அன்னா
எல்கானா-வுக்கு அன்னா, பெனின்னா என இரண்டு மனைவிகள். பெனின்னாவுக்குக் குழந்தைகள் உண்டு. ஆனால் அன்னாவுக்கோ குழந்தைப் பேறு இல்லை. பண்டைய காலங்களில் குழந்தைப் பேறு என்பது கடவுளின் அருள் எனவும், அந்தப் பாக்கியம் இல்லாதவர்கள் இறையருள் இல்லாதவர்கள் எனவும் கருதப்பட்டார்கள். அதனால் அவர்கள் அவமானங்களையும், வெறுப்பையும், மன உளைச்சலையும் சந்திப்பது வாடிக்கை. அன்னாவும் அத்தகைய ஒரு சூழலுக்கே தள்ளப்பட்டார்.
பெனின்னா அன்னாவைக் நகைத்தும், துன்புறுத்தியும் வதைத்தாள். எல்கானா அன்னாவின் மீது அதிக பாசம் வைத்திருந்தார். ஆண்டு தோறும் சீலோ எனுமிடத்திலுள்ள ஆலயத்தில் கடவுளை வழிபட வருவார். அந்த ஆலயத்தில் ஏலி என்பவர் தலைமைக் குருவாக இருந்தார்.
ஆண்டுதோறும் அன்னா ஆண்டவரின் ஆலயத்துக்குள் வந்து மனம் கசிந்து கண்ணீர் விட்டு அழுவாள். அவள் உண்ணாமல் அழும்போதெல்லாம், “நீ ஏன் அழறே, நான் உனக்கு பத்து பிள்ளைகளுக்குச் சமம் இல்லையா ?” என செல்லமாய் ஆறுதல் சொல்வார் எல்கானா. ஆனாலும் அவளுடைய துயரம் குறையவில்லை.
ஒருநாள் ஆலய முற்றத்தில் வழக்கம் போல அன்னா அழுது புலம்பி கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார். “ஆண்டவரே என்னோட கஷ்டத்தைப் பாத்து எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் குடுங்க. அந்தக் குழந்தையை நான் வாழ்நாள் முழுக்க உங்களுக்காகவே ஒப்புக்கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டிருந்தாள். அந்த ஆலய முற்றத்தில் தலைமைக் குரு ஏலி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.
ஏலி தூரத்திலிருந்து கவனித்தபோது அன்னா குடிபோதையில் உளறிக் கொண்டிருப்பது போல அவருக்குத் தோன்றியது. ஆலயவாசலில் ஒரு பெண் குடிபோதையில் உளறுகிறாளே என்று ஏலி விரைவாய் அவளிடம் வந்தார். “எவ்வளவு காலம் தான் நீ குடிகாரியா இருப்பாய் ? குடிக்கிறதை நிறுத்து” என்றார் அவர். அன்னா பதறினார். “ஐயோ நான் குடிகாரியல்ல. மனம் நொந்து போய் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.” என்றாள். ஏலி மனம் வருந்தினார்.. “கவலைப்படாதே, உன் விண்ணப்பத்தைக் கடவுள் கேட்டருள்வார்” என்றார்.
அன்னா மனம் மகிழ்ந்தாள், “உமது அடியாள், உம் கண்முன்னே அருள் பெறுவாளாக” என்று சொல்லிவிட்டு லேசான மனதுடன் கவலையின்றி நடந்து போனாள். அன்னாவின் வேண்டுதல் கேட்கப்பட்டது ! குழந்தைகளே இல்லாத அன்னாளுக்கும் எல்கானாவுக்கும் ஒரு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள்.
கடவுள் அருளினால் அதிசயமாய்ப் பிறந்த மகனை அன்னா பாலூட்டிச் சீராட்டி வளர்த்தாள். அவன் பால்குடி மறந்ததும் அவனை ஆலயத்தில் இறை பணிக்கென விட்டு விடுவதாய் ஏற்பாடு. எல்கானா மறுப்பு சொல்லவில்லை. சாமுவேல் சிறுவனாகி பால்குடி மறந்ததும் அவனைத் தூக்கிக் கொண்டு அன்னா ஆலயத்துக்கு வந்தாள். வந்து குரு ஏலியின் முன்னாள் நின்றாள். “குருவே… அன்று குடிபோதையில் உளறுவதைப் போல பேசிய பெண் நானே. இந்தக் குழந்தைக்காகத் தான் அப்படி வேண்டினேன். என் விண்ணப்பத்தைக் கேட்ட கடவுளுக்கே இவனை அர்ப்பணிக்கிறேன். இவன் வாழ்நாள் முழுதும் கடவுளுக்கே அர்ப்பணிக்கப் பட்டவன்” என்றாள்.
அன்னாவின் வாழ்க்கை சில விஷயங்களைக் கற்றுத் தருகிறது.
முதலாவது, தளராத விசுவாசம். தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குழந்தைகள் இல்லை. ஆனாலும் அன்னா பிரார்த்தனையில் இருந்து பின் வாங்கவில்லை. கடவுள் அவருக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கும் வரை அவர் தொடர்ந்து மனமுருகி வேண்டுகிறார்.
தனக்கு ஒரு குழந்தை வேண்டும் எனும் அன்னாவின் பிரார்த்தனை பின்னர், “உமக்காய் எனக்கு ஒரு குழந்தையைத் தாரும்” எனும் நிலைக்கு மாறியது. இறைவனை முதன்மைப் படுத்தும் போது விண்ணப்பங்கள் விரைவாய் அங்கீகரிக்கப்படுகின்றன.
கடவுளின் திட்டம் வியப்பானது. அன்னாவுக்கு முதலிலேயே குழந்தை பிறந்திருந்தால் அவன் ஆலயத்திற்கு அற்பணிக்கப்பட்டிருக்க மாட்டான். சாமுவேல் எனும் மாபெரும் தீர்க்கத் தரிசி மனுக்குல வரலாற்றுக்குக் கிடைத்திருக்க மாட்டார். கடவுளின் திட்டம் என்ன என்பது மனிதக் கண்களுக்கு மிகத் தாமதமாகவே விளங்குகிறது.
விண்ணப்பம் கிடைத்ததும் கடவுளை மறக்கவில்லை அன்னா. உயிருக்கு உயிராய் வளர்த்த குழந்தையையே ஆலயத்தில் இறை பணிக்காய் முழு மனதுடன், ஆனந்தத்துடன் ஒப்புக்கொடுக்கிறாள். கடவுளுக்காய் ஒரு நன்றிப் பாடலையும் பாடுகிறாள்.
சாராள், ரபேக்கா, ராகேல், அன்னா என விவிலியத்தில் குழந்தைகளுக்காய் அழுது புலம்பிய அன்னையர் அனேகர். அவர்கள் மூலமாய் பிறந்த குழந்தைகள் தான் ஈசாக், யாக்கோபு, யோசேப்பு, சாமுவேல் என விசுவாச வாழ்க்கையைக் கட்டிக் காக்கும் மாபெரும் தூண்களாக மாறியிருக்கிறார்கள்.
நமது விண்ணப்பங்கள் உடனுக்குடன் அங்கீகரிக்கப் படவில்லையேல் கடவுள் நம்மை கை விட்டு விட்டார் என புலம்புகிறோம். தாமதம் என்பது நிராகரிப்பு அல்ல, நமது விசுவாசத்துக்கான சோதனை என்பதை உணர்ந்து இறையில் நிலைத்திருப்போம் !
ஃ