மனோரமா இயர் புக் : Top 10 கணினி இதழ்கள்

கணினி இதழ்கள் :

 

 

 

 

 

 

கணினி யுகம் ஆரம்பமான காலத்திலிருந்து பல்வேறு கணினி இதழ்கள் வெளியாகத் துவங்கின. இன்று உலகெங்கும் நூற்றுக்கணக்கான கணினி ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பழைய மற்றும் புதிய சில கணினி இதழ்களின் அறிமுகம் இது.

1. பி.சி மேகசின் ( PC Magazine )

1982ம் ஆண்டிலிருந்தே வெளிவரும் கம்ப்யூட்டர் பத்திரிகை எனும் பெயர் இதற்கு உண்டு. 2009ம் ஆண்டு வரை அச்சு இதழாக வந்து கொண்டிருந்த இந்த இதழ் இப்போது இணைய இதழாக உருமாறியிருக்கிறது. www.pcmag.com என்பது இதன் இணைய தள முகவரி. நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம், மென்பொருள் வன்பொருள் குறித்த புதிய தகவல்கள், விமர்சனங்கள். மற்றும் வல்லுனர்களின் கட்டுரைகள் இதில் இடம்பெறுகிறது.

2. பைட் ( BYTE  )

கணினி உதயமான காலத்தில் முதலில் கால்பதித்த வெகு சில கணினி பத்திரிகைகளில் முக்கியமானது பைட். வாசிப்புக்குக் கொஞ்சம் கடினமான முழுக்க முழுக்க தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய பத்திரிகை இது. 1975ல் முதல் பதிப்பு வெளியானது. பல்வேறு மாற்றங்களுடன் 2011 வரை இதன் பெயர் இருப்பில் இருந்தது. தற்போது அது  http://www.informationweek.com/personal-tech/ எனும் தளத்துடன் இணைந்து இரண்டறக் கலந்து விட்டது.

3. பி.சி வேல்ட் (PC World )

சர்வதேச அளவில் பிரபலமான இன்னொரு கணினி பத்திரிகை பிசிவேர்ல்ட். 1982ல் முதல் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் வெற்றிகரமான இந்தப் பத்திரிகை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விருதுகளையும் அள்ளியிருக்கிறது. 2006ல் உலக அளவிலேயே அதிக அளவில் அச்சாகும் கணினிப் பத்திரிகை எனும் பெயருடன் 7. 5 இலட்சம் பிரதிகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது அது டிஜிடல் முகத்துக்குத் தாவி http://www.pcworld.com/ என இணையத்தில் முகம் காட்டுகிறது.

4. கம்ப்யூட்டர் வேர்ல்ட் ( Computer World )

1967ல் இருந்தே ஒரு கணினி இதழ் வெளியாகிறதெனில் அது இது தான். உலகின் முதல் கணினிப் பத்திரிகை என்பார்கள். மிகவும் பிரபலமான இந்த இதழ் மாதம் இருமுறையாக மலர்கிறது.  இதன் வடிவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளியாகின்றன. அச்சு, இணையம் என இரண்டு முகம் காட்டும் இந்த இதழை www.computerworld.com எனும் தளத்தில் சந்திக்கலாம்.

5. கிரியேட்டிவ் கம்ப்யூட்டிங் ( Creative Computing )

பழங்கால கணினி இதழ்களின் பட்டியலில் இதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. 1974 முதல் 1985 வரை இந்த இதழ் வெளியானது. புரோகிராம்களின் சோர்ஸ் கோட்-ஐ க் கொடுத்து அதை பயன்பாட்டாளர்கள் தங்கள் கணினியில் எழுதிப் பார்க்க வழி செய்தது இதன் சிறப்பு அம்சமாக இருந்தது. ஆனாலும் காலப் போக்கில் அதன் புகழ் மங்க நிறுவனம் இழுத்து மூடப்பட்டது !

6. வயர்ட் ( Wired )

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான கணினி பத்திரிகை வயர்ட். மென் வடிவிலும், அச்சு வடிவிலும் இந்தப் பத்திரிகை மிகப் பிரபலம். 1993ம் ஆண்டு துவக்கம் முதல் இந்த மாத இதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறது. www.wired.com எனும் இணைய தளத்தில் இதைக் காணலாம். இன்றைய பிரபல கணினிப் பத்திரிகைகளில் இதற்குத் தனி இடம் உண்டு.

7. மேக்ஸிமம் பி.சி Maximum PC

பூட் எனும் பெயரில் அறிமுகமாகி பிரபலமாய் இருக்கும் பத்திரிகை மேக்ஸிமம் பி.சி. http://www.maximumpc.com/ எனும் இணைய தளம் இந்தப் பத்திரிகைக்குரியது. தொழில்நுட்ப விஷயங்கள், பொருட்களின் தரமதிப்பீடு, தொழில்நுட்ப அலசல், வன்பொருட்களின் புதிய வருகை,என பல தரப்பட்ட விஷயங்களைக் கலந்து கட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது !

8. மேக் வேர்ல்ட் MacWorld

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் நிறைய உண்டு. அதில் மிகப் பிரபலமான பத்திரிகை இது. 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. மேக் லைஃப் எனும் பத்திரிகை இதன் போட்டியாளர் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதை விட இரண்டு மடங்கு அதிக சர்குலேஷனுடன் மேக்வேர்ல்ட் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. http://www.macworld.com என்பது இதன் இணைய தள முகவரி.

9. ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் Smart Computing

விமர்சகர்களின் தரவரிசையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் இதழ் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங். புதிய தொழில்நுட்ப விஷயங்களை வசீகரமான வகையில் தருவதில் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் இதழ் சிறப்பிடம் பிடிக்கிறது. http://www.smartcomputing.com/ என்பது இதற்கான இணைய தளம்.

10 பி.சி கேமர் PC Gamer

கணினி விளையாட்டுகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் ஏராளம் உண்டு. அதில் மிக முக்கியமானது பி.சி கேமர் எனும் மாத இதழ். 1993ன் இறுதியில் வெளியாகத் துவங்கிய பத்திரிகை இது. பல்வேறு நாடுகளில் இதன் வடிவங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. http://www.pcgamer.com/ என்பது இதன் இணையதள முகவரி.

 

 

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்

எல்லைகள் கடந்த மனித நேயம்

k1

 

 

இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள் !

மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்பு தான் !  ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கி விடுகிறது !

தன்னலச் சுவர்களை உடைத்துக் கடக்கும் மனித விரல்கள் மனித நேயத்தை அணிந்து கொள்கின்றன. அந்த மனித நேயம் தேவையான வாசல்களைத் தேடிச்சென்று உறவைப் பகிரும் உன்னத வேலையைச் செய்கிறது. நோயாளிகளின் படுக்கைகளின் அருகே ஆறுதல் கரங்களாய் மாறுகிறது. வறுமையின் வயிறுகளில் சோற்றுப் பருக்கைகளாய் உருமாறுகிறது. பாரம் சுமக்கும் தொழிலாளியின் தோள்களாய் மாறுகிறது. தேவையென நீளும் கரங்களின் உள்ளங்கைகளில் பொருளாதார பரிசுகளாக மாறிப் போகிறது. தன்னலத் தடையுடைக்கும் நதிகள் அன்பின் அருவிகளாக அவதாரம் எடுக்கின்றன.

மதங்கள் மனிதநேயத்தை தங்கள் அடித்தளமாய் அமைத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் மேல்  மதங்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாசி போலப் படிந்து படிந்து உண்மையான அடிப்படையை உலகமே மறந்து கொண்டிருக்கிறது. சடங்குகளின் துகிலுரித்து உண்மையின் நிர்வாணத்தைக் கண்டுகொள்ளும் ஞானம் பலருக்கும் இருப்பதில்லை. அவர்கள் சாரலில் நனைந்து அதையே பெருமழையென புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாண்டுவதும் இல்லை, உண்மையைத் தீன்டுவதும் இல்லை. மதக் கலவரங்களின் வேர்கள் இத்தகைய போலித்தனங்களின் மேல் பற்றி படர்ந்திருக்கின்றன.

இதயத்தில் மனித நேயம் இருக்க வேண்டியது மானுடத்தின் கட்டாயத் தேவை. அதற்கு வேர்களை விசாரிக்கும் வலிமை வேண்டும். மரங்களின் இயல்புகளைப் பொறுத்தே அதன் கனிகளும் அமையும். மாமரத்தின் கிளைகளில் ஆப்பிள் பழங்கள் விளைவதில்லை. ஆனால் போலித்தனமான மனிதர்களோ பட்டுப் போன கிளைகளில் கூட பழங்களை ஒட்டவைத்து நடக்கிறார்கள். வெளிப்படையான சில செயல்களால் தங்களை புனிதர்களாய்க் காட்டும் சுய விளம்பரதாரர்கள் அவர்கள். அவர்கள் மனிதநேயம் உள்ளவர்கள் போல நடிக்கும் வித்தைக்காரர்கள்.

உண்மையான மனிதம் வேர்களில் நிலவும். அதன் கனிகள் அதற்கேற்ப விளையும். ஒட்டவைக்கும் பழங்கள் அங்கே இருப்பதில்லை. மொட்டவிழ்ந்த பழங்களே விளையும். கனிகளால் மரங்கள் அடையாளப்படும். கனிகளால் தோட்டங்கள் அர்த்தப்படும். போலித்தனமில்லா ஒரு பழத்தோட்டம் விழிகளில் விரியும். உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் அன்பு இத்தகையதே ! அது இயல்பிலேயே கனிகொடுக்கும் மரமாக செழித்து வளர்க்கிறது !

மனிதநேயம், கர்வத்தைக் கழற்றி வைக்கும். நான் பெரியவன் எனும் சிந்தனைகளின் படிகளில் மனித நேயம் நடை பழகுவதில்லை. எனவே தான் ஏற்றத்தாழ்வுகளைச் சிந்திக்கும் மனங்கள் மனித நேயத்தை விட்டு வெகுதூரத்தில் கூடாரம் கட்டிக் குடியிருக்கின்றன. கர்வமற்ற மனது தான் மனிதனை மனிதனாய்ப் பார்க்கும். தூணிலும் துரும்பிலும் கடவுளைப் பார்ப்பதை விட, காணும் மனிதர்களில் இறைவனைப் பார்க்கும் ! அப்போது சக மனிதனை நேசிக்கவும், மதிக்கவும், அன்புடன் அரவணைக்கவும் அதற்கு சிக்கல் எழுவதேயில்லை.

மனித நேயம் உலகெங்கும் இருக்க வேண்டிய மனித இயல்பு. அது மட்டும் வாய்த்துவிடின் மதங்களின் சண்டைகளோ, இனப் பாகுபாடுகளோ உலகில் உருவாவதில்லை. சண்டைகளின் வரவு, இறைவனை அறியாததன் விளைவு. மனித நேயம் இல்லாததன் செயல் வடிவமே வன்முறை ! 

உங்களிடம் மனித நேயம் இருக்கிறதா ? ஒரு அவசர பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் மேலதிகாரிக்கும் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் உங்கள் உடன் பணியாளருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் அன்பை உங்கள் சமையல் காரருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் பிள்ளைகளைப் போலவே தெருவோர ஏழையின் அழுக்குக் குழந்தையை அரவணைக்கிறீர்களா ? மனித நேயத்தின் சிதைந்து போன சிதிலங்கள் உங்கள் விழிகளுக்கு முன்னால் புதிய விடைகளை எழுதும்.

இன்னும் கேள்விகள் எழலாம். சகமனிதனின் வெற்றி உங்களை மகிழவைக்கிறதா ? ஆனந்தமாய் ஆடிப் பாட வைக்கிறதா ? அவனுக்குக் கிடைக்கும் வசதிகளும், பெருமையும் உங்களை ஆனந்தமடையச் செய்கிறதா ? இல்லை எரிச்சலின் உச்சியில் எறிகிறதா ? அடுத்தவனின் தோல்வியில் நீங்கள் உடைந்து போய் அழுகிறீர்களா ? இல்லை அவை வெறும் வேடிக்கைக் கதையாகி வெறுமனே செல்கிறதா ? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கேள்விகளின் விடைகளில் இருக்கிறது உங்கள் மனிதநேயத்தின் எல்லைகளும், ஆழங்களும் ! உங்கள் விடைகளின் அடிப்படையில் உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள். 

வாழ்க்கை மிகவும் அழகானது. இணைந்தே வாழ்வதற்காய் நமக்குக் கிடைத்திருப்பது தான் இந்த வாழ்க்கை. எனவே அன்பினால் உலகைத் தீண்டுவோம். நேசத்தால் உயிர்களைத் தொடுவோம். கோபத்தில் எல்லைகளையும், பொறாமையின் தடைகளையும் உடைத்தே எறிவோம்.

அன்பின்றி அமையாது உலகு !
அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !

சேவியர்

வெற்றிமணி – ஜெர்மனி