வம்பு என்ன விலை பாஸ் ?

ராபர்ட் எங் பெல்டன் (Robert Young Pelton)

“வம்பை விலை கொடுத்து வாங்குவது “ ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. இவர் விஷயத்துல அது நூறு சதவீதம் பொருந்தும். இவர் ஒரு சாகசப் பிரியர். இவரோட விருப்பம் காட்டுக்கு போறதோ, மிருகங்களோடு கபடி ஆடுவதோ அல்ல. இவருடைய பேவரிட் இடங்களைக் கேட்டால் நமக்கு உதறல் எடுக்கும். ஆப்கானிஸ்தான், அல் குவைதா, ஈராக், கொலம்பியா, லிபேரியா, என பட்டியல் நீள்கிறது.

இங்கெல்லாம் போய் தீவிரவாதக் குழுக்கள், கடத்தல் மன்னர்கள், ஒற்றர்கள் இவர்களிடமெல்லாம் நாசூக்காய் பேசி படம் பிடிப்பார். சின்னதா ஒரு இலை அசைந்தாலே தோட்டா வெடிக்கும் இடங்களுக்குக் கூட தில்லாகப் போவார். இவருடைய பயண அனுபவங்கள் தொலைக்காட்சியில் டேஞ்சரஸ் பிளேஸஸ் என ஒளிபரப்பானது. மக்கள் எல்லா வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதைப் பார்க்க ஆரம்பித்தார்கள். நெட்டில் போட்ட போது கிளிக் ஒரு நாள் எட்டு இலட்சம் என எகிறியது.

இவருடைய பேட்டியின் ஹைலைட், இவர் ஆப்கானிஸ்தானில் போய் அல் குவைதா மெம்பர் ஒருவரையே கேமராவில் கிளிக்கி பேட்டியும் வாங்கியது தான். “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” என முன்னுரை கொடுக்க எல்லா அருகதையும் இவரோட வீடியோக்களுக்கு உண்டு.

எங்கெங்கே தீவிரவாதம், கடத்தல் மன்னர்கள், வெடிகுண்டு உண்டோ அங்கெல்லாம் உற்சாகமாய் ஓடுவார். எப்போ வேண்டுமானாலும் பின் மண்டையில் ஒரு புல்லட் வெடிக்கலாம் எனும் சூழலில் தான் எப்போதும் இருப்பார். பலமுறை உயிரை மயிரிழையில் காப்பாற்றியும் இருக்கிறார். ஒருமுறை இவரைக் கடத்திக் கொண்டு போய் நொங்கெடுத்தார்களாம். இவருடைய சாகசப் பயணம் உலகெங்கும் மிகப் பிரபலம். கனடாக் காரரான இவரைப் பற்றி வெளியான பயோகிராபியே 13 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதென்ன பெரிய அல்குவைதா ? ராஜபக்சேயைப் பார்க்கச் சொல்லலாமா ?

Thanks : Ananda Vikatan

3D யில் எந்திரன் : ஸ்பெஷல் தகவல்கள் !

3D அவதாரின் விஸ்வரூப அவதாரத்தைப் பார்த்து டைரக்டர் ஷங்கர் தனது எந்திரன் படத்தையும் 3D வடிவில் வெளியிட தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளிலும் அவர் இறங்கியிருக்கிறார். சில சாம்பிள் காட்சிகளை 3D வடிவமைத்துப் பார்த்ததில் டீமே மிரண்டு போய்விட்டதாம். ஏற்கனவே படத்தை 2Dயில் எடுத்திருந்தாலும் அதையே 3D வடிவில் மாற்றியமைக்கும் வகையில் இப்போதைய டெக்னாலஜி முன்னேற்றம் உள்ளதாம். அப்படி மாற்றியமைக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் 3D படத்தை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார் ஷங்கர். எனினும் கடைசி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை . படம் எந்திரன் 3D ஆக வரவும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன !

திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளெல்லாம் எடுத்து முடிக்கப்பட்டிருப்பதால் யூனிட் உற்சாகமாய் இருக்கிறது. எந்திரனின் மொத்தம் ஆறு பாடல்கள். அப்பா வைரமுத்து மூன்று பாடல்களில் முத்தெடுக்க, மகன் கார்க்கி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பாடல் எழுதியதுடன் நிற்காமல் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் கார்க்கி தான் ஷங்கருக்குச் சொல்லி வருகிறார். கூடவே கதை வசனம் எழுதுவதிலும் அவருடைய பங்களிப்பு கணிசமாய் இருக்கிறது. இன்னொரு பாடல் பாவியிடம் சென்று விட்டது. அதாங்க ஞாபகங்கள்ல நடிச்சாரே அந்த பா.விஜய் தான் J அப்போ ஆறாவது பாட்டு எழுதறது யாரு நாமுவா ?

கொச்சின் ஹனீபாவின் மறைவு ஷங்கரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எந்திரனில் அவர் நடித்திருந்த நகைச்சுவைக் காட்சியை மீண்டும் ஒரு முறை பார்த்து கண்ணீருடன் சிரித்தாராம். இந்தக் காட்சிகள் அவருக்கு அஞ்சலியாய் அமையும் என்கிறார் அவர். அதே போல மலையாளக் கரை கலாபவன் மணிக்கு இதில் வித்தியாசமான கிராமத்தான் வேடமாம் ! உலகம் முழுதும் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். அதனால் படம் கொஞ்சம் தாமதமாக வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஷங்கர் வட்டாரம் !

இந்தப் படத்துக்காக பிரபுதேவா ஸ்பெஷலாக ஒரு பாடல்காட்சியை அமைத்திருக்கிறாராம். அது பிரம்மாண்டமாக வந்திருப்பதாக பட்சிகள் படபடக்கின்றன. அதன் பின் பிரபு தேவா 9தாராவுடன் டேரா போட்டு விட்டதால் அவருடைய தம்பி ராஜு சுந்தரம் இரண்டு பாடல்களுக்கு நடனக் காட்சிகள் அமைத்திருக்கிறாராம்.  

எந்திரனுக்குப் பின் ஷங்கர் சித்தார்த்துடன் சிலிர்ப்பூட்டும் காதல் கதை ஒன்றை படமாக்க இருப்பதாகச் சொல்வதில் உண்மை இல்லையாம். ஒரு பக்கா ஸ்கிரிப்ட் இருக்கிறது, அதில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ஷங்கரின் விருப்பம். அதுக்கு எக்கச் சக்க மேக்கப் போடவேண்டியிருக்குமே என ஷங்கர் சொல்ல, “அப்படின்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. என் ஒரிஜினல் முகமே எனக்கு மறந்து போயிடும்போல இருக்கு. கொஞ்சம் கேப் விட்டு பண்ணிக்கலாம்” என்றாராம் கமல்.

எந்திரனில் இதுவரைக்கும் எந்தக் காட்சியிலும் நடிக்கவில்லையாம் ஷங்கர். எப்படியாவது ஒரு காட்சியில் தலையைக் காட்டிவிட வேண்டுமென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பேசாம ஒரு ரோபோவா வர வேண்டியது தானே.

வாக்களிக்க விரும்பினால்…

சறுக்கினால் சமாதி…

கழைக்கூத்தாடி சமாச்சாரம் நமக்குத் தெரியும். ஐயோ பாவம் ன்னு இரக்கப்படுவோம். ஆனா அதையே வாழ்க்கை இலட்சியமா வெச்சிருக்கிற சிலரும் இருக்கிறாங்க. அவர்களோட பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே கயிறு அல்லது கம்பி மேலே நடப்பது தான். அதில் முக்கியமான நபர் பிலிப் பெட்டி. எங்கே உயரமா எதையாவது பார்த்தால் உடனே இடையே கயிறு கட்டி நடக்க ஆரம்பித்துவிடுவார் மனுஷன்.

1949ல் பிரான்சில் பிறந்த இவருக்கு நடக்கப் பழகிய நாட்களிலேயே இந்த ஆர்வம் வந்து விட்டது. கயிறில் நடப்பார், ஓடுவார், குட்டிக் கரணம் அடிப்பார், சைக்கிள் ஓட்டுவார். இளைஞனான போது சாதாரண மனிதர் தரையில் நின்று கொண்டு செய்யும் பல விஷயங்களை அனாயசமாய் கயிற்றில் நின்று செய்வார். 1960களின் இறுதியில் கயிறு மீது நடப்பதில் கைதேர்ந்த வித்தைக்காரராகிவிட்டார்.

9/11 என்றாலே இரட்டைக் கோபுரங்கள் நினைவுக்கு வருகிறதல்லவா ?  அந்த  இரட்டைக் கோபுரங்களுக்கிடையே கம்பி கட்டி நடந்தார் ஒருமுறை. அதுதான் அவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. அது ஒரு படு சுவாரஸ்யமான கதை. 1968ல் பாரிஸில் பல் வலிக்குதே என டாக்டரைப் பார்க்கச் சென்றார். கொஞ்சம் கூட்டம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னார்கள். சும்மா இருந்தபோது அங்கே கிடந்த ஒரு புத்தகத்தைப் புரட்டினார். அதில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைப் பற்றியும், அதன் உயரத்தைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். உடனே ஐயாவின் மூளையில் லைட் எரிந்தது. மூளையில் அந்த மேகசினையும் எடுத்துக் கொண்டு ஓடினார்.

அப்போது ஆரம்பமானது அவருடைய “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கலைக் குற்றம்” ! இந்த கட்டிடங்களின் மேல் கம்பி கட்டி நடக்க வேண்டுமென தீர்மானித்தார். ஆறு வருடங்கள் திட்டம் தீட்டினார். கட்டிடங்களோ 1368 அடி உயரம் 140 அடி இடைவெளி என மிரட்டியது. அதற்கு நூற்றுக் கணக்கான கிலோ எடையில் கம்பி வேண்டும். இரண்டு கட்டிடங்களுக்கிடையே கம்பியைக் கட்ட வேண்டும். நல்ல இறுக்கமாகக் கட்ட வேண்டும். இத்தனை எடையையும் 1368 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் ! அதி முக்கியமான சமாச்சாரம், இதெல்லாம் எல்லார் கண்ணிலும் மண்ணைத் தூவி நடக்க வேண்டும் !!!!

நடக்கவே நடக்காது என நமக்குத் தோன்றும் இந்த விஷயத்தை நடத்திக் காட்டிவிட்டார். பல்வேறு சிரமங்களுக்குப் பின் 1974ல் காலை 7.15 மணிக்கு கம்பியில் கால் வைத்து நடந்தார். கொஞ்ச நேரமல்ல முழுதாய் முக்கால் மணி நேரம் கம்பியில் ஒரு சாகச வித்தையையே நிகழ்த்திக் காட்டிவிட்டார். அதற்குள் சாலையில் கூட்டம் திகிலடித்தது. பதட்டப்பட்ட போலீசார் அவரைக் கைது செய்தார்கள்.

உனக்கென்ன பைத்தியமா. இங்கிருந்து விழுந்தா என்ன ஆவே தெரியாதா ? என பேயறைந்தது போல் படபடத்த போலீஸிடம் பிலிப் சொன்னார், “ இங்கிருந்து விழுந்து மரணமடைந்தால் அது எத்துணை இனிமையான மரணம் தெரியுமா” ?

இவருடைய இந்த திட்டமிடலும், செயல்படுத்தலும் “மேன் ஆன் வயர்” எனும் டாக்குமெண்டரி படமாய் வந்து ஆஸ்கரையும் அள்ளியது.

Click – here to Vote…

Thanks : Anandan Vikatan

கமல் வெளியிட்ட வண்ணங்களின் வாழ்க்கை

வண்ணங்களின் வாழ்க்கை : சுந்தரபுத்தன்

ஓவியம் என்பது நடந்து செல்லும் புள்ளி – என்பார்கள். ஓவியங்கள் இல்லாத வாழ்க்கை நினைவுகளின் ஏழ்கடல் தாண்டியது. இயற்கை அனைத்தையுமே தூரிகையாகவும் வண்ணங்களாகவும் பாவிக்கிறது. வானத்தின் மேலும், பூமியின் கீழும் கூட ஓவியங்கள் நிரம்பி வழிகின்றன.

இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஓவியங்களுக்கென எப்போதுமே சிறப்பு இடம் ஒன்று உண்டு. மேற்குலகில் கோலோச்சிய ஓவியர்களில் சட்டென ரபேல், டிசியன், ரூபன்ஸ், லியானார்டோ போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். வான்கோவை மறக்க முடியுமா ? எனினும் எல்லா ஓவியர்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்டிருந்தவர்கள் எனும் வரலாறு வலியூட்டுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஓவியர்கள் வீர சந்தானம், புகழேந்தி, கதவு சந்தானம், விஸ்வம்,  வித்யாசங்கர், ஜெயராமன், மனோகர் என சமகாலப் பட்டியல் நீள்கிறது. பலருக்கும் தமிழக ஓவியர்கள் பற்றிய சரியான அறிமுகம் இல்லை. காரணம், காலம் காலமாக ஓவியம் என்பது பிற இலக்கியங்களைத் தாங்கிப் பிடிக்கத் தான் தமிழில் பயன்படுகிறதே தவிர, பிற இலக்கியங்கள் ஓவியத்தைத் தாங்கிப் பிடிப்பது குதிரைக் கொம்பு.

சுந்தரபுத்தன் அவர்களுடைய “வண்ணங்களின் வாழ்க்கை” நூல் ஓவியர்களைக் கௌரவப் படுத்த தமிழில் வந்திருக்கும் ஒரு அத்தி பூத்த நிகழ்ச்சி. இந்த அத்தி சட்டென பூத்து விடவில்லை. அவர் புதிய பார்வையில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வோர் இதழிலிலும் ஒவ்வோர் பூவாகப் பூத்தது. வீர சந்தானம் முதல், மார்கு ரத்தினராஜ் வரையிலான ஐம்பதுக்கு மேற்பட்ட ஓவியர்களை இவர் சந்தித்து உரையாடி அவர்களுடைய அனுபவ செழுமைகளையும், ஓவியப் பார்வைகளையும் இலக்கியமாக்கியிருக்கிறார்.

ஓவியர்களின் வாழ்க்கை, அவர்களுடைய ஆனந்தத்தின் துலாக்கோல், வண்ணங்களின் ஸ்பரிசங்களால் அவர்கள் அடையும் பரவசம், ஓவியத்தின் உள்முக தரிசனம் என அவர்களுடைய் பார்வைகள் கவிதைகளாய் நீள்கின்றன.

தோழமை பூபதி இதை ஒரு முழு தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். பூபதி அவர்கள் இந்த நூலைக் கொண்டு வந்திருப்பதற்கு இன்னொரு காரணம், அவருக்கும் ஓவியத்துக்கும் இருக்கும் ஆத்மார்த்த பிணைப்பு. இன்னும் விளக்க, ஓவியர் புகழேந்தியின் தம்பி தான் இவர் எனும் சுருக்க அறிமுகம் தரலாம்.

அமெரிக்காவில் பணியிடங்களில் தங்கள் குழந்தைகளின் கிறுக்கல் ஓவியங்களை அதிகபட்ச அன்போது சுவரில் தொங்கவிட்டு அழகுபார்க்கும் பெற்றோர்கள் அதிகம். ஓவியத்தின் மீதான ஈடுபாடு அல்ல அதன் காரணம். ஓவியர்களின் மீதான அபரிமிதமான பாசமே. அத்தகைய ஒரு பாசமும், கரிசனையும், அங்கீகாரமும் நமது ஓவியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனும் ஒரு சிந்தனை கீற்றை இந்த வண்ணங்களின் வாழ்க்கை நூல் பற்ற வைக்கிறது

தோழமை வெளியீடு, 94443-02967

விலை : 150/-

காதலியை ஹேப்பியாக்க வருகிறது லேப்பி !

பிங்கர் கோத்து அலையும் உங்க பிகருக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று சதாகாலமும் யோசனையிலேயே பாதி முடியையும் நேரத்தையும் வீணடிக்கிறீங்களா ? இதென்ன பிஸ்கோத்து மேட்டர்… இந்த லேப்பி வாங்கிக் கொடுங்க. ரேட் கீட் பத்தியெல்லாம் என் கிட்டே கேக்கப்படாது…

பை த வே…உங்கள் ஆளோட எக்ஸ்பிரஷன் இப்படியும் இருக்கலாம்…

டேய்… என்னடா ? டயமண்ட் ரிங் வாங்கி தருவேன்னு பாத்தா மண்டு மாதிரி ஒரு பர்ஸ் வாங்கி தந்திருக்கே…

என்னடா இது… பர்ஸ்ல குச்சியால கிறுக்கணுமா ? உனக்கு கிறுக்கு புடிச்சிருச்சா ?

ஹேய்…. இது பர்ஸ் இல்லியா ? கேல்குலேட்டரா..ம்ம்ம்

இத எப்படி ஆன் பண்றது ?

வாவ்.. இதென்னடா செல்லம், கம்ப்யூட்டர் மாதிரி இருக்கு ??

ஓ.. இதான் லேட்டஸ்ட் லேப்பியா ? யூ ஆர் சோ லவ்லியா…

காதல் நீதி  : லோக்கலா ஒரு பர்ஸ் வாங்கிக் கொடுத்தா மண்டு, பர்ஸை காலி பண்ணி ஹை ஃபை  வாங்கிக் கொடுத்தா லவ்ஸ்… ம்ம்ம்…

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

பறவை மனிதன் !

துக்கு சும்மா விமானத்திலேயே பறக்கிறது ? நாமே ஒரு விமானமா மாறி பறந்தா என்ன ? ஈவ் ரோசரி க்கு இந்த எண்ணம் தோன்றியதால் அவர் ஒரு ஹிட் மனிதராகி விட்டார். பறக்கணும்னா சிறகு வேணும், அது தானே இயற்கையின் விதி ! கார்பன் பைபரால் 7.9 அடி நீள சிறகு ஒன்றைச் செய்தார். அதில் நான்கு சக்தி வாய்ந்த ஜெட் என்ஜின்களைப் பொருத்தினார். அதை உடலில் கட்டிக் கொண்டு விமானத்தில் 7500 அடி உயரம் போனார். சாவு எனக்குச் சர்க்கரைப் பொங்கலடா என பஞ்ச் வசனம் பேசிக் கொண்டே விமானத்திலிருந்து குதித்தார். எங்கே ? ஆல்ப்ஸ் மலையின் உச்சந் தலையில். கொஞ்ச நேரம் வானத்தில் அப்படியே பொத்தென விழுந்தவர் வழியிலேயே ஜெட் எஞ்சின்களை இயக்கி பறக்க ஆரம்பித்தார். மனிதப் பறவையாய் மாறி வானத்தில் வட்டமடித்தார். அதுவும் மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில்.

அவர் தலையை எங்கே திருப்புகிறாரோ அந்த திசையில் வண்டி பறந்தது. போதாக்குறைக்கு வானத்திலேயே டைவ் அடித்து சிலிர்ப்பை ஏற்றினார். பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு புல்லரித்தது. கொஞ்ச நேரம் ஆல்ப்ஸ் மலை மீது அசத்தலாகப் பறந்து திரிந்தவர் கடைசியில் ஒரு பாராசூட் மூலம் கீழே இறங்கினார். “கரணம் தப்பினால் மரணம் எனும் சூழலில் டென்ஷனாகாமல் இருப்பது தான் முக்கியம்” என்கிறார் சிரித்துக் கொண்டே. ஐம்பது வயதான ரோசரி ஸ்விட்சர்லாந்தின் விமானப் படையில் பைலட்டாக இருந்தவர் என்பது ஸ்பெஷல் நியூஸ்.

ஆல்ப்ஸ் மலையுடன் மனிதர் தனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தியதி ஆங்கிலக் கால்வாயைப் பறந்து கடந்து உலகை வியக்க வைத்தார். முப்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவைக் கடக்க இவர் எடுத்துக் கொண்ட நேரம் ஒன்பது நிமிடங்கள் ஏழு வினாடிகள் மட்டுமே. ஆங்கிலக் கால்வாயை இப்படிக் கடந்த முதல் மனிதர் இவர் தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஐயாவோட அடுத்த திட்டம் அமெரிக்காவின் மாபெரும் பள்ளத்தாக்குப் பகுதியான கிரேண்ட் கேனியனில் வட்டமடிப்பது தானாம் !

அதோ அந்த பறவை போல மாற வேண்டும் !!!

 

Thanks : Ananda Vikatan

அப்பார்ட்மெண்ட் அபாயங்கள் : பாதுகாப்பு வழிகள்…

 

ப்பார்ட்மெண்ட் அபாயங்கள், கவனம் அவசியம்


ப்பார்ட்மெண்ட் குறித்த அதிர்ச்சிச் செய்தி இல்லாமல் இப்போதெல்லாம் நாளிதழ்களே வருவதில்லை. அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்தனர். தனியே இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த முதியவர் தாக்கப்பட்டார். இப்படி ஏதோ ஒரு செய்தி நாள் தோறும் அப்பார்ட்மெண்ட் விபரீதங்களைச் சொல்லி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. 

பெண்கள் தனியே இருக்கும் வீடுகளைக் குறிவைத்தே பெரும்பாலான குற்றங்கள் நடக்கின்றன. நகர்ப்புற வாழ்க்கையில் அதுவும் அப்பாட்மெண்ட் போன்ற இடங்களில் பாதுகாப்பின்மைக்கு என்னக் காரணம் ?

முதல் காரணம் நகர்ப்புறத்தின் அவசர வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு என்பார்களே அதைவிட ஒரு படி மேலான அவசரம். நீங்கள் அப்பார்ட்மெண்ட் வாசியா ? சரி உங்கள் அப்பார்ட்மெண்டில் இருக்கும் எத்தனை நபர்களை உங்களுக்குத் தெரியும் ? அவர்களைப் பற்றி என்னென்ன விவரங்கள்  ? அவர் என்ன வேலை செய்கிறார் ? வீட்டில் எத்தனை பேர் உண்டு ? அவர் வீட்டுக்குப் போயிருக்கிறீர்களா ? இப்படி உங்களையே சில கேள்விகள் கேட்டுப் பாருங்கள். விஷயம் பளிச் எனப் புரிந்து போய் விடும்.

எதேர்ச்சையாகப் படியில் சந்தித்துக் கொள்ளும் போது ஒரு சின்ன சிரிப்புடன் கடந்து போய் விடுகிறோம். அவ்வளவு தான் பழக்கமெல்லாம். அடுத்த வீட்டு நபர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளாமலேயே முடிந்து போகிறது வாழ்க்கை. இது தான் நிஜம். இதற்கு நேர் எதிரான வாழ்க்கையைப் பார்க்க வேண்டுமானால் கிராமத்துப் பக்கம் தான் போகவேண்டும். 

கிராமத்திலுள்ள அத்தனை நபர்களுக்கும், ஒவ்வொருத்தரைப் பற்றியும் தெரியும். அறிதல் என்பது உறவுகளின் இறுக்கத்துக்கு ரொம்பவே அவசியமானது. புதிய நபர் யாராவது கிராமத்து பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கினாலே ஒட்டு மொத்த கண்களும் அவரை மொய்க்கும். அவரிடம் நேரடியாகவே போய் விசாரணையையும் தொடங்கி விடுவார்கள். ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் ஒன்று படுவதும், யாருக்கேனும் உதவி தேவையெனில் சட்டென களம் இறங்குவதும் கிராமத்தின் குணாதிசயங்கள்.  

ஒரு கிராமத்தான் வெளியூர் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே பக்கத்து வீட்டுக் காரர்களிடமெல்லாம் போய், “நான் வெளியூர் போறேன் வீட்டைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்பார். அதே சம்பவம் நகர்ப்புறத்தில் என்றால் எப்படி இருக்கும். நாம வீட்ல இல்லேங்கறது யாருக்கும் தெரியக் கூடாது. ஏதோ பக்கத்து தெருவுக்கு போறாமாதிரி பாவ்லா காட்டணும். பக்கத்து வீட்டுக் காரன் கிட்டேயே மூச்சு விடக் கூடாது. விட்டால் பக்கத்து வூட்டுக்காரனே லவட்டிட்டுப் போக வாய்ப்பு அதிகம். இப்படித் தான் பதட்டப்படும்! 

நகர்ப்புற வாழ்க்கை பயத்தின் மேல் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. முதல் பயம் நம்பிக்கையின்மை. அதற்கு நியாயமான காரணம் உண்டு. பெரும்பாலான நகர்ப்புற விபரீதங்கள் ரொம்பத் தெரிந்த நபர்களின் துணையோடு தான் நடக்கிறது. இரண்டாவது நம்ம வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் போய்விடுவோம், எதுக்கு வீண் வம்பு எனும் மனோபாவம். 

நகர்ப்புற வாழ்க்கையும், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் இப்படி ஏகப்பட்ட சிக்கல்களோடு தான் நம் முன்னால் நிற்கிறது. இந்த சூழலில் பாதுகாப்பாய் இருப்பது நமது கையில் தான் இருக்கிறது. கீழே உள்ள சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பெரும்பாலான சிக்கல்கள் விலகி ஓடிவிடும்.

  1. அப்பார்ட்மென்ட்களை புக் செய்யும் போதே அதன் பாதுகாப்புக் குறித்து விசாரித்து அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்பாட்மெண்டைச் சுற்றி உள்ள இடங்கள், அதன் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள்.
  2. அப்பாட்மெண்ட் கதவு பலமானதாய் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். முன் கதவு நல்ல உறுதியாய் இருக்க வேண்டியது அவசியம். ரொம்ப அலங்காரம் எனும் பெயரில் டிசைன் செய்து மரத்தின் கனத்தைக் குறைத்து விடாதீர்கள்.
  3. கதவில் வெறுமனே பெயருக்கு ஒரு பூட்டு போடுவது உதவாது. பூட்டு நல்ல தரமான பூட்டாக இருக்க வேண்டும். கொஞ்சம் தூரத்திலுள்ள ஏதேனும் ஒரு கடையில் நீங்களாகவே போய் வாங்கிக் கொள்ளுங்கள். 
  4. இப்போதெல்லாம் எல்லாக் கதவுகளுக்கும் முன்னால் ஒரு கிரில் போட்டு விடுகிறார்கள். அது ரொம்ப நல்லது.
  5. கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் “டெட் போல்ட் லாக்” வாங்கி மாட்டுங்கள். கதவை படீரென திறந்து கொண்டு யாரும் வர முடியாது. வெளியே யாராவது வந்து கதவைத் தட்டினால் கூட முழுமையாய்க் கதவைத் திறக்காமலேயே பேச முடியும்.
  6. வீட்டுக் கதவில் எத்தனை பூட்டுகள், தாழ்ப்பாள் சங்கதிகள் உண்டோ எல்லாவற்றையும் இரவில் பூட்டி வையுங்கள். சும்மா ஒரு தாழ்ப்பாள் மட்டும் பெயருக்குப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். நிறைய பூட்டுகள் இருந்தால் திருட நினைப்பவர்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கும். அது யாரையாவது எழுப்பி விடும்.
  7. வீட்டைப் பூட்டாமல் வெளியே போகவே போகாதீர்கள். “ரோட்டுக்கு எதிரே தான் கடை ஒரு எட்டு போயிட்டு ஓடி வந்துடறேன்” ன்னு நினைக்க வேண்டாம். அந்த சில வினாடிகளில் யாராவது உங்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளலாம். நீங்கள் திரும்பி வந்தபின் தாக்கலாம் !  
  8. சந்தேகப் படும்படியான நபர் “வாட்டர் பில்டர்” சரி செய்ய வந்திருக்கிறேன், ஏசி சரிசெய்ய வந்திருக்கிறேன் என்றால் உஷாராகி விடுங்கள். உடனடியாக நிறுவனத்துக்குப் போன் செய்து அப்படி யாரையாவது அனுப்பியிருக்கிறார்களா எனக் கேளுங்கள். எக்காரணம் கொண்டும் “அலுவலக நம்பர் என்னப்பா” என வந்தவனிடமே கேட்காதீர்கள். ஏமாந்து விடுவீர்கள்.
  9. இப்போதைய டிவிக்கள், ரேடியோக்கள் எல்லாவற்றிலுமே டைமர் சிஸ்டம் உண்டு. எனவே நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால் கூட சும்மா அவ்வப்போது டிவி ஓடுமாறு செட் செய்யலாம், ரேடியோ பாடுமாறு செய்யலாம். வீட்டில் யாரோ இருப்பது போன்ற தோற்றம் உருவாகும்.\
  10.   வீட்டுக்கு அருகில் நல்ல நண்பர் ஒருவரையாவது கொண்டிருங்கள். நீங்கள் வெளியே போகும் விஷயத்தைச் சொல்லுங்கள். மாறி மாறி தேவைப்படும் போதெல்லாம் உங்கள் வீடுகளைக் கண்காணித்துக் கொள்ளலாம்.
  11. சந்தேகத்துக்கு இடமான நபர் தென்பட்டால் உடனடியாக போலீஸுக்குத் தெரியப்படுத்துங்கள். கூடவே அப்பார்ட்மெண்ட் நிர்வாகம், வாட்ச்மேன் அனைவரையும் உஷார் படுத்திவிடுங்கள்.
  12. அப்பார்ட்மெண்ட்களில் சில ஆபத்தான பகுதிகள் உண்டு. படிக்கட்டுகள், கார் பார்க்கிங் போன்றவை சில உதாரணங்கள். அங்கெல்லாம் கொஞ்சம் விழிப்பாய் இருக்க வேண்டியது அவசியம்.
  13. வெளிச்சமான இடங்கள் திருட்டு வேலைக்காரர்களுக்கு அலர்ஜி. அப்பார்ட்மெண்டைச் சுற்றி இரவு முழுவதும் பகல் போல வெளிச்சம் இருந்தால் ரொம்பப் பாதுகாப்பானது. சில வெளிநாடுகளில் இது கட்டாயம்.
  14. அட்டவணைப்படி எல்லாவற்றையும் செய்யாதீர்கள். “எல்லா சனிக்கிழமையும் மாலையில் ஷாப்பிங் போவாங்க, சண்டே ஈவ்னிங் வெளியே டின்னர் போவாங்க, இப்படி ஒரு தெளிவான அட்டவணை இருப்பது ஆபத்து !” இது திருடர்கள் சாவாகாசமாக அமர்ந்து திட்டமிட உதவும். “எப்போ போவாங்க எப்போ வருவாங்கன்னே தெரியாது” எனும் நிலை தான் அப்பார்ட்மெண்ட் விஷயத்தில் பாதுகாப்பானது. வெளியே போகும்போது கூட வேறு வேறு பாதைகளில் உங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.
  15. அப்பார்ட்மெண்ட் வாசிகளுடன் ஒரு நம்பிக்கை  வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாகப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கவும் வேண்டாம். “அதை ஏங்கா கேக்கறீங்க என் வூட்டுக் காரர் அடுத்த வாரம் புல்லா வெளியூராம்” என ஸ்பீக்கர் வைத்துப் பேசாதீர்கள்.
  16. எப்போதும் செல்போன் கையிலேயே இருக்கட்டும். அதில் லோக்கல் போலீஸ் நம்பர், ஆம்புலன்ஸ் நம்பர், அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் நம்பர், நம்பிக்கையான சிலருடைய நம்பர்கள் எல்லாம் தவறாமல் இருக்கட்டும். மறக்காம சார்ஜ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
  17. அப்பார்ட்மெண்ட்களில் வாடகைக்குப் போகிறீர்களென்றால் கெடுபிடி அதிகமுள்ள இடங்களுக்கே போங்கள். “ஆயிரத்தெட்டு டீட்டெயில்ஸ் கேட்டு சாவடிப்பாங்க” என வெறுக்காதீர்கள். அதே போல எல்லோரிடமும் கேட்பதால் அப்பார்ட்மெண்ட்களில் வருபவர்கள் பாதுகாப்பானவர்களாய் இருக்க சாத்தியம் அதிகம்.
  18. முன்பு வாடகைக்கு இருந்தவர் பயன்படுத்திய பூட்டு மாற்றப்பட்டுள்ளதா என்பதை 100 சதம் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் முதல் வேலையாக அதை மாற்றுங்கள்.
  19. வசதியிருப்பவர்கள் செக்யூரிடி கேமராக்களையும் வீடுகளில் பொருத்தலாம். வீட்டில் குழந்தைகளை ஆயா நன்றாகக் கவனிக்கிறாரா என்பது முதல், யாராவது அத்துமீறி நுழைகிறார்களா என்பது வரை சகலத்தையும் அதில் பிடித்துவிடலாம்.
  20. அப்பார்ட்மெண்டின் தன்மைக்கு ஏற்ப பாதுகாப்புகள் அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூமில் நடப்பது மற்ற ரூமுக்கே கேட்காது என வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒரு டோர் அலார்ம் சிஸ்டம் வாங்குவது நல்லது. கதவு திறக்கப்பட்டால் அது அதிக சத்தம் போட்டு உங்களை உஷார் ப்படுத்திவிடும்.1.  கதவில் ஒரு சிறிய லென்ஸ் பொருத்தி வெளியே இருப்பவர் யார் என்பதைப் பார்ப்பது ரொம்ப நல்லது. சிம்பிள் செக்யூரிடி சிஸ்டம். ஆனால் ரொம்பப் பயனளிக்கும். இந்த அட்ரஸ் எங்கே இருக்கு தெரியுமா ? ஒரு போன் பண்ணிக்கலாமா ? இப்படி ஏதாவது ஒரு சிம்பிள் உதவியுடன் பெரிய பெரிய ஆபத்துகள் வரலாம் கவனம் தேவை. 
  21. நீங்கள் ஒரு திருடராய் இருந்தால் உங்கள் வீட்டில் எப்படியெல்லாம் நுழைவீர்கள் என யோசியுங்கள். அந்த இடங்களிலெல்லாம் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். 
  22. ஒருவேளை உங்கள் வீட்டில் திருடன் நுழைந்து விட்டானென்றால், உதவி உதவியென கத்தினால் ஒருவேளை உதவி கிடைக்காமல் போகலாம். எனவே தீ.. தீ என கத்துங்கள் !! இது அனுபவஸ்தர்களின் அட்வைஸ்.
  23. கழற்றிப் போட்டிருக்கும் ஷூவிற்குள், மிதியடிக்குக் கீழே, செடித்தொட்டிக்கு அடியில், கதவுக்கு மேல் இப்படிப்பட்ட இடத்திலெல்லாம் சாவியை வைத்துச் செல்லாதீர்கள். இதெல்லாம் ஹைதர் கால டெக்னிக்.
  24. கார் கீயில் வீட்டுச் சாவியையும் போட்டு வைக்காதீர்கள். எங்கேயாவது வேலட் பார்க்கிங் சமயத்தில் கூட உங்கள் கீ டூப்ளிகேட் செய்யப்படலாம். உங்கள் கார் எண்ணை வைத்து உங்கள் விலாசம் கண்டுபிடிக்கப் படலாம் !
  25. யாராவது போன் பண்ணினால் உடனே உங்கள் ஜாதகத்தை அவரிடம் சொல்லாதீர்கள். அவர்கள் யார், என்ன சமாச்சாரம் என்பதையெல்லாம் முதலில் கேட்டு விட்டு தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள். அடிக்கடி ராங் கால் வருகிறதா ? தொலைபேசி நிறுவனத்திற்கு கம்ப்ளெயிண்ட் செய்யுங்கள். வீடு காலியாய் இருக்கிறதா ? ஆட்கள் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட ராங் கால்கள் வரும் உஷார்.
  26. முதலில் ஒரு காலர் ஐடி வாங்கிக் கொள்ளுங்கள். யாரெல்லாம் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் எனும் விஷயம் தெரியவரும். உங்கள் வீட்டு குப்பைகளில் கூட கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரைப் பற்றிய, வங்கிக் கணக்கு பற்றிய விஷயங்களெல்லாம் அதில் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
  27. யாராவது வந்து உங்கள் பக்கத்து வீட்டுக் காரர்களைப் பற்றி தேவையற்ற கேள்விகள் கேட்டால் உஷாராகிவிடுங்கள். அவர்களிடம் கவனமாய் இருங்கள். நம்பிக்கையற்றவராய் தெரிந்தால் அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் போய் செய்திகளை வாங்கச் சொல்லுங்கள். முடிந்தால் செல்போனில் நைசாக அவனை ஒரு படம் பிடித்துக் கொள்ளுங்கள். மறக்காமல் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள்.
  28. நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து விடுதல் உசிதம். கொஞ்சம் தேவைக்கேற்ற பணம் மட்டும் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது.
  29. உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னென்ன கார் வைத்திருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். ஏதேனும் வித்தியாசமான கார் வந்தால் அலர்ட் ஆகி விடுங்கள். அதன் எண்ணை எழுதி வையுங்கள். தேவைப்படலாம் !

 நன்றி : பெண்ணே நீ…

 

பயனுள்ளதாய் இருந்தால்… வாக்களியுங்கள் ….


சேவியர்

காதலர் தினம் – இது புதுசு !

1. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோக்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !
2. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

3. காதலர் தின  பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

4. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ்  தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பலரால் நம்பப்படும் வரலாறு.

5. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

6. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

7. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

8. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

9. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

10. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான்.  இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான்.  இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

 ஃ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

திரில் டூர்….

 

அருஷா, தான்சானியா ( Arusha, Tanzania )

ஆப்பிரிக்காவில் சஃபாரி ரொம்ப பேமஸ். காட்டுக்குள் மிருகங்களைப் பார்த்தபடி ஹாயாகப் பயணிப்பது. அசந்தால் யானை வந்து நம்மை பஞ்சுமிட்டாயாய் பறக்க விடும்! இந்த சஃபாரிக்கு மிகவும் பிரபலமானது அருஷா. வடக்கு தான்சானியாவிலுள்ள ரிப்ட் பள்ளத்தாக்கு பக்கத்தில் அமைந்துள்ளது இது. மேரு மலையின் கீழே அமைந்துள்ள இந்த சபாரி ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான திகில் அனுபவம். 

வான்கூவர், கனடா ( Vancouver, British Columbia – Canada )

கனடாவின் வான்கூவர் கண்ணைக் கவரும் ஒரு சிறப்பான சுற்றுலாத் தலம். உலகெங்கும் உள்ள சாகச விரும்பிகளும், அமைதி விரும்பிகளும் இங்கே வருவார்கள். இது ஒரு முரண்பட்ட இடம். நதிகள், கடல், காடு , மலை என கலவையாய் இருக்கிறது வான்கூவர். ஸ்கீயிங் போகணுமா, மலையில் பைக் ஓட்டணுமா, சீறிப் பாயும் நதிகளில் படகு ஓட்டணுமா எல்லாம் இங்கே சாத்தியம். அதெல்லாம் வேண்டாம் சைலண்டாக குடும்பத்தோடு அமர்ந்து சீட்டாடணும்ன்னாலும் ஓகே. ஆனாலும் சாகசப் பயணிகள் தான் இந்த இடத்தை பெரிதும் விரும்புகிறார்கள். காரணம் திரில்லுடன் கிடைக்கும் இயற்கை அழகு.

குயீன்ஸ்டவுன், நியூசிலாந்து ( Queenstown, New Zealand )

நியூசிலாந்தின் குயீன்ஸ்லேண்ட். பங்கீ ஜம்பிங்கின் பிறப்பிடமே இந்த இடம் தான். அதனால் இங்கே இருக்கின்ற விளையாட்டுகளும் வீர விளையாட்டுகளாகவே இருக்கின்றன. குறிப்பாக மலையில் பைக் ஓட்டுவது, காட்டுக்குள் நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் கால்நடையாய் போவது, என பல சாகச விளையாட்டுகள் இங்கே சாத்தியம். சம்மரில் இப்படி வேர்க்க விறுவிறுக்க காட்டுக்குள் நடப்பார்கள். விண்டர் வந்து விட்டால் காடு இருந்த இடமே தெரியாது. முழுவதும் பனி மூடிவிடும். அப்புறம் ? இருக்கவே இருக்கிறது பரபரக்கும் ஐஸ் ஸ்கேட்டிங் !

பெரு நாட்டு டிரெக்கிங் (  Peru )

பெருவில் டிரக்கிங் போறீங்களா ? உலகப் புகழ்பெற்ற மச்சு பிச்சுவின் வரலாற்றுச் சுவடுகளோடு கலப்பது சிலிர்ப்பானது. ஆனால் அதை அடைய செல்ல வேண்டிய 45 கிலோமீட்டர் தூர நடை பயணம் டூ ஆர் டை டைப். மலை, நதி, பள்ளம் என உயிரை சேட்டு கடையில் அடமானம் வைத்துவிட்டுத் தான் போக வேண்டும். திரில் பிரியர்களுக்கு இவை சுர்ரென சுவாரஸ்யத்தைப் பற்ற வைக்கின்றன. சில பாதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. உங்களுக்கு ஆயுள் கெட்டியென்றால் நீங்கள் தாண்டும் வரை தாக்குப் பிடிக்கும்.

காட்மண்ட் , நேபாள் ( Kathmandu, Nepal )

காட்மண்ட்.  உலகின் சாகசப் பிரியர்களின் பட்டியலில் முக்கியமான இடம் இதற்கு உண்டு.  இடங்களில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. நேபாளில் துவங்கி, நேபாளில் முடியும் நிறைய டிரக்கிங் வழிகள் இங்கே உண்டு. இமயமலையின் உயர்ந்த 8 சிகரங்கள் தான் ஹைலைட். இந்த சிகரங்களின் உயரம் சுமார் 8000 மீட்டர். மலையேறுபவர்களுக்கு உள்ளுக்குள் குறுகுறுக்கும் அனுபவம். மிரண்டவர்களுக்கு திகில் குருதி நரம்புகளில் நாட்டியமாடும்.  மலையேற்ற அனுபவத்துடன் நேபாளில் கிடைப்பது பரந்து பட்ட கலாச்சார, வரலாற்று அனுபவங்கள். !

Thanks : Ananda Vikatan

வேலண்டைன்ஸ் – தெரிந்ததும், தெரியாததும்…

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

2. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

3. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

4. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

5. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

6. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

7. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

8. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை.  நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

10.  காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம். 

நன்றி : தேவதை

காதல் பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….