“தல” விதி !

thala.jpg

கிரீடம் படம் தல எதிர்பார்த்தபடி அமையவில்லையாம். தல கடைசில ஜெயிலுக்குப் போறதை சகிச்சுக்க முடியாம தலயோட ரசிகர்கள் தியேட்டருக்கே போகலயாம்.

என்னய்யா படம் எடுத்திருக்கே. எங்க தல தோக்கற மாதிரி படம் எடுக்க உனக்கு என்னா தெகிரியம். எல்லாருமா சேர்ந்து தலய வெளியே தல காட்டாம செஞ்சுடுவீங்க போலிருக்கே. வீட்டுக்கு ஆட்டோ ஊர்வலம் அனுப்பவா கணக்கா நிறைய மிரட்டல்களாம்.

மலையாளத்துல இதெல்லாம் சகஜம். ஆன தமிழ்ப்படுத்தும்போ மக்கள் இதையெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு இயக்குனருக்குத் தெரிய வேண்டாமா ?

மோகன்லாலும், திலகனும் அபினயிச்சப்போ ஆ கிளைமேக்ஸ் ஆணு சித்ரத்தின்றே அதி உன்னதமாய விஜயத்தினு காரணம். என்றெல்லாம் இயக்குனர் சொல்லியும் கேட்காமல் கிளைமேக்ஸ் காட்சியை மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்களாம் தயாரிப்பாளர் தரப்பில்.

ஒரு ரூபா வெச்சுட்டு கோடீஸ்வரன் ஆகற சீசன்ல போய் ஜெயிலை எல்லாம் காட்டுவாங்களா ? என்ன டயரக்டர் சார்.

கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட பெட்டி அவசர அவசரமாக எல்லா இடங்களுக்கும் பறந்து திரிகிறதாம்.

எல்லாம் நம்ம தல விதி !

இது ஆண்களுக்கான சமாச்சாரம் !

tomato.jpg

தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.

லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.

நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறதாம்.

அப்புறமென்ன, இனிமேல் வழியில் தக்காளி சூப் விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் பைக்கை கொஞ்சம் நிப்பாட்டி ஒரு சூப் குடிச்சிட்டு போங்க 🙂

ஐ.டி வேலையும், குடும்ப வாழ்க்கையும்

old.jpg

சென்னையில் இந்த ஆண்டு ஐ.டி தம்பதியரிடையே விவாகரத்து 200 மடங்கு அதிகரித்திருப்பதாக திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே கணினி துறை சார்ந்த மக்கள் தங்களுடைய வாழ்க்கை – வேலை சமநிலையை சரிவரக் கண்காணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வாழ்வில் பலவீனமடைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் தேவை பணம் என்னும் நிலையிலேயே நீள்கிறது.

குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளிநாடு பயணம் செய்வது, இரவு பகல் பாராமல் அலுவலகத்தில் இருப்பது, அலுவலகத்து சோர்வை வீட்டில் காட்டுவது என பல வகைகளில் இந்த சமநிலையற்ற தன்மை தொடர்கிறது.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும் கல்லூரியிலிருந்து வெளியே வந்து வேலை தேடும் படலத்தைச் சந்திக்காத காம்பஸ் வாலாக்கள் வேலை கிடைப்பதன் கஷ்டம் என்ன என்பதையே அறியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

படித்து முடித்தவுடன் கிடைக்கும் ஐந்திலக்க சம்பளத்தை வைத்துக் கொண்டு N – சீரீஸ் நோக்கியாவை வாங்கியபின் மிச்சபணத்தை என்ன செய்வது என்பதறியாமல் உல்லாசங்களுக்கு ஒதுக்கி விடுகின்றனர்.

மேலைநாட்டின் ஃப்ரைடே ஃபீவர் இந்திய ஐடி மக்களையும் பெருமளவில் பீடித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவுகளில் சோமபானக் கடைகளில் மங்கலான வெளிச்சத்தில் தவம் கிடக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது.

மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடுவதால், அதிக பணம் கிடைத்து விடுவதால், பக்குவம் என்ற ஒன்று அவர்களுக்குப் பிடிபடாமலேயே போய் விடுகிறது.

விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை என்னும் அடிப்படை அர்த்தம் அவர்களைப் பொறுத்தவரை விதண்டாவாதம். இன்றைய தினத்தை இன்றே அனுபவிப்போம் என்பதே இன்றைய இளசுகளின் தாரக மந்திரம். இதை இன்றைய ஊடகங்களும் முன்னிலைப்படுத்துவது வேதனைக்குரியது.

திருமணப் பயிற்சி என்னும் ஒன்று இன்றைய இளைஞர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. சில மதப் பிரிவுகள் திருமணப் பயிற்சியை திருமணத்தின் கட்டாயமாக்கியிருக்கின்றன. இதே நிலை எல்லா இடங்களிலும் வரவேண்டும்.

வெறும் பாலியல் சார்ந்த உடல் தேவையே திருமணம் எனும் பதின் வயது ஈர்ப்புகளிலிருந்து இளைய சமூகத்தினர் விடுபட வேண்டும். இன்றைக்கு விரல் நுனியில் கிடைக்கும் பாலியல் சார்ந்த தகவல்களின் மாயையைத் தாண்டி விரியும் உன்னதமான இடம் தான் குடும்பம் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறு சிறு தோல்விகள் வந்தாலோ, சண்டைகள் வந்தாலோ டைவர்ஸ் மட்டுமே ஒரே வழி என்னும் மனப்பான்மை நிச்சயம் விலக வேண்டும். அத்தகைய எண்ணத்தை சார்ந்த சமூகம் எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

பணம் இருக்கிறது துணை எதற்கு ? எனும் மனோ நிலையிலிருந்து இளைய சமூகம் விடுபட வேண்டும். அதற்கு ஆழமான குடும்ப உறவுகளும், பெற்றோரும், சமூகமும், மதமும், அலுவலகங்களும் அனைத்துமே தன் பங்கை ஆற்ற வேண்டும்

எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் திருமணமான ஆறு மாதங்களிலேயே விவாகரத்து வாங்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான். இருவரிடமும் தனித்தனியே பேசினேன். உண்மையில் ஈகோவைத் தவிர எந்த பிரச்சனையும் அவர்களிடம் இல்லை.

மன்னிக்கும் மனப்பான்மையை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை மதங்களோ, தியானங்களோ, பெற்றோரோ யாரேனும் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாக வேண்டும்.

வாழ்க்கை என்பதை அமெரிக்க டாலர்களில் அடைத்துவிட முடியாது.

எண்பது வயதில் “நரையன்” என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டே இன்பமான குடும்ப வாழ்க்கை வாழ நமது பாட்டிகளால் முடிந்திருக்கிறது.

எழுபது வருடம் சேர்ந்து வாழ்ந்தபின் ஏற்படும் துணை இழப்பையே தாங்க முடியாமல் கதறும் தாக்தாக்களை நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. அதன் பின்னணியில் வெட்டி விடுதலே விடுதலை என சுற்றும் இளைய சமூகத்தை நினைத்து வேதனைப்படாமல் இருக்க இயலவில்லை.

இளைய சமூகத்தினருக்கு சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். யாரும் எதிலும் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதில்லை. வெற்றி என்பது அடுத்தவருக்குத் தோல்வியை அளிப்பதில் அல்ல, அடுத்தவருக்கு வெற்றியை அளிப்பதில் என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும்.

மன்னிப்பு என்பதையே தண்டனையாய் அளிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழமான குடும்ப உறவுகள், எதிர்காலத்தின் வளமான வாழ்வுக்கு ஆதாரம். இல்லையேல் பலவீனமான குடும்பங்களின் பிரதிநிதிகள் பலவீனமான தேசத்தையே பரிசளிக்க முடியும்.

பால் குடிக்கலாமா ? கூடாதா ?

milk.jpg

பால் உடலுக்கு ஆரோக்கியமானது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் சமீபகாலமாக பால் அதிக கொழுப்பு உடைய பொருள் அதை விலக்க வேண்டும் எனும் கருத்தும் நிலவி வந்தது. வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள் பால், சர்க்கரை, உப்பு என்றெல்லாம் கட்டுரைகள் வெளியாகியிருந்தன.

ஆனால் தற்போது பாலின் பயன்களைக் குறித்து வெளியாகியுள்ள சில ஆராய்ச்சிகள் மீண்டும் பாலின் தேவையை நிலைநிறுத்தியுள்ளன.

தினமும் சுமார் அரை லிட்டர் அளவுக்கு பால் குடிக்கும் ஆண்களுக்கு சருக்கரை நோய், இதயநோய் போன்றவை வரும் வாய்ப்பு மிகப் பெருமளவு குறைவதாக யூ.கே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சுமார் மூவாயிரம் பேரை வைத்து இருபது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட நீளமான ஆய்வின் பயனாக இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பால் மட்டுமன்று பால் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் கூட பெருமளவில் இந்த நோய்களைத் தடுக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

பாலும் பால் சார்ந்த பொருட்களும் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவை என்னும் ஆராய்ச்சி மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தாலும், அதிக கொழுப்பற்ற பாலை உபயோகிப்பதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

அதிர வைத்த சிவாஜி !

r5.jpg

சிவாஜி திரைப்படத்தின் மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்களையும் சிலாகிப்புகளையும் மீறி தற்போது அதன் உண்மையான நிறம் வெளிவரத் துவங்கியிருக்கிறது.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா ? அது சோற்றின் அளவைப் பொறுத்தது என்பீர்களெனில், அதை விடப் பெரியது பூசணிக்காய் என்பதையும் புரிந்து கொள்க 🙂

இணையத்தில் தான் சிவாஜியின் உண்மையான விமர்சனங்கள் வந்தன. அங்கவை சங்கவை என்று கறுப்பை அவமதிக்கும் கதாபாத்திரங்கள், மற்றும் சிவாஜியின் நிறம் மாற்றும் சேஷ்டைகள் என சில சில்லறை விஷயங்களையும் தாண்டி ஆழமான பார்வை இணைய விமர்சனங்களில் காணக் கிடைத்தது.

தற்போது தூங்கிக் கொண்டிருக்கும் திரையரங்குகள் ரசிகனின் புண்ணியத்தால் வார நாட்களில் முப்பது முதல் நாற்பது சதவீதம் வரை நிறைகிறதாம். வார இறுதிகளில் மட்டுமே கலெக்ஷன்.

சென்னையில் ஐநாக்ஸ், சத்யம் மற்றும் ஏவிஎம் ராஜேஸ்வரி தவிர மற்ற அனைத்து திரையரங்குகளிலும் கூட்டமில்லாத நிலையே !

நெல்லையில் பெரும்பாலான திரையரங்குகளில் போட்ட பணம் கிடைக்கப்போவதில்லை என வினியோகஸ்தர்கள் தரப்பு கவலையடைந்திருக்கிறதாம்

மதுரையிலும் இரண்டு திரையரங்குகளில் சிவாஜி போட்ட பணத்தை பெற்றுத்தர மாட்டாராம்.

வேலூரில் ஐம்பது இலட்சத்திற்கு வாங்கியதில் முப்பத்து ஐந்து இலட்சம் தேறினால் பெரிய விஷயம் என்கிறார்கள்.

திருவண்ணாமலை, குமரி மாவட்டம், கேரளா என பல இடங்களில் பல திரையரங்குகளை விட்டே படம் எடுக்கப்பட்டு விட்டது. ஒரு சில திரையரங்குகளில் தான் இப்போது ஓடுகிறது.

சிவாஜி சும்மா அதிருதில்ல ?? ஆமா.. வினியோகஸ்தர்கள் அதிர்ந்து தான் போயிருக்கிறார்கள்.

சரி சிவாஜியைப் பற்றி பேசுறதை நிறுத்திப்போம்…

ஏலேய்… தசாவதாரம் வரப்போகுதாம்ல ? அதுல எழுபது வயது பாட்டி மாதிரி வர கமல் கலக்கறாராம்லே.. ஏலே… நில்லுலே… சொல்லுததை கேட்டுட்டு போலே….

இயேசுவின் வருகையும், டி-ஷர்ட் விற்பனையும்

jesus-christ.jpg

அடுத்த ஆண்டு மேய் மாதம் ஐந்தாம் தியதி இயேசு வானத்தில் தோன்றுவார் என்று இணையதளம் ஒன்றில் அமெண்டா பியர்ஸ் என்பவர் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்புகளைப் பெற்றிருக்கிறது.

தன்னிடம் கனவில் இயேசு கூறியதாக இந்த செய்தியை அவர் வெளியிட்டிருக்கிறார். வானத்தில் இயேசு தோன்றுவார் என்றும், அப்போது நில நடுக்கம் தோன்றும் என்றும் நட்சத்திரங்கள் எரிந்து விழும் என்றும் , உலகம் முழுவதும் உள்ள கணினிகள் அன்று தானாகவே ஷட் டவுன் ஆகி பின் ஸ்டார்ட் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடவுள் தோன்றும் நாளையும் நேரத்தையும் அறிந்து கொள்ளும் சுவாரஸ்யம் எல்லா மதத்தவர்க்கும் இருப்பதால் இத்தகைய செய்திகள் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்று விடுகின்றன.

இதன் விளைவாக ஜீஸஸ் 2008 – எனும் பெயரிடப்பட்ட டி-ஷர்ட்கள் பெருமளவில் விற்பனையாகின்றனவாம்

இந்த கடவுள் நெருப்பு வழியாக தோன்றுவார், இந்த நாளில் வானத்தில் தோன்றுவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருபவரல்ல கடவுள்.

சிவப்பு நிற சேலை விற்பனை இல்லையெனில் இந்த ஆண்டு சிவப்பு நிறம் அனிந்து நடப்பது நல்லது என்று ஜோசியம் கூறி வர்த்தகத்தைப் பெருக்குவதற்கு வேண்டுமானால் இத்தகைய செய்திகள் பயன்படலாம் !

நாம் நினைக்கும் நேரத்தில் கடவுளைக் காணவேண்டுமெனில் ஒரே ஒரு வழி தான் உண்டு. ‘ஏழைகளுக்கு நீங்கள் எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்தீர்கள்’ எனும் வார்த்தைகளின் படி வாழ்க்கையில் அவரைத் தரிசிப்பதே.

இந்தியன் எக்ஸ்பிரஸ் : ஆண்டு 2020

2020 ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் இப்படி இருக்குமாம். கற்பனை வடிவம் யாரோ, மின்னஞ்சலில் வந்தது 🙂

2020.jpg

வைட்டமின் சி : நம்பிக்கை பொய்த்தது

tablet.jpg

வைட்டமின் சி உடலில் தேவையான அளவுக்கு இருந்தால் ஜலதோஷம் நெருங்காது என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாய் இருந்து வருகிறது.

நோபல் பரிசுபெற்ற லினஸ் பால் என்பவர் 1970ல், வைட்டமின் சி தினமும் 1000 மில்லி கிராம் என்னுமளவில் உண்டு வந்தால் ஜலதோஷமே வராது என்று சொல்லியிருந்தார்.

அப்போது ஆரம்பித்த இந்த வைட்டமின் சி ஆராய்ச்சிகள் தினம் தோறும் புதுப்புது தோற்றம் எடுத்துக்கொண்டே தான் வந்திருக்கின்றன.

தினமும் ஆயிரம் மில்லி கிராம் என்பது அதிகம் தினமும் இருநூறு மில்லிகிராம் உண்ணலாம் என்று பிரிட்டனிலுள்ள கேத்ரின் எனும் மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வு வைட்டமின் சி தினமும் உண்டு வந்தாலும் ஜலதோஷத்திலிருந்து விடுதலை கிடைக்காது என்று முடிவு தெரிவித்திருக்கிறது.

நம் உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி காய்கறிகள் பழங்கள் உண்பதன் மூலமாகவே கிடைத்து விடுகிறது. அப்படி தினமும் தேவையான அளவுக்கு வைட்டமின் சி உண்டு வந்தாலும் ஜலதோஷம் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் தரமுடியாது என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சி பல மருத்துவப் புருவங்களை உயர்த்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்

பாட்டு கேட்டால் மின்னல் தாக்கும் !!!

a.gif

நவீன உலகம் இன்று தனது ஒரு கையில் நவீனத்தையும், மறுகையில் ஆபத்தையும் வைத்துக் கொண்டு தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் கைப்பேசியில் தினம் தோறும் முளைக்கும் புதுப்புது வடிவங்களும் வசதிகளும் வியப்பையும், பயத்தையும் ஒரே நேரத்தில் தருகின்றன.

காதுகளில் இயர்போன் மாட்டாத இளைஞர்களை ரயில் பயணங்களில் இப்போதெல்லாம் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. எல்லோர் காதுகளிலும் சுசித்திராக்கள் மூக்கால் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ரஹ்மான்கள் அலறிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் ஐப்பாடுகளை இடுப்பில் சொருகிக்கொண்டு வாக்கிங், ஜாகிங் செய்வது சர்வ சாதாரண நிகழ்ச்சி. இது கூட ஆபத்தில் முடியலாம் என்னும் தகவல் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

கனடாவின் வேன்கோவர் பகுதியில் ஒருவர் ஐப்பாடை இடுப்பில் சொருகிக் கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருந்திருக்கிறார். திடீரென வந்த மின்னல் அவருடைய இயர்போன் வழியாக காதை தாக்கி காதுகளின் கேட்கும் தன்மையை வெகுவாக இழந்திருக்கிறார். அவருடைய நாடியும் இந்த தாக்குதலில் உடைந்திருக்கிறது.

இத்தகைய கருவிகள் ஆபத்தற்றவை எனும் கூற்று கேள்விக்குறியாகி இருக்கிறது. பாதிப்புக்குள்ளான நபர் அணிந்திருந்த ஹெட்போன் மெட்டலும், அவருடைய வியர்வையும் கலந்ததனால் தான் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. சாதாரணமான உபயோகத்தில் இவை நிகழ வாய்ப்பில்லை என சம்மதங்கள் சொல்லப்படுகின்றன.

மின்னல் தாக்கியபோது அந்த நபர் சுமார் எட்டு அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின் கனடா மருத்துவர்கள் ஜாகிங் செய்துகொண்டே பாட்டு கேட்போரை எச்சரித்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருக்கும் காலநிலைகளில் இவை தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

( கொஞ்சம் பழைய செய்தி தான்.. ஆனாலும் .அறிய வேண்டிய செய்தி ! )