதல் நபர் என்ற மிகப் பெரிய பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டார். அம்பானிகளே பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.. இது அரசியல்வாதிகளுக்குப் பெருமையான விஷயம்தானே..
வரியை முன்கூட்டியே கட்டிவிட்டதால் எங்கிருந்து பணம் வந்தது என்பதை மட்டும் கேட்டுவிடாமல் கிடைத்தவரைக்கும் லாபம் என்று வாங்கிப் போட்டு அமைதியாக இருக்கிறது வருமான வரித்துறை.. அவர்களை யார் கேட்பது..?
ஜனநாயகமற்ற அரசியல் சட்டத்தை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் ஆடி வருவதை சகித்துக் கொண்டு, உலகின் பெரிய ஜனநாயக நாட்டினர் நாம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம்..
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 25, 2008 இல் 3:10 பிற்பகல்
நெற்றியடியாக, அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள் உண்மைத் தமிழன். இதை நிச்சயம் ஒரு பதிவாகவே போடுங்கள்.