கழைக்கூத்தாடி சமாச்சாரம் நமக்குத் தெரியும். ஐயோ பாவம் ன்னு இரக்கப்படுவோம். ஆனா அதையே வாழ்க்கை இலட்சியமா வெச்சிருக்கிற சிலரும் இருக்கிறாங்க. அவர்களோட பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே கயிறு அல்லது கம்பி மேலே நடப்பது தான். அதில் முக்கியமான நபர் பிலிப் பெட்டி. எங்கே உயரமா எதையாவது பார்த்தால் உடனே இடையே கயிறு கட்டி நடக்க ஆரம்பித்துவிடுவார் மனுஷன்.
1949ல் பிரான்சில் பிறந்த இவருக்கு நடக்கப் பழகிய நாட்களிலேயே இந்த ஆர்வம் வந்து விட்டது. கயிறில் நடப்பார், ஓடுவார், குட்டிக் கரணம் அடிப்பார், சைக்கிள் ஓட்டுவார். இளைஞனான போது சாதாரண மனிதர் தரையில் நின்று கொண்டு செய்யும் பல விஷயங்களை அனாயசமாய் கயிற்றில் நின்று செய்வார். 1960களின் இறுதியில் கயிறு மீது நடப்பதில் கைதேர்ந்த வித்தைக்காரராகிவிட்டார்.
9/11 என்றாலே இரட்டைக் கோபுரங்கள் நினைவுக்கு வருகிறதல்லவா ? அந்த இரட்டைக் கோபுரங்களுக்கிடையே கம்பி கட்டி நடந்தார் ஒருமுறை. அதுதான் அவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. அது ஒரு படு சுவாரஸ்யமான கதை. 1968ல் பாரிஸில் பல் வலிக்குதே என டாக்டரைப் பார்க்கச் சென்றார். கொஞ்சம் கூட்டம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னார்கள். சும்மா இருந்தபோது அங்கே கிடந்த ஒரு புத்தகத்தைப் புரட்டினார். அதில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைப் பற்றியும், அதன் உயரத்தைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். உடனே ஐயாவின் மூளையில் லைட் எரிந்தது. மூளையில் அந்த மேகசினையும் எடுத்துக் கொண்டு ஓடினார்.
அப்போது ஆரம்பமானது அவருடைய “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கலைக் குற்றம்” ! இந்த கட்டிடங்களின் மேல் கம்பி கட்டி நடக்க வேண்டுமென தீர்மானித்தார். ஆறு வருடங்கள் திட்டம் தீட்டினார். கட்டிடங்களோ 1368 அடி உயரம் 140 அடி இடைவெளி என மிரட்டியது. அதற்கு நூற்றுக் கணக்கான கிலோ எடையில் கம்பி வேண்டும். இரண்டு கட்டிடங்களுக்கிடையே கம்பியைக் கட்ட வேண்டும். நல்ல இறுக்கமாகக் கட்ட வேண்டும். இத்தனை எடையையும் 1368 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் ! அதி முக்கியமான சமாச்சாரம், இதெல்லாம் எல்லார் கண்ணிலும் மண்ணைத் தூவி நடக்க வேண்டும் !!!!
நடக்கவே நடக்காது என நமக்குத் தோன்றும் இந்த விஷயத்தை நடத்திக் காட்டிவிட்டார். பல்வேறு சிரமங்களுக்குப் பின் 1974ல் காலை 7.15 மணிக்கு கம்பியில் கால் வைத்து நடந்தார். கொஞ்ச நேரமல்ல முழுதாய் முக்கால் மணி நேரம் கம்பியில் ஒரு சாகச வித்தையையே நிகழ்த்திக் காட்டிவிட்டார். அதற்குள் சாலையில் கூட்டம் திகிலடித்தது. பதட்டப்பட்ட போலீசார் அவரைக் கைது செய்தார்கள்.
உனக்கென்ன பைத்தியமா. இங்கிருந்து விழுந்தா என்ன ஆவே தெரியாதா ? என பேயறைந்தது போல் படபடத்த போலீஸிடம் பிலிப் சொன்னார், “ இங்கிருந்து விழுந்து மரணமடைந்தால் அது எத்துணை இனிமையான மரணம் தெரியுமா” ?
இவருடைய இந்த திட்டமிடலும், செயல்படுத்தலும் “மேன் ஆன் வயர்” எனும் டாக்குமெண்டரி படமாய் வந்து ஆஸ்கரையும் அள்ளியது.
ஃ
Thanks : Anandan Vikatan


த.மணிகண்டன் சொன்னது,
பெப்ரவரி 22, 2010 இல் 10:50 பிற்பகல்
அருமையான பதிவு. அனால் ஒரு சந்தேகம் கழைகூத்தாடி / கலைகூத்தாடி? மனதில் பட்டது தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஷாமா சொன்னது,
பெப்ரவரி 23, 2010 இல் 12:09 மு.பகல்
ஆஸ்கார் மட்டுமா?…. British Academy Film Award (BAFTA), Independent Spirit Award ஐயும் தட்டிக்கொண்ட படமாச்சே!
அடடடா சேவியர்…. எப்படித்தான் இவையெல்லாம் உங்களுக்கு ஞாபகத்தில் வருகின்றனவோ???…
போட்டுத் தாக்குகிறீர்கள் சேவியர்!
சிறு அனுமதி பிளீஸ்!:…
“கழை” கூத்தாடி தான் சரி!….
கழை என்பது மூங்கில்…. அன்று மூங்கில் மேல் நடந்து வித்தை காண்பித்ததால் “கழைக்கூத்தாடி” என்ற பெயர் வந்தது…. நன்றி!
ரிசாத் சொன்னது,
மார்ச் 2, 2010 இல் 4:57 மு.பகல்
ஹையோ ஹையோ இதெல்லாம் என்ன பெரிய சாகசம், நம்ம ஊரு மெயின் ரோடுல நடந்து போறது இல்ல சாகசம் ..
சேவியர் சொன்னது,
மார்ச் 12, 2010 இல் 8:26 பிற்பகல்
//ஹையோ ஹையோ இதெல்லாம் என்ன பெரிய சாகசம், நம்ம ஊரு மெயின் ரோடுல நடந்து போறது இல்ல சாகசம் ..//
நச் பதில்
சேவியர் சொன்னது,
மார்ச் 12, 2010 இல் 8:28 பிற்பகல்
நன்றி ஷாமா
சேவியர் சொன்னது,
மார்ச் 12, 2010 இல் 8:28 பிற்பகல்
வருகைக்கு நன்றி மணி கண்டன். சகோதரி ஷாமா பதில் சொல்லிட்டாங்க…