எந்திரன் : இசை எனது பார்வையில்…

இனி அடுத்த சில மாதங்களுக்கு இசையை ஆக்கிரமிக்கப் போவது “எந்திரன்” என்று அடித்துச் சொல்கின்றன வசீகரிக்கும் எந்திரன் பாடல்கள்.

“This movie redefines Tamil commercial cinema. I hope it sows seeds to inspire people to take leadership in giving the world original inventions from th e east. I love being a part of it musically… and I hope the audience feels the same. Ellaa pugazhum Iraivanukkae “ எனும் இசைப்புயலின் வசீகரிக்கும் வரிகளுடன் பாடல் வரிகள் அடங்கிய பேம்லெட் அழகாக இருக்கிறது.

வழக்கம் போலவே வைரமுத்து வசீகரிக்கிறார்.

எஃகை வார்த்து,

சிலிகான் சேர்த்து,

வயரூட்டி உயிரூட்டி,

ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி,

அழியாத உடலோடு,

வடியாத உயிரோடு “

 

என ஆரம்பிக்கும் புதிய மனிதா பாடல் அழகாக இருக்கிறது.

“நான் இன்னொரு நான்முகனே

நீ என்பவன் என் மகனே

ஆண் பெற்றவன் ஆண்மகனே

ஆம் உன் பெயர் எந்திரனே”

 

எனுமிடத்தில் வைரமுத்துவின் வசீகரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

காதல் அணுக்கள் பாடலில் வழக்கம் போல அறிவியலைச் சொல்கிறேன் என்று தனது டிரேட் மார்க் பேனாவை எடுத்து “பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி, கால்களைக் கொண்டு தான் ருசியறியும், காதல் கொள்ளும் மனிதப் பூச்சி, கண்களைக் கொண்டு தான் ருசியறியும்” என புன்னகைக்க வைக்கிறார்.

அரிமா அரிமா பாடலிலும் வைரமுத்துவின் பல வரிகள் மயக்குகின்றன. குறிப்பாக

“ராசாத்தி உலோகத்தில் ஆசைத்தீ மூளுதடி

நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்

அக்கினி அணையலையே”

 

“சிற்றின்ப நரம்பு,

சேமித்த இரும்பில்,

சட்டென்று மோகம் பொங்கிற்றே”

“சின்னம் சிறுசின்

இதயம் தின்னும்,

சிலிகான் சிங்கம் நான்”

 

“மேகத்தை உடுத்தும்

மின்னல் தான் நானென்று

ஐஸுக்கே ஐஸை வைக்காதே”

என்று பல வரிகள் வைரமுத்துவின் டிரேட் மார்க் வாசனையில் வசீகரிக்கின்றன.

எந்திரனின் இனிய ஆச்சரியம் பா விஜய் எழுதியிருக்கும் கிளிமாஞ்சாரோ பாடல். இசைப்புயலின் அதிரடி இசையில் விஜயின் வரிகள் அம்சமாய்ப் பொருந்துகின்றன. “ ஏவாளுக்குத் தங்கச்சியே என் கூடத் தான் இருக்கா, ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா ?” எப்போதாவது தான் பா விஜயின் பாடல்கள் எனது ரசனையின் விருப்பப் பட்டியலில் விழும். நீண்ட நாட்களுக்குப் பின் அந்த இடத்தில் வந்திருக்கிறது இந்தப் பாடல்.

எந்திரனின் ஒரே ஏமாற்றம் கார்க்கி ! பெரிதும் எதிர்பார்த்து பொசுக்கென்று போய்விட்ட தீபாவளிப் பட்டாசு போல வரிகள் ஒட்டுமொத்தமான ஏமாற்றத்தின் பக்கத்தில் ! வைரமுத்துவின் அடுத்த இடத்தை கம்பீரமாய் எட்டிப் பிடிக்க நா.முத்துக்குமார் போன்ற வலுவான போட்டியாளர்கள் வரிசையாய் இருக்கையில், கார்க்கி தனக்குக் கிடைத்த அசத்தல் வாய்ப்பை அசால்ட்டாய் விட்டிருக்கிறார் ! இரும்பிலே ஒரு இதயம் பாடல் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் ரசனை வரிகளைக் கொண்டிருக்கிறது !

சன் டிவி விமர்சனம் போல சொல்ல வேண்டுமென்றால்

எந்திரன், இசையில் மயக்கும் மந்திரன்.

வாக்களிக்க…. கிளிக்கவும்…

ஓவரா ஷாப்பிங் பண்றீங்களா ? ஒரு டேஞ்சர் ரிப்போர்ட் !

 திவாகர் நகம் கடித்துக் காத்திருந்தான். அந்த காபி ஷாப்பில் அவன் மட்டும் தான் தனியே இருந்தான். மற்ற எல்லாருமே ஆளாளுக்கு ஒரு துணையுடன் சில்மிஷக் கதைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஓரமாய் அமர்ந்திருந்த சிலர் இவனை ஒரு வேற்றுக் கிரக வாசியைப் போல பார்க்க, திவாகர் தனது நகம் கடிக்கும் வேலையை துரிதப்படுத்தினான்.

இன்னும் ரெண்டு வாரத்தில் கல்யாணம். நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்திருந்தது . வழக்கமாய் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் திவ்யாவின் குரலில் நேற்று ஏகப்பட்ட குழப்பமும் பதட்டமும்.

“திவாகர், நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்” திவ்யாவின் குரலில் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

“என்னாச்சு திவ்யா ? எனி பிராப்ளம் ? “

“எப்படி சொல்றதுன்னு தெரியல, ஆனா முக்கியமான விஷயம் தான். நேர்ல சொல்றேனே”

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம். இனிமே என்ன தயக்கம் ? விஷயத்தைச் சொல்லு” திவாகரின் குரல் கொஞ்சம் பிசிறடித்தது.

“கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த விஷயத்தை உங்க கிட்டே சொல்லணும். அதனால தான் நாளைக்கு காபி ஷாப் வர சொல்றேன். வேற எதுவும் கேக்காதீங்க பிளீஸ்.” திவ்யா போனை வைத்து விட்டார்.

திவாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை. காபி ஷாப்பில் அரை மணி நேரம் முன்னாடியே வந்தவனுக்கு கடிக்கக் கூட போதுமான நகம் இல்லை. என்னவாயிருக்கும் ? திடீரென கல்யாணத்தை நிறுத்தப் போகிறாளா ? ஏதாச்சும் பழைய காதல், கீதல் ன்னு ஏதாச்சும் பூதம் கிளப்பப் போறாளா ? இல்லே வீட்ல ஏதாச்சும் பிரச்சினையா ? இந்தக் கல்யாணம் நடக்குமா ? திவாகரின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் நெல்லை எக்ஸ்பிரஸ் போல தடதடத்த போது திவ்யா வந்தாள்.

எதுவும் பேசாமல் திவாகரின் முன்னால் அமர்ந்த திவ்யாவிடம் கொஞ்சம் பதட்டம் இருந்தது. சென்னை வெயில் ஊற்றியிருந்த நெற்றி வியர்வையை கர்ச்சீப்புக்கு வலிக்காமல் துடைத்துக் கொண்டிருந்தவளை ஏறிட்டான்.

“என்ன திவ்யா ? நீ பாட்டுக்கு என்னென்னவோ சொல்லிட்டு போனை வெச்சுட்டே, இங்க மனுஷன் டென்ஷன்ல தூங்கவே இல்லை தெரியுமா ? சரி, இப்பவாச்சும் சொல்லு என்னாச்சு ?” திவாகர் கேட்டான்.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பட், நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியாது. நாளைக்கு நமக்குள்ள இதனால எதுவும் பிரச்சினை வரக்கூடாதில்லையா ? அதான் …” திவ்யா இழுத்தாள்.

“எதுன்னாலும் தயங்காம சொல்லு திவ்யா… “

“எனக்கு ஒரு பிராப்ளம் இருக்கு..”

“பிராப்ளம் மீன்ஸ் ? வீட்லயா ? வெளியே யாராவது ?..”

“வீட்லயும் இல்ல, வெளியேயும் இல்ல… பிராப்ளத்துக்குக் காரணமும் நான் தான்”

“ஹே… திவ்யா, போதும். டைரக்டா விஷயத்துக்கு வா. உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையா ?” திவாகர் நேரடியாகவே கேட்டான்.

“என்ன திவாகர் இப்படி கேக்கறே…” அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவளுடைய கண்களின் சட்டென கண்ணீர் எட்டிப் பார்த்தது. கேட்கக் கூடாத எதையோ கேட்டுவிட்டோம் என திவாகர் சட்டென உதட்டைக் கடித்தான்.

‘ஐ ஆம் சாரி.. டென்ஷன்ல கேட்டுட்டேன்…. விஷயத்தைச் சொல்லு”

“எப்படி சொல்றதுன்னு தெரியல. ஐ ஆம் எ ஷாப்பஹாலிக் திவாகர்” திவ்யா சொல்லி விட்டு டேபிளையே பார்த்தாள்.

“அப்படின்னா ?…”

“எப்பவும் ஷாப்பிங்னு கிளம்பிப் போய் எதையாச்சும் வாங்கிட்டே இருப்பேன் திவாகர்” திவ்யா சீரியசாகச் சொல்ல திவாகர் சத்தமாய்ச் சிரித்தான்.

“ஹேய்… இதச் சொல்லவா இவ்ளோ பீடிகை போட்டே ? எல்லா பொண்ணுங்களுமே அப்படித் தான். தி நகர்ல போய் பாரு. ஷாப்பிங் பார்ட்டிங்க கைலயும், தலைலயும் மூட்டை முடிச்சோட போறதை.” திவாகர் சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தான்.

“திவாகர், பிளீஸ் பி சீரியஸ். “

“ஓ.கே. ஒகே…. நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன். நல்ல வேளை ….. ” திவாகர் சேரில் சாய்ந்து உட்கார்ந்தான், அவனுடைய முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“நான் ஏதாச்சும் நல்ல ஒரு டாக்டரைப் பாக்கலாம்ன்னு இருக்கேன்” திவ்யா சொன்னாள்.

” பாக்கலாமே ! நம்ம பூபதி அங்கிள் டாக்டர் தானே. அவர் கவுன்சிலிங் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு. அவர் கிட்டே பேசலாம்….. இதெல்லாம் சப்ப மேட்டர்மா…” திவாகர் உற்சாகமாய்ச் சொல்லிக் கொண்டே காபி ஆர்டர் செய்தான். திவ்யா இன்னும் பதட்டம் தணியாதவளாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாளே திவாகர் திவ்யாவையும் அழைத்துக் கொண்டு டாக்டர் பூபதியின் அறைக் கதவைத் தட்டினார்.

“வாப்பா திவாகர். கமின் திவ்யா. ஐ யாம் வெயிட்டிங் பார் யூ …” பூபதி சொல்லிக் கொண்டே எதிரே இருந்த இருக்கைகளைக் காட்டினார். அவர்களுக்குப் பின்னால் கண்ணாடிக் கதவு பெண்ணின் நாணம் போல மென்மையாய் மூடிக் கொண்டது.

“அங்கிள் நாங்க உங்களோட பிஸி டைமை வேஸ்ட் பண்ண விரும்பல. நேத்திக்கே நான் உங்க கிட்டே எல்லா மேட்டரையும் சொல்லிட்டேன். திவ்யாவோட குழப்பத்தை கிளியர் பண்ண வேண்டியது இனி உங்க பொறுப்பு.. ” திவாகர் சிரித்துக் கொண்டே சொல்ல திவ்யா வெட்கமாய் புன்னகைத்தாள். பூபதி பேச ஆரம்பித்தார்.

திவாகர், நீ நினைக்கிற மாதிரி இது ரொம்ப சின்ன விஷயமும் கிடையாது. அதே போல திவ்யா நினைக்கிற அளவுக்கு உலக மஹா பிரச்சினையும் கிடையாது. இது ஒரு வகையான அடிக்ஷன் அவ்வளவு தான். இதை ஓனியோ மேனியா ன்னு கூட சொல்லுவாங்க. உலகத்துல நூறு பேரை எடுத்துப் பாத்தா அதுல ஐந்து முதல் எட்டு பேருக்கு இந்த பிரச்சினை இருக்கு. ஷாப்பிங் பண்ணிட்டே இருக்கிற மைண்ட் செட்.

வீட்ல போய் பாத்தா அலமாரா முழுக்க எக்கச் சக்கம் புதிய புதிய துணி இருக்கும். ஒரு தடவை கூட போட்டிருக்க மாட்டாங்க. ஏன் அதுல தொங்கிட்டு இருக்கிற விலையைக் கூட கிழிச்சிருக்க மாட்டாங்க. நிறைய செருப்பு வாங்கி வெச்சிருப்பாங்க. கவரை கூட பிரிச்சுப் பாத்திருக்க மாட்டாங்க. சிலரு மேக்கப் பொருட்களா வாங்கிக் குவிப்பாங்க. இன்னும் சிலர் நகைகளா வாங்கி அடுக்குவாங்க. இதெல்லாம் இந்த சிக்கலோட அறிகுறிகள் தான்.

திவ்யா பயப்படறதில அர்த்தமிருக்கு. நாளைக்கு வீட்ல இதனால எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதில்லையா. இந்த சிக்கல் வந்தா பணமெல்லாம் கரஞ்சு போயிடும். அது வீட்ல சண்டையைக் கூட உண்டாக்கிடும் இல்லையா ?

திவ்யா ஆமோதிப்பது போல தலையாட்ட, பூபதி தொடர்ந்தார்.

இதுல அப்செட் ஆக ஒண்ணுமே இல்லை. இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கே இந்த நோய் உண்டு. எப்பவும் துணிமணிகளா வாங்கி அடுக்குவாங்க. அவங்களுக்குப் பணத்துக்குத் தான் பிரச்சினையே இல்லையே ! கேக்கணுமா ?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படைல கொஞ்சம் வித்தியாசம் உண்டு. ஆண்கள் மூட் அவுட் ஆகுதுன்னா போய் ஒரு தம் பத்த வைப்பாங்க. ரொம்ப டென்ஷனா இருந்தா ஒரு தம் அடிப்பாங்க. ரொம்ப சோகமா இருந்தா கொஞ்சம் தண்ணி அடிப்பாங்க. இந்த ஷாப்பஹாலிக்ஸ் விஷயமும் கிட்டத் தட்ட அது மாதிரி தான். இந்த பிரச்சினை உள்ளவங்க என்ன பண்ணுவாங்கன்னா, ஷாப்பிங் கிளம்பிடுவாங்க ! மூடு சரியில்லை, போரடிக்குது, மனசுக்கு கஷ்டமா இருக்கு இப்படி என்ன காரணம்னாலும் கடைக்கு ஓடிடுவாங்க.

பெண்களுக்கு மட்டுமில்ல, ஆண்களுக்கும் கூட இந்த நோய் உண்டு. அவங்க கடைல போய் எலக்ட்ரானிக் பொருட்களா வாங்கிக் குவிப்பாங்க. ஆனா 80 முதல் 90 சதவீதம் ஷாப்பஹாலிக்ஸும் பெண்கள் தான்.

“ஏப்ரல் பென்சன்” ன்னு ஒரு உளவியலார் அமெரிக்கால இருக்காரு. அவரு இதைப் பற்றி அருமையா ஒரு புக் எழுதியிருக்காரு. வாய்ப்புக் கிடைச்சா படிச்சுப் பாருங்க. அவர் இந்த பிரச்சினைக்கு எக்கச் சக்க உளவியல் காரணங்களைச் சொல்லியிருக்காரு. தனிமை, மன அழுத்தம், சின்ன வயது ஏக்கம், சின்ன வயது வெறுப்பு இப்படி காரணங்களோட லிஸ்ட் ரொம்பப் பெரிசு.

பூபதி சொல்லிக் கொண்டே போக திவாகர் இடைமறித்தான்.

அங்கிள், நான் கூட அடிக்கடி மொபைல் போன் மாத்துவேன். நிறைய டிவிடி வாங்கிப் போடுவேன். இதெல்லாம் ஷாப்பஹாலிக் அறிகுறிகளா ?

வாங்கறதையும், வாங்காம இருக்கிறதையும் நாமே தீர்மானிச்சா பிரச்சினையே இல்லை. அது நம்ம கட்டுப்பாட்டில இல்லேன்னா தான் சிக்கலே. நான் கொஞ்சம் கேள்வி கேக்கறேன். இதுக்கெல்லாம் ஆமான்னு பதில் சொன்னா, இந்த நோய் இருக்குன்னு அர்த்தம்.

மனசுக்கு ரொம்ப அழுத்தமா இருக்கு, டென்ஷனா இருக்குன்னு ஷாப்பிங் போவீங்களா ?

கடைக்குப் போய் கிடைச்சதையெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து, ஐயோ தெரியாம வாங்கிட்டேனே ன்னு புலம்புவீங்களா ?

கடைக்குப் போறீங்க, ஏதாச்சும் ஒரு பொருளைப் பாத்தா அதோட விலை என்னவா இருந்தாலும் வாங்கிட்டு வருவீங்களா ? முக்கியமா அந்தப் பொருள் நமக்குத் தேவையே இல்லேன்னா கூட !

வாங்கவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணிட்டு போற பொருளைக் கூட மனசைக் கட்டுப் படுத்த முடியாம வாங்கிட்டு வந்துடுவீங்களா ?

அலமாரா நிறைய நீங்க போடவே போடாத துணிங்க நிறைஞ்சு இருக்கா ? கணக்கு வழக்கே பாக்காம செலவு பண்ணி தீக்கறீங்களா ?

என்னால ஷாப்பிங் பண்றதை கண்ட்ரோல் பண்ண முடியலேன்னு நீங்களே நினைக்கிறீங்களா ?

இந்த கேள்விக்கெல்லாம் நீங்க “ஆமா” ன்னு பதில் சொன்னீங்கன்னா உங்களை அறியாமலேயே நீங்க ஒரு ஷாப்பஹாலிக் ஆ இருக்கீங்கன்னு அர்த்தம். இல்லேன்னா நோ பிராப்ளம்.

பூபதி சொல்லிவிட்டு திவ்யாவைப் பார்த்தாள். திவ்யாவின் குரல் மெலிதாய் ஒலித்தது

“நீங்க சொல்றது கரெக்ட் டாக்டர். ஏறக்குறைய எல்லாம் எனக்கு இருக்கு…” திவ்யா சொல்லி விட்டு திவாகரைப் பார்த்தாள். திவாகர் அமைதியாய் இருந்தான். திவாகரின் அந்த அமைதி திவ்யாவை கலங்க வைத்தது.

கவலையே படாதே திவ்யா. இதெல்லாம் மனசோட எண்ணம் தான். மனசை நாம கண்ட்ரோல் பண்ண முடியும். இதுல இருந்து வெளியே வரது பெரிய விஷயம் இல்லை. சில வழிகள் இருக்கு அதை நான் சொல்லித் தரேன்.

பர்ஸ்ல டெபிக் கார்ட், கிரடிட் கார்ட், செக் புக் எதுவும் இருக்கக் கூடாது. பொதுவா ஷாப்பிங் போகும்போ என்னென்ன வாங்கப் போறோமோ அதுக்குத் தேவையான பணம் மட்டும் தான் எடுத்திட்டு போகணும். அப்போ நாம நம்ம மனசைக் கட்டுப் படுத்த முடியாட்டா கூட நம்ம பர்ஸ் நம்மைக் கட்டுப் படுத்திடும்.

ஒரு பொருள் வாங்கணும்னு நினைச்சா உடனே வாங்கக் கூடாது. கடைக்காரர் கிட்டே வெச்சுக்கோங்க நாளைக்கு வந்து வாங்கிக்கறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பணும். ரெண்டு நாள் கழிச்சும் உங்களுக்கு அந்த பொருள் முக்கியம்ன்னு தோணினா, போய் வாங்கலாம்.

இந்த மாசம் இவ்ளோ தான் செலவு பண்ணுவேன்னு எழுதி வைக்கணும். அந்த பட்ஜெட்டைத் தாண்டி எதையுமே வாங்கக் கூடாது. அதுக்கு நீங்க உங்க ஹஸ்பெண்ட் டோட ஹெல்ப்பைக் கேக்கலாம்.

அதே போல நீங்க என்ன வாங்கினாலும் அதை உடனே ஒரு பேப்பர்ல எழுதி வைக்கணும். ஒரு கடலை மிட்டாய் வாங்கினா கூட எழுதுங்க. மாசக் கடைசில நீங்க என்னென்ன வாங்கியிருக்கீங்க, எவ்ளோ செலவு பண்ணியிருக்கீங்க, அதுல எவ்வளவு யூஸ் ஆகியிருக்கு ன்னு திரும்பிப் பாருங்க. உங்க மனசைக் கட்டுப்படுத்த இது ஒரு நல்ல வழி.

என்னென்ன மன நிலையில உங்களுக்கு ஷாப்பிங் போக தோணுதுன்னு கண்டு பிடிங்க. சோகமா, தனிமையா, குழப்பமா, வலியா, ஆனந்தமா, நிராகரிப்பா, கோபமா என்னன்னு கண்டு பிடிங்க. அந்த மனநிலை வரும்போ வேறு ஏதாவது அதை விட சுவாரஸ்யமான விஷயத்துல கவனத்தைச் செலுத்தலாம். உதாரணமா சினிமா பாக்கறது, நண்பர்களைப் போய் பாக்கறது, நாய்க்குட்டி கூட விளையாடறது இப்படி.

ஷாப்பிங் போகும்போ தனியா போறதை விட்டுடுங்க. யாரையாச்சும் கூட்டிட்டு ஷாப்பிங் போங்க. அது நீங்க வாங்கற வேகத்தைக் குறைக்கும்.

பூபதி சொல்லிக் கொண்டே போக, மிகவும் கவனமாய் மனதுக்குள் அனைத்தையும் குறித்துக் கொண்டாள் திவ்யா

எதுவுமே கவலைப் படாதீங்க. இப்படி ஒரு சிக்கல் இருக்கிங்கறதை நீங்க ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கிறது தான் முக்கியம். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மனசை வேற விஷயங்களை ஈடுபடுத்தி குறைச்சுக்கலாம். பூபதி சொல்லி முடிக்க திவாகர் புன்னகைத்தான்.

திவாகரின் புன்னகையைப் பார்த்ததும் திவ்யாவின் மனசுக்குள்ளும் உற்சாகம் முளை விட்டது.

“ரொம்ப நன்றி அங்கிள்…. கிளம்பறோம்” சொல்லி விட்டு பூபதியைப் பார்த்தான் திவாகர்.

“கிளம்பறீங்களா ? ஏதாவது அவசர வேலை இருக்கா ? “

“ஆமா அங்கிள் ஷாப்பிங் போணும்” திவ்யா சொல்ல பூபதி திடுக்கிட்டார்.

“என்ன மறுபடியும் ஷாப்பிங்கா ?”

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் இருக்குல்லயா, இன்னும் கல்யாண டிரஸ் கூட வாங்கல” திவாகர் சிரித்தான்.

“சிரிக்கிறதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு செலவாக்கற கணக்கையும் மறக்காம எழுதி வையுங்க” பூபதி சீரியஸாய் ஜோக்கடிக்க, சிரித்துக் கொண்டே கிளம்பினார்கள் திவாகரும், திவ்யாவும்

Thanks : Pennae Nee

TO VOTE…..

Eagle Eye & The echelon conspiracy – எனது பார்வையில்

Eagle Eye படத்தை வார இறுதியில் பார்த்தேன். “உன்னை எப்போதும் யாரோ உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்” என்பது தான் படத்தின் ஒன் லைன். படம் துவங்கும் போது ஒரு தீவிரவாதியைத் தேடிப் போகிறது ராணுவம். வழக்கம் போல தீவிரவாதி முஸ்லீம் தான். இஸ்லாமியர்களின் நாட்டில் நுழைந்து தெருக்களில் நோட்டமிடுகிறது. உருவ ஒற்றுமையுடைய ஒருவரை தீவிரவாதி என நினைத்து, கம்ப்யூட்டரின் பதிலையும் மீறி கொன்று விடுகிறார்கள். ஒரு இறுதிச் சடங்கில் நிற்கிறார் அந்த மனிதர். அவரும் அவருடன் நிற்கும் அத்தனை பேரும் இறந்து போகிறார்கள்.

படம் நம்ம ஹீரோவை நோக்கித் தாவுகிறது. ஹீரோ, வீட்டு வாடகைக்குப் பணம் கொடுக்கவே தடுமாறும் சராசரி. ஜெராக்ஸ் கடையில் வேலை செய்கிறான். இரட்டையர்களில் ஒருவனான அவனுடன் பிறந்த அவனுடைய சகோதரன் இறந்து விடுகிறான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவனுடைய முகத்தைப் பார்த்து சோகத்தில் திரும்புகிறான் ஹீரோ.

ஒரு ஏடிஎம் மில் பணம் எடுக்க வருகிறான். ஒரு 40 டாலர் கூட பேலன்ஸ் இல்லாத அவனிடம் இப்போது பல இலட்சம் டாலர்கள். நம்ப முடியாமல் வீடுதிரும்புகிறான். அவனுடைய வீடு முழுக்க நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள் இத்யாதிகள். மிரண்டு போய் நிற்பவனுக்கு ஒரு போன்கால் வருகிறது. உடனே ஓடிவிடு, எஃப்.பி.ஐ உன்னைத் தேடி இன்னும் முப்பது வினாடிகளில் வருவார்கள் ! வழக்கமான ஹீரோ போலவே இவனும் நம்ப மறுக்கிறான். எஃப்.பி.ஐ வருகிறது, அலேக்காக அள்ளிக் கொண்டு போகிறது.

“நான் சொல்வது போல செய். இல்லையேல் உன் பையன் காலி” என ஹீரோயினிக்கும் அதே பெண் போன் செய்கிறாள். அமெரிக்காவின் ஒட்டு மொத்த நெட்வொர்க்கையும், சர்வ சகலத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் அந்த முகம் தெரியாத வில்லன்.

போன் காலில் வரும் கட்டளைக்குத் தக்கபடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். உதாசீனப் படுத்த முயலும்போதெல்லாம் விபரீதங்கள் பயங்கரமாக இருக்கின்றன. எனவே அந்த போன் கால் சொல்வது போலெல்லாம் செய்கிறார்கள்.

கடைசியில் பார்த்தால் இந்த வேலைகளையெல்லாம் செய்வது கம்ப்யூட்டர். புதிதாக இணைத்த இண்டெலிஜெண்ட் மென்பொருள் தான் இந்த வேலைகளையெல்லாம் செய்கிறது. கிறிஸ்டல் பாம்ப் என ஒரு புது கான்சப்டை உருவாக்கி சின்ன ஒரு கிறிஸ்டல் துகளை வைத்து ஒரு புட்பால் கிரவுண் அளவுக்கு பகுதியை துவம்சம் செய்து தள்ளலாம் என்றெல்லாம் பேசிக் கொ(ள்)ல்கிறார்கள். ஏகப்பட்ட கார் சேசிங், கட்டிடங்கள் தகர்ப்பு, சாவுகள் என காட்சிகளுக்குப் பின் அந்த கணினியை செயலிழக்கச் செய்து நம்மையும் கொட்டாவி விடச் செய்கிறார்கள்.

இந்தப் படம் பார்த்த கொடுமையை விட அதிக கொடுமை அடுத்து பார்த்த The echelon conspiracy எனும் படம். முந்தைய படத்தின் கொசு அடிச்சான் காப்பி ( ஈயடிச்சான் காப்பின்னு எவ்ளோ நாள் தான் எழுதறது ? ).  அதே போல போன்கால்கள், எச்சரிக்கைகள், இத்யாதிகள். அங்கேயும் அதே கம்ப்யூட்டர். கடைசியில் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்தால் விஷயம் ஓவர்.

இன்னும் எத்தனை காலம் தான் இப்படிப்பட்ட படங்களை தொடர்ந்து சுட்டுத் தள்ளுவாங்களோ தெரியவில்லை. வார் கேம்ஸ், நார்த் பை நார்த்வெஸ்ட், த நெட் என கிடைத்த படங்களிலிருந்தெல்லாம் சுட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் “வி ஆர் அட் வார்” என்று ஒரு வசனம் வந்தாலே படத்தை ஆஃப் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.  செய்யாதது என் தப்பு. நான் செய்த தப்பை நீங்களும் செய்ய வேண்டாமே எனும் ஒரு எச்சரிக்கைக்காகத் தான் இந்தப் பதிவே !

தமிழிஷில் வாக்களிக்க

போபால் : நடந்ததும், நடக்க வேண்டியதும்

 

1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இரவை எத்தனை முறை கழுவினாலும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து அழித்து விட முடியாது. பகல் முழுவதும் வேலை செய்து இரவில் நிம்மதியாய்ப் படுத்த அப்பாவி மக்களுக்கு, இது தான் தங்கள் கடைசி இரவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நள்ளிரவை நெருங்கும் நேரம் திடீரென எல்லோருக்கும் இருமல், நெஞ்செரிப்பு, கண் எரிச்சல். எல்லோரும் சட்டென எழுந்து கொள்கிறார்கள். பார்த்தால் ஊரே இருமுகிறது, பயத்தில் மக்கள் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள்.

அந்தக் களேபரத்தில் ஊர் சட்டென விழித்துக் கொள்ள, காவல் துறை ஊருக்குள் வர, விஷயம் மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது. இது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருது வருகின்ற விஷவாயு !. மக்களின் பதட்டமும், பீதியும்  அதிகரிக்கிறது. அதற்குள் ஒவ்வொருவராக சட் சட்டென்று கீழே விழுந்து இறந்து போக ஆரம்பிக்கின்றனர். விலங்குகள் சத்தமிடுகின்றன. சிறிது நேரத்திலேயே அந்தச் சத்தமும் அடங்கிப் போகிறது.

மக்கள் அந்த நள்ளிரவிலேயே ஊரைக் காலி செய்து விட்டு ஓடுகின்றனர். அடைக்கப்பட்ட காருக்குள் புகுந்து ஓடியவர்கள் தப்பித்தார்கள். கால்களை நம்பி ஓடிய ஏழைகளோ ஏகமாய் மூச்சு வாங்க, அதிக விஷ வாயுவைச் சுவாசித்து வழிகளிலேயே விழுந்து விட்டனர்.

விடியலில் எட்டிப் பார்த்த சூரியனுக்குத் தெரிந்ததெல்லாம் ஊரெங்கும் நிரம்பிக் கிடந்த பிணங்கள் தான். இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஒன்பது பேர் ஊரெங்கும் இறந்து கிடந்தனர். ஒப்பாரி வைக்கக் கூட ஆளில்லாமல் ஊரே மயானமானது. மருத்துவமனைகளெல்லாம் நிற்பதற்கும் இடமில்லாமல் பிதுங்கி வழிந்தன.

அத்துடன் அந்தத் துயரம் நின்று போகவில்லை. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் எட்டாயிரம் பேர் இறந்து போகிறார்கள். அதன் பின் காலங்கள் செல்லச் செல்ல விஷவாயு தாக்கியதால் மீண்டும் இறந்து போனவர்கள் எட்டாயிரம் என்கின்றன புள்ளி விவரங்கள். அந்தப் பிராந்தியத்திலுள்ள விலங்குகளெல்லாம் மாண்டு விட்டன. காற்றின் விஷத்தன்மையாய் மரங்களெல்லாம் பட்டுப் போய்விட்டன.

தனியார் புள்ளி விவரங்கள் போபால் விஷவாயுக் கசிவினால் இறந்து போனவர்கள் இருபதாயிரத்துக்கும் மேல் என்கிறது. பாதிக்கப்பட்டவர்களோ பல இலட்சம். பாதிப்பு என்பது கொஞ்ச நஞ்ச பாதிப்பல்ல ! நிரந்தர ஊனம் எனுமளவுக்கு மிகக் கொடுமையான பாதிப்பு.

உலகிலேயே இப்படி ஒரு மாபெரும் விஷவாயுக் கசிவு நடந்ததே இல்லை. வரலாற்றின் மாபெரும் துயரத்தை இந்தியா சந்தித்தது. இந்தியா முழுவதுமே இந்த அதிர்ச்சி அலை வேகமாய்ப் பாய்ந்தது. நடந்தது தான் என்ன ?

யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் 1969ம் ஆண்டு போபால் என்னுமிடத்திற்கு அருகே ஒரு தொழிற்சாலையை நிறுவியது. 1979ம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் மெத்தில் ஐசோசைனைட் (எம்.ஐ.சி) தயாரிக்கும் கூடம் ஒன்றும் இணைக்கப்பட்டது. இது கொடிய விஷத் தன்மை கொண்டது. உலகின் பல்வேறு தொழிற்சாலைகள் இதற்குப் பதிலாக விஷத் தன்மை குறைந்த வேறு ரசாயனங்களை உருவாக்குகின்றன. ஆனால் கார்பைடு நிறுவனமோ செலவு குறைவு என்பதால் மெத்தில் ஐசோசைனைடை தயாரிக்க முடிவு செய்தது. இது தான் பல்லாயிரம் உயிர்கள் மாண்டுபோகக் காரணம்.

அந்த கொடிய இரவில் நான்கு டன் எம்.ஐ.சி இருந்த கலனுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இது அங்குள்ள தொழிலாளர்களின் கவனக் குறைவு என்று சொல்லப்படுகிறது. கலனில் புகுந்த தண்ணீர் வேதியல் மாற்றத்துக்குள் தள்ளப்பட்டது. இந்த மாற்றத்தை  எக்ஸோ தெர்மிக் ரியாக்சன் என்கிறார்கள். இதனால் கலனின் வெப்பம் 200 டிகிரி செண்டிகிரேட் எனும் அளவுக்கு எகிறி விடுகிறது. இந்த அழுத்தம் கலனிலிருந்து மிக அதிக அளவு வாயு வெளியேறக் காரணமாகிவிடுகிறது. நள்ளிரவு 11.30 மணிக்கு வெளியேற ஆரம்பித்த விஷ வாயு, அதிகாலை நான்கு மணிக்குள் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை உயிரைக் குடித்து, இலட்சக்கணக்கானவர்களை ஊனமாக்கி விடுகிறது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய இந்த நிகழ்வின் வழக்கு கல்வெட்டில் பொறிக்கக் கூடிய அளவுக்கு ஆமை வேகத்தில் நடந்தது. கால்நூற்றாண்டு காலத்துக்குப் பின் வாசிக்கப்பட்ட தீர்ப்பு, வாசிக்கப் படாமலேயே இருந்திருக்கலாம் என எண்ண வைக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய கொடூரத்தின் குற்றவாளிகளுக்கு வெறும் இரண்டாயிரம் டாலர் அபராதம், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை என விஷ வாயுவை விட வீரியமாய் பாய்கிறது தீர்ப்பு.

சரி, இது ஒரு விபத்து தானே ? இதில் வேறென்ன தண்டனை எதிர்பார்க்கிறீர்கள் ? எனும் குரல்கள் ஆங்காங்கே எழுகின்றன. நீங்கள் உங்கள் காரை ஓட்டிக்கொண்டு போகிறீர்கள். வழியில் எதிர்பாராத விதமாக இரண்டு பேரை இடித்துக் கொன்று விட்டால் அது விபத்து. உங்கள் காரில், பிரேக் இல்லை, கியர் வேலை செய்யாது, கிளட்ச் முரண்டு பிடிக்கும், சக்கரம் சரியில்லை, ஹார்ன் சத்தம் போடாது எனும் நிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்டியை காட்டுத் தனமாக ஓட்டி இரண்டு பேரைக் கொன்றால் அதை விபத்தென்று நியாயப்படுத்த முடியுமா ? இது தான் கார்பைடு விஷயத்திலும் நடந்தது.

செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எம்.ஐ.சி யின் குளிர்வசதியை நிறுத்தியிருந்தார்கள். இது நிர்ணயிக்கப்பட்ட 4.5 டிகிரி எனும் குளிர் நிலையில் இருந்திருந்தாலே போதும், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான உயிர்களை விட செலவைக் குறைக்க வேண்டும் என கார்பைடு நிறுவனம் நினைத்திருக்கிறது.

நான்கு வருடங்களாக அலாரங்கள் வேலை செய்யவில்லை. நான்கு எனும் எண்ணிக்கையில் இருக்க வேண்டிய பேக்-அப் சிஸ்டம்  ஒரே ஒன்று தான் இருந்தது. குழாய்களைச் சுத்தம் செய்ய வேண்டிய நீராவி பாய்லர்கள் வேலை செய்யவே இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆபத்து கால நடவடிக்கைகள் எதையுமே சரியான முறையில் செய்திருக்கவில்லை. ஒரு வாரமாக அந்த கலனே சரியான இயங்கு நிலையில் இருக்கவில்லை.  பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பு கருவிகள் எல்லாம் சுவிட்ச் ஆஃப் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கார்பன் ஸ்டீல் குழாயில் இருந்த கசிவை, அதிக செலவாகும் எனும் காரணத்துக்காக நிர்வாகம் பழுது நீக்காமலேயே வைத்திருந்தது. விபத்துக்கு சில மாதங்களுக்கு முன், “இப்படி ஒரு ஆபத்து நடக்கலாம்” என்று விஞ்ஞானிகள் தயாரித்து அளித்த ஆய்வு அறிக்கையையே நிர்வாகம் தூக்கிக் கிடப்பில் போட்டு விட்டது !

இப்போது சொல்லுங்கள். போபாலில் நடந்தது விபத்தா ? அல்லது பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாய் கொண்ட ஒரு நிறுவனத்தின் அலட்சியமா ? இதனால் தான் இன்று இந்தியாவே இந்த தீர்ப்பைக் கேட்டு மனம் உடைந்திருக்கிறது.

இருபதாயிரம் பேரைப் பலிகொண்டு, இரண்டு இலட்சம் பேரை நிரந்தர ஊனமாக்கிய ஒரு கோர விபத்தின் தீர்ப்பு ஏதோ லஞ்சம் வாங்கிய தாசில் தாருக்கு எதிரான வழக்கு போல வெளியாகியிருப்பது வேதனை. அந்த தீர்ப்பையும் கால் நூற்றாண்டு காலம் கழிந்தே சொன்னதால், குற்றவாளிகள் பலர் இயற்கை மரணத்தையே சந்தித்து விட்டார்கள்.

இப்போதைய தேவை இரண்டே இரண்டு தான்.

ஒன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய அடிப்படையில் அதிகபட்ச உதவிகள் செய்யப்பட வேண்டும். ஊழலிலேயே பல்லாயிரம் கோடிகள் அடிபடும்போது, அதே போன்ற ஒரு பெரும் தொகையை மக்களுக்காய்ச் செலவிடுவதில் எந்தத் தவறும் இல்லை.

இரண்டு, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருக்கும் யாருடைய தொழிற்சாலையானாலும் சரி, சரியான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வில்லையேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இழுத்து மூடப்பட வேண்டும்.

இது தான் இந்தியர்களையும், இந்தியாவையும் அரசு நேசிக்கிறது என்பதற்கான ஒரே உதாரணமாக முடியும் !

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க….

How To Train Your Dragon : எனது பார்வையில்….

எனக்கு அனிமேஷன் படங்களின் மீது அலாதிப் பிரியம் உண்டு. இல்லாத ஒரு உலகத்துக்குள் புகுந்து நாமும் ஒரு அங்கமாகிப் போகும் சுவாரஸ்யம் விவரிக்க முடியாதது. பெரும்பாலான ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் ஏமாற்றுவதில்லை. அதிலும் பிக்ஸர், டிரீம்வர்க்ஸ் போன்ற ஜாம்பவான்களின் பட்டறையிலிருந்து வெளிவரும் படங்களை நம்பிப் போய் உட்காரலாம்.

அப்படி சமீபத்தில் வசீகரித்த படங்களில் ஒன்று டிரீம்வர்க்ஸ் தயாரிப்பான “ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகன்”.  அவதார் ஆரம்பித்து வைத்த 3டியின் இரண்டாவது இன்னிங்சில்  இந்தப் படமும் இணைந்திருக்கிறது.

கதை ? அக்மார்க் ஃபேண்டஸி கதை. கிரெசிடா கௌவெல் எழுதி 2003ல் வெளியான நாவலின் திரைப் பதிப்பு.   

பெர்க் தீவில் வசிக்கும் ஆஜானுபாகுவான வைக்கிங் இனத்தவருக்கு ஒரே ஒரு பிரச்சினை. டிராகன்கள். வித விதமான டிராகன்கள். அவ்வப்போது வந்து ஊரையே களேபரம் பண்ணி விட்டு கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போய் விடும். தலை முறை தலைமுறையாக டிராகன்களை வேட்டையாடுவதே இவர்களுடைய தலையாய பிரச்சினையாகிப் போய் விடுகிறது.

வீரம், மரியாதை இத்யாதி எல்லாமே டிராகன் வேட்டையில் எவ்வளவு கில்லாடி என்பதை வைத்து தான் கணக்கிடப்படும். வைக்கிங் தலைவன் ஸ்டாயிக் மலை போன்றவர். கையாலேயே டிராகனை குஸ்தி செய்து விரட்டும் தீரன். அவருடைய ஒரே மகன் ஹிக்கப். அவருக்கு நேர் எதிர். பலவீனமான பல்லி போன்றவர். வாளைத் தூக்கவே வலு இல்லை. ஆனாலும் அவனுக்கு டிராகன்களை வேட்டையாடி தனது பெயரையும் வரலாற்றில் எழுதி வைக்க வேண்டுமென்பது ஆசை.

ஒரு முறை ஒரு டிராகனை அடித்து வீழ்த்தியும் விடுகிறான். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. அடிபட்ட  அந்த டிராகனைத் தேடிப் போகும் ஹிக்கப், தனது இளகிய மனசின் காரணத்தால் அதைக் கொல்லும் வாய்ப்புக் கிடைத்தும் கொல்லாமல் விடுகிறான். அப்படியே அந்த டிராகனுடன் நட்பும் மலர்கிறது. அந்த டிராகனின் உடைந்து போன வாலுக்கு ஒரு செயற்கை வாலையும் தயாரித்து டிராகனில் ஏறி பறக்கவும் செய்கிறான்.

வைக்கிங்கள் டிராகன்களைப் பற்றி எவ்வளவு பெரிய தப்பான அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்பது டிராகன்களுடன் பழகியபின் தான் அவனுக்குத் தெரிய வருகிறது. டிராகன்கள் போர் நடத்துவதே அவர்களுடைய “தலைவன்” டிராகனுக்கு உணவு கொடுக்கத் தான் என்பதையும் புரிந்து கொள்கிறான். அப்புறம் என்ன ? கொடிய டிராகனை அழித்து மற்ற டிராகன்களுடன் மக்கள் நட்பாய் பழகுவதுடன் படம் முடிகிறது.

சுவாரஸ்யமான கதை, மலைப்பூட்டும் கிராபிக்ஸ், பரபரக்கும் காட்சிகள் என இறக்கை கட்டிப் பறக்கிறது படம். இதன் காட்டில் அடை மழை வசூல் என்பதும், இதன் அடுத்த பாகம் 2013ல் வெளிவரும் என்பதும் உப தகவல்கள்.   

குழந்தைகளுக்கும், குழந்தைகளாக மாற விரும்பும் பெரியவர்களுக்கும் ஸ்பெஷல் விருந்து இந்தப் படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை !

தமிழிஷில் வாக்களிக்க…

எந்திரன் 2D ! No 3D !! லேட்டஸ்ட் தகவல்கள்.

ரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது எந்திரன் பட ஷூட்டிங் ! இனி அடுத்த சில மாதங்களுக்கு பரபரப்புகளுக்குப் பஞ்சமிருக்காது.

ஏஸ்.பி.பி யோட துவக்க பாடல், ஏ.ஆர் ரஹ்மானின் அசத்தல் பாடல் என ஆடியோ குறித்தும் ஏகப்பட்ட பில்டப்கள் எகிறிக் கொண்டிருக்கிறது. ஷூட்டிங் கடைசி நாளை ஏதோ காலேஜ் பிரிவு விழா போல நடத்தியதில் “பட்ஜெட்” தெரிகிறது.

முதலில் 3டி யாக வரலாம் என கருதப்பட்ட எந்திரன் 2டி யில் தான் வருகிறது. இப்போதைக்கு 3டி சாத்தியமில்லையாம் ! 

உலகெங்கும் வெளியாகப் போகும் இந்தப் படம் ஆங்கில சப் டைட்டிலோடு வெளிநாடுகளில் வெளியாகுமாம் !

இப்போதைக்கு இமெயிலின் ஹாட் கேக் இந்தப் படங்கள் தான்.

தமிழிஷில் வாக்களிக்க

 

வானம் – திருடப்பட்ட தலைப்பு !

சிலம்பரசனை வைத்து தமிழில் தயாராகி வரும் வானம் படம் தெலுங்கு வேதம் படத்தின் ரீமேக் என்பது பழைய கதை. ஆனால் அந்த “வானம்” எனும் டைட்டிலே திருடப்பட்டது என்பது எக்ஸ்குளூசிவ் நியூ ஸ்டோரி !

இயக்குனர் ஆர்.பாலுவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.எம்.ஆர் வினோதன் ( 94428-30590 ) என்பவர் தான் இந்த டைட்டிலை தனது முதல் படத்துக்காக பதிவு செய்து வைத்திருக்கிறார். ஏகப்பட்ட கனவுகளும், இந்த டைட்டிலும் தான் அவருடைய பையில் ! பல நூல்களையும், இசை ஆல்பங்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். ஏராளமான நாடகங்களை மேடையேற்றியிருக்கும் இவருக்கு சொந்த ஊரில் பெரிய ரசிகர் வட்டாரமே உண்டு.

திடீரென தனது டைட்டிலை சிம்புவின் தலைக்கு மேல் பார்த்ததும் அப்செட் ஆகி விட்டார் மனுஷன். யாரோ பதிவு செய்த தலைப்பை ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட அனுமதி வாங்காமல் தன் படத்துக்கு பயன்படுத்தி விளம்பரம் செய்தவர்களை என்னவென்பது ? என கொதித்து விட்டார்.

ஏற்கனவே இந்தப் படத்துக்காக எல்லா பாடல்களையும் ரிக்கார்டிங் செய்ய பல இலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார். இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் ஆர்.பாலுவின் விளையாடலாம் படம் முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்த மாதம் தனது வானம் படத்தை இயக்குவதாய் முடிவு செய்திருந்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயா ? வுக்கு அப்புறம் செண்டிமெண்டாக வானம் என்று வைக்க நினைப்பதில் தப்பில்லை. ஆனால் வழிப்பறிக் கொள்ளைக்காரன் போல செயல்படுவதிலும் எந்த நியாயமும் இல்லை ! எனும் வினோதனின் வார்த்தைகளில் நியாயம் இல்லாமல் இல்லை.

வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறாராம். தட்ஸ் தமிழில் விரைவில் அப்டேட் எதிர்பார்க்கலாம் !

தமிழிஷில் வாக்களிக்க

அதிகம் பொய் சொல்வது ஆணா ? பெண்ணா ?

 

பொய் சொல்லாத மனுஷன் வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது” ன்னு எல்லாரும் அடிச்சுச் சொல்றாங்க. அவங்க அடிக்கிற அடியைப் பாக்கும்போ நமக்கு அரிச்சந்திரன் மேலயே மைல்டா டவுட் வருது. அவரு மட்டும் எப்படி பொய்யே சொல்லாம வாழ்க்கையை ஓட்டியிருக்காரோ ?.

கொஞ்ச நேரம் உக்காந்து யோசிச்சா இந்த டயலாக் உண்மை தாங்கறது நமக்கே புரியும். காலைல எழும்பி , “ஹே.. இன்னிக்கு காபி நல்லா இருக்கு” ன்னு சொல்ற முதல் பொய்ல ஆரம்பிச்சு  “அப்பப்பா…. செம டிராபிக் ” ங்கற பொய்யோட லேட்டா வீடு வந்து சேரதுக்குள்ளே எத்தனை பொய் சொல்லியிருப்போம் ? கூட்டிக் கழிச்சுப் பாத்தா சில நேரம் நமக்கே மலைப்பா இருக்கும்.

இந்த பொய்ங்கற சமாச்சாரத்தை ரெண்டு பெரிய பிரிவா பிரிக்கிறாங்க. ஒண்ணு அடுத்தவங்களுக்கு இடஞ்சல் இல்லாத பொய்கள். “வாவ்… சுடிதார் கலக்கலா இருக்குடி? எங்கே வாங்கின ?” ன்னு தோழியிடம் சொல்றதோ, “சார், உங்க ஐடியா சூப்பர்” ன்னு மேனேஜர் கிட்டே சொல்றதோ ஒரு வகை. இதெல்லாம் அடுத்தவங்க மனசு நோகக் கூடாதுன்னு சொல்றதா இருக்கலாம். அல்லது அடுத்தவங்களோட தன்னம்பிக்கையை வளர்க்கிறதுக்காக சொல்றதா இருக்கலாம். எப்படியா இருந்தாலும் இதுல டேஞ்சர் இல்லை. இதை வெள்ளைப் பொய்கள் ன்னு ஆங்கிலத்தில சொல்லுவாங்க.

இன்னொரு வகை பொய் தான் டேஞ்சர். ஒரு பொண்ணு கூட பெசண்ட் நகர் பீச்சில சுண்டல் சாப்பிட்டுட்டு, “ ஆபீஸ்ல ஆடிட், அதான் டார்லிங் லேட்” ன்னு மனைவி கிட்டே சொல்றதோ, இல்லேன்னா  “ நான் தம் அடிக்கிறதே இல்லை, சே.. அந்த நாற்றமே எனக்கு உவ்வே..” என்று சொல்றதோ பெரிய பொய்கள் லிஸ்ட்ல வரும்.

எல்லோருக்குமாய் பெய்யும் மழை போல எல்லோருக்குள்ளேயும் கொஞ்சம் பொய் கலந்து தான் இருக்கு. அது இலக்கியத்தில வர செம்புலப் பெயல் நீர் போல கலந்து வரும்போ உண்மையும் பொய்யும் கண்டு பிடிக்க முடியறதில்லை. அதனால “நான் பொய் சொல்ல மாட்டேன்” ன்னு ஒருத்தர் சொன்னா, அதையும் ஒரு பொய்யா அவரோட லிஸ்ட்ல தாராளமா சேத்துக்கலாம்.

அதென்னவோ தெரியல, பெண்கள் தான் அதிகம் பொய் சொல்வாங்கன்னு ஒரு பேச்சை நம்ம ஊரில் ரொம்ப சகஜமா கேக்கலாம். இளச்சவன் தலைல மிளகா அரைக்கிறதுங்கறது இது தான். நம்ம ஊரு தான் காலங் காலமா ஆண்கள் சொல்றதுக்கு “ஆமாம்” போடற ஊராச்சே. அதனால தான் இந்த பழமொழியெல்லாம் இன்னும் கிழ மொழியாகாம வழக்கத்துல இருக்கு.

ஆனா உண்மை என்ன சொல்லுது தெரியுமா ? அதிகமா பொய் சொல்றது  ஆண்கள் தானாம். அப்போ பெண்கள் ? அவங்க திறமையா பொய் சொல்லுவாங்களாம் ! அடடா ! இதுல கூட நுணுக்கமான வெற்றி பெண்களுக்குத் தானா ?

பெண்களோட பொய் ஏரியா ஷாப்பிங். இருக்கிற பணத்தையெல்லாம் ரங்கநாதன் தெருவில இறைச்சிட்டு வந்தா கூட, “ஜஸ்ட் 275 ரூபாய்க்கு ஒரு சாரி எடுத்தேன்ங்க, மேட்சிங் பிளவுள் வெறும் 23 ரூபா தான்” ன்னு அவர்கள் சொல்லும் எவரெஸ்ட் அப்படியே நம்பி விடும் அப்பாவி ஆண்கள் ஏராளம். ரொம்ப உஷாரா விலை ஸ்டிக்கரையெல்லாம் ஏழு கடல் ஏழு மலை தாண்டி பூதத்தோட காலடில போட்டு வெச்சுடுவாங்க. என்ன தான் ஊரையே புரட்டினாலும் கண்டு பிடிக்க முடியாது.

“ பொண்ணுங்க தான் அதிகம் பொய் சொல்வாங்க. நாங்க எல்லாம் அப்பாவிங்க. எவ்ளோ பொய் சொல்லி லவ் பண்ணிட்டு கடைசில என்னைத் தாடி வளர்க்க விட்டுட்டா. பொண்ணுன்னாலே பொய் தான் ” என ஆண்களும், “லவ் பண்ணும்போ என்னென்ன சொல்றாங்க ! கண்ணு அழகா இருக்குங்கறாங்க, பேச்சு பாட்டு மாதிரி இருக்குங்கறாங்க, சிரிச்சா கியூட் ன்னு சொல்றாங்க… எல்லாம் பொய், ஆணுன்னாலே பொய் தான்” என பெண்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கிறாங்க.

சரி நீங்க சண்டை போடாதீங்க, யார் ரொம்பப் பொய் சொல்றதுன்னு நான் சொல்றேன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணினாங்க லண்டன்ல. இதுக்கெல்லாமா போய் ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு நீங்க கேக்கக் கூடாது. அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொல்லுதுன்னா, பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியா மூணு பொய் சொல்றாங்களாம். ஆண்களோ ஒரு நாள் ஆறு பொய் சொல்றாங்களாம் ! இந்த ஆராய்ச்சியே பொய் ன்னு ஆண்கள் போராட்டம் நடத்தாதிருப்பார்களாக.

இந்த ஆராய்ச்சில நிறைய சுவாரஸ்யங்கள். ஆண்களும் பெண்களும் பொதுவா சொல்ற பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல, நல்லா தான் இருக்கேன்” என்பது தானாம்.

 “ஹே.. உன் உடம்பு இளைச்சுடுச்சு டியர். நீ குண்டாவே தெரியல “, “சாரி, செல்போன்ல சிக்னலே கிடைக்கல”, “அந்த நேரம் பாத்து என் போன் பேட்டரி டவுன் ஆயிடுச்சு”, “ஓ… மிஸ்ட் கால் ரொம்ப லேட்டாதாண்டா பாத்தேன்”, “ ரொம்ப எல்லாம் குடிக்கலம்மா, ஜஸ்ட் ஒரே ஒரு ஸ்மால்”, “ இதோ வந்துட்டே இருக்கேன்”, “ இந்த டிராபிக் படுத்துது… செம கடியா இருக்கு” இதெல்லாம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ? இதெல்லாம் ஆண்கள் சகஜமா சொல்ற பொய்களாம் ! உஷார் ஆயிடுங்க அம்மணிகளே !

அப்போ பெண்களோட பொய்கள் லிஸ்ட் ? அது இல்லாமலா ? “ இது புதுசா வாங்கினதில்லீங்க, பழசு தான்”, “ சே… இது ரொம்ப மலிவா கிடைச்சுது”, “ அது எங்கே இருந்துதுன்னே எனக்குத் தெரியாது, நான் அதை தொடவே இல்லை”, “ இல்லையே, நான் அதை எறியவே இல்லையே”, “சாரி.. உங்க போன் கால் மிஸ் பண்ணிட்டேன்”,” இன்னிக்கு ரொம்ப தலை வலியா இருக்குங்க” இதெல்லாம் பெண்களோட பேவரிட் பொய் லிஸ்ட்டாம் ! ஆண்களே, இது கேட்டுக் கேட்டு பழகின வார்த்தைங்க தானே ?

குறிப்பா இந்த ரொமாண்டிக், லவ் காலத்துல பொய்களெல்லாம் நிறுத்தாம வந்துட்டே இருக்கும். வேணும்னா அனுமர் வால், திரௌபதி சேலை இப்படி ஏதாச்சும் புரண உதாரணத்தை மனசுல நினைச்சுக்கோங்க.

“இன்னிக்கு இந்த டிரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே” என அவன் கடலை போட ஆரம்பிக்கும் நிமிஷத்திலிருந்து “ நீ சிரிக்கும்போ உன் கண்ணும் சேர்ந்தே சிரிக்குது”, “ நீ இல்லேன்னா நான் இல்லே”, “உன்னைத் தவிர ஒரு பெண்ணை நான் நினைச்சுக் கூட பாக்க முடியாது” என சகட்டு மேனிக்கு உடைத்துத் தள்ளுவதில் ஏதோ ஒண்ணிரண்டைத் தவிர எல்லாமே அக்மார்க் பொய்கள் தான். ஆனால் என்ன, அந்தப் பொய் தான் அந்த நிமிஷத்துல காதலிக்கும் தேவை. அப்போ தான் வீட்டுக்குப் போற வழியிலேயே “ ஹே.. ஐ மிஸ் யூ டா”, ” ஐ லவ் யூ சோ சோ சோ சோ மச்” என்றெல்லாம் எஸ் எம் எஸ்ஸித் தள்ள முடியும் !

“பெண்கள் அன்பின் வெளிப்பாடாய் செக்ஸை அனுமதிப்பார்கள், ஆண்களோ செக்ஸுக்காக  அன்பை வெளிப்படுத்துவார்கள்” என்பார் ஜேம்ஸ் டாப்சன் எனும் எழுத்தாளர். கிட்டத் தட்ட அது உண்மை என்பதை ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

ஹெல்த் அண்ட் சயின்ஸ் அட்வைசரி குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பல இருட்டுப் பொய்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற சங்கதி போல, பெண்களுடன் உறவு கொள்வதற்காக எக்கச் சக்க பொய் சொல்லியிருக்கிறோம் என ஒத்துக் கொண்ட ஆண்கள் 47 சதவீதமாம் ! அப்பாடா, எல்லா ஆண்களும் பொய் சொல்லல. என் வீட்டுக் காரர் இந்த லிஸ்ட்ல வரமாட்டார் என வீட்டம்மாக்கள் மனசைத் திடப்படுத்திக் கொள்ளலாம். ஆனா பெண்களில் இது 10 சதவீதம் தானாம் !

கல்லூரி மாணவர்கள் இந்த விஷயத்துல எப்படி என ஒரு ஆராய்ச்சி நடத்தியது வாஷிங்டன் ஸ்டேட் அமைப்பு. அங்கேயும் ஆண்கள் தான் முன்னணி. 22 சதவீதம் பேர் சக மாணவிகளை பொய் ஐஸ் மழை பொழிந்து “அந்த” விஷயத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

“அந்த” ஏரியா பொய்களெல்லாம், “போன மாசம் தான் ஹெல்த் செக்கப் பண்னினேன், எனக்கு எயிட்ஸ் மாதிரி நோயெல்லாம் இல்லை”,” நான் கருத்தடை ஆபரேஷன் பண்ணியிருக்கேன்”, “ உன்னைத் தவிர வேறொருத்தியை நான் நெனைக்கவே மாட்டேன்”,” இதான் பஸ்ட் டைம்”, ” ஐ லவ் யூ சோ மச்”, “ இது லாங் லைஃப் பந்தம்”, “ இந்த டைம்ல கர்ப்பம் எல்லாம் ஆகவே ஆகாது… ஐ பிராமிஸ்” என சில்மிச மசாலா பொய்கள் ! இந்த ஏரியாவில் நடந்த பொய்களோட டீட்டெயில்ஸ் எல்லாம் கொஞ்சம் அசைவ வாசனைங்கறதனால இதோட நிறுத்திக்கறேன்.

ஏற்கனவே சொன்னது மாதிரி, பெண்களோட மெயின் பொய் ஏரியா ஷாப்பிங் தான். 75 சதவீதம் பெண்கள் எவ்ளோ பணம் செலவழிச்சோம்ங்கற உண்மையை சொல்லவே மாட்டாங்களாம். 60 சதவீதம் பெண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துலயாவது புருஷனை ஏமாத்தறாங்களாம். வெளிநாடுகள்ல பெண்கள் சொல்லும் பொய்ல கொடுமையான பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, குழந்தைகளும் இல்லை” ங்கறது தானாம். வீட்ல குழந்தைங்க இருக்கிற அம்மாக்கள் சொல்ற பகீர் பொய் இது !

சைக்காலஜிஸ்ட் பெல்லா டி பாலோ பொய் பற்றி சொல்ற தகவல்கள் ஆச்சரியப்படுத்துது. நேரடியா பொய் சொன்னா பல வேளைகள்ல மாட்டிப்பாங்க. அதனால பொய் பார்ட்டிங்க போன்ல தான் அதிகம் பொய் சொல்றாங்களாம். உலகத்துல சொல்லப்படற பொய்கள்ல 60 சதவீதம் பொய்களை துரோகம் பட்டியல்ல சேக்கலாமாம். 70 சதவீதம் பொய்யர்கள் சொன்ன பொய்யை திரும்பத் திரும்ப சொல்றாங்களாம். ஏழு பொய்ல ஒரு பொய் கண்டுபிடிக்கப் படுமாம் ! இப்படியெல்லாம் தன்னோட ஆய்வு முடிவுகளை சைக்காலஜி டுடே மேகசின்ல டாக்டர் பெல்லா டி பாலோ எழுதியிருக்காங்க.

பொய் பேசறவங்கள்ல 4 சதவீதம் பேர் புரபஷனல் பொய்யர்களாம். இவங்களோட பொய்யைக் கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டம் மத்தவங்களோட பொய்யை ஈசியா கண்டு பிடிக்கலாமாம். அதெப்படி ?

பேசும்போ சாதாரணமா பேசறாரா ? இல்லே வித்தியாசமான வார்த்தையெல்லாம் யூஸ் பண்றாரா பாக்கணும். முரணா பேசறாரான்னு கவனிக்கணும்.

பேசறவங்க கிட்டே அவங்க எதிர்பார்க்காத ஒரு கேள்வியை சட்டுன்னு கேளுங்க. அதுலயே பொய்யர்களை நிலை குலைய வெச்சுடும்.

ரொம்ப சைலண்ட் பார்ட்டி ஒரு நாள் கலகலப்பா இருந்தாலோ, கலகலப்புப் பார்ட்டி ரொம்ப சைலண்டா இருந்தாலோ சம்திங் ராங். ஜோக் அடிச்சா கொஞ்சம் டியூப் லைட் மாதிரி சிரிக்கிறாரா ? ஜோக்கே சொல்லாம கூட விழுந்து விழுந்து சிரிக்கிறாரா ? பேசறதுல கொஞ்சம் செயற்கைத் தனம் இருக்கா உஷாராயிடுங்க. பொய்யா இருக்கலாம்.

“நான் நினைக்கிறேன், அப்படித் தான் இருக்கும், நான் நம்பறேன்… “ இப்படியெல்லாம் பேச்சில அடிக்கடி வந்தா கொஞ்சம் சந்தேக கேஸ் தான். அதே போல பாடி லேங்க்வேஜ் கவனிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இல்லேன்னு சொல்லி ஆமான்னு தலையாட்டுவாங்க…

பொய் பார்ட்டிங்க தேவையில்லாம ரொம்ப விளக்கம் குடுப்பாங்க. “ஏங்க லேட்” ன்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டா கூட அஞ்சு நிமிஷம் ஏதாச்சும் விளக்கம் குடுத்துட்டே இருப்பாங்க.

நிறைய பேரு நினைக்கிறாங்க பொய் பேசறவங்க கண்ணைப் பாத்து பேசமாட்டாங்க, முகத்தை திருப்பிக்குவாங்கன்னு. பட், உண்மைல பொய் பேசறவங்க கண்ணை நேருக்கு நேரா பாத்து பேசுவாங்க. அவங்க சொன்னதுக்கு நீங்க எப்படி ரியாக்ஷன் கொடுக்கறீங்கன்னு பாப்பாங்க. சோ, கொஞ்சம் அந்த ஏரியாவிலயும் கவனம் செலுத்தணும். இப்படி கொஞ்சம் கவனமா இருந்தா பொய் பேசறதைக் கண்டு பிடிக்கலாம்.

சுவாரஸ்யமான பொய்கள் அழகு தான். கவிதைக்குப் பொய் அழகுன்னு சொல்றதைப் போல. இலக்கியத்துல வர தற்குறிப்பேற்ற அணியே ஒரு வகையில் பொய் பேசற சமாச்சாரம் தானே ! ஆனா அது இன்னொரு நபரைப் பாதிக்கற அளவுக்கு இருந்தா பொய் பேசறது ரொம்பவே தப்பாயிடும். “பொய்மையும் வாய்மையிடத்து” ங்கறதை தப்பா புரிஞ்சுக்காம இருந்தா சரி !

நன்றி : பெண்ணே நீ !

தமிழிஷில் வாக்களிக்க…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers