யூதா தேசத்தை யோசபாத்து மன்னனும், இஸ்ரயேல் தேசத்தை ஆகாபு மன்னனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம்.
இஸ்ரயேல் மன்னன் யோசபாத்தைப் பார்த்து “இராமோத்து, கிலயாது நமக்குரிய இடம். எதிரிகளின் கையில் இருக்கிறது. வருகிறீர்களா ? போரிட்டு அந்த நாட்டை மீட்போம்” என்று கேட்டான்.
“நான் தயார் தான். கடவுளுடைய வாக்கு என்ன என்பதை முதலில் நாம் கேட்டறிய வேண்டும்” என்றார் யோசபாத்து.
இஸ்ரயேல் மன்னன் மனதுக்குள் திட்டமிட்டான். எப்படியாவது யோசபாத்தை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, போலி இறைவாக்கினர்கள் கொஞ்சம் பேரை கொண்டு வந்து நிறுத்தி, பொய் சொல்ல வைக்க வேண்டும்.
அதன்படி அவன் நானூறு பொய் இறைவாக்கினர்களைக் கூட்டி வந்தான். அவர்களிடம்
“போருக்குப் போகலாமா, கூடாதா ? இறைவனின் வாக்கு என்ன ?” என்று கேட்டான்.
ஏற்கனவே பேசி வைத்ததன் படி அவர்கள் “கண்டிப்பாக போகலாம், கடவுள் உங்களுக்கே வெற்றியளிப்பார்” என்று கதையளந்தனர்.
“இரும்புக் கொம்புகளைச் செய்து அவற்றின் மூலம் குத்தினால் எதிரி காலி” என்றார் ஒருவர். ஆமாம்.. ஆமாம் என ஒத்து ஊதினர் மற்றவர்கள்.
யோசபாத்துக்கு அவர்கள் சொல்வது பொய் என்பது பளிச் என தெரிந்தது. எனவே மன்னனை நோக்கி, “இங்கே உண்மையான இறைவாக்கினர்கள் யாரும் இல்லையா ?” என்று கேட்டார்.
இஸ்ரயேல் மன்னன் சுவாரஸ்யமில்லாத குரலில் சொன்னான். ” மீக்காயா என்று ஒருத்தன் இருக்கிறான். ஆனா எனக்கு அவனைப் புடிக்காது. எப்பவுமே எனக்கு எதிராத் தான் பேசுவான்”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க அரசரே. கடவுளின் உண்மையான விருப்பத்தைக் கேட்போம். அவரை அழைத்து வாருங்கள்”
இஸ்ரயேல் மன்னனுக்கு வேறு வழியில்லை. வீரன் ஒருவனை அனுப்பி மீக்காயாவை அழைத்து வர ஆணையிட்டான். மீக்காயா என்பதற்கு “ஆண்டவருக்கு நிகர் யார்” என்பது பொருள். இவருடைய வாழ்க்கைக் காலம் கி.மு 874 க்கும் 853க்கும் இடைப்பட்ட காலம்.
வீரன் மீக்காயாவிடம் சென்று விஷயத்தைச் சொல்லி,
“எல்லாரும் நம்ம மன்னனுக்கு சாதகமா பேசிட்டிருக்காங்க. நீயும் அப்படியே பேசு” என்றான்.
“மன்னன் நினைப்பதையல்ல, கடவுள் சொல்வதையே பேசுவேன்” என்று சொன்ன மீக்காயா. மன்னனின் முன் வந்து நின்றார். இறைவாக்கு உரைத்தார்.
“இது கடவுளின் விருப்பமல்ல. அவனவன் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும்” என்றார்.
மன்னன் கோபமடைந்தார். “பாத்தீங்களா, இவன் எனக்கு எதிராத் தான் பேசுவான்னு அப்பவே சொன்னேனே… ” என்றார்.
மீக்காயா தொடர்ந்தார்.
“நான் காட்சி கண்டேன். போருக்கு உன்னைத் தூண்டி விடும்படி செய்ததே கடவுளின் ஆவி தான். போலி இறைவாக்கினர்களின் நாவில் பொய்யை வைத்ததே அவர் தான். உனக்குத் தீங்கான வாக்கு அது” என்றார்.
“ஓஹோ.. அப்போ இப்போ எப்படி எங்களிடமிருந்து ஆவி ஓடி உன்னிடம் வந்தது ?” என்று சொல்லி ஒரு போலி இறைவாக்கினர் மீக்காயாவின் கன்னத்தில் அறைந்தான்.
“மீக்காவைச் சிறையில் அடையுங்கள்” மன்னன் கோபத்தில் கத்தினான். “இவனுக்கு ஒழுங்கான சாப்பாடு போடாதீங்க. நான் போரை நலமாய் முடித்து வரும் வரை இவன் அங்கேயே கிடக்கட்டும்”
மீக்காயா சிரித்தார். “மன்னரே.. நீர் நலமாய்த் திரும்பி வந்தால், கடவுள் என்னிடம் பேசவில்லை என்று அர்த்தம். இதற்கு மக்களே சாட்சி. நீர் திரும்பி வரப் போவதில்லை” என்றார்.
இஸ்ரயேல் மன்னன் யோசபாத்தையும் அழைத்துக் கொண்டு போருக்கு கிளம்பினான். இருந்தாலும் இஸ்ரயேல் மன்னனுக்கு மனதில் ஒரு பயம் இருந்தது. எனவே யோசபாத்தை நோக்கி, “நீர் மன்னனின் ஆடைகளை அணிந்து கொண்டு போங்கள். நான் மாறுவேடத்தில் வருகிறேன்” என்றார்.
யோசபாத்து வேறு வழியில்லாமல் மன்னனைப் போல வேடமேற்றுப் போனார். இஸ்ரயேல் மன்னன் ஆகாபு மாறு வேடத்தில் போர்க்களம் போனான்.
போர்க்களத்தில் எதிரி வீரர்கள் யோசபாத் தான் இஸ்ரயேல் மன்னன் என நினைத்து சுற்றி வளைத்தார்கள். யோசபாத் கடவுளை நோக்கி கூப்பிட்டார். கடவுள் செவிகொடுத்தார். எதிரிகள் விலகிப் போகச் செய்தார். ஆனாலும் ஒருவன் வில்லை நாணேற்றி அம்பெய்தான். அது குறி தவறி மாறுவேடத்தில் இருந்த ஆகாபு மன்னனின் மீது பாய்ந்தது. அவன் இறந்தான்.
யோசபாத் மன்னன் நலமாய் நாடுதிரும்பினார். கடவுள் அவரை அதிசயமாய் மீட்டதினால் அவர் சிலிர்ப்படைந்திருந்தார். அதன்பின் தனது ஆட்சி முறையை கடவுளுக்குப் பிடித்தமான வகையில் முழுக்க முழுக்க மாற்றினார்.
நூற்றுக்கணக்கான மக்கள் சொல்வதால் ஒரு பொய் உண்மையாவதில்லை, ஒரே ஒரு தேவ மனிதர் சொல்கிறார் என்பதால் உண்மை பொய்யாவதில்லை. கூட்டத்தை நம்பாமல், கடவுளின் உண்மைக் குரலை நம்பவேண்டும் என்பதே மீக்காயாவின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடமாகும்.
ஃ