ஜூ.வி : அமெரிக்க அதிர்ச்சி !

k1கல்லறைப் பயணத்துக்கும் காசில்லை

“சொல்லவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அண்ணன் தற்கொலை பண்ணிகிட்டார். ஏதோ பணக் கஷ்டத்துல இருந்திருக்கார் போல. தலையில துப்பாக்கியை வெச்சு சுட்டிருக்கார். உயிர் போயிடுச்சு. அவரோட அறையில இருந்து உங்க அட்ரஸ் கிடச்சுது. இப்போ அவரோட உடல் இங்கே மார்ச்சுவரில தாஇருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” மெதுவாய் பேசுகிறது குரல்.

“ஐயோ..என் அண்ணனா ? இறந்துட்டாரா ?” மறுமுனையில் பெண்ணின் குரல் பதறுகிறது.

“ஆமாம்மா. உடம்பு இங்கே தான் இருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” குரல் மறுபடியும் அமைதியாய் ஒலிக்கிறது.

மறுமுனையில் கொஞ்ச நேரம் மௌனம். பின் இறுகிய குரல் விசும்பலுடன் பேசத் துவங்குகிறது

“என் கிட்டே பணமே இல்லை. அவரோட இறுதிச் சடங்கை செய்ய எனக்கு வசதியும் இல்லை. அவரோட இறுதிச் சடங்கை நீங்களே செஞ்சுடுங்க. கொஞ்சம் அன்போட செய்யுங்க பிளீஸ்…” அழுகையுடன் மறுமுனை போன் வைக்கப்படுகிறது.

இது ஏதோ ஒரு அவார்ட் திரைப்படத்தில் வரும் சோகக் காட்சியல்ல. ஆப்பிரிக்கா, சோமாலியா போன்ற நாடுகளின் குடிசைகளிலிருந்து ஒலிக்கும் குரலுமல்ல. இந்த குரல் ஒலிப்பது சாட்சாத் அமெரிக்காவிலிருந்து ! இது ஒரு அபூர்வ நிகழ்வும் அல்ல. இப்படிப் பட்டப் பேச்சைத் தினமும் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் எவர்கிரீன் கல்லறைத் தோட்ட நிர்வாகி ஆல்பர்ட் காஸ்கின்

உலகின் வல்லரசு. பெரிய அண்ணன். நிலவுக்கே கூட சட்டென போய்வரக் கூடிய வசதி. நினைத்த நேரத்தில் வேண்டாத நாட்டின் தலையில் குண்டு போடக் கூடிய கர்வம். வரிசை வரிசையாய் கண்ணாடி மாளிகைகள். டாலர் கட்டுகள். கோட் சூட்டுகள். இப்படிப் பார்த்துப் பார்த்தே பழகிப் போன அமெரிக்கா இப்போது நொடிந்து கிடக்கிறது.

அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சில ஆண்டுகளுக்கு முன் யாரேனும் சொல்லியிருந்தால் அது முதல் பரிசு பெறக் கூடிய நகைச்சுவையாய் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கோ அது கசப்பான உண்மையாகியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்கிக் கொண்டிருந்த வங்கிகளுக்குத் தான் ஆரம்பித்தது முதல் சிக்கல். யாருமே பணம் திருப்பிக் கட்டாமல் வங்கிகள் திவாலாயின. காட்டுத் தீயாய் பரவிய இந்த அழிவு, பிற வங்கிகள், ஆட்டோ மொபைல், கிரெடிட் கார்ட் என எதையும் விட்டு வைக்கவில்லை. இந்த டிராகனின் தீப்பிழம்புகளிலிருந்து தப்பிப் பிழைத்தவை வெகு சொற்பமே. காய்ந்து போன இலைகளைப் போல வேலைகளிலிருந்து மக்கள் உதிர ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் வேலையில்லாமல் பரிதவிக்கும் அமெரிக்கர்கள் சுமார் 10 சதவீதம் பேர் !

ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் கொண்டாட்டம் என இருந்த அமெரிக்கர்களுக்கு வேலையில்லையேல் என்ன செய்வதென புரியவில்லை. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக் கூட கையில் பணமில்லாமல் புலம்ப வேண்டிய நிலமை. வேலை இருந்த வரைக்கும் கம்பெனி மருத்துவக் காப்பீடு கொடுத்து வந்தது. வேலையில்லையேல் கைக்காசை வைத்துக் கொண்டுதான் அதையும் வாங்க வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லையேல் எப்படி மருத்துவக் காப்பீட்டுக்கு மாதா மாதம் பிரீமியம் கட்டுவது ?

மருத்துவக் காப்பீடு இல்லாமல் மருத்துவ மனைக்குப் போனால் அவ்வளவு தான். தீட்டித் தள்ளி விடுவார்கள். இன்றைய தேதியில் சுமார் 57 சதவீதம் அமெரிக்கர்கள் தேவையான் மருத்துவக் காப்பீடு வாங்கப் பணமில்லாமல் இருக்கிறார்கள் என்கிறது “காமன்வெல்த் ஃபண்ட்” நடத்திய ஆய்வு.

மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களுக்கு விபத்தோ, பெரிய நோயோ வந்துவிட்டால் சாவு ஒன்று தான் முடிவு. அமெரிக்காவில் சமீப காலமாக நடக்கும் பெரும்பாலான தற்கொலைகளுக்கும் காரணம் இந்த திடீர் ஏழ்மையே. தற்கொலைகளுடனும் எல்லாம் முடிந்து போவதில்லை. அவற்றைத் தொடர்கின்றன அடக்கம் செய்யக் கூட முடியாத துயரக் கதைகள். விபத்திலோ, நோயிலோ பலியான சகோதரர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் என பல உடல்களால் நிரம்பி வழிகின்றன மார்ச்சுவரிகள்.

“பணமில்லை, நீங்களே இறுதிச் சடங்கைச் செய்யுங்களேன் பிளீஸ்” என கண்ணீருடன் கெஞ்சுபவர்களின் எண்ணிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36 சதவீதம் அதிகம். இறுதிச் சடங்கு செய்யவேண்டுமென்றால் செலவு அப்படி இப்படி சுமார் 10,000 டாலர்கள் ஆகிவிடும். அதை அரசாங்கம் செய்துவிட்டால் சாம்பலை மட்டும் ஒரு மாதம் கழிந்து சென்று வாங்கிக் கொள்ளலாம். அதற்கான செலவு சுமார் 350 டாலர்கள் மட்டுமே.

“என்னிடம் அப்பாவை எரிக்கக் கூட பணம் இல்லை என மகன் சொல்கிறான். மகனை எரிக்கப் பணம் இல்லை என்று அம்மா சொல்கிறார். இப்படி ஒரு கொடூரமான துயரத்தை நான் சந்தித்ததேயில்லை என நிலைகுலைந்து போய் பேசுகிறார் டேவிட் ஸ்மித் எனும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர இன்வெஸ்டிகேட்டர்.

“பன்னிரண்டு வருடங்களாக “இறுதிச் சடங்குகளை நடத்தும் குழு”வின் இயக்குனராக இருக்கிறேன். இதுவரை இப்படி அதிக எண்ணிக்கையில் பிணங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததே இல்லை. இறுதிச் சடங்குகளை நடத்த எல்லோருமே விரும்புகிறார்கள், ஆனால் பாவம் வசதியின்றித் தவிக்கிறார்கள்” என பதறுகிறார் பாப் ஆச்சர்மான்

இப்படி அடுக்கடுக்காய், திகில் நிரம்பிய, பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருப்பது கலிபோர்னியாவின் முன்னணி நாளிதழான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ். கையில் பணமில்லை. வாழ வழியில்லை. அப்படியே செத்துப் போனால் கூட இறுதிச் சடங்கு செய்யவும் பணமில்லை. இப்படி அடுக்கடுக்கான துயரங்களுடன் தான் நகர்கிறது இன்றைய அமெரிக்கர்களின் வாழ்க்கை.

தமிழிஷில் வாக்களிக்க…

திமுகவுக்கு 30 இடங்கள் ! சி.ஐ.டி ரிப்போர்ட்டால் அதிமுக அதிர்ச்சி !

 karunanidhi3

தமிழகம் முழுவதும் தேர்தல் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொழுத்த வேட்டை அடித்திருப்பது சி.ஐ.டி ரிப்போர்ட் தயாரிப்பவர்களுக்குத் தான் போலிருக்கிறது.

இந்தத் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு ? இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் ? நேற்று எனது நிலை என்ன ? இன்று அவனது நிலை என்ன ? என எல்லா இடங்களிலிருந்தும் வந்து குவியும் “பிசினஸ்” கால்களால் பிஸி யின் உச்சத்தில் இருக்கின்றனர் அவர்கள்.

தேர்தல் துவங்கிய நேரத்தில் திமுக வுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்திருந்த அவர்கள் கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் அதிமுக கூட்டணியின் கை ஓங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த அறிக்கைக்குப் பின் திமுக சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஓடியது. கலைஞரும் உற்சாகக் கட்டுரைகளை உடன் பிறப்புக்களுக்காய் அள்ளி வீசினார். சுதாரித்து ஓடிய திமுக கையிலெடுத்த ஆயுதம் அரசு ஊழியர்கள்!

அரசுப் பணியாளர் அமைப்புகள் அனைத்தையும் சந்தித்து, வெளிப்படையான ஆதரவு கேட்டும், அதிமுக காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பட்டியலிட்டும் விவாதங்கள் நிகழ்ந்தன.

அரசு அலுவலர்கள் அமைதியாய் இருந்தால் அவர்கள் அதிமுக ஆதரவாளர்கள் போல ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டு விடும் இதன் மூலம் திமுக வலுவிழந்து போகும் என தகவல்கள் பரிமாறப்பட்டு அவர்களை லாவகமாக திமுகவின் பக்கம் இழுத்திருக்கின்றனர்.

அரசு அலுவலர்களும் தங்கள் தழும்புகளைத் தடவிக்கொண்டே திமுகவுக்கு ஆதரவளிக்க உறுதியளித்தார்களாம்.

கூடவே ஈழத் தமிழர் பிரச்சாரம், தமிழ் செல்வன் மறைவுக் கவிதை, அது இது என எல்லா பிரயோகங்களையும் திமுக நாலா புறங்களிலும் வீசி முடிந்தவரைக்கும் மீன்பிடிக்க முயல்கிறது.

வடமாநிலத் தலைவர்களின் தமிழகப் பிரச்சாரம் போன்றவையும் திமுகவை வலுப்படுத்தியிருக்கிறதாம்.

எதிரணி தரப்பில் பெரும்பாலும் நிகழும் தனிமனிதத் தாக்குதல்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லையாம். அதிலும் கலைஞரின் உடல்நலக் குறைபாடை விமர்சித்த பேச்சுகள் மக்கள் மத்தியில் எதிர் அலையையே உருவாக்கியிருக்கிறதாம்.

இப்படி நடந்த களேபர மாற்றங்களினால் இடைப்பட்ட வாரத்தில் தடுமாறிய திமுக மீண்டும் எழுந்து முப்பது இடங்களைப் பிடிக்கக் கூடிய நிலையில் இன்றைக்கு இருக்கிறதாம்.

இப்படி அக்கு வேறு ஆணி வேறாக தமிழகம் முழுவதும் உள்ளம் தகவல்களுடன் வந்திருக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட் திமுகவினரை மேலும் உற்சாகமாய் களம் காண வாய்ப்பளித்திருக்கிறது. அதிமுகவினரோ திடீர் அதிர்ச்சியில் உள்ளனராம்.

அதிலும் குறிப்பாக பா.ம.க வுக்கு அதிகபட்சம் இரண்டு இடங்கள் மட்டுமே என அறிக்கை கூறியிருப்பதும், பாமக தொகுதி ஒன்றில் தேமுதிக வெல்ல வாய்ப்பு உண்டு என அறிக்கை சொல்லியிருப்பதும் மருத்துவரின் வயிற்றில் பாதரசம் கரைக்கிறதாம்.

என்ன சி.ஐ.டி ரிப்போர்ட்டோ ? மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !. இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியத் தான் போகிறது.

ஜெயிப்பது நாடகமா, சினிமாவா என்பது !

வேட்பாளர்களை கதிகலங்க வைக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட்கள் !

7karunanidhi1அந்தக் கட்சி இந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர் தேர்வுக் குளறுபடி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் இன்னும் யாரை எங்கே நிறுத்தலாம் எனும் முடிவுக்கே வராமல் குய்யோ முய்யோ என கூச்சல் போட்டு கட்சியின் மானத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலை விட வேட்பாளர் தேர்வே அவர்களுக்கு பெரும் சவாலாகிக் கொண்டிருக்கிறது !

மதிமுக, பாமக, போன்ற “வேறு வழியில்லா” கட்சிகள் ஏற்கனவே நினைத்து வைத்திருந்தவர்களை நிறுத்தி விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

தனிக் கட்சிகளால் அப்படி ஒதுங்க முடியவில்லை. திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை அதிமுக அதிரடியாக மாற்றி பரபரப்பை ஏற்படுத்த, தே.மு.தி.க தனது மதுரை வேட்பாளரை மாற்ற அடுத்த மாற்றத்துக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க!

மூன்று நான்கு வேட்பாளர்களை தி.மு.க மாற்றலாம் எனும் செய்தி திமுக வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது.

அதில் முக்கியமானவர், தன் படத்துக்கு, தானே போஸ்டர் ஒட்டி, தானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, படம் பார்க்க வருபவர்களுக்கு தன் செலவில் பிரியாணியும் வாங்கிக் கொடுக்கும் “நாயகன்” ரித்தீஷ் !  ”அவருக்கெல்லாம் சீட் கொடுத்து தலைமை எங்களை  அவமானப்படுத்தும் என நினைக்கவில்லை” என கொதித்துப் போய் திரிகின்றனர் காலம் காலமாய் திமுகவுக்கு விசுவாசமாய் உழைத்து வந்த ராமநாதபுரம் பகுதி தொண்டர்கள்.

தூத்துக்குடி வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை மீது மக்களிடையே ஆதரவே இல்லை. ஒரு செக்ஸ் டாக்டர்ப்பா அவரு என கிண்டலடிப்பதிலேயே மக்கள் குறியாக இருக்கிறார்களாம். சி.ஐ.டி ரிப்போர்ட் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது திமுக தலைமை.

இன்னொன்று கள்ளக்குறிச்சி, அங்கே ஆதிசங்கரருக்கு மவுசு இல்லையாம்.

நான்காவது குமரி !

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் நின்றால் நிச்சயம் தோல்வி என்பது தான் இன்றைய நிலமை. அங்குள்ள காங்கிரஸ் மக்கள் அவ்வளவு தூரம் கொதித்துப் போயிருக்கின்றனர். எனவே ஹெலன் டேவிட்சனை மாற்றிவிட்டு வைகோ போட்டியிடப் போகும் விருதுநகருக்கு திமுக தனது இடத்தை மாற்றலாமா எனவும் யோசிக்கிறது.

இந்த மாற்றங்களையெல்லாம் கொளுத்திப் போடுவது சி.ஐ.டி ரிப்போர்ட்கள். மதுரையையே பெரும்பாலும் மையமாக வைத்து இயங்கும் இந்த சிஐடி குழுக்கள் தொகுதிகளில் சென்று கண்டறிந்து வரும் செய்திகள் பலவும் அரசியல் தலைமை இடங்களைக் கதி கலங்க வைக்கிறதாம்.

எப்படித் தான் இவர்களெல்லாம் பல அடுக்கு கண்களில் மண்ணைத் தூவி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்கள் என்பதே தலைமைகளின் தலையை உலுக்கும் பிரச்சனையாகியிருக்கிறது.

ஆங்காங்கே மாறிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றவர்களைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் தில்லு முல்லு செய்து போலி ரிப்போர்ட்களைத் தயாரித்து தலைமையின் கண்ணில் மண்ணைத் தூவியவர்கள் அதிர்ந்து தான் போயிருக்கிறார்களாம்.

இந்த மாற்றங்கள் மீது கலைஞருக்கு உடன்பாடில்லையாம். ஆனால் அழகிரியும், ஸ்டாலினும் இந்த மாற்றங்கள் வராவிடில் தேவையில்லாமல் தோல்வியை விரும்பி அழைப்பது போல் ஆகிவிடும் என அழுத்தம் கொடுக்கின்றனராம். விஷயம் ரொம்ப நாள் உள்ளுக்குள்ளேயே இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

எங்க ஊருல ஒரு பழமொழி உண்டு !

மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா – 1

dmdk

அரசியல் சதுரங்க விளையாட்டு பரபரப்புக் கட்டத்தை எட்டியிருப்பதை சென்னையின் மூலை முடுக்கெங்கும் காண முடிகிறது.

தேமுதிக இப்படி ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. வீசோ வீசென்று அவரை நோக்கி எல்லா விதமான வலைகளும் வீசப்படுகின்றன.

விஜயகாந்துக்கு பல கவலைகள் இருக்கின்றன.

ஒன்று, திமுக, அதிமுக – போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன். வைத்தால்…., ,என்றெல்லாம் வீர வசனங்களைப் பேசியதால் தான் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. கூட்டணி வைத்தால் அந்த இமேஜ் பாதிக்கப்படலாம் என்பது ஒரு குவார்டர் கவலை.

ஒருவேளை கூட்டணி வைக்காமல் போனாலும் வாக்குச் சதவீதம் குறைந்து போய் சிக்கல் உருவாகலாம் என்பது ஒன்னொரு ஆஃப் கவலை.

எனினும் இந்தக் கவலைகளையெல்லாம் விட மிகப்பெரிய ஃபுள் கவலை விஜயகாந்துக்கு இருக்கும் கடன்.

சுமார் 750 கோடி வரை ஒரு தனி நபரிடமே கடனாய் வைத்திருக்கிறாராம் விஜயகாந்த். அப்படியானால் அந்தக் கடனை கொஞ்சமேனும் அடைக்க ஏதாவது வழி செய்ய வேண்டுமே !

7 இடங்களும் 600 கோடி ரூபாய்களும்

வேண்டும்.

என்பது தான் தேமுதிக தரப்பிலிருந்து திமுக வுக்கு அனுப்பப்பட்ட செய்தியாம். அதாவது பா.ம.க வுக்கு 6 இடங்கள் திமுக ஒதுக்கினால் தனக்கு அதை விட ஒரு இடம் அதிகமாய் ஒதுக்கி ஏழு இடங்கள் வேண்டும் என கேப்டன் கர்ஜித்தாராம்.

கூடவே அந்த 600 !!! கோடி !!!! தமிழனுக்கு “வாக்கு” தான் முக்கியம் !!!! கொஞ்சம் கொஞ்சமாச்சும் கடனை அடைக்கணும்ல! !

திமுக தரப்போ, காங்கிரசைக் கூப்பிட்டு பெருசுங்களா உங்களுக்கு 15 சீட் !

அதுல நீங்க எப்படி வேணும்னாலும் பேசிக்கோங்க. வேணும்னா தேமுதிக க்கு 7 குடுத்துட்டு நீங்க 8 இடத்துல போட்டியிட்டாலும் எனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என புள்ளி வைத்துவிட்டதாம்.

எனினும், அரசியலில் புள்ளிகள் மாறுவதும், நீள்வதும் அழிவதும் எல்லாம் சகஜமாச்சே. பா.ம.க திமுகவில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் (அன்பு மணி சும்மா விடுவாரா என்ன ? ) தேமுதிகவுக்கு அதைவிட அதிக இடங்கள் தருவது சாத்தியமில்லை என்பது திமுகவின் வாதம். பாவம் காங்கிரஸ் தான் இதில் மாட்டிக் கொண்டு டவலுக்குக் கீழே விரல் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆமா, வை.கோ ன்னு ஒரு தலைவர் இருந்தாரே.. அவர் என்ன ஆனார் என்றேன் அப்பாவியாய் ஒரு அரசியல் பிரமுகரிடம்

“யாரு ? உண்ணாவிரதம் இருக்கிற பெருசுகளுக்கு ஜூஸ் குடுத்துட்டு இருப்பாரே அவரா ?” என்ற அவரது கேள்விக்குப் பின் நான் ஏதும் கேட்கவும் இல்லை.

அவர் எதுவும் சொல்லவும் இல்லை.

ரஹ்மானைப் பாராட்டாத ஒரே தலைவர்

rahman

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைக் குறித்துப் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருதுக்காக அவருக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று எல்லா அரசியல் தலைவர்களும் கட்சி வித்தியாசம் பாராமல் பாராட்டிக் கொண்டிருக்கையில் ஒரே ஒருவர் மட்டும் மௌனம் சாதிக்கிறார் !

எல்லா பத்திரிகைகளும் ரஹ்மானை முதல் பக்கத்தில் அலங்கரித்து கௌரவிக்கையில், அவருடைய கட்சி சார்பாக வெளிவரும் நாளிதழில் மட்டும் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய விஷயம் கடைசி பக்கத்தில் அச்சாகியிருந்தது !

மகன் திரையில் புகை பிடித்தலை எதிர்க்கிறார், தந்தை திரையில் இசை அடித்தலைக் கூட எதிர்க்கிறாரா என்றும் தெரியவில்லை.
அப்படி என்ன வெறுப்போ மருத்துவருக்கு ரஹ்மான் மீது !

அல்லது ஆஸ்கர் மீது

அல்லது ஸ்லம் டாக் மில்லியனர் மீது !

திரைப்படங்களை ஒதுக்கும் மக்கள் தொலைக்காட்சியில் கூட உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன !

இது திரைப்படங்கள் மீதான வெறுப்பா ?
அல்லது ரஹ்மான் மீதான வெறுப்பா ?

சிறுபான்மை இனத் தங்கமே” என சிறு நாசூக்கு அரசியல் அறிக்கை வெளியிட்டிருந்த கலைஞர் இதைக் கவனித்தால் “சிறுபான்மையினரை பாராட்ட மறுக்கும் கட்சி  – பா.ம.க என ஒரு புது அறிக்கை வெளியிட்டாலும் வெளியிடுவார் என யாரேனும் மருத்துவரிடம் சொன்னால் நலம்.

வீரப்பனைக் கூட சாதீய காரணங்களுக்காக பாராட்டும் ஒரு தலைவர், இசைக்காக தமிழர் ஒருவர் உயரிய விருது வாங்குவதை மனமாரப் பாராட்டாவிட்டால்…

தமிழ், தமிழ், தமிழன், தமிழீழம், தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பத்திரிகை என்றெல்லாம் புலம்புவதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது.

வரும் வழியில்… : ஒரு ரூபாய் அரிசி எப்படி ?


வாயில் கூட வைக்க முடியாது இப்போதைய ரேஷன் அரிசியை. எதற்குத் தான் இப்படி நாற்றம் வீசும், மட்டமான, மோசமான அரிசியைத் தருகிறார்களோ ? இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை. மனுஷன் சாப்பிட முடியாது. இப்லப்பாம் எவனுமே ரேஷன் அரிசியைச் சாப்பிடறதே இல்லை. பிச்சைக்காரனுக்குக் கொடுத்தா கூட துப்பிடுவான்.

இப்படியெல்லாம் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் ரேஷன் அரிசியைக் குறித்து திகட்டத் திகட்ட, கிண்டல்களும், நக்கல்களும், திட்டுகளும் இணையத்திலும் வெகுஜன இதழ்களிலும் மலிந்து கிடப்பதைப் படித்துப் படித்து ரேஷன் அரிசியைக் குறித்த ஒரு மதிப்பீட்டை உள்ளுக்குள் உண்டாக்கி வைத்திருந்தேன்.

தினமும் அலுவலகம் வரும்போது வேளச்சேரி ரேஷன் கடையைத் தாண்டியே வருவேன். ரேஷன் கடை முன்னால் தினமும் காலையில் புதுப்பட ரிலீஸ் கணக்காய் கூட்டம் அலை மோதும். முரண் உறுத்தும். இவ்ளோ மட்டமான அரிசியை வாங்க இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதே என நினைத்துக் கொண்டே சென்று விடுவேன்.

கடந்த வாரம் மனதில் தோன்றியது, உண்மையிலேயே இந்த ரேஷன் அரிசி மகா மட்டமானது தானா ? அரிசி தருவது அரசியலா ? இல்லை அரிசியை எதிர்ப்பது அரசியலா ?

உய்த்துனர்தலே சிறந்ததென முடிவெடுத்தேன்.

வீட்டில் விண்ணப்பம் வைத்ததால் ரேஷன் அரிசி வாங்கினார்கள். சுடச்சுட சாதம் வைத்து சாம்பார் ஊற்றி சாப்பிட்ட போது தான் புரிந்தது வெறுமனே நக்கல் அடிப்பவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்பது !!!

அளவில் பெரியதான அரிசி (சி.ஓ என்று எங்கள் ஊரில் அழைப்பது போன்ற அரிசி). சாப்பிட்டு எனக்கு ரொம்பவே பழக்கம் என்பதால் ரேஷன் மிகவும் ரசிப்புக்குரியதாகி விட்டது. கொஞ்சமும் குறை சொல்ல முடியாத, எந்த நாற்றமும் வீசாத, சுவையான அரிசி !

ஒரு வேளை சென்னையில் மட்டும் நல்ல அரிசி தந்து விட்டு கிராமங்களின் தலையில் மோசமானதைக் கட்டுகிறார்களோ எனும் சந்தேகத்தில் மாலையில் ஊருக்கு போன் போட்டேன். அம்மா போன் எடுத்தார்கள்.

“அம்மா அங்கே ரேஷன் அரிசி நல்லா இருக்கா ? “

“என்னடா.. எப்போவும் அம்மா நல்லா இருக்கீங்களான்னு கேப்பே… இப்போ ரேஷன் அரிசி நல்லா இருக்கா கேக்கறே ?”

“சும்மா தாம்மா.. சொல்லுங்க “

“ரேஷன் அரிசி ரொம்ப நல்லா இருக்கு. நாங்க அதைத் தானே சாப்பிடுகிறோம்”
கிராமத்திலிருந்து அம்மா சொன்னார்கள்.

எங்களூர் ரேஷன் கடைக்காரர் குஞ்சுகிருஷ்ணனிடம் பேசினேன். எப்படி மக்கள் ரேஷன் அரிசியை வாங்குகிறார்களா ? நல்லா இருக்கா அரிசி ?
பெரும்பாலும் நல்ல அரிசியே கிடைக்கிறது. கேரளாவில் இதே அரிசியை கொஞ்சம் மில்லில் போட்டு பாலீஷ் செய்து சந்தையில் விற்றால் இருபது ரூபாய் தாராளமாய் கிடைக்கும் ! (அனுபவம் பேசியதா தெரியவில்லை ) என்றார்.

உண்மையிலேயே நல்லா இருக்குன்னா ஏன் இதை எதிர்க்கிறாங்க ? இதற்குப் பெயர் தான் அர(சி)சியலா ?

ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கையே உணவாய் தின்று சாதத்தை கூட்டு போல கொஞ்சமாய் தின்று வாழ்ந்த கிராமம் இன்று மரவள்ளிக் கிழங்கை கூட்டு போல் சாப்பிடுகிறது. காரணம் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது, மரவள்ளிக் கிழங்கின் விலை பத்து ரூபாயாகி விட்டது !

அலசல் : எனது புதிய நூல்

எண்ணிக்கைக் கணக்கில் இது எனது பதினோராவது புத்தகம் எனினும், இதுவே எனது முதல் கட்டுரைத் தொகுப்பு என்பதில் மனதில் சிறப்பிடம் பெறுகிறது.

வாய்ப்பு இருந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசித்தால் விமர்சனம் தாருங்கள்

அன்புடன்
சேவியர்

அருவி வெளியீடு
9444302967
பக்கங்கள் 128
விலை  : 70/-
  

 

சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூலுக்காக அளித்த பின்னுரை

சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மை பறவைகளாக்கி விடுகின்றன.

ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராய் வெற்றி கண்டிருக்கிறார். தற்கால தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் அவர்.

போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆழம் கண்டு எழுதியிருக்கிறார்.

ஒற்றை முத்தெடுக்க முக்கடலிலும் மூழ்க சம்மதம் கொண்ட சேவியரின் இந்நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு தான். ஆனால், அதனுள்ளே உண்மையின் சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.

இவை கற்பனையின் விளைச்சல்கள் அல்ல. கருத்துருக்கள். எதுகுறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும்.

அருவியின் பெருமை மிகு வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த விதை நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.

- சுந்தரபுத்தன்.

இந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

வேர்களைத் தேடி
 

‘உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா ? ‘ என்னும் வினாவோடு ஒருமுறை என்னை அணுகினார் நண்பர் ஒருவர். தாத்தாவின் தந்தை பெயரைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே அப்போது தான் எனக்கு உறைத்தது   . நன்றாகத் தெரியும் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் போதிய அறிவு நமக்கு இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.

நாம் பணிசெய்யும் துறை சார்ந்த விஷயங்களோ, நாம் வசிக்கும் இடம் சார்ந்த விஷயங்களோ, நாம் பயன்படுத்தும் பொருள் சார்ந்த விஷயங்களோ அல்லது நாம் கலந்து கொள்ளும் விழா சார்ந்த விஷயங்களோ எதை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தெரியாத வரலாற்று வேர்கள் அவற்றுக்குள் மறைந்து கிடக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்களின் சிலிர்ப்பு போல பல பொருட்களின் பூர்வீகம் சிலிர்க்க வைக்கிறது. எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் அணுகுகையில் இந்த சிலிர்ப்பு இன்னும் விரிவடைகிறது.

அந்த சிலிர்ப்பின் அனுபவத்தைக் கொண்டு அறிவின் வெளிச்சத்தை விரிவுபடுத்தும் கட்டுரைகளை இந்த நூலில் நீங்கள் காண முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உணடு.

தெரிந்த பொருட்கள் தெரியாத தகவல்கள் என்னும் கண்ணோட்டத்தில் அணுகி எழுதப்பட்ட கட்டுரைகளே இதில் பெரும்பாலானவை. தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான  களஞ்சியம் இதழில் தொடர்ந்து வெளியான கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல்.

கவிதை, கதை எனும் இலக்கிய வடிவங்களைத் தாண்டி கட்டுரைகள் எனும் வடிவத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நூல் இது என்பது நெஞ்சுக்கு சற்றே நெருக்கமாய் இடம் பிடித்துக் கொள்கிறது.

பாசாங்கில்லாத புன்னகையுடனும் தணியாத சமூக வேட்கையுடனும் பத்திரிகைத் துறையில் இயங்கி வரும் நண்பர் யாணன் அவர்கள் தமிழோசை களஞ்சியம் இதழுக்காக கணினி துறை சார்ந்த கட்டுரைகள் சில வேண்டும் என்று கேட்டார். அந்த கட்டுரைகளுக்குக் கிடைத்த வாசகர் கடிதங்களே தொடர்ந்து பல விஷயங்களைக் குறித்து வாரம் தோறும் எழுத வைத்தது. அதற்காக தமிழோசைக்கும், நண்பர் யாணன் அவர்களுக்கும் என்னுடைய முதல் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

உற்சாகமாய் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவியின் பரபரப்புடன் பதிப்பகத் துறையில் இயங்கி வரும் நண்பர் பூபதி அவர்களுக்கும், இந்த கட்டுரைகளை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் எனும் அவருடைய வேட்கைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய எழுத்துப் பயணத்தின் கூடவே நடந்து  தொடர் உற்சாகம் வழங்கி வரும் நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கும்,  தோழர் சுந்தரபுத்தன், எழுத்தாளர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

கட்டுரைகளின் நேர்த்திக்கான தகவல் சேமிப்புகளில் பெருமளவுக்கு உதவி செய்த எனது துணைவியார் ஸ்டெல்லா அவர்களுக்கும், நண்பர் பென்கிருபா , மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.

வரும் வழியில் : சென்னையைக் கலக்கும் வை.கோ

இன்று வரும் வழியில் சுவாரஸ்யமான ஒரு போஸ்டரைப் பார்க்க நேர்ந்தது.

ஒபாமா சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் அது. இதென்னடா சென்னைக்கு வந்த சோதனை ? ஒபாமா தன்னுடைய கட்சி அலுவலகத்தை சென்னையில் துவங்கியிருக்கிறாரா ? இல்லை ஓட்டு கேட்க (கவனிக்க, ஒட்டுக் கேட்க அல்ல ) சென்னை வந்திருக்கிறாரா ? என்று குழம்பியபடியே உற்றுப் பார்த்தால் இன்னொரு ஆச்சரியம்.

அருகிலேயே கோட் சூட்டுடன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகம். கூர்மையாய் பார்த்தேன் அட !!! நம்ம வை.கோ ? கையில் ஒரு புக், பேனா வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதற்கு நிற்பவரைப் போல நிற்கிறாரே !

என்ன நடக்குது ? ஒருவேளை ம.தி.மு.க வுடன் ஒபாமா கூட்டு சேர்ந்துவிட்டாரா ? இல்லை
அவருக்கு இவர் தமிழ் கத்துக் கொடுக்கிறாரா ? இது உண்மையா இல்லை குரோம்பேட்டை கிராபிக்ஸ் வேலையா ?  என்று யோசித்துக் கொண்டே காரோட்டினேன்.

அடுத்த போஸ்டரில் தான் என்ன எழுதியிருந்தது என்பதை வாசிக்க முடிந்தது.
“ஒபாமாவைச் சந்தித்து வந்த மக்கள் தலைவன் வைகோவை வரவேற்கிறோம்”  !!
ஆஹா… ஆஹா… சுவாரஸ்யமாய் இருக்கிறதே என நினைத்துக் கொண்டே பார்த்தால்,

காஞ்சி புர மதிமுக இன்னும் ஒரு படி மேலே போய்
“அமெரிக்காவின் அதிசயம் ஒபாமாவைச் சந்தித்து வந்த
முதல் இந்தியன் வை.கோ
இந்தியாவின் அதிசயம் “ என்று ஒரு அட்டகாச போஸ்டர்.

மதிமுகவின் போஸ்டர்கள்… மன்னிக்கவும், வை.கோ ரசிகர் மன்றத்தின் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களின் குருவி போஸ்டரை விட விர்ரென்று பறக்கிறது. சென்னை முழுவதும்.

அதிலும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா எனும் வாசகங்கள் வேறு :!!! ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. சொல்ல முடியாது.

உங்களால புஷ்ஷை தான் பார்க்க முடியும், எங்கள் தலைவர் ஒபாமாவையே சந்திப்பார் என நாளை மதிமுக தெருமுனை கூட்டங்கள் புகழ் பாக்கள் பாடலாம்.

ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின்  ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.

கடல் கடந்து சென்றாயே, கள்ளத் தோணியிலா ? ஒபாமா என்ன புறநானூற்றுப் பாடல் கூறும் வீரத்திருமகனா ? திராவிடக் கருமகனா ? என எதிர் கட்சி அறிக்கை வெளியிடக் கூடும்.

எப்படியோ, காடுவெட்டி குருவை விடுவித்தால் மத்திய அரசுக்கு ஆதரவு என பா.ம.க பரபரப்பைக் கிளப்புகிறது. அரசு கவிழும் என பா.ஜ.க பட்டையைக் கிளப்புகிறது, பா.ஜ.கவின் எம்.பிக்களே எங்கள் பக்கம் என காங்கிரஸ் கலக்குகிறது. இந்தப் பரபரப்பில் காணாமல் போன வர்கள் இரண்டு பேர் ஒன்று அம்மா.. இன்னொன்று வை.கோ..

வை.கோ முந்திக் கொண்டு ஒபாமாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டார்.

மிச்சமிருக்கும் நபர் சார்பாக, அடுத்த போஸ்டர் விரைவில் ஒட்டப்படலாம்.

அப்பாடா ! பா.ம.க விரும்பியது நடந்தது !

பா.ம.க விரும்பியபடியே நடந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.க கூட்டணியிலிருந்து தற்போது விலக்கப்பட்டிருக்கிறது.

எப்படியாவது எப்பாடுபட்டாவது வெளியே வந்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் ஏன் மருத்துவருக்கு உதித்தது என்பது அவருக்கே வெளிச்சம், அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னே !!

2011 ல் நான் தான் முதல்வர் என்று சின்ன பிள்ளைகள் விஜயகாந்த், சரத் மாதிரி ஆசை ஆசையா அப்பளம் சுட்டு கலைஞருக்கே அனுப்பி வைத்ததில் ஆரம்பித்தது இந்த விலகல் புராணம்.

முரசொலி மாறனுடன் இணைந்து கொண்டு, மதிமுக மற்றும் இன்னபிற நக்கா பிச்சா கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய கட்சிக்கு அடிகோலுகிறார் என்று தகவல்கள் கசிந்து திமுகவை மேலும் எரிச்சலுக்குள் இழுத்தது. காதுக்குள் ரீங்காரமிடும் கொசுபோல அவஸ்தை கலைஞருக்கு.

எல்லா விஷயங்களையும் கண்மூடித் தனமாக எதிர்ப்பதன் மூலம் தான் கூடவே இருந்தாலும் கூட்டணியை துச்சமென மதிக்கும் மக்கள் தலைவன் என தன்னைக் காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருந்தது சமீபகாலமாக உச்சத்துக்கே சென்றுவிட்டது.

ஆந்திராவில் தயாரான விஷ சாராய புராணத்தை முழுதும் தமிழகத்திலேயே தயாரானது போலவும், கலைஞரின் மதுவிலக்குக் கொள்கை படுதோல்வி என்றும் தமிழோசையில் முதல் செய்தியாக வெளியிட்டு உரசலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டது பாமக தான்.

இத்தனை ஆண்டு இல்லாத பிரச்சனை, அது இது, புள்ளி விவரம், விலைவாசி, எங்கே தமிழ் இருக்கிறது என்றெல்லாம் தமிழோசையை திமுக எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிடவே பயன்படுத்தி வந்தார்களோ எனுமளவுக்கு ஒரே அரசியல் அம்புகள்.

இப்போது காடுவெட்டி குரு ! இது பழைய சமாச்சாரம், இதை ஏன் கலைஞர் இப்போது கையில் எடுக்க வேண்டும் என மருத்துவர் நேற்றும் இன்றும் தமிழோசையில் வீரமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். எனினும் கா.வெ.குரு சொன்னதற்காக தலைவர் என்னும் முறையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக பா.ம.க செயற்குழுவில் தான் அப்படிப் பேசப்பட்டது என்றார். அப்படியெனில் செயற்குழுவில் அப்படிப் பேசுவது சகஜமப்பா என திமுகவை உசுப்புவது போல் இருக்கிறதல்லவா ?

கச்சா எண்ணையின் விலை 139 டாலர்களாம் இப்போது. இன்னும் பதினெட்டு மாதங்களில் அது 250 டாலர்களை எட்டிப் பிடிக்குமாம். எனில் விலைவாசியும், பெட்ரோல் விலையும் இன்னும் பல மடங்கு உயரும் எனும் அச்சம் உலக அளவில் நிலவுகிறது. இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதவர் போல எல்லா நிகழ்வுகளுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் சர்வரோக நிவாரணி போல தன்னைக் காட்டிக் கொள்ளவே முயன்று கொண்டிருக்கிறார் மருத்துவர்.

எதற்கேனும் மாற்றுக் கருத்து சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம். சும்மா எதிர்ப்பது வேடிக்கை பார்ப்பவன் வேலை, சரியான மாற்று வழிகளுடன் எதிர்ப்பதே ஆரோக்கியமான எதிர்கட்சியின் வேலையாக இருக்கவேண்டும்.

தன்னைத் தூய்மையாய் காட்டிக் கொள்ளும் பா.ம.க இன்னும் தனது ஊடகங்களில் சாதி சார்ந்த முன்னுரிமையையே வழங்கிக் கொண்டிருக்கிறது என்னும் உண்மை உலகம் அறியும்.

கலைஞர் எப்போதுமே அமைதியாய் இருந்து, யாரேனும் விலகினால் அந்தப் பழி தன் மேல் விழாதவாறு தந்திரமாய் நடந்து கொள்வதுண்டு.

இத்தனை அவமானமாய் பேசிய காடு வெட்டியை மருத்துவர் கண்டிக்கவில்லையே என உள்ளம் உருகி, கண்ணீர் வடித்து கூட்டணியைக் கலைத்ததன் மூலம் இப்போதும் அப்படியே செய்திருக்கிறார்.

தி.மு.க எதையும் இழக்குமென்று தோன்றவில்லை.
சம்பந்தி காங்கிரஸ் இருக்கும் வரை அன்புமணி பதவிக்கு ஆபத்து வருமென்றும் தோன்றவில்லை.
ஆனால், பா.ம.க இனிமேல் முன்வைக்கும் எதிர்ப்புகளெல்லாம் முன்பு போல் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதே கேள்வி.

எல்லாம் அரசியல், உள்ளுக்குள்ளே என்னென்ன இருக்கோ ? யாருக்குத் தெரியும்.

பா.ம.க வுக்கு அப்படி என்ன கோபம் தி.மு.க மீது ?

அப்படி என்னதான் ஒரு “மஞ்சள் காமாலை” பார்வையோ பா.ம.க விற்கு தி.மு.க வின் மீது. எதிர் கட்சி பத்திரிகைகளே கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கும் செய்தியைக் கூட தி.மு.க எதிர்ப்பு அலைக்காகப் பயன்படுத்துகிறது பா.ம.க

இன்று பெரும்பாலான பத்திரிகைகள் “கர்நாடக விஷ சாராயத்தைக் குடித்து மக்கள் சாவு:” என்று செய்தி வெளியிட்டிருக்க கூட்டணி கட்சியாக இருக்கும் பா.ம. க மட்டும் தன்னுடைய தமிழ் ஓசை நாளிதழில் முதல் பக்கத்தில் தி.மு.க வை கடுமையாக விமர்சித்திருக்கிறது

“தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கை படுதோல்வி. கள்ளச்சாராயம் குடித்து பலர் பலி” என்பது தான் இன்றைய தமிழ் ஓசை நாளிதழின் முதன்மைச் செய்தி !

கூடவே சிற்சில புள்ளி விவரங்களை ஆங்காங்கே இணைத்து முழுக்க முழுக்க இது தமிழக அரசின் தோல்வி போன்ற தோற்றத்தை பா.ம.க வலிந்து கட்டி எழுதியிருப்பது நிச்சயம் எதிர் கட்சியினருக்கு ஆனந்தத்தை அளித்திருக்கலாம்.

இந்த கழுத்து வலியுடனும் நாளை கலைஞர் ஏதேனும் கருத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

“நாங்கள் கூடவே இருந்து குழி பறிப்போம் – மரம் நடுவதற்காக” என பஞ்ச் டயலாக்கையும் வேறொரு செய்தியில் படிக்க நேர்ந்தது.

என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறே தயாநிதி மாறன் ஆதரவாளர்கள், ம.தி.மு.க, வி.சிறுத்தை போன்ற கட்சிகள் எல்லாம் பா.ம.கவுடன் இணையப் போகுதில்லையா அதான் விஷயம் என என் காதில் நண்பர் கிசுகிசுத்தார். அப்படியா ? தயாநிதி மாறனுக்கும் மருத்துவருக்கும் ஆகவே ஆகாதே ? என்றால்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம் கிறது  கவுண்டமணிக்கே தெரியும், என்கிறார்.

எப்படியோ, ஒரு ஆரோக்கியமான கூட்டணி கட்சியாக தன்னை தைரியத்துடன் காட்டிக் கொள்ளும் வகையில் பா.ம.க தனித்துவம் பெறுகிறது. ஆனால் ஆரோக்கியமான கூட்டணிக் கட்சி என்றால் அரசை எதிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என புதிய விதிமுறையை அது எழுதி ஆளும் கட்சியினரை எரிச்சல் அடையச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கதே.

என்ன சொல்ல,
வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.