
சென்னையில் ஆட்டோ கட்டணம் இந்தியாவின் எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்டோ வைப் போலவே தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது நமக்கெல்லாம் தெரியும். சென்னை மக்களுக்கு இது பழகி விட்டது. சமீபத்தில் கேரளா சென்றிருந்தபோது தான் சென்னையின் ஆட்டோ கட்டண வீரியம் மீண்டும் ஒருமுறை வீரியமாய்த் தாக்கியது.
திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ வில் சென்றேன்.. சென்றேன்… சென்று கொண்டே இருந்தேன். சென்னை ஆட்டோ கட்டணத்தை மனதில் வைத்துப் பார்த்தால் நூற்று ஐம்பது வெகு சாதாரணம். சென்று இறங்கிவிட்டு ‘எவ்வளவுங்க’ என்று கேட்டபோது முப்பத்து இரண்டு என்றார்.
நூற்று முப்பத்து இரண்டு ரூபாயாய் இருக்கும் என்னும் சந்தேகத்தில் ‘எவ்வளவு’ என்று மீண்டும் கேட்டேன். கட்டணம் அதிகம் என்று நான் மீண்டும் விசாரிப்பதாக நினைத்துக் கொண்ட அவர் ‘ரேட் கரெக்ட் தன்ன… முப்பத்தி ரண்டு ரூபா’ என்றார். முதல் அதிர்ச்சி.
முப்பத்து ஐந்து ரூபாயைக் கொடுத்து விட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தபோது கூப்பிட்டார் அவர் ‘சேட்டா பாக்கி மேடிச்சில்லா’. அவர் கையில் மூன்று ரூபாய் சில்லறை ! இரண்டாவது அதிர்ச்சி. ‘மீட்டருக்கு மேல பத்து ரூபா’ என்று கேட்டே பழக்கப்பட்ட காதுகள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல கூசின.
கேரளா என்றில்லை சில மாதங்களுக்கு முன் பெங்களூர் சென்றிருந்தபோதும் இதே போன்ற அனுபவம் தான். அப்படியெனில் சென்னை மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சுமை. ஏழைகளின் தோழனாக இருக்க வேண்டிய ஆட்டோ க்கள் நடுத்தர வர்க்கத்தைத் தாண்டினால் மட்டுமே பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மாறிவிட்டது ஏன் ?
நல்லவேளையாக ஆட்டோ க் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என்று சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தியது ஒரு திருப்பமாக அமைந்திருக்கிறது. திருத்தப் பட்ட கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாகவே இப்போது ஆட்டோ டிரைவர்கள் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்டோ வில் ஏறிவிட்டு, ‘தெரியாமல் ஏறிட்டேங்க’ என்று சொல்லி உடனே இறங்கி விட்டால் கூட இருபது ரூபாய் கேட்கிறார்கள். ஒரு சந்திலிருந்து அடுத்த சந்துக்குச் செல்ல இருபது ரூபாய். நான்கு தெரு தள்ளிச் செல்ல வேண்டுமெனில் ஐம்பது.
சரி ஐந்தோ, பத்தோ அதிகம் வாங்குகிறார்கள் என்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் சென்னை வாசிகளுக்கு ஆட்டோ க்காரர்கள் தரும் கைமாறு என்னவென்று பார்த்தால் புல்லரிக்கிறது. மழைக்காலமெனில் பத்து மடங்கு அதிக கட்டணம். பல இடங்களுக்கு ‘அங்கெல்லாம் வராதுங்க’ என்ற மனிதாபிமானமோ, சமூக அக்கறையோ, கடமை மீதான பொறுப்புணர்ச்சியோ சற்றும் இல்லாத பதில்.
வீடுகள் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருக்கும் வீடுகளிலிருந்து தப்பிப் பிழைத்து வருபவர்களைக் கூட ஆட்டோ டிரைவர்கள் விட்டு வைப்பதில்லை. ‘எரியற வீட்டில புடுங்கற வரைக்கும் லாபம்’ என்னும் பாட்டிகளின் பழ மொழி போல பிழிந்து விடுகிறார்கள்.
முதல் இரண்டு கிலோ மீட்டர்களுக்கு 14 ரூபாயும், அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாயும் என்னும் கணக்குப் படி பார்த்தால், வேளச்சேரியிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்ல சுமார் 92 ரூபாய். அதிக பட்சம் நூறு ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது வசூலிக்கப்படுவதோ குறைந்த பட்சம் 150 !
இந்த புதிய கட்டண நிலவரம் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் குழு மற்றும் நுகர்வோர் அமைப்புகள் இணைந்து நிர்ணயித்திருக்கின்றன. காத்திருப்பு நேரம் கூட ஐந்து நிமிடத்திற்கு நாற்பது காசுகள். அரை மணி நேரம் காத்திருந்தால் இரண்டு ரூபாய் நாற்பது காசுகள், சும்மா இருபது முப்பது என்று பிடுங்க முடியாது. இரவில் பயணமெனில் கட்டணம் 25 சதவீதம் மட்டுமே அதிகமாகச் செலுத்த வேண்டும்.
ஆட்டோ வில் மீட்டர் 90 நாட்களுக்குள் திருத்தப்பட வேண்டும் என்னும் அறிவிப்பும் கூடவே வந்திருக்கிறது. விலையேற்றத்தினால், சுமை குறைவது என்பது சென்னை ஆட்டோ கட்டண விஷயத்தில் மட்டும் உண்மையாகி விட வாய்ப்பு இருக்கிறது.
ஆட்டோ க்கள் அதிக கட்டணம் வசூலித்தால் தொடர்பு கொள்க என கீழ்க்காணும் தொலை பேசி எண்களையும் தந்திருக்கிறார்கள். 103, 26445511,26333335,26445959, 670993,26732525,26215959, 24894466,24867733,22325555,27264277, 27663333. அல்லது 98418 08123 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.
கட்டண உயர்வு அறிவிப்புக்குப் பின் சைதாப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டைக்குப் பயணிக்கையில் அந்த ஆட்டோ டிரைவரிடம்
‘ என்னங்க ரேட் அதிகமாயிடுச்சு போல, இனிமே ஆட்டோ சார்ஜ் எல்லாம் கூடுமா ?’ என்று அப்பாவியாகக் கேட்டேன்.
‘ஆமாங்க பத்து வருஷமா ரேட்டே கூட்டாம பிரச்சனை பண்ணிட்டிருந்தாங்கோ. இப்போ தான் கூட்டியிருக்காங்க. இனிமே இருபது ரூபா கூடும். தேனாம்பேட்டைக்கு அறுபது ரூபா ஆகும்’ என்றார்.
‘அதெப்டிங்க ? நாலு கிலோ மீட்டர் தான் இருக்கு. புது சார்ஜ் படி பாத்தா 14 + 12 , 28 தானே வருது. இப்போ நாப்பது ரூபா வாங்கறீங்க’ என்றேன்.
‘அதெல்லாம் போடுவாங்க சார். பெட் ரோல் ரேட் கன்னா பின்னான்னு ஏறியிருக்கு.. அவங்க சொல்ற ரேட் எல்லாம் கட்டுப்படியாவாது’ என்றார் சற்று சுருதி குறைத்து.
‘ரேட் அதிகமா வாங்கினா கம்ப்ளெயிண்ட் பண்ண சொல்லி நம்பர் குடுத்திருக்காங்களே’ விடாமல் சீண்டினேன்.
‘அதெல்லாம் ஒண்ணும் ஆவாது சார். நீ வேணும்ன்னா பாரேன்.. ஒரு நாலு மாசம் மீட்டர் வெச்சிட்டு ஓட்ட சொல்வாங்க. அப்புறம் காசு புடுங்கிட்டு விட்டுடுவாங்க. இதெல்லாம் இங்க வொர்க் அவுட் ஆவாது’ என்றார்.
அவர் சென்னதில் தவறேதும் இல்லை. இன்றைய சூழலை அவர் தன்னுடைய மொழியில் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. சட்டங்கள் எத்தனை வந்தாலும் பொதுமக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வும், தார்மீக கோபமும், சமுதாயம் சகமனிதம் மீதான அக்கறையும் இருந்தால் தான் அவை முழுமையான செயல் வடிவம் பெறும். திருந்தும் மனிதர்களுக்கு அறிவுரை போதும், திருந்த மறுக்கும் மனிதர்களுக்குத் தான் சட்டம் தேவை. அந்த சட்டமும் அதிகாரிகளால், காவல் துறையினரால் சரியான முறையில் செயல்படுத்தப் பட்டால் சென்னையில் ஆட்டோ பயணம் என்பது விமானப் பயணம் போல பணம் பறிக்காது.
இல்லையேல் சட்டத்தின் ஓட்டைகளை கரன்சிகள் அடைக்கும், சட்டம் மீண்டும் இருட்டுக்குள் தூங்கும்.
ஃ
Like this:
Like Loading...