மகிழ்ச்சியாய் இருங்கள்.

மகிழ்ச்சி ரெடிமேடாய்க் கிடைப்பதில்லை. அது நமது செயல்களின் மூலமாக விளைவதே ! –

தலாய் லாமா

ஆனந்தமாய் இருக்க வேண்டுமா என நீங்கள் யாரிடம் கேட்டாலும் “ஆம்” எனும் பதிலை சட்டென சொல்வார்கள். அப்படிச் சொல்லவில்லையேல் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு இருக்கலாம் என்பதை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எல்லோருமே அடைய நினைக்கும் ஒரு விஷயம் இந்த சந்தோசம். ஆனால் அதைப் பலரும் அடைவதில்லை ! கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால் கூட அதைக் கண்டும் காணாததும் போலக் கடந்து செல்கிறார்கள்.

காரணம் மகிழ்ச்சியைக் குறித்தும், அதை அடையும் நிலைகளைக் குறித்தும் மக்களுக்கு இருக்கின்ற தவறான புரிதல்களும், தேடல்களும் தான். நீங்கள் கோபமாய் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி ஆனந்தத்தை இழந்து விடுகிறீர்கள் எனும் ரால்ஃப் வால்டோவின் சொலவடை உலகப் பிரசித்தம். அந்த ஆனந்தத்தை அடைவது எப்படி ?

பணம் தான் ஆனந்தத்தைத் தரும் எனும் நினைப்பு உலக மக்களின் பெரும்பான்மையானவர்களிடம் இருக்கிறது. அப்படியானால் எவ்வளவு பணம் ? நூறு நூபாயா ? நூறு கோடியா ? ஒரு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடியா ? கணக்கு வழக்கே இல்லை இல்லையா ? இவ்வளவு பணம் கிடைத்தால் தான் மகிழ்ச்சி என்று ஒரு எல்லை வரைவது இயலாத காரியம். பணம் எப்போதுமே மகிழ்ச்சியைத் தருவதில்லை. பணம் தேவைகளை நிறைவேற்றலாம், ஆனால் அது மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதில்லை.

ஒரு வகையில் பணம் மகிழ்ச்சியை இழக்கச் செய்யும். ஒரு டிவி இருந்தா ரொம்ப மகிழ்ச்சியா இருப்போம் என நினைப்போம். ஒரு வீட்டில் எல்லோருமாய் சேர்ந்து கதைகள் பேசிச் சிரிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. அதை விட்டு விட்டு ஒரு தொலைக்காட்சியை வாங்கி வைத்தால், நமது மகிழ்ச்சியின் அளவு சட்டெனக் குறையும் ! உறவுகளின் இறுக்கம் குறைக்கும்.

“நமக்கு யாராச்சும் ஒரு கிஃப்ட் தந்தா சந்தோசமா இருக்குமே” என நினைப்போம். ஏதாவது கிடைச்சா சந்தோசம் வரும் என்பது தற்காலிக உணர்வே. சேர்ப்பதை விடக் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் ! கையேந்தும் ஒரு ஏழைக்குக் கொடுக்கும் உதவி தரும் ஆனந்தம், நமக்கு யாரேனும் தரும் பணத்தை விட நீண்ட நேரம் நிலைக்கும் ! தேவைப்படும் ஒரு ஏழைக்கு செய்யும் உதவி மனதை மெல்லிய ஆனந்தத்துக்குள் இட்டுச் செல்லும்.

விளையாடுங்கள் ! விளையாடுங்கள் என்று சொன்னதும் ஏதோ கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுவதை மட்டும் நான் சொல்லவில்லை. வீட்டில் குழந்தைகளோடு உருண்டு புரண்டு விளையாடுவதையும் சேர்த்தே சொல்கிறேன். விளையாடுவதற்கு உங்களுக்கு விளையாட்டு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விளையாடவேண்டும் எனும் மனம் இருந்தாலே போதும் !

“மகிழ்ச்சியாய் இருக்கத் துவங்கினால் வேலையில் தொய்வு ஏற்பட்டுவிடும்.வேலையில் கவனமாய் இருப்பது தான் முக்கியம் “ என்பது சிலருடைய வாதம். உண்மையில் மகிழ்ச்சியை நாடுபவர்களே வேலையில் வெற்றியாளர்களாய்ப் பரிமளிக்க முடியும். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு “பொழுதுபோக்கு” நிகழ்ச்சிகளை சுயமாகவே நடக்குகின்றன. அதன் மூலம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தி, அதிக பவர்புல் வேலையாட்களாக மாற்றுவதே அவர்களுடைய சிந்தனை. மகிழ்ச்சியாய் இருக்கும் ஊழியர்களே சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்கிறது உளவியல். எனவே அந்தனையையும் தூக்கி ஓரமாய் வையுங்கள்.

“செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் முடிச்ச பிறகு தான் விளையாட்டோ, ஜாலி சமாச்சாரங்களோ “ என்று நினைப்பவர்களின் வாழ்க்கையில் சந்தோசம் எப்போதாவது தான் எட்டிப் பார்க்கும். தூரத்துச் சொந்தக்காரன் எதிர்பாராத நேரத்தில் வருவது போல ! காரணம் நமது வேலைகள் எப்போதுமே முடியப் போவதில்லை. அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ! எனவே மகிழ்ச்சிக்கும் வேலைகளை முடிப்பதற்கும் முடிச்சு போடாதீர்கள்.

சிலரோ, “நானெல்லாம் சந்தோசமா இருக்க அருகதையே இல்லாதவன். அந்த அளவுக்கு மோசமானவன்” எனும் தாழ்வு மனப்பான்மையில் உழல்வதுண்டு. இவர்கள் நிச்சயம் சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்கள். வாழ்வின் அத்தனை மகிழ்வுகளையும் இழந்து விடக் கூடிய அபாயம் இவர்களுக்கு உண்டு. இது அவர்களுடைய செயல்களால் விளைந்த தவறாகவும் இருக்கலாம். அல்லது அவர்கள் தங்களுடைய தோற்றத்தின் மீது கொள்ளும் தாழ்வு மனப்பான்மையாய் கூட இருக்கலாம் ! எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு என்பதை உணர்தல் அவசியம்.

“மகிழ்ச்சி என்பது கடைசியில் கிடைக்கக் கூடிய சமாச்சாரம்” என்பது சிலருடைய சிந்தனை. உண்மையில் மகிழ்ச்சி என்பது பயணம். அது இலக்கைச் சென்று அடைவதில் மட்டுமல்ல. ஒவ்வொரு பாதச் சுவட்டிலும் கிடைக்கும். ஒரு பூந்தோட்டத்தில் நடக்கிறீர்கள். மகிழ்ச்சி என்பது தோட்டத்தில் நடந்து முடித்த பிறகு தான் கிடைக்குமா ? அல்லது பயணத்தில் கிடைக்குமா ? ஒவ்வொரு மலரைச் சந்திக்கும் போதும், ஒவ்வொரு செடியைத் தாண்டும் போதும் மகிழ்வு நம்மை முத்தமுடுவது தானே முறை ?  வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ச்சியின் இழைகள் உண்டு. அதை நின்று நிதானித்து அனுமதிப்பதே வாழ்வில் முக்கியமானது !

மகிழ்ச்சி என்பது மனதின் நிலைப்பாடு. நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நீங்கள் நினைத்தால் மகிழ்ச்சி உங்களை வந்தடையும். ஆன்மீக வாதிகள் இறைவனில் மகிழ்ந்திருப்பதன் அடிப்படை இது தான். “மகிழ்ச்சி என்பது நம்மைப் பொறுத்தது” என்கிறார் தத்துவமேதை அரிஸ்டாட்டில்.

தேவையற்ற கவலைகளைத் தூக்கிச் சுமக்கும் கழுதையாய் மாறாதீர்கள். நீங்கள் தூக்கிச் சுமப்பவற்றை வழியில் இறக்கி வைத்து விட்டு நிதானமாய் நடை பழகுங்கள். “அது நடக்குமோ, இப்படி நடக்குமோ, ஏதேனும் நேருமோ’ எனும் பதட்டங்கள், பயங்கள் தவிருங்கள். பெரும்பாலான இத்தகைய பயங்கள் “நிழலோடு கொள்கின்ற நீள்யுத்தம்” போன்றவையே !

அடிக்கடி நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய சின்னச் சின்ன வெற்றிகள், சுவடுகள், முன்னேற்றங்கள், முயற்சிகள், அணுகுமுறைகள், அனைத்தையும் பாராட்டுங்கள். மனம் உற்சாகமடையும். முக்கியமாக உற்சாகத்தை உடைக்கும் சிந்தனைகளை ஒடித்து வெளியே போடுங்கள்.

நண்பர்களோடு இணைந்திருங்கள். உறவு வட்டாரத்தோடு இணைந்திருங்கள். சின்னச் சின்ன சண்டைகளையோ, கோபவார்த்தைகளையோ மறக்கும் வலிமை கொண்டிருங்கள். வாழ்க்கை அழகானது. உங்களுடைய ஈகோவும், வறட்டு கௌரவமும் அதை அழுக்காக்காமல் கவனமாய் இருங்கள்.

அடுத்தவர்களுடைய விமர்சனங்களையோ, கிண்டலையோ மனதில் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை அமைக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்களுடையது. இதில் மகிழ்ச்சியாய் இருக்க முடிவெடுப்பதும் நீங்களே. நீங்கள் நீங்களாய் இருங்கள். அது போதும் !

தோல்விகளைக் குறித்த பயங்களை ஒதுக்குங்கள். வழுக்கி விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாது. தோல்விகளையும் மகிழ்ச்சியை நோக்கிய பயணமாகவே கருதுங்கள். மகிழ்ச்சி என்பது நீங்கள் யார், எப்படி இருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வருவதல்ல. நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள், எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் வருவதே !

புன்னகையுங்கள். மகிழ்ச்சி என்பது நாம் தேடி அடையும் பொருள் அல்ல. மகிழ்ச்சி என்பது உணர்ந்து கொள்ளும் விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றி மகிழ்ச்சியைக் கொண்டு வருவதை விட அதிகமாய் மகிழ்ச்சி வெற்றியைக் கொண்டு வரும்.

மகிழுங்கள் ! சோகத்தின் தள்ளுவண்டியை தள்ளியே வையுங்கள் !

குறை சொல்தல் பெருங் குறை !

நான் கடவுளின் முன்னால் நிற்கும் போது எனது வாழ்க்கைக்கான பதிலைத் தான் சொல்வேனே தவிர பிறருடைய வாழ்க்கைக்கான விளக்கம் அல்ல. எனவே, என்னுடைய குறைகளுக்காக மற்றவர்களைக் குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.  – ஜாய்ஸ் மேயர்.

குறை சொல்தல் இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறிவிட்டது.ஒரு வகையில் மிகவும் எளிதான ஒரு வேலை குறை சொல்லுதல். எந்த விதமான தார்மீகப் பொறுப்பும் ஏற்க மறுப்பவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம் குறை சொல்லுதல்.

சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ? பசங்க சொன்ன பேச்சைக் கேட்கலேன்னா இப்போகூட தொலைக்காட்சியைத் தானே திட்டுகிறோம் !

ஒரு நிறுவனத்துக்கு ஒரு புது மேலதிகாரி வந்தார். அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போது பழைய அதிகாரி மூன்று மூடப்பட்ட கவர்களைக் கொடுத்துச் சென்றார். “எப்போதாவது பெரிய பிரச்சினை வந்தால் மட்டும் பிரியுங்கள்” எனும் விண்ணப்பத்தோடு.

புதிய அதிகாரி பதவியேற்றார். ஒரு வருடம் சிக்கல் ஏதும் இல்லாமல் போனது ! போதாத காலம் முதல் சிக்கல் வந்தது. பணத் தட்டுப்பாடு. என்ன செய்யலாம் என யோசித்தபோது அவருக்கு மூடப்பட்ட கவர்களின் ஞாபகம் வந்தது. முதலாவது கவரைப் பிரித்தார். “பழைய மேலதிகாரி மேல் பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். தப்பித்தார். அடுத்த ஆண்டும் அதே போல ஒரு பிரச்சினை. இப்போதும் கவரைப் பிரித்தார். “கமிட்டி மீது பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். அப்போதும் தப்பித்தார். மூன்றாவது ஆண்டும் பிரச்சினை வந்தது. பூதாகரமானது. மூன்றாவது கவரை எடுத்தார். பிரித்து வாசித்தார். “மூன்று கவர்களை நீ உருவாக்கும் நேரம் வந்து விட்டது” என்று எழுதப்பட்டிருந்தது !

நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இதில் இருக்கும் உண்மை நிதர்சனமானது. பழியைப் போடும் வழக்கம் ஆதியிலேயே ஆரம்பமாகிவிட்டது ! விலக்கப்பட்ட கனியைத் தின்ற ஆதாம் செய்த முதல் காரியம் பழியைத் தூக்கி ஏவாள் மீது போட்டது தான். எனவே இந்த பழிபோடலுக்கான விதை ஆதிமனிதனிடமிருந்து உருவாகியிருக்கிறது !

குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு !  அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீது தான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது.  “உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்” என்று யாரும் சொல்வதில்லை. அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும். தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குறை சொல்தல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு. குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் , தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு.

ஈகோ எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள். ஈகோ இருக்கும் மனிதர்கள் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள். இல்லாததை இருப்பது போலச் சோடித்து மகிழ்வார்கள். ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய்விடும்.

குறை சொல்பவர்கள் தொடர்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அட குறையைப் போக்கும் வழியைத் தேடணுமே என்பதை மறந்து விடுவார்கள். இருப்பதில் திருப்தியடையாதவர்கள் குறை சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளவோ, அல்லது கவனத்தை இழுக்கவோ கூட பிறர் மீது சிலர் குறைகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருப்பதும் உண்டு.

“தாங்கள் இருக்கும் நிலைக்கு சூழலை மக்கள் விடாமல் குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் சூழ்நிலையை குற்றம் சொல்வதில்லை. சூழலைப் பிடிக்காத மனிதர்கள், தங்களுக்குப் பிடித்தமான சூழலை உருவாக்கக் கற்றுக் கொள்ளவேண்டுமே தவிர குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது” என்கிறார் ஜார்ஜ் பெர்னாட்ஷா ! அவருடைய வார்த்தைகளில் இருக்கும் வீரியம் கவனிக்கத் தக்கது !

குறை சொல்தல் வெறுமனே உங்கள் அலுவலக வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. உங்களுடைய ஆழமான குடும்ப வாழ்க்கைக்கே அது கொள்ளி வைத்து விடும். குறை சொல்வது ஒரு மிகப்பெரிய உறவு எதிரி !

கவனமாய் இருங்கள். குறை சொல்வதற்கான தருணங்களில் கவனமாய் இருங்கள். அந்தக் கவனம் உங்களில் எப்போதும் இருந்தால் படிப்படியாய் நீங்கள் குறை சொல்லும் குறையை விட்டு வெளியே வர முடியும். வாழ்க்கையும் ரொம்ப அழகானதாய்த் தெரிய ஆரம்பிக்கும்.

குறைகளைவோம்,நிறைவடைவோம்.

அடுத்தவரோடு ஒப்பீடு செய்யாதீர்கள் !

நான் என்னை இன்னொருவரோடு ஒப்பீடு செய்ய 
முயன்றதே இல்லை - சச்சின் டென்டுல்கர்.

வெற்றியாளர்களின் பார்முலா இது தான். இன்னொருவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து அந்த நிலையே உயர்ந்தது என்றோ, அந்த நிலை தாழ்ந்தது என்றோ கூறிக்கொள்வதில்லை. மாறாக தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து அதன் அடிபடையில் இயங்குவது.

“அவன் ரொம்ப ரொம்ப திறமைசாலி”, “ அவன் எவ்ளோ அழகா பாடறான். என்னால அவன மாதிரிப் பாட முடியலையே”, “ அவ  எவ்ளோ அழகா இருக்கா.. அவளை மாதிரி அழகா இருக்க முடியலையே”, “அவன் சட்டுன்னு பாப்புலர் ஆயிட்டான்.. நான்…” இப்படி எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களோடு ஒப்பீடு செய்து செய்தே பலரும் தங்களுடைய வாய்ப்புகளையும், வெற்றிகளையும் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அது தனித்துவமானது. ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பீடு செய்யவே முடியாது ! நமது வலது கண்ணுக்கும், நமது இடது கண்ணுக்குமே வேறுபாடு உண்டு. நமது வலது கையும் இடது கையும் ஒன்றே போல் இருக்காது ! நமது உறுப்புகளே இப்படி இருக்கும் போது நமக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கும் எவ்வளவு வேறு பாடு இருக்கும். நம் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கும் நமக்குமே வேறுபாடு இருக்குமெனில் நமக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு வேறு பாடு இருக்கும். எனவே ஒப்பீடு என்பதே ஒருவகையில் முட்டாள்தனமான முடிவு !

“ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பிடாதீர்கள்” என்பது மிகப் பிரபலமான ஆங்கில வாக்கியம் ஒன்று. சம்பந்தம் இல்லாத இரண்டு விஷயங்களை ஒப்பிடாதீர்கள் என்பது தான் இதன் பொருள் ! இதனால் தான் வகுப்பில் ஆசிரியர்களானாலும் சரி, வீட்டில் பெற்றோரானாலும் சரி பிள்ளைகளை ஒப்பீடு செய்யவே கூடாது என உளவியலார்கள் படிச்சுப் படிச்சு சொல்கிறார்கள் !

சமூகத்தில் இருவருடைய திறமை இரண்டு விதமாய் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இரண்டு விதமான பணிகளைச் செய்ய வேண்டும் என்பதே. ஒரே விதமான பணி செய்பவர்கள் கூட வித்தியாசமாய் இருப்பதற்குக் காரணம், அவரவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதன் மீதான இயற்கையில் நிபந்தனையே !

உலகம் முழுதும் வெறும் பாடகர்களாகவே இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். குப்பையை அள்ளுவது யார் ? சட்டம் ஒழுங்கைப் பார்ப்பது யார் ? மருத்துவப் பணி செய்வது யார் ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி இருக்கிறது இல்லையா ? இதில் யார் உயர்ந்தவர் ? யார் தாழ்ந்தவர் என்று எண்ணுவதே அடிபடையில் தவறு. எல்லா மனிதர்களும் சமமானவர்களே ! அவர்களுடைய பொருளாதார நிலை, வேலை போன்ற ஆடைகளால் அவர்களுக்கு அதிக மரியாதை செய்வதோ, குறைவான மரியாதை தருவதோ பாவச் செயலாகவே அமையும் !

ஒப்பீடு செய்பவர்கள் பெரும்பாலும் நெகடிவ் சிந்தனைகளுக்குள் மூழ்கிக் கிடப்பவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் 99 நல்ல விஷயங்கள் இருக்கும். ஒரே ஒரு விஷயத்தில் தோல்வி இருக்கலாம், அல்லது எதிர்பார்த்த வெற்றி இல்லாமல் இருக்கலாம். இவர்களுடைய சிந்தனை எப்போதும் அந்த ஒரே ஒரு தோல்வியின் தோளில் அமர்ந்தே இருக்கும். அவர்களால் மற்ற நல்ல விஷயங்களுக்காக ஆனந்தப் படவே முடியாது ! எப்போதும் கிடைக்காத ஒன்றுக்குக் கொட்டாவி விட்டு விட்டு இருப்பதைப் பாழடித்து விடுவார்கள்.

உங்கள் வீட்டில் ஒரு தோட்டம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒரே ஒரு செடி மட்டும் பூக்கவில்லை. பட்டுப் போய்விட்டது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். “ஐயோ இந்தச் செடி பட்டுப் போய்விட்டதே” என அதன் அடியில் அமர்ந்து சோகத்துடன் உங்கள் பொழுதைக் கழிப்பீர்களா ? இல்லை “ வாவ்.. எவ்வளவு அழகான மலர்கள்” என மற்ற மலர்களின் அழகை ரசிப்பீர்களா ? சிந்தித்துப் பாருங்கள். இந்தச் செடி மட்டும் ஏன் பூக்கவில்லை என உங்கள் நேரத்தை அழிப்பதை விட, பூத்திருக்கும் பூக்களை நேசிப்பதில் தான் அர்த்தம் இருக்கிறது !

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அழகு ! விதவிதமான மலர்கள் இருந்தால் தான் தோட்டத்துக்குச் சிறப்பு. விதவித மரங்கள் இருந்தால் தான் கானகம் அழகு. விதவிதமான மீன்கள் இருந்தால் தான் கடலுக்கு அழகு. விதவிதமான இசைக்கருவிகள் இருந்தால் தான் இசைக்கு மதிப்பு ! வாழ்க்கை என்பது பலவற்றின் கூட்டுத் தொகை. ஒரு மலர் மாலை போல, ஒரு சிம்பொனி இசைக்கோர்வை போல ! உங்கள் பங்களிப்பு இந்த உலகில் என்ன என்பதை மட்டும் பாருங்கள். உங்களுடைய பணியை நன்றாகச் செய்தீர்களா என்பதை மட்டும் பாருங்கள்.

ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தாம் செய்த செயல்களைப்பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும். என்கிறது விவிலியம்.

வாழ்க்கை அழகானது ! அது ஒப்பீடுகளால் அழுக்காகிவிடக் கூடாது !

சிந்தனைகள் நன்றாக இருக்கட்டும்

நாம் நமது சிந்தனைகளைக் கொண்டே உருவாக்கப் படுகிறோம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிப் போகிறோம் நாம். மனம் தூய்மையாய் இருக்கும் போது ஆனந்தம் ஒரு நிழலைப் போல தொடரும். எப்போதும் நம்மை விட்டு விலகாது ! – – புத்தர்

நமது சிந்தனைகள் நல்லவையாக இருந்தால் நமது வாழ்க்கையும் செயல்களும் நிச்சயம் நம்மை வெற்றியாளராக்கும். சாதனை என்பது வேலையில் சாதனைகள் செய்வது மட்டுமல்ல, குடும்பத்தில் ஆனந்தம் விளைவிப்பது அதை விடப் பெரிய சாதனை !

சிலர் தங்களுடைய சிந்தனைகளை சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களுடைய வார்த்தைகள் மோசமானவையாகவோ, நல்லவையாகவோ சூழலுக்குத் தக்கபடி வந்து விழுகின்றன. அமைதியாய் இருக்கும் மனிதனை வேண்டுமென்றே உசுப்பும் போது அவனிடமிருந்து தீய சொற்களோ செயல்களோ தெறிக்கின்றன.

ரோட்டில் வண்டி ஓட்டிக் கொண்டு போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வண்டியை யாராவது வந்து இடித்து விட்டால் சட்டென கோபம் வருகிறது. இடித்த நபர் அந்தப் பழியை உங்கள் மீதே போட்டால் கோபம் இரண்டு மடங்காகிறது. அதே நபர் நடுத்தெருவில் வைத்து உங்கள் குடும்பத்தையெல்லாம் இழுத்து அசிங்கமாய்ப் பேசினால் உங்கள் கோபம் பல மடங்கு உயர்ந்து சட்டென இயல்பு தவறி நீங்களும் கத்த ஆரம்பிக்கிறீர்கள் இல்லையா ? நமது அடிப்படை இயல்பில் பிழை இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது !

“ஒரு பாத்திரம் நிறைய இனிப்புத் தண்ணீரைச் சேர்த்து வையுங்கள். அதை எப்படி உலுக்கினாலும் அதிலிருந்து இனிப்புத் தண்ணீர் தான் வெளியே வரும். எவ்வளவு தான் அதை உலுக்கினாலும் அதிலிருந்துத் தளும்புவது கசப்புத் தண்ணீராய் இருக்காது” என்கிறார் ஏமி கார்மைக்கேல். நமது உள்ளம் அன்பினாலும், அமைதியினாலும் நிரம்பியிருந்தால் சூழல்களின் உந்துதல்களும் நிர்ப்பந்தங்களும் நம்மை தீயவராக்குவதில்லை !

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் இளம் வயதினர் வளரும்போது அவர்களுடைய சிந்தனைகள் வலிவிழந்து காணப்படும் என்கின்றனர் உளவியலார். “ என்னை ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. நான் ஒரு தூசு மாதிரி ஆகிப் போனேன்” என சிந்தனைகள் அவர்களுடைய தன்னம்பிக்கையை தானே குழிதோண்டிப் புதைத்து விடும். அத்தகையவர்களை மீட்க தொடர்ந்த ஊக்கமும், வழிகாட்டலும் அவசியப்படுகிறது ! பழிவாங்குவது என்பது வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றியின் மூலமாக என்பதையே காட்டவேண்டும் ! சிந்தனைகளின் திசை மாற வேண்டும்.

“எல்லாவற்றையும் ரொம்பவே பெர்பக்ட் ஆகச் செய்ய வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அதனால் அர்த்தமே இல்லை” எனும் சிந்தனை மிகவும் தவறானது. பல வேளைகளில் நம்மை அறியாமலேயே அந்தச் சிந்தனையைக் குழந்தைகளிடமும் நாம் திணிப்பதுண்டு. முதல் இடத்தில் வருவது தான் இலட்சியம். அதில் ஒரு மார்க் குறைந்தாலும் செல்லாக்காசு என்பது போன்ற நிர்ப்பந்தங்கள் குழந்தைகளை பாழாக்கும்.

“தான் வெற்றி பெறவில்லை” எனும் கருத்து குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அது அவனுடைய தன்னம்பிக்கையையே சிதைத்து விடும் என்கின்றனர் உளவியலார். வாழ்க்கை என்பது முதலில் வருவதல்ல ! அப்படியெனில் ஒருவர் மட்டுமே வாழ முடியும் ! இன்று முதலில் வருபவரையே உலகம் நாளை மறந்து விடும் ! உண்மை அப்படியிருக்க மனதில் அத்தகைய சிந்தனைகள் எழுவதில் என்ன அர்த்தம் ?

இன்னும் சிலருக்கு அவர்களை எல்லோரும் எப்போதுமே உதாசீனப் படுத்துவது போலத் தோன்றும். “பாத்தியா…இப்படித்தான் எல்லாரும் பண்றாங்க”, “ பாரு அவனே மதிக்கல..” என்பன போன்ற வாக்கியங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அந்த சிந்தனைகள் அவர்களை அப்படி ஒரு மனநிலைக்குள் அழுத்தியே வைக்கும். உண்மையில் அது வேறு எங்கோ, எப்போதோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடந்த கோபத்தின் வெளிப்படாய் இருக்கும் !

இன்னும் சிலருக்கு ‘நான் ஒரு உதவாக்கரை” எனும் எண்ணம் ஆழ்மனதில் பதிந்துவிடும். அது பெரும்பாலும் எப்போதோ, யாரோ ஒருவர் சொன்னதாய் இருக்கும். வீட்டில் அப்பாவோ, ஆசிரியரோ, நண்பரோ யாரோ ஒருவர். அந்த காயம் வடுவாய் மாறியிருக்கும். பிறகு அந்த நிகழ்வு முற்றிலுமாக மறந்து போனால் கூட “நான் ஒரு உதவாக்கரை எனும் சிந்தனை” மட்டும் உள்ளுக்குள்ளேயே தங்கிவிடும். அந்த சிந்தனை வந்துவிட்டால் பிறகு வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்குக் கூட மனம் துணியாது ! நமது எண்ணங்களே நம்மை வழிநடத்து. ஆயிரம் முறை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, அதையும் தாண்டி இன்னொரு முறை உண்டு ! ஒவ்வொருவரும் மகிழ்வுடன் வாழவும், வெற்றியுடன் வாழவும் வழிகள் உண்டு எனும் சிந்தனையே மனதில் இருக்க வேண்டும் !

இன்னும் சிலர் எல்லாவற்றையும் கொஞ்சம் பொதுப்படையாக்கிப் பேசுவார்கள். “இந்த மாதிரி இடங்கள்ல போனா நான் பொதுவாவே சொதப்பிடுவேன்”. என்பது போன்ற சிந்தனைகள் அவர்களிடம் நிரம்பியிருக்கும். எப்பவுமே, பொதுவாகவே, என் குணமே அப்படித் தான் போன்றவையெல்லாம் மனதின் துருக்கள். ரொம்பவே தவறான சிந்தனை அது. “நான் எப்ப நாணயத்தைச் சுண்டினாலும் தலைதான் விழும்” என எப்படிச் சொல்ல முடியாதோ, அப்படித் தான் “எப்பவுமே” எனும் வாசகத்தையும் நாம் பயன்படுத்தவே முடியாது !

நமது சிந்தனைகள் ரொம்பவே பவர்புல் ஆனவை. ‘நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. எனவே எண்ணங்களில் கவனம் தேவை” என்கிறார் விவேகானந்தர். சிந்தனைகள் உயிரின் அடிவரைப் பாய்ந்து செல்லும் என்பது அவருக்குத் தெரியும். ஒலியை விடவும், ஒளியை விடவும் சிந்தனைகளின் வீச்சு வேகமானது, ஆழமானது !

எனவே நமக்குள் எழும் சிந்தனைகளைக் கவனிப்போம். வயலில் முளைக்கும் களைகளை அவ்வப்போது அகற்றி வந்தால் அறுவடை அமோகமாக இருக்கும். களைகளை அப்படியே விட்டுவிட்டால் களைகளினால் வயல் முழுவதுமாக அழிந்து போய்விடும். சிந்தனைகளும் அப்படியே ! தேவையற்ற சிந்தனைகளை மாற்றி, நல்ல சிந்தனைகளை வளரவிட்டால் காலப் போக்கில் நல்ல சிந்தனைகள் மட்டுமே நம்மை நிரப்பும் !

சிந்தனைகளைக் கவனிக்கத் துவங்குவோம்.

ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல

health and beauty concept - smiling little girl with glass of water

ஆரோக்கியம் மட்டும் விடைபெறுமானால், 
ஞானம் தானாக வெளிப்பட மறுக்கும், கலைஉருவாகாது, 
வலிமை போரிடாது, செல்வம் பயனிலியாகும், புத்திசாலித்தனம் 
செயல்படமுடியாமல் போகும் – ஹெரோபிலஸ்.

ஆரோக்கியமான வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதில், ஆரோக்கியமான உடல் ரொம்பவே பயன் செய்யும். ஒரு மனிதனுடைய உடல் வலுவாக இருக்கும் போது தான் மனமும், சிந்தனையும் வலுவடையும். ஆரோக்கியமாக இருக்கும். வெற்றியாளராய்ப் பரிமளிக்கவும் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் ரொம்ப அவசியம்.

ஒரு கவிஞன் பாடி பில்டராய் இருக்கத் தேவையில்லை என்றொரு வாதம்  உண்டு., உண்மை தான் ஆனால் யாராய் இருந்தாலும் ஆரோக்கியம் தேவை எனும் கருத்து மட்டும் எப்போதுமே நீர்த்துப் போவதில்லை !

வாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம்.

இதோ, இந்த பத்து செய்திகளையும் மனதில் கொள்ளுங்கள்.

  1. தினமும் காலையில் தவறாமல் காலை உணவு உண்ணுங்கள். காலையில் உணவு உண்பது அதிக வைட்டமின்களையும் தேவையான சத்துகளையும் உடல் பெற்றுக் கொள்ள உதவுகிறது. குறைந்த அளவு கொழுப்பே உடலில் சேர்கிறது.

அமெரிக்காவிலுள்ள இதயம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று “காலை உணவை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில், காலை உணவை தவறாமல் உண்பவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு, அதிக எடை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு” என்று முடிவு வெளியிட்டிருந்தது.

நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் அலுவலகத்திற்கு காலை உணவை கையோடு எடுத்துக் கொண்டு வந்தேனும் உண்பதே நல்லது.

  1. நன்றாகத் தூங்க வேண்டும். இன்றைய அவசர உலகம் பல்வேறு காரணங்களைக் கூறி தூக்கத்தின் நீளத்தைக் குறைக்கிறது.

தேவையான அளவு (ஏழு முதல் எட்டு மணி நேரம் ) தூக்கம் கிடைக்காதவர்களின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. அலுவலகப் பணிகளிலும், தனிப்பட்ட பணிகளிலும் கவன சிதைவுக்கு இது காரணமாகி விடுகிறது. பல்வேறு நோய்களுக்கும் இது விண்ணப்பம் விடுகிறது.

  1. உடற்பயிற்சி செய்யுங்கள். உலகில் முக்கால் வாசி பேர் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருப்பது மனதை உற்சாகத்துடன் வைத்திருக்கவும், தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவும்.

செய்யும் வேலையிலேயே உடற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடக்க வேண்டும். அலுவலகத்திலும், வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருப்பது நம்மை அறியாமலேயே நமக்கு உடற்பயிற்சியாய் அமைந்து விடுகிறது.

லிப்ட்டை புறக்கணித்து படிகளில் ஏறி இறங்குவது, கடைகளின் உள்ளே நடந்து திரிவது, பக்கத்து தெருவுக்கு நடந்தே போய் வருவது என சிறு சிறு செயல்கள் மூலமாகவே உடலுக்கு சற்று ஆரோக்கியம் வழங்க முடியும்.

ஆரோக்கியமான உடலே நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு.

  1. பற்களைக் கவனியுங்கள். உடலைப் பாதுகாக்க நாம் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பல்லைப் பாதுகாக்க நாம் செலவிடுவதில்லை.

பல் வலி வருவதற்கு முன்பாக பல் மருத்துவரிடம் செல்லும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையைச் சொல்வதெனில் பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் 6.4 ஆண்டுகளைக் கூட்ட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  1. உணவில் மீன் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் சிறந்தது. மீனிலுள்ள ஒமேகா – 3 எனும் அமிலம் அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள் போன்றவற்றைத் தடை செய்வதில் உதவுகின்றன.
  1. கொறித்தலை வகைப்படுத்துங்கள். தேனீர் இடைவேளைகள் போன்ற நேரங்களில் வறுத்த, பொரித்த வகையறாக்களை கட்டுவதை விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறி சாலட்களை உண்ணுங்கள்.

தேனீருக்கு டீ குடியுங்கள். பால் இல்லாமல் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது.

  1. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிதான ஆனால் பலரும் செய்யாத செயல் இது தான். தண்ணீர் குடிக்க மறந்து விடுதல் பல நோய்களை இழுத்து வரும்.

உடலின் உறுப்புக்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் ஒரு எளிய வழி நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதே என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

இது இதய நோய், சிறுநீரகக் கற்கள், உயர் குருதி அழுத்தம் உட்பட பல நோய்களை தடுக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

  1. சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு குழுவில் இணைந்தோ, அல்லது சமூக நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டோ சமூக நிகழ்வுகளில் பங்கு பெறுங்கள்.

மனிதன் குழுவாக வாழ படைக்கப்பட்டவன், தனிமைத் தீவுகளுக்குள் அடைபடுவதை விட சமூக வனத்துக்குள் சுற்றி வருவது மனம், உடல் என இரண்டையுமே சுறுசுறுப்பாக்கும். பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.

  1. தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாழ்வில் எட்ட முடியாத இலட்சியங்களையும், தேவையற்ற எதிர் மறை சிந்தனைகளளயும் ஒதுக்கி விடுங்கள்.

குடும்ப உறவுகளை பலப்படுத்தி வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான கோடு கிழியுங்கள்.

திட்டமிடுங்கள். உணவு, வேலை, குடும்பம் என அனைத்து செயல்களையும் சரியான முறையில் திட்டமிடுங்கள்.

  1. ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். உங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்வதாகவும், மனதை இலகுவாக்குவதாகவும் இருக்கவேண்டும் அது.

எழுதுவது, வாசிப்பது, இசை கேட்பது, தோட்டம் வைப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என எதுவானாலும் உங்களை மிகவும் வசீகரிக்கும் ஒன்றை பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலை அவை தரும்.

இந்த எளிய வழிகளைக் கடைபிடிப்பது தேவையற்ற நோய்களை நம் வாசலோடு அனுப்பி விடவும், உடல் நலத்தை வீட்டுக்குள் வரவேற்கவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை

உடலைப் பாதுகாப்பதும், மனதைப் பாதுகாப்பதும் இரண்டு வேறுபட்ட நிலை என பலரும் நினைக்கிறார்கள். அது ரொம்பத் தப்பு ! உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் ஆரோக்கியமாய் இருக்கும் !

மனம் ஆரோக்கியமாய் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாய் இருக்கும். ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றைப் பற்றிக் கொள்வது நம்மை நாமே ஊனப்படுத்திக் கொள்வது போன்றது என்பதை நினைவில் கொள்வோம் !

பைபிள் மாந்தர்கள் 80 (தினத்தந்தி) சீராக்

Bible-Quotes-HD-WALLPAPERS-SIRACH-10-2--spreadjesus.org

சாலமோனின் நீதிமொழிகளைப் போல பிரமிப்பூட்டக்கூடிய தத்துவச் சிதறல்களால் நிரம்பியிருக்கிறது சீராக்கின் ஞானம் நூல். செப்துவசிந்தா எனும் புகழ்பெற்ற கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டு பைபிளில் இணை திருமறைகள் எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது.

எருச‌லேமில் வாழ்ந்த‌ அறிஞ‌ர் சீராக். சீராக்கின் ஞான‌ம் எனும் நூலை அவ‌ருடைய‌ ம‌க‌னான‌ ஏசு என்ப‌வ‌ர் எழுதியிருக்கிறார். யூத‌ர்க‌ள் மீது கிரேக்க‌ மொழியும், ப‌ண்பாடும், வ‌ழிபாட்டு முறைக‌ளும் திணிக்க‌ப்ப‌ட்ட‌ கால‌க‌ட்ட‌மான‌ கிமு 180க‌ளில் இந்த‌ நூல் எழுத‌ப்ப‌ட்ட‌து.

“ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது: அது என்றும் அவரோடு இருக்கின்றது” எனும் ஆர‌ம்ப‌ வ‌ரியோடு துவ‌ங்கும் நூலிம் முத‌ல் ப‌குதி முழுவ‌தும் தின‌ச‌ரி வாழ்க்கையில் ஞான‌த்தைக் க‌டைபிடிக்கும் முறை ப‌ற்றிப் பேசுகிற‌து. இர‌ண்டாவ‌து ப‌குதி, இஸ்ர‌வேலின் மீட்வு வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற்ற‌ த‌லைவ‌ர்க‌ளைப் புக‌ழ்ந்து அவ‌ர்க‌ளைப் பின்ப‌ற்ற‌ அழைப்பு விடுக்கிற‌து.

சீராக் நூலில் முக்கியமாக பத்து விஷயங்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. படைப்பு, மரணம், நட்பு, மகிழ்ச்சி, பெருமையும் அவமானமும், செல்வம், பாவம், சமூக நீதி, பேச்சு பெண்கள் என்பவையே அவை.

“கடல் மண்லையோ மழைத்துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்? வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்? எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது”

” ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்: அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது.

ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்.”

“ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு: உறுதியாக இரு: துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே”

“நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது. ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர். உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஜயோ, கேடு வரும்! ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை”

என‌ இறைஅச்ச‌ம், இறைவ‌னை முழுமையாய் சார்ந்திருக்க‌ வேண்டிய‌ தேவை போன்ற‌வ‌ற்றை விவ‌ரிக்கும் நூல், பின்னர் ம‌னித வாழ்வின் தேவையைப் பேசுகிறது.

“தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர்.

அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்: அன்னையர்க்குச் சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்”

“நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.”

“உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே. உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே: ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை.”

“ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே: கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே. உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே. காலம் தாழ்த்தாமல் உதவி செய். ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார். ஏழைகளுக்குச் செவிசாய்: அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்”

“உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே. மூடருக்கு அடிபணியாதே: வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே. இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு. கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்”

” நன்மை செய்தோர்க்கே நன்மை செய்வோர் தங்களது எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்” எனும் வார்த்தை “உங்களுக்கு நன்மை செய்வோருக்கே நன்மை செய்தால் அதனால் வரும் பயன் என்ன ?” எனும் இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை நினைவூட்டுகின்றன.

” நான் பாவம் செய்தேன். இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? எனக்கூறாதே: ஆண்டவர் பொறுமை உள்ளவர். பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே. அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன: அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்”

“தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே: இல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய். நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே: அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய். கீழான உணர்வுகளின்படி நடவாதே: சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்து.”

” உடல் அழகுக்காக ஒருவரைப் புகழ வேண்டாம்: தோற்றத்துக்காக ஒருவரை இகழவும் வேண்டாம். பறப்பனவற்றுள் சிறியது தேனீ: எனினும், அது கொடுக்கும் தேன் இனியவற்றுள் சிறந்தது”

என‌ வாழ்க்கைக்குத் தேவையான‌ ந‌ன்னெறிக‌ளையும், அறிவுரைக‌ளையும் அள்ளி வ‌ழ‌ங்கும் நூல் பிற்பகுதியில் , இஸ்ர‌யேல‌ர்க‌ளின் த‌லைவ‌ர்க‌ளான‌, ஏனோக்கு, நோவா, ஆபிர‌காம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, ஆரோன், பின‌காசு, யோசுவா, காலேபு, சாமுவேல், நாத்தான், சால‌மோன், ர‌க‌பெயாம், எரொப‌வாம், எலியா, எலீசா, எசேக்கியா, எசாயா உட்ப‌ட‌ அத்த‌னை த‌லைவ‌ர்க‌ளையும் புக‌ழ்கிற‌து.

“ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம்.” அவ‌ரை விட்டு வில‌காம‌ல் அவ‌ரை நெருங்கிச் செல்ல‌ முடிவெடுப்போம். அத‌ற்காய் இறுமாப்பை அவிழ்த்துவிட்டு ப‌ணிவை அணிந்து கொள்வோம்.

தொலைக்காட்சியை விடுங்க

தொலைக்காட்சி என்னுடைய அறிவு வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் யாராவது தொலைக்காட்சியை ஆன் செய்யும் போது நான் பக்கத்து அறைக்குப் போய் உட்கார்ந்துப் படிக்க ஆரம்பித்து விடுவேன் –

குரோச்சோ மார்க்ஸ்

தொலைக்காட்சி இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது என்பதை மறுக்க முடியாது. தொலைக்காட்சி நமது அறிவு வளர்ச்சிக்கும், தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. எல்லாம் சரி தான், ஆனால் அது ஒரு கட்டத்தில் பொழுது போக்குவதற்கான சாதனம் எனும் நிலையிலிருந்து தாவி இன்னொரு தளத்துக்குப் போய்விட்டது. இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

சீரியல்கள் எனும் பெயரில் வீட்டு வரவேற்பறையில் பரிமாறப்படும் கலாச்சாரச் சீரழிவை குடும்பப் பெண்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்து கண்ணைக் கசக்கி சமையலை எக்ஸ்ட்ரா உப்பாக்கி விடுகிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமா ? எனும் அதிர்ச்சிச் செய்திகளெல்லாம், இப்போது சகஜமாய் நடப்பதற்குக் காரணம் இந்த சீரியல்களும் தான் என்பதில் சந்தேகமே இல்லை. எல்லா வேலைகளையும் சீரியல் நேரத்தை மனதில் கொண்டு வகுக்கும் அம்மாக்கள் வீடு தோறும் சர்வ சாதாரணம்.

ஒரு காலத்தில் “மாலை முழுதும் விளையாட்டு” என்பது சிறுவர்களுக்குப் பிடித்த பாடல் வரியாய் இருந்தது. தொலைக்காட்சி வந்தபிறது எல்லாம் தலைகீழ். பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வக் காட்சியாகி விட்டது. குழந்தைகளைக் குறிவைத்து ஏகப்பட்ட சேனல்களுடன் நிறுவனங்கள் களத்தில் குதிக்க, குழந்தைகளுக்கு வீதி விளையாட்டுகள் மறந்து போய் விட்டன. டோராவும், பவர் ரேஞ்சர்களுமே பிரியமானவர்களாகிப் போனார்கள்.

அப்படியே விளையாடினாலும் அது கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் ரேஞ்சுக்கு நகர்ப்புறக் குழந்தைகளின் வாழ்க்கை முறை மாறி விட்டது. தொலைக்காட்சியில் கதாபாத்திரங்கள் “ஓடி விளையாட” குழந்தைகள் வைத்த கண் வாங்காமல் இருக்கைகளில் உறைந்திருப்பது தான் இன்றைய பிஞ்சுகளின் பரிதாப நிலை. நிலவைக் காட்டிச் சோறூட்டுவதை விட்டு விட்டு மிக்கியைக் காட்டித் தான் அம்மாக்கள் குழந்தைகளுக்குச் சோறே ஊட்டுகிறார்கள்.

இதிலென்ன இருக்கு ? அமைதியா வீட்ல இருந்து பொழுதைப் போக்கறோம் – என எதிர் வாதம் செய்பவர்களுக்கு பதிலாக வந்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. இன்றைய சூழலில் இந்த ஆய்வு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு, மன அழுத்தம் வரும் வாய்ப்பு ரொம்ப அதிகம் என அழுத்தமாய்ச் சொல்கிறது இந்த ஆராய்ச்சி. இங்கிலாந்தின் ஹார்வர்ட் எனும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் விரிவான ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது

இதற்காக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுமார் 50 ஆயிரம் பெண்களை சர்வே எடுத்திருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதால் பலருடைய உடற்பயிற்சி காணாமல் போயிருக்கிறது. ஓடி விளையாடும் பழக்கம் ஓடிப் போயிருக்கிறது. உடல் இயக்கம் குறைந்து போவதனால் இந்த சிக்கல் அதிகரித்திருப்பதாய் இந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது.

நல்ல உடற்பயிற்சி இருக்கும் போது தன்னம்பிக்கையும், உற்சாகமும் தானாகவே தொற்றிக் கொள்ளும்து. உடலின் இயக்கமும், இரத்த ஓட்டமும், ஆக்சிஜன் இருப்பும் தேவையான அளவுக்கு இருக்கும். ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கும் போது இதெல்லாமே தலைகீழாகி விடுகிறது.  இது தான் மன அழுத்தத்தைத் தந்து விடுகிறது – என்கிறார் இந்த ஆய்வில் கலந்து கொண்ட மைக்கேல் லூக்காஸ் என்பவர்.

தினமும் சராசரியாக மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தால் மன அழுத்தம் வரும் வாய்ப்பு உங்களுக்கு 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கூடவே நீங்கள் உடற்பயிற்சி செய்யாமலும், உடல் எடையுடனும், புகை, மது போன்ற பழக்கங்களுடனும் இருந்தால் உங்கள் பாடு சிக்கல் தான்.

இதற்கு முன்பே மன அழுத்தம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. உடற்பயிற்சியும், உடல் உழைப்பும் தேவையான அளவு இருந்தால் மன அழுத்தம் வரும் வாய்ப்பு பெருமளவு குறையும் என்றே எல்லா ஆராய்ச்சிகளும் கூறியிருக்கின்றன. இந்த புதிய ஆராய்ச்சியும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் இதன் நம்பத்தன்மையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

உடற்பயிற்சியும், விளையாட்டும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் தான் மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைகிறது என்கிறார் கில்லர் மெட் எனும் ஆய்வாளர். மருத்துவ முறையில் சொல்வதானால் மன அழுத்தம் குறைவதற்கு என்டோர்பின் எனும் வேதியல் பொருள் சமநிலையில் இருப்பது அதி முக்கியம். அதற்கு தொலைக்காட்சியை விலக்குவதும், உடற்பயிற்சியைச் செய்வதும் அவசியம்.

இன்றைய நமது சமூகத்தில் தற்கொலைகளும், விவாகரத்துகளும், பல்வேறு விதமான நோய்களும் அதிகரித்திருக்கின்றன. அதற்கு மிக முக்கியமான காரணம் மன அழுத்தம். சின்ன வயது குழந்தைகளே மன அழுத்தங்களில் உழல ஆரம்பித்திருக்கிறார்கள். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் டிவியை ஆஃப் செய்து வைத்து விட்டு உடற்பயிற்சி, விளையாட்டு, உடல் உழைப்பு என கவனத்தை திசை திருப்பினாலே போதும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

இன்னொரு ஆராய்ச்சி ஒன்று அதிகம் டிவி பார்க்கும் குழந்தைகளுடைய இடுப்பு அளவு பெருசாகிக் கொண்டே போகும் என்கிறது. அதாவது சிறுவயதிலேயே கொழுப்பு சேர்ந்து அவர்களுடைய பிற்கால வாழ்க்கையின் சுறுசுறுப்பை நறுக்கி எறியுமாம்.

தொலைக்காட்சியை வெறித்துப் பார்ப்பது அந்த நிழல் உலகத்தின் அங்கத்தினர்களுக்கு வாழ்த்துப் பாடுவதற்குச் சமம். அதற்காக உங்களுடைய முக்கியமான நேரங்களை நீங்கள் செலவழிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருகாலத்தில் ஊரிலுள்ள அத்தனை பேருமே ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்ந்தார்கள். தங்களது உறவுகளை பலப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இன்றைக்கு வீடுகளில் உள்ள நான்கைந்து நபர்களே கூட பரஸ்பரம் பேசிக்கொள்ளும் நேரம் ரொம்பக் குறைவு. வீட்டிலேயே இருப்பார்கள், ஆனால் ஏதோ உலக மகா உன்னதத்தைப் பார்ப்பது போல மணிக்கணக்கில் தொலைக்காட்சியையே வெறித்துக் கிடப்பார்கள். உறவுகளின் பலவீனத்துக்கு இந்தத் தொலைக்காட்சி துணைசெய்கிறது !

வாசிக்கும் பழக்கத்தை வாரிச் சுருட்டிப் பரணில் போடுகிறது தொலைக்காட்சி. இன்றைக்கு அத்துடன் டேப்லெட்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவையெல்லாம் சேர்ந்து கொண்டு வாசிக்கும் பழக்கத்தை முடிந்தமட்டும் கழுவில் ஏற்றுகின்றன.

ஓவரா டிவி பார்த்தா ஹார்ட் அட்டாக் கூட வரும் என “அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலகி” நூல் தனது ஆய்வையும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது. இந்த சிக்கல் புகைபிடிப்பது, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது ! என தனது கருத்தையும் இந்த ஆய்வு பதிவு செய்தது.

தொலைக்காட்சி பிரியர்கள் சராசரியாக 5.1 மணிநேரத்தை தொலைக்காட்சியில் செலவிடுகிறார்களாம். இது ரொம்ப ரொம்ப உயர்ந்த அளவு. மக்களுடைய நேரத்தைச் சுரண்டும் இந்த நேரம் வாழ்க்கையிலிருந்து கழிக்கப் படவேண்டியதே.

தொலைக்காட்சி நிஜ உலகிலிருந்து உங்களைக் கடத்திக் கொண்டு போய் ஒரு நிழல் உலகத்தில் குடியேற்றி வைக்கிறது. நிஜ மனிதர்களோடான மனிதனது உறவை அது துண்டித்து விடுகிறது. போதாக்குறைக்கு பெரும்பாலும் வரும் விளம்பரங்கள் வேறு நமது பர்ஸைப் பதம் பார்த்தும் விடுகின்றன.

கூடவே நமது மனசையும் சிந்திக்க விடாமல் கட்டிப் போட்டு ஒரு போலித்தன மனிதனாக நம்மை மாற்றியும் விடும். நமது மூளையின் சிந்தனைத் திறமையை மழுங்கடிக்கும் வேலையையும் கன கட்சிதமாய் தொலைக்காட்சி செய்து விடுகிறது. வாழ்க்கையில் ஒரு திருப்தியின்மையையும் அது தந்துவிடும்.

செலவழிக்கும் நேரம் திரும்ப வருவதில்லை. சாதனையாளர்களுக்கு தொலைக்காட்சி நேரம் என்பது தோல்வியை நோக்கிய தூண்டிலாய் மாறிவிடும் வாய்ப்பு உண்டு.

தொலைக்காட்சியை மிகக் குறைவாக தேவையான அளவு மட்டுமே உபயோகப் படுத்துவது நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். தொலைக்காட்சிக்கு முன்னால் மூன்று மணி நேரம் செலவிடுவதை நிறுத்தி விட்டு, அப்படியே உங்கள் பெற்றோரின் அருகாமையில் மூன்று மணி நேரம் செலவிட்டுப் பாருங்கள். வாழ்க்கை அர்த்தப்படும் !

ஊனம் தடையல்ல

 மோசமான குணாதிசயம் தவிர ஊனம் வேறு இல்லை 
 – ஸ்காட் ஹேமில்டன். 

ஏதேனும் சின்னக் குறைபாடு இருந்தால் கூட அதைச் சுட்டிக் காட்டி தனது தோல்வியையோ, சோம்பேறித்தனத்தையோ நியாயப்படுத்தும் மக்கள் நம்மைச் சுற்றி ஏராளம் ஏராளம். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடல் ஊனம் ஒரு பொருட்டே அல்ல !

பேராசிரியர் ஸ்டீபன் ஹாப்கின்ஸ் பற்றித் தெரியவில்லையென்றால் உங்களுக்கு அறிவியல் அலர்ஜி அன்று அர்த்தம். சமகால அறிவியலார்களில் வியப்பின் குறியீடாக இருப்பவர் இவர். இவருடைய “எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகம். உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை இதை “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனும் பெயரில் அற்புதமாய் தமிழ்ப் படுத்தியும் இருக்கிறது.

இதைத் தவிரவும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். பிரபஞ்சத்தைப் பற்றியும், உலகத்தின் தோன்றல் போன்றவை பற்றியும் இவர் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. இதில் வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால் இவருக்கு இருக்கும் நோய் தான்.

1942ம் ஆண்டு இவர் பிறந்தார். அவருடைய 21வது வயதில் இவருக்கு ஒரு மிகப்பெரிய நரம்பு சார் நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவருடைய நோய் அமியோட்ரோபிக் லேட்டரல் செலரோஸிஸ் (amyotrophic lateral sclerosis ) அதாவது உடல் மொத்தமும் செயலிழந்து போகும் நிலை.

இவரால் மூன்று சக்கர வாகனத்தை விட்டு எழும்ப முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. தலையை அசைக்கலாம். பேசுவதற்குக் கூட மைக் தேவைப்படும் ! தனது 21ம் வயதிலேயே இந்தக்  கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டார் இவர். “இன்னும் ரெண்டே வருஷம் தான்” என்று அவருக்கு டாக்டர்கள் கெடு விதித்தார்கள்.

இன்று அவருக்கு 70 வயது ! மரணத்தை வென்றது மட்டுமல்லாமல் அறிவியலையும் அறிந்து உலகையே வியக்க வைத்தார் இவர். 2009ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருதான “பிரசிடன்ஷியல் மெடல் ஆஃப் பிரீடம்” வழங்கப்பட்டது ! தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகட்த்தின் ஒரு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குனராக இருக்கிறார்.

அறிவியல் உலகை இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கும் மாமேதையான ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்க்கு அவருடைய குறைபாடு எப்போதாவது தடைக்கல்லாய் இருந்திருக்குமா ?

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ, கோபம் கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை நன்றாகவே வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் துவங்கினால் வாழ நேரம் கிடைக்காது” எனும் அவருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ள தன்னம்பிக்கை வாசகங்கள் உயிரை உலுக்குகின்றன.

ஊனம் உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை. அவர்கள் இன்னொரு ஏரியாவில் மிகவும் பலமானவர்களாக இருப்பார்கள். உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பதில்லை. சோதனைகளைத் தரும் இறைவன் அதைத் தாங்கும் மன உறுதியையும் சேர்த்தே தருகிறார். அதை நம்பிக்கையோடு பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே நமது பணி.

நிக் வாயிச்சஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? 1982ம் ஆண்டு அவர் பிறந்தார். துயரம் என்னவென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கிடையாது, இரண்டு கால்களும் கிடையாது. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும்.

ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் “லைஃப் வித்தவுட் லிம்ப்” எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?

தனக்கு ஊனம் இருக்கிறது என நினைப்பது மட்டுமே ஊனம். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்.

பெருந்தன்மை பழகு

உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை. உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –

கலீல் ஜிப்ரான்

ஆலயத்தின் முன்னால் இருந்தது அந்தக் காணிக்கைப் பெட்டி. செல்வந்தர்கள் வந்தார்கள் தங்கள் கைகளில் அள்ளி வந்திருந்த பணத்தை அதில் கொட்டினார்கள். தங்கள் பெருந்தன்மையை அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் எனும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது. அப்போது ஒரு ஏழை விதவையும் வந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டே இரண்டு காசுகள் இருந்தன. அதைப் போட்டாள். அமைதியாய்க் கடந்து போனாள். அள்ளிக் கொட்டியவர்கள் இந்தப் பெண் கிள்ளிப் போட்டதை ஏளனமாய்ப் பார்த்திருக்கக் கூடும்.

ஓரமாய் அமர்ந்திருந்த இயேசு சொன்னார். “இந்த உண்டியலில் அதிகமாய்க் காணிக்கை போட்டது அந்த ஏழை விதவை தான். எல்லோரும் தன்னிடமிருந்ததில் மிகுதியானதைப் போட்டார்கள். இவளோ தன்னிடம் இருக்கும் முழுவதையும் போட்டுவிட்டாள்” என்றார்.

பெருந்தன்மை என்பது பிச்சையிடுதல் அல்ல. பெருந்தன்மை என்பது தேவையில் இருக்கும் இன்னொருவரின் தேவையை நிறைவேற்றும் மனநிலையும், செயல்பாடும். ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது, ஒரு அன்பின் செயலுக்கான கதவு நம் முன்னால் திறக்கிறது என்பார்கள். அந்தக் கதவைக் கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடும்போது மனித நேயத்தை மறுதலித்தவர்களாய் மாறிவிடுகிறோம். தன்னலம் தாண்டிய இடங்களில் மட்டுமே பெருந்தன்மை கிளை விட்டுச் செழிக்க முடியும்.

எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறுவயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது. “தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?” மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன்  “சரி” என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், ”நான் எப்போது சாகத் துவங்குவேன் ?”.

நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள். தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள் ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இது தான் தன்னலமற்ற அன்பின் வடிவம் !

“நான்” என்பதை பின்னால் நிறுத்தி “நீ, உனது விருப்பம்” என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.

நமக்கு என்ன கிடைக்கிறது என்பது நமது வாழ்தலின் அடிப்படையாகிறது. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதே நமது வாழ்வின் அடிப்படையாகிறது – என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். கொடுத்தல் என்பது வெறும் பணம் சார்ந்ததல்ல ! அது உங்கள் திறமை, நேரம், அருகாமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மன்னிப்பு, ஆறுதல் என அதன் முகம் வேறு படலாம். வகைகள் எதுவானாலும் வேர் என்பது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்வோம்.

பெருந்தன்மை என்பது வெறுமனே மனதுக்குள் சொல்லிப் பார்க்க வேண்டிய கவிதையோ, பாடலோ அல்ல. அது ஒரு செயலாக வெளிப்பட வேண்டிய உயரிய குணாதிசயம். ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும் போதும் பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் எனும் சிந்தனை மனதின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கட்டும். பெருந்தன்மையைக் கவனமாகச் செயல்படுத்தத் துவங்கினாலே அது நமது வாழ்வின் பாகமாக மாறிவிடும்.

யாருக்கு உதவி செய்தால் அவர்களால் திருப்பி உங்களுக்குத் தர இயலாதோ அந்த அளவுக்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவது உயரிய நிலை. நமது வீட்டின் கதவுகள் ஏழைகளுக்காகவும் திறந்தே இருப்பது பெருந்தன்மையின் அழகிய நிலை. பெருந்தன்மை உடையவர்கள் தான் மனதளவில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கொடுப்பது என்பது இழப்பது அல்ல ! சேமிப்பது ! பிறருடைய அன்பையும், வாழ்வுக்கான அர்த்தத்தையும் !

சிரியுங்கள்

புனிதர்களோடு அமர்ந்து அழுவதை விட  பாவிகளோடு சேர்ந்தாவது 
சிரிப்பதையே விரும்புவேன்  –  பில்லி ஜோயல்

சிலர் சிரிப்பதற்குக் காசு கேட்பார்கள். உம்மணாமூஞ்சிகள் என அவர்களுக்கு ஒரு செல்லப் பெயரை வைத்து உலகம் அழைக்கும். சிலரோ சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சிரிப்பு ஒரு அற்புதமான விஷயம். என்ன செய்ய, இன்றைய நாகரீக உலகில் பல வேளைகளில் சிரிப்பதே கூட அநாகரீகமாய் பார்க்கப்படுகிறது !

கிராமங்களிலுள்ள கல்யாண வீடுகளைப் போய்ப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து சிரியோ சிரியென சிரித்து மகிழ்வது வெகு சகஜமாகக் காணக் கிடைக்கும் காட்சி. ஆனால் நகர்ப்புறத்தில் அது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே ஒரு சின்ன சத்தம் எழுந்தால் கூட  “சத்தம் போடாதேப்பா, மெதுவா மெதுவா” என ஏதோ தீவிரவாதிகளில் ரகசியத் திட்டம் போலத் தான் பேசிக்கொள்கிறார்கள்.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது. வஞ்சகமில்லாமல் சிரித்து வாழ்பவர்களுக்கு எண்டோதெலியத்தை ஆரோக்கியமாக்குகிறது. இரத்தக் குழாய்கள் சீராக இயங்குகின்றன என்பதெல்லாம் மருத்துவ உலகம் சொல்லும் ஆராய்ச்சி விளக்கங்கள்.

ஏதோ சிரிப்பது மனம் சார்ந்த விஷயம் என எட்டியே நிற்பவர்கள் கொஞ்சம் பக்கம் வாருங்கள். சிரிப்பதால் உடல் ஆரோக்கியம் தான் கணிசமாக ஏறுகிறது. மூளைக்கு அதிக ஆக்சிஜன் ஏற்றுமதியாகி, மூளை சட்டென சுறுசுறுப்பாகிறது. உடல் தசைகள், முக தசைகள் போன்றவை மிகவும் ஆரோக்கியமாக விளங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அப்படியே உடலுக்குள்ளும் பாய்ந்து ஒட்டுமொத்த உடலையுமே ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது.

சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

நிறுவனங்கள் இப்போது சிரிப்பு விஷயத்தைச் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்தால் தான் வேலை நன்றாக நடக்கும் என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் அவை ஊழியர்களுக்கென சிரிப்பு மூட்டும் கிச்சு கிச்சு நிகழ்ச்சிகளையும், கிச்சு கிச்சு பொழுதுபோக்கு அம்சங்களையும் நடத்துகின்றன.

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார்.

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது.

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்பு தனி மனித பயன் என்பதையும் தாண்டி வேலை சார்ந்த விஷயங்களிலும் ஊழியர்களை மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கிறது என்பது ஸ்பெஷல் செய்தி. சிரிப்பை அதிகம் நேசிப்பவர்கள் அதிக சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. இதன் மூலம் வேலையில் முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவையான கிரியேட்டிவிட்டி, புதுமைச் சிந்தனை போன்றவற்றை தூசு தட்டி சரிப்படுத்தும் வல்லமையும் சிரிப்புக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதற்கும், அடுத்த நபரை உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கும் கூட இந்த சிரிப்பு ரொம்பவே பயனுள்ளதாய் இருக்கிறது. கூடவே ஒரு பாசிடிவ் வேலைச் சூழலை இத்தகைய உற்சாகமான சிரிப்பு தருகிறது !

எனவே, சிரிப்பு ஒரு சீரியஸ் சமாச்சாரம் என்பதை மனதில் எழுதுங்கள்.