அழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )

IT-industry-bcbay

அழைக்கும் ஐடி துறை

1

நீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும்.

“நல்லா இருக்கியாடே… ?”

“இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?”

வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்ணு தான். சம்பளத்திலோ, சமூக அங்கீகாரத்திலோ அதிக வேறு பாடு இருப்பதில்லை. இந்தியாவில் நிலமை தலை கீழ். அதனால் தான் ‘ஏதோ ஒரு வேலை’ என்பதைத் தாண்டி நல்ல வேலை, நல்ல சம்பளம் தரக்கூடிய வேலை, நல்ல அங்கீகாரம் கிடைக்கக் கூடிய வேலை என்றெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள்.

அத்தகைய கனவுத் தேடல்களின் இடமாக கடந்த பத்து இருபது ஆண்டுகளாக ஐடி துறை இளைஞர்களை வசீகரிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஐடி துறையின் மீதான அபரிமிதமான கவர்ச்சி சற்றே குறைந்தாலும், ஐடி துறை ஊழியர்களின் வாழ்க்கை வானவில் போல அழகானதல்ல என்பது புரிந்தாலும் அது தரும் பொருளாதாரம், மற்றும் அடையாளம் இரண்டும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஐ.டி யா… அட போப்பா.. அதெல்லாம் அறிவாளிகளுக்கானது என்று ஒரு சாராரும், அதெல்லாம் பொறியியல் படித்தவர்களுக்கு, அல்லது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமானது எனும் பரவலான சிந்தனையும் நம்மிடையே உண்டு.

உண்மையில், கணினி துறையில் பல்வேறு விதமான வேலைகள் உள்ளன. எல்லா வேலைக்கும் எஞ்சினியரிங் படித்திருக்கத் தேவையில்லை. கணினியில் முதுகலை படித்திருந்தால் மட்டுமே ஐ.டியில் நுழைய முடியும் எனும் சிந்தனையும் சரியானதல்ல.

அதே போல, கணினி துறை அவ்வளவு தான் இனிமேல் அது அழிந்து விடும் எனும் வாதங்களும் அபத்தமானவை. கணினி துறை அழியப்போவதில்லை. அது தனது முகத்தையும், உத்திகளையும், தளங்களையும் மாற்றிக்கொண்டிருக்குமே தவிர அழிந்து போவதில்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா இடங்களிலும் சகஜம் தான். ஆனால் அந்த மாற்றங்கள் ஐடி துறையில் வேகமாக வரும் என்பது ஒன்றே வித்தியாசம். அந்த மாற்றத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்பவர்கள் எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கலாம்.

உலக அளவில் செயலாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் 52 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். அமெரிக்காவில் ஒரு பொறியாளருக்கு ஆகும் செலவில் ‘கால்வாசி’ கொடுத்தால் இந்தியாவில் ஒரு சிறந்த பொறியாளர் கிடைப்பார். அவர் அந்த அமெரிக்கரை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பையும் கொடுப்பார் என்பது தான் இந்தியாவில் ஐடி துறை அபரிதமான வளர்ச்சியை அடைந்திருக்கக் காரணம்.

இன்றைக்கு ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் கோடானு கோடி பணத்தை இந்தியாவின் ஐடி துறையில் முதலீடு செய்கின்றன ? காரணம் இந்தியர்களின் திறமையும், அவர்களின் மூலம் நிறுவனங்கள் சம்பாதிக்கப்போகும் பில்லியன்களும் தான். ஐடி துறை வளரும். எனவே அது அழியும் என்றெல்லாம் நம்பி கவலைப்படவேண்டாம்.

ஒரு வேளை நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் கல்லூரியில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடைபெறும் என்றால், அதில் முழு கவனம் செலுத்தி ஒரு வேலையை வாங்கிவிட முயற்சி செய்யுங்கள். ஐ.டி துறையில் சேர்வதற்கு இன்றைய தேதியில் கிடைக்கும் மிக எளிய வழி அது தான்.

கேம்பஸ் இன்டர்வியூ காலை வாரி விட்டதா ? கவலையில்லை. வாழ்க்கை என்பது கேம்பஸ் இன்டர்வியூவில் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விஷயம் தான்.

எந்தத் துறையில் வேலைக்குச் சேரவேண்டுமானாலும் ஒரு சில அடிப்படைத் தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு கல்லூரிப் பட்டத்துடன், நல்ல உரையாடல் திறன், நல்ல மனதிடன், கூர்மையான சிந்தனை, நேர்முகத் தேர்வு பயிற்சிகள் போன்றவையெல்லாம் கூட உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.

ஐடி துறையில் இருக்கின்ற வேலைகள் என்னென்ன என்பதைக் குறித்து ஒரு சின்ன அறிமுகம் தரலாம் என நினைக்கிறேன். நம் எல்லோருக்கும் தெரிந்த வேலைகளிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

மென்பொருள் உருவாக்குபவர் (Software Developer)

 

மென்பொருள் பொறியாளர் என்றாலே சட்டென நினைவுக்கு வருகின்ற வேலைகளில் ஒன்று மென்பொருளை உருவாக்கும் பணி செய்பவர்கள். டெவலப்பர்கள். கணினி துறையில் உள்ள சிக்கலும், அதிலுள்ள வசந்தமும் ஒரே விஷயம் தான். பரந்து விரிந்த தொழில் நுட்பங்கள். எந்தத் தொழில் நுட்பத்தைப் படித்தால் நல்லது ? எது இன்றைக்கு ஹாட் சர்டிபிகேட் என்றெல்லாம் குழப்பங்கள் வருவது வெகு சகஜம்.

மென்பொருள் உருவாக்குபவர் வேலையில் நுழைய கணினி மென்பொருள் துறையில் பட்டம் இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் நியதியாக வைத்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாகவே அத்தகைய பொறியாளர்கள் இன்றைக்கு கிடைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். எனவே ஒரு கம்ப்யூட்டர் டிகிரி என்பதை அடிப்படையாக வைத்திருங்கள்.

ஓட்டப்பந்தயங்களில் பார்த்திருப்பீர்கள். முதலில் ஓடி வெற்றிக் கோப்பையைக் கையில் அள்ளுபவனுக்கும், நான்காவதாக வந்து தோல்வியில் தலையசைப்பவருக்கும் இடையே வெறும் ஒன்றோ இரண்டோ வினாடிகள் தான் அதிகபட்ச இடைவெளியாய் இருக்கும். அந்த வினாடிகள் தான் கோப்பையை நிர்ணயிக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்களை விட ஒரு சில ஸ்பெஷல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு எளிய வழி, சான்றிதழ் படிப்புகள் அதாவது சர்டிபிகேஷன் கோர்ஸ்கள். கல்லூரி முடிந்து வரும் எல்லோருக்கும் பட்டப்படிப்பு இருக்கும். அந்த கூட்டத்தில் நீங்கள் தனியே தெரிய வேண்டுமெனில் அதற்கு ஒரு சர்டிபிகேஷன் படிப்பு நிச்சயம் உதவும். உங்களுடைய நோக்கம் டெவலப்மென்ட் வேலை எனில் அதற்குரிய படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, ஜாவா, டாட் நெட், சி++, எஸ்.ஏ.பி, மெயின்ஃப்ரேம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இந்த வரிசையில் உங்களுக்கு எது சுவாரஸ்யமாய் இருக்கிறதோ, பிடித்தமாய் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு சர்டிபிகேஷன் செய்வது மிகவும் பயனளிக்கும்.

இந்த சான்றிதழ் விஷயத்திலும் நல்ல நிறுவனங்களில் பெறப்படும் சான்றிதழுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், சிஸ்கோ, சன் போன்ற நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒருவேளை அத்தகைய நிறுவனங்களில் வாங்குவது இயலாது என்று தோன்றினால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல நிறுவனம் ஒன்றில் ஒரு சான்றிதழ் பயிற்சியை முடித்துக் கொள்வது பயன் தரும். அதுவும் வசதிப்படாத சூழல் எனில் ஆன்லைனில் நிறைய சர்டிபிகேஷன் கோர்ஸ் கள் இருக்கின்றன அவற்றைப் படித்து ஒரு சில‌ சான்றிதழ் பெறுவதும் நல்லதே.

‘எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் சார்” என்பது பழைய கதை. “நான் இதுல தான் எக்ஸ்பர்ட், இந்த ஏரியால வேலை இருக்கா ?” என்பது ஐடி கதை. ஒரு ஏரியாவில் நீங்கள் வலுவாக இருப்பதே பல இடங்களில் நுனிப் புல் மேய்வதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

சுருக்கமாக, கணினி மென்பொருள் டெவலப்பர் வேலைக்கு கணினி பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, உரையாடல் திறன், தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை, விடா முயற்சி இவற்றை முதன்மையாகக் கொண்டிருங்கள்.

( பேசுவோம் )

Sony And Google Unveil Internet TV Set

2

அழைக்கும் ஐடி துறை

கடந்த வாரம் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை குறித்து பார்த்தோம். டெவலப்பர் எனும் வார்த்தையைக் கேட்டால் உடனே மனதில் “டெஸ்டர்” எனும் வார்த்தை ஒலித்தால் நீங்கள் மென்பொருள் துறையோடு நல்ல பரிச்சயம் உடையவர் என்று பொருள். டெஸ்டர் என்றால் சோதிப்பவர். டெவலப்பர்கள் எழுதும் மென்பொருள் சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பவர் தான் டெஸ்டர்.

டெஸ்டர் ( Software Tester )

மென்பொருள் துறையின் ஆரம்ப காலத்தில் இந்த டெஸ்டர்களுக்கு டெவலப்பர்களுக்கு இணையான மரியாதை இல்லை. அது இரண்டாம் தர வேலையாகவே பார்க்கப்பட்டது. ‘நான் வண்டியைச் செய்றவன். நீ ஓட்டிப் பாக்கறவன் தானே’ என்பது போல ஒரு இளக்காரம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறியது. மென்பொருள் துறையின் முதுகெலும்பாகவே அந்த பணி மாறிப்போனது.

மென்பொருளில் தவறு இல்லை என்பதை இந்த குழு உறுதி செய்த பின்பே மென்பொருள் இறுதி கட்டத்தை அடையும். முதலில் மென்பொருள் உருவாக்குபவர்களே சோதிப்பவர்களாகவும் இருந்தார்கள், பின்னர் சில டெஸ்டர்கள் டெவலப்பர்களுடன் இணைந்திருந்து மென்பொருளை சோதனை செய்தார்கள், இப்போது டெஸ்டிங் என்பது நிறுவனத்தின் தனி பாகமாக மாறிவிட்டது. வெறும் டெஸ்டிங்கை மட்டுமே செய்யும் நிறுவனங்களும் இன்று ஏராளமாக இயங்குகின்றன.

டெஸ்டிங் பிரிவில் முக்கியமாக மூன்று வேலைகளைச் செய்கிறார்கள்.

அ, மென்பொருள் பிழையில்லாமல் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்கிறார்கள்.

ஆ. அது செய்ய வேண்டிய வேலையைச் சரியாக செய்கிறதா ? செய்யக் கூடாத வேலைகளைச் செய்யாமல் இருக்கிறதா என்பதை சோதிக்கிறார்கள்.

இ. தேவையான அளவு வேகத்தில் மென்பொருள் இயங்குகிறதா என்பதைப் பரிசோதிக்கிறார்கள்.

குவாலிடி ரொம்ப முக்கியம் என்பவர்கள் டெஸ்டிங் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். “எப்பவும் உன் கண்ணுக்கு குறை மட்டும் தான்யா தெரியுது” என திட்டு வாங்குபவர்கள் அதை ஒரு பாசிடிவ் ஆக மாற்ற இந்தத் துறையில் சேரலாம்.

டெவலர்ப்பர்களைப் போலவே டெஸ்டிங் பொறியாளர்களுக்கும் ஒரு கணினி சார்ந்த பட்டம் இருப்பது சிறப்பு. ஆனால் சில நிறுவனங்கள் கணினி சார்ந்த பட்டம் இல்லாதவர்களையும் டெஸ்டிங் பணியின் ஜூனியர்களாகச் சேர்ப்பதுண்டு.

டெஸ்டிங் துறைக்கு ஒரு மிகப்பெரிய சாதகம் உண்டு. என்னத்த படிக்கிறது ? என டெவலப்பர்களைப் போல அதிக அளவு குழப்ப வேண்டிய தேவை இவர்களுக்கு இல்லை. பெரிய அளவில் பார்த்தால் இரண்டு பெரிய பிரிவுகளில் இவர்களை அடக்கி விடலாம்.

அ. மேனுவல் டெஸ்டர்ஸ்.

ஆ. ஆட்டோமேஷன் டெஸ்டர்ஸ்.

மேனுவல் டெஸ்டர்கள் என்பவர்கள் எந்தவிதமான சிறப்பு மென்பொருளும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளின் ஒவ்வொரு பணியையும் சோதிப்பார்கள். ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் அந்தப் பணியை ஏதேனும் ஒரு ஆட்டோமேஷன் டூல் மூலமாகச் செய்வார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

டெஸ்டிங்கில் சான்றிதழ் வாங்குவதும் ஒருவகையில் குழப்பமற்றதே. “சாப்ஃட்வேர் டெஸ்டிங்” எனும் சர்டிபிகேஷனை பெரும்பாலும் எல்லா முக்கிய பயிற்சி நிலையங்களும் வைத்திருக்கின்றன. சில வாரங்களோ, சில மாதங்களோ பயிற்சி பெறுவது ரொம்ப பயனளிக்கும். எந்த நிறுவன அல்லது பயிற்சி நிலைய சான்றிதழ் அதிக மதிப்பு வாய்ந்தது என்பதைப் பார்த்தபின்பே அதைப் பெற முயலுங்கள்.

டெஸ்டிங்கில் அடிப்படை கற்றபின்பே ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன் பெறவேண்டும். அதுவே சரியான முறை. ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆட்டோமேஷன் என்றால் என்ன ? அது என்னவெல்லாம் செய்யும் ? எங்கேயெல்லாம் பயன்படுத்தலாம் என அதன் அடிப்படைகளை அலசும் சர்டிபிகேஷன்.

க்யூ.டி.பி, செலினியம், ஆர்.எஃப்.டி என ஆட்டோமேஷனுக்கான ஏதோ ஒரு மென்பொருளில் எக்ஸ்பர்ட் ஆவது இன்னொரு வகை. ஹைச்.பி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் அதற்குரிய பிரத்யேக சான்றிதழ் பயிற்சிகளைத் தருகின்றன.

இந்த இரண்டு டெஸ்டிங் போலவே “பெர்ஃபார்மன்ஸ் டெஸ்டிங்” ஒன்றும் உண்டு. உருவாக்கப்பட்ட மென்பொருள் தேவையான வேகத்தில் இயங்குகிறதா என்பதை சோதித்து உறுதி செய்வதே இது. இதற்கென ஸ்பெஷல் டூல்ஸ் இருக்கின்றன. அந்த மென்பொருள்கள் பற்றிய சான்றிதழ்களுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ‘லோட் ரன்னர் சான்றிதழ்’ என்பது ஒரு சின்ன உதாரணம்.

டெஸ்டிங் துறையில் நுழைய நல்ல நுண்ணறிவு, ஆராயும் தன்மை, எதையும் வேறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் தேவை. அப்போது தான் யார் கண்ணிலும் படாமல் தப்பிக்கும் பிழைகளெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியும்.

ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். காரின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொருவர் தயாரிப்பார். அதை ஒட்டு மொத்தமாக ஒட்டிப்பார்ப்பவர்கள் ‘சோதனை’ பிரிவில் இருப்பவர்கள். ஓட்டிப் பார்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக கார் எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் போன்ற அத்தனை விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். அது போல தான் மென்பொருள் துறையிலும். டெவலப்பர்கள் ஒவ்வொரு பகுதியாய் உருவாக்குவார்கள். ஒட்டு மொத்தமாக சோதிப்பவர்கள் டெஸ்டர்கள். அவர்களுக்குத் தான் அந்த மென்பொருளின் ஒட்டு மொத்தப் பார்வையும், புரிதலும் இருக்க வேண்டும்.

டொமைன் ஸ்பெஷலிஸ்ட்( Domain Specialist )

‘டொமைன் ஸ்கில்ஸ்” என்பது எந்தத் துறைக்காக மென்பொருளை உருவாக்குகிறார்களோ, அந்தத் துறையைப் பற்றிய அறிவாகும். அது கணினியோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாக வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், வங்கியில் பணப் பரிமாற்றம் எப்படி நடைபெறும், அதில் என்னென்ன சட்ட திட்டங்கள், வரையறைகள் உண்டு. டெபிட் கார்ட் போன்றவை பயன்படுத்துவதன் வழிமுறைகள் போன்ற ‘தொழில் அறிவு’ இருந்தால் போதுமானது.

காப்பீட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், அதில் எப்படியெல்லாம் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் மாற்றத்துக்கு உட்படுகிறது. ஒரு சூழலில் பணத்தை கிளெய்ம் செய்ய வேண்டிவந்தால் அது எப்படி நடைபெறும் போன்ற அறிவு இருந்தால் போதும். இந்த அறிவு தான் உங்கள் மூலதனம்.

மென்பொருள் துறையில் அதிகம் செயல்படும் தளங்கள் பல உண்டு.

வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நலத்துறை, தகவல் தொடர்பு துறை, வணிகம் போன்றவை சில முக்கியமான தளங்கள்.

ஏற்கனவே ஐடியில் இருப்பவர்கள், கூடுதலாக இந்தத் தளங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பது ஐ.டி துறையில் டெவலப்மென்ட், டெஸ்டிங் போன்ற வேலைகளில் உயர உதவி செய்யும். வேலையில் சேர விரும்புபவர்களுக்கு “அனலிஸ்ட்”, “டொமைன் எக்ஸ்பர்ட்”, “சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்” போன்ற டொமைன் ஸ்பெஷல் வேலைகள் கிடைக்கவும் உதவி செய்யும். அந்தந்த துறையிலுள்ள நுணுக்கங்களைக் கற்றறிந்து இவர்கள் ஐடி துறையோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அது தான் விஷயம்.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு சர்டிபிகேஷன் கோர்ஸ் உண்டு. ஏதேனும் உங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதிலுள்ள சிறப்பு சான்றிதழ் ஒன்றைப் பெறுவது மிகவும் அவசியம்.

உதாரணமாக, அசோசியேட் இன் ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது காப்பீடு துறை சார்ந்த ஒரு சான்றிதழ்.இந்த சிறப்புப் பிரிவில் வேலையில் சேர்பவர்களுக்கு கணினி பட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களுக்கு ஏதோ ஒரு கல்லூரிப் பட்டம், மற்றும் அந்தந்த துறைகளிலுள்ள சிறப்பான அறிவு அதுவே முக்கியம்.

எனவே உங்களுக்கு ஒருவேளை இந்தத் துறைகளில் நல்ல முன் அனுபவம் இருந்தால், உதாரணமாக, எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தில் ஒரு பிரிவில் உங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டெனில் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டே நீங்கள் ஐ.டி துறையில் நுழைய முடியும் !

 

Sony And Google Unveil Internet TV Set

அழைக்கும் ஐடி துறை

3.

 

டேட்டாபேஸ் தொடர்பான வேலைகள் ( Database Related Jobs)

எந்த மென்பொருள் இயங்கவும் முக்கியமான தேவை டேட்டா எனப்படும் தகவல்கள். அந்தத் தகவல்களை சேமித்து வைக்கும் இடம் டேட்டாபேஸ் எனப்படும். இந்த தகவல்களை சேமிக்கும் முறை, அதை தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், தேவையான வேகத்தில் பயன்படுத்தும் முறை, அதைப் பாதுகாப்பாய் வைத்திருக்கும் வகை என தகவல்கள் சார்ந்த அனைத்து பணிகளையும் செய்பவர் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ( டிபிஏ) என அழைக்கப்படுவார். இந்த ஏரியாவின் இள நிலை ஊழியர் டேட்டாபேஸ் அனலிஸ்ட் என்பார்கள்.

இந்த வேலைக்கு கணினி மென்பொருள் துறையில் படித்திருக்கும் பட்டம் பயனளிக்கும் என்றாலும் அறிவியல் துறையில் பெற்றிருக்கும் ஏதோ ஒரு பட்டம் கூட பல நிறுவனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது ஆனந்தமான செய்தி. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்திருப்பவர்களைக் கூட அங்கீகரிக்கிறது.

இந்த வேலைக்கு சர்டிபிகேஷன் பயிற்சி மிக முக்கியம். எஸ்.க்யூ எல் எனப்படும் தொழில்நுட்பத்தில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டியது இதன் முக்கியமான தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் சான்றிதழ் அல்லது ஆரக்கிள் அளிக்கும் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் சான்றிதழ் போன்றவை மிகவும் சிறப்பான சான்றிதழ் பயிற்சிகளாகும்.

ஹார்ட்வேர் எஞ்சினியர் ( Hardware Engineer )

கணினி பணிகளைப் பொறுத்தவரை கணினி எனும் கருவி, அந்தக் கருவியில் இயங்கும் மென்பொருட்கள் எனும் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணினியில் இயங்கும் மென்பொருட்கள், மற்றும் கணினியை இயக்கும் மென்பொருட்கள், கணினிகளை இணைக்கும் மென்பொருட்கள் என்பவற்றையெல்லாம் ‘சாஃப்ட்வேர்’ எனும் ஒரு மிகப்பெரிய தலைப்பின் கீழ் அடைத்து விடலாம்.

அந்தக் கணினியில் இருக்கும் வன்பொருட்களை அதாவது ஹார்ட்வேர் பகுதிகள் சார்ந்த பணிகளைச் செய்பவர்கள் ஹார்ட்வேர் எஞ்சினியர்கள் எனப்படுவார்கள். இவர்களுடைய பணி மிகவும் முக்கியமானது. புதியவகையான கீபோர்ட்கள், மைக்ரோசிப்கள், பிரிண்டர்கள், ஹார்ட்டிஸ்கள் போன்றவற்றை வடிவமைக்கும் ஆய்வக பணிகள் இவற்றில் முக்கியமானது.

எந்த வகையானாலும் ஹார்ட்வேர் பொறியாளர்களின் தேவை எல்லா நிறுவனங்களுக்கும் உண்டு. கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது, இல்லையேல் எலக்ட்ரானிக் துறையில் பொறியாளர் பட்டம் பெற்றிருப்பது தேவை. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்த பணி, எனவே இதன் மீது ஆழமான விருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமானது இது.

மற்ற பணிகளைப் போலவே ஒரு சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது வன்பொருள் பணியிலும் அதிக நன்மை பயக்கும். மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களெல்லாம் சிறப்பு சான்றிதழ் பயிற்சிகளை அளிக்கின்றன. அவை தவிரவும் ஏராளமான நிறுவனங்கள் ஸ்பெஷல் சான்றிதழ் பயிற்சிகள் நடத்துகின்றன. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அதிக பலனளிக்கும்.

ஹெல்ப் டெஸ்ட் டெக்னீஷியன் ( HelpDesk Technician )

கணினி நிறுவனங்களில் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இந்த ஹெல்ப் டெஸ்ட் பணியாளர்களின் பணியையும் குறிப்பிடலாம். அதே போல கணினி துறையில் பட்டம் பெறாமலேயே ஐடி துறைக்குள் நுழைவதற்கான ஒரு கதவாகவும் இந்த பணி இருக்கிறது.

கணினி நிறுவனங்கள் பல விதமான கணினிகளால் நிரம்பியிருக்கும் என்பது அறிந்த விஷயம் தான். அந்த கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்வதும், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதும் இந்த ஹெல்ப் டெஸ்க் பணியாளர்களின் முக்கிய வேலை. கணினிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நிறுவனம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த ஆரோக்கியத்தை கட்டிக் காப்பதில் இவர்களுடைய பங்கும் முக்கியமானது.

நிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் இருந்தால் நேரடியாகச் சென்று பழுதுகளை நீக்குவதும், அவை வேறு வேறு இடங்களிலோ, வேறு வேறு மாநிலங்களிலோ இருந்தால் அவற்றை ஆன்லைன் மூலமாக சரிசெய்வதும் இவர்களுடைய பணிகளில் அடக்கம். கணினி சார்ந்த சிக்கல்களைப் பலருடன் பேசவும், சரிசெய்யவும் வேண்டியிருப்பதால் நல்ல உரையாடல் திறன் இவர்களுக்கு அவசியம்.

ஒரு பட்டம், அல்லது ஒரு நல்ல டிப்ளமோ படிப்பு கூடவே ஹார்ட்வேர் சர்ப்போர்ட் சார்பான ஒரு பயிற்சி இவை போதும் இந்த பணிக்குள் நுழைய. நுழைந்தபின் தங்களுடைய பணியை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவு படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்பது நிச்சயம்.

 

நெட்வர்க் சார்ந்த பணிகள். ( Networking Related Jobs)

 

கணினி நிறுவனத்தில் கணினிகள் நிரம்பியிருக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த கணினிகளெல்லாம் தனித் தனியே இருந்தால் தகவல் பரிமாற்றம் உட்பட எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறாது. எல்லா கணினிகளும் ஒரு சரியான தொழில்நுட்ப முறையில் இணைந்திருந்தால் மட்டுமே அது முழுமையான பணியை ஆற்ற முடியும்.

கணினிகளை சரியான வலைப்பின்னலின் இணைப்பது, அந்த இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது, தகவல் பரிமாற்றங்கள் தேவையான விதத்தில் நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பது, தகவல் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்துவது, ஒவ்வொருவருக்கும் அந்த நெட்வர்க்கில் என்னென்ன அனுமதிகள் கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது என நெட்வர்க்கிங் சார்ந்த சர்வ சங்கதிகளையும் நெட்வர்க்கிங் குழு செய்யும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருப்பது, அல்லது நெட்வர்க்கிங், எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது அடிப்படைத் தேவையாகக் கொள்ளப்படும். சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்த நபர்களையும் வேலையில் சேர்த்துக் கொள்கின்றன, ஆனால் அவர்கள் நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழ்களை பல முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை.

இந்த நெட்வர்க்கிங் ஏரியாவில் படிப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பல வேலைகள் உண்டு. நெட்வர்க் எஞ்ஜினியர், நெட்வர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட்வர்க் செக்யூரிடி அனலிஸ்ட், இன்டர்நெட்வர்க் எஞ்ஜினியர் போன்றவை சில உதாரணங்கள்.

டெக்னிகல் ரைட்டர். ( Technical Writer )

தொழில்நுட்பம் சார்ந்தவற்றை எழுதி வைப்பவர் என இந்தப் பணியைச் சொல்லலாம். ஐடி நிறுவனங்களில் பல்வேறு கோப்புகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை ‘தொழில்நுட்பம்’ சார்ந்தவை. இந்த தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அறிந்து, தெரிந்து வகைப்படுத்தி பிழையின்றி எழுதி வைக்கும் துறை தான் இது. இன்றைய தினத்தில் வளர்ந்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று.

தகவல்கள் சரியாக இருக்க வேண்டும், தகவல்கள் எளிமையாக இருக்கவேண்டும், தகவல்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும், தகவல்கள் வாசிக்க தூண்டுவதாக இருக்க வேண்டும் என பல ‘வேண்டும்’கள் இந்த வேலையில் உண்டு.

அட்டகாசமான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இந்த வேலைக்குத் தேவை என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் புரிந்திருப்பீர்கள். சிறப்பாக எழுதும் திறமையும் வேண்டும். கூடவே கணினி துறைபற்றிய அறிவும் அவசியம்.

ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டியது அடிப்படைத் தேவை. ஆங்கில இலக்கியம், ஜர்னலிசம் போன்ற பட்டங்கள் வசீகரிக்கும். வலைத்தளங்கள், நூல்கள், பயிற்சி நிலையங்கள் என உங்களை பட்டை தீட்டும் இடங்கள் பல உண்டு.

பட்டப்படிப்போடு கூட எழுதுவதற்குப் பயன்படக் கூடிய மென்பொருட்களின் மீது நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். எம்.எஸ் வேர்ட், ஃப்ரேம் மேக்கர், பேஜ் மேக்கர் அல்லது க்வார்க் போன்ற மென்பொருட்களில் ஏதேனும் சிலவற்றில் பரிச்சயமும், நல்ல அனுபவமும் இருப்பது அவசியம்.

Sony And Google Unveil Internet TV Set

4

கேம்ஸ் ரைட்டர் ( Games Writer )

 

எந்நேரமும் குழந்தைகள் போனும் கையுமாக இருந்து விளையாடிக்கொண்டிருப்பது இன்றைக்கு சர்வ சாதாரணக் காட்சியாகிவிட்டது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

கணினி, மொபைல், சமூக வலைத்தளங்கள் என இந்த விளையாட்டின் தளம் இப்போது பரந்துபட்டிருக்கிறது. ஒரு விளையாட்டின் கருவை உருவாக்குவது, அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது, அதன் விளையாட்டு முறைகளை நிர்ணயிப்பது, அதற்கான ஒலியை உருவாக்குவது, அதை சோதிப்பது என கணினி விளையாட்டுத் துறையில் பல்வேறு பணிகள் உள்ளன.

நல்ல கற்பனை வளம் இருக்க வேண்டியது இந்தப் பணியின் ஒரு முக்கிய தேவை. சிறுவர்கள், பதின்வயதினர் போன்றோரின் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியமான தேவை. ஒரு கருவை உருவாக்கி, அதை முழுமைப் படுத்தி சந்தைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பது இந்தப் பணியின் சிரமத்தை விளக்குகிறது.

இந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய வழி இது. ஒரு சின்ன கான்செப்ட் விளையாட்டை உருவாக்க வேண்டியது. அதன் சில பாகங்களை மாடலாக உருவாக்கி அதைப் பயன்படுத்தி வேலையில் நுழைய வேண்டியது. இதற்கென்று பல ஆன்லைன் குழுக்கள், ஃபாரம்கள், இணைய தளங்கள் உள்ளன.

பிடித்ததைச் செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் அருமையானது. விளையாட்டு தானே என்று விளையாட்டாய் நினைக்காதீர்கள், இதில் கிடைக்கும் சம்பளம் மற்ற துறைகளை விட மிக அதிகம்.

 

அனிமேஷன் துறை ( Animation Technology)

 

இன்றைக்கு மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் கணினி சார்ந்த துறைகளில் ஒன்று அனிமேஷன் துறை. இன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே இந்த அனிமேஷனின் கண்ணுக்குத் தப்ப முடியாது. எகிறிக் குதிக்கும் ஹீரோவைக் கட்டியிருக்கும் கயிறை அவிழ்ப்பதானாலும் சரி, பாடலில் பின்னால் வானத்தில் சூரியனை உதிக்கச் செய்வதானாலும் சரி, அணை உடைந்து வெள்ளம் பாய்வதானாலும் சரி, அல்லது ஹைடெக் ரோபோட்டிக் டெக்னிக்கல் ஆனாலும் சரி அனிமேஷன் இல்லாமல் திரைப்படம் இல்லை.

திரைப்படத்தைப் போலவே, விளம்பரங்கள், விளையாட்டுகள், பாடல்கள், இணையப் பக்கங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் அனிமேஷனின் துணையுடன் தான் நடக்கின்றன. இந்த அனிமேஷன் இன்றைக்கு ஒரு படி முன்னேறி முப்பரிமாண அனிமேஷன் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3டி தான் இப்போதைய ஹாட் டிரென்ட் என்று சொல்லலாம்.

பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் தேவை இங்கே இல்லை. ஆனால் கிராபிக்ஸ் டிசைனிங் சார்ந்த ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது ரொம்ப பயனளிக்கும். கூடவே அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், வீடியோ/போட்டோ எடிட்டிங் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்வது கை கொடுக்கும்.

சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது, அது நம்முடைய ரசனையாய் இருக்க வேண்டும். ஒருவகையில் கிராபிக்ஸ் கலையும் அப்படித் தான். ஒரு காட்சியைப் பார்த்ததும் அதை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம், அழகுபடுத்தலாம், மெருகூட்டலாம், மாற்றியமைக்கலாம் என்றெல்லாம் கற்பனைக் குதிரை உங்களுக்குள் ஓடத் துவங்கினால் நீங்கள் இதில் நுழையலாம்.

அனிமேஷன் துறை மிகக் கடுமையான வேலை வாங்கும் துறை. ஆனால் மிக மிக இனிமையான, சுவாரஸ்யமான பணி. தீவிர ஆர்வம் இருக்கிறவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.

 

அட்மின் & ஃபெஸிலிடிஸ் ( Admin and Facilities)

 

இவை நேரடியாக கணினி சார்ந்த பணிகள் அல்ல, ஆனால் ஐடி நிறுவனங்களில் தவறாமல் இருக்கக் கூடிய பணிகள். அலுவலகத்தில் பணியாளர்களின் வேலை சரியாக நடக்க துணை செய்யக் கூடிய ‘சப்போர்டிங்’ வேலையாட்கள் இவர்கள்.

திடீரென ஒரு புது புராஜக்ட் வருகிறது, ஒரு 25 பேர் அமரக் கூடிய இடம் வேண்டும் என்றால் இவர்கள் தான் களத்தில் குதித்து அதற்கான திட்டமிடுதலைச் செய்வார்கள். இருக்கைகள், மேஜைகள், அறைகள், கான்ஃபரன்ஸ் ஹால்கள் என எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வார்கள்.

அலுவலகத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் இவர்கள் மூலமாகத் தான் வரும். அது ஒரு பென்சில் ஆனாலும் சரி, பல இலட்சம் மதிப்புள்ள வீடியோ கான்ஃபரன்சிங் கருவியானாலும் சரி. சில அலுவலகங்களில் அதன் உட் பிரிவாக ‘பொருட்களை வாங்குதல்,பராமரித்தல்’ (Procurement)எனும் ஒரு பிரிவையும் கொண்டிருப்பார்கள்.

அலுவலகப் பணியாளகர்களுக்குத் தேவையான கைபேசிகள், அதன் சேவை சார்ந்த பராமரிப்புகள், அதன் வரவு செலவு மேலாண்மை போன்ற பணிகளும் அட்மின் எனும் பெரிய வகைக்குள் வரும். நிறுவனங்கள் அதற்கென ‘டெலி கம்யூனிகேஷன்’ (Telecommunication Department) அதாவது தகவல் தொடர்பு எனும் ஒரு உட்பிரிவை வைத்துக் கொள்வதும் உண்டு. அது அந்தந்த நிறுவனங்களின் அளவைப் பொறுத்த விஷயம்.

இந்த வேலைகளுக்கு நல்ல கம்யூனிகேஷன், உடலுழைப்பைச் செலுத்தத் தயங்காத மனம், ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை ‘ஃபாலோ’ செய்து முடிக்கும் திறமை போன்றவை முக்கியம். மற்றபடி பட்டப்படிப்புகள் ஏதும் தேவையில்லை.

 

மனிதவளப் பணிகள் ( Human Resources )

 

ஹைச்.ஆர் ஊழியர்கள் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. பணியாளர்கள் ஒரு நல்ல சூழலில் பணியாற்றுவதை ஊர்ஜிதப்படுத்துபவர்கள் இவர்கள். பெரும்பாலும் எம்.பி.ஏ படித்தவர்களே இந்த பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.

நிறுவனங்களில் வரைமுறைகளை வகுப்பதிலும், அதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும், அவர்களுடைய குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதிலும், அவர்கள் பாதுகாப்பான சூழலில் பணிசெய்வதை உறுதி செய்வதிலும் இவர்களுடைய பங்கீடு இருக்கும்.

பணியாளர்களுக்கு இடையே நடக்கும் நிழல் யுத்தம், கிண்டல், வம்பு போன்றவையெல்லாம் வரைமுறை தாண்டும் போது இவர்கள் தான் வந்து சமரம் செய்வார்கள். ஒருவரை எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்திலிருந்து கழற்றி விட இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

சில நிறுவனங்களில், ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் இவர்களே செய்வார்கள். பெரிய நிறுவனங்களெனில் ‘ரிக்ரூட்மென்ட்’ (Recruitment) எனும் ஒரு தனி துறையையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான ஆட்களை நிறுவனத்துக்கு தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் துணை செய்வார்கள்.

நல்ல உரையாடல் திறன் இந்த வேலைக்கு இன்றியமையானது. கூடவே பொறுமையும், நிதானமும், பாகுபாடு காட்டாத தன்மையும் இருக்க வேண்டியது அவசியம்.

 

விற்ப‌னை/விற்ப‌னை உத‌வி ( Sales and Sales Support)

 

சேல்ஸ் & சேல்ஸ் ச‌ப்போர்ட் என‌ப்ப‌டும் ப‌ணி ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளின் முதுகெலும்பான‌ ஒரு ப‌ணி. இத‌ற்கு அனுப‌வ‌ம் உடைய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே தேர்வு செய்ய‌ப்ப‌டுவார்க‌ள். பெரும்பாலும் எம்.பி.ஏ ப‌டித்த‌வ‌ர்க‌ளே இதில் நுழைவார்க‌ள், ஆனாலும் எந்த‌ ப‌ட்ட‌ம் என்ப‌து இங்கே முக்கிய‌ம் இல்லை.

இந்த‌ வேலை மூன்றுக‌ட்ட‌மாக‌ ந‌டைபெறும். ஒவ்வொரு க‌ட்ட‌த்திலும் அத‌ற்குரிய‌ ஸ்பெஷ‌லிஸ்ட் ப‌ணியாற்றுவார்க‌ள். நிறுவ‌ன‌த்துக்கு புதிதாக‌ வேலை வாங்குவ‌து தான் இவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி. ஒரு பிரிவின‌ர் எப்ப‌டியெல்லாம் ஒரு க‌ஸ்ட‌ம‌ரை க‌வ‌ர‌லாம் என்ப‌தைக் குறித்த‌ திட்ட‌மிடுத‌லைச் செய்வார்க‌ள். இவ‌ர்க‌ள் ‘பிரீ சேல்ஸ்” குழுவின‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டுவார்க‌ள். கஸ்டமரை வசீகரிக்கும் விதமான த‌க‌வ‌ல் சேக‌ரிப்புகள், ந‌ம‌து ப‌ல‌ம் என்ன‌, நிறுவ‌ன‌த்தின் த‌னித்துவ‌ம் என்ன‌ என்ப‌தையெல்லாம் அழ‌கான‌ பிர‌ச‌ன்டேஷ‌ன்க‌ள் மூல‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

இர‌ண்டாவ‌து பிரிவின‌ர் அந்த‌ பிர‌ச‌ன்டேஷ‌னை எடுத்துக் கொண்டு போய் நேர‌டியாக‌ க‌ஸ்ட‌ம‌ர் நிறுவ‌ன‌த்தின் மேல‌திகாரிக‌ளைப் பார்த்து அவ‌ர்க‌ளிடம் தமது அருமை பெருமைக‌ளை விள‌க்குப‌வ‌ர்க‌ள். வ‌சீக‌ர‌மாய்ப் பேசி, ந‌ம்பிக்கைக்குரிய‌ வித‌மாய்ப் பேசி, தேவைக்கு ஏற்றப‌டி பேசி நிறுவ‌ன‌த்தின் வ‌ருமான‌த்தைப் பெருக்குப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். விற்பனை ஒப்பந்தம் முடிந்தபின் மூன்றாவது பிரிவினர் களத்தில் குதித்து மற்ற வேலைகளையெல்லாம் கவனித்துக் கொள்வார்கள்.

இவ‌ர்க‌ளுக்கு நிறைய‌ மென்திற‌மைக‌ள் தேவை. உரையாட‌ல் திற‌மை, விவாத‌த் திற‌மை, பேர‌ம் பேசும் திற‌மை, க‌ஸ்ட‌ம‌ரின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் அறிந்து பேசும் திற‌மை, சுருக்க‌மாய்ப் பேசி விள‌ங்க‌ வைக்கும் திற‌மை என‌ ஏராள‌மான‌ மென் திற‌மைக‌ள் தேவை.

‘இவ‌ன் பேசிப் பேசியே ஊரை வித்துடுவான்’ என‌ உங்க‌ளை யாராவ‌து திட்டினால், உங்க‌ளுக்கு இந்த‌ வேலை ஒருவேளை செட் ஆக‌லாம் என‌ நினைத்துக் கொள்ளுங்க‌ள்.

 

Sony And Google Unveil Internet TV Set

5

வெப் டிசைனர்கள். ( Web Designers)

இணைய தளங்களை வடிவமைக்கும் பணி செய்பவர்கள் தான் வெப் டிசைனர்கள். நிறுவனத்தின் தேவைக்கேற்ப இவர்களுடைய பணி இருக்கும்.சில நிறுவனங்கள் வெப் டிசைனிங் பணியை முதன்மையாக வைத்துச் செயலாற்றுவதும் உண்டு.

கஸ்டமர்களுடைய தேவைக்கேற்ப அவர்களுடைய வலைத்தளங்களைப் புதிதாக வடிவமைப்பதோ, அல்லது இருக்கும் வலைப்பக்கங்களில் மாற்றங்களைச் செய்வதோ தான் இவர்களுடைய பணி. வலைத்தளங்களில் உள்ள கிராபிக்ஸ் வேலைகள் முதல், இணைய தளத்தின் செயல்பாடுகள் வரை இவர்களுடைய பணியில் அடங்கும்.

வெப் டிசைனர்களின் பணி பெரும்பாலும் வெப் டெவலப்பர்களுடன் இணைந்தே இருக்கும். இணைய தளத்தை வடிவமைப்பது டிசைனர்களின் பணி என்றால், அதன் பின்னணியில் இருக்கும் தகவல் பரிமாற்றம் செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவது இணைய தள டெவலப்பர்களின் பணியாக இருக்கும்.

வெப் டிசைனர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் அதிகரித்திருக்கிறது. தொடுதிரைக்கேற்ற வலைத்தளங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. எனவே டிசைனிங் வேலையில் விருப்பம் இருப்பவர்கள் தைரியமாக அந்தத் துறையில் கால் வைக்கலாம்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பானது என்றாலும் மற்ற பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு. வெப் டிசைனிங் மீது ஆர்வமும், ரசனையும், விருப்பமும் இருக்க வேண்டியது அவசியம்.

 

மொபைல் டெவலப்பர்கள் (Mobile Developers)

இன்றைக்கு கணினிகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே இன்றைக்கு மொபைல் டெவலப்பர்கள், மொபைல் டெஸ்டர்கள் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

டேப்லெட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கான மென்பொருள் கட்டுமானத்துக்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. எந்த கருவியில் வேண்டுமானாலும் இயங்கக் கூடிய கருவி சாரா மென்பொருட்கள் தயாரிப்பது ஒரு வகை. ஒவ்வொரு கருவிக்கும் தக்கபடியான மென்பொருட்களைத் தயாரிப்பது இன்னொரு வகை. இரண்டு வகையான பணிகளுக்கும் வரவேற்பு உண்டு.

அதே போல மொபைல் சார்ந்த சோதனைகளுக்கும் பல மென்பொருட்கள் உள்ளன, அவற்றைக் கற்று சான்றிதழ் பெறுவது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மொபைல்களுக்கான ஆப்ஸ்களைத் தயாரிப்பது இன்றைக்கு மிகவும் பரபரப்பான ஒரு பணி. திறமை இருந்தால் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம். சம்பளமும் அதிகம், புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் மன நிறைவும் கிடைக்கும்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது மொபைல் டெவலப்பர்களுக்கான அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. மொபைல் டெவலப்மென்ட் அல்லது டெஸ்டிங் மென்பொருளில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.

நவீன தொழில்நுட்பங்கள் (Emerging Technologies )

எமர்ஜிங் டெக்னாலஜீஸ் எனும் பிரிவில் அதி நவீன தொழில் நுட்பங்கள் வருகின்றன. கணினி பட்டப்படிப்புடன் இத்தகைய ஒரு அதி நவீன ஏரியாவில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது ஐடி துறையில் நுழைவதற்கான வாய்ப்பை வெகுவாக அதிகரிக்கும்.

கிளவுட் கம்யூட்டிங், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட், ரோபோட்டிக்ஸ், மொபிலிடி போன்றவையெல்லாம் இந்த நவீன தொழில்நுட்பக் குடையின் கீழ் வருகின்றன. இவற்றைக் குறித்து தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வதும், அது சார்ந்த ஒரு சான்றிதழைப் பெறுவதும், செமினார்களில் பங்கு பெறுவதும் உங்களை அத்தகைய துறையில் பணிசெய்ய தகுதியுடையவர்களாக மாற்றும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது இதன் அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கற்றுக் கொள்ளும் ஆர்வமும், புதியவற்றில் பணி செய்யும் தேடலும் இருப்பவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.

 

மெயின்ட‌னென்ஸ் அன்ட் ச‌ப்போர்ட் (Maintenance and Production Support )

மென்பொருளை உருவாக்குபவர்கள், அவற்றை தரப் பரிசோதனை செய்பவர்களைப் போல அந்த மென்பொருள் கஸ்டமரிடம் சென்றபிறகு அதைப் பராமரிப்பதும், அதில் வருகின்ற சிக்கல்களைக் கவனிப்பதும், சரி செய்வதும் இந்த குழுவினரின் பணியாக இருக்கும்.

டெவலப்பர், டெஸ்டர்களை விட சற்றே எளிமையான பணி. ஆனால் மிகவும் கவனமாக கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டிய பணி இது. பெரும்பாலும் இந்த துறையில் பகல் இரவு என மாறி மாறி உழைக்க வேன்டிய கட்டாயம் இருக்கும். காரணம், மென்பொருளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டி இருப்பது தான்.

கணினி பட்டம் இல்லாதவர்கள் கூட இந்த துறையில் நுழைய முடியும். ஏதோ ஒரு பட்டப்படிப்பு. கூடவே கணினி சார்ந்த ஒரு பயிற்சி இருந்தாலே இந்தத் துறையில் முயற்சி செய்யலாம்.

 

 

கணினி துறையில் இருக்கும் இந்த வேலைகளைப் பெறுவது எப்படி ? பெரும்பாலான நிறுவனங்கள் கீழ்க்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.

 

  1. ரெஸ்யூம் அல‌ச‌ல்.

 

ஐடி நிறுவ‌ன‌ங்க‌ள் ஒரு ந‌ப‌ரைத் தேர்வு செய்ய‌ முத‌லில் வாசிப்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ ப‌யோடேட்டாவைத் தான். அந்த‌ ப‌யோடேட்டா ஒரு அழ‌கான‌ விள‌ம்ப‌ர‌ம் போல‌ சுருக்க‌மாக‌, நேர்த்தியாக‌, சொல்ல‌ வ‌ந்த‌ விஷ‌ய‌த்தை ப‌ளிச் என‌ சொல்வ‌தாக‌ இருக்க‌ வேண்டும். முக்கியமாக முத‌ல் ப‌க்க‌த்தில் உங்க‌ள் ப‌ல‌ம், சான்றித‌ழ்க‌ள், ம‌திப்பெண் விப‌ர‌ம், விருதுக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிக‌ நேர்த்தியாக‌ எழுதி வையுங்க‌ள். வாசிப்ப‌வ‌ர்க‌ளை ப‌த்து முத‌ல், ப‌தினைந்து வினாடிக‌ளுக்குள் உங்க‌ள் ப‌யோடேட்டா க‌வ‌ர‌ வேண்டும் என்ப‌து அடிப்ப‌டை சிந்த‌னையாக‌ இருக்க‌ட்டும்.

 

  1. டெலிபோனிக் இன்ட‌ர்வியூ

 

ப‌யோடேட்டாவில் பிடித்த‌மான‌தைத் தேர்வு செய்த‌பின் நிறுவ‌ன‌ங்க‌ள் அந்த‌ ந‌ப‌ர்க‌ளை தொலைபேசியில் அழைத்து பேசுவ‌து வ‌ழ‌க்க‌ம். சில‌ துவ‌க்க‌ நிலை வேலைக‌ளுக்கு இது ந‌டைபெறாம‌லும் இருக்க‌லாம். ஒருவேளை போனில் பேச‌வேண்டிய‌ சூழ‌ல் உருவானால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள். டெலிபோனில் பேசியே ஆட்க‌ளை வேலைக்குத் தேர்வு செய்வ‌து ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். என‌வே டெலிபோனிக் இன்ட‌ர்வியூவில் அல‌ட்சிய‌மாய் இருக்க‌ வேண்டாம். உங்க‌ள் உட‌ல்மொழி அவ‌ர்களால் பார்க்க‌ முடியாது என்ப‌தால் குர‌ல் மிக‌த் தெளிவாக‌, நிதான‌மாக‌ இருக்க‌ட்டும். ச‌த்த‌ம் இல்லாத‌ சூழ‌லில் நின்று பேசுங்க‌ள். கேள்விக‌ளில் ச‌ந்தேக‌ம் இருந்தால் கேட்டு நிவ‌ர்த்தி செய்து கொள்ளுங்க‌ள். ப‌திலை சுருக்க‌மாக‌ச் சொல்லுங்க‌ள்.

 

  1. எழுத்துத் தேர்வு

 

இந்த‌ எழுத்துத் தேர்வு பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளில் உண்டு. அதுவும் ஆர‌ம்ப‌ நிலை ஊழிய‌ர்க‌ளுக்கு இது நிச்ச‌ய‌ம் உண்டு. இந்த‌ எழுத்துத் தேர்வு இர‌ண்டு க‌ட்ட‌மாக‌ இருக்கும். ஒன்று ஆப்டிடியூட் டெஸ்ட் என‌ப்ப‌டும் உங்க‌ளுடைய‌ சிந்த‌னைக் கூர்மையைச் சோதிக்கும் தேர்வு. இன்னொன்று தொழில்நுட்ப‌ அறிவைச் சோதிக்கும் தேர்வு. இர‌ண்டுக்குமான‌ மாதிரிக‌ள் இணைய‌த்தில் எக்க‌ச்ச‌க்க‌மாக‌ இருக்கின்ற‌ன‌. நிதான‌மாய்ப் ப‌யிற்சி எடுங்க‌ள்.

 

  1. குழு உரையாட‌ல்.

 

ஆங்கில‌த்தில் குரூப் டிஸ்க‌ஷ‌ன் என‌ அழைக்கப்படும் இந்த‌ உத்தி, இருக்கின்ற‌ பெரிய‌ குழுவிலிருந்து திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ளைப் பொறுக்கி எடுக்கும் எளிய‌ வ‌ழிமுறை. இந்த‌ குழு உரையாட‌லில் தைரிய‌மாக‌, தெளிவாக‌ பேச‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். அத‌ற்கு ந‌ல்ல‌ க‌ம்யூனிகேஷ‌ன் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். கொடுத்திருக்கும் த‌லைப்பில் பேசுவ‌து, குழுவின‌ரோடு க‌ல‌ந்து பேசுவ‌து, உட‌ல் மொழியை பாசிடிவாக‌ வைத்துப் பேசுவ‌து போன்ற‌வையெல்லாம் உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் ம‌திப்பெண்க‌ளைப் பெற்றுத் த‌ரும். உங்க‌ள் தைரிய‌ம், மொழி ஆளுமை, த‌லைமைப் ப‌ண்பு, குழுவோடு இணைந்து செய‌ல்ப‌டும் வித‌ம் இவையே பெரிதும் க‌வ‌னிக்க‌ப்ப‌டும். என‌வே தெரியாத‌ த‌லைப்பென்றால் கூட‌ இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு பேசுங்க‌ள்.

 

  1. நேர்முக‌த் தேர்வு

 

மிக‌ மிக‌ முக்கிய‌மான‌ க‌ட்ட‌ம் இந்த‌ நேர்முக‌த் தேர்வு. இங்கே நீங்க‌ள் த‌ன்ன‌ம்பிக்கையாய்க் காட்சிய‌ளிக்க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம். நேர்த்தியான‌ ஆடை. நேர‌ம் த‌வ‌றாமை. ப‌த‌ட்ட‌மில்லாத‌ ப‌தில்க‌ள் இவையெல்லாம் அவ‌சிய‌ம். நேர்முக‌த் தேர்வு என்ப‌து போலீஸ் குற்ற‌வாளியை விசாரிக்கும் இட‌ம‌ல்ல‌. உங்க‌ள் திற‌மை நிர்வாக‌த்துக்குப் ப‌ய‌ன்ப‌டுமா என்ப‌தை நிர்வாக‌ம் பார்ப்பதற்கும், இந்த‌ நிறுவ‌ன‌ம் ந‌ம‌க்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ருமா என‌ நாம் அறிந்து கொள்வ‌த‌ற்குமான‌ ஒரு உரையாட‌ல் என்றே வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌ ம‌ன‌நிலையில் இய‌ல்பாக‌ப் பேசுங்க‌ள்.

  1. ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூ.

மிக‌ எளிதாக‌வும், அதே நேர‌ம் க‌ணிக்க‌ முடியாத‌தாக‌வும் ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூக்க‌ள் இருக்கும். இங்கே தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ கேள்விக‌ள் ஏதும் இருக்காது. இங்கே உங்க‌ளுடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ள் தான் சோதிக்க‌ப்ப‌டும். நீங்க‌ள் நேர்மையான‌ ந‌ப‌ரா ?, நிறுவ‌ன‌த்தின் வ‌ள‌ர்ச்சியில் உத‌வுவீர்க‌ளா ? தெளிவான‌ கொள்கை வைத்திருக்கிறீர்க‌ளா ? வாழ்க்கையில் எதையெல்லாம் முத‌ன்மைப்ப‌டுத்துகிறீர்க‌ள் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை நேர‌டியாக‌க் கேட்டும் கேட்காம‌லும் இங்கே க‌ண்ட‌றிவார்க‌ள். குணாதிச‌ய‌ம் உங்க‌ளோடு பின்னிப் பிணைந்த‌து. அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள்.

இந்த‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள்.

வெற்றி வ‌ச‌மாகும். வாழ்த்துக‌ள்.

 

 

 

செல்ஃபி ! : Selfie ( Daily Thanthi Article )

kid
இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள்  செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌.

பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்ஃபி த‌னிய‌றைக‌ள் வ‌ரை நீள்கிற‌து. போனைக் கையில் எடுத்து வித‌வித‌மான‌ முக‌பாவ‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளைக் கிளிக்கிக் கொள்ளும் க‌லாச்சார‌ம் எல்லா இட‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டுகிற‌து.

“கேம‌ரால‌ த‌ன்னைத் தானே போட்டோ எடுக்கிற‌துல‌ என்ன‌ பிர‌ச்சினை” என்ப‌து தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் எழும் கேள்வியாக‌ இருக்கும். ஆனால் அது அத்த‌னை எளிதில் க‌ட‌ந்து போக‌க் கூடிய‌ விஷ‌ய‌ம் அல்ல‌ என்கிறார் உள‌விய‌லார் டேவிட் வேல். அத‌ற்கு அவ‌ர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்ட‌ர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.

பி.டி.டி என்ப‌து “தான் அழ‌காய் இல்லை, த‌ன‌க்கு ஏதோ ஒரு குறை இருக்கிற‌து என‌ ஒருவ‌ர் ந‌ம்புவ‌து. த‌ன்னுடைய‌ முக‌ம் ச‌ரியாக‌ இல்லை, த‌லை முடி ச‌ரியாக‌ இல்லை, மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, காது கொஞ்ச‌ம் பெரிசு என்றெல்லாம் த‌ன்னைப் ப‌ற்றி தாழ்வாய்க் க‌ருதிக் கொள்வ‌து. இந்த‌ பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து என்கிறார் அவ‌ர்.

இந்த‌ குறைபாடு இருப்ப‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌ங்க‌ளை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்க‌ள். அப்புற‌ம் அதை எடிட்ட‌ரில் போட்டு ச‌ரி செய்து பார்ப்பார்க‌ள், மீண்டும் எடுப்பார்க‌ள், மீண்டும் ட‌ச் அப் செய்வார்க‌ள். இப்ப‌டியே அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலையிலிருந்து தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலை வ‌ரைக்கும் நீள்கிற‌து.

“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த‌ பாதிப்பின் உச்ச‌த்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தின‌மும் ப‌த்து ம‌ணி நேர‌ம் செல்ஃபி எடுக்க‌வே செல‌வ‌ழிப்பாராம். ஒரு ப‌க்கா போட்டோ எடுத்தே தீருவேன் என‌ தொட‌ர்ந்து ப‌ட‌ம் பிடித்துப் பிடித்து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போவ‌தை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல‌, ஆறு மாத‌ கால‌ங்க‌ள் இப்ப‌டியே போயிருக்கிற‌து. இப்ப‌டியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிற‌து. ஆனாலும் அவ‌ருக்கு “க‌ட்சித‌மான‌ செல்ஃபி” சிக்க‌வில்லை !

க‌டைசியில் ஒருநாள் “ஒரு மிக‌ச் ச‌ரியான‌ செல்ஃபி கிடைக்க‌வே கிடைக்காது” எனும் முடிவுக்கு வ‌ந்திருக்கிறார். அந்த‌ முடிவு அவ‌ரை த‌ற்கொலை முய‌ற்சிக்கு இட்டுச் செல்ல‌, ப‌த‌றிப்போன‌ பெற்றோர் அவ‌ரை உள‌விய‌லார் டேவிட் வேலிட‌ம் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில்,  66% பேர் செல்ஃபி பாதிப்புட‌ன் இருக்கிறார்க‌ள் என்கிறார் அவ‌ர். செல்ஃபி எடுக்க‌ வேண்டும் என‌ உள்ளுக்குள் ப‌ர‌ப‌ர‌வென‌ ம‌ன‌ம் அடித்துக் கொள்வ‌து உள‌விய‌ல் பாதிப்பு என‌ அடித்துச் சொல்கிறார் அவ‌ர்.

செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உற‌வுச் சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌ என ஆய்வுக‌ள் சொல்கின்ற‌ன‌. “டேக‌ர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிற‌து. அதிக‌மாய் செல்ஃபி எடுத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் போடுவோர்க‌ள் ச‌க‌ ம‌னித‌ உற‌வுக‌ளில் ப‌ல‌வீன‌மாய் இருப்பார்க‌ள் என‌ அந்த‌ ஆய்வு கூறுகிற‌து.

அதிக‌மாக‌ செல்ஃபி எடுக்கும் ம‌ன‌நிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவ‌ர்க‌ள் செல்ஃபிட்டீஸ் என‌ பெய‌ரிட்டு அழைக்கின்ற‌ன‌ர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.

சில‌ஒரு நாள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்ட‌ர்லைன் செல்ஃபிட்டிஸ் !

சில‌ர் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்க‌ளை எடுத்து, மூன்றையுமே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்து எத்த‌னை லைக் வ‌ருகிற‌து, யார் என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதைக் க‌வ‌னித்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என‌ பெய‌ர்.

சீரிய‌ஸ் வ‌கை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் ! இவ‌ர்க‌ள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்ப‌டியே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், குழுக்க‌ளில் ப‌திவு செய்து கொண்டே இருப்பார்க‌ள்.

இதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்ப‌தே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அள‌வுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ந‌ஞ்சு என்ப‌து ம‌ட்டுமே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

இந்த‌ செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் ஏதோ க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளில் தோன்றிய‌து என்று தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் நினைக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ செல்பி ஆர‌ம்பித்து 175 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து என்ப‌து தான் விய‌ப்பூட்டும் விஷ‌ய‌ம். !

ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌தா !! அது தான் உண்மை. முத‌ன் முத‌லாக‌ செல்ஃபி எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்டு 1839. எடுத்த‌வ‌ர் பெய‌ர் ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸ்

Week 2

kid

உல‌கின் முத‌ல் செல்ஃபி எடுத்த‌வ‌ர் எனும் பெருமை இப்போதைக்கு ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸிட‌ம் தான் இருக்கிற‌து. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேம‌ராவை ஸ்டான்டில் நிற்க‌ வைத்துவிட்டு அத‌ன் முன்ப‌க்க லென்ஸ் மூடியைத் திற‌ந்தார். பிற‌கு ஓடிப் போய் கேம‌ராவின் முன்னால் அசையாம‌ல் ஒரு நிமிட‌ம் நின்றார். பிற‌கு மீண்டும் போய் கேம‌ராவின் கதவை மூடினார். பின்ன‌ர் அந்த‌ பிலிமை டெவ‌ல‌ப் செய்து பார்த்த‌போது கிடைத்த‌து தான் உல‌கின் முத‌ல் செல்ஃபி !

ஆனால் முத‌ன் முத‌லில் செல்ஃபி எனும் வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர் எனும் பெருமை அவ‌ருக்குக் கிடைக்க‌வில்லை. அது நாத‌ன் ஹோப் என்ப‌வ‌ருக்குக் கிடைத்த‌து. 2002ம் ஆண்டு அவ‌ருக்கு ஒரு சின்ன‌ விப‌த்து. விப‌த்தில் அடிப‌ட்ட‌ உத‌டுக‌ளோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அவ‌ர் த‌ன‌து அடிப‌ட்ட‌ உத‌டைப் ப‌ட‌ம்பிடித்தார். அதை இணைய‌த்தில் போட்டார். “ஃபோக‌ஸ் ச‌ரியா இல்லாத‌துக்கு ம‌ன்னிச்சுக்கோங்க‌, இது ஒரு செல்ஃபி, அதான் கார‌ண‌ம்” என்று ஒரு வாச‌க‌மும் எழுதினார். ஆனால் ச‌த்திய‌மாக‌ அந்த‌ வார்த்தை இவ்வ‌ள‌வு தூர‌ம் பிர‌ப‌ல‌மாகும் என‌ அவ‌ரே நினைத்திருக்க‌ வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த‌ வார்த்தை பிர‌ப‌ல‌மாக‌ ஆர‌ம்பித்த‌தும் அதை ஆங்கில‌ அக‌ராதியிலும் சேர்த்தார்க‌ள். “ஒருவ‌ர் டிஜிட‌ல் கேம‌ரா மூல‌மாக‌வோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்ப‌க்க‌ கேம‌ரா போன்ற‌ எத‌ன் மூல‌மாக‌வோ, த‌ன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்ப‌ட‌ம்” என‌ இத‌ற்கு ஒரு விள‌க்க‌த்தையும் அக‌ராதி கொண்டிருக்கிற‌து.

2012ம் ஆண்டு உல‌க‌ப் புக‌ழ்பெற்ற‌ டைம் ப‌த்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”.  2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அக‌ராதி “செல்ஃபியே இந்த‌ ஆண்டின் புக‌ழ்பெற்ற‌ வார்த்தை” என‌ அறிவித்த‌து.

ஆஸ்திரேலிய‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் முத‌ன் முத‌லில் இந்த‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் இந்த‌ வார்த்தையின் மூல‌ம் ஆஸ்திரேலியா என்று ப‌திவான‌து. 10 வ‌ய‌துக்கும் 24 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளில் 30 ச‌த‌வீத‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் சேர்கின்ற‌ன‌ என்கிற‌து ஒரு புள்ளி விவ‌ர‌ம்.

செல்ஃபியின் புக‌ழ் ப‌ர‌வுவ‌தைக் கேள்விப்ப‌ட்ட‌தும் செல்ஃபி என்றொரு ஆப்‍ ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து. முன்ப‌க்க‌ கேம‌ரா மூல‌மாக‌ எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே ப‌கிர‌ முடியும் என்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். ஒரு செல்ஃபிக்கு க‌மென்ட் கொடுக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க‌ முடியும். வேறு எதையும் எழுத‌ முடியாது. இந்த‌ ஆப்ளிகேஷ‌ன் ப‌தின் வ‌ய‌தின‌ரிடையே தீயாய்ப் ப‌ர‌விய‌து !

செல்ஃபி இப்ப‌டி இள‌சுக‌ளின் இத‌ய‌ங்க‌ளில் ப‌ற்றி எரிந்து கொண்டிருந்த‌ போது குர‌ங்கு எடுத்த‌ செல்ஃபி ஒன்று க‌ட‌ந்த‌ ஆண்டு மிக‌ப்பெரிய‌ பேசுபொருளாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க்கார‌ர் டேவிட் ஸ்லேட்ட‌ருக்குச் சொந்த‌மான‌ கேம‌ராவில் ப‌திவான‌ அந்த‌ ப‌ட‌த்தை, இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌திவு செய்திருந்த‌ன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இத‌னால் த‌ன‌க்கு பத்தாயிர‌ம் ப‌வுண்ட் ந‌ஷ்ட‌ம் என‌ வ‌ழ‌க்குப் ப‌திவு செய்தார் ஸ்லேட்ட‌ர்.

நீதிம‌ன்ற‌மோ இந்த‌ வ‌ழ‌க்கை விசித்திர‌மாய்ப் பார்த்த‌து. க‌டைசியில் அல‌சி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்க‌ள். “வில‌ங்குக‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌த்துக்கு ம‌னித‌ர்க‌ள் சொந்த‌ம் கொண்டாட‌ முடியாது”. அப்ப‌டி வில‌ங்கு செல்ஃபியும் உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை.

எது எப்ப‌டியோ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளுக்குச் ச‌ரியான‌ தீனி போட்டுக்கொண்டிருப்ப‌வை இந்த‌ செல்ஃபிக்க‌ள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளை மைய‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌து. அதில் 5.3 கோடி புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌. ஃபேஸ்புக், டுவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளிலும் செல்ஃபி ப‌ட‌ங்க‌ளும், குறிப்புக‌ளும் எக்க‌ச்ச‌க்க‌ம்.

86 வ‌து ஆஸ்க‌ர் விருது விழாவில் க‌லைஞ‌ர்க‌ளுட‌ன் எல‌ன் டிஜென‌ர்ஸ் எடுத்த‌ செல்ஃபி ஒன்று உல‌கிலேயே அதிக‌ முறை ரீ‍டுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் எனும் பெய‌ரைப் பெற்ற‌து. 3.3 மில்லிய‌ன் முறை அது ரீடுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌து !

இள‌சுக‌ளின் பிரிய‌த்துக்குரிய‌ விஷ‌ய‌ம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி ம‌ற்ற‌ நிலைக‌ளுக்கும் வெகு விரைவில் ப‌ர‌வியிருப்ப‌தையே இது காட்டுகிற‌து. நெல்ச‌ன் ம‌ண்டேலாவின் நினைவிட‌த்தில் உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ஒபாமா எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், த‌ன‌து அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளுட‌ன் சுவிஸ் அர‌சு எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் என‌ செல்ஃபியின் த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் ப‌ர‌விவிட்ட‌ன‌. எல்லாவ‌ற்றுக்கும் முத்தாய்ப்பாய் ச‌மீப‌த்தில் போப் ஆண்ட‌வ‌ரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்ட‌து விய‌ப்புச் செய்தியாய்ப் பேச‌ப்ப‌ட்ட‌து !

ப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் முத‌ல், போப் ஆண்ட‌வ‌ர் வ‌ரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேம‌ராக்க‌ள் ப‌திவு செய்திருக்கின்ற‌ன‌. 47 ச‌த‌வீத‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று ! அதிலும் ஆண்க‌ளை விட‌ செல்ஃபி மோக‌ம் பெண்க‌ளைத் தான் அதிக‌ம் பிடித்திருக்கிற‌தாம்.

பிலிப்பைன்ஸ் ந‌க‌ர‌ம் தான் செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌தாம். உல‌கிலேயே ந‌ம்ப‌ர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெய‌ர் அத‌ற்குக் கிடைத்திருக்கிற‌து.

செல்ஃபியின் ப‌ய‌ன்பாடும், சுவார‌ஸ்ய‌ங்க‌ளும் உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ப‌து ப‌த‌ற‌டிக்கும் செய்தியாகும்.

Week 3

kid

செல்ஃபி என்றாலே சுவார‌ஸ்ய‌ம் என‌ நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் ப‌றிக்கும் ஆப‌த்தும் நிர‌ம்பியிருக்கிற‌து என்பது தான்  ப‌த‌ற‌டிக்கும் செய்தி.

செல்ஃபிக்கு ர‌சிக‌ர்க‌ளாக‌ மாறியிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் இள‌ வ‌ய‌தின‌ர் தான். அவ‌ர்க‌ளுடைய‌ இள‌ இர‌த்த‌ம் துடிப்பான‌து. அத‌னால் த‌ங்க‌ள் செல்ஃபியில் அதிர‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் துடிக்கிறார்க‌ள். ப‌ல‌ வேளைக‌ளில் அது ஆப‌த்தான‌தாக‌ முடிந்து விடுகிற‌து.

ஸெனியா ப‌தினேழு வ‌ய‌தான‌ ப‌தின்ப‌ருவ‌ப் பெண். செல்ஃபி மோக‌ம் பிடித்து இழுக்க‌ 30 அடி உய‌ர‌ ரெயில்வே பால‌த்தில் ஏறினாள். ஒரு அழ‌கான‌ செல்ஃபி எடுத்தாள். துர‌திர்ஷ்ட‌ம் அவ‌ளுடைய‌ காலை வ‌ழுக்கி விட‌ கீழே விழுந்த‌வ‌ளுக்கு 1500 வாட்ஸ் மின்சார‌ வ‌ய‌ர் எம‌னாய் மாறிய‌து. ஆப‌த்தான‌ செல்ஃபி அவ‌ளுடைய‌ ஆயுளை முடித்து வைத்த‌து ! செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

காட்டுக்குள்ளே ஆப‌த்தான வில‌ங்குக‌ளைப் பார்க்கும்போது அதைப் பின்ன‌ணியில் விட்டு செல்ஃபி எடுப்ப‌து, டொர்னாடோ சுழ‌ற்காற்று சுழ‌ற்றிய‌டிக்கும் போது அத‌ன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்ப‌து, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உய‌ர‌மான‌ இட‌ங்க‌ளில் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம‌ர‌ண‌ம் எனும் சூழ‌லில் ப‌ட‌ம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என‌ செல்ஃபியை வைத்து ஆப‌த்தை அழைப்ப‌து இன்றைக்குப் ப‌ர‌வி வ‌ருகிற‌து.

கார‌ண‌ம் அத‌ற்குக் கிடைக்கும் ஆத‌ர‌வு. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் பகிரும்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ லைக் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே உயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து இத்த‌கைய‌ விளையாட்டுக‌ளில் ஈடுப‌டுகின்ற‌னர்.

இப்ப‌டி எடுக்க‌ப்ப‌டும் செல்ஃபிக்க‌ள் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு என்ப‌து இன்னும் ஊக்க‌ம் ஊட்டுகிற‌து. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் த‌லையின் நின்று லீ தாம்ச‌ன் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், போர்விமான‌த்திலிருந்து விமானி ஒருவ‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌ர்வ‌தேச‌ வான்வெளி நிலைய‌த்திலிருந்து விண்வெளி வீர‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌வுத் வ‌ங்கி உச்சியில் தொங்கியப‌டி கிங்ஸ்ட‌ன் எடுத்த‌ செல்பி என‌ ப‌த‌ற‌டிக்கும் செல்ஃபிக்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ப் பெரிது.

மொபைல்க‌ளில் எடுக்க‌ப்ப‌டும் புகைப்ப‌ட‌ங்க‌ளால் பாதுகாப்புக்கு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் என‌ எச்ச‌ரிக்கின்ற‌து அமெரிக்க‌ காவ‌ல்துறை. உங்க‌ளுடைய‌ ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்க‌ள் எங்கே இருக்கிறீர்க‌ள் என்பதை ஒருவர் துல்லிய‌மாய்க் க‌ண்டுபிடித்துவிடும் ஆப‌த்து உண்டு.

உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் உங்க‌ள் நான்கு தோழிய‌ருட‌ன் க‌ண்காணாத‌ காட்டுப் ப‌குதியில் இருக்கிறீர்க‌ள் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ஐந்து தோழிய‌ரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்க‌ள். பின்ன‌ணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த‌ புகைப்ப‌ட‌த்தை வைத்துக் கொண்டு ஒருவ‌ர் உங்க‌ள் இருப்பிட‌த்தை க‌ண்டுபிடித்து விட‌ முடியுமாம். அதெப்ப‌டி ?

ஸ்மார்ட் போன்க‌ளில் ஜி.பி.எஸ் பின்ன‌ணியில் இய‌ங்கிக் கொண்டே இருக்கும். அது உங்க‌ளுடைய‌ இருப்பிட‌த்தை உங்கள் புகைப்ப‌ட‌ங்க‌ளில் ரகசியக் குறியீடுகளாகப் ப‌திவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள்.  அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை ஒருவ‌ர் ட‌வுன்லோட் செய்து அத‌ற்கென்றே இருக்கும் சில‌ மென்பொருட்க‌ளில் இய‌க்கும் போது அந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விலாச‌ம் கிடைத்து விடுகிற‌து. சில‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள் கூட‌ இந்த‌ டீகோடிங் வேலையைச் செய்து த‌ருகின்ற‌ன‌.

“வீட்ல‌ த‌னியா போர‌டிக்குது” என‌ நீங்க‌ள் ஒரு செல்ஃபி போட்டால் உங்க‌ள் விலாச‌த்தைக் க‌ண்டுபிடித்து ஒருவ‌ர் உங்க‌ளை தொந்த‌ர‌வு செய்யும் சாத்திய‌ம் உண்டு என்ப‌து புரிகிற‌த‌ல்ல‌வா? ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌சீக‌ர‌ அழைப்புக‌ள‌ல்ல‌வா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். என‌வே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுங்க‌ள் என‌ அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஆப‌த்துக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டாலும், ம‌ருத்துவ‌த்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷ‌ய‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. குறிப்பாக‌ “செல்ஃபி வீடியோ” வை ம‌ருத்துவ‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ருடைய‌ பேச்சு, அசைவு போன்ற‌வ‌ற்றைப் ப‌திவு செய்து அதை ம‌ருத்துவ‌ ஆய்வுக்கு உட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் ஒருவ‌ருடைய‌ குறைபாடுக‌ளைக் க‌ண்டுபிடித்துச் ச‌ரிசெய்யும் முறை இப்போது வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.

இதையே பேச்சுக்க‌லையை வ‌ள‌ர்க்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளும் பயன்படுத்தலாம். குறிப்பாக‌ ஒருவ‌ருடைய‌ மொழி உச்ச‌ரிப்பு, ச‌த்த‌ம், தொனி, தெளிவு போன்ற‌ அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் ப‌திவு செய்து அத‌ன் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து பேச்சை எந்த‌ வித‌த்தில் மாற்ற‌ வேண்டும் என்ப‌தைக் க‌ண்டு பிடித்து ச‌ரி செய்ய‌ முடியும்.

இப்போதெல்லாம் வ‌ச‌தியாக‌ செல்ஃபி எடுக்க‌ “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிற‌து. நீள‌மான‌ குச்சி போன்ற‌ க‌ருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்க‌லாம். அந்த‌ குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் ப‌ட்ட‌னை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இத‌ன் மூல‌ம் குழுவின‌ராக‌ செல்ஃபி எடுப்ப‌து எளிதாகிவிடுகிற‌து. 2000 ர‌ஃபிக்க‌ள் நியூயார்க் ந‌க‌ரில் குழுமியிருந்த‌போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் செல்ஃபி மிக‌ப்பிர‌ப‌ல‌ம். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ செல்ஃபி குச்சியின் நீள‌ம் முப்ப‌து அடி !!!

செல்ஃபியின் மூல‌ம் பெரிய‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு கூட‌ க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து ! த‌ன‌து ந‌ண்ப‌னையே கொலை செய்து, அந்த‌ உட‌லுட‌னே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட‌ ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவ‌ன் அந்த‌ செல்ஃபி எடுக்காம‌ல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காம‌லேயே போயிருப்பான்.

இப்ப‌டி குற்ற‌ம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய‌ ப‌ல‌ரின் சுவார‌ஸ்ய‌க் க‌தைக‌ள் காவ‌ல்துறை அறிக்கைக‌ளில் இருக்கின்ற‌ன‌.

Week :4

 

kid

செல்ஃபி எடுப்ப‌து முன் கால‌த்தில் மிக‌ப்பெரிய‌ ச‌வாலான‌ விஷ‌ய‌மாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க் க‌லைக்கு முன்பு த‌ன்னைத் தானே ப‌ட‌ம் வ‌ரைந்து கொள்வதை வான்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ ஓவிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர். இவ‌ற்றை ஒருவ‌கையில் செல்ஃபி ஓவிய‌ம் என‌ வ‌கைப்ப‌டுத்த‌லாம்.

கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, கேம‌ராக்க‌ளின் அறிமுக‌ம் வ‌ந்த‌பின் அவை அவ்வ‌ப்போது ஆங்காங்கே நிக‌ழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. உட‌ன‌டி பிரிண்ட் போட்டுத் த‌ரும் போல‌ராய்ட் கேம‌ராக்க‌ள் வ‌ந்த‌பின் செல்ஃபிக‌ள் எடுப்ப‌து கொஞ்ச‌ம் எளிதாக‌ மாறிப் போன‌து.

இன்றைய‌ மொபைல் போன் கேம‌ராக்க‌ள் இந்த‌ செல்ஃபி எடுப்ப‌தை மிக‌வும் எளிதாக்கிய‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ச‌க‌ட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் த‌ள்ளுவ‌தையும் சாத்திய‌மாக்கியிருக்கிற‌து. அதுவும் செல்போனில் முன்ப‌க்க‌க் கேம‌ரா வ‌ந்த‌பின் செல்ஃபிக்க‌ள் சிற‌குக‌ட்டிப் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருக்கின்ற‌ன‌.

செல்ஃபிக்க‌ளின் அதிக‌ரிப்பு அதை அதிக‌மாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளிடையே அதீத‌ த‌ற்பெருமை, த‌ன்னைப் ப‌ற்றி மிக‌ உயர்வாய் நினைத்த‌ல், அடுத்த‌வ‌ர்க‌ளை விட‌ தான் உய‌ர்ந்த‌வ‌ன் எனும் நினைப்பு போன்ற‌வை அதிக‌ரிக்கும் என‌ ஆராய்ச்சியாள‌ர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிறார். இதை ஆங்கில‌த்தில் ந‌ர்ஸிசிச‌ம் (Narcissism) என்கின்ற‌ன‌ர்.

இதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் பெண்களிடம் அதிக‌மாய் இருந்தாலும் ஆண்கள் இதில் ச‌ற்றும் விதிவில‌க்க‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌த‌ற்காக‌ அவ‌ர் ஆண்க‌ளை ம‌ட்டுமே வைத்து இந்த ஆய்வை ந‌ட‌த்தினார் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

கையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்க‌ள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.

தாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.

இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.

சமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால் அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது !

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.

ஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.

ஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.

எதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.

ந‌ம்முடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளையும், ந‌ம்முடைய‌ வெற்றிக‌ளையும் நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ‘செல்ஃபியும் இருக்கிற‌து’ என்ப‌து ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌முட‌ன் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். அத‌ற்காக‌ செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ தீர்ப்பிடுவதோ, குறைத்து ம‌திப்பிடுவ‌தோ த‌வ‌றான‌து ! ந‌ம் கையில் இருக்கும் தொழில்நுட்ப‌த்தின் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சாவிக‌ளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு ச‌ரியான‌ பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக‌ இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை !

( Thanks Daily thanthi, Computer Jaalam )

தலைமைப் பணி ! ( A Christian Article )

Old

‍‍‍‍

‘எல‌க்ஷ‌ன்ல‌ ந‌ம்ம‌ ஆளு ஜெயிச்சுட‌ணும்’ எனும் பேச்சு இப்போது சகஜமாகி விட்டது. த‌ன் சாதியைச் சேர்ந்த, தன் இனத்தைச் சேர்ந்த, த‌ன் இட‌த்தைச் சேர்ந்த‌, த‌ன் விருப்ப‌த்தையொத்த‌ ஒருவ‌ரைத் த‌லைவ‌ராக்கிப் பார்க்க‌ வேண்டும் என மக்கள் துடிக்கின்றனர்.

என்சினீய‌ரிங் போறியா, எம்.பி.பி.எஸ் போறியா என்ப‌தைப் போன்ற‌ ஒரு தொனியிலேயே ‘பாஸ்டர் ஆகப் போறியா ?’ என்று கேட்கும் கால‌ம் உருவாகிவிட்ட‌து. உண்மையில் த‌லைமைப்ப‌ணி என்ப‌து வேலையா ? நாம் செய்யும் அர்ப்பணமா ? நாம் உருவாக்கிக் கொள்ளும் அதிகார வளையமா ?

எதுவுமே இல்லை. உண்மையில் த‌லைமைப் ப‌ண்பு என்ப‌து க‌ட‌வுளின் அழைத்த‌லுக்குச் செவிம‌டுப்ப‌து ம‌ட்டுமே. ஒருவேளை அந்த‌ அழைத்த‌ல் இல்லையென்றால் நாமாக‌ அந்த‌ ப‌ணிக்குள் நுழையாம‌ல் இருப்ப‌தே ந‌ல‌ம். தலைமைப்பணி குறித்த சகோதரர் சகரியா பூனனின் “ஒரு ஆன்மீக தலைமை” நூல் சிறப்பானது. தலைமைப் பண்பைப் பற்றிய ஆன்மீக விளக்கத்துக்கு ஒரு நூலைப் பரிந்துரை செய்யச் சொன்னால் அதையே நான் பரிந்துரை செய்வேன்.

“உங்களில் தலைவராய் இருக்க விரும்புபவர் எல்லோருக்கும் பணியாளனாய் இருக்கட்டும்” என்பதே தலைவருடைய முதல் இலக்கணமாய் இயேசு சொல்லும் செய்தி. இயேசு தலைசிறந்த தலைவர், அவர் தான் சீடர்களின் பாதங்களை ஆர்வமாய்க் கழுவினார். அவர் தான் தன்னை இகழ்ந்து பேசி, அடித்து, ஆணியில் தொங்க விட்டவர்களுக்காய் தந்தையிடம் மன்னிப்பை யாசித்தார்.

“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” எனும் பேதுருவின் வார்த்தை தலைவர் ஏன் தாழ்மையுள்ளவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.

வேலைக்கும், அழைப்புக்கும் வேறுபாடு உண்டு. ஒரு ஆயா குழ‌ந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும், தாய் குழ‌ந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சம்பளம் குறைந்தாலே ஆயா வேறு வீடு போய்விடுவார். அன்னை அப்படியல்ல, அனாதை இல்லத்தில் போனால் கூட தனது பிள்ளையை நேசிப்பாள். அழைத்த‌ல் என்ப‌து முத‌ல் தேவை.  “தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை” என்கிற‌து எபிரேய‌ர் 5:4

த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் க‌ட‌வுளை நேர‌டியாக‌ அனுப‌வித்த‌வ‌ராய் இருக்க‌ வேண்டும். இறைவ‌னோடான‌ த‌னிப்ப‌ட்ட‌ உற‌வே ஒரு ம‌னிதரை ஆன்மீக‌த் த‌லைவ‌ர் ஆக்க‌ முடியும். நெருப்பில் க‌ட‌வுளின் குர‌ல் ஒலித்த‌ பிற‌கே மோசே ப‌ணிவாழ்வில் நுழைகிறார். க‌ட‌வுள் எதையெல்லாம் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யும் துணிச்ச‌ல் ஒரு த‌லைவ‌ருக்கு மிக‌ முக்கிய‌ம். இறைவாக்கின‌ர்க‌ள், மோசே, ஆபிர‌காம், தானியேல் போன்ற‌ ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ளிட‌ம் நாம் அதைத்தானே பார்க்கிறோம்.

வார்த்தையை வாசிக்க‌ அறிவு போதும், வார்த்தையான‌வ‌ரோடு வ‌சிக்க‌ ந‌ம‌க்கு தூய்மையான‌ வாழ்க்கை வேண்டும். தூய்மையான‌ வாழ்க்கை ம‌ட்டுமே இறைவ‌னின் குர‌லை ந‌ம‌க்குள் ஒலிக்க‌ச் செய்யும். பைபிளைப் ப‌டித்து அல்ல‌து இணைய‌ த‌ள‌ங்க‌ளில் துழாவி ஒரு அட்ட‌காச‌மான‌ செய்தியைக் கொடுத்து விட‌ முடியும். ஆனால் எவ்வ‌ள‌வு தூர‌ம் க‌ட‌வுள் ந‌ம்மோடு பேசியிருக்கிறார் என்ப‌தை வைத்தே ஒரு செய்தி உயிர் பெற‌ முடியும். ம‌ண்ணால் ம‌னித‌னைச் செய்வ‌து எளிது, உயிர் மூச்சை ஊத‌ இறைவ‌னால் ம‌ட்டுமே முடியும்.

பைபிள் அறிவு ஒருவ‌னைத் த‌லைவ‌னாக்க‌ முடியுமெனில் சாத்தான் தான் இன்றைய‌ மிக‌ப்பெரிய‌ த‌லைவ‌னாய் இருக்க‌ முடியும். அவ‌ன் தானே  இயேசுவுக்கே பைபிள் வார்த்தைக‌ளைச் சொல்லிக் காட்டி ஆசையைத் தூண்டிய‌வ‌ன் !

கடவுள் பைபிள் வார்த்தைகள் மூலமாக மட்டும் பேசுவதில்லை. நமது இதயத்தின் ஆழத்தில் அவருடைய குரல் மெல்லியதாய் ஒலிக்கும். அதைக் கேட்கும் காதுகள் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டியது அவசியம். “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்” என்பது கடவுளுக்காய் சாப்பாடு தயாரிப்பதை விட முக்கியம் கடவுள் போடும் சாப்பாடைச் சாப்பிடுவது என்பதைக் கற்றுத் தருகிறது.

கடவுளுடைய குரலைக் கேட்காதபோது மனிதருடைய தேவைக்காகப் பேசும் மனிதர்களாக நாம் மாறிப் போகும் ஆபத்து உண்டு. “இஸ்ரயேலர்களை சபிக்கவேண்டும்” எனும் அரச கட்டளையை மீறி அவர்களை வாழ்த்திய பிலயாம் இறைவனுடைய குரலுக்குச் செவிமடுத்தவர். அவருக்கு அரசனைப் பற்றிய பயமோ, உயிர்ப் பயமோ, செல்வ ஆசையோ இருக்கவில்லை.

கடவுளுடைய குரலைக் கேட்கவேண்டுமெனில் முதலில் ஒரு குழந்தையின் மனநிலை தேவை. ஏனென்றால் “மறை உண்மைகளை ஞானிகளுக்கு மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதே” இறைவனின் நோக்கம். ஞானிகள் தாங்கள் கற்றுக் கொண்ட அறிவோடு கடவுளை அணுகுகின்றனர், குழந்தைகள் கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு கடவுளை அணுகுகின்றனர்.

ஒரு ஆன்மீக‌த் த‌லைவ‌ர் க‌ட‌வுள் மீதான‌ ப‌ய‌ம் கொண்ட‌வ‌ராய் இருக்க‌ வேண்டும். கார‌ண‌ம் க‌ட‌வுள் க‌ண‌க்கு கேட்கும் போது த‌லைவ‌ர்க‌ளிட‌ம் மிக‌வும் க‌டுமையாய் ந‌ட‌ந்து கொள்வார் என்ப‌தையே பைபிள் ந‌ம‌க்குச் சொல்கிற‌து.

க‌ட‌வுளிட‌ம் கொள்ளும் ப‌ய‌மே ஞான‌த்தின் ஆர‌ம்ப‌ம். ஞான‌ம் ஒரு த‌லைவ‌ரை ந‌ல்ல‌ வ‌ழிகாட்டியாய் மாற்றுகிற‌து. மோசே ஒரு சிற‌ந்த‌ வ‌ழிகாட்டியாய் இருந்தார். ஆனால் க‌ட‌வுளின் ஒரே ஒரு க‌ட்ட‌ளையை மீறினார். கடவுள் பாறையிடம் பேசச் சொன்னார், மோசே அதை அடித்தார். ‘முன்ன‌மே அடிக்க‌த் தானே செய்தேன்’ என்ப‌தே அவ‌ருடைய‌ சிந்த‌னை. அந்த‌ சின்ன‌ மீறுத‌ல் அவ‌ருக்கு மிக‌ப்பெரிய‌ த‌ண்ட‌னையைக் கொண்டு வ‌ந்த‌து. வாக்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்டில் அவ‌ரால் நுழைய‌ முடிய‌வில்லை.

கடவுளிடம் பயம் கொண்டால் வேறு எதற்கும் பயப்படத் தேவையில்லை என்கிறது ஏசாயா. அனைத்து அதிகாரங்களையும் கையில் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிக் கொண்டால், பிற பயங்கள் வருவதில்லை. எந்த பயம் வந்தாலும் இந்த சூழலை இறைவன் சரிசெய்வார், சாத்தானை அவர் சிலுவையில் வென்று விட்டார், உலகத்தில் இருப்பவரை விட உங்களுள் இருப்பவர் பெரியவர் எனும் சிந்தனைகள் இருந்தால் போதும். தேவையற்ற பயங்கள் விலகிவிடும். கடவுளில் கொள்ளும் பயத்தைத் தவிர, மற்ற பயங்களை விலக்குவது இறை நம்பிக்கையின் அடையாளம், ந‌ல்ல‌ தலைவருக்கு மிக அவசியம்.

கார‌ண‌ம் ஒரு த‌லைவ‌ர் ந‌ல்ல‌வ‌ராய் இருந்தால் ச‌பை ந‌ல்ல‌தாய் இருக்கும். ஒரு த‌லைவ‌ர் கெட்ட‌வ‌ராய் இருந்தால் ச‌பையும் கெட்ட‌தாய் மாறிவிடும். இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ர்க‌ள் எப்போதெல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாய் இருந்தார்க‌ளோ அப்போதெல்லாம் நாடு சுபிட்ச‌மாக‌ இருந்த‌து, எப்போதெல்லாம் வ‌ழிவில‌கினார்க‌ளோ அப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்கும், நாட்டு ம‌க்க‌ளுக்கும் அழிவே வ‌ந்த‌து என்கிற‌து பைபிள்.

ந‌ல்ல‌ த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் த‌ன‌து ம‌ந்தையை செழிப்பான‌ ப‌குதியை நோக்கி ந‌ட‌த்திச் செல்வார். அது இடுக்க‌மான‌ பாதையாக‌வே இருக்கும். ஊசியின் காதைப் போல‌ ஒடுக்க‌மாய் இருக்கும். ஒரு த‌லைவ‌ரின் வெற்றி என்ப‌து “எண்ணிக்கை”யில் இல்லை. அப்ப‌டிப் பார்த்தால் இயேசுவே ப‌டுதோல்விய‌டைந்த‌ த‌லைவ‌ராய் இருப்பார். அவ‌ருடைய‌ வாழ்நாளில் அவ‌ரால் 11 அப்போஸ்த‌ல‌ர்க‌ளையே உருவாக்க‌ முடிந்த‌து.

ந‌ல்ல‌ த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் நாடுக‌ளையோ, க‌ண்ட‌ங்க‌ளையோ ச‌க‌ட்டு மேனிக்கு சுற்றி வ‌ருப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும் இல்லை. இயேசு த‌ன‌து வாழ்நாளில் இருநூறு கிலோமீட்ட‌ர்க‌ள் சுற்ற‌ள‌வைத் தாண்டிப் ப‌ய‌ணித்திருக்க‌வில்லை என்கிற‌து கிறிஸ்த‌வ‌ வ‌ர‌லாறு. வெற்றி என்ப‌து எவ்வ‌ள‌வு பேரை கூட்டிச் சேர்க்கிறோம், எத்த‌னை தூர‌ம் ப‌யண‌ம் செய்கிறோம் என்ப‌தில் இல்லை. எப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளை உருவாக்குகிறோம் என்ப‌தே முக்கிய‌ம்.

உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கும் ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கும் முக்கியமான‌ ஒரு வேறுபாடு உண்டு. உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ள் மாவீர‌ர்க‌ளாக‌ இருந்திருக்கிறார்க‌ள். நெப்போலிய‌ன், அல‌க்சாண்ட‌ர், பார்வோன், ஹிட்ல‌ர் என உலகத் தலைவர்கள் எல்லோருமே உட‌ல் வ‌லிமையிலோ, சுய‌ ந‌ம்பிக்கையிலோ வ‌லுவாக‌ இருந்த‌வ‌ர்க‌ளே.

ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ளின் முக்கிய‌த் தேவையே உடைப‌டுத‌ல் தான். தான் எனும் சுய‌ம், த‌ன்னால் முடியும் எனும் த‌ன்ன‌ம்பிக்கை, தான் ந‌ல்ல‌ த‌லைவ‌ர் எனும் சுய‌ அங்கீகார‌ம் என‌ அத்த‌னையும் உடைப‌டும் இட‌த்தில் தான் ஒரு த‌லைவ‌ர் முளைத்தெழுகிறார். “தான்” முழுமையாக‌ வெளியே ஊற்ற‌ப்ப‌ட்டால் தான் அங்கே ‘இறைவ‌ன்” ஊற்ற‌ப்ப‌ட‌ முடியும். ப‌ல‌வீன‌த்தில் தான் இறைவ‌னின் ப‌ல‌ம் புகுந்து செல்லும், நாம் பூச்சிய‌மாகும் போது தான் இறைவ‌னின் ப‌டையில் இணைய‌ முடியும். எந்த ஒரு மெல்லிய ஆயுதமும் வீழ்த்தி விடக் கூடிய வலிமை தானே அன்னை தெரசாவுக்கு இருந்தது !!!

ச‌பைக்குத் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் இறைவ‌ன் எனும் திராட்சைக் கொடியில் அங்க‌மாய் இருக்க‌ வேண்டியதும், அந்த‌க் கொடியில் த‌ன‌க்கு இட‌ப்ப‌ட்ட‌ ப‌ணியை ம‌ட்டும் செய்ய‌ வேண்டிய‌தும் மிக‌ முக்கிய‌மான‌து.

த‌ன்னுடைய‌ அழைப்பு ‘கை’ எனில், கைக்குரிய‌ வேலைக‌ளை முழுமையாய்ச் செய்வ‌தும், பிற‌ உறுப்புக‌ளின் ப‌ணிக‌ளை விம‌ர்சிக்காம‌ல் இருப்ப‌தும் அவ‌சிய‌ம். உறுப்புக‌ள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட‌ ப‌ணியை க‌ட‌வுள் கொடுக்கிறார். அந்த‌ந்த‌ ப‌ணிக‌ளின் அங்கீகார‌மும், நிராக‌ரிப்பும் க‌டவுளிட‌மிருந்தே வ‌ரும். த‌ன‌க்குரிய‌ ப‌ணியில் நிலைத்திருப்ப‌தே அவசியம்.

த‌ன‌து ச‌பை ம‌க்களின் முழுமையான பொறுப்பும் தலைவரிடம் உண்டு. ஒரு ஆடு காணாமல் போனால் கூட தேடிப்போகும் தவிப்பு மேய்ப்பனுக்கு இருக்க வேண்டும். வ‌ழிவில‌கிப் போனால் அவ‌ர்க‌ளுக்காய் செபிப்ப‌தும், அவ‌ர்களுக்கு வ‌ழிகாட்டுவ‌தும் த‌லைவ‌ர்க‌ளின் இய‌ல்பாய் இருக்க‌ வேண்டும்.

த‌லைவ‌ர்க‌ள் ஆன்மீக‌த் த‌ந்தை போன்ற‌வ‌ர்க‌ள். குழ‌ந்தைக‌ள் த‌ந்தையின் வார்த்தைக‌ளைக் கேட்டு வாழ்வ‌தை விட‌, அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கையைப் பார்த்தே வாழும். ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ வாழ்க்கையை முழுமையான‌ தூய்மைக்குள் ந‌ட‌த்த‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இத‌னால் எழுகிற‌து.

“நான் சொல்வ‌தைக் கேளுங்க‌ள்” என்ப‌து ப‌ழைய‌ ஏற்பாட்டு பாணி, “என்னைப் பின்செல்” என்ப‌தே புதிய‌ ஏற்பாட்டு அழைப்பு. ந‌ம‌து வாழ்க்கை “என்னைப் பின்செல்” என‌ நாம் ந‌ம‌து ம‌ந்தையை அழைக்கும்ப‌டி இருக்க‌ வேண்டும்.

த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையின் ஒவ்வொரு செய‌லையும், இயேசுவின் வாழ்க்கையோடும் அவ‌ர‌து செய‌லோடும் ஒப்பிட்டுச் செய்தால் ம‌ட்டுமே இது சாத்திய‌மாகும். இல்லையேல் நாம் வெள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்ல‌றைக‌ளைப் போல‌ வெளியே ம‌ட்டுமே அழ‌காய் இருப்போம். பாத்திர‌த்தை வெளிப்ப‌க்க‌மாய்க் க‌ழுவுவ‌தில் எந்த‌ ப‌ய‌னும் இல்லை என்ப‌து தானே இயேசுவின் போத‌னை.

த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ வ‌ள‌ர்ச்சி, ச‌பையின் வ‌ள‌ர்ச்சி அனைத்தின் ம‌கிமையையும் ஆண்ட‌வ‌ருக்கே வ‌ழ‌ங்கும் ப‌ணிவுடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும். “க‌ட‌வுள் கொடுத்தார், க‌ட‌வுள் எடுத்துக் கொண்டார், அவ‌ருக்கே ம‌கிமை” எனும் ம‌ன‌நிலை இருந்தால் ச‌பையை க‌ட‌வுள் க‌ட்டியெழுப்புவார் என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை.

கடைசியாக‌ ஒரு த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் த‌ன‌து ச‌பையின் பார‌ம்ப‌ரிய‌ங்க‌ள், அடையாள‌ங்க‌ள், வ‌ழ‌க்க‌ங்க‌ள், ப‌ழ‌க்க‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை க‌ண்மூடித் த‌ன‌மாக‌ ந‌ம்பாம‌ல் அவ‌ற்றை இறைவார்த்தையின் வெளிச்ச‌த்தில் விள‌ங்கிக் கொண்டு ச‌பையை ந‌ட‌த்துப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும்.

“என் தாத்தா ப‌னையேறினார், நானும் ப‌னையேறித் தான் தீருவேன்” என‌ யாரும் சொல்வ‌தில்லை. ஆனால் “என் தாத்தா கால‌த்துல‌ இருந்தே இந்த‌ கோயில்ல‌ இது தான் வ‌ழ‌க்க‌ம்.. மாத்த‌ முடியாது” என‌ கொடிபிடிப்ப‌வ‌ர்க‌ள் ஏராள‌ம் உண்டு. “போ அப்பாலே சாத்தானே” என‌ த‌வ‌றான‌வைக‌ளுக்கு எதிர்த்து நிற்கும் குண‌மும், தெளிவும் த‌லைவ‌ருக்கு இருக்க‌ வேண்டும். த‌ந்தையின் பெய‌ருக்குக் க‌ள‌ங்க‌ம் ஏற்ப‌ட்டால் சாட்டை சுழ‌ற்றும் திட‌மும் த‌லைவ‌ருக்கு இருக்க‌ வேண்டும். “கொஞ்ச‌ம் அட்ஜ‌ஸ்ட்” ப‌ண்ணினால் பெய‌ரும், ப‌ண‌மும், புக‌ழும் கிடைக்க‌லாம். ஆனால் மீட்பை இழ‌க்க‌ வேண்டிய‌ நிலை வ‌ரும்.

த‌லைமைப் ப‌ணி என்ப‌து எளிதான‌த‌ல்ல‌
இறைவ‌னில் ச‌ர‌ண‌டைந்தால் எதுவும் க‌டின‌மான‌த‌ல்ல‌.

சேவிய‌ர்

 

தாகமாயிருக்கிறேன் ( Christian Article )

jesus2

தாகமாயிருக்கிறேன்

 

மனிதனின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறைவிடம் எனும் மூன்று விஷயங்களைச் சொல்வார்கள். அவற்றில் மிக முக்கியமானது தண்ணீர் தான். உணவு இல்லாமல் ஒரு மனிதன் மூன்று வாரங்கள் தாண்டியும் வாழ முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் வாழ முடியாது. உடலில் தண்ணீரின் அளவு குறையக் குறைய அவன் மரணத்தை நோக்கிச் செல்கிறான் என்கிறது மருத்துவம்.

நாகரீகத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எல்லாமே நதிக்கரையில் தான் உருவாகியிருக்கின்றன. காரணம் தண்ணீரின் தவிர்க்க முடியாத தேவை. தண்ணீர் இல்லாவிட்டால் விவசாயம், கால்நடை வளர்ப்பு என எதுவுமே செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே தான் ஆதிமனிதன் நதிக்கரைகளில் தங்கி நாகரீக வாழ்வுக்குள் நுழைந்தான்.

அந்த அடிப்படை தேவையான தண்ணீர், இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறதா ? உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சொல்லும் விஷயங்கள் பதற வைக்கின்றன.

சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு இருபத்து ஓரு வினாடிக்கு ஒரு முறையும் ஒரு குழந்தை இறந்து போகிறது. அதாவது இந்தக் கட்டுரையை நாம் படித்து முடிக்கும் நேரத்தில் சில குழந்தைகள் டயாரியா, காலரா உட்பட ஏதோ ஒரு தண்ணீர் சார்ந்த நோயினால் இறந்து விட்டிருப்பார்கள் எனும் புள்ளி விவரம் அதிர்ச்சியடைய வைக்கிறது அல்லவா ?

சராசரியாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் ஆண்டு தோறும் நல்ல தண்ணீர் இல்லாததால் இறந்து போகின்றனர். சுமார் எண்பத்தைந்து கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதேயில்லை என்கிறது உலகளாவிய ஆய்வு. இன்னொரு ஆய்வு உலக அளவில் பெண்கள் ஒரு நாளைக்கு இருபது கோடி மணி நேரத்தை தண்ணீர் எடுப்பதற்காகச் செலவிடுகிறார்கள் என்கிறது !

“தண்ணீர் மன அழுத்தம்” அதாவது “வாட்டர் ஸ்ட்ரெஸ்” என்பது இன்றைக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டினாலும், குறைபாட்டினாலும் மனிதனுக்கு உருவாகின்ற மன அழுத்தத்தையே வாட்டர் ஸ்ட்ரஸ் என்கிறார்கள்.

பூமியில் தண்ணீர் மிக அதிக அளவில் இருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் மூன்று சதவீதம் தண்ணீர் மட்டுமே குடிப்பதற்குப் பயன்படுகிறது. மற்ற தண்ணீர் எல்லாம் குடிக்க முடியாத தண்ணீர். அதனால் தான் இருக்கும் தண்ணீரை சிக்கனமாய்ப் பயன்படுத்துவதும், கிடைக்கும் தண்ணீரைச் சேமிப்பதும் சமூகத்திற்கான நமது பங்களிப்பாகிறது.

தண்ணீர் மனிதனுடைய வாழ்வோடு இப்படி பின்னிப் பிணைந்திருப்பதால் தான் கடவுளின் வார்த்தையிலும் தண்ணீர் அடிக்கடிப் பயன்படுகிறது. வேதாகமத்தில் தண்ணீர் பல்வேறு குறியீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

“மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.” என ஏசாயா இறைவனின் வார்த்தையைத் தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். வயலின் விளைச்சலுக்கு மழையும், மனதின் விளைச்சலுக்கு இறைவனின் வார்த்தையும் நமக்குத் தேவையாகிறது.

“அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்” எனும் ஓசியாவின் வார்த்தை, கடவுளையே தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசுகிறது.

ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தை தண்ணீரை நியாயத்தோடும் நீதியோடும் ஒப்பிட்டுப் பேசுகிறது ! “நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது”. என்கிறது அவர் வாக்கு. எப்படி தண்ணீரின் பற்றாக்குறை மனித வாழ்க்கையை செயலற்றதாக்குகிறதோ, அதே போல நீதியும் நியாயமும் அற்ற வாழ்க்கை அவனது ஆன்மீக வாழ்க்கையை செயலற்றதாக்குகிறது என்பதையே ஆமோஸ் தீர்க்கத்தரிசியின் வார்த்தை நமக்குச் சொல்கிறது.

இறைவனுடைய வார்த்தை நீதியாகவும், நியாயமாகவும், ஞானமாகவும், விளைச்சலுக்குரியதாகவும் இருப்பதால் அதைத் தினமும் வாசிப்பது நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கு அவசியம்.

நோவாவின் காலத்தில் தண்ணீர் அழிவுக்கான வேலையைச் செய்தது. அதாவது பாவம் நிறைந்த மனிதர்களை அழிப்பதற்குத் தண்ணீர் காரணியாய் இருந்தது.  புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தண்ணீர் திருமுழுக்கின் வழியாய் நமது பழைய மனிதனை அழித்து நம்மை புதிதாக்குகிறது. தண்ணீர் பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையே ஒரு கோடு கிழிக்கிறது !

தண்ணீருக்குள்ளே நடந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெற்றது போல, தண்ணீருக்குள் புகுந்து நமது வாழ்க்கை புதுப் பிறப்பாகிறது எனலாம்.

இயேசுவின் முதல் புதுமையும் தண்ணீரோடு தானே ஆரம்பிக்கிறது. கலங்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் திராட்சை இரசமாய் புதுப்பிறப்பெடுத்து மக்களுடைய தேவையை நிறைவேற்றுகிறது.

நள்ளிரவில் படகில் பயணித்த சீடர்களை நோக்கிய பயணத்தில் இயேசுவின் பாதங்களுக்குக் கீழே தண்ணீர் பவ்யமாய்ப் படுத்திருந்தது. கொந்தளித்து ஆவேசமாய் சூறைக்காற்றுடன் சுழன்றடித்தபோது இயேசுவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாய்க்குட்டியாய் வாலாட்டிப் படுத்தது. தண்ணீர் இயேசுவின் புதுமைகளோடு தொடர்ந்து பயணிக்கிறது !

தண்ணீர் பணிவின் அடையாளமாகவும் இருக்கிறது. எலிசாவைப் பற்றிய அறிமுகம், அவர் எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றுபவராய்ச் சொல்கிறது. எலிசாவின் தாழ்மையை அது வெளிப்படுத்துகிறது. இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வில் தாழ்மை தனது உச்சபட்ச காட்சியை அரங்கேற்றுகிறது !

யோர்தான் நதியில் ஏழுமுறை மூழ்கி நாகமான் தனது தொழுநோயை விலக்கியதும், தூதர்கள் கலக்கும் குளத்தில் இறங்கி நோயாளிகள் சுகம் பெறுவார்கள் என்பதும் தண்ணீரை நோய் தீர்க்கும் காரணிகளாகக் காட்டுகின்றன உதாரணங்கள் !

மிக முக்கியமாக தூய ஆவியானவர் வாழ்வளிக்கும் நீரூற்றாக வேதாகமத்தில் காட்சியளிக்கிறார். “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் ” ( யோவான் : 7 :37 )எனும் வார்த்தை தூய ஆவியானவரால் நமக்குக் கிடைக்கப்போகும் செழிப்பான வாழ்க்கையைப் பேசுகிறது.

“நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது” ( ஆதி 1 :20 ) எனும் இறைவார்த்தை உயிர்களின் பிறப்பைப் பேசுகிறது. “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது”( யோவான் 3 :5) எனும் இறைவார்த்தை இறைவனில் புதிதாகப் பிறக்கும் ஆன்ம பிறப்பைப் பற்றிப் பேசுகிறது. இப்படி உடலின் பிறப்பையும், ஆன்மாவின் பிறப்பையும் தண்ணீர் குறித்து நிற்பது வியப்பூட்டுகிறது.

“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்( யோ 4 :14 )எனும் இயேசுவின் வார்த்தை நிலைவாழ்வையும், தண்ணீரையும் இணைத்து ஒரு புதிய அர்த்தத்தையே நமக்குப் புரிய வைக்கிறது.

வேதாகமத்தின்  ஆரம்பம் தண்ணீரைப் பேசுகிறது. “நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” ( ஆதி 1:2). அதன் முடிவும்  தண்ணீரைப் பற்றிப் பேசுகிறது. “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்: விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்” ( வெளி 22:17). வேதாகமத்தின் துவக்கமாகவும், முடிவாகவும், வேதாகமும் முழுவதும் பயணிக்கும் விஷயமாகவும் இருக்கும் தண்ணீர் மூலமாக கடவுள் சொல்ல வருவது என்ன ?

தண்ணீர் இவ் உலக வாழ்க்கைக்கு அடிப்படையானது ! அதைச் சரியான வகையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதை வீணாக்காமலும், மாசுபடுத்தாமலும் இருப்போம் !

அதே போல, இறைவனின் வார்த்தை மறு உலக வாழ்க்கைக்கு அடிப்படையானது !  அதை முழுமையாக உட்கொள்ள வேண்டும். சரியான முறையில் பயன்படுத்துவதும், மாசுபடாமல் செயல்படுத்துவதும் அவசியம்.

தாகமாயிருக்கிறேன் என்றார் இயேசு ! அவருடைய தாகமெல்லாம், இறைவார்த்தையைப் பருகி நாம் நமது தாகத்தைத் தணிக்க வேண்டும் என்பதே !

சேவியர்