நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான், ‘எனக்குப் பிடிக்கவே புடிக்காத ஒரு காலகட்டம் இந்தத் தவக்காலம் தான்’. “ஏன் அப்டி சொல்றே?” என்று திருப்பிக் கேட்டேன். “இல்ல, இந்த நாப்பது நாளும் வீட்ல கோழியும் அறுக்க மாட்டாங்க, மீனும் வாங்க மாட்டாங்க. ஈஸ்டருக்குத் தான் இனிமே நான்வெஜ் ! இந்த நாற்பது நாளும் நமக்கு தவக்காலம், கோழிகளுக்கு நல்லகாலம் ! ” என்று சிரித்தான்.
தவக்காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய்த் தொடுகிறது. லெந்து நாட்களின் முழுமையான புரிதல் பெரும்பாலானவர்களிடம் இல்லை. அது துயரத்துடன் கடந்து போகவேண்டிய ஒரு காலகட்டம் என்றே பலரும் நினைக்கிறார்கள். கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இந்தத் தவக்காலத்தை ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.
ஒரு பிரிவினர், இந்தக் காலகட்டத்தை கெட்டபழக்கங்களுக்குத் தற்காலிகத் தடை போடும் காலமாகப் பார்க்கிறார்கள். தம் அடிக்கிறவங்களும், தண்ணி அடிக்கிறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நாற்பது நாட்கள் அதை விட்டு விலகியிருப்பார்கள். அசைவத்தை ஒரு கட்டு கட்டுபவர்கள் இந்தக் காலகட்டத்தில் கீரை தின்று முழி பிதுங்குவார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை ஆலயத்துக்குப் போவார்கள். முடிந்தால் ஏழைகளுக்குக் கொஞ்சம் நல்ல விஷயங்களைச் செய்வார்கள்.
ஒறுத்தல் முயற்சி என்று இதைப் பெயரிட்டு அழைக்கிறார்கள். “உங்களுக்கு ரொம்பப் புடிச்ச ஒரு விஷயத்தைக் கடவுளுக்காக விட்டு விடுங்கள்” என்பதே அவர்களுடைய சிந்தனையில் அடிப்படை. சாப்பாடு, சினிமா, என்று இருந்த பிடித்த விஷயங்கள் இன்றைக்கு மாறி விட்டது. வீடியோ கேம்ஸ், அனிமேஷன் மூவீஸ், எஸ்.எம்.எஸ், இன்டர்நெட் என விருப்பங்கள் மாறிவிட்டன. எனவே நிஜமாகவே மக்கள் ‘அடுத்த நாப்பது நாள் நான் வெட்டியா எஸ்.எம்.எஸ் அனுப்பவே மாட்டேன்’ என்றெல்லாம் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்.
நோன்பு அதாவது உபவாசம் இருப்பது இந்தக் காலகட்டத்தில் ஒரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். சிலருக்கு அது வெள்ளிக்கிழமை. சிலருக்கு ஞாயிறு. இன்னும் சிலருக்கு அதெல்லாம் முடியாத சமாச்சாரம். ‘எனக்கு சாப்டலேன்னா தலைவலி வந்துடும்’, ‘எப்பவும் டிராவல்ல இருக்கிறதனால சாப்டாம இருக்க முடியல’ என்று சில சால்ஜாப்புகள் அவர்களுடைய கைவசம் எப்போதும் இருக்கும். இந்த நோம்பு காலம் புதிய ஏற்பாட்டில், இயேசுவின் மறைவை ஒட்டி முளைத்த விஷயம் அல்ல. எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் நோன்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது இயேசுவின் மறைவுக்குப் பின்பு கண்டு பிடிக்கப்பட்ட ஒன்று அல்ல, பழைய வழக்கத்தின் தொடர்ச்சியே.
தவக்காலம் சாம்பல் புதனில் துவங்கி, உயிர்ப்பில் முடிவடைகிறது என்பது நமக்குத் தெரிந்தது தான். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் அதி முக்கியமான நிகழ்வு உயிர்ப்பு தான். இயேசுவின் உயிர்ப்பு தான் அவரை ‘இறைவாக்கினர்’ எனும் நிலமையிலிருந்து ‘இறைமகன்’ எனும் நிலைக்கு மாற்றி நமது விசுவாசத்தை ஆழப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் அதை பல வேளைகளில் உணர்வதில்லை. நமது வீடுகளிலோ, காலன்டர்களிலோ இருக்கின்ற இயேசுவின் படங்களில் ‘இயேசு உயிர்த்து எழுகின்ற’ காட்சி இருக்குமா என்றால் சந்தேகமே. பெரும்பாலும் சிலுவையில் அறையப்பட்டு தொங்கும் ஒரு பாவப்பட்ட முகமோ, கதவைத் தட்டும் இயேசுவோ தான் கண்களுக்குத் தட்டுப்படுவார்.
தவக்காலத்தின் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது. இந்த சாம்பல் புதன் தினம் கிபி 900 களில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் இது சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது. ஆரம்ப காலத்தில் தவக்காலம் என்பது நாற்பது மணி நேரமாக இருந்திருக்கிறது. இது இயேசுவின் பாடுகள் மற்றும் கல்லறையில் அவர் இருந்த காலத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் இது ஆறு நாட்கள் என மாற்றப்பட்டு, கிபி 800களில் 40 நாட்களாக மாற்றப்பட்டது.
சாம்பல் புதனுக்கும், உயிர்ப்புக்கும் இடையே இருக்கும் 40 நாட்களில் ஓய்வுநாட்கள், அதாவது ஞாயிற்றுக் கிழமைகள், கணக்கில் வராது என்பதை நாம் அறிவோம். இந்த நாற்பது எனும் கணக்கு இயேசுவின் நாற்பது நாள் வனாந்தர அனுபவத்தில் நாம் நுழையும் முயற்சி என விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
சாம்பல் புதனுக்கு முன்னால் இருக்கிறதே ஒரு செவ்வாய்க்கிழமை. இதற்கும் உலகின் சில பாகங்களில் ஒரு முக்கியத்துவம் உண்டு. பிரான்சில் இந்த நாளை “மார்டி கிராஸ்” என்று அழைக்கிறார்கள். ஜெர்மானியர்கள் இந்த நாளை “ஃபாஸ்சிங்” என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவான பெயராக “ஷ்ரோவ் செவ்வாய்” என இந்த நாள் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் என்ன செய்வார்கள் தெரியுமா ? எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவு சாப்பிட்டு ரொம்ப சந்தோசமாக இந்த நாளைக் கொண்டாடுவார்களாம்.
தவக்காலம் என்பது ஒரு அடையாளத்தின் நாளாகிப் போய்விட்டதோ எனும் கவலை எழுவது இயல்பே. தவக்காலம் இயேசுவின் பாடுகளைச் சிந்தித்து அழுவதற்கான காலமோ, அல்லது அந்த சோகத்தை முகத்தில் பூசிக்கொண்டு திரிவதற்கான காலமோ அல்ல. நமது பாவங்களைக் குறித்து சிந்தித்து அதிலிருந்து மனம் திரும்பி வெளியே வருவதற்கு தூய ஆவியின் உதவியை நாடும் காலம். இயேசுவே சொல்கிறார், “எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று ! மீட்பு என்பது குடும்பம் குடும்பமாகவும் வரலாம். எனவே ஒட்டு மொத்த குடும்பத்துக்காகவே செபிக்கவும், அழவும் நாம் அழைக்கப்படுகிறோம். நோவாவின் காலத்தில் நேர்ந்ததும் அதுவே. நோவா மட்டும் பேழையில் நுழையவில்லை, அவரோடு அவருடைய குடும்பத்தினரையும் கடவுள் காப்பாற்றினார்..
மனம் திரும்புதலே தவக்காலத்தின் அடிப்படை. அதற்கு முதலில் எதிலிருந்து மனதைத் திருப்ப வேண்டும் எனும் புரிதல் அவசியம். மிக முக்கியமாக பாவத்திலிருந்து நாம் திரும்ப வேண்டும். நாம் என்னதான் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தாலும் “மீண்டும் பிறக்கும்” அனுபவம் இல்லையேல் மீட்பு இல்லை என்கிறார் இயேசு. “ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான். யோ:3:3″ ஒளியில் வாழும் வாழ்க்கையே கிறிஸ்து சொன்ன வாழ்க்கை. இருளில் இருப்பவர்கள் இருள் சார்ந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். அது பாவம் சூழ்ந்த வாழ்க்கை. வெளிச்சத்தை விரும்புபவர்கள் இறைவனின் திருமுன் வருவார்கள். இந்த தவக்காலம் முதலில் நமக்குச் சொல்லித் தருவது நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு மனம் திரும்பவேண்டும் எனும் முடிவை எடுப்பது தான்.
நீங்கள் செய்த ஒரு கொலைக்காக உங்கள் தந்தை ஜெயிலுக்குப் போகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். தந்தையை ஜெயிலில் அடித்து உதைத்து தூக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். அவருடைய துயரத்தையும் மரணத்தையும் நினைத்து அழுது கொண்டே நீங்கள் மீண்டும் மீண்டும் சட்ட விரோத செயல்கள் செய்து கொண்டிருந்தால் அதன் பயன் என்ன ? தந்தை உங்களைக் காப்பாற்ற உயிர்விட்டதன் பயன் என்ன ? உங்களுடைய செயல்கள் உங்களை ஒரு நாள் நிச்சயம் அழிவுக்குக் கொண்டு செல்லும் இல்லையா ? இதையே இயேசுவின் வாழ்க்கை நமக்குச் சொல்லித் தருகிறது. நமது பாவங்களுக்காக அவர் உயிரை விட்டார். நாமோ தொடர்ந்து பாவம் செய்கிறோம், தண்டனைக்கான நியாயத் தீர்ப்பு நாளை நாம் மறந்தே போய்விடுகிறோம்.
அதை நினைவில் கொள்வதற்கான அழைப்பாக நாம் இந்த தவக்காலத்தை மனதில் கொள்ளலாம். நமக்கு நன்றாகத் தெரிந்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முதலில் இறைவனின் உதவியை நாடவேண்டும். சிற்றின்பம், கோபம் போன்ற பாவங்கள் இயேசு நேரடியாகவே கண்டித்தவை. அவற்றிலிருந்து வெளியே வரும்போது நம்மிடமிருக்கும் அடுத்த நிலை பாவங்கள் தெரியத் துவங்கும். அதையும் விடடு விடவேண்டும். இப்படி படிப்படியாக ஒவ்வொரு பாவமாக விட்டு விடும் போது நாம் இயேசு வாழ்ந்த வாழ்க்கையை நோக்கி நகர்கிறோம் என்று பொருள். இயங்காமல் இருக்கும் காஸ்ட்லி காரை விட ஓடிக்கொண்டிருக்கும் மாட்டு வண்டியே மேலானது ! ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு பாவமாக நாம் விட்டு விடுதலே புனிதத்தை நோக்கிய வாழ்க்கையின் முதல் படி.
இயேசு மனிதனாய் வந்ததன் நோக்கமே அது தான். ஆதாம் மனுக்குலத்தின் முதல் துளி. ஆதாம் ஏவாளுடன் பாவமும் துவங்கியது. காயின் பாவத்தின் அடுத்த நிலைக்குச் சென்றான். மனுக்குலம் படிப்படியாய் இருளடைந்தது. ஆங்காங்கே தோன்றிய வெளிச்ச விதைகள் தவிர எங்கும் கும்மிருட்டு. அந்த இருட்டை அழித்து மீண்டும் ஒரு தூய வாழ்க்கைக்கான வாய்ப்பையும், வழியையும் நமக்கு உருவாக்கித் தந்தது தான் இயேசு செய்த பணி. நாம் இயேசுவின் வார்த்தைகளையும், வாழ்க்கையையும் இறுக்கிப் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் அவருடைய வாசனை வீச வேண்டும். அதுவே அற்புதமான கிறிஸ்தவ அனுபவம்.
பாவம் எனும் மிகப்பெரிய இருட்டைக் கடந்தால் நமக்கு அடுத்தடுத்த வழிகள் புலப்படும். ‘தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் ஆகாது” எனும் இயேசுவின் போதனை உலக செல்வங்களிலிருந்து நாம் மீட்படைய அழைப்பு விடுக்கிறது. நியாயப் பிரமாணங்களைக் கோடிட்டுக் காட்டி எளியவர்களை வஞ்சித்த பரிசேயர்கள் இயேசுவால் புறக்கணிக்கப்பட்டனர். சட்டங்களிலிருந்து விடுதலை பெற்று அன்பில் நிலைபெற அது நமக்கு அழைப்பு விடுக்கிறது. ‘பயப்படாதீர்கள்’ எனும் இயேசுவின் போதனை விசுவாசத்தை இறுகப்பற்றிக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்தையும் பகிர்ந்து ஏழைகளுக்குக் கொடுக்கச் சொன்ன இயேசுவின் போதனை சுயநலத்தை வெறுக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த அர்த்தங்களைப் பற்றிக் கொள்வதே தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம். அதைத் தாண்டிய அடையாளங்கள் இரண்டாம் பட்சமே. இதையே பைபிளும் நமக்குப் போதிக்கிறது. உதாரணமாக கிறிஸ்துவின் பிறந்த நாளையோ, லெந்து நாட்களையோ இயேசுவின் அப்போஸ்தலர்கள் கொண்டாடவில்லை. அதைக் குறித்த நிகழ்வுகளோ, முக்கிய குறிப்புகளோ முதல் நூற்றாண்டிலும் காணப்படவில்லை. கிபி 325ல் நெசியா கவுன்சில் தான் லெந்து நாட்களை அங்கீகரித்தது! நாமும் லெந்து நாட்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதே முக்கியம், அடையாளங்களை அல்ல.
எத்தனையோ தபசுகாலங்கள் வந்து போய்விட்டன. எத்தனையோ தபசு காலங்களை நாம் அனுசரித்து முடித்தும் விட்டோம். கடந்த தபசு நாளுக்கும், இந்த நாளுக்கும் இடையே நாம் எவ்வளவு தூரம் பாவத்தை விட்டு விலகியிருக்கிறோம். எவ்வளவு தூரம் இயேசுவை நெருங்கியிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு படியேனும் முன்னேற்றம் இல்லையேல் நமது தபசு காலங்கள் உண்மையில் வீணானவையே !
இந்த தபசுகாலத்திலாவது ஒரு உறுதி மொழி எடுப்போம். நமக்குத் தெரிந்த பாவங்களை விலக்குவோம். இருட்டுக்குள் இருக்கும் வரை நமது பாவங்கள் நமக்குத் தெரிவதில்லை. நாம் ஒவ்வொரு பாவத்தை விலக்கும் போதும் இயேசுவின் ஒளி நம்மீது கொஞ்சம் அதிகமாய்ப் பாயும். அது நமது அடுத்தடுத்த பாவங்களை நமக்கு அடையாளம் காட்டும். அவற்றையும் நாம் இறைவனின் அருளால் கடப்போம். இப்படியே தொடர்ந்து இயேசுவோடு நடப்போம். அதுவே ஆன்மீக வளர்ச்சி. அதுவே இயேசு விரும்பிய மாற்றம்.
மனமாற்றம் என்பது உணவையோ, உடையையோ மாற்றுவதல்ல, மனதை முழுமையாய் இறைவன் பக்கமாய்த் திருப்புவதே.
ஃ
சேவியர்
நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.
You must be logged in to post a comment.