வாழ்க்கை கடினமானதா ?

Man-Praying

மிக எளிதான வாழ்க்கை வேண்டுமென செபம் செய்யாதீர்கள். எந்தக் கடினத்தையும் தாங்கும் வலிமை வேண்டும் என்றே செபம் செய்யுங்கள் –

ஜான் எஃப் கென்னடி.

வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. அப்படி இருக்கும் மனிதர்கள் கல்லறைகளில் தான் காணக் கிடைபார்கள். காரணம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் உழைப்பும், அதைக் கடந்து செல்லும் மனநிலையும் தேவைப்படுகிறது ! அது கடினமா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது.

வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு என்பவர்கள் எதனுடன் ஒப்பிட்டு அப்படிச் சொல்கிறார்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அல்லது யாருடன் ஒப்பிட்டு வாழ்க்கை கஷ்டமாய் இருக்கிறது என்பதை முடிவு செய்கிறீர்கள் எனும் தெளிவு இருக்க வேண்டும்.

கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு கஷ்டம். இஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு இஷ்டம் ! வண்ணத்துப் பூச்சியின் கூடுடைக்கும் போராட்டத்தைப் பார்க்கும் போது, “அடடா.. எவ்ளோ கஷ்டப்படுது” என மனசில் சிந்தனை ஓடும் இல்லையா ? அந்தக் கடினமான வேலை இல்லாவிட்டால் வண்ணத்துப்  பூச்சி ஆரோக்கியமாய் வெளிவர இயலாது என்பது தானே உண்மை !

நமது கஷ்டங்கள் நீண்டகாலம் தொடர்ந்தால், அதன் எல்லையில் மகிழ்ச்சியும் அந்த அளவுக்குப் பெரியதாக இருக்கும் என்பது பெரியவர்களின் மொழி. இறுகி இறுகிக் கிடக்கும் கரி தானே வைரமாய் மாற முடியும் ! எரிவதற்குப் பயன்படுவதா ? இல்லை வைரமாய்த் திரிவதற்குப் பயன்படுவதா என்பதை சோதனைகள் தான் முடிவு செய்கின்றன.

ஆகாய விமானத்தின் உடலைப் பாருங்கள். எவ்வளவு உறுதியாய் இருக்கிறது. அதை அடைய அது பல கஷ்டங்களைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது. அதிக பட்ச வெப்பத்தில் அதைப் போடுவார்கள். பின் அதிகபட்சக் குளிரில் போடுவார்கள். இப்படிப் பல முறை செய்து அந்த உலோகமானது எந்தக் காலநிலையையும் தாக்குப் பிடிக்கும் வகையில் மாற்றுவார்கள். அப்படி கடினப் பாதையில் செல்லும் உலோகம் தான் உயர உயரப் பறக்கும். அப்படிப் பட்ட சிக்கலைச் சந்திக்காத உலோகம் அடுப்படியில் பாத்திரமாக உருமாறிவிடும் !

ஒவ்வொரு கடினப் பாதையும் நமக்கு நன்மைகளைத் தருவது போல, நல்ல படிப்பினைகளையும் தருகிறது. “அனுபவம் ரொம்ப இருக்கு” என ஒருவரைப் பார்த்து எப்போது சொல்வோம் ?. அவர் இத்தகைய சிக்கல்களில் நுழைந்து நுழைந்து வெளியேறி வரும்போது தானே ?

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்யும் மனிதர்கள் பெரும்பாலான கடின நிமிடங்களை இலகுவாகத் தாண்டி விடுகிறார்கள். “காலைல இருந்து நைட் வரை வேலையைக் கட்டிட்டு அழ வேண்டியிருக்கு” என நினைக்காமல் காலை முதல் மாலையிலான நமது வாழ்க்கை அது, அதை ரசித்துச் செய்வோம் என நினைத்தால் அந்த கடின நிமிடம் உங்களுக்குப் பிடித்தமானதாய் மாறிவிடும்.

வார இறுதிகளில், “ஐயோ நாளைக்கு மறுபடியும் வேலைக்குப் போகணுமா” என நினைக்காமல் அந்த நாளை, அந்த நிமிடத்தை, அந்த ஓய்வை ரசிக்கத் துவங்கினால் வார இறுதிகளும் வரமாய் மாறிப் போகும். ஒரு சமையல் செய்வதானாலும் சரி, அல்லது ஒரு ராக்கெட்டைச் செய்வதானாலும் சரி, நமது பாகத்தை ரசித்துச் செய்வோமென்றால் நம்முடைய பெரும்பாலான பொழுதுகள் இனிமையாகவே கடந்து விடும் என்பதே உண்மை.

இனிமையும் சந்தோசமும் அடுத்த வேலையிலோ, அடுத்த நிமிடத்திலோ தான் கிடைக்கும் என நினைப்பது நமது கண் முன்னால் இருக்கும் இனிய நிமிடங்களை உதாசீனப் படுத்துவதாகும்.

ஒரு சிக்கலைத் தீர்க்க அதன் முழு வடிவத்தையும், எப்படி தோன்றியது எனும் வரலாற்றையும் அறிய வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. உதாரணமாக ஏதோ ஒரு காரணத்துக்காக உங்கள் தம்பி உங்களிடம் கோபமாய் இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே நடந்த நிகழ்ச்சிகளின் போஸ்ட்மார்ட்டம் தேவையே இல்லை. ஓடிப் போய், “தம்பி.. நீ என்னைக்குன்னாலும் என் தம்பி தாண்டா… என் மேல ஏதாச்சும் கோபமிருந்தா மன்னிச்சுக்கடா… ” என அணைத்துக் கொள்ளுங்கள். தம்பியின் கோபத்துக்கான காரணம் தேவையில்லை. அது என்னவாய் இருந்தாலும் உங்கள் அணைப்பில் அணைந்தே போய்விடும்.

வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு என புலம்பும் மனிதர்கள் பெரும்பாலும் முன் வைப்பது பொருளாதாரச் சிக்கல்களை. இரண்டாவது உறவு சார்ந்த சிக்கல்களை. மூன்றாவது உடல் பலவீனம் சார்ந்த சிக்கல்களை.  இவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நமது தன்னம்பிக்கையையும், வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதையும் பொறுத்தது.

ஒரு சூழல் வரும்போது, அதை சமாளித்து வெற்றிகரமாய்ப் பயணிக்க முடியும் எனும் உள்ள உறுதி முதல் தேவை. அமைதியாக அந்தச் சிக்கலான சூழலை எப்படிக் கடப்பது, அதில் என்னென்ன நல்ல விஷயங்கள் இருக்கின்றன, என்னென்ன சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கின்றன போன்ற விஷயங்களையெல்லாம் கவனியுங்கள். பாசிடிவ் மனநிலையோடு அந்த சூழலை அணுகுங்கள்.

கசப்பு கூட அறுசுவையில் ஒன்று தான். சின்னச் சின்ன சவால்களும், சிக்கல்களும் கூட ஆனந்தம் தர முடியும்.

வாழ்க்கை ரொம்பவே கஷ்டமானது, சுமை என்று நினைக்காமல் அதை சிம்பிளாக்க முயலுங்கள். வாழ்க்கை கஷ்டமானதா, சுவாரஸ்யமானதா என்பது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது ! நம்மிக்கையுடன் எதிர்கொள்வோம் !

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s