கொசுக்களால் ஒரு மலேரியா விளம்பரம் !

Hitlar1

 

உலகெங்கும் மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. உலகெங்கும் பல்லாயிரம் உயிர்களை ஆண்டுதோறும் அழித்துக் கொண்டிருக்கும் இந்த நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இன்னும் பல்வேறு நாடுகளில் இல்லை.

எப்படியாவது வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்து இந்த நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என நினைத்த ஸ்பானிஷ் விளம்பர நிறுவனம் ஒரு புதுமையான உத்தியைக் கண்டு பிடித்தது !

மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் படங்களைக் கொண்டே ஓவியம் வரைவது எனும் சிந்தனை அடிப்படையிலான அந்த உத்தி பார்வையாளர்களை வியக்க வைக்கிறது !

“ஆப்பிரிக்கா டைரக்டோ” எனும் அமைப்பு மூலம் நடத்தும் மலேரியா நோய்க்கான இந்த விளம்பரப் படங்கள் வியப்புணர்வையும், விழிப்புணர்வையும் ஒரு சேர நிகழ்த்துகின்றன.

உதாரணமாக ஹிட்லரின் உருவப் படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது அதன் கீழே வாசகம் “மலேரியாவைப் போல அதிக உயிர்களைக் கொல்ல யாராலும், எதுவாலும் முடியாது !

புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…

 smoke1நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.

அந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.

எனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

புகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப்  புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.

நிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது!

புரோகோலி புசியுங்கள்

broccoli 

புரோகோலி தெரியுமா ? பரவலாக பலரும் பயன்படுத்தாத இந்த காய்கறிக்கு வயிற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் இரண்டு கைப்பிடி அளவு தளிர் புரோகோலியைச் சாப்பிட்டு வந்தால் உடலில் என்சைம்கள் அதிகமாய் சுரந்து அவை வயிற்றில் கான்சர் வரும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது என்பதே இவர்களுடைய புதிய ஆராய்ச்சி முடிவாகும்.

ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் சுருங்கிய விளக்கம் வேண்டுமெனில் , “புரோகோலியில் உள்ள பயோ கெமிக்கல் பொருளான சல்ஃபோரோபேன் தான் இந்த பாதுகாப்புப் போரைப் புரிகிறது” எனச் சொல்லலாம்.

புரோகோலியை தினமும் உண்பது உடலிலுள்ள வாயு தொல்லைகளுக்கான நிரந்தரத் தீர்வாகி விடுகிறது. கூடவே வயிற்றில் கான்சர் வராமல் தடுக்கும் மாபெரும் பணியையும் செய்கிறது என்கிறார் ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெட் பாகே.

புரோகோலியில் வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உடல் நலத்துக்கு மிகவும் பயனளிப்பது. குறிப்பாக உடலின் குருதி அழுத்தத்தை இது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் C, தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது. கண்ணில் பூவிழுதல் (காட்டராக்) தொல்லையிலிருந்து கண்ணைக் காப்பாற்றவும் இந்த புரோகோலி துணை செய்கிறது.

இதிலுள்ள ஃபோலிக் அமிலம் தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். கூடவே வயதான பெண்களுக்கு வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோயிலிருந்தும் புரோகோலி பாதுகாக்கிறது.

அல்ஸீமர், நீரிழிவு, இதய நோய் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றும் சக்தி இந்த புரோகோலிக்கு உண்டு ! இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமை கூட உண்டு என்பது கூடுதல் தகவல்.

இன்னும் என்ன தயக்கம், புரோகோலி புசிக்க ஆரம்பிக்கலாமே !

0

நான் குறைய மாட்டேன்னா சொல்றேன்….

fat

அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பது எப்போதுமே ஆபத்தானதே. இப்படி அதிக எடையுடன் இருக்கும் பெண்களுக்கு கருக்குழாய்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதிலும் மாதவிலக்கு நின்று போன, நடுவயதைத் தாண்டிய பெண்கள் அதிக எடையுடன் இருந்தால் அவர்களுக்கு இந்த புற்று நோய் வரும் வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம் என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகம் சுமார் ஒரு இலட்சம் பெண்களை கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதன் விளைவாக இந்த முடிவை எட்டியிருக்கிறது.

அதிக எடையுடன் இருக்கும் போது இடுப்பைச் சிற்றிய பகுதிகளில் அதிக கொழுப்பு சேர்ந்து இந்த புற்று நோயை உருவாக்கி விடுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உடல் எடைக்கும் புற்று நோய்க்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. எனவே தான் அவர்கள் தங்கள் உடலைக் குறித்த கவலையற்று இருக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

எடை அதிகரித்தபின் அதைக் குறைப்பது என்பது மிக மிக கடினம். எனவே அடுத்த தலைமுறையினரையேனும் சரியான எடையுடையவர்களாக வளர்த்த வேண்டியது அவசியம். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

தேவையற்ற சிப்ஸ், கோக், பீட்ஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை அறவே ஒதுக்குவதும், ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவுப் பழக்கத்துக்கு மாறுவதும், ஓரளவுக்கேனும் உடற்பயிற்சியைச் செய்வதும், மனதை உற்சாகமாய் வைத்திருப்பதுமே உடல் எடையை கட்டுக் கோப்பாய் வைத்திருக்க உதவும்.

உடல் எடை அதிகரிப்பு என்பது நகைப்புக்குரியதல்ல, அது கவலைக்குரியது என்பதை அறிந்து செயல்படுவதே ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும்.

தயக்கம், வெட்கம், கூச்சம், பயம் – இனிமேல் இல்லை !

நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.

பள்ளிக்கூடங்களில் புதிதாய் நுழையும் மழலைகள் ஆசிரியர்களிடமும்,பள்ளியிலுள்ள சக மாணவர்களிடமும் பேசக் கூட பல வேளைகளில் பெரும் கூச்சப்படுவார்கள். அதுவும் மேடைகளில் ஏறி பேசவேண்டுமெனில் அவ்வளவு தான்! வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அனேகம்.

வேலை விஷயங்களில் இந்தக் கூச்சம் பலரை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்த கூச்சத்தின் பிள்ளைகள் தொடர் தோல்விகளையே சந்திக்கின்றனர்.

இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என புலம்பும் இத்தகைய மக்களை வியக்க வைக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதாவது கூச்சமடையாமல் தைரியத்துடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தைத் தரும் மருந்தை அறிவியலார் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை ஸ்பிரே போல தயாரித்து நேர்முகத் தேர்வு போன்ற இடங்களுக்குச் செல்லும் முன் முகர்ந்து கொண்டால் மனதுக்கு ஊக்கம் கிடைக்குமாம். அல்லது மாத்திரை வடிவில் இதைத் தயாரித்து உட்கொள்ளச் செய்தால் தயக்கமெல்லாம் தயங்காமல் ஓடி விடுமாம்.

இனிமேல் காதலைச் சொல்ல வருடக் கணக்காய் தயங்கித் தயங்கித் திரிய வேண்டிய தேவையில்லையென வேறு வேலையே இல்லாத இளைஞர்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.

ஆக்ஸைடோசின் எனப்படும் ஒரு ஹார்மோன் தான் இந்த தயக்கம், வெட்கம், கூச்சம் போன்றவற்றையெல்லாம் விரட்டும் அதிசய மருந்தாக உருவெடுக்கிறது.

ஆக்ஸைடோசின் என்பது உடலுறவின்போதும், குழந்தைப் பிறப்பின் போதும் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். இது தான் தாய்க்கும் சேய்க்குமான உறவு இறுக்கத்துக்கும் காரணியாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கா, யூ.கே, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துள்ள இந்த ஆக்ஸைடோசின் ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இதன் வணிக வழிகள் ஆலோசிக்கப் பட்டு வருகின்றன. அதாவது இந்த ஹார்மோனைக் கொண்டு ஸ்பிரே, மருந்து, பானம் போன்றவற்றைத் தயாரிக்கும் வழிகளைக் குறித்து மும்முரமான ஆய்வுகள் நடக்கின்றன.

இந்த ஹார்மோன் இயற்கையின் வரப்பிரசாதம் எனலாம். அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப் பிரசவம் நடந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உறவு பலமாக இருக்கும் என்பது ஒரு ஆராய்ச்சி முடிவு. காரணம் பிறப்பின் போது சுரக்கும் இந்த ஹார்மோன் !

இந்த ஹார்மோன் இருந்தால் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலை உருவாகுமாம்.

இப்படி இந்த ஹார்மோனைக் குறித்து அடுக்கடுக்காய் ஆச்சரியங்களை வரிசைப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இனிமேல் காலம் மாறலாம். நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் ஒரு மாத்திரையைப் போட்டுக் கொள்ளும் காலம் விரைவில் வரலாம். அல்லது வீடுகளில் நிம்மதியான சூழல் நிகழ வீடுகளில் தெளிக்கும் வாசனைத் திரவியங்களாகவும் இவை வடிவமெடுக்கலாம் !

பொறுத்திருந்து பார்ப்போம், அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சியை !

குண்டானவர்கள் இனிமேல் நிச்சயம் இளைக்கலாம் !

“எல்லா பாடும் இந்த அரை சாண் வயித்துக்காகத் தானே “ என்றும் “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்றும் நமது பாட்டிகள் பல பழ மொழிகளைச் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் “ பழமொழியா ? அப்படின்னா என்னப்பா ? எனக் கேட்கும் தலை முறையே உருவாகி வருகிறது என்பது வேறு விஷயம். அது ஒருபுறம் இருக்கட்டும்.

பசி மனுக்குலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பசி பட்டினியாக உருமாறுவதும், வறுமையினால் உயிர்கள் மடிவதும் என உலகின் ஒரு முகம் முனகிக் கிடக்கிறது.

அளவுக்கு மிஞ்சிய உடல் எடையுடன், உணவை தீவிரமாய்க் கட்டுப்படுத்தி உடலின் கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் உலகின் இன்னொரு முகம் மும்முரமாய் கிடக்கிறது.

இந்தப் பசி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அதிக எடையுடன் கூடிய மக்களுக்கு மெலிவது எளிதாகியிருக்கும், பட்டினியுடன் கிடப்பவர்களுக்கு கொஞ்சம் உயிர்கிள்ளும் வலியாவது குறைவாய் இருந்திருக்கும் என நம்மைப் போலவே விஞ்ஞானிகளும் பல ஆண்டுகாலமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சிந்தனையின் முதல் கட்ட வெற்றியாக பசியைக் கட்டுப் படுத்தும் வழியை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

பசியைத் தூண்டும் கிரெலின் என்றொரு ஹார்மோன் நமது உடலில் இருக்கிறது. அது தான் நமக்கு எப்போது பசிக்க வேண்டும், எப்போது நாம் சாப்பிடவேண்டும் என உள்ளுக்குள் அமர்ந்து ஒரு சர்வாதிகாரியாய் சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த ஹார்மோனின் 90 விழுக்காடும் வயிற்றின் மேல்பகுதியாகிய பண்டஸ் எனுமிடத்திலிருந்தே உருவாகிறதாம். இந்த ஹார்மோன் உருவாக வேண்டுமெனில் நல்ல இரத்த ஓட்டம் அந்தப் பகுதிக்கு அவசியம். அதனால் தான் உடற்பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி, ஹார்மோன் அதிகமாய் சுரந்து பசியெடுக்கிறது.

இந்த ஹார்மோன் உற்பத்தி குறைந்தால் பசியெடுப்பது குறையும். பசியெடுப்பது குறைந்தால் குறைவாய் உண்டால் போதும், குறைவாக உண்பதால் உடல் குண்டாவது தடுக்கப்படும். இப்படியெல்லாம் விஞ்ஞானம் விளக்குகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்க அந்தப் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதே இப்போதைக்குத் தெரிந்த ஒரே வழியாம்.

நல்ல ஆரோக்கியமான பன்றிகளை வைத்து இப்போதைக்கு இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் உடல் உறுப்புகளின் அமைப்பு ஒத்திருப்பதால் மனிதர்களிடமும் இது நிச்சயம் வெற்றிபெறும் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய விஞ்ஞானி ஜாண் ஹாப்கின்ஸ்.

இதன் பக்க விளைவுகள் என்ன ? இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் தேவையான நேரத்தில் கிடைக்குமா ? இந்த ஹார்மோன் குறைவாய் சுரந்தால் வேறு ஏதேனும் இன்னல் நிகழுமா என பல்வேறு வகைகளின் இதன் ஆய்வுகள் தொடர்கின்றன.

எப்படியும் கூடிய விரைவில் பசியில்லா மனிதர்களைப் படைத்து விடுவார்கள் விஞ்ஞானிகள் என்றே தோன்றுகிறது !

உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவு  மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.

சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்

சிவப்புத் திராட்சைக்கு இப்போதெல்லாம் சந்தையில் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. விதையில்லாத பச்சை திராட்சை, அல்லது அவசர கோலத்தில் வாங்கப்படும் பழச்சாறுகள் இவையே வீடுகளை நிறைக்கின்றன. அதுவும் ரிலையன்ஸ் பிரஷ் போன்ற மக்களை முட்டாளாக்கும் கடைகளில் வித விதமாய் பழச்சாறு பாட்டில்கள் புதிது புதிதாய் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பழச்சாறுகளில் இருப்பது பெரும்பாலும் சருக்கரையும், தண்ணீரும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

அது ஒருபுறம் இருக்கட்டும். சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் என்னும் இனிப்பான ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர் யூ.கே ஆராய்ச்சியாளர்கள்.

சிவப்புத் திராட்சையில் அதிக நார்சத்து மற்றும் விஷத்தன்மையை எதிர்க்கும் பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் இது உடலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறிப்பதன் மூலமாக இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் வலிமை இந்த சிவப்புத் திராட்சைக்கு இருக்கிறதாம்.

பழச்சாறுகளின் கதை வேறு. அதைக் குடிப்பதனால் பல்வேறு நோய்கள் தான் வருகின்றன. சமீபத்தில் பழச்சாறுகள் தொடர்பாக வெளியான ஒரு ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டுகிறது.

அதாவது பழச்சாறுகள் நாம் அருந்தும் மருந்தின் வீரியத்தைக் குறைத்து நோயிலிருந்து சுகம் பெறுவதில் சிக்கலை உருவாக்குமாம். குறிப்பாக இதய நோய், குருதி அழுத்தம் போன்ற நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்தின் வீரியத்தை இந்த பழச்சாறுகள் தடுக்கின்றனவாம்.

மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வெறும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் எனவும், பழச்சாறுகள் பயன்படுத்தக் கூடாது எனவும் ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இப்போது பழச்சாறு அருந்துவது மருந்தையே செயலற்றதாக்கிவிடும் எனும் செய்தி கூடுதல் கலவரமூட்டுகிறது.

இது மட்டுமன்றி அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் நிகழ்த்திய ஆய்வு ஒன்று, தினமும் ஒரு கோப்பை திராட்சைப் பழச்சாறு (கடைகளில் கிடைப்பது) அருந்தினால் உடல் எடை அதிகரிப்பதுடன், சருக்கரை வரும் வாய்ப்பையும் அதிகரிக்கும் என எச்சரித்திருக்கிறது.  கூடவே பழச்சாறுகள் பல்லையும் சேதப்படுத்துமாம்.

சிவப்புத் திராட்சை சாப்பிடுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பழச்சாறுகளை ஒதுக்குங்கள் அவை உடலுக்கு ஊறி விளைவிக்கின்றன. என்பதே இந்த இரண்டு ஆய்வுகளிலிருந்தும் நமக்குக் கிடைக்கும் சாராம்சமாகும்.

கனியிருப்பச் சாறு கவர்ந்தற்று எனச் சொல்லத் தோன்றுகிறதல்லவா ?

பதின் வயதினருக்கானது ….

முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது

தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.

நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.

இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.

ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.

முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.

பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.

தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.

தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் !

தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு வடிவங்களில் இதுவரை வெளிவந்திருக்கின்றன.

கூடவே தாயின் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது எனவும், தாய்க்கு புற்று நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும், எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும் பாலூட்டுதலின் பயன்களையும் அறிவியல் நிரூபித்துள்ளது.

இப்போது பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளி செல்லும்போது பதட்டமில்லாமல் செயல்படுவார்கள் எனவும், மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள் எனவும் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுமார் 9000 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு தாய்ப்பாலின் தேவையை இன்னொரு பரிமாணத்தில் முக்கியத்துவப் படுத்துகிறது.

சமூகத்தின் சூழலை ஏற்று உள்வாங்கி செயல்படுதலுக்கும், பரிச்சயமற்ற சூழலில் கூட பதட்டமில்லாமல் செயல்படுவதற்கும் வேண்டிய மன தெளிவை குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சக்தி வழங்குகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இது பாலூட்டும் போது நிகழும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொடுதல் உறவினாலோ, அல்லது பாலில் இருக்கும் உன்னத சக்தியினாலோ நிகழ்ந்திருக்கலாம். எப்படியெனினும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளிக்காலங்களில் ஏற்படக் கூடிய பதட்டம், மன அழுத்தம் அனைத்தையும் எளிதில் கடந்து விடுகின்றனர் என்பது மட்டும் திண்ணம்.

தாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.

« பழைய வரவுகள்