ரஷ்ய விஞ்ஞானிகள் மருத்துவ உலகின் மிக முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
நோயுற்றவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதும், பரிசோதனைகள் உடலிலிருக்கும் நோயைக் கண்டு சொல்வதும் தான் இது நாள் வரை மருத்துவப் பரிசோதனையாய் இருந்து வந்திருக்கிறது.
ஆனால் இப்போதைய புதிய கண்டுபிடிப்பு நோய் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நோய் வரக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடித்துச் சொல்கிறது என்பதே வியப்பூட்டும் செய்தி.
ஒரு துளி இரத்தத்தைப் பரிசோதனை செய்து அவருக்கு பிற்காலத்தில் என்னென்ன நோய்கள் வரும் என்பதை கண்டறிந்து சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நீரிழிவு நோய் வரும் வாய்ப்பை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும், இதய நோய்களள மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், புற்று நோய் வரும் வாய்ப்பை பத்து ஆண்டுகளுக்கு முன்பும் இந்த சோதனை கண்டறிந்து சொல்லி விடுகிறது.
சிறுநீரகம், வயிறு, நுரையீரல் என அனைத்து விதமான பாதிப்புகளையும் இந்த சோதனை கண்டுபிடித்துச் சொல்லி விடுகிறதாம்.
இது மருத்துவ உலகின் புரட்சியாய் கருதப்படுகிறது. நோய் தாக்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே தெரிந்து விடுவதால் அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நோய் தாக்காமல் காக்கவும் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்ற சோதனைகள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றனவாம்.
நோயின் வீரியம் அதிகரித்தபின் அதை இனம் கண்டு கொள்வது பொருள் இழப்பையும், உயிர் இழப்பையும் தந்து விடுகிறது. இந்த புதிய சோதனை வருமுன் காப்போம் நடவடிக்கை போல மருத்துவ உலகில் புத்தம் புதிய கதவுகள் சிலவற்றைத் திறந்துள்ளது என்றால் அது மிகையல்ல.