ஊனம் தடையல்ல

 மோசமான குணாதிசயம் தவிர ஊனம் வேறு இல்லை 
 – ஸ்காட் ஹேமில்டன். 

ஏதேனும் சின்னக் குறைபாடு இருந்தால் கூட அதைச் சுட்டிக் காட்டி தனது தோல்வியையோ, சோம்பேறித்தனத்தையோ நியாயப்படுத்தும் மக்கள் நம்மைச் சுற்றி ஏராளம் ஏராளம். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடல் ஊனம் ஒரு பொருட்டே அல்ல !

பேராசிரியர் ஸ்டீபன் ஹாப்கின்ஸ் பற்றித் தெரியவில்லையென்றால் உங்களுக்கு அறிவியல் அலர்ஜி அன்று அர்த்தம். சமகால அறிவியலார்களில் வியப்பின் குறியீடாக இருப்பவர் இவர். இவருடைய “எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகம். உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை இதை “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனும் பெயரில் அற்புதமாய் தமிழ்ப் படுத்தியும் இருக்கிறது.

இதைத் தவிரவும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். பிரபஞ்சத்தைப் பற்றியும், உலகத்தின் தோன்றல் போன்றவை பற்றியும் இவர் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. இதில் வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால் இவருக்கு இருக்கும் நோய் தான்.

1942ம் ஆண்டு இவர் பிறந்தார். அவருடைய 21வது வயதில் இவருக்கு ஒரு மிகப்பெரிய நரம்பு சார் நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவருடைய நோய் அமியோட்ரோபிக் லேட்டரல் செலரோஸிஸ் (amyotrophic lateral sclerosis ) அதாவது உடல் மொத்தமும் செயலிழந்து போகும் நிலை.

இவரால் மூன்று சக்கர வாகனத்தை விட்டு எழும்ப முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. தலையை அசைக்கலாம். பேசுவதற்குக் கூட மைக் தேவைப்படும் ! தனது 21ம் வயதிலேயே இந்தக்  கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டார் இவர். “இன்னும் ரெண்டே வருஷம் தான்” என்று அவருக்கு டாக்டர்கள் கெடு விதித்தார்கள்.

இன்று அவருக்கு 70 வயது ! மரணத்தை வென்றது மட்டுமல்லாமல் அறிவியலையும் அறிந்து உலகையே வியக்க வைத்தார் இவர். 2009ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருதான “பிரசிடன்ஷியல் மெடல் ஆஃப் பிரீடம்” வழங்கப்பட்டது ! தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகட்த்தின் ஒரு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குனராக இருக்கிறார்.

அறிவியல் உலகை இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கும் மாமேதையான ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்க்கு அவருடைய குறைபாடு எப்போதாவது தடைக்கல்லாய் இருந்திருக்குமா ?

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ, கோபம் கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை நன்றாகவே வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் துவங்கினால் வாழ நேரம் கிடைக்காது” எனும் அவருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ள தன்னம்பிக்கை வாசகங்கள் உயிரை உலுக்குகின்றன.

ஊனம் உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை. அவர்கள் இன்னொரு ஏரியாவில் மிகவும் பலமானவர்களாக இருப்பார்கள். உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பதில்லை. சோதனைகளைத் தரும் இறைவன் அதைத் தாங்கும் மன உறுதியையும் சேர்த்தே தருகிறார். அதை நம்பிக்கையோடு பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே நமது பணி.

நிக் வாயிச்சஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? 1982ம் ஆண்டு அவர் பிறந்தார். துயரம் என்னவென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கிடையாது, இரண்டு கால்களும் கிடையாது. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும்.

ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் “லைஃப் வித்தவுட் லிம்ப்” எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?

தனக்கு ஊனம் இருக்கிறது என நினைப்பது மட்டுமே ஊனம். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்.

பெருந்தன்மை பழகு

உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை. உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –

கலீல் ஜிப்ரான்

ஆலயத்தின் முன்னால் இருந்தது அந்தக் காணிக்கைப் பெட்டி. செல்வந்தர்கள் வந்தார்கள் தங்கள் கைகளில் அள்ளி வந்திருந்த பணத்தை அதில் கொட்டினார்கள். தங்கள் பெருந்தன்மையை அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் எனும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது. அப்போது ஒரு ஏழை விதவையும் வந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டே இரண்டு காசுகள் இருந்தன. அதைப் போட்டாள். அமைதியாய்க் கடந்து போனாள். அள்ளிக் கொட்டியவர்கள் இந்தப் பெண் கிள்ளிப் போட்டதை ஏளனமாய்ப் பார்த்திருக்கக் கூடும்.

ஓரமாய் அமர்ந்திருந்த இயேசு சொன்னார். “இந்த உண்டியலில் அதிகமாய்க் காணிக்கை போட்டது அந்த ஏழை விதவை தான். எல்லோரும் தன்னிடமிருந்ததில் மிகுதியானதைப் போட்டார்கள். இவளோ தன்னிடம் இருக்கும் முழுவதையும் போட்டுவிட்டாள்” என்றார்.

பெருந்தன்மை என்பது பிச்சையிடுதல் அல்ல. பெருந்தன்மை என்பது தேவையில் இருக்கும் இன்னொருவரின் தேவையை நிறைவேற்றும் மனநிலையும், செயல்பாடும். ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது, ஒரு அன்பின் செயலுக்கான கதவு நம் முன்னால் திறக்கிறது என்பார்கள். அந்தக் கதவைக் கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடும்போது மனித நேயத்தை மறுதலித்தவர்களாய் மாறிவிடுகிறோம். தன்னலம் தாண்டிய இடங்களில் மட்டுமே பெருந்தன்மை கிளை விட்டுச் செழிக்க முடியும்.

எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறுவயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது. “தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?” மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன்  “சரி” என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், ”நான் எப்போது சாகத் துவங்குவேன் ?”.

நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள். தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள் ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இது தான் தன்னலமற்ற அன்பின் வடிவம் !

“நான்” என்பதை பின்னால் நிறுத்தி “நீ, உனது விருப்பம்” என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.

நமக்கு என்ன கிடைக்கிறது என்பது நமது வாழ்தலின் அடிப்படையாகிறது. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதே நமது வாழ்வின் அடிப்படையாகிறது – என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். கொடுத்தல் என்பது வெறும் பணம் சார்ந்ததல்ல ! அது உங்கள் திறமை, நேரம், அருகாமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மன்னிப்பு, ஆறுதல் என அதன் முகம் வேறு படலாம். வகைகள் எதுவானாலும் வேர் என்பது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்வோம்.

பெருந்தன்மை என்பது வெறுமனே மனதுக்குள் சொல்லிப் பார்க்க வேண்டிய கவிதையோ, பாடலோ அல்ல. அது ஒரு செயலாக வெளிப்பட வேண்டிய உயரிய குணாதிசயம். ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும் போதும் பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் எனும் சிந்தனை மனதின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கட்டும். பெருந்தன்மையைக் கவனமாகச் செயல்படுத்தத் துவங்கினாலே அது நமது வாழ்வின் பாகமாக மாறிவிடும்.

யாருக்கு உதவி செய்தால் அவர்களால் திருப்பி உங்களுக்குத் தர இயலாதோ அந்த அளவுக்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவது உயரிய நிலை. நமது வீட்டின் கதவுகள் ஏழைகளுக்காகவும் திறந்தே இருப்பது பெருந்தன்மையின் அழகிய நிலை. பெருந்தன்மை உடையவர்கள் தான் மனதளவில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கொடுப்பது என்பது இழப்பது அல்ல ! சேமிப்பது ! பிறருடைய அன்பையும், வாழ்வுக்கான அர்த்தத்தையும் !

சிரியுங்கள்

புனிதர்களோடு அமர்ந்து அழுவதை விட  பாவிகளோடு சேர்ந்தாவது 
சிரிப்பதையே விரும்புவேன்  –  பில்லி ஜோயல்

சிலர் சிரிப்பதற்குக் காசு கேட்பார்கள். உம்மணாமூஞ்சிகள் என அவர்களுக்கு ஒரு செல்லப் பெயரை வைத்து உலகம் அழைக்கும். சிலரோ சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சிரிப்பு ஒரு அற்புதமான விஷயம். என்ன செய்ய, இன்றைய நாகரீக உலகில் பல வேளைகளில் சிரிப்பதே கூட அநாகரீகமாய் பார்க்கப்படுகிறது !

கிராமங்களிலுள்ள கல்யாண வீடுகளைப் போய்ப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து சிரியோ சிரியென சிரித்து மகிழ்வது வெகு சகஜமாகக் காணக் கிடைக்கும் காட்சி. ஆனால் நகர்ப்புறத்தில் அது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே ஒரு சின்ன சத்தம் எழுந்தால் கூட  “சத்தம் போடாதேப்பா, மெதுவா மெதுவா” என ஏதோ தீவிரவாதிகளில் ரகசியத் திட்டம் போலத் தான் பேசிக்கொள்கிறார்கள்.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது. வஞ்சகமில்லாமல் சிரித்து வாழ்பவர்களுக்கு எண்டோதெலியத்தை ஆரோக்கியமாக்குகிறது. இரத்தக் குழாய்கள் சீராக இயங்குகின்றன என்பதெல்லாம் மருத்துவ உலகம் சொல்லும் ஆராய்ச்சி விளக்கங்கள்.

ஏதோ சிரிப்பது மனம் சார்ந்த விஷயம் என எட்டியே நிற்பவர்கள் கொஞ்சம் பக்கம் வாருங்கள். சிரிப்பதால் உடல் ஆரோக்கியம் தான் கணிசமாக ஏறுகிறது. மூளைக்கு அதிக ஆக்சிஜன் ஏற்றுமதியாகி, மூளை சட்டென சுறுசுறுப்பாகிறது. உடல் தசைகள், முக தசைகள் போன்றவை மிகவும் ஆரோக்கியமாக விளங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அப்படியே உடலுக்குள்ளும் பாய்ந்து ஒட்டுமொத்த உடலையுமே ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது.

சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

நிறுவனங்கள் இப்போது சிரிப்பு விஷயத்தைச் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்தால் தான் வேலை நன்றாக நடக்கும் என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் அவை ஊழியர்களுக்கென சிரிப்பு மூட்டும் கிச்சு கிச்சு நிகழ்ச்சிகளையும், கிச்சு கிச்சு பொழுதுபோக்கு அம்சங்களையும் நடத்துகின்றன.

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார்.

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது.

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்பு தனி மனித பயன் என்பதையும் தாண்டி வேலை சார்ந்த விஷயங்களிலும் ஊழியர்களை மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கிறது என்பது ஸ்பெஷல் செய்தி. சிரிப்பை அதிகம் நேசிப்பவர்கள் அதிக சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. இதன் மூலம் வேலையில் முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவையான கிரியேட்டிவிட்டி, புதுமைச் சிந்தனை போன்றவற்றை தூசு தட்டி சரிப்படுத்தும் வல்லமையும் சிரிப்புக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதற்கும், அடுத்த நபரை உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கும் கூட இந்த சிரிப்பு ரொம்பவே பயனுள்ளதாய் இருக்கிறது. கூடவே ஒரு பாசிடிவ் வேலைச் சூழலை இத்தகைய உற்சாகமான சிரிப்பு தருகிறது !

எனவே, சிரிப்பு ஒரு சீரியஸ் சமாச்சாரம் என்பதை மனதில் எழுதுங்கள்.

அன்பு வெற்றியாளர்களை உருவாக்கும்

ஒவ்வொரு மனிதனும் அன்பு செய்யவும், 
அன்பு செய்யப் படவுமே உருவாக்கப்பட்டுள்ளான்.
 –  அன்னை தெரேசா

சில குழந்தைகளைப் பார்த்தால் ரொம்பவே உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலரோ ரொம்பவே அமைதியாக, தனிமையாக இருப்பார்கள்.

சில இளைஞர்கள் மிகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகளுக்குத் தாவி ஓடிக் கொண்டே இருப்பார்கள். வேறு சில இளைஞர்கள் வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிக்க முடியாமல் பின் தங்கி விடுவார்கள். பெரும்பாலும் கிடைக்கும் இடத்தில் தங்களை நுழைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முயல்வார்கள். இந்த வித்தியாசங்கள் பல வேளைகளில் நம்மை வியப்படைய வைக்கிறது.

இதன் காரணம் என்ன என்பதை பல்வேறு உளவியலார்கள் ஆராய்ந்தார்கள். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் சொன்னது என்ன தெரியுமா ? “அன்பு தான் இந்த மாற்றங்களுக்கான காரணம் !”

கொஞ்சம் ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு தான். ஒருவனுடைய தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் அடி நாதமாக இயங்குவது அவன் தன்னுடைய குடும்பத்தில் எத்தகைய சூழலில் வளக்கப்பட்டான் என்பதே ! சின்ன வயதிலேயே பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைத்து வளரும் பிள்ளைகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்கிறார்கள் என்பதே அந்த ஆய்வு முடிவு.

இன்றைய பெற்றோர் தங்களுடைய பொருளாதார ஓட்டங்களுக்காக குடும்ப உறவுகளை பின் தங்க வைத்து விடுவது வேதனையான உண்மை. அவர்களுக்கு குடும்ப உறவு என்பது நள்ளிரவு தாண்டியோ, வார இறுதி நாட்களிலோ மட்டுமே பூக்கின்ற பூ தான்.

அப்படிப்பட்ட தந்தை ஒருவரிடம் மகன் ஒரு நாள் கேட்டான். “அப்பா, நீங்க ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ ரூபா சம்பாதிப்பீங்க ?”

“நான் எவ்ளோ சம்பாதிச்சா உனக்கென்னடா ? ஏழு வயசுல இதெல்லாம் என்ன கேள்வி ?”

“சொல்லுங்கப்பா பிளீஸ்”

“ஒரு மணி நேரத்துக்கு நான் நூறு ரூபா சம்பாதிப்பேன்.”

“சரி எனக்கு ஒரு நாப்பது ரூபா குடுங்க “

தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் எனக் கேட்டு, நாசூக்காய் நாற்பது ரூபாய் கேட்கும் மகனிடம் தந்தைக்கு எரிச்சல் வந்தது. பளாரென ஒரு அறை கொடுத்து விட்டு போய்விட்டார். ஆனால் இரவில் அவருக்கு மனம் வலித்தது. நேராகப் பையனிடம் சென்றார். “இந்தாப்பா 40 ரூபா. ஏன் ஸ்கூல்ல ஏதாச்சும் வாங்கணுமா ?”

பையனோ பதில் பேசாமல் ஓடிச் சென்று தன் புத்தகப் பையைத் திறந்தான். அதில் சில்லறைகளாகவும் நோட்டுகளாகவும் இருந்த பணத்தை அள்ளினான். கையில் இருந்த நாற்பது ரூபாயையும் அதிலே வைத்தான்.

‘டாடி.. இப்போ 100 ரூபா இதுல இருக்கு, நாளைக்கு ஒரு மணி நேரம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னைக் கொஞ்சுவீங்களா ?”

தந்தையின் மனம் நெகிழ்ந்தது. அலுவல் தேடல்களுக்காக ஓடி ஓடி தனது மகனை ஏக்கத்தில் தவிக்க விட்டிருப்பதை அவர் உணர்ந்தார். மகனை அள்ளி அணைத்துக் கொண்டார். அவரது கண்கள் வழிந்தன.

உங்கள் பிள்ளைகள் நாளை தன்னம்பிக்கையும் வெற்றியும் உடையவர்களாக விளங்க வேண்டுமா ? நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அவர்களுக்கு பாடம் கற்பிப்பதல்ல, அன்பைப் பகிர்வது. அவர்களை மரியாதையுடன் நடத்தி அவர்களை மட்டந்தட்டாமல் இருப்பது. அவர்களுக்கு தேவையான உதவிகளைக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பது !

அன்பு, மரியாதை, ஊக்குவித்தல் எனும் மூன்று விஷயங்களையும் பெற்றோர் குழந்தைகளுக்கு போதுமான அளவுக்குக் கொடுத்தாலே போதும், தங்கள் எதிர்கால வாழ்க்கையைக் குழந்தைகள் தாங்களாகவே அமைத்துக் கொள்வார்கள்.

பெற்றோர் பிள்ளைகள் உறவு நாட்கள் செல்லச் செல்ல இன்னும் நெருக்கமாகி வழிகாட்டும் ஒரு துணையாக மாறிப் போகும் குடும்பங்கள் பாக்கியம் செய்தவை. வாழ்வின் இனிமையும் வெற்றியும் அவர்களிடம் நிச்சயம் தங்கும்.

ஒரு தந்தையும் மகளும் ஆற்றைக் கடப்பதற்காகப் பாலத்தில் நடந்தார்கள். ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். தந்தை சொன்னார், “என்னோட கையைக் கெட்டியாப் புடிச்சுக்கோ”. மகளோ, ‘இல்லையில்லை, நீங்க என் கையைப் புடிச்சுக்கோங்க” என்றாள். தந்தைக்குப் புரியவில்லை. “இதுல என்ன வித்தியாசம் ?” என்றார் கேள்வியுடன்.

“நிறைய இருக்கு டாடி. நான் உங்க கையைப் புடிச்சா, ஒருவேளை பயந்து போய் விட்டுடுவேன். நீங்க என் கையைப் புடிச்சா ஸ்ட்ராங்கா புடிப்பீங்க. என்ன வந்தாலும் விட மாட்டீங்க. அதான் உங்க கிட்டே புடிக்க சொன்னேன்” என்றாள் மகள். தந்தை நெகிழ்ந்தார். மகளைத் தூக்கிக் கொண்டார்.

இத்தகைய நம்பிக்கையும், அன்பும் கலந்த இறுக்கமான கைப்பற்றுதலை உங்கள் பிள்ளைகளிடம் கொடுங்கள். அவர்கள் நிம்மதியின் நிழலிலும், அன்பின் கதகதப்பிலும் வாழ்க்கையைத் தொடரட்டும். அது அவர்களுடைய மனதுக்குள் தன்னம்பிக்கையின் விதையை நடும்.

அந்த விதை அவர்களுடைய வாலிப வயதில் அவர்களை மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றும். அது அவர்களை நிச்சயம் வெற்றியாளர்களாய் உருவாக்கும் ! அன்பே தன்னம்பிக்கையின் அடிப்படை !

நெகடிவ் சிந்தனையும் தேவை

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை. – ஜான் மெக்டனால்ட்

பாசிடிவ் சிந்தனைகள் குறித்து மட்டுமே பெரும்பாலும் நாம் கேட்கிறோம். நெகடிவ் திங்கிங் என்பது சாவான பாவம் போல ஒதுக்கியே வைத்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கையில் இரண்டும் கலந்த நிகழ்வுகளே எழுகின்றன. சில இடங்களில் நெகடிவ் சிந்தனைகள் கூட நம்மை வழிநடத்திச் செல்லும் என்கிறார் டாக்டர். ஜேம்ஸ் டாப்ஸன்.

காரில் ஏறி அமர்கிறோம். உடனே சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம். அல்லது “எல்லாரும் சீட் பெல்ட் போடுங்க” என்று சொல்கிறோம். இதன் காரணம் என்ன ? ஒருவேளை ஆக்சிடன்ட் ஆச்சுன்னா என்ன பண்றது ? சீல் பெல்ட் போட்டா உயிர் தப்ப வாய்ப்பு இருக்கு. இல்லேன்னா உயிருக்கே ஆபத்து தான் போன்ற எதிர்மறை சிந்தனைகள் தான் இல்லையா ? விபத்து நடந்தால் எனும் எதிர்மறைச் சிந்தனை தான் நம்மை சீட் பெல்ட் அணியத் தூண்டுகிறது.

“ஒரு லைஃப் இன்சூரன்ஸ் வாங்கி வைக்கணும்ங்க. ஒருவேளை நாம பொட்டுன்னு போயிட்டா பிள்ளைங்க நாளைக்கு நடுத் தெருவில நிக்கக் கூடாது” என பரிதவிக்கும் ஒரு தந்தையிடமும் ஒரு நெகடிவ் சிந்தனையே எழுகிறது. அந்த எதிர்மறைச் சிந்தனை தான் அவரை ஒரு ஆயுள் காப்பீடு வாங்க தூண்டுகிறது.

கஞ்சா பொட்டலம் கையில் இருந்தாலும் தூக்கித் தூர எறியவேண்டும் எனும் எண்ணம் தோன்றுவதில் கூட கொஞ்சம் நெகடிவ் சிந்தனை இருக்கும். “இதைச் சாப்பிட்டு, இதுக்கு அடிமையாகி, உருப்படாதவனா, கெட்டவனா, நோயாளியா வாழ்வதா ?” என்பன போன்ற எதிர் சிந்தனைகளே தீய பழக்கங்களை விட்டு நம்மை விலக்குகிறது. “நாம் செய்கின்ற இந்தச் சிற்றின்பத் தப்பு வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்” எனும் பயம் கலந்த நெகடிவ் சிந்தனை தான் நம்மை அந்த விஷயத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது.

எனவே நெகடிவ் சிந்தனை என்பது ஒட்டு மொத்தமாகக் கெட்டதல்ல. அது சில நல்ல முடிவுகளை எடுக்க நமக்கு உதவுமானால் அந்த சிந்தனைகள் நல்லதே. எந்த முடிவை எடுத்தாலும் அதை புத்திசாலித்தனத்துடனும், நல்ல சிந்தித்தும் எடுங்கள் என்கிறார் டாக்டர் ஜேம்ஸ் டாப்ஸன் சொல்லும் அறிவுரையாகும்.

மெல்லிய நெகடிவ் அலைகள் நம்மைச் சுற்றி அதிக அலர்ட் ஆக இருக்க வைக்கும். நாம் சார்ந்த சூழலைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு அதிகம் இருக்க உதவும். கொஞ்சம் நெகடிவ் சிந்தனை இருப்பது நல்லதே என்கிறது “நியூ சவுத் வேல்ஸ்” பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. நேர்சிந்தனைகளையும், சில நேர் விளைவுகளையும் நெகடிவ் சிந்தனைகள் உருவாக்கி விட முடியும்.

எதிர் சிந்தனைகளின் விளைவுகள் பாசிடிவ் ஆக இருந்தால், அல்லது எதிர் சிந்தனைகள் நம்மை ஒரு எச்சரிக்கை உணர்வுக்கு கூட்டிச் சென்றால் அதை வரவேற்பதில் தவறில்லை. “நாய் கடிக்குமோ” எனும் பயத்தில் வெறிநாய்களை விட்டு விலகிச் செல்வது ஒரு எச்சரிக்கை உணர்வு. ஓடும் யானைக்கு எதிரே நிற்காமல் விலகி நிற்பது புத்திசாலித்தனமான முடிவு. கடுகடுப்பான பாஸ் திட்டக் கூடும் என கவனமாய் இருப்பது நல்லது. இப்படி எதிர்மறைச் சிந்தனைகளெல்லாம் செயல்களை நேர்கோட்டில் கொண்டு நிறுத்தினால் அவை வரவேற்கப்பட வேண்டியதே.

உலக இலக்கியங்களில் பலவும் மனிதர்கள் உணர்ச்சியின் மிகுதியால் இருக்கும் போது உருவானவையே. தார்மீகக் கோபம், காதலின் சோகம், துரோகத்தின் கசப்பு இவையெல்லாம் உலக இலக்கியங்களில் உன்னத இடத்தைப் பிடித்திருக்கின்றன.

பாசிடிவ் விஷயங்கள் நெகடிவ் செயல்களை ஏற்படுத்துவதுண்டு. ஹிரோஷிமாவை அழித்துத் துவம்சம் செய்த அணுகுண்டைப் போல. நெகடிவ் விஷயங்கள் நம்மை பாதுகாப்பதும் உண்டு, கார் சீட் பெல்ட் போல. எந்த விஷயத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

மரணம் குறித்த சிந்தனை நம்மை வாழத் தூண்டவேண்டும். நெகடிவ் சிந்தனை நம்மை பாசிடிவ் வாழ்க்கைக்கு வழிநடத்த வேண்டும். அது தான் முக்கியம் !

பொறுமை கடலினும் பெரிது.

பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான். – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம்.

பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை. விடியும் எனும் நம்பிக்கையே இரவில் நம்மை நிம்மதியாய் தூங்க வைக்கிறது. முடியும் எனும் நம்பிக்கையே பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய பொறுமை நம்பிக்கை இழக்கும் போது “பொன் முட்டையிடும் வாத்தை வெட்டிக் கொன்ற முட்டாளாய்” செயல்படத் துவங்குவோம். பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி நம்மை நோக்கி நடைபோடத் துவங்கும்.

பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும்.

செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள்.

நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ? ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை !

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது. தண்ணீரின் ஆழம் தெரியாமல் குதிப்பதோ, மலையின் ஆழம் தெரியாமல் ஏறச் செல்வதோ ஆபத்தில் முடியும் !

பாதியிலேயே பொறுமையைக் கழற்றி விட்டுவிடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை. அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தரமுடியும். “நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம்” எனும் லியோ டால்ஸ்டாயின் தத்துவ முத்து பொய் சொல்வதில்லை !

ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும் !

பொறுமையான முயற்சியே வெற்றியின் அடிநாதம் என்பதை எல்லா சாதனையாளர்களும் ஒத்துக் கொள்வார்கள். யாருக்கும் வெற்றி என்பது கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசுப் பொருள் போல வந்து சேர்வதில்லை. வெற்றிக்கு 99 சதவீதம் பொறுமையான உழைப்பும், ஒரு சதவீதம் உந்துதலும் இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்டீன் !

வெற்றியையும், வெற்றியைக் கொண்டாடும் மனநிலையையும், ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிது தான் !


பாசிடிவ் திங்கிங் !

ஒவ்வொரு சாதனை வாய்ப்பிலும் ஒரு கடினத்தைப் பார்ப்பான் நெகடிவ் சிந்தனையாளன். ஒவ்வொரு கடினமான சூழலுக்குள்ளும் ஒரு சாதனை வாய்ப்பு இருப்பதைப் பார்ப்பான் பாசிடிவ் சிந்தனையாளன் – வின்ஸ்டன் சர்ச்சில்

ஒவ்வொரு சூழலையும் நாம் எப்படி அணுகிறோம் என்பதை வைத்து நாம் பாசிடிவ் சிந்தனையாளர்களா ? இல்லை நெகடிவ் சிந்தனையாளர்களா என்பதை அடையாளம் காண முடியும். நம்முடைய சிந்தனைகளின் தொகுப்பு தான் நமது செயல்பாடுகள். நமது சிந்தனைகளின் அடிப்படையில் தான் நமது குணாதிசயம் கட்டமைக்கப்படுகிறது.

பாசிடிவ் திங்கிங் அதிகமாக உள்ளவர்கள் தான் வெற்றியாளர்களாகப் பரிமளிக்கிறார்கள் என ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன. பாசிடிவ் அடி ! காரணங்கள் நிறைய உண்டு.

நேர் சிந்தனை தான் மனதில் தன்னம்பிக்கையை காங்கிரீட் போட்டு கட்டி வைக்கும். அந்த வலுவான அடித்தளம் அடிமேல் அடிவைத்து உங்களை அடுத்த நிலைக்குக் கூட்டிச் செல்லும். எந்த ஒரு செயலையும் பிள்ளையார் சுழி போட்டுத் துவங்குவீங்களோ இல்லையோ, தன்னம்பிக்கையின் சுழி போட்டுத் துவங்கக் கற்றுக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையில்லாமல் வைக்கும் முதல் சுவடு, தோல்வியை நோக்கிய சுவடு தான். அந்த தன்னம்பிக்கைக்குத் தேவை பாசிடிவ் திங்கிங்.

பாசிடிவ் சிந்தனை மனதை உற்சாகமாய் ஒரு செயலில் ஈடுபட வைக்கும். அதே நேரத்தில் அந்த உணர்வு உடலிலும் பரவி உடலையும் ஆரோக்கியமாய் வைத்திருக்கும் என்பது சுவாரஸ்யமான உண்மை. ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ள பாசிடிவ் சிந்தனை உடையவர்களால் மட்டுமே முடியும். “என்னத்த எழும்பி இன்னிக்கு கிழிக்கப் போறோம்” என புலம்பிக் கொண்டே எழும்புபவர்கள் உண்மையில் எதையுமே கிழிப்பதில்லை. “ஆஹா… ஒரு நாள் கிடைத்திருக்கிறதே” என அந்த நாளை ஆர்வமுடன் வரவேற்கும் பாசிடிவ் சிந்தனை உடையவர்கள் அந்த நாளை ஒரு மகிழ்வின் நாளாகவோ, சாதனையின் நாளாகவோ செலவிடுவார்கள்.

ஒரு புகழ்பெற்ற உதாரணம் உண்டு. ஒரு கண்ணாடி டம்ளரில் பாதியளவு தண்ணீரை நிரப்புங்கள். ஒரு நெகடிவ் சிந்தனையாளரைக் கூப்பிட்டு இதில் என்ன இருக்கிறது என கேளுங்கள். “ஏங்க பாதி டம்ளர் காலியா இருக்கு? “ என்பார். ஒரு பாசிடிவ் சிந்தனையாளரை அழைத்துக் கேளுங்கள். “வாவ் பாதி டம்ளரில் நல்ல தண்ணீர் இருக்கிறதே” என்பார்.  எந்த ஒரு சூழலிலும் பாசிடிவ் விஷயங்களைப் பார்ப்பவர்கள் வாழ்வின் ஆனந்தமான திசையை நோக்கி நடக்கிறார்கள்.

பாசிடிவ் திங்கிங் உடையவர்களின் இன்னொரு குணாதிசயம் அவர்கள் எளிதில் பின்வாங்கிப் போக மாட்டார்கள் என்பது தான். இலை விழுந்தாலே பதறும் நெகடிவ் மனிதர்கள் மத்தியில், மலை விழுந்தால் கூட தொடர்ந்து நடக்கும் துணிவை பாசிடிவ் மனநிலை தந்து விடும். சின்னச் சின்னத் தோல்விகளைத் தாண்டிய பயணத்துக்கு நமக்குக் கைகொடுக்கப் போவது இந்த பாசிடிவ் சிந்தனைகள் தான். காரணம் ஒரு இருட்டான சுரங்கப்பாதையில் நடந்தால் கூட பாசிடிவ் சிந்தனை உடையவர்களின் கண்ணுக்கு முன்னால் எதிர் முனையிலுள்ள வெளிச்சமே தெரியும். நெகடிவ் மனிதர்களுக்கோ சுற்றியிருக்கும் இருட்டைப் பற்றிய கிலியே சுற்றி இழுக்கும்.

உடல் ஆரோக்கியத்துக்கும் பாசிடிவ் திங்கிங் உதவும் என்பது நம்பக் கடினமாய் இருதாலும் நம்பித் தான் ஆகவேண்டும். பாசிடிவ் சிந்தனை நிரம்பியிருக்கும் மக்களுக்கு ஒரு சின்ன ஜலதோஷம் வருவது கூட குறைவு என வியக்க வைக்கிறது மாயோ கிளினிக் ஆய்வு ஒன்று !

மன அழுத்தத்தை ஓட ஓட விரட்டி இதயத்துக்கு கெட்டி ஆயுளைக் கொட்டிக் கொடுப்பதில் பாசிடிவ் திங்கிங் ரொம்ப சமத்தாய்ச் செயல்படும். மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே பாதி நோய்கள் பறந்தே போய்விடும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் “ஆயுசு கெட்டியா இருக்கணும்ன்னா, பாசிடிவ் சிந்தனையைக் கெட்டியா புடிச்சுக்கணும்” !

பாசிடிவ் சிந்தனை உடையவர்களே நல்ல தலைவர்களாகப் பரிமளிக்க முடியும். அதற்கு ஒரு காரணம் அவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை இருக்கும். எந்த ஒரு சூழலையும் அதன் பாசிடிவ் விளைவை நோக்கி  முடிவுகளைக் கூற அவர்களால் இயலும். ஒருவேளை தவறாய் முடிவெடுத்தால் கூட அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து பயணிக்கவும் அவர்களால் தான் முடியும்.

நெகடிவ் சிந்தனை பணியிடங்களில் தோல்வியைத் தருவதற்கு பல காரணங்கள் உண்டு. அது ஒருவித அலட்சியப் போக்கைத் தரும், சில விஷயங்களைத் தள்ளிவிடும், “நடந்தா நடக்கட்டும்” எனும் போக்கைத் தரும், சோம்பேறித்தனத்தை தோளில் ஏற்றும். இவையெல்லாம் பணியிடங்களில் உங்களைக் கீழே பிடித்து இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் பாசிடிவ் சிந்தனை இருந்தால் நம்பிக்கையுடன் திட்டமிடவும், அடுத்தவர்களை ஊக்கப்படுத்தவும், பாராட்டவும், கவனமாய்ச் செயல்படவும் வழிகாட்டும். அது வெற்றியைத் தவறாமல் கொண்டு வரும்.

உங்கள் சிந்தனைகளே உங்களை உருவாக்கும். சிந்தனைகளை பாசிடிவ் வழியை நோக்கிச் செலுத்துங்கள். உங்களை பிடித்துப் பின்னுக்கு இழுக்கும் நெகடிவ் சிந்தனைகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதை விலக்கி பாசிடிவ் மனநிலையை உருவாக்கத் துவங்குங்கள்.

உங்கள் பணியில் நீங்கள் முழு ஆர்வத்தோடு ஈடுபடுகிறீர்களா ? இல்லையேல் ஏன் ? எந்த சிந்தனைகள் உங்களை பின்னுக்குத் தள்ளுகின்றன ?

உங்கள் தனிப்பட்ட செயல்களிலெல்லாம் உற்சாகம் இருக்கிறதா ? உங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் ?

நகைச்சுவை உணர்வு உங்களுக்கு இருக்கிறதா ? வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறதா ?

இப்படி உங்களையே சில கேள்விகள் கேளுங்கள். எந்த ஒரு நெகடிவ் சிந்தனை எழும் போதும், அதன் பாசிடிவ் சிந்தனை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். மனதில் உங்கள் நெகடிவ் சிந்தனைகளை பாசிடிவ் சிந்தனையால் மாற்ற முயலுங்கள். பழகப் பழக உங்கள் மனம் பாசிடிவ் பக்கம் பார்வையைத் திருப்பும் !

வாழ்க்கையும் வளம்பெறத் துவங்கும் !

நம்மை நாமே ஏற்றுக் கொள்வோம்

தனிமையிலேயே கொடுமையான தனிமை உன்னை நீயே ஏற்றுக் கொள்ளாத நிலை தான் – மார்க் ட்வைன்

வீட்டுக்கு ஒரு நண்பர் வருகிறார் என வைத்துக் கொள்வோம். ஓடிச் சென்று அவரை அப்படியே ஏற்றுக் கொள்வோம். சொந்தக் காரர்கள் வரும்போதும் அப்படியே. உள்ளே உட்கார வைத்து உபசரித்து நல்ல முறையில் அனுப்பி வைப்போம். ரொம்ப நல்ல விஷயம். தேவையான விஷயம். விருந்தோம்பலில் நமக்கு ஆயிரம் கால அனுபவம் உண்டு !

அதே அளவு உற்சாகத்தோடு நம்மை நாமே ஏற்றுக் கொள்கிறோமா ? ஒரு சின்னக் குழந்தை தன்னை ஏற்றுக் கொள்ளும் அதே உற்சாகத்தோடு, அதே முழு நிறைவோடு நம்மை நாமே ஏற்றுக் கொள்கிறோமா ? இது தான் நாம் நம்மைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி.

தலையில் கொஞ்சம் முடி குறைவாய் இருந்தாலே “ஐயோ முடி கம்மியாயிடுச்சே” என கண்ட கண்ட தைலங்களைத் தேடி ஓடும் நபர்கள் நம்மிடையே எக்கச் சக்கம். முடி கொட்டினா கொட்டிட்டுப் போவுது, நான் என்னை முழுமையாய் ஏற்றுக் கொள்வேன் என நினைக்கும் நபர்கள் குறைவானவர்களே !

கொஞ்சம் கறுப்பா இருக்கேன், நல்ல முகப் பூச்சு கிடைத்தால் வெள்ளையாகலாம் என சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ரொம்ப வெள்ளையா இருக்கேன், கொஞ்சம் சிவப்பா இருந்தா நல்லா இருக்கும் என சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் கொஞ்சம் கறுப்பாகலாமா என ஓடும் மக்களும் ஏராளம் உண்டு. இருப்பதே சிறப்பானது எனும் ஏற்றுக் கொள்தல் தானே இனிமையான வாழ்க்கையின் முதல் படி.

நான் யாராய் இருந்தால் பரவாயில்லை, என்னை ஏற்றுக் கொள்கிறேன். நான் குண்டாய் இருந்தாலும் சரி, ஒல்லியாய் இருந்தாலும் சரி, என்னை அப்படியே ஏற்றுக் கொள்வேன். நான் பாடகனாக இருந்தாலும் சரி, திக்கு வாயனாய் இருந்தாலும் சரி என்னை அப்படியே ஏற்றுக் கொள்வேன். நான் என்னை நேசித்து என்னை ஏற்றுக் கொள்வேன் என்பதில் தான் நமது ஏற்றுக் கொள்தலின் வெற்றி ஆரம்பமாகிறது

தனக்கு ஏதோ குறையிருக்கிறது என்று நினைப்பது இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறியிருக்கிறது. நான் கொஞ்சம் கறுப்பா இருக்கேனோ ? இன்னிக்கு போட்டிருக்கிற டிரஸ் என்னை கொஞ்சம் டல்லா காட்டுதோ ? என்பது தொடங்கி தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாய் கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இன்று அனேகம்.

நல்லா இருப்பவர்களே இப்படி இருந்தால் கொஞ்சம் குறைபாடு உள்ளவர்களுடைய கதி என்னாவது ? “கொஞ்சம் முதுகு வலி. அதுமட்டும்  இல்லேன்னா பட்டையைக் கிளப்பியிருப்பேன்…. ”,”எனக்கு இங்கிலீஷ் தான் பேச வராது. அது மட்டும் இல்லேன்னா நான் எங்கேயோ போயிருப்பேன்… “  என சாதாரணமான பிரச்சினைகளைக் கூட பேனர் கட்டி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

ஏற்றுக் கொள்தல் என்பதை உளவியலார்கள் பல பாகங்களாகப் பிரிக்கிறார்கள். உடல் ரீதியான ஏற்றுக் கொள்தல் முதலாவது. இதில் தான் நமது உடல் அமைப்போ, நிறமோ, உயரமோ வருகிறது. அதை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியது முதல் தேவை.

இரண்டாவது உணர்வு ரீதியாக நம்மை நாமே ஏற்றுக் கொள்வது. இதில் உறவுகள் சார்ந்த ஏற்றுக் கொள்தல்கள், புரிதல்கள், நிராகரிப்புகள், அதிர்ச்சியான நிகழ்வுகள் என எல்லாவகையான உணர்வு ரீதியான விஷயங்களும் வரும். நம்முடைய உணர்வு ரீதியான விஷயங்களை ஏற்றுக் கொள்வதில் நமது இரண்டாவது வெற்றி இருக்கிறது.

மூன்றாவது திறமை சார்ந்த ஏற்றுக் கொள்தல். நம்முடைய திறமைகள், திறமையின்மைகள் எல்லாம் இந்த வகையில் அடங்கிவிடுகிறது. இருக்கும் திறமையை ஏற்றுக் கொண்டு செயல்படும் மனநிலையை மூன்றாவது நிலை வலியுறுத்துகிறது.

முதலில் எதையெல்லாம் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிறகு எதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் பட்டியலிடுங்கள். ஏற்றுக் கொள்ளாத விஷயங்களை ஒவ்வொன்றாய் ஏற்றுக் கொள்ள ஆரம்பியுங்கள். உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்வது தான் பிறர் உங்களை ஏற்றுக் கொள்வதன் முதல் படி. ஏற்றுக் கொண்டபின் மாற்றிக் கொள்ள வேண்டும் என தோன்றும் தவறுகளை மாற்றிக் கொள்ளுங்கள் !

ஜான் மில்டன் எனும் எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடைய “பேரடைஸ் லாஸ்ட்” எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

நம்மிடம் எது இல்லை என்று பார்த்து முடங்குவது துயரங்களின் தெருக்களில் நடப்பது போன்றது. நம்மிடம் என்ன ஸ்பெஷல் என்று பார்த்து வாழ்வதே வெற்றியின் வீதிகளில் வீறு நடை போடுவது போன்றது.  நம்மை ஏற்றுக் கொள்வோம், அதுவே வெற்றியின் முதல் படி.


தீர்ப்பிடாதீர்கள்

நீங்கள் பிறரைத் தீர்ப்பிடத் துவங்கினால் உங்களுக்கு அன்பு செய்ய நேரமே இருக்காது – அன்னை தெரசா

ஒரு கணவன் எப்போதுமே மனைவி சமைக்கும் காலை உணவில் திருப்திப் படுவதேயில்லை. இட்லி சுட்டால் ஏன் தோசை இல்லை என்பான். தோசை சுட்டால் ஏன் தோசை முறுகலாய் இல்லை என்பான். முறுகலாய் இருந்தால் ஏன் அப்பளம் போல் இருக்கிறது என்பான். தன் கணவனை எப்படி மகிழ்ச்சியாய் உண்ண வைப்பது என்பது மனைவிக்குத் தெரியவே இல்லை. தினமும் அவனுக்கு காலையில் ஒரு முட்டை வேண்டும். அதை பொரித்து வைத்தால் ஏன் அவிக்கவில்லை என்பான், வேகை வைத்துக் கொடுத்தால் ஏன் பொரிக்கவில்லை என்பான்.

பார்த்தாள் மனைவி, ஒரு நாள் ஒரு முட்டையை அவித்தாள். இன்னொரு முட்டையைப் பொரித்தாள். கணவனின் முன்னால் வைத்து விட்டு இன்றாவது திட்டு விழாது என காத்திருந்தாள். அவனோ இரண்டையும் பார்த்தான்.

“உனக்கு செய்றதை ஒழுங்கா செய்யத் தெரியாதா ? அவிக்க வேண்டிய முட்டையைப் பொரிச்சிருக்கே, பொரிக்க வேண்டியதை அவிச்சிருக்கே” என பொரிந்தான்.

மனைவிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தீர்ப்பிடுதலும், கடுமையான விமர்சனங்களும் உறவுகளை உடைக்கும் வேலையைக் கட்சிதமாய்ச் செய்து விடுகின்றன. அவற்றுக்கு ஒட்ட வைக்கும் கலை தெரியாது. வெட்டி எறியும் கலை மட்டுமே தெரியும்.

உலகப் புகழ் இசைக்கலைஞர் பாப் மார்லே பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். “என் வாழ்க்கையைத் தீர்ப்பிட நீங்கள் யார் ? என்னை நோக்கி உங்கள் கைகளை நீட்டும் முன் உங்கள் கைகள் சுத்தமா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் கடுமையாக.

அடுத்தவர்கள் மீது விமர்சனங்களை வைப்பதும், அவர்களை செல்லாக்காசுகள் என தீர்ப்பிடுவதும் மிகவும் எளிதான விஷயம். ஆனால் அது வெறுமனே ஒரு மனிதரைக் காயப்படுத்துமே தவிர உருப்படியாய் ஒன்றும் செய்யாது. அன்பைக் கட்டியெழுப்பாது. சமூகத்துக்குப் பயந்தராது. ஒரு உறவை உருவாக்காது. நமது மனதை அழுக்காக்கும் வேலையை மட்டுமே செய்யும்.

ஒரு விரலை நீ நீட்டும் போது நான்கு விரல்கள் உன்னை நோக்கியே நீண்டிருக்கும் எனும் வாக்கியத்தை நாம் பல முறை கேட்டிருப்போம். யாருமே பிழையற்ற புனிதர்கள் கிடையாது. தவறுகளுடன் கூடிய வாழ்க்கையே ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டிருக்கிறது. எனவே தான் அடுத்தவர்களை விமர்சிப்பது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது.

“அடுத்தவன் கண்ணில் இருக்கும் தூசியை எடுக்க கை நீட்டும் முன், உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைக் கவனி’ என்கிறது பைபிள். நமது கண்ணில் கிடக்கும் மரக்கட்டையை மறைத்து விட்டு அடுத்தவனிடம் இருக்கும் தூசை எடுத்து உலகிற்கு விளம்பரம் செய்யவே நாம் பல முறை விரும்புகிறோம்.

ஒரு முறை ஒரு பெண்ணை இழுத்து வந்து இயேசுவின் காலடியில் போட்டார்கள். “இயேசுவே, இந்தப் பெண் விபச்சாரப் பாவம் செய்தாள். இவளைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பதே மோசேயின் கட்டளை. என்ன சொல்கிறீர்” என்றார்கள். நீர் பாவிகளின் பக்கம் நிற்கிறீரா ? யூதர்கள் பின்பற்றும் மோசேயின் கட்டளை தவறு என்கிறீரா ? அல்லது மோசேயின் பக்கம் நின்று உங்களுடைய கருணை இமேஜை கலைக்கப் போகிறீரா ? எனும் ஏராளமான உள் அர்த்தங்கள் அவர்களுடைய கேள்வியில் இருந்தது.

இயேசுவோ அமைதியாக ஒரே ஒரு வரியில் பதில் சொன்னார். “உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் கல் எறியட்டும்”.

வந்தவர்கள் விலகிச் சென்றார்கள். எல்லோரும் பாவம் செய்தவர்களே. புனிதர்கள் என்று யாரும் இல்லை. பின் ஏன் தீர்ப்பிடவேண்டும் என திரிகிறீர்கள். மாறாக அன்பினால் பிறரை அரவணைக்கலாமே என்பதையே இயேசு அன்று போதித்தார்.

நம்முடைய வாழ்க்கையில் ஒரு நாளின் எவ்வளவு நேரத்தை அடுத்தவர்களைத் தீர்ப்பிடுவதற்காகச் செலவிடுகிறோம் ?

அவன் செய்றது எதுவுமே சரியில்லை, அவன் அப்படிச் செய்திருக்கக் கூடாது, அவன் நான் சொன்னதைக் கேட்டிருக்கணும், அவன் தேர்ந்தெடுத்த விஷயம் சரியில்லை, அவனோட உறவு சரியில்லை, அவனுக்குப் பிடித்திருக்கிற விஷயங்கள் நல்லதில்லை, அவனோட குணாதிசயம் சரியில்லை என அடுக்கடுக்காய் எவ்வளவு விமர்சனங்களை ஈவு இரக்கமில்லாமல் எறிகிறோம்.

அல்லது நம்மைச் சுற்றியிருக்கும் எத்தனை நபர்களை கிண்டல், நகைச்சுவை என விமர்சிக்கிறோம் ? மேலதிகாரியையோ, நம்மை விட உயரத்துக்குச் செல்லும் தோழனையோ வெறுப்புடன் குரூர நகைச்சுவைக்கு பலியாக்குகிறோம் ?

இவற்றைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவிட்டாலே வாழ்க்கை இனிமையாய் மாறிவிடும். என்னால் அடுத்த நபருக்கு என்ன நன்மை செய்ய முடியும் என கேள்வி எழுப்பினாலே வாழ்க்கை அர்த்தமாகிவிடும். எதுவுமே செய்ய முடியாதெனில் நமது மௌனத்தின் மூலமாக தவறுகளில் விழுவதிலிருந்தேனும் தப்பித்துக் கொள்ளலாம்.

நம்மைச் சுற்றிய மனிதர்கள் நம் பாகங்கள். அவர்கள் எதிர்பார்ப்பது நமது கடுமையான விமர்சனங்களையல்ல, நமது அன்பான கரத்தை என்பதைப் புரிந்து கொள்வோம். வெற்றி என்பது அடுத்தவர்களைத் தட்டிவைப்பதல்ல ! அடுத்தவர்களைத் தூக்கி விடுவது தான்.

உன்னைப் பற்றி உயர்வாக நினை

 3104300-6643195867-Arnol

வெற்றி என்பது மனதில் இருக்கிறது. நீ வெற்றி பெற வேண்டும் என விரும்பினால், உன்னை ஒரு வெற்றியாளனாய் இந்த வினாடியிலிருந்தே கருதத் துவங்கு.

-டாக்டர்.ஜாய்ஸ் பிரதர்ஸ்.

வெற்றியின் துவக்கம் எது என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அடுத்தவர்கள் நமது கழுத்தில் சூட்டும் பூமாலை தான் வெற்றியின் முதல் படி என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். ஆனால் அது வெற்றியின் துவக்கமல்ல, வெற்றியின் அடையாளங்களில் ஒன்று என வைத்துக் கொள்ளலாம்.

உண்மையான வெற்றி நமது மனதில் நம்மை ஒரு வெற்றியாளராய்க் கருதிக் கொள்வதில் தான் இருக்கிறது. அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். தனது உருக்கு உடலாலும், நடிப்புத் திறமையாலும் ஹாலிவுட்டைக் கலக்கியவர். அதன் ஒரு படி மேலே போய் கலிபோர்னியாவின் கவர்னர் எனும் அந்தஸ்தையும் சூடிக் கொண்டவர்.. அவர் திரையுலகிற்கு வந்த காலத்தில் தோல்விகள் தான் மிகுந்திருந்தன.

“இனி என்ன செய்வதாய் உத்தேசம்” என்று ஒருமுறை அவரிடம் பேட்டியில் கேட்டார்கள். தோல்வியில் விழுந்து கிடக்கிறாயே, இனிமே வேற என்ன பொழைப்பைப் பார்க்கப் போறே எனும் தொனி அதில் இருந்தது. ஆனால் அர்னால்ட் தந்த பதில் உறுதியாய் இருந்தது.

“நான் ஹாலிவுட்டையே கலக்கும் நடிகனாவேன்”

எக்குத் தப்பான உடம்பு, சுவாரஸ்யமில்லாத குரல், எக்ஸ்ப்ரஷன் காட்டத் தெரியாது என்ன விமர்சிக்கப்பட்ட முகம் – இத்தனை சிக்கல்களோடு இருந்தாலும் அவருடைய தன்னம்பிக்கை மிக உயர்வாக இருந்தது !

“எந்த நம்பிக்கையில் இதைச் சொல்கிறீர்கள் ?” என்று கேட்டே விட்டார் பேட்டி எடுத்தவர்.

“என் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையில் தான்” என்றார் அர்னால்ட். அந்த நம்பிக்கை தான் அவரை நகர்த்திக் கொண்டு போய் படு பயங்கர வெற்றியில் உட்கார வைத்தது என்பதில் சந்தேகமில்லை.

நம் மீதான நம்பிக்கை என்பது நம்மை நேசிப்பதில் துவங்க வேண்டும். கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நமக்கு தன்னம்பிக்கையைத் தரவேண்டும். நம்மைப் பாராட்ட நாமே தவறினால் நம்மை இன்னொருவர் பாராட்டுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.

தன்னை உயர்வாக நினைப்பவர்களே வெற்றி எனும் கோட்டை எட்டித் தொட்டிருக்கிறார்கள். தன்மீது முழு நம்பிக்கை இல்லாதவர்களோ தோல்வி எனும் ஆமை ஓட்டுக்குள் அடங்கிப் போய் விடுகிறார்கள். திறமை குறைவாக இருந்தாலும் நம்பிக்கை அதிகமாய் இருக்கும் மனிதர்களே வெற்றி பெறுகிறார்கள்.

ஓட்டாமல் பார்க்கிங்கில் பூட்டியே வைத்திருக்கும் ரேஸ் காரை விட, நம்பிக்கையுடன் ஓடும் மாட்டு வண்டி தான் இலக்கைச் சென்றடையும்.

சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை.

அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. அதன் பின்பும் மரணம் வரை தனது வசீகரக் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.

தான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை. “காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்” என்பதுதான் உளவியலின் பால பாடம்.

தன்னை உயர்வாக நினைப்பது என்பது தற்பெருமையோ, அதீத நம்பிக்கையோ அல்லது சோம்பேறித் தனத்தையே கொண்டு வராமல் இருக்க வேண்டும். இவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை நுணுக்கமாய்க் கண்டறியுங்கள்.

தன்னம்பிக்கை என்பது சுவரொட்டி போல ஒரு பொது இடத்தில் ஒட்டப்படத் தேவையில்லை. ஒரு ஆழ்கடல் அமைதி போல உள்ளுக்குள் இருப்பதே சிறந்தது. அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றியை நோக்கி நீங்கள் பயணியுங்கள். வெற்றி பெறுவதற்கு என்னென்ன தேவை என்பதை ஆராயும் முன்னர் ஒரு வினாடி நிதானியுங்கள். கண்ணாடியின் முன்னால் நின்று உங்களையே பாருங்கள். இந்தச் செயலை உங்களால் நிச்சயம் செய்ய முடியும் என நம்புங்கள். உங்களுடைய நம்பிக்கையின் வேர்கள் வலுவடையும். நம்பிக்கையின் வேர்களே செயல்களின் கிளைகளைத் தாங்கிப் பிடிக்க முடியும் !