நாராயணா… இப்படிப் பண்ணிட்டியே நாராயணா

kid

கொஞ்சம் கவலையாய் இருந்தான் நண்பன். பொதுவாகவே கலகலப்புக்குப் பஞ்சம் வைக்காதவன் அவன். அப்படி என்ன தான் பிரச்சினை என்று கொஞ்சம் நெருங்கிக் கேட்டேன்.

“இல்லடா… இன்னொரு குழந்தைக்கு பிளான் பண்றேன், ஆனா முதல் குழந்தை பிறந்தப்போ பண்ணின ஒரு தப்பினால அடுத்ததா ஒண்ணும் செட் ஆக மாட்டேங்குது” துண்டு துண்டாக ஏதோ அவார்ட் டாக்குமெண்டரி போல உளறிக் கொண்டிருந்தான்.

அப்படி என்னதாண்டா பிரச்சனை முதல் குழந்தை பிறந்தப்போ ? எதுவா இருந்தாலும் இப்போ சென்னையில இல்லாத மருத்துவமனைகளா ? பத்து வருஷம் குழந்தை இல்லேன்னாலே சக்ஸஸ் பண்ணி தர டாக்டர்ஸ் இருக்காங்க. உனக்கென்னடா ? ஒரு குழந்தை ராஜா மாதிரி இருக்கான் பதட்டப்படாம மருத்துவ ஆலோசனை பண்ணலாமே என்றேன்.

“நோ..நோ.. அப்படியெல்லாம் ஆஸ்பிட்டல் போற சிக்கல் ஒண்ணும் இல்லை…” அவன் படபடத்தான்.

“மனைவி முரண்டு பிடிக்கிறாங்களா ?….”

“சே..சே.. இரண்டு பேரும் தான் வேணும்ன்னு முடிவு பண்ணினோம்”

“அப்போ என்னடா வீட்ல பிரச்சனையா ? இல்லை வேலை நிரந்தரமா இருக்குமாங்கற பயமா ? என்னண்ணு சொல்லித் தொலையேண்டா வெளக்கெண்ணை” குரலின் சற்று போலியான கோபத்தைக் காட்டியபோது தான் என் முகத்தைப் பார்த்தான்.

“இல்ல..இல்ல… அதெல்லாம் உங்கிட்டே சொன்னா வெளங்காது… நீ உன்னோட உருப்படாத பிளாக்ல போட்டாலும் போட்டுடுவே…” அவன் கொஞ்சம் நக்கலாய் சொன்னான்.

“உனக்கு அறிவிருக்கா… என்னோட பிளாக் என்ன உன்னோட குடும்பப் பிரச்சினையை எழுதற பிளாகா ? தேவையில்லாதது எதையும் எழுதமாட்டேன் மச்சி.. நீ பயப்படாம சொல்லு…” என்றேன்.

“இல்ல.. என் பையனை உனக்குத் தெரியும் இல்லையா ?”

“ஆமா அவனை தான் அடிக்கடி பாக்கறேனே. படு சுட்டி வயசு நாலு, பயங்கர வாலு…” என்றேன்

“அவன் பேரு என்ன தெரியுமா ?”

“உனக்கு ஏதோ பிரச்சனை தாண்டா மச்சி.. ஷங்கர நாராயணன் தான் அவன் பேருன்னு தூக்கத்துல தட்டி எழுப்பி கேட்டா கூட சொல்லுவேனே”

“அந்த பேரு தாண்டா பிரச்சனை “ அவன் சொன்னதும் இப்போ எனக்கு ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறை !

“அந்த பேருக்கு என்னடா ? யாராச்சும் ஏற்கனவே காப்பி ரைட் வாங்கி வெச்சிருக்காங்களா ? “ என்றேன்.

“அப்படி இல்லடா.. நான் அவனுக்கு அவினாஷ் ன்னு பேரு வைக்கணும்னு தான் சொன்னேன். தாத்தா தான் ஷங்கர நாராயணன் பேரு வைக்கணுன்னு ஆசைப்பட்டாரு. அதான் அந்த பேரை வெச்சேன். “

“சரி.. அதுக்கென்ன இப்போ ? இன்போசிஸ் தல கூட நாராயணன் தானே மச்சி. உன் பையனும் அப்படி பெரிய ஆளா வருவான்னு நினைச்சுக்கோ…”

“டேய் வெறுப்பேத்தாதே. நாராயணன்னு பேரு இருந்தா அவனுக்கு தம்பியோ, தங்கச்சியோ பொறக்காதுடா “ அவன் கடைசியில் கொட்டி விட்டான். எனக்கோ தாங்க முடியாத சிரிப்பு….
“வாட்…. என்னடா சொல்றே ? அப்போ நாராயண மூர்த்திக்கு தம்பி தங்கச்சியே இல்லையா ? அந்த மேட்டரே எனக்குத் தெரியாதே..” என்றேன்

“பாத்தியா.. நக்கலடிக்கிறே..” அவன் கொஞ்சம் சீரியசானான்.

“மச்சி… நாராயணன்னு பேரு வெச்சா அதுக்கப்புறம் உனக்கு குழந்தை பொறக்காதுங்கறதையெல்லாம் ஆபீஸ்ல சொல்லிடாதே.. உன்னை லே ஆஃப் பண்ணினாலும் பண்ணிடுவாங்கடா” என்றேன்.
“டேய்… கொஞ்சம் சீரியஸா இரேண்டா….யோசிச்சுப் பாரு…  எனக்குத் தெரிந்து நிறைய நாராயண ன்களுக்கு தம்பி தங்கச்சிங்களே கிடையாது” அவன் முரண்டு பிடித்தான்.

“உனக்குத் தெரியாத பல நாராயணன்களுக்கு பல தம்பிகள் இருப்பாங்க. இல்லேன்னா அரசு கு.க க்கு ஏன் இவ்ளோ செலவு பண்றாங்க. எல்லோரும் குழந்தைக்கு நாராயணன்னு பேரு வையுங்க ன்னு ஒரு சட்டம் இயற்றினா போதுமே… இந்திய மக்கள் தொகையும் அதிகரிக்காது.” என்றேன் சிரிப்பு மாறாமல்
அந்த நேரம் பார்த்தா யாதவ நாராயணன் அங்கே வரவேண்டும், அதுவும் அவனது இரண்டு தம்பிகளுடன்.

“டேய் யாதவா.. இது உன் தம்பி தானாடா.. நல்லா தெரியுமா” என்றேன்.

“எனக்கு டைம் ஆச்சுடா கிளம்பறேன் என்று விருட்டென கிளம்பினவன் தான். இன்னிக்கு வரைக்கும் இருபது தடவை கால் பண்ணிட்டேன்… போணை எடுக்கவே மாட்டேங்கறான்.”

நாராயணா… இப்படி பண்ணிட்டியே நாராயணா !

ரஹ்மானைப் பாராட்டாத ஒரே தலைவர்

rahman

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைக் குறித்துப் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருதுக்காக அவருக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று எல்லா அரசியல் தலைவர்களும் கட்சி வித்தியாசம் பாராமல் பாராட்டிக் கொண்டிருக்கையில் ஒரே ஒருவர் மட்டும் மௌனம் சாதிக்கிறார் !

எல்லா பத்திரிகைகளும் ரஹ்மானை முதல் பக்கத்தில் அலங்கரித்து கௌரவிக்கையில், அவருடைய கட்சி சார்பாக வெளிவரும் நாளிதழில் மட்டும் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய விஷயம் கடைசி பக்கத்தில் அச்சாகியிருந்தது !

மகன் திரையில் புகை பிடித்தலை எதிர்க்கிறார், தந்தை திரையில் இசை அடித்தலைக் கூட எதிர்க்கிறாரா என்றும் தெரியவில்லை.
அப்படி என்ன வெறுப்போ மருத்துவருக்கு ரஹ்மான் மீது !

அல்லது ஆஸ்கர் மீது

அல்லது ஸ்லம் டாக் மில்லியனர் மீது !

திரைப்படங்களை ஒதுக்கும் மக்கள் தொலைக்காட்சியில் கூட உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன !

இது திரைப்படங்கள் மீதான வெறுப்பா ?
அல்லது ரஹ்மான் மீதான வெறுப்பா ?

சிறுபான்மை இனத் தங்கமே” என சிறு நாசூக்கு அரசியல் அறிக்கை வெளியிட்டிருந்த கலைஞர் இதைக் கவனித்தால் “சிறுபான்மையினரை பாராட்ட மறுக்கும் கட்சி  – பா.ம.க என ஒரு புது அறிக்கை வெளியிட்டாலும் வெளியிடுவார் என யாரேனும் மருத்துவரிடம் சொன்னால் நலம்.

வீரப்பனைக் கூட சாதீய காரணங்களுக்காக பாராட்டும் ஒரு தலைவர், இசைக்காக தமிழர் ஒருவர் உயரிய விருது வாங்குவதை மனமாரப் பாராட்டாவிட்டால்…

தமிழ், தமிழ், தமிழன், தமிழீழம், தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பத்திரிகை என்றெல்லாம் புலம்புவதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது.

ஆஸ்கர் ரஹ்மானும். கவனிக்கும் கமலும்

ar1

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இசைப்புயலுக்கு நானும் ஒரு வாழ்த்துச் சொல்லவில்லையேல் பிளாக் உலகம் என்னை மன்னிக்காது.

ரஹ்மானுக்கு விருது கிடைக்குமா ? எனும் எதிர்பார்ப்புடன் காலையில் நிகழ்ச்சியைப் பார்க்க அமர்ந்தால், அட… அலுவலகத்தில் மிக முக்கியமான மீட்டிங் இருப்பது நினைவுக்கு வந்து தொலைந்தது. (இல்லையேல் நான் தொலைந்திருப்பேன் என்பது வேறு விஷயம் )

பிறகென்ன, வரும் வழியில் கேள்விப்பட்டேன் இரண்டு விருதுகளை ரஹ்மான் வாங்கிய மகிழ்ச்சிச் செய்தியும். ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் அமோக அறுவடையும்.

வாழ்த்துக்கள் ரஹ்மான்.

நான் பூஜை செய்ததால் தான் ரஹ்மானுக்கு விருது கிடைத்தது, நான் ஏற்கனவே ஆரூடம் சொல்லியிருந்தேன், அவரு ஜாதகம் அப்படி என்றெல்லாம் இனிமேல் சில நாட்களுக்கு நம்மூர் பத்திரிகைகள் நகைச்சுவைகளை அள்ளி விடும் என்பதில் ஐயமில்லை.

ஸ்லம் டாக் மில்லியனர் – படத்தின் பிரமிப்பூட்டும் விருது அறுவடை உலகுக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைச் சொல்லியிருக்கிறது. அதாவது எவரையும் சின்னப் பசங்க என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடாதீர்கள் என்பதே அது. என சுவாரஸ்யமாய் கூறுகிறது   அமெரிக்காவின் யூஎஸ் ஏ டுடே நாளிதழ்.

ஹாலிவுட்டின் கதவுகள் இந்திய திசையை நோக்கி மெலிதாய் திறந்திருக்கின்றன. இனிமேல் இந்தியத் திறமைகள் ஆஸ்கர் மேடையில் அடிக்கடி நுழையும் என நம்பலாம்.

திறந்திருக்கும் கதவை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, கமல் கவனித்திருப்பார்.

இன்னுமா தூங்கல ?

sleeping_princess

“நானெல்லாம் வெறும் மூணு அல்லது நாலு மணி நேரம் தான் தூங்குவேன். மற்றபடி முழுக்க முழுக்க வேலை தான்” 

“இப்படி தூங்கி வழியும் நேரத்தில் எத்தனையோ உருப்படியான வேலை பார்க்கலாம்”

இப்படியெல்லாம் உங்களைச் சுற்றி, தூக்கத்தைப் பற்றி உளறிக் கொண்டிருப்பவர்களை அருகில் அழைத்து “ஏன் தூங்க வேண்டும் தெரியுமா?” என கேளுங்கள். அவர்களிடம் தூக்கத்தின் மகத்துவத்தை விளக்குங்கள்.

ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதே சரியான அளவு எனத் தெரிவிக்கும் அமெரிக்காவின் மருத்துவர் சாரா பல்டாஃப், ஏன் சரியான தூக்கம் வேண்டும் என்பதற்கும் தெளிவான பத்து காரணங்கள் தருகிறார். 
1. சரியா தூங்காவிட்டால் உடல் பருமனாகி, குண்டாகி விடும். பலருக்கும் இது தெரிவதில்லை. உண்மையில் சரியான தூக்கமில்லாவிடில் உடலிலுள்ள பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் இயல்பு நிலையை விட்டு விலகி விடுகின்றன. இது உடலை எடை அதிகரிக்கச் செய்து விடுகிறது.

2. சரியான அளவு தூக்கம் இல்லாவிட்டால் நமது உணவுப் பழக்க வழக்கம் கூட மாறிவிடுகிறது. உடல் அதிக கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தேட ஆரம்பிக்கும்.அது உடலுக்கு பெரும் பாதகமாய் அமையும் என்பதைச் சொல்லத் தேவையில்லை

3. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உடலில் சருக்கரை (நீரிழிவு) நோய் வரும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

4. இதய நோய் !  சரியான அளவு தூக்கமில்லையேல் உங்களுக்கு இதய தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு 45 விழுக்காடு அதிகரிக்கிறது.

5. குருதி அழுத்தம் அதிகரிக்கிறது. தூக்கமற்ற இரவு, உடலை பலவீனப்படுத்துவதுடன், மறு நாள் அதிகப்படியான உடல் மற்றும் மன அழுத்தத்தைத் தந்து கூடவே குருதி அழுத்தத்தையும் தந்து விடுகிறது.

6. கவனச் சிதைவுக்கு தூக்கமின்மை காரணமாகி விடுகிறது. மூன்று மணி நேரம் தூங்கி வேலை செய்வதை விட சரியான அளவு தூங்கி வேலை செய்வதே தெளிவான வேலைக்கு உத்தரவாதம் தரும்.

7. சரியான தூக்கமின்மை உடலை தடுமாற வைக்கும். குறிப்பாக  வயதானவர்கள் சரியான தூக்கம் பெறவில்லையேல் தடுமாறி விழுந்து உடலை காயப்படுத்திவிடக் கூடும்.

8. மன அழுத்தத்துக்கு தூக்கமின்மை ஒரு காரணியாகிவிடுகிறது. மூளைக்குக் கிடைக்க வேண்டிய சரியான ஓய்வு கிடைக்காததே இதன் காரணம்.

9. குழந்தைகளுக்கு பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒழுக்கம் சார்ந்த சிக்கல்களும் குழந்தைகளுக்கு வர சரியான தூக்கமின்மை காரணமாகக் கூடும்.

10. மரணம் விரைவில் வந்து கதவைத் தட்ட சரியான தூக்கமின்மை காரணமாகிவிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே தூக்கம் என்பது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயலல்ல, நாளைய தினத்தை பயனுள்ளதாக்க உடல் கொள்ளும் ஓய்வு என்பதை உணர்ந்து செயல்படுதலே சிறப்பு.

வேளச்சேரி குறித்த ஓர் புலம்பல்

tree-aheadசென்னைக்கு “அவுட்டர்” என அழைக்கப்பட்ட வேளச்சேரி இப்போது சென்னையின் மையமாக உருமாறி விட்டதால் கூடவே ஆரம்பித்து விட்டது இடியாப்பச் சிக்கல்.

முன்பெல்லாம் சரக் சரக்கென சைக்கிளில் சுற்றி வந்த சாலையை இப்போது நடந்து கடக்க வேண்டுமென்றாலே கால்மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவஸ்தை.

குருநானக் கல்லூரியிலிருந்து அலெக்ஸாண்டர் சதுக்கம் நோக்கி வரவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர்கள் கடந்த பிறவியில் சாவான பாவம் செய்தவர்கள். நின்றும், ஊர்ந்தும் நகர்ந்தும் அந்த ஒரு கால் கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் கடிகாரம் ஒரு சுற்று ஓடி முடித்துவிடும், கால்வலியும் பிடிவாதமாய் வந்து அமர்ந்து கொள்ளும்.

அந்த சாலையில் இத்தனை “தெருக் கோயில்கள்” இருப்பது  முன்பெல்லாம் கவனத்துக்கு வந்ததேயில்லை. இப்போது வண்டியை வளைத்தும் நெளித்தும் ஓட்டும் போது தான் தெரிகிறது சட்டென முன்னால் நிற்கும் வித்தியாசமான பெயர்களுடன் பல கோயில்கள்.

பாவம் இந்த சாலைக் கடவுள்கள் யாரிடம் சாபம் பெற்றார்களோ ? நாளெல்லாம் புழுதியில் புழுங்க வேண்டிய அவஸ்தை. யாரும் இந்த கோயில்களில் வந்து நின்று தொழுததைப் பார்த்ததில்லை. அல்லது குறைந்த பட்சம் அந்த கோயில்களை சுத்தம் செய்கிறார்களா என்பதே கூட மர்மமே.

அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் நிகழ்வதற்கு மிக முக்கிய பங்காற்றும் இந்த கோயில்களை சற்றே காற்றோட்டமான இடத்துக்கு இடம் மாற்றி வைத்தால் கடவுளுக்கும் காற்று கிடைக்கும், கூடவே பயணிப்பவர்களுக்கும் சாலை கிடைக்கும்.

ஆனால் என்ன, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் சட்டென மக்களுக்கு பக்திப் பெருக்கெடுத்து ஒரு பெரிய கலவரமே உருவாகும் வாய்ப்பும் உண்டு என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை போல.

ஒருகாலத்தில் இந்த ஏரியாவே கொலைகாரர்களின் சுவர்க்க புரியாகவும், பாம்புகளின் கூடாரமாக இருந்தது என்றார் ஒருநாள் நான் பயணம் செய்த கால் டாக்சி ஓட்டுநர். அது உண்மை என்பது போல வரிசையாய் புற்றுக் கோயில்கள் !

அது ஒரு புறம் இருக்கட்டும்,

அந்த நெரிசல் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது. “ Tree Ahead” Go Slow என சிங்காரச் சென்னை போக்குவரத்து காவல் துறை அமைத்திருக்கும் அறிவிப்புப் பலகை அது.

அதில் விஷேசம் என்னவென்றால், மரம் இருக்கிறது என்பதை மரத்தின் மேலேயே ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

“நல்ல வேளை சொன்னாய்ங்க.. இல்லேன்னா மோதியிருப்பேன்லே…” என சிரித்துக் கொண்டே மக்கள் வண்டி ஓட்டுவது சகஜமாகி விட்டது. என்னதான் ராத்திரி வர்றவங்களுக்காக ஹி…ஹி … என சால்ஜாப்பு சொன்னாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்.

இங்கே பள்ளம் இருக்கிறது என பள்ளத்துக்கு உள்ளேயே சென்று போஸ்டர் ஒட்டுவீங்களா ஆப்பீசர் ? 

நடு ரோட்டில் ஆஜானுபாகுவாய் நிற்கும் இந்த மரத்தை கொஞ்சம் வெட்டி எடுத்தாலாவது பரவாயில்லை மக்களுக்கு கொஞ்சம் இடம் கிடைக்கும். அதுக்கெல்லாம் வழியைக் காணோம். ஒருவேளை அசோகர் காலத்துல நட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மரமோ என்னவோ ?

விஜயநகர் பஸ்டாண்டின் மையப்பகுதியில் இருக்கிறது ஒரு டாஸ்மார்க் கடை. எந்தப் பருவகாலத்திலும் பொய்க்காத வியாபாரம் அதற்குண்டு. ஸ்டெடியாக வரும் குடிமகன்களின் இருசக்கர வாகனங்களே பெரும்பாலான சாலையை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

என்னப்பா இது.. கோயிலை இடம்  மாத்தினா தான் பிரச்சினை. டாஸ்மார்க்கைக் கூடவா இடம் மாத்தக் கூடாது ? அதை கொஞ்சம் நாலு தெரு தள்ளி வெச்சா யாரும் வரமாட்டாங்களா என்ன ? ஒதுக்கமா இருந்தா தான் “ஒழுக்கமான” குடிகாரங்களும் தெகிரியமா வருவாங்கப்பு…

ஒரு பகுதியில் மக்கள் அதிகமாகக் குடியேற ஆரம்பிக்கிறார்கள் எனில் அந்தப் பகுதியை அதற்கேற்றார் போல் கொஞ்சம் வசதியாக ஆக்கினார்கள் என்றால் எல்லோருக்கும் வசதியாகும். 

இல்லையேல், TREE AHEAD போல ROAD AHEAD என ஒரு போர்டை காவல் துறை மாட்டினால் தான் சாலை இருப்பதே நாளை கண்ணுக்குத் தெரியும் !

பெண்கள் கவனத்துக்கு….

vidisha-_2_பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

வார இறுதியில் பார்த்த படங்கள் …..

4

வாரத்துக்கு ஐந்து நாள் நடு ராத்திரி வரை கணினி முன்னால் அமர்ந்து பேய் மாதிரி முழிப்பவனுக்குத் தான் தெரியும் வார இறுதிகளின் சுவாரஸ்யம். இதைத் தான் முன்னோர்கள் வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்றார்கள். இப்போ தான் கண்ணுக்கு நிழலே தெரிய மாட்டேங்குதே !

குழந்தைகளுடன் விளையாடுவதைகத் தவிர்த்துப் பார்த்தால் வார இறுதிகளில் கிடைக்கும் ஒரு பொழுது போக்கு எல்லோரையும் போல சில திரைப்படங்கள். சீரியல் எரிச்சல் தாங்க முடியாமல் கேபிளைக் கட் பண்ணி கடாசி பல மாதங்களாச்சு. அதனால் திரைப்படங்களெனில் திரையரங்கு அல்லது தி.விசிடி.

கடந்த வாரம் பார்த்த படங்களில் ரொம்பவே நெகிழ வைத்த படம் “வாரணம் ஆயிரம்”. தந்தை மகனுக்கு இடையேயுள்ள நெருக்கமும், நெகிழ்வும் உயிருக்குள் ஆழமாய் இறங்கி கண்கலங்க வைத்தது. தோழனாய் வாழ்ந்த தந்தையின் நினைவுகள் காரணமாய் இருக்கலாம். நாயகன் தந்தையை இழந்தபின் ஏக்கத்தில் பேசும் வார்த்தைகள் என் மனதுக்குள் நான் அடிக்கடி பேசும் வார்த்தைகள் என்பதனாலும் இருக்கலாம்.

எனினும், குழந்தைக் கடத்தல், ஜர்னலிஸ்ட் கடத்தல் என கதையின் அடி நாதத்தை விட்டு படம் தேவையின்றி விலகிச் சென்றது உறுத்தலாகவே இருந்தது. அந்த விதத்தில் இன்னும் சேரனின் தவமாய் தவமிருந்து உள்ளுக்குள் ஈரமாய் இருக்கிறது.

சேரன் என்றதும் ராமன் தேடிய சீதை நினைவுக்கு வருகிறது. நண்பன் கொண்டு வந்து பாசமாய் கொடுத்ததற்காய் பார்த்த படம். மனதுக்கு நிறைவைத் தந்தது. சில படங்கள் பார்த்தபின், அடச் சே கிடைத்த மூணுமணி நேரத்தை தூங்கியாவது அனுபவித்திருக்கலாம், இப்படி… என தோன்றும். அந்த நினைப்பு தோன்றாமல் இருந்தாலே நல்ல படம் எனும் வரையறை என்னுடையது. அந்த வகையில் ராதேசீ மனதுக்குள் நிறைவு.

நண்பனின் வீட்டுக்கு மாலையில் சென்றிருந்தபோது “திண்டுக்கல் சாரதி” படம் பார்த்துக் கொண்டிருந்தான். “செம ஜோக் மச்சி” என்றான். அப்படியா என்றபடி கொஞ்சம் அமர்ந்தேன். இரண்டாவது முறையாகப் பார்க்கிறானாம். சிரித்துச் சிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து நிமிடங்களுக்கு மேல் செயற்கையாய் சிரிக்க முடியாமல், முகம் அஸ்டகோணலாகிப் போக விடைபெற்றேன்.

சரி.. இந்த படம் பாரு, உனக்குப் பிடிக்கும் என ஒரு படத்தைக் கையில் கொடுத்தான்.

டென்ஷல் வாஷிங்டன் இயக்கி நடித்திருந்த “த  டிபேட்டர்”  படம்.

நிஜமாகவே மனதுக்கு நிறைவளித்த படம். 1935 களில் நகரும் படம் அக்கால கருப்பர் இன மக்களின் கல்வி வேட்கையையும், அடிமைத்தனங்களையும் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

நான்கு டிபேட்டர்களை உருவாக்குகிறார் கதாநாயகன். அந்தக் கதையைச் சுற்றி நகர்கிறது அன்றைய சமூக அமைப்பும், அவலமும், காதலும் இன்ன பிற சமாச்சாரங்களும்.

கடைசி விவாதத்தில் காந்தியின் அகிம்சைக் கொள்கையைப் பற்றிப் பேசியும், கருப்பர் இன அவலங்கள் பற்றிப் பேசியும், கருப்பராய் பிறந்த காரணத்துக்காய் வன்முறைக்கு ஆளாவதையும் டென்ஷல் வைடேகர் பேசும்போது, அடுத்த தீவு ஈழத் தமிழர்கள் நினைவுக்குள் வந்து நிற்கிறார்கள்.

நமது ஊரில் முன்பே வந்து போயிருக்கலாம். அல்லது அவுட்லேண்டர் போன்ற படங்களுக்காய் வழிவிட்டு ஒதுங்கியிருக்கலாம். 
 
டிவிடியைத் திருப்பிக் கொடுத்தபோது, இந்த வாரம் “நான் கடவுள்” பாக்க போலாமா ? என சீரியஸாய் கேட்ட நண்பனிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஆளை விடுப்பா…  நான் கடவுளோ, நான் சாத்தானோ… மனுஷனால நேரா நிக்கவே முடியலை. இதைப் பாத்து இனி நான் தலைகீழா நிக்க ஆரம்பிச்சேன்னா….

இப்பவே கத்துக்கோங்க….

seat2

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஐந்தில் திருந்து இல்லையேல் ஐம்பதில் வருந்து என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

குழந்தையாய் இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.

குழந்தை ஆசையாய் கேட்கிறதே, அடம்பிடிக்கிறதே என்பதற்காக தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்றவற்றையும் வாங்கித் தரும் பெற்றோர் குழந்தைகளுக்குள் கான்சர் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 விழுக்காடு குழந்தைகள் அளவுக்கு மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று கவலையுடன் தெரிவிக்கிறது.

இப்படி அதிக எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு, இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது.

குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ்.

உடல் எடை அதிகரிப்பதால் வரும் கான்சர் வருடம் தோறும் தனது விழுக்காட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

வயிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழுப்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி விடுகிறது. நினைவில் கொள்ளுங்கள், மார்பகப் புற்று நோய் ஆண்களுக்கும் வரலாம் !

லிவர், சிறுநீரகம், கல்லீரல் போன்ற இடங்களில் கான்சர் வரவும் இந்த அதிகப்படியான கொழுப்பு காரணமாவதுண்டு.

சைட்டோகின்ஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள்  கான்சரை எதிர்த்துப் போராடுகிறது, அதன் அளவை அதிகப்படியான கொழுப்பு குறைத்து விடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.

எனவே, பெற்றோர் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். குழந்தை இன்றைக்கு சிரிப்பதல்ல, என்றைக்கும் ஆரோக்கியமாய் வாழ்வதே முக்கியம்.

காபியும், கருவுறுதலும்…

41

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.
காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு சாதாரண நபருடைய லிவர் நூறு மில்லி காஃபைனை வெளியேற்ற இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நூறு மில்லி காஃபைன் என்பது எவ்வளவு ? ஒரு கப் காபியில் சுமார் 75 முதல் 200 மில்லி காஃபைன் இருக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காஃபைன் விஷம் பெண்களுக்கு மட்டும் தானா பிரச்சனையைக் கொடுக்கிறது ? காஃபைனுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது

காபி குடிக்காமல் என்னால் இருக்கவே முடியாதே ! கொஞ்சம் கூட குடிக்க முடியாதா என அலறும் காபி பிரியர்களை அமைதிப்படுத்த, தினமும் முன்னூறு மில்லிகிராம் காபி என்பது ஆரோக்கியத்துக்கு அதிக ஊறு விளைவிக்காது என்று அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

நாலு இலை விடட்டும் முதல்ல…

080114_docomo_kids

அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம் கைப்பேசியில் பேசியபடியே நடக்கும் சிறுவர்கள், மற்றும் பால்ய வயதினரை.

கைப்பேசியில் அதிக நேரம் பேசுவது மூளைக்கு ஆபத்து, கைப்பேசியில் பேசிக்கொண்டே காரோட்டுவது கவனத்தைச் சிதைக்கும் என வரிசையாய் வந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் பட்டியலில் புதிதாய் சேர்ந்திருக்கிறது இன்னுமொரு ஆராய்ச்சி.

குழந்தைகள் கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும்போது அவர்களுடைய கவனம் 20 விழுக்காடு குறைந்து போகிறது. இதன் மூலம் அவர்கள் பெரும் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே அந்த ஆராய்ச்சி.

இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற டேவிட் ஸ்வேபெல் எனும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், ‘ பேசிக்கொண்டே குழந்தைகள் சாலை கடக்கும் போது அவர்களை அறியாமலேயே கவனத்தைச் சிதற விட்டு விடுகின்றனர். பெரியவர்களைப் போல எச்சரிக்கை உணர்வைக் காத்துக் கொள்ள முடியவில்லை” என தெரிவிக்கிறார்.

சுமார் பத்து, பதினோரு வயதுடைய எழுபத்து ஏழு சிறுவர் சிறுமியரை வைத்து நிகழ்ந்தப்பட்ட இந்த ஆராய்ச்சி கைப்பேசியினால் விளையக்கூடிய இன்னொரு ஆபத்தை விளக்குகிறது.

எப்போதும் கைகளில் கைப்பேசியைப் பிடித்துக் கொண்டு தனக்குத் தானே சிரித்தபடி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும், வாசித்துக் கொண்டும் திரியும் பால்ய வயதினருக்கும் இந்த ஆபத்து நிரம்பவே இருக்கிறது என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சுற்றி இருப்பவர்களோடுள்ள உறவை துண்டித்துக் கொண்டு தூர இருப்பவர்களுடன் அளவளாவ இந்த கைப்பேசிகள் துணை புரிகின்றன என்பதை பயணங்களிலும், உணவகங்களிலும் நாம் காண முடியும்.

கைப்பேசியின் பயன் பேசுவதில் மட்டுமல்ல, பேசாமல் இருப்பதிலும் தான் என்பதே நிஜமாகியிருக்கிறது இப்போது !