“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.
இவர் சொல்வது ஏதோ பாலியல் பலாத்காரமல்ல. சைக்கோ கொலையாளியின் கைவரிசையுமல்ல. இவர் சொல்வது பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமையைக் குறித்துத் தான். இதை முன்னின்று நடத்துவது வேறுயாருமல்ல பெண்ணின் அம்மாவே தான் !
எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். எஃப்.ஜி.எம் என்பது இதன் சுருக்கம்.
சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன. கலாச்சாரம், மதம், ஆணாதிக்கம், மூடத்தனம் என பல்வேறு காரணங்கள் இதன் பின்னால் உண்டு.
இந்தச் சடங்கைச் செய்ய கைதேர்ந்த மருத்துவர்களோ, அறுவை சிகிச்சை நிபுணர்களோ இருப்பதில்லை. வயதான பாட்டிகள் தான். கத்தி, பிளேடு, உடைந்த கண்ணாடித் துண்டு, கத்திரி, ஊசி நூல் இவை தான் அவர்களுடைய கருவிகள். பெண்ணுறுப்பை வெட்டி எடுத்தபின் கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டி நாற்பது நாட்கள் வரை அப்படியே போட்டு விடுகிறார்கள். காயம் ஆறுவதற்காக !
மிகக் கொடுமையான வலி. அந்த வலியினால் உருவாகும் அதிகமான அதிர்ச்சி. தொற்று நோய். பலவிதமான உடல் சார்ந்த நோய்கள் என இந்த வழக்கம் கொண்டு வரும் சிக்கல்கள் சொல்லி மாளாது. பல இலட்சம் பெண்கள் இந்த நிகழ்வுக்குப் பிறகு கடுமையான மன அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டு தங்கள் வாழ்க்கையையே இழந்து விடுகிறார்கள். பலர் முழுமையான மன நோயாளிகளாகவே மாறிவிடுகிறார்கள் என்பது இன்னும் கொடுமையானது.
சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கடுமையாய் சொல்லியிருக்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். கொடுமையின் அளவை வைத்து உலக நலவாழ்வு நிறுவனம் இந்த வழக்கத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது. கொஞ்சமாய் வெட்டி அகற்றுவது முதல், முழுமையாய் அகற்றி தைத்து வைப்பது வரை என இந்த வகைப்படுத்தல் வேறுபடுகிறது.
இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான பழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது. சொல்லப் போனால் எகிப்திய மம்மிகளில் இதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பழக்கம் மிக அதிக அளவில் பரவியிருப்பது 28 ஆப்பிரிக்க நாடுகளில் என்கின்றனர் ஆய்வாளர்கள். எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98 சதவீதம் பெண்களுக்கும் இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
எல்லா வயதிலும் இந்தச் சடங்கு நடத்தப்படலாம் என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு நான்கு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.
இந்தக் கொடுமையான சடங்குக்கு பெரும்பாலும் கொடூரமான சமூக நம்பிக்கைகளே காரணமாகிவிடுகின்றன. பல பிரதேசங்களில் இந்தச் சடங்கு செய்தால் தான் ஒரு பெண் முழுமையான பெண்ணாகக் கருதப்படுகிறாள். அப்போது தான் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் இந்தச் சடங்கைச் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் இந்த வலிமிகுந்த சடங்கு அந்த பிரதேசங்களில் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது.
இந்தச் சடங்குக்கு பல்வேறு காரணங்கள் அந்தப் பகுதிகளில் உலவுகின்றன. இந்தக் காரணங்கள் எல்லாமே ஆணாதிக்கச் சிந்தனையும், முட்டாள் தன சிந்தனையும் கலந்தே மிதக்கின்றன என்பது கண்கூடு.
“இந்தச் சடங்கைச் செய்தால் பெண்ணுக்கு பாலுணர்வு குறைவாக எழும். இல்லையேல் பெண்கள் திருமணத்துக்கு
முன்பாகவே வேறு ஆண்களுடன் தொடர்பு கொண்டு விடுவார்கள். பெண் திருமணம் வரை கற்போடு இருக்க இந்தச் சடங்கு தான் ஒரே வழி” என்பது அத்தகைய காரணங்களில் ஒன்று !
சில குழுக்கள், இந்தச் சிகிச்சை செய்து கொண்டால் பெண்மைத் தன்மை அதிகரிக்கும் என நம்புகின்றனர். உண்மையில் இந்தச் சிகிச்சை பெண்மைக்கே உரிய உணர்வுகள் பலவற்றைச் சிதைத்து விடுகின்றன. பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் பாலுறவில் திருப்தி எனும் நிலையை அடைவதே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
இந்த சிகிச்சை செய்து கொண்டால் தான் பெண்ணுக்கு உரிய தீட்டு மறைந்து விடும் என்றும், உடலிலுள்ள துர் நாற்றங்கள் நீங்கி விடும் என்றும், முகம் அழகாகும் என்றும் எக்கச் சக்கமான பாட்டிக் கதைகள் இந்தச் சடங்கைச் சுற்றி உலவுகின்றன.
இந்தச் சடங்கை எந்த மதமும் முழுமையாய் ஆதரிக்கவில்லை. இஸ்லாமியர்களிலும் ஒரு சிலர் மட்டுமே ஆதரிக்கின்றனர். ஆனாலும் இது பரந்துபட்ட ஒரு மத வழக்கம் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் இதை மக்களின் அறியாமையாகவோ, அல்லது ஆணாதிக்க சமூகத்தின் மிச்சமாகவோ தான் கருதவேண்டியிருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் குடியமரும் மக்கள் இதை பல இடங்களுக்கும் கொண்டு செல்வது இன்னும் வேதனையான விஷயம். இந்த வழக்கத்தை அவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என எல்லா இடங்களிலிருந்தும் செய்கின்றனர்! கொண்டு செல்பவர்கள் இது எங்கள் கலாச்சாரம் என்றோ, கற்பைப் பாதுகாக்கும் வழக்கம் என்றோ, மத அடையாளம் என்றோ, குடும்ப கவுரவம் என்றோ ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்கின்றனர். இன்னும் சில பெண்கள், இது ஆண்களுக்கு உறவில் அதிக இன்பத்தைக் கொடுக்கும் என்பதற்காகச் செய்து கொள்கிறார்களாம் !
பெண்களுக்கு உடல் அளவிலும், மன அளவிலும் மிகப்பெரிய சுமையாய் இருக்கின்ற இந்தச் சடங்கு குழந்தைப் பிறப்பிலும் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. இந்தச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறப்பதோ, அல்லது தாய் இறந்து போவதோ அதிகம். ஆப்பிரிக்காவில் சுமார் 20 சதவீதம் குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்து போகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த முட்டாள் தனமான சடங்கு தான் என்கிறது 2007ம் ஆண்டு நடந்த உலக நல வாழ்வு நிறுவன ஆய்வு.
உலக அமைப்புகளின் எதிர்ப்புகளுக்குப் பின் பல்வேறு நாடுகள் இந்தப் பழக்கத்தை தடை செய்திருக்கின்றன. குறிப்பாக இந்தப் பழக்கம் அதிகமாக இருந்த எகிப்து 2007ம் ஆண்டு இந்தப் பழக்கத்தைத் தடை செய்து சட்டம் இயற்றியது. இந்தச் சடங்கின் போது ஒரு பன்னிரண்டு வயது சிறுமி பலியாகி, அது ஒரு போராட்டமாய் வெடித்ததே இந்தச் சட்டம் இயற்றப்பட முக்கியக் காரணம்.
இன்னும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு சவுதி அரேபியா, தெற்கு ஜோர்தான், வடக்கு ஈராக், சிரியா, ஓமன், இந்தோனேஷியா என பல இடங்களிலும் இந்தச் சடங்குகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், ஆண்களைத் தாண்டியும் வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருகும் இன்றைய உலகிலும், பெண்களுக்கு எதிராக இத்தகைய வன் கொடுமைகள் நடக்கின்றன என்பதை நினைக்கும் போது உள்ளம் பதறித் தான் போகிறது !
ஃ
நன்றி : பெண்ணே நீ
தமிழிஷில் வாக்களிக்க