ஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை

 

ஒரு நாள் மாலையில் ஓய்வாக எக்மோரிலுள்ள புளூ மவுண்டன் ஹோட்டலில் சுவையான மட்டன் பிரியாணியைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். என்னுடன்  மலையாள மனோரமா இயர்புக் ஆசிரியர் நண்பர் ராமனும், பத்திரிகையாளர் நண்பர் ஆரிஃப் அவர்களும். மட்டன் பிரியாணி என்றால் எனக்கு எப்போதுமே பிரியம் ஜாஸ்தி. அதுவும் இஸ்லாமியர்களின் கைவண்ணத்தில் தயாராகும் சமாச்சாரமெனில் சொல்லவே வேண்டாம்.

பிரியாணியையும், அதைவிடச் சுவையான பல்வேறு விஷயங்களையும் மென்று கொண்டிருக்கையில் பேச்சினூடே நண்பர் ராமர் சொன்னார், “என்னோட புக் ஒண்ணு வந்திருக்கு. ஒரு மொழிபெயர்ப்பு. ஆடு ஜீவிதம்ன்னு பேரு“.

மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறீர்களா ? என்று கேட்டேன். ஆமா, பென்யமீன்னு ஒரு எழுத்தாளரோட அற்புதமான படைப்பு அது. படிச்சுப் பாருங்க. என்றார். மனசுக்குள் அந்தப் பெயரை மட்டும் எழுதிக் கொண்டேன். தமிழில் உயிர்மை வெளியீடாக வந்திருந்தது நாவல்.

என்னைப் பற்றி எனக்குத் தான் தெரியுமே ! காலைல ஒன்பது மணிக்கு அலுவலகம் ஓடினால் கூர்க்கா ரோந்து போற நேரத்துல தான் வீடு வந்து சேருவேன். இதை ஐ.டி ஜீவிதம்ன்னு சொல்லலாமா ? இந்த ஓட்டத்துக்கு இடையே ஆடு ஜீவிதம் மனசுக்குள் இருந்தாலும் புக்கை போய் வாங்கக் கூடிய அளவுக்கு நேரம் கிடைக்கவேயில்லை. எப்படியாவது இந்த வாரம் போய் வாங்கியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு பார்சல் வீட்டுக்கு வந்தது. பிரித்துப் பார்த்தால் “ஆடு ஜீவிதம்” நூல்.

இவன் என்னிக்கு போய், எப்போ வாங்கி, என்னத்த வாசித்து என நொந்து நூடுல்ஸ் ஆகிப் போன எழுத்தாளரே சொந்தக் காசைப் போட்டு ஒரு புக்கை அனுப்பி வைத்திருந்தார். மானசீகமாக ஒரு நன்றியை மட்டும் சொல்லிக் கொண்டு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.

பல்வேறு கனவுகளோடு குடும்பத்தை விட்டு விட்டு கல்ஃப் போகும் ஒருவன் அங்கே படும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்பி வரும் நிகழ்வுகளும் தான் கதை. இப்படிச் சொன்னால் ஒருவேளை நீங்கள் ‘இதிலென்ன இருக்கிறது’ என யோசிக்கக் கூடும். உண்மையில் நான்கூட அப்படித் தான் நினைத்தேன். பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அந்த நாயகன் நஜீப்-போல மாறிப் போனேன். அவனோடு அழுக்கு ஆடையில் புரண்டு, ஆடுகளின் வாழ்க்கையைப் படித்தறிந்து, உதை வாங்கி, பெல்ட்டால் அடி வாங்கி, தப்பித்து, திகிலடைந்து, ஜெயிலில் உழன்று படித்து முடிக்கும் போது மன பாரத்தால் உடல் பத்து கிலோ அதிகரித்திருப்பது போல ஒரு உணர்வு.

மணலும், மணல் சார்ந்த இடமும் தான் கதைக் களன். ஏதோ கம்பெனியில் வேலைசெய்யப் போகிறோம் எனும் கனவுடன் வளைகுடா நாட்டுக்கு வரும் நாயகனுக்கு வாய்ப்பதோ கொடுமைக்கார அர்பாபுவும், ஆட்டு மந்தைகளும் தான். அர்பாவுவின் கண்களுக்கு ஒரு அடிமையாய் மாறிப்போகும் நஜீப் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலின் வீரியத்தில் சூழப்படுவதை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் பென்யமீன்.

நெற்றியில் விழும் ஒரு துளி நீர், நேரம் செல்லச் செல்ல சம்மட்டி அடியின் அளவுக்கு வலிக்கும் என்பது போல, நஜீபின் வாழ்க்கை பக்கங்கள் புரட்டப் புரட்ட வலியைக் கூட்டிக் கொண்டே போகிறது. துயரங்களிடையே வாழ்க்கையின் நிலையையும், அர்த்தத்தையும் புரிய வைக்கும் தத்துவங்களைப் போல நூலும் போகிற போக்கில் சொல்லிச் செல்கின்ற கருத்துகள் அனாயாசமானவை. சமீபத்தில் வேறெந்த நாவலையும் படித்து நான் இப்படிக் கலங்கிப் போனதில்லை எனும் எனது கூற்றில் சிறிதும் கலப்படமில்லை !

ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கான எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் தமிழ் ஆடு ஜீவிதம் இருப்பது மொழிபெயர்ப்பாளர் ராமன் அவர்களுடைய மொழி ஆளுமையை பறை சாற்றுகிறது. பத்திரிகை உலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் பரிச்சயமும், ஏற்கனவே குஞ்ஞப்துல்லாவின் மருந்து நாவலை மொழிபெயர்த்த அனுபவமும் நூலை அழகாக முழுமைப்படுத்தியிருக்கிறது. வேண்டுமென்றே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மலையாள வார்த்தைகளை விட்டுச் சென்று கவித்துவப்படுத்தியிருக்கிறார். மற்றபடி, இது ஒரு மொழி பெயர்ப்பு நாவல் எனும் உணர்வே எங்கும் எழவில்லை.

“படிக்கலேன்னா ஆடுமேய்க்கத் தான் போவே’ என்று ஊரில் திட்டுவார்கள். இந்த நூலைப் படிக்கும் எவரும் இனிமேல் எந்தக் காலத்திலும் அப்படித் திட்டமாட்டார்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்.

பத்தனம் திட்டாவைச் சேர்ந்த ஆசிரியர் பென்யாமீன் தற்போது வசிப்பது பெஹ்ரைனில் என்கிறது அவரைப் பற்றியக் குறிப்பு. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் பாட நூலாகவும் மாறிப் போயிருக்கும் இந்த நூல் இவருக்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

மலையாள நூல் அட்டையில் சொல்லப்பட்டிருக்கும் “நாம் அனுபவிக்காத்த ஜீவிதங்ஙளெல்லாம் நமுக்கு வெறும் கெட்டுக் கதகள் மாத்றமாணு” என்பதோடு ஒத்துப் போகாமல் இருக்க முடியவில்லை.

தமிழில் வந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்களில் மிகவும் முக்கியமான இடத்தை இந்த நூல் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஆசிரியர் நண்பர் ராமனை எவ்வளவு பாராட்டினாலும் தமிழ் கோபித்துக் கொள்ளப் போவதில்லை ! வாழ்த்துக்கள் சார் !

நாவல் பிரியர்களுக்கும், இலக்கிய ரசிகர்களுக்கும், வாழ்க்கையை நேசிப்பவர்களுக்குமான நூல் ஆடு ஜீவிதம்.

உயிர்மை பதிப்பக வெளியீடு,  விலை 140.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

4 comments on “ஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை

  1. இன்று படித்து முடித்து ஆடிப்போனேன். ராமன் யார் என்று தெரியாது. அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். பேஸ்புக்கில் உங்களுடைய இந்தப் பதிவைப் பகிர்கிறேன்.

    Like

  2. இன்னூலைப் படித்து பல நாட்களாகியும் நஜிப்பின் வேதனைகள் நானே அனுபவித்தது போலொரு உணர்வு இன்றும். பிழைப்புக்காக வெளிநாடு செல்லுபவர்களை எண்ணி கலங்க வைத்த நாவல். மொழிபெயர்ப்பாளருக்கு தனிப்பெரும் பாராட்டு மிகத் தகும்.

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s