பைபிள் மாந்தர்கள் 23 (தினத்தந்தி) : இப்தா ( Jephthah)

இப்தா ஒரு வலிமையான போர் வீரன். ஒரு விலைமாதிற்குப் பிறந்தவன். எனவே அவனுடைய தந்தையின் குடும்பத்தினர் அவரை வெறுத்து துரத்தி விட்டார்கள். அவர் தப்பி ஓடி தோபு எனும் நாட்டில் வாழ்ந்து வந்தார். கடவுளின் அழைப்பு இப்தாவுக்கு வந்தது !

எத்தனை முறை பட்டாலும் திருந்தாத இனமாக இருந்தது இஸ்ரயேல். கடவுளின் தொடர்ந்த அன்பையும், பாதுகாப்பையும் பெற்ற அவர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து வேற்று தெய்வங்களை வழிபடத் துவங்கினார்கள். எனவே அவர்கள் பலவீனமடைந்து எதிரிகளால் மீண்டும் அடிமையாக்கப் பட்டார்கள். அம்மோனியர்கள் அவர்களை நீண்ட நெடிய பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மீண்டும் கடவுளிடம் கதறி மன்றாடினார்கள். இந்த முறை கடவுள் சட்டென மனம் இரங்கவில்லை. மீண்டும் மீண்டும் வழி விலகிச் செல்லும் மக்கள் மீது கோபம் கொண்டார். “வேறு தெய்வங்களைத் தேடிப் போனீர்களே..அவர்களே உங்களை விடுவிக்கட்டும் என்றார்”. மக்களோ தொடர்ந்து வேண்டினர்.

தங்களிடம் இருந்த வேற்று தெய்வ வழிபாடுகளை எல்லாம் விலக்கினர். மனம் திருந்தியதைச் செயலில் காட்டியதால் கடவுள் மனமிரங்கினார். அம்மோனியருக்கு எதிராக யார் போரிட்டு வெல்வாரோ அவரே நம் தலைவர் என மக்கள் தங்களுக்குள் முடிவு செய்தார்கள். அப்போது தான் இப்தா அழைக்கப்பட்டார்.

இப்தா மக்களிடம் வந்து,”என்னை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் என்னை அழைப்பீர்களோ ?” என தனது மன வருத்தத்தைக் கொட்டினார். மக்கள் அவரை சமாதானப் படுத்தி தங்கள் விடுதலைக்காகப் போரிடுமாறு வேண்டினார்கள். அவரும் ஒத்துக் கொண்டார்.

முதல் முயற்சியாக அம்மோனிய மன்னனிடம் ஒரு தூதனை அனுப்பி சமாதானம் செய்து கொள்ள முயன்றார். எதிரி மன்னன் விட்டுக் கொடுக்கவில்லை. எனவே போர் ஒன்றே முடிவு எனும் நிலை உருவானது. கடவுளின் அருள் இப்தாவின் மீது நிரம்பியது.

இப்தா ஒரு நேர்ச்சை செய்தார். “கடவுளே, நீர் எதிரிகளை என் கையில் ஒப்புவித்தால். நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது என் வீட்டு வாயிலில் இருந்து யார் புறப்பட்டு வருகிறாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரை எரிபலியாகத் தருவேன்” என்றார்.

போர் நடந்தது. ஆண்டவர் அருளுடன் போரிட்ட இப்தா வெற்றி பெற்றார். பதினெட்டு ஆண்டு கால துயர வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இப்தா மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். இந்த செய்தியைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுடன் மேள தாளங்களுடனும் அவரைச் சந்திக்க அவர் வீட்டு வாயிலில் இருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் இப்தாவின் அன்பு மகள். ஒரே மகள். அவருக்கு வேறு பிள்ளைகளே இல்லை !

இப்தா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கதறினார்.. “ஐயோ மகளே.. என்னைத் துன்பத்தில் தள்ளி விட்டாயே” என்று புலம்பி தனது நேர்ச்சை பற்றி மகளிடம் சொன்னார். மகிழ்ச்சிக் கொண்டாட்டம் சட்டென கலைய, நிலைகுலைந்து போய் நின்றாள் மகள். ஆனாலும் கடவுளின் விருப்பமே நடக்கட்டும். இரண்டு மாதங்கள் நான் என் தோழியருடன் மலைகளில் சுற்றித் திரிந்து எனது கன்னிமை குறித்து நான் துக்கம் கொண்டாட வேண்டும் என்றாள் கண்ணீருடன்.

தந்தை தலையசைத்தார். மகள் மலைகளுக்கு பயணமானாள். இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் கன்னியாகவே தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்பா நான் தயார் என்றாள். இப்தா கடவுளுக்குச் செய்த நேர்ச்சையை நிறைவேற்றினார்.

அதிர்ச்சியும், வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த வாழ்க்கை இப்தாவுடையது. கடவுளுக்குக் கொடுத்த வாக்கை மன உறுதியுடன் இப்தா காப்பாறினார். அந்த நாட்களில் வீடுகளின் கீழ்த் தளத்திலும், வாயிலிலும் கால்நடைகளை பராமரிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் இப்தா நேர்ச்சை செய்திருக்கலாம். ஆனால் வெற்றி பெற்றவரை எதிர்கொள்ள வீட்டிலிருக்கும் பெண்கள் ஆடிப்பாடி செல்வார்கள் (1 சாமுவேல் 18 : 6-7 ) என்பதும் அன்றைய வழக்கமே ! எப்படியோ, கடவுளின் அழைப்பை அப்படியே ஏற்காமல் இப்தா செய்த நேர்ச்சை தேவையற்ற ஒன்று

தந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற தன்னையே தந்த அந்த பெயர் தெரியா பெண்ணின் அன்பும், இறையச்சமும் பிரமிக்கவும் வெலவெலக்கவும் வைக்கிறது.

அழைப்புக்குக் கடவுள் செவி கொடுக்கவில்லையெனில் முதலில் நமது பாவங்களையெல்லாம் விலக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இறைவனின் வார்த்தைகளைச் சோதித்தறியும் தேவையற்ற நேர்ச்சைகளை ஒதுக்க வேண்டும். இறைவனின் முன் செய்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தனது வாழ்க்கையை விட இறைவனையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.  என பல வேறுபட்ட படிப்பினைகள் இப்தாவின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s