பைபிள் மாந்தர்கள் 22 (தினத்தந்தி) : அபிமெலக்கு

abimelech

இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்த எருபாகால் எனும் கிதியோனுக்கு பல மனைவியரும், எழுபது பிள்ளைகளும் இருந்தனர். செக்கேம் எனுமிடத்திலிருந்த வைப்பாட்டி மூலமாய் அவருக்கு அபிமெலெக்கு எனும் ஒரு முரட்டு மகனும் இருந்தான். கிதியோன் வயதாகி இறந்தார். இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பிற தெய்வங்களை வழிபட்டு பாவத்தில் விழுந்தார்கள்.

எருபாகாலுக்கு அபிமெலக்கை மன்னனாக்குதில் உடன்பாடு இருந்ததில்லை. எனவே அபிமெலக்கு சூழ்ச்சியாக தனது தாயின் சகோதரர்களிடம் சென்று, உணர்வு ரீதியாகப் பேசி தந்தைக்குப் பிறகு தலைமை இடத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவர்கள் அவனுடைய பேச்சில் மயங்கினார்கள். பாகால் பெரித் – கோயிலில் இருந்து எழுபது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தனர். அவன் அந்தப் பணத்தைக் கொண்டு கொலையாளர்களை வாங்கினான். நேரடியாகத் தன்னுடைய சகோதரர்கள் வீட்டுக்குச் சென்று அவர்கள் எழுபது பேரையும் ஒரே கல்லில் வைத்து அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தான். கடைசி மகனான யோத்தாம் ஒளிந்து கொண்டதால் தப்பித்தான்.

முரடனான அபிமெலெக்கை மக்கள் அரசனாக்கினார்கள். யோத்தாம் அதைக் கண்டு கலங்கினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க கெரிசிம் மலைக்கு மேல் ஏறிநின்று ஒரு கதையைச் சொன்னார். மரங்களெல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு அரசனாய் இருக்கும் படி ஒலிவ மரத்திடம் கேட்டன. ஒலிவ மரமோ ‘பயன்படக்கூடிய எண்ணை தயாரிக்கும் பணி எனக்கு உண்டு’ தலைவனாய் இருக்க முடியாது என்றது. மரங்கள் அத்தி மரத்திடம் சென்றன,’ எனக்குப் பழங்கள் விளைவிக்கும் வேலையிருக்கிறது’ என அத்தி மரம் மறுத்தது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் சென்றன, ‘எனக்கு திராட்சை ரசம் தயாரிக்கும் வேலையிருக்கிறது, அதுதான் முக்கியம்’ என கொடியும் கை விரித்தது.

மரங்களெல்லாம் முட்புதரிடம் போய், அரசனாய் இருக்கும் படி கேட்டன. ஒன்றுக்கும் உதவாத முட்செடி ‘வாருங்கள் நானே உங்கள் அரசன். என் நிழலில் இளைப்பாறுங்கள். இல்லையேல் என்னிடமிருந்து கிளர்ந்தெழும் நெருப்பு மிகப்பெரிய அழிவை உருவாக்கும்’ என்றது.

கதையை சொல்லிய யோத்தாம் மக்களிடம் கண்ணீரோடு பேசினார். என் தந்தை உங்களை மீட்டார். எப்படியெல்லாம் வழிநடத்தினார். அவரையும் கடவுளையும் விட்டு விலகிய நீங்கள் அழிவீர்கள் என சாபமிட்டார். பின்னர் முரடன் அபிமெலெக்குவுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தார்.

அபிமெலெக்கு மூன்று ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். கடவுள் அபிமெலக்குக்கு எதிராக மக்கள் மனதில் பகையை ஊட்டினார். நாட்டில் நிம்மதியும், அமைதியும் விலக, வழிப்பறி, கொலை, கொள்ளையெல்லாம் நடந்தன.  அப்போது  மக்களிடையே ககால் என்பவன் வீரனாய் தோன்றினான். மக்கள் அவனுக்கு ஆதரவு கொடுத்தனர். அவன் அபிமெலக்கை எதிர்த்துப் பேசினார்.

அபிமெலக்கின் வீரன் செபூல், அந்த நகரின் அதிகாரியாய் இருந்தான். அவன் இந்த விஷயத்தை அபிமெலெக்கின் காதுகளில் போட்டான். செபூல், ககாலின் கூடவே இருந்து அவனுக்கு எதிராக சதி வேலை செய்தான். அபிமெலக்கின் வீரர்களிடம் அவனை மாட்டி விட்டான். ககால் வீரமாகப் போரிட்டான் ஆனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தப்பி ஓடினான்.

அபிமெலக் மக்கள் மீது கடும் கோபம் கொண்டு அவர்களை அழிக்கத் துவங்கினான். நகரை அழித்து, நகரில் உப்பைத் தூவினான். மிச்சமிருந்த மக்களில் சுமார் ஆயிரம் பேர் பயந்து போய் எல்பெரித் பாகால் கோயிலுக்குள் போய் பூட்டிக் கொண்டனர். கோயிலுக்குள் இருந்தால் தப்பலாம் என நினைத்தனர். அபிமெலெக்கோ மரங்களை வெட்டி கோயிலைச் சுற்றிலும் அடுக்கி, கோயிலையே எரித்துக் கொக்கரித்தான்.

நகருக்கு நடுவே ஒரு பெரிய கோட்டை இருந்தது. மக்கள் தலைதெறிக்க ஓடிப் போய் அதற்குள் ஒளிந்து கொண்டனர். கோட்டையைப் பிடிக்கும் கர்வத்துடன் அபிமலெக் கோட்டை வாசலை நெருங்கினான். ஆனால் கோட்டைக்கு மேல் ஒரு பெண் கையில் அம்மிக் கல்லுடன் தயாராய் இருந்தாள். கோட்டைக் கதவருகே அவன் வந்ததும் கல்லை நேராகத் தலையில் போட, தலை பிளந்து விழுந்தான் அபிமெலக்கு.

உயிர் பிரியும் கணத்திலும் தன் கர்வத்தை விடவில்லை அவன். அருகிலிருந்த வீரனை நோக்கி, என்னை உன் வாளால் வெட்டிக் கொன்று விடு. ஒரு பெண்ணின் கையால் செத்தேன் என்பது எனக்கு அவமானம் என்றான். வீரனும் அவனைக் குத்திக் கொன்றான். ஆனாலும் வரலாறு அந்தப் பெண்ணின் பெயரை மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டது. “அபிமெலக்கைக் கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா?” எனும் 2 சாமுவேல் 11 : 21 வசனம் அதை தெளிவாக்குகிறது !

இறை அழைத்தல் இல்லாமல் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டு, கர்வத்தைத் தலையில் சுமந்து கொண்டு, வன்முறையாலும், சுய பலத்தாலும் அனைத்தையும் சாதிக்க நினைப்பவர்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை அபிமெலக் வாழ்க்கை மீண்டும் ஒரு முறை நமக்கு விளக்குகிறது!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s