பைபிள் மாந்தர்கள் 21 (தினத்தந்தி) : கிதியோன்.

gideon-water

சிறுத்தை மேல் இருக்கும் சிற்றெறும்பு, தானே சிறுத்தையை விட உயர்வானது என கருதிக் கொள்ளும். அப்படித் தான் இருந்தது இஸ்ரயேல் மக்களுடைய நிலமை. இறைவனை விட்டு மீண்டும் விலகினார்கள். மிதியானியர்களிடம் அடிமையாய் ஆனார்கள்.

ஏழு வருடங்கள் மிகக் கடுமையான வாழ்க்கை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து கடவுளை நோக்கிக் கதறினார்கள்.

இறைவாக்கினர் மூலம் கடவுள் பேசினார் “ நானே உங்கள் கடவுள். வேறு தெய்வங்களை வழிபடாதீர்கள் என்றேன். நீங்கள் கேட்கவில்லை” என்றார். மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்தார்கள்.

அந்த நாட்டில் ஒபிரா என்னுமிடத்தில் “கிதியோன்” என்பவர் கோதுமைக் கதிர்களை திராட்சை ஆலையில் வைத்து ரகசியமாய் அடித்துக் கொண்டிருந்தார்.

“வீரனே.. கடவுள் உன்னோடு இருக்கிறார்” திடீரென முன்னால் தோன்றிய தூதனைக் கண்ட கிதியோன் தடுமாறினார்.

“கடவுள் என்னோடு இருந்தால் ஏன் எங்களுக்கு இந்த சோதனைகள் ?”

“நீ போ, மிதியானியரிடமிருந்து நீ மக்களை விடுவிப்பாய், நான் உன்னோடு இருப்பேன்”

“கடவுளே.. உண்மையிலேயே நீர் கடவுளா ? நான் படையல் எடுத்து வரும் வரை நீங்கள் இருந்தால் இது கடவுளின் வாக்கு என நம்புவேன்”

“சரி.. போய் வா” தூதர் சொல்ல, கிதியோன் விரைந்தார்..

கிதியோன் தூதருக்குப் படையல் கொண்டு வரும் வரை தூதர் அங்கே இருந்தார். படையலை பாறையில் வைத்ததும், தூகர் கையிலிருந்த கோலினால் அதைத் தொட்டார். நெருப்பு எரிந்தது. தூதர் மறைந்தார்.

கிதியோன் பரவசமானார். அந்த இடத்திலேயே கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டி “நலம் தரும் ஆண்டவர்” என பெயரிட்டு அழைத்தார்.

கடவுள் அவரிடம் பிற தெய்வங்களில் பலி பீடங்களை அழித்து, கம்பங்களை ஒடித்து, உண்மை கடவுளுக்கு பலி செலுத்தச் சொன்னார். கிதியோன் ஒரு இரவில் அதை நிறைவேற்றினார்.

பகலில் எழுந்த மக்கள் நடந்ததை அறிந்து கடும் கோபமடைந்தார்கள். கிதியோனைக் கொல்ல வேண்டும் எனும் வெறி அவர்கள் கண்களில் எரிந்தது.

“நீங்கள் கடவுளை வழிபடுகிறீர்களா ? பாகாலுக்காக போராடுகிறீர்களா ? எவனாவது பாகால் பெயரைச் சொல்லி போரிட வந்தால் இரவு முடியும் முன் கொல்லப்படுவான்” கிதியோனின் தந்தை யோவாசு அவர்களை எச்சரித்தார்..

“பாகால் உண்மையான கடவுளாக இருந்தால் அவருடைய பலிபீடங்களை அழித்தவனை அவரே அழிக்கட்டும்.” என்று சொல்லி மக்கள் கிதியோனுக்கு ‘எரு-பாகால்’ என பெயரிட்டனர்.

இதற்குள், மிதியானியரும், அமலேக்கியரும் இஸ்ரயேலரின் எல்லைக்குள் நுழைந்து கூடாரமடித்துத் தங்கினார்கள். மக்கள் அச்சமடைந்தனர்.

கிதியோன் மனதில் சந்தேகம். “கடவுளே உண்மையிலேயே நான் இவர்களோடு போரிடவேண்டுமா ? ஒரு ஆட்டுக் கம்பளியை தரையில் விரித்து வைக்கிறேன். தரையெல்லாம் காய்ந்து இருந்து, கம்பளி மட்டும் ஈரமாய் இருந்தால், நீர் என் மூலமாய் வெற்றி தருவீர் என புரிந்து கொள்வேன்” என்றார்.

என்ன அதிசயம், மறு நாள் காலையில் கம்பளி ஈரமாகவும், தரை உலர்ந்தும் இருந்தது.

இப்போதும் கிதியோனின் சந்தேகம் தீரவில்லை. “கடவுளே.. இன்னும் ஒரே ஒரு முறை. இன்று தரை ஈரமாய் இருக்க வேண்டும், கம்பளி காய்ந்திருக்க வேண்டும்.” என்றார். மாபெரும் அதிசயமாக தரையெல்லாம் பயங்கர ஈரமாகவும், கம்பளி உலர்ந்தும் இருந்தது ! கிதியோன் மனதளவிலும், உடலளவிலும் தயாரானார்.

மாபெரும் படையுடன் அவர் போருக்குக் கிளம்பினார். “நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது வெற்றி தந்தால் உங்கள் பலத்தால் வெற்றி கொண்டதாய் நினைப்பீர்கள்” என்றார் கடவுள்.

“போருக்குப் பயப்படுபவர்களெல்லாம் திரும்புங்கள்” கிதியோன் சொன்னார். 22 ஆயிரம் பேர் அஞ்சினர். 10 ஆயிரம் பேர் எஞ்சினர்.  கடவுள் இன்னொரு சோதனையையும் வைத்தார்.

அதன்படி அருகில் இருந்த நீர் நிலையில் போய் எல்லோரையும் தண்ணீர் குடிக்கச் சொன்னார் கிதியோன். பெருபாலானோர் முழங்கால் படியிட்டு தண்ணீரைக் குடித்தனர். முன்னூறு பேர்  மட்டும் நாயைப் போல நாக்கினால் நக்கித் தண்ணீர் குடித்தனர்.

கடவுள் சொன்னார், “இந்த 300 பேர் போதும். இவர்கள் மூலம் நான் உனக்கு வெற்றி தருவேன் “ !

கிதியோன் அந்த முன்னூறு பேருடனும் சென்று மிகப்பெரிய எண்ணிக்கையிலான எதிரிகளைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

கிதியோன் கடவுளின் அழைப்பை மூன்று முறை சந்தேகத்தால் சோதிக்கிறார். இருந்தாலும் கடவுள் பொறுமையாய் இருக்கிறார். அவருக்கு விசுவாசம் ஊட்டுகிறார். நம்பிக்கையில் பலவீனமாய் இருக்கும் நமக்கு இது மிகப்பெரிய ஆறுதல் செய்தி !

32000 பேர் கொண்ட படையிலிருந்து 300 பேர் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எதற்காகவும் மண்டியிடாமல் இருப்பவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் !

உறுதியான விசுவாசமும், நிலையான விசுவாசமும் நமக்குத் தேவை என்பதை கிதியோன் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது !

Leave a comment