ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.
“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”
” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.
“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.
சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.
” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள். அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்” குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
குரு கடைசியாகச் சொன்னார்,
“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”
குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.
குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.
தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.
அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு கணவனின் கனவு அன்பு என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புகளைக் கூட அவன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு கரை புரண்டு ஓடினால் போதும்.
பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.
விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் மனைவி வேண்டும் என்பது ஆண்களின் கனவுகளில் முக்கியமானது.
ஆணும் பெண்ணும் இரண்டு சிறகுகளாக மாறி குடும்பம் உடலைச் சுமந்து செல்ல வேண்டும். ஆணும் பெண்ணும் இரண்டு பக்கங்களாக மாறி நாணயத்துக்கு மதிப்பு கூட்ட வேண்டும். பகலின் வெப்பமாய் ஆண் மாறும் போது, இரவின் தண்மையாய் பெண் மாற வேண்டும். வெப்பமாய் பெண் மாறினால் நிலவாய் ஆண் மாற வேண்டும். இப்படி இணைந்து பயணிக்கும் தண்டவாளங்கள் போல இணைந்தே திரியும் ஒரு அற்புத வாழ்க்கை கணவனின் கனவுகளில் சிறப்பிடம் பிடிக்கும்.
பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.
1
நேரடியாக எதையும் பேசுவது ஆண்களின் இயல்பு. பாத்திரத்தின் சத்தத்திலோ, கதவை சாத்தும் வேகத்திலோ, பிள்ளைகளைத் திட்டும் வார்த்தைகளிலோ கோபத்தைக் காட்டுவது பெண்களின் இயல்பு. எதையும் நேரடியாகப் பேசும் நிலைக்கு தனது மனைவி வரவேண்டும். அதுவும் கண்களில் அனலோடு வராமல் நிழலோடு வரவேண்டும் என்பது கணவனின் கனவுகளில் நிச்சயம் உண்டு.
2
பக்கத்து வீட்டுக் கதைகளிலிருந்தோ, சீரியலில் வரும் குடும்பங்களிலிருந்தோ, தூரத்துச் சொந்தக்காரனின் பஜ்ஜி உரையாடல்களிலிருந்தோ, அம்மாக்களின் உரசல்களில் இருந்தோ அடுத்த சண்டைக்கான நெருப்பை மனைவி பெற்று விடக் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத மனிதன் இருக்க முடியுமா ?
3
” பதிலை நம்பப் போவதில்லை” எனும் முடிவுடன், “ஏங்க லேட்டு…” எனக் கேட்கும் மனைவிக்குப் பதில் சொல்லும் உலக மகா சங்கடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் எனும் கனவு இல்லாத கணவன் இருக்க முடியுமா ?
4
நமக்கு மட்டும் ஏன் மறதியை ஆண்டவன் கொடுத்தான். பெண்களுக்கு மட்டும் ஏன் ஞாபக சக்தியை அளவுக்கு அதிகமாக கொடுத்தார். “கெட்ட விஷயங்களை உடனே மறந்து நல்ல விஷயங்களை மட்டும் மனசுல வெச்சுக்க மாட்டாளா” என் மனைவி ? எனும் கனவில்லாத கணவன் உண்டா ?
5
வீட்டுக்காக, மனைவிக்காக என்ன செய்தாலும் ஒரு சின்ன பாராட்டு கூட கிடைக்க மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன தப்பு பண்ணினா கூட போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா சண்டை நடக்குது. எப்போ நம்ம மனைவி நாம பண்ற நல்ல விஷயங்களைப் பாராட்டப் போறாங்க ? எனும் கனவு வராமல் போகுமா என்ன ?
6
பிள்ளைங்கள பாக்க வேண்டியது. இல்லேன்னா அம்மாவைப் பாக்க வேண்டியது. இல்லேன்னா தோழிகளைப் பாக்க வேண்டியது. ஒண்ணும் இல்லேன்னா சீரியலைப் பாக்க வேண்டியது. எப்போ தான் நம்ம மனைவி நம்மைப் பார்ப்பாங்க எனும் எதிர்பார்ப்பு கலந்த கனவு இல்லாத கணவன் யார் ?7
தாம்பத்யம் என்பது ஆனந்தத்தின் பகிர்தல். அது வலுக்கட்டாயமாய் எழுதி வாங்கும் உயில்ப்பத்திரம் அல்ல. அதில் உடல்களை விட அதிகம் உணர்வுகள் பேச வேண்டும். அதை ஒரு ஆயுதமாகவோ, பழி வாங்கும் யுத்தியாகவோ மனைவி பயன்படுத்தக் கூடாது எனும் கனவு கணவனுக்கு இல்லாமல் போகுமா.
8
என்னை புரிஞ்சுக்கவே மாட்டீங்க” என மனைவியின் குரல் ஒலிக்காத வீடுகள் இருக்க முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றே மனைவிகள் சொல்வார்கள். புரிந்து கொள்வது என்பது அவர்களைப் பொறுத்தவரை, சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடுவது. இந்த நிலை மாற வேண்டுமென பகல் கனவு காணாத கணவன் உண்டோ ?
9
நன்றி என்பது ரொம்ப காஸ்ட்லி விஷயமா என்ன ? ஒரு சின்ன நன்றி கூட சொல்ல மாட்டாங்களா நம்ம மனைவி என புலம்பாத( மனதுக்குள் தான் ) கணவன் யார் ? மனைவி நம் செயலுக்கு நன்றி சொல்ல வேண்டுமென கனவு காணாத கணவன் உண்டா ?
10
நாம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பது கணவன்களின் கனவுகளில் ஒன்று. அப்படி முழு ஆதரவு கிடைக்காவிட்டால் கூட குதர்க்கமாய்ப் பேசி எரிச்சலடையச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது சர்வ நிச்சயக் கனவு தானே !
இப்படி எல்லா கண்களிலும் கனவுகள் இருக்கின்றன, அந்தக் கனவுகள் பலிப்பதும் பலிக்காததும் மனைவியரின் கடிவாளத்தில் அடங்கியிருக்கின்றன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?
சரி, மனைவியரின் கனவுகள் என்னவாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரியும். அப்புறமென்ன ? கனவுகள் தொடர வாழ்த்துகள்.
*
நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி & லண்டன்
You must be logged in to post a comment.