சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ?

நிமிடத்துக்கு நூறு எஸ்.எம்.எஸ் கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். “மேட் பார் ஈச் அதர்” போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது ?

எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்களின் துவக்கம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் எஸ்.எம்.எஸ் களும், வாங்கிக் குவிக்கும் பரிசுகளும், சிரிப்புகளும், சீண்டலும் திருமணத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ந்து போகிறது. அது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்றுக் கண். தான் வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதட்டம் தம்பதியரிடையே எழுகிறது. அந்த நினைப்பே எரிச்சல், கோபம், மன அழுத்தம் என உருமாறி உருமாறி ஆளை விடுங்க சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

திருமணத்தின் முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாகக் கடப்பதில் இருக்கிறது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருடங்களைக் கடப்பது பலருக்கு சிம்ம சொப்பனம் ! திருமணத்தின் முதல் ஏழு வருட காலத்தை ஆங்கிலத்தில் செவன் இயர் இட்ச் (Seven year itch) என அழைக்கிறார்கள். இல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். டைவர்ஸ் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் எகிறும். இந்த ஏழு வருடப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும் கடந்தால் காத்திருக்கிறது அமைதியான வாழ்க்கை.

இதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார் அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் ( Ted Huston ) என்பவர். இவர் மனித உறவுகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியவர். ஏன் மக்கள் திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸும் கேட்கிறார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் டைவர்ஸ் வாங்குபவர்கள் யார் தெரியுமா ? திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாய் சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள். “தான் தான் எல்லாம்” என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். டைவர்சின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பு இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பதவி பணம், இத்யாதி சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் இவர். 

திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விஷயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகிறது. குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே கூரைக்குள் எலியும், பூனையுமாய் வாழ வேண்டும். அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரியவேண்டும். இந்த சண்டையில் அதிகம் காயப்படுவது அப்பாவா, அம்மாவா என பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும். 

“அது பச்சைக் குழந்தை தானே” என்றோ, அல்லது அது வளர்ந்த குழந்தை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். உண்மையில் சின்னக் குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் குழந்தையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயம் உண்டு. குழந்தைகள் பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரின் சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றன. வீட்டில் சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் ? சண்டையிடலாம் தப்பில்லை என்பதையா ? அல்லது குடும்பம் என்றால் சண்டை போட்டுத் தான் வாழவேண்டும் என்பதையா ? எதுவானாலும் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.

பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.

குழந்தைகள் இதனால் பல தவறான பாடங்களைக் கற்கிறது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கிறது. இதனால் அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமும் கதைகள் ஒப்பிக்கிறது. அவர்களுடைய நோக்கம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பு மட்டுமே. அது சாதாரணமாய் கிடைக்காத போது ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றன. 

பெற்றோரின் சண்டையில் குழந்தைகளை இழுக்கவே கூடாது. பல பெற்றோர் தங்கள் குடுமிப் பிடி சண்டையில் குழந்தையை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும். பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்குத் தர வேண்டும். அதை விடுத்து குழந்தைகளையே இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.

பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவிலுள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார். இவருடைய ஆய்வு முடிவு சிந்திக்க வைக்கிறது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ, விவாதங்களோ வருவது  குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கிறது. தீர்வற்ற சண்டைகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் அவர். 

மனம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி என உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றன. அப்போதும் சில பெற்றோர் சும்மா இருப்பதில்லை. “குழந்தையை ஒழுக்கா கவனிக்காம உனக்கென்ன பெரிய வேலை” என அப்பா கத்துவார். “குழந்தையை பெக்கறது தான் அம்மா வேலை, வளக்கிறது அப்பா வேலை” என அம்மா கத்துவார். முடிவில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மல்லுக் கட்டும்.

சில குடும்பங்களில் “நான் தான் செய்வேன்” எனும் சண்டை பாதி நேரம் ஓடும். “நீ செய்ய வேண்டியது தானே” எனும் சண்டை மீதி நேரம் ஓடும். நாம் செய்வோம் என ஒன்று படாததால் குழந்தையின் சிந்தனையும் இரண்டாய் உடைந்து தொங்கும். எனவே தம்பதியரின் அன்யோன்யம் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கிறார் கனடாவின் குழந்தைகள் நல நிபுணர் கேரி டைரன்பில் ( Gary Direnfeld).

தங்கள் சண்டையில் சிதைந்து போவது தனது செல்லக் குழந்தை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். “தான் செய்வதெல்லாம் சரி” யென நிறுவுவதும், அடுத்தவரை தரக்குறைவாய் பேசுவதும், அவமானப்படுத்துவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத்தான் பாதிக்கிறது.

ஒருவேளை திருமணங்கள் டைவர்ஸில் முடிந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குழந்தை நொறுங்கி விடுகிறது. பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.  

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றியும் தோல்வியும். சண்டையே போடாமல் இருக்க முடியாது. அதுவும் ஆபத்தானதே. அடக்கி வைக்கப்படும் கோபம் நோய்களாகத் தலை நீட்டும். ஆனால் சண்டையைத் திறமையாகக் கையாளவேண்டும்.

கருத்து வேறுபாடு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை !  முடிவில்லாமல் ஒரு சண்டை இருக்கவே கூடாது. விவாதித்து, பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாய் ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். அது உண்மையில் குழந்தைக்கு வழிகாட்டும் என்கிறார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs). இந்த உண்மையைத் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் சிக்கலே இல்லை.

நன்றி : பெண்ணே நீ…

நண்பர்கள் வாக்களிக்க விரும்பினால்…

சேவியர்

20 மறுமொழிகள்

  1. Vigneswari Khanna சொன்னது,

    மார்ச் 17, 2010 இல் 12:39 மு.பகல்

    இக்காலத்திற்குத் தேவையான உபயோகமான பதிவு. நல்ல விரிவான அலசல் நண்பரே.

  2. Rk. Guru சொன்னது,

    மார்ச் 17, 2010 இல் 4:03 மு.பகல்

    உங்க பதிவு நல்ல இருந்தது வாழ்த்துகள். ஆனால் வாக்கியம் வந்ததே வருது. குடும்பத்தில் புரிதல் இல்லையான கஷ்டம்தான். எல்லாம் செக்ஸ் ஒரு காரணம் ஈகோ ஒரு காரணம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    நட்புடன்: Rk. Guru
    http://rkguru.blogspot.com/

  3. prabhadamu சொன்னது,

    மார்ச் 17, 2010 இல் 11:58 மு.பகல்

    அனைவரும் அரிய வேண்டிய தகவல். நன்றி நண்பரே!

  4. பெயரிலி சொன்னது,

    மார்ச் 17, 2010 இல் 1:59 பிற்பகல்

    good information. Hats off.

  5. mathi சொன்னது,

    மார்ச் 18, 2010 இல் 4:47 பிற்பகல்

    அனைவரும் அரிய வேண்டிய தகவல்

  6. sakthi சொன்னது,

    மார்ச் 18, 2010 இல் 4:56 பிற்பகல்

    காதல்ளர்கல் அறிய வேண்டிய ஒரு உண்மை. திருமணத்திற்கு முன்பாக படித்தால் வாழ்க்கைக்கு பயன் தரும்.உங்கள் கருத்துகளை எங்களுக்கு தந்தமைக்கு நன்றிகள் பல……….!!!!!!!!!

  7. ஷாமா சொன்னது,

    மார்ச் 19, 2010 இல் 12:43 மு.பகல்

    //பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை. //

    Psychologists சொல்வதும் இதுவே!….”பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப் படுவார்களேயாயின் முதலில் குடும்பத்தில் தான் ஏதோ ஒன்றை “சரி” செய்ய வேண்டியிருக்கிறது” என.

    எல்லோருக்கும் தேவையான மிகவும் அத்தியாவசிய ஆலோசனைகளைப் பதிவு செய்வதற்காக உங்களுக்கு என் வாழ்த்துகளும்.. நன்றிகளும் சேவியர்!

  8. seasonsali சொன்னது,

    மார்ச் 19, 2010 இல் 7:46 பிற்பகல்

    நல்ல கட்டுரை .குடும்பத்திற்கு தேவை.நன்றி .

  9. Nadodi சொன்னது,

    மார்ச் 20, 2010 இல் 6:31 பிற்பகல்

    Very useful information for everyone . Kalakunga Xavier……
    Thanks and Continue to Rock……..

  10. ரிசாத் சொன்னது,

    மார்ச் 26, 2010 இல் 4:51 மு.பகல்

    ஏதேதோ சொல்கிறார்கள், நமது காதுகளுக்கும் மனதுக்கும் தான் ஏறுவதில்லை.
    கல்யாணத்துக்கு முந்திய காதல் சில மதங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
    ஆனால் இதை யாரும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. காரணம் வயது.
    முரட்டு பிடிவாதமே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு காரணம்.
    முடிவு விவாகரத்து :(

  11. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:19 மு.பகல்

    //ஏதேதோ சொல்கிறார்கள், நமது காதுகளுக்கும் மனதுக்கும் தான் ஏறுவதில்லை.
    கல்யாணத்துக்கு முந்திய காதல் சில மதங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
    ஆனால் இதை யாரும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. காரணம் வயது.
    முரட்டு பிடிவாதமே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு காரணம்.
    முடிவு விவாகரத்து /

    நன்றி ரிசாத்…

  12. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:23 மு.பகல்

    //Very useful information for everyone . Kalakunga Xavier……
    Thanks and Continue to Rock……..//

    நன்றி நாடோடி :D

  13. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:23 மு.பகல்

    //நல்ல கட்டுரை .குடும்பத்திற்கு தேவை.நன்றி .

    //

    நன்றிகள் பல..

  14. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:52 மு.பகல்

    //Psychologists சொல்வதும் இதுவே!….”பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப் படுவார்களேயாயின் முதலில் குடும்பத்தில் தான் ஏதோ ஒன்றை “சரி” செய்ய வேண்டியிருக்கிறது” என.

    எல்லோருக்கும் தேவையான மிகவும் அத்தியாவசிய ஆலோசனைகளைப் பதிவு செய்வதற்காக உங்களுக்கு என் வாழ்த்துகளும்.. நன்றிகளும் சேவியர்!

    //

    நன்றி சகோதரி…

  15. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:53 மு.பகல்

    /காதல்ளர்கல் அறிய வேண்டிய ஒரு உண்மை. திருமணத்திற்கு முன்பாக படித்தால் வாழ்க்கைக்கு பயன் தரும்.உங்கள் கருத்துகளை எங்களுக்கு தந்தமைக்கு நன்றிகள் பல……….!!!!!!!!!//

    நன்றிகள் சக்தி….

  16. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:53 மு.பகல்

    நன்றி மதி & பெயரிலி

  17. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:54 மு.பகல்

    //அனைவரும் அரிய வேண்டிய தகவல். நன்றி நண்பரே!/

    நன்றி பிரபு

  18. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:57 மு.பகல்

    /உங்க பதிவு நல்ல இருந்தது வாழ்த்துகள். ஆனால் வாக்கியம் வந்ததே வருது. குடும்பத்தில் புரிதல் இல்லையான கஷ்டம்தான். எல்லாம் செக்ஸ் ஒரு காரணம் ஈகோ ஒரு காரணம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு/

    நன்றி குரு.. கவனிக்கறேன்…

  19. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 1:00 மு.பகல்

    c//இக்காலத்திற்குத் தேவையான உபயோகமான பதிவு. நல்ல விரிவான அலசல் நண்பரே//

    நண்ரி விக்னேஷ்வரி

  20. மே 2, 2010 இல் 4:34 மு.பகல்

    [...] சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ? [...]


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers