ரஜினி நினைவுகள்.

aaa

 

பால்யங்கள் சுவாரஸ்யங்களால் நிரம்பியது. பால்யங்களின் படியில் சிதறிக் கிடக்கும் கதைகள் உறைந்து போன காலங்களுக்குள்ளும் வெப்பத்தைப் பாய்ச்சும் வீரியம் கொண்டவை. பால்யங்களின் வீதியைக் கடந்து வெகு காலமாகி விட்டாலும் எல்லாருடைய மனதிலும் நிச்சயம் பால்ய நினைவுகள் நிழலாடிக் கொண்டே இருக்கும்.

கிராமங்களில் பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். காரணம் வேறொன்றுமில்லை. வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் அவர்களுடைய வேர்களைப் பிடுங்கி நகரத்தின் வீதிகளில் நடும்போது, பால்யத்தின் பச்சைய நினைவுகள் அவர்களுக்கு இளைப்பாறும் சக்தியைக் கொடுக்கின்றன. நகரத்து பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் தங்களுக்கென தனி உலகத்தைப் படைத்துக் கொள்கிறார்கள். நடுவயது தாண்டிய வருடங்களின் பாய்ச்சல் அவர்களை ஒருவேளை கிராமங்களின் கடைசிப் பக்கத்தில் உட்கார வைக்கும். அவர்களோ செல்போன் சிக்னல் சென்னையில் தான் கிடைக்கும் என அலுத்துக் கொள்வார்கள்.

இரண்டு வயதிற்குள் ஒரு குழந்தை உருவாக்கிக் கொள்ளும் சுவையும், உணவுப் பழக்கமும் அவர்களுடைய இறுதி காலம் வரை தொடரும் என்கின்றனர் மருத்துவர்கள். ரசனைகளும் பெரும்பாலும் அப்படியே. விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் விதி விலக்குகளையே விதிகளாக்கி விடுவது ரசனைத் துரோகம் இல்லையா ?

எப்போதேனும் சில்லெனும் காற்று வீசும் நகரத்தில் எப்போதும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்த்துக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே சில்லென காற்று வீசும் கிராமங்களில் எப்போதேனும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்க்கின்றன.. சக்கரங்களில் சிக்கிக் கிழியாத காற்று கிராமத்தின் வீதிகளில் அரட்டையடித்துக் கொண்டே திரிகிறது. நகரங்களில் புழுதிகளுக்கு இடையே பதுங்கி, ஆம்புலன்ஸ்களிலும் அடிபட்டு, மூச்சுத் திணறி நடக்கும் காற்றுக்கு அடிக்கடி மாரடைப்பு வந்து விடுகிறது.

எனது ரசனைகள் கிராமத்தின் வயல் வரப்புகளில் நண்டுகளைப் போல ஓடித் திரிகின்றன. சர்ப்பக் குளத்தில் பல்டியடித்துக் குளிக்கும் படிக்கட்டுகளில் பாசியாய்ப் படிந்திருக்கின்றன. பட்டன் பிய்ந்து போன காக்கி நிக்கருக்கு செயினிலிருந்து ஊக்கு எடுத்துத் தரும் பாட்டியின் நினைவுகளுடன் தான் அவை இன்னும் பயணிக்கின்றன.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது அந்தஸ்தின் உச்சம். பணக்காரத்தனத்தின் அடையாள அட்டை. எப்போதேனும் பக்கத்து வீட்டு சன்னல் வழியே எட்டிப் பார்க்கும் தருணங்களில் கருப்பு வெள்ளை திரைப்படப் பாடல்களும் மெய்மறக்கச் செய்யும். எங்கள் வீட்டின் அடையாளம் மர்பி ரேடியோ. தொலைக்காட்சி நுழைவதற்கான மின்சாரமே அப்போது நுழைந்திருக்கவில்லை.

ரஜினி. எனது சிறுவயதுச் சிந்தனைகளில் சினிமா என்றால் ரஜினி என்று மட்டுமே அர்த்தம். பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலத்தில் ரஜினியின் திரைப்பட போஸ்டர்கள் பார்ப்பதே சினிமா பார்ப்பதாய் சிலிர்ப்பைத் தரும். பாட்டு ஃபைட்டு சூப்பர் எனும் போஸ்டரின் பின் குறிப்பைப் படித்து விட்டால் தூக்கம் தொலையும். செய்தித் தாள்களில் வருகின்ற பெட்டிச் செய்திகளை வெட்டி எடுத்து கலுங்கில் அமர்ந்து விவாதம் நடத்துகையில் ஏதோ பிரபஞ்ச ஆனந்தம் கூடவே வந்தமரும். ரஜினி ரசிகன், நம் ரஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினி என ரஜினி பெயர் தாங்கி வரும் வியாபார யுத்திகளில் விழுந்து நான் சேமித்து வைத்த புத்தகங்களில் அப்பாவின் உழைப்பின் வாசனை இன்னும் கசிகிறது.

சினிமா பார்ப்பது என்பது அதிகபட்ட தவறு என்பதே எனது காலத்தின் வழக்கு. அந்தத் தவறை ரஜினியின் திரைப்படங்கள் செய்ய வைத்த தருணங்கள் ஏராளம். கமலுக்கெல்லாம் நடிக்கத் தெரியுமா என்று வாக்குவாதம் செய்த நிமிடங்கள் இன்னும் மனதுக்குள் சிரிப்பையும், நினைவுகளையும் தலையாட்ட வைக்கின்றன.

சாதி, மதம், இனம், மொழி, நுண் அரசியல் இத்யாதி, இத்யாதி போன்ற விஷயங்களெல்லாம் எட்டாத காலங்கள் அவை. அந்தக் காலத்தில் ரஜினி என் மனதில் நுழைந்ததற்கு அவரும் என்னைப் போல கருப்பு என்பது மட்டுமே ஒரு காரணமாய் இருக்க வாய்ப்பில்லை. நாம் செய்ய இயலாதவற்றைச் செய்யும் பிம்பங்கள் தானே சின்ன வயதின் நமது பிரமிப்புகள் !

பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டரில் ரஜினி படம் பார்த்த அனுபவங்கள் அலாதியானவை. சினிமா பார்க்கும் போது சீக்கிரம் வீடு போக வேண்டும், வீட்டில் கண்டு பிடித்து விடுவார்களோ எனும் அச்ச உணர்வே சினிமாவை விட அதிகமாய் மனசுக்குள் காட்சியாய் விரியும்.

இப்போது, நினைத்த நேரத்தில் விரல் சொடுக்கலில் ஒரு படம் பார்த்து விட முடியும் எனும் வாய்ப்புகள் வாய்க்கப் பெற்றாலும் அன்றைய அரை குறை சினிமா தந்த ஆனந்தம் கிடைப்பதில்லை. மீறுதல்களின் வழியே கிடைக்கும் நிமிடங்களில் தான் சாதனைகளின் கணங்கள் கண்ணயர்ந்து கிடக்கின்றன.

இன்றைக்கு ரசனைகளின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. உலக சினிமாவின் அறிமுகவும் பிரியமும் அழுத்தமாய் மனதுக்குள் தடம் பதித்திருக்கிறது. நல்ல சினிமாக்கள் எது என்பதில் மாற்றுக் கருத்துகள் மின்னி மறைந்து கொண்டே இருக்கின்றன. எனினும் ரஜினி திரைப்படம் வருகிறது எனும் செய்திகள் தோன்றும் போது மனசுக்குள் நினைவுகளின் மணியோசை சத்தமாகவே ஒலிக்கிறது. பால்யத்தின் வரப்புகளில் இதயமும், மனசும் வழுக்கி ஓடுகிறது. பால்யத்தை மீட்டெடுக்கும் வயதின் ஓட்டமாக இருக்கலாம். அல்லது உறைந்து கிடக்கின்ற ரசனைப் பனிமலையில் சொட்டுச் சொட்டாய் வடியும் எரிமலைத் துளிகளாக இருக்கலாம்.

எதேச்சையாய் நினைவுக்குள் வந்தது எப்போதோ எனது பிளாகில் நான் எழுதிய ஒரு கவிதை http://xavi.wordpress.com/2006/06/15/rajini/

கருப்பு என்பதை
இளைஞர்களின்
தேசிய நிறமாக்கிய
நெருப்பு இவன்.

எனும் வரிகளை வாசிக்கும் போது சிரித்துக் கொள்கிறேன். கவிதைகளில் எதேச்சையாய் வந்து விழும் அடையாளங்கள் கிளைகளில் முளைக்கும் பூக்களல்ல.
வேர்களில் விளையும் பூக்கள்.

பெயர்க் காரணம்

xavier33.jpg
பெயர்க் காரணம்
—————–

கதை சொல்லும் நேர்த்தி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. சாகித்ய அகாடமி வாங்கிய எழுத்தாளர்களை விட பிரமிக்க நடை பாட்டிகளின் கதைகளில் சர்வ சாதாரணமாய் வாழ்வதுண்டு. பாட்டி சொன்ன நல்ல தங்காள் கதையோ, மணிமேகலைக் கதையோ இன்றும் என் மனதில் ஒரு திரைப்படமாகவே விரியும். பாட்டிக் கதைகளில் இசையும், நாடகமும், நாட்டியமும், இலக்கியமும் எல்லாமே ஒரு குதிரைச் சவாரி செய்வது போல ஒரு காட்சிப் படுத்துதல் இருக்கும்.

எனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அம்மாவும் அப்படித் தான். அம்மா சொல்லும் கதைகள் மனதை விட்டு ஒருபோதும் நீங்கிப் போவதில்லை. அம்மா சொன்ன வரலாற்றுக் கதைகளை விட வாழ்க்கைக் கதைகளே மனதில் நங்கூரமிறக்கியிருக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தைக் கூட சுவாரஸ்யமாய் ஆரம்பித்து, பரபரப்பாய் நகர்த்திச் சென்று பளிச் என்று முடித்து வைப்பார்.

என்னுடைய பெயர்க் காரணத்துக்கும் அம்மாவிடம் ஒரு கதை உண்டு. எனக்கு மூன்று அக்காக்கள். வாழ்க்கையில் நான் மிகவும் ஆனந்தமாய் நினைக்கும் விஷயங்களில் ஒன்று அது தான். திகட்டத் திகட்ட அன்பை வாரி வழங்க சகோதரிகளால் மட்டுமே முடியும். அக்காக்கள் இல்லாத தம்பிகளைப் பார்த்து எனக்கு கொஞ்சம் அனுதாபமும் எழுவதுண்டு.

அம்மாவின் நிலமை அன்றைக்கு அப்படி இருக்கவில்லை. ஊர்ப் பேச்சு “மறுபடியும் பெண்ணா ?” எனும் குத்தல் பேச்சுகள் அம்மாவை அடுத்ததாச்சும் ஒரு பையனா பொறக்கணும் என எண்ண வைத்திருக்கிறது. “நாலாதும் பொண்ணுன்னா நடைக்கல்லப் பேக்கும்லே” என பக்கத்து வீட்டுக்காரர்களின் முன்னுரை முற்றங்களில் வேண்டுமென்றே விளம்பப் பட்டுக் கொண்டிருந்த சமயம். அம்மாவுக்கு பாசம் அதிகம், அதை விட அதிகமாய் பக்தி ரொம்ப ரொம்ப அதிகம்.

1972 டிசம்பர் மாதக் குளிரில் கோட்டாறு சவேரியார் ஆலயத் திருவிழா (டிசம்பர் 3 ) வுக்குச் சென்றார். ஒரு தாய் தன் குழந்தை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் ஒரு சமூகம் ஒரு அன்னையை அவள் விருப்பத்துக்குள் வாழ அனுமதிப்பதில்லை. நிர்ப்பந்தங்கள் அம்மாவுக்குள்ளும் சிந்தனைகளை புதிதாய் எழுதியது. ” அடுத்தது ஒரு பையனா பிறந்தா நன்றாக இருக்கும்” எனும் வேண்டுதல் தான் அன்றைக்கு அம்மாவுக்கு பிரதான விண்ணப்பம்.

சவேரியார் ஆலயத்தில் சென்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார். தேர்ப்பவனி நடக்கிறது. ஆழமாய் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அம்மாவின் மனதுக்குள் திடீரென தெளிவாய் ஒலிக்கிறது ஒரு குரல். “உனது விருப்பம் நிறைவேறும், கலங்காதே”. அம்மா சிலிர்த்துப் போய் சுற்று முற்றும் பார்க்கிறார். எதுவும் இல்லை. ஒரு வேளை பிரம்மையோ என அவநம்பிக்கை வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘ ஆண்டவரே எனக்கு ஏதேனும் ஒரு அடையாளம் வேண்டும்’ அம்மாவின் மனம் மீண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறது. அடுத்த வினாடியே சவேரியார் சிலையிலிருந்த ஒரு மலர் வந்து அம்மாவின் கைகளில் விழுந்து அப்படியே ஒட்டிக் கொள்கிறது.

கேட்பதற்கு புனைக் கதை போல இருக்கும் இந்த நிகழ்வு அம்மாவுக்குள் அசாத்திய நம்பிக்கையை விதைத்து விட்டது. முகத்தில் மலர்ச்சி. அடுத்தது நமக்கு பையன் தான் சந்தேகமேயில்லை என ஜெபித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் சொல்கிறார்.

அடுத்த வருடம் நான் பிறக்கிறேன். எல்லோரும் பதட்டத்துடன் காத்திருக்க அம்மாவுக்கு மட்டும் சந்தேகமே இருக்கவில்லை. நான் பிறப்பதற்கு முன்பே அப்பாவிடம் சொல்லியிருக்கிறார், பையனுக்கு சவேரியாருடைய பெயரைத் தான் வைக்கணும். “சேவியர்” ன்னு வைப்போம் ! அப்பா, அம்மாவின் மனம் நோகும்படி எதையும் செய்ததில்லை, அப்போதும் “கண்டிப்பா” எனும் ஒற்றை வார்த்தை மட்டுமே !

அம்மா இந்தக் கதையை என்னிடம் பல நூறு தடவை சொல்லியிருக்கிறார். சொல்லும்போதெல்லாம் அம்மாவின் முகத்திலும் குரலிலும் சர்வ உணர்வுகளும் வந்து மறையும். ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் அதுவே முதல் முறை போல அம்மா சொல்வதும், அதுவே முதல் முறை போல நான் கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது !

நான் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே பலர் என்னிடம் “ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள். சேவியர் எனும் பெயரெல்லாம் அங்கீகரிக்கப் படாது. அதில் மத அடையாளம் இருக்கு, தேவையான சில அடையாளம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். நல்ல மனசோடு தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு பதிலை நான் தயாராய் வைத்திருப்பேன்.

“எனக்கு கிடைக்கப் போகும் எல்லா அங்கீகாரங்களையும் விட என் பெற்றோர் எனக்கு வைத்த இந்தப் பெயர் ரொம்ப சிறப்பானது. அங்கீகாரத்துக்காக இந்தப் பெயரை இழப்பதை விட, பெயருக்காக பிற அங்கீகாரங்களை இழப்பதே எனக்கு மகிழ்ச்சியானது. ஆத்மார்த்த அன்பை விடப் பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை !”

நேற்று சவேரியார் தினம். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை, இருந்தாலும் போன் செய்த போது ‘மக்களே இந்நு சவேரியார் தினம். மின்னே ஒரு காலத்தில…” என பேச ஆரம்பித்தார். “இருக்கட்டும்மா.. ரெஸ்ட் எடுங்க பின்னீடு பேசலாம்” என்றேன், கதை கேட்கும் ஆர்வம் மனதுக்குள் நிரம்பியே இருந்தாலும் !

பெயரில் என்ன இருக்கிறது என்று பலரும் கேட்பதுண்டு
பெயரிலும் இருக்கலாம் இதே போல ஜீவன் ஊற்றிய நினைவலைகள்.