பைபிள் மனிதர்கள் 42 (தினத்தந்தி) சாலமோன் மன்னன்

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் – சாலமோன் ( நீதிமொழிகள் 1 : 7 )

சாலமோன் மன்னன் அரசவையிலே வீற்றிருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு வினோத வழக்கு. வழக்குடன் வந்தவர்கள் இரண்டு பெண்கள். இருவரும் ஒரே வீட்டில் குடியிருப்பவர்கள். அந்த வீட்டில் அவர்களைத் தவிர யாரும் இல்லை. வழக்கு இது தான்.

ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. பிறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு மற்றவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அவள் இரவில் தூங்கும் போது, தெரியாமல் தனது குழந்தையின் மீது புரண்டு படுக்க குழந்தை இறந்து விடுகிறது. இறந்த குழந்தையை அவள் நைசாகத் தூக்கிக் கொண்டு போய், மற்ற தாயின் அருகே கிடத்தி விட்டு, அவளுடைய குழந்தையை தன்னருகே வைத்துக் கொண்டாள்.

காலையில் தன்னருகே இறந்து கிடந்த குழந்தையைக் கண்ட தாய் முதலில் அதிர்ச்சியடைந்தாள். பிறகு உற்றுப் பார்க்கையில் அது தனது குழந்தையல்ல என கண்டு கொள்கிறாள். இப்போது இருவருமே உயிருடன் இருக்கும் குழந்தைக்காக சண்டை போடுகின்றனர். இந்த வழக்கு தான் சாலமோன் மன்னனின் முன்னில் வந்து சேர்ந்தது.

அரசவை நகம் கடித்தது. மன்னர் சில வினாடிகள் மௌனமாய் இருந்தார். பின் காவலரை அழைத்து ஒரு வாளைக் கொண்டு வரச் சொன்னார். வாள் வந்தது. “இந்தக் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்கொரு துண்டு கொடுங்கள்” என மன்னன் கட்டளையிட்டான். குழந்தையின் உண்மையான தாயோ பதறினாள். “ஐயோ.. வேண்டாம்..வேண்டாம்.. அவளே குழந்தையை வளர்க்கட்டும்” என்றாள். மற்ற தாயோ, உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். ஆளுக்கொரு துண்டாய் எடுத்துக் கொள்ளலாம் என்றாள்.

குழந்தையைக் கொல்லவேண்டாம் என்றவளே உண்மையான தாய் என மன்னன் தீர்ப்பளித்தார். நாட்டு மக்களெல்லாரும் வியந்தனர், கொஞ்சம் பயந்தனர்.

உலகிலேயே அதிக ஞானமுடையவர் என விவிலியம் சாலமோன் மன்னனைக் குறிப்பிடுகிறது. கடவுள் ஒரு முறை அவருக்குக் கனவில் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும்” என கேட்டபோது “மக்களை வழிநடத்த ஞானம் கொடுங்கள்” என கேட்டார் மன்னன். கடவுள் மகிழ்ந்தார். செல்வமோ, புகழோ கேட்காததால் அவருக்கு ஞானத்தையும், கூடவே செல்வத்தையும், புகழையும் கொடுத்து கடவுள் அவரை மிகப்பெரிய நபராய் மாற்றினார்.

கி.மு 1000 சாலமோன் மன்னனுடைய பிறந்த வருடம். தாவீது மன்னரின் மகனான இவர் சுமார் 40 ஆண்டுகள் யூதா, மற்றும் இஸ்ரேல் நாடுகளை அரசாட்சி செய்தவர். இஸ்ரேல் நாட்டின் மூன்றாவது மன்னன் இவர் !

எருசலேம் தேவாலயம், மிகப் புகழ்பெற்ற ஆன்மீக, மற்றும் வரலாற்றுத் தளம். அந்த ஆலயம் “. எருசலேமின் பொற்காலம் “ என அழைக்கப்படும் சாலமோன் மன்னன் ஆட்சியில் தான் கட்டப்பட்டது.

பைபிளில் இடம் பெற்றிருக்கும் நீதி மொழிகள், உன்னதப் பாடல் மற்றும் பிரசங்கி ஆகிய மூன்று நூல்களையும் சாலமோன் மன்னன் எழுதியிருக்கிறார். இதில் நீதிமொழிகள் எனும் நூல் உலக தத்துவ நூல்களெக்கெல்லாம் பிதாமகன் போல கம்பீரமாய் வாழ்க்கை வழிகளை சொல்கிறது.

கடவுளின் செல்லப் பிள்ளையாக சாலமோன் மன்னன் இருந்தார். புகழிலும், செல்வத்திலும், ஞானத்திலும் அவரே உச்சியில் இருந்தார்.

தனது வாழ்வின் பிற்காலத்தில் சிற்றின்பத்தில் சிக்கி, 700 மனைவியர், 300 வைப்பாட்டிகள் என வாழ்விழந்தார். அந்தப் பெண்களின் தலையணை மந்திரங்களில் சிக்கிக் கொண்டு இறைவனை விட்டு விலகியும் நடந்தார்.

இறைவனுக்கு வெகு அருகில், இறைவனை விட்டு வெகு தொலைவில் என இரண்டு விதமான எல்லைகளையும் கண்ட வாழ்க்கையாக சாலமோன் மன்னனின் வாழ்க்கை அமைந்து விட்டது. இறைவனின் மீதான பிணைப்பிலிருந்து விலகினால் எத்தனை உயரத்தில் இருப்பவருக்கும், துயரத்தின் வாழ்க்கை அமையும் என்பதையே அவருடைய வாழ்க்கை சொல்கிறது !

சாலமோன் மன்னன் எழுதிய ஆயிரக்கணக்கான நீதி, தத்துவ, வாழ்வியல் மொழிகளின் சில சாம்பிள்கள் இவை.

உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே, அவை உன் தலைக்கு அணிமுடி: உன் கழுத்துக்கு மணிமாலை – நீ.மொ 1 : 8

விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும். நீ.மொ 4 : 23

எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உண்ணக் கொடு, தாகத்தோடு இருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.  நீதி மொழி : 25 : 21-22

ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பர் : தம் பேச்சின் விளைவை அவர் துய்த்தாக வேண்டும். நீ. மொ 18 : 20

*

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s