டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ?

 வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள் ?  கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். முழிக்காதீங்க…

தந்தையின்  நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத பதின் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை ! அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?   

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரிகையான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது. 

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். “என் டாடி சூப்பர்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், “டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

“டாடி பிளீஸ்… டாடி… வாங்கிக் கொடுங்க டாடி” என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் “டாட்… எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா “ என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். “நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்” எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர “அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது” என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

“எங்க காலம் தான் பொற்காலம்… இப்போ எல்லாம் டெக்னாலஜி சாத்தான் ஆட்டம் போடுது” என பழமை பேசாதீர்கள். அது உங்கள் டீன் ஏஜ் மகளை உங்களிடமிருந்து ரொம்பவே விலக்கி வைத்து விடும். காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் மகள் ஏ.ஆர் ரஹ்மான் பிரியை என்றால் ஒரு ஐ-பாட் வாங்கி நிறைய ஏ.ஆர் ரஹ்மான் பாட்டை நிரப்பிக் கொடுங்கள். அவள் ரசிக்கட்டும். அப்போது தான் நீங்களும் உங்களை இளமையாக்கிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், “என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..” என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும் ! அதை விட்டு விட்டு, “என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா….” என புலம்பித் தள்ளாதீர்கள்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி ! மதிக்கிறீர்கள். சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா ? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், காதல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். “எதுவானாலும் கவலையில்லை … அப்பா இருக்கிறார்” எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.

எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.  அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். “அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது” எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, காதல் எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். “அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.  குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.

இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள் ? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். சின்னச் சின்ன மன வருத்தங்களுக்காக தற்கொலை செய்து கொள்வது கூட இந்த வயதில் சகஜம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். பெரும்பாலான இளம் பெண்கள் புகை, போதை என பரிசோதித்துப் பார்ப்பது இந்தப் பதின் வயதில் தான். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.

ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது “அப்பா தான் உலகம்” எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். “ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்” எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். “என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்”  எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

கடைசியாக ஒன்று. “ என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்”  என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.  அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக ஜெயித்து விட்டீர்கள் என்று பொருள் ! ஜெயிக்க வாழ்த்துக்கள் !

பிடிச்சிருக்குன்னா ஓட்டு போடுங்க…

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்… : நூல் குறித்து….

 

சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.

கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.

சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.

கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.

இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.

காதலில்லாமல் எப்படி

ஒரு நொடி நகர்த்துவது ?

என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !

காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.

வேகமாய் ஓடிக் கிடந்தவன்

நிதானமாய் நடக்கிறான்,

மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்

கனிந்து குழைகிறான்

என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.

“நேரம் போவதெங்கே தெரிகிறது ?

உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?

 

எனைக் கேட்டுப் போனேன்

மரணம் வந்து சேர்ந்தது.

எதைக் கேட்டுப் போனால்

நீ வந்து சேர்வாய் ?

நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.

புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.

அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.

குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன.  உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.

புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.

இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.

பிடித்திருந்தால்…வாக்களியுங்கள்

தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

 

“இங்கே தானே வெச்சேன் எங்கே போய் தொலஞ்சுச்சோ தெரியலையே” ங்கற களேபரம் காலம் காலமா நடந்திட்டு இருக்கிற ஒரு விஷயம் தான். தாத்தாக்கள் தலையில கண்ணாடியை வெச்சுட்டு கண்ணாடி எங்கேன்னு தேடுவாங்க. பாட்டிங்களுக்கு சீப்புப் பிரச்சினை. இப்போ ஹைடெக் காலத்துல இளசுகளோட பிரச்சினை மொபைல். என் மொபைலைப் பாத்தீங்களா என தேடுவது வீடுகளில் வாடிக்கையாகிவிட்டது.

மொபைலை வைத்துப் பேசலாம் என்பது முந்தைய நிலை. “பேசவும் செய்யலாம்” என்பது தான் இன்றைய நிலை. இன்றைய மனிதர்களின் ஆறாம் விரல் இந்த மொபைல் தான். அது இல்லாவிட்டால் ஏதோ ஆளில்லாத தீவில் தத்தளிக்கும் ஆமையைப் போல தடுமாறி விடுகிறது மனசு. பெயர் இல்லாத மனுஷன் கூட இருக்கலாம், ஆனா போன் இல்லாத மனுஷன் இருக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு இப்போதைய மொபைல் ஆதிக்கம் கலிபோர்னியா காட்டுத் தீயாய் பற்றிப் படர்கிறது.

இந்த இடத்துல தான் நியூட்டனோட மூணாம் விளையாடுது. எந்த வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு ! மொபைல் போன் அதிகரிக்க அதிகரிக்க, மொபைல் போன் தொலைந்து போவதும் அதிகரிக்கிறது. மொபைல் போன் தொலைந்து போவது இரண்டு வகையாக நடக்கலாம். ஒன்று கவனக் குறைவாய் நீங்களே உங்க மொபைலை எங்கேயாவது விட்டு விட்டு வந்திருக்கலாம். அல்லது யாரோ கில்லாடி கிட்டு உங்களிடமிருந்து அதைச் சுட்டுவிட்டிருக்கலாம்.

முன்பெல்லாம் மொபைலை யாரேனும் திருடிவிட்டால் அது உடனே அவருடைய சொந்தப் பொருளாக ஆகிவிடும். சிம்மைக் கழற்றி எறிந்து விட்டால் போன் கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆகிவிடும். போனைக் கண்டுபிடிப்பதை விட நாலு கொம்புள்ள குதிரையைக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படியல்ல. டெக்னாலஜி வளர்கிறது. மொபைலைத் திருடிச் சென்றாலும் அதை விரைவிலேயே கண்டுபிடித்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். 

ஒரு மொபைலை வாங்கினவுடனே என்ன பண்ணுவீங்க ? பேனா வாங்கினா காதலி பெயரை எழுதிப் பாக்கற மாதிரி யாருக்காச்சும் போன் பண்ணி ரொமான்சுவீங்களா ? இல்லேன்னா ஒரு சாமி படத்தை போட்டோ எடுத்து வெச்சுப்பீங்களா ? இல்லை ஓரத்துல மஞ்சள் தடவி பூஜை பண்ணுவீங்களா ? இது எதுவானாலும் அது இரண்டாம் பட்சம் தான். முதல்ல போனோட IMEI நம்பரை நோட் பண்ணி வையுங்க. அதான் ரொம்ப முக்கியம். இண்டர்நேஷனல் மொபைல் எக்யுப்மெண்ட் ஐடெண்டிடி என்பது தான் இதன் விரிவாக்கம். அதாவது சர்வதேச மொபைல் எண். ஒவ்வொரு மொபைலுக்கும் தனித் தன்மையான ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது பதினைந்து இலக்க எண்.

உங்க மொபைல்ல பொதுவா பேட்டரிக்குக் கீழே இந்த எண் குறிக்கப் பட்டிருக்கும். முதலில் இந்த எண்ணை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். . நம்பர் எங்கே இருக்குன்னு கண்டு பிடிக்க முடியலேன்னா போன்ல இருந்து *#06# ன்னு டைப் பண்ணுங்க, போனே அந்த எண்ணை திரையில் காட்டும் !

மேட் இன் சீனா, கொரியன் போன்களை வாங்கினால் இந்த எண் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அத்தகைய போன்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏன்னா, இப்படிப்பட்ட போன்களை கண்டு பிடிக்க முடியாது, இத்தனைய போன்கள் தீவிரவாதம் போன்ற தப்பான விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.

மொபைல் தொலைந்து போனால் என்ன செய்வீர்கள். புலம்புவதையும், புது மொபைல் வாங்குவதையும் தவிர ! பெரும்பாலானவர்கள் இந்த இரண்டு விஷயங்களோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். மொபைல் தொலைந்து போனால் இரண்டு இடங்களுக்கு அந்த விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ! இரண்டாவது உங்களுடைய செல்போன் சேவையாளர். இந்த இரண்டு இடங்களிலும் போக உங்கள் ஐ.எம்.இ.ஐ எண் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

அது இல்லாமல் போனைக் கண்டுபிடிப்பது வெகு சிரமம். இந்த எண் இருந்தால் போனைத் திருடியவர் எந்த சிம்மைப் போட்டாலும் கண்டுபிடிக்க வாய்ப்பு அதிகம். காரணம் அந்த போனிலிருந்து செல்லும் எல்லா அழைப்புகளிலும் இந்த எண் ஒரு சங்கேதக் குறியீடாய் இணைந்திருக்கும் என்பது தான் !  ஒருவேளை அப்படி கண்டுபிடிக்கவே முடியாவிட்டால் கூட அந்த போனை முழுமையாகச் செயலிழக்கச் செய்ய முடியும் ! அதனால் தான் இந்த எண் மிகவும் முக்கியமான இடத்தில் கம்பீரமாய் இருக்கிறது. யூ.கே உட்பட சில நாடுகளில் இந்த ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்ற முயல்வது கூட சட்டப்படி குற்றமாகும். சில நாடுகளில் அது கிரிமினல் குற்றம் !

இதையும் தாண்டி பல ஹைடெக் விஷயங்கள் இப்போதைய போன்களில் உண்டு. முக்கியமானது சில மென்பொருட்கள். சில மென்பொருட்களை உங்கள் மொபைலில் நிறுவினால் உங்கள் மொபைல் போன் இருக்கும் இடத்தை கம்ப்யூட்டர் மூலமாகவே கண்டு பிடித்து விட முடியும் என்பது லேட்டஸ்ட் டெக்னாலஜி.

சில சாப்ஃட்வேர்கள் சுவாரஸ்யமானவை. திருட்டுப் பேர்வழி நம்ம சிம்மை கழற்றி விட்டு ஒரு புது சிம் போட்டதும் ஒரு மெசேஜ் வரும். “ஐயா, இது உங்க போன் இல்லை. இது இந்த நபரோடது. மரியாதையா குடுத்துடுங்க” ன்னு. அதே நேரம் உங்கள் புது எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும் உங்க போன் எங்கே இருக்குங்கற விவரங்களோடு. அதோட முடியுமான்னா அதுவும் இல்லை. போன் சத்தம் போட ஆரம்பிச்சுடும். திருடினவனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடும். வேற வழியில்லாம சுவிட்ச் ஆஃப்லயே வெச்சிருக்க வேண்டியது தான்.

ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் சில குறிப்பிட்ட மென்பொருட்களை பரிந்துரை செய்வதால், நீங்கள் எந்த மொபைல் வைத்திருக்கிறீர்கள் என்பதை வைத்து அதை முடிவு செய்யுங்கள். மொபைல் வாங்கும்போதே கடைகளில் அதற்குரிய விவரங்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் போனில் “பாஸ்வேட்” வசதி உண்டென்றால் அதை முதலில் செயல்படுத்துங்கள். ஒவ்வொரு வாட்டியும் பாஸ்வேர்ட் போடணுமா என சலிச்சுக்காதீங்க. உங்கள் மொபைல் தொலைந்தாலும் உங்கள் தகவல்கள் பெரும்பாலும் பாதுகாப்பாய் இருக்க அது உதவும். உங்கள் சேவை தரும் நிறுவனத்திடம் சொல்லி உங்கள் எண்ணை “தடை” செய்ய வேண்டியது இன்னொரு முக்கியமான விஷயம்.

மொபைல் போன்களை கண்டு பிடிக்க டிராக்கர் இணைய தளங்களும் உள்ளன.  இதில் உங்கள் தொலைந்து போன மொபைல் எங்கே இருக்கிறது என்பதை வரைபடம் மூலமாக கண்டு பிடித்து விடும் வசதி உண்டு. குறிப்பாக ஜி.பி.எஸ் எனப்படும் வசதியுள்ள மொபைல் போன்களைத் திருடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இப்படி ஏகப்பட்ட டெக்னாலஜி வசீகரங்கள் இருப்பதால் மொபைலைக் காணோமென்றால் உடனே பதட்டப்பட்டு, குழம்பி, பயந்து, எரிச்சலடையாதீர்கள். வருமுன் காக்கும் வழிகளை மனதில் கொள்ளுங்கள். 

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

கல்கியில் உங்க “ஊர்ப்பாசத்தை” எழுதுங்க….

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கவிதைச் சாலை தளத்தில் கிராமம் பற்றிய எனது பதிவு ஒன்றைப் போட்டிருந்தேன். அது கல்கி உதவி ஆசிரியரின் கண்ணில் பட்டு விட என்னைத் தொடர்பு கொண்டார்.

உங்களுடைய கிராம அனுபவம் சுவையாக இருந்தது. வாசகர்களுடைய கிராம அனுபவங்களை வாரா வாரம் எழுதும் “ஊர்ப்பாசம்” எனும் ஒரு தொடர் கொண்டு வந்தால் என்ன எனும் ஐடியா, உங்கள் படைப்பைப் படித்ததும் எனக்குத் தோன்றியது என்றார்.

நம்ம படைப்பு கூட யாருக்கோ ஒரு ஐடியா குடுக்கிறதே என ஓரத்தில் எழுந்த மகிழ்ச்சியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு

“ரொம்ப சந்தோசம்” என்றேன்.

“முதலில் உங்கள் கிராமம் பற்றி எழுதி அனுப்புங்கள். கிராமத்தின் புகைப்படங்களும், உங்கள் புகைப்படமும் அனுப்புங்கள்” என்றார்.

அனுப்பினேன்.

இந்த வார கல்கியில் “நல்லா இருக்கியா மக்களே” எனும் தலைப்பில் அது வெளியாகியிருக்கிறது.

இணைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தைச் சொல்லுங்கள். அவர்கள் விரும்பினால் அவர்களுடைய ஊரின் நினைவுகளையும், நெகிழ்வுகளையும் பதிவு செய்யலாம். ஊரின் புகைப்படங்களும், எழுதுபவரின் புகைப்படமும் ரொம்ப முக்கியம் என்றார்.

கண்டிப்பா சொல்றேன் – என்றேன். 

சொல்லி விட்டேன். எல்லோருடைய மனதிலும் பசுமையாய் அசைபோட்டுக் கிடக்கும் ஊர்ப்பாசத்தைத் தட்டி எழுப்புங்கள். கல்கிக்கு அனுப்புங்கள்.

அவருடைய மின்னஞ்சல் முகவரி இது தான் : suryakalki@gmail.com

சமீப காலமாக அதிகரித்திருக்கும் இணைய, அச்சு ஊடகக் கைகுலுக்கல் எழுத்துகளுக்கிடையேயான வேறுபாட்டை விரைவிலேயே அகற்றிவிடும் எனும் நம்பிக்கையைத் தருகிறது.

எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

பிடித்திருந்தால்… வாக்களியுங்கள்…

கல்கியில் எனது : “நல்லா இருக்கியா மக்களே…”

இலக்கியங்கள் சொன்ன எழிலெல்லாம் இன்னும் மிச்சம் இருப்பது கிராமத்தின் பக்கங்களில் மட்டும் தான் என்பது புரட்டிப் பார்க்கும் போது புரிகிறது. குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள எனது கிராமத்தின் பெயர் பரக்குன்று. நாகர்கோவிலில் இருந்து 39 கிலோமீட்டர் தூரம், மார்த்தாண்டத்திலிருந்து ஏழு கிலோமீட்டர், களியக்காவிளையிலிருந்து மூன்று கிலோமீட்டர் என வரைபடம் சொல்லும். கேரளாவும் தமிழகமும் கைகுலுக்கிக் கொள்ளும் குளிர்த்தென்றல் இந்தக் கிராமத்தின் பூர்வீகச் சொத்து.

பரந்த குன்றுகளால் அமைந்த இடமானதால் இதற்கு இந்தப் பெயர்வந்ததாக பாட்டிமார் பெயர்க்காரணம் சொல்கிறார்கள். காடும் காடு சார்ந்த இடமுமான மருத நிலப் பகுதியின் மிச்சமாக இருக்கிறது கிராமம். ஒரு காலத்தில் மலையிலிருந்து கரடிகள் இறங்கி வந்து குடிசை வீட்டுக்குள் எட்டிப் பார்த்துச் செல்லும் எனும் சிலிர்ப்புக் கதைகளும் உலவுவதுண்டு.

நாகரீகம் நாலுகால் பாய்ச்சலில் கிராமத்திற்குள் நுழைந்த போதிலும் இன்னும் தனது அடையாளங்களை அவிழ்த்தெறியாமல் இருப்பது சுகமான அனுபவம். மத நல்லிணக்கத்தின் இதமான காற்று நிதமும் வீசிக்கொண்டிருக்கும் எனது  கிராமத்தில் இரண்டு மத அடையாளங்கள் உண்டு. ஒன்று இந்துக்களின் வழிபாட்டு இடமான சாஸ்தான் கோயில். அடர்ந்த ஆலமரமும், அழகிய சர்ப்பக் குளமும் அருகிலேயே அமைந்திருக்கும் இந்துக் கோயிலும் அழகியலின் வெளிப்பாடுகள். பாம்புகள் தொங்கி விளையாடும் ஆலமரத்தைப் பார்க்கையில் பால்யத்தில் மனதுக்குள் பயம் ஓடித் திரியும்.

இன்னொன்று இயேசுவின் திரு இருதய ஆலயம். 1957ம் ஆண்டு ஜெர்மன் பாதிரியார் ஜேம்ஸ் தொம்மரால் கட்டப்பட்ட இந்தக் கோயில் இந்திய மத அடையாளங்களோடு கட்டப்பட்டிருப்பது வியப்பு. உள்ளே தூண்களெல்லாம் இந்துக் கோயில்களின் பிரதிபலிப்பு, கோபுரம் இஸ்லாமிய தொழுகைக் கூடத்தின் பிரதிபலிப்பு என சர்வ மத ஒற்றுமையின் அடையாளமாய் நிமிர்ந்து நிற்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. இவர் பக்கத்து ஊரில் கட்டிய ஆலயத்தில் இயேசு வேட்டி கட்டிக் கொண்டு நிற்கிறார் என்பது சுவாரஸ்யச் செய்தி.

இந்துக்களின் ஆலய விழாக்களில் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வதும், கிறிஸ்தவ மேடைகளில் இந்துத் தலைவர்கள் சமத்துவ உரை நிகழ்த்துவதுமெல்லாம் மனதை நனைக்கும் உறவின் வெளிப்பாடுகள்.

கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் என அணிவகுத்திருந்த கிராமத்தில் காங்கிரீட் வீடுகளெல்லாம் சமீபத்திய அறிமுகங்கள் தான். மலையாளக் கரையோரம் இருப்பதால் கேரள விழாக்களெல்லாம் இங்கே பிரசித்தம். ஓணத்துக்கு ஊஞ்சல் போடுவதும், ஓணக்கோடி உடுத்தி அத்தப்பூ வைப்பதும் இங்கே சர்வசாதாரணம் ! நடந்தே மலையாள மண்ணுக்குப் போய்விடலாம் என்பதால், கலாச்சாரக் கைகுலுக்கல்களெல்லாம் நிகழ்ந்தே தீரும் என்பதே உண்மை.

எங்கள் கிராமத்து மொழியிலும் மலையாளத்தின் வாசம் வீசுகிறது. எனினும் இதை வேனாடு மலைத் தமிழ் என சிற்றிதழ்க் குழுக்கள் அழைக்கின்றன. செந்தமிழ் வார்த்தைகளான சூலி போன்றவையெல்லாம் இங்கே புழங்கப்படுவதில் தமிழின் தொன்மை புலனாகிறது என்று சிலாகிக்கின்றனர் ஆய்வாளர்கள். நலமா என்பதை “நல்லா இருக்கியா மக்களே” என வெற்றிலை வாசத்துடன் விசாரிக்கும் திண்ணைப் பாட்டிகளின் அன்பில் நிரம்பிக் கிடக்கிறது பாசம்.

கிராமத்தில் நேர்வகிடெடுத்துப் பாயும் சானல்(கால்வாய்) பால்யகாலத்து நீச்சல் நிலையம். வருடங்களின் புரட்டலில் அது வலுவிழந்து போனாலும் இன்னும் முழுமையாய் அழிந்து போகாதது ஒரு தற்காலிக ஆறுதல்.

குடை சரிசெய்ய வருபவர்களும், அம்மி கொத்த வருபவர்களும், பாத்திரத்தில் ஓட்டை அடைக்க வருபவர்களும், அவல் விற்க வருபவர்களெல்லாம் இங்கும் கதைகளாகிப் போய்விட்டார்கள். மலையிலிருந்து சங்கிலி இழுத்து வரும் பேய்களெல்லாம் இப்போது மின்சாரப் பூசாரியால் துரத்தப்பட்டிருக்கிறது.

பொதுவுடமையாய் இருந்த புறுத்திச் சக்கை (அன்னாசிப்பழம்), வரிக்கை சக்கை (பலா ), பேரக்கை (கொய்யா) , பப்பாளி எல்லாவற்றையும் இன்று ரப்பர் அழித்திருப்பது மனதுக்குள் கனமாய் வந்து அமர்ந்து கொள்கிறது. பனை மரங்களால் நிரம்பியிருந்த தோட்டங்களிலெல்லாம் இன்று ரப்பர் மரமே ஆட்சி செலுத்துகிறது. நாற்றுகளும், வாழைமரங்களும் அணிவகுத்திருந்த வயல்களில் கூட இன்று ரப்பர் மரங்கள் ஒற்றைக் காலூன்றிவிட்டன.

ஒவ்வோர் ஆண்டும் நிகழும் மாற்றங்கள் விரைவில் கிராமம் தனது தனித்தன்மையை முற்றிலும் இழந்து விடுமோ எனும் அச்சத்தைத் தராமலில்லை. இருந்தாலும் வெளியூர்ப் பறவைகளான நகர்ப்புறவாசிகளுக்கு பரக்குன்று கிராமம் விடுமுறை வேடந்தாங்கலாய் தான் இருக்கிறது.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers