வேதாளமாதித்தியனும் சாராயமும்.
அதி நவீன கவிஞர் வேதாளமாதித்யன் அவர்கள் முனியன் சாராயக் கடையில் இலக்கியக் கூட்டம் வைக்கப் போவதை அறிந்து நம்முடைய தினம் ஒரு குவாட்டர் ( தி.ஒ.கு ) மின் குழு சார்பாக பேட்டி எடுக்கச் சென்றோம். வாசலிலேயே குடியும் தாடியுமாக இருந்த அவரை கும்பிடு போட்டு ஓரமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்….
நாம் : – வணக்கம் திரு வேதாளம் அவர்களே. உங்களுடைய கவிதை இலக்கியக் கூட்டத்தை சாராயக் கடையில் வைத்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா ?
வேதாளம் :- சாராயத்தை சாராயமாகப் பார்த்தால் தான் தவறு. சாராயம் உனக்கு என்ன தவறு செய்தது ? சாராயம் ஒரு பானம். அவ்வளவு தான்.
நாம் :- உண்மையிலேயே அது தான் காரணமா ?
வேதாளம் :- உண்மையைச் சொல்லலேன்னா உட மாட்டீங்களே.,ம்….ம்…ம்ம் … நம்ம பசங்க பாதிபேரு சாராயம் வாங்கிக் கொடுத்தால் தான் கவிதை கேப்பேன்னு அடம் புடிக்கறாங்க. என்ன பண்ண சொல்றீங்க ?. அப்படியே குடிச்சாலும் மண்வாசனையோட குடிக்கணுங்கிறதுக்காகத் தான் பட்டை சாராயம் குடிக்கிறோம். குடிச்சுகிட்டே படிக்கிறோம். அப்படியே சைட்ல ஊறுகாயும் கடிக்கிறோம்.
நாம்:- நீங்க தண்ணி அடிச்சுட்டு தான் கவிதை எழுதறீங்கன்னு உங்களைப் பற்றி ஒரு புகார் உலவுது உண்மையா ?
வேதாளம் :- எழுதுறதுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணி அடிப்பேனே தவிர, தண்ணி அடிச்சிட்டு எழுதுறதில்லை.
நாம் :- உங்க கவிதைகளை நீங்க எப்படி எழுதறீங்க ?
( இந்தக் கேள்வி கேட்கும்போது ஊறுகாயைக் கடித்துக் கொண்டே கொஞ்சம் போதையோடு பேச ஆரம்பிக்கிறார் வேதாளம் )
வேதாளம் :- என்னோட பையன் இருக்கானே.. அவன் தாங்க எனக்கு எல்லாம். அவனுக்கு இப்போ ஆறு வயசு. பாக்கிறதை எல்லாம் ஒவ்வொரு வார்த்தையா, தனித்தனி துண்டு பேப்பர்ல எழுதி ஒரு பொட்டில போட சொல்லுவேன். கவனமா கேட்டுக்கோங்க, அப்புறம் திரும்ப சொல்ல மாட்டேன். பொட்டில போட்டதுக்கு அப்புறம் எத்தனை வரி கவிதை வேணும்னு பார்ப்பேன். 5 வரி கவிதைன்னா, 5 துண்டு குலுக்கி எடுப்பேன். அதை அப்படியே வரிசை வரிசையா எழுதிடுவேன். கடைசில “எனக் கழியும் ஜீவிதம்” ந்னு போட்டுடுவேன். கவிதை ரெடி.
நாம் :- ஓ.. நல்ல ஐடியாவா இருக்கே ?
வேதாளம் :- ஆமா, கடைசியா நான் குலுக்கின மன்னிக்கணும் எழுதின கவிதை வாசிக்கவா ?
நாம் :- கண்டிப்பா என்றபடி காதைக் கூர்மையாக்குகிறோம் …
வேதாளம் :-
உடைந்த பலப்பம்,
வால் நக்கும் சொறி நாய்,
காணாமல் போன செருப்பு,
கருவாடு,
போஸ்ட் மேன்
எனக் கழியும் ஜீவிதம்.
நாம் :- ஆஹா அற்புதம்.. அற்புதம். இதுக்கு என்னங்க விளக்கம் கொடுக்கறீங்க ?
வேதாளம் :- அது குடிச்சிட்டு தான் யோசிக்கணும். சில நேரம் விமர்சனம் எழுதற நண்பர்கள் ஏதாவது பெரிய பெரிய விளக்கம் சொல்லுவாங்க, அதையெல்லாம் நோட் பண்ணிக்குவேன். அதுல எது நல்லா இருக்கோ, அது தான் கவிஞனோட சிந்தனைன்னு சொல்லிடுவேன்.
நாம் :- உங்களுக்கு கடந்த மாதம் கொடுக்க இருந்த விருதை வேண்டாம் ந்னு சொல்லிட்டீங்களாமே ?
வேதாளம் :- அதையேன் கேட்கறீங்க, அந்த சமயத்துல நான் எழுதின கவிதைக்கு அப்படி ஒரு விளக்கம் கொடுத்து விருது வர விடாம தடுத்துட்டாங்க விமர்சகர்கள்.
டிவி ஓடவில்லை
காலிலே கல்லு இடிச்சுடுச்சு
பல்லு ஆடுது
யாருக்கு வேணும் இது
எனக் கழியும் ஜீவிதம்…
இதுதான் அந்தக் கவிதை. இந்தக் கவிதைல விருதெல்லாம் எனக்கு வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேனாம். சத்தியமா நான் அப்படியெல்லாம் சொல்லலீங்க. குலுக்கி எடுத்தப்போ இப்படி வந்துச்சு அவ்ளோ தான்.
நாம் :- ஆமா உங்க கவிதைகளுக்கும் சூரியமுத்து கவிதைகளுக்கும் கருத்தளவுல சில ஒற்றுமைகள் இருக்கு. ஆனா நீங்க வேற வேற விதமா எழுதறீங்க சரிதானே ?
வேதாளம் :- எதை வெச்சு சொல்றீங்க ?
நாம் :- உதாரணமா
எதிர்பாராத
ஆச்சரியங்கள் பூச்சொரியும்
என்று தான்
வாழ்க்கைச் சுவடுகள்
வாசலைத் தாண்டுகின்றன…
என்னும் சூரியமுத்துவின் கவிதையும்,
நிச்சயமற்ற சஞ்சாரங்களால்
முனகித் தொடர்கிறது
எனது ஜீவிதம்
என்னும் உங்களுடைய கவிதையும், அடிப்படையில் ஒன்றே. பிறகெப்படி உங்கள் கவிதைகளை புதியவை என நியாயப் படுத்துகிறீர்கள்.
வேதாளம் :- மண்ணின் மணத்தை மண்டியிட்டு நாசியால் நுகர்ந்து பார்த்து, அந்த மண்ணின் பாஷையை சப்திக்காத நாக்குகளின் குரல்களுக்கு என் செவிகள் செவி கொடுக்காது.
நாம் :- புத்தகத்துல உங்க ஊர் நாகர்கோவில் ந்னு போட்டிருக்கிறீங்க. ஆனா நீங்க திருச்சிக்காரர் தானே ?
வேதாளம் :- என்னோட பூர்வீகம் தெலுங்கு. நான் கடலை வியாபாரத்துக்கு தான் தமிழ் நாடு வந்தேன். கோர்வையா நாலு வார்த்தை எழுதத் தெரியாததனால தான் நான் நவீன கவிதை எழுதறேன்னு யாராவது சொன்னா நம்பிடாதீங்க.
நாம் :- ஐயையோ…. என்னங்க, கவிதை புக்கை கிழித்து கை துடைக்கிறீங்க ?
வேதாளம் :- என் புத்தகத்தால சமுதாயத்துக்கு பயனில்லை என்பதை மாற்றிக் காட்டணும் இல்லையா அதான்.
நாம் :- சரிங்க மிக்க நன்றி. நீங்க இன்னும் நிறைய குடிக்கணும்… சாரி.. படைக்கணும்ன்னு வாழ்த்தறோம். இப்போ கிளம்பறோம்.
வேதாளம் :- போயிட்டு வாங்க. போகும்போ அப்படியே சாராயத்துக்கும் ஊறுகாய்க்கும் காசு கொடுத்துட்டு போயிடுங்க.
நாம் :- ஆங்……….
காலிலே கல்லு இடிச்சுடுச்சு
//உடைந்த பலப்பம்,
வால் நக்கும் சொறி நாய்,
காணாமல் போன செருப்பு,
கருவாடு,
போஸ்ட் மேன்
எனக் கழியும் ஜீவிதம்.
//
kavithai super :))))
////டிவி ஓடவில்லை
பல்லு ஆடுது
யாருக்கு வேணும் இது
எனக் கழியும் ஜீவிதம்…
இதுதான் அந்தக் கவிதை. இந்தக் கவிதைல விருதெல்லாம் எனக்கு வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேனாம்////
ithu superooo superaiiiiiiiiiiiiiiii
LikeLike
நன்றி குரு 🙂
LikeLike
Karpanai Peatti Arumai.
Rajini Patri Ezhudhama,
Indra Madhiri Ezhdhunga.
Anbudan
Olerzor
LikeLike
நன்றி ஒளிர்ஞர்… அன்னப் பறவை போல தேவையானதை எடுங்கள்.
LikeLike
நிறைய காலத்துக்குப் பிறகு வாய்விட்டு சிரிக்க வைத்த பேட்டி. உங்க இந்த படைப்பை அப்படியே தூக்கி இலங்கை சஞ்சிகையில வெளியிடணும் அனுமதிப்பீங்களா?
LikeLike
பேட்டி நல்லாத்தான் இருக்கு
LikeLike