இன்று காலையில் கொடூரமான செய்தியைப் படிக்க நேர்ந்தது. நடத்தையில் சந்தேகம் எனும் காரணத்தைக் கூறி தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான் ஒருவன்.
இதில் திடுக்கிடும் செய்தி என்னவெனில், அவன் இரண்டு மனைவிகளுடன் குடித்தனம் நடத்துபவன் என்பது தான்.
அடிக்கடி இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர்களைப் பற்றிய செய்தியைப் படிக்கும் போது பல கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன.
சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை எப்படி இவர்களால் சமூகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல் படுத்த முடிகிறது.
எப்படி ஒரு மனைவியால், தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. என்னதான் பொருளாதார சார்பு இருந்தாலும்!
ஒருவேளை மனைவியின் நடத்தையில் பிழை இருப்பினும், இரண்டு மனைவியருடன் இருக்கும் ஒரு கணவனுக்கு, தன்னுடைய மனைவிக்கு இரண்டு கணவன் இருப்பதை தடுக்க என்ன உரிமை இருக்கிறது.
கடைசியாக, எப்படி ஐயா மனம் வருகிறது ? கணவன் மனைவி சண்டையில் கள்ளம் கபடமில்லாத பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய ?
கணவன் திட்டியதால் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் தாய்மார்கள், மனைவியையும் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்யும் கொடூரர்கள், இரண்டாவதும் பெண்ணாய் பிறந்து விட்டதே என்பதற்காக குழந்தையை மூன்றாவது மாடியிலிருந்து வீசிக் கொன்ற தாய்…
இப்படி செய்திகளை தினம் தினம் படித்து காலைப் பொழுதை ஒரு விதமான மன அழுத்தத்துடனேயே ஆரம்பிக்க வேண்டிய சூழலில் வாழ்வதை நினைக்கும் போது ஆற்றாமையாய் இருக்கிறது.
காலையில் செய்தித் தாள் படிப்பதையே நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன்.