தொலைபேசியில் ஆபாசப் பேச்சு

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு !

செக்ஸ். இந்த ஒற்றை வார்த்தையைக் கழித்து விட்டு மனித குல வரலாற்றையோ, இலக்கியங்களையோ, வாழ்க்கை முறையையோ முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதன் தோன்றிய காலத்திலேயே துவங்கிவிட்டது பாலியல் விஷயங்கள். ஒவ்வோர் காலகட்டத்திலும் அதன் பரவலும் பாதிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். மற்றபடி செக்ஸ் எனும் ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒத்துக் கொள்ள முரண்டு பிடிப்பவர்கள் ஏதேனும் ஒரு தினசரியைப் புரட்டிப் பார்த்தாலே போதுமானது. டீன் ஏஜ் பெண்களின் காதல் முதல் முக்கால் கிழடுகளின் கள்ளக் காதல் வரை எல்லாமே சொல்லித் தரும் பாடம் செக்ஸ் பற்றியதாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் சமீபகாலமாக திடுக்கிட வைக்கும் முன்னேற்றம் தொலைபேசி செக்ஸ் உரையாடல் !

அதென்ன போன் செக்ஸ் ? கொஞ்சம் கண்ணியமாய்ச் சொல்ல வேண்டுமெனில் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் இருவர் பாலியல் ரீதியான உரையாடல்களில் லயித்து, உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்வது எனலாம். மின்னஞ்சலில் பேசிக்கொள்வது, இண்டர்நெட் சேட் விண்டோக்களில் பேசிக்கொள்வது போல ஒரு முகம் தெரியா செக்ஸ் தூண்டுதல் தான் இது.

நள்ளிரவு தாண்டியபின்னும் தனியாக அமர்ந்து, வெட்கத்தின் நகத்தைக் கடித்துத் தின்றபடி, போனில் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் இந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். திருமணமாகி தனியே வாழும் தம்பதியரும் இத்தகைய தொலைபேசி உரையாடல்களில் லயிப்பதுண்டு. இவை எப்போது எல்லை மீறுகிறது தெரியுமா ? அறிமுகமற்ற நபர்களை தொலைபேசி செக்ஸ் பேச்சுகளுக்காக நாடும்போது தான்.

இந்தியாவில் இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான அறிமுகமாக இருந்தாலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான பிஸினஸ். பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சட்டபூர்வமான தொழில். ஒருவகையில் இது ஒரு விபச்சாரத் தொழில் போலத் தான். ஆனால் என்ன இங்கே இரு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, உண்மையான தொடுதல் உணர்வுகளைப் பெறவோ முடியாது அவ்வளவு தான். இருவரும் கற்பனையான உலகுக்குள் சுற்றித் திரிவார்கள்.

நல்ல வசீகரிக்கும் குரல் மட்டும் தான் இந்தத் தொழிலில் ஈர்க்கப்படும் அம்சம். அப்படிப்பட்டவர்களைத் தான் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர். அழைக்கப்பட்டவர்களை பேச்சில் குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கான பணி. “உங்களுக்காக இதோ நாங்கள் காத்திருக்கிறோம் தனிமையை இனிமையாக்க கால் பண்ணுங்கள்” என விளம்பரம் வரும். அதில் வரும் எண்ணுக்குப் போன் செய்தால் பெண்கள் பேசுவார்கள். இவர்களெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள். காதலில் கசிந்துருகுவது போலவும், காமத்தின் கால்வாயில் நீந்துவது போலவும் பேசுவதில் எக்ஸ்பர்ட்.

மேலை நாடுகளில் இவற்றுக்கென தனி எண்கள் வைத்து நிமிடக் கணக்கில் டாலர்களைக் கறக்கிறார்கள். பெரும்பாலும் டெலிபோன் பில்லுடன் அந்தக் கட்டணமும் வரும். தொலை பேசி நிறுவனங்கள் அந்தத் தொகையில் கணிசமான ஒரு தொகையை இந்த பாலியல் பேச்சு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும். அமெரிக்காவில் ஒரு பெண் ஒரு வாரத்துக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை சம்பாதித்து விட முடியும் என்கிறது புள்ளி விவரம். 

“உங்களுடைய இரவை இனிமையாக்க வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் லிஸா காத்திருக்கிறார்” என மேற்கத்திய உலகம் விற்றுக்கொண்டிருந்ததை தமிழ்ப்படுத்தியிருப்பது தான் கொடுமை. “உங்களில் யாருக்காவது ஸ்பைஸி சேட் வேணுமா மாலதியும், கல்பனாவும் உங்களுக்காக காத்திருக்காங்க. கால் பண்ணுங்க” என்பது போன்ற ஏதேனும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தால் அப்படியே டிலீட் பண்ணிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுங்கள். அத்தகைய அழைப்புகளெல்லாம், விவகார அழைப்புகள் தான்.

கொஞ்சம் அசந்தால் ஆண்டுக்கு ஐயாயிரம் என பேரம் பேசி, அது பிறகு அப்படியே உங்களுடைய சம்பாத்தியத்தின் கடைசிப் பணத்தையும் உறிஞ்சாமல் விடப் போவதில்லை என்பதே நிஜம். பெரும்பாலும் இத்தகைய போன் பேச்சு பார்ட்டிகள் நேரடியாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் சில சம்பவங்களில் நல்ல வெயிட் பார்ட்டிகளை நேரில் சந்தித்து பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன ! உண்மையான தகவல்களைக் கொடுத்து விட்டால் பிளாக்மெயில், குடும்ப சிக்கல்கள் என்று இதன் தாக்கம் பின்னியெடுக்கும்.

வெளிநாட்டிலுள்ள ஆபாசப் பேச்சு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல இடங்களிலும் கமுக்கமாய் நடந்து வருகிறது. ஆபாசப் பேச்சை விரும்புபவர்கள் “ஆசியப் பெண்களிடம், அல்லது இந்தியப் பெண்களிடம்” பேச வேண்டுமென ஸ்பெஷலாய் விரும்பினால் அந்த அழைப்புகளை இங்குள்ள கிளைகளுக்கு அனுப்பி விடுகிறார்களாம். சில நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள அழைப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன.

எண்பதுகளில் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. இந்த சந்தை இன்னும் அதிகமாக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவை இணைத்தும் ஒரு சர்வதேச வலையமைப்பில் இப்போது இந்த ஆபாசப் பேச்சு தொழில் விரிவடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும்.

ஆபாசப் பேச்சுகள் குடும்ப உறவுகளின் மீதான பிடிப்பைப் போக்கி ஒரு விதமான மயக்க கற்பனை உலகிற்குள் மக்களை சிறைப்படுத்தி விடுகிறது. மேலை நாடுகளில் இத்தகைய ஆபாச அழைப்புகளுக்கான வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் பார்வையிழந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அப்படிப் பார்த்தாலும் 70 சதவீதம் பேர் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கை பலவீனமடைய இது மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.

ஒருவகையான அடிக்ஷனாகவும் இது மாறிவிடும் என்கின்றனர் உளவியலார்கள். இந்தப் புதை குழிக்குள் விழுபவர்கள் பின்னர் சாதாரண தாம்பத்யத்தில் விருப்பம் இழந்து, போனில் பேசினால் தான் தாம்பத்ய உறவு எனும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இந்தியாவைப் பொறுத்தவரை இது சட்ட விரோதமானது. ஒரு வகையில் விபச்சாரத்துக்கான கடுமையுடன் இதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பதின் வயதுப் பசங்களும், பெண்களும் இத்தகைய வலைகளில் சிக்கிக் கொண்டால் அவர்களுடைய எதிர்காலமே ஒட்டு மொத்தமாய் அழிந்து போகும் அபாயமும் உண்டு.

“இதெல்லாம் சும்மா பேச்சுக்குத் தானே ?” என யாராவது நியாயப்படுத்தினால் அவர்கள் நிலமையின் வீரியத்தை உணராதவர்கள் என கருதிக் கொள்ளுங்கள். மன ரீதியான பாதிப்புகளே உடல் ரீதியான பாதிப்புகளை விட நீண்டகாலம் துயரம் தரக் கூடியது என்பதை உணர வேண்டும். மனதின் ஊனத்துக்கு உத்தரவாதம் தரும் இத்தகைய பேச்சுகளை வரவேற்பது என்பது மனுக்குலத்துக்குச் செய்யும் அவமானம் என்பதைத் தவிர வேறில்லை.

பெண்கள் தான் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாய் இருக்க வேண்டும். ஏதேனும் பத்திரிகையின் மூலையில் “வீட்டிலிருந்தே பேசலாம், அலுவலகத்திலிருந்தும் பேசலாம் மாசம் பத்தாயிரம், பதினையாயிரம்” என ஆசை காட்டினால் விழுந்து விடாதீர்கள். அல்லது தவறான வேலை என புரிகின்ற கணத்தில் அந்தத் தொடர்பைத் தாமதமின்றித் துண்டித்து விடுங்கள். வெறுமனே ஒரு வேலையாக இதைச் செய்ய முடியாது என்பதும், இது மனரீதியான கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதையும் உணரவேண்டும்.

பாசிடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் பாசிடிவ் விஷயங்கள் அலைமோதும். நெகடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் நெகடிவ் விஷயங்கள் குடிகொள்ளும். அதே போல செக்ஸ் தொடர்பாகப் பேசிக்கொண்டே இருப்பவருடைய மனதிலும் அத்தகைய எண்ணங்கள் காலப்போக்கில் கால்நீட்டி அமர்ந்து விடும் என்பது தான் நிஜம்.

வெளிப்பார்வைக்கு சாதாரண கால்செண்டர் போல தோற்றமளிக்கும் இடங்களில் கூட திரைமறைவில் இத்தகைய வேலைகள் நடக்கக் கூடும். எனவே எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்பு அழைப்புகள் பிரபல பத்திரிகைகளிலேயே தைரியமாய் அழைப்பு விடுக்கின்றன என்பதில் கவனம் தேவை.

சமீபத்தில் கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஒரு கும்பலைப் பிடித்த காவல்துறையினர் இந்த தொழிலில் வேர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு திரைமறைவு தொழில் இருப்பதே அப்போது தான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

குடும்பவாழ்க்கையைச் சிதைக்கும் பாதையில் மும்முரமாய் இணையமும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் பயணிப்பது அபாயகரமானது. இவற்றின் தேவைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவதே இன்றியமையாதது. இத்தகைய கலாச்சாரச் சீரழிவுத் தொழில்களை விட்டு விலகுவது மட்டுமன்றி, எதிர்த்துக் குரல் கொடுப்பதிலும் நமது கரங்களை இணைக்க வேண்டியது அவசியம்.

சட்டமும் விதிமுறைகளும் ஒழுங்குகளைக் கட்டாயப்படுத்தித் திணிக்கும். ஆனால் தனி மனித கோட்பாடுகளும், சிந்தனைகளும் நேர்வழியில் இருக்கும் போது தான் இத்தகைய ஆபத்துகள் பரவாமல் இருக்கும்.

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

இன்றைய நூதன மோசடிகள்…

எப்படிக் கவிழ்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேடுபவர்களுக்குப் பஞ்சமேயில்லை. அதே அளவுக்கு, எப்படா வாய்ப்புக் கிடைக்கும் ஏமாறலாம் என அப்பாவியாய் இருப்பவர்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் உஷாராய் இருந்தால் எந்த பெரிய ஏமாற்றையும் எளிதில் கண்டு கொண்டு தப்பி விடலாம்.

பெரும்பாலான மக்களை அன்றும் இன்றும் வாட்டிக் கொண்டிருப்பது பைனான்ஸ் சமாச்சாரங்கள் தான். இதில் பல முகங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் கட்டுங்கள், ஆறு வருஷம் கழிச்சு யானை வரும் என்பது ஒரு வகை. உங்கள் பணத்துக்கு வட்டி நாப்பது சதவீதம் என சிலிர்ப்பூட்டுவது இன்னொரு வகை. கட்டுங்கள் உங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம் கிடைக்கும் என்பது சர்வதேச வகை. அப்பாடா, இப்போதான் சரியா ஒரு சேமிப்பு ஐடியா வந்திருக்கு என நீங்கள் நினைத்தால் சேமித்ததெல்லாம் போச்சு !

பைனான்ஸ் விஷயங்களைத் தாண்டி விஸ்வரூபமெடுத்து மிரட்டுவது ரியல் எஸ்டேட் பிரச்சினைகள். அதுவும் சென்னை போன்ற நகரங்களில் கேட்கவே வேண்டாம். எப்படி ஏமாற்றுவது என்பதை ரூம் போட்டு யோசிப்பார்களோ என கேட்கத் தோன்றும். சேல் டீட் இருக்கிறது, பட்டா இருக்கிறது, அப்ரூவ்ட் லேண்ட் பழத்தில் ஊசி ஏற்றுவார்கள். கடைசியில் பார்த்தால் ஒரு இடத்தை நான்கு பேருக்கு விற்றிருப்பார்கள். அல்லது எல்லாமே போலியாய் தயாரித்த பத்திரமாய் இருக்கும்.

வழக்கமா இங்கே நாப்பது இலட்சம் போகும். ஒரு இடம் இருக்கு. இருபதுக்கு முடிச்சு தரேன். யார்கிட்டேயும் சொல்லாதீங்க. அப்புறம் போட்டிக்கு வந்துடுவாங்க என்றெல்லாம் ஒருவர் இழுக்கிறார் என்றாலே விவகாரம் தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இதை விட நல்ல இடம், இதை விட நல்ல விலைக்குக் கிடைக்காது என்று உங்களை நம்ப வைப்பதில் தான் இந்த புரோக்கர்களின் புத்திசாலித்தனமே இருக்கிறது. அவர்களுடைய வலையில் விழுந்து விட்டால், சிலந்தி வலையில் விழுந்த ஈயாகி விடுவீர்கள்.

திடீரென ஒருவர் தனியே அழைத்துப் போய் காது கடிப்பார். சுகம் அப்பார்ட்மெண்ட்ஸ்ல ஒரு வீடு இருக்கு. வீட்டோட நம்பர் 8. உங்களைப் பார்த்தா நம்பர்ல நம்பிக்கை இல்லாதவர் போல தெரியுது அதான் சொன்னேன். நியூமராலஜி பிராப்ளம் இருக்கிறதனால ரேட் படியமாட்டேங்குது. ஒரு நாலஞ்சு இலட்சம் கம்மியாவே முடிச்சிடலாம் என்பார். அட, செம லாபமாச்சே என அட்வான்ஸ் கிட்வான்ஸ் கொடுத்து விடாதீர்கள். வியக்கும் வாய்க்கு அல்வா தான் மிஞ்சும்.

நகர்ப்புறங்களில் திடீர் திடீரென முளைக்கும் சிட்டி கட்டி தங்கம் வாங்குவது, பாத்திரம் வாங்குவது, பட்டுப்புடவை வாங்குவது என பலவும் மோசடிகள் தான். ஒன்றுகில் உங்கள் பணத்தை அபேஸ் செய்வார்கள். அல்லது உதவாக்கரை பொருளை உங்கள் தலையில் கட்டி வைத்து விட்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இந்த சாதாரண ஏமாற்றுகளுக்கு அடுத்தபடியாக வந்திருப்பது ஹைடெக் மோசடிகள். இந்த ஹைடெக் மோசடிகளின் கதைகளைக் கேட்டால் புல்லரிக்கும். இப்படியெல்லாம் கூட ஏமாற்ற முடியுமா என நீங்கள் வியந்து போகும் படி இருக்கும் பல ஏமாற்று வித்தைகள்.

திடீரென உங்கள் மின்னஞ்சல் கதவை ஒரு மெயில் தட்டும். வாவ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். உங்களுக்கு ஐந்து இலட்சம் டாலர் பணம் கிடைத்திருக்கிறது. அதை அனுப்ப ஜஸ்ட் ஐம்பதாயிரம் ரூபாய் நீங்கள் அனுப்பவேண்டும். உங்கள் வங்கி எண், விலாசம் எல்லாம் குடுங்கள். என குஷிப்படுத்தும். “ஆஹா, வந்தாள் மஹாலட்சுமி ..” என குதித்தால் நீங்கள் அம்பேல். சைலண்டாக அந்த மின்னஞ்சலை டெலீட் செய்தால் நீங்கள் அறிவாளி.

கண்காட்சி, பொருட்காட்சி எங்கேயாவது போவீர்கள். தினசரி குலுக்கலில் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு உங்கள் அட்ரஸ் எழுதிப் போடுவீர்கள். பார்த்தால் மறு நாள் மாலையிலேயே போன் வரும். எடுத்தால் மறு முனை பாராட்டும். “வாழ்த்துக்கள்… நீங்க எங்க குலுக்கலிலே பரிசு வாங்கியிருக்கீங்க. அதிர்ஷ்டசாலிதான். உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு. சரி சரி, ஒரு நாலாயிரத்து ஐநூறு ரூபா டிடி எடுத்து இந்த அட்ரஸுக்கு அனுப்புங்க. உங்களுக்கு பரிசும், சிங்கப்பூர் போக நாலு டிக்கெட்டும் கிடைக்கும்..” என சரமாரி கதை வரும். தெய்வத்துக்கு நாலு தோப்புக் கரணம் போட்டு விட்டு பணத்தோடு டிடி எடுக்க பேங்கிற்கு ஓடினால் நீங்கள் காலி ! கட்பண்ணிக் கடாசி விட்டு வேலையைப் பார்த்தீர்களென்றால் அறிவாளி.

திடீரென உங்களுக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு லிங்க். லிங்கைக் கிளிக் செய்தால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பக்கம் வரும். உங்கள் விலாசம், தொலைபேசி எண், இத்யாதி எல்லாவற்றையும் எழுதுங்கள். இது எங்கள் வருடாந்திர ஆடிட். என மெசேஜ் இருக்கும். உண்மையில் அது போலி சைட். மெயில் அட்ரசில் சில எக்ஸ்டா எழுத்துக்களுடன் உல்டா பண்ணியிருப்பார்கள். நீங்கள் அவசரப்பட்டு உடனே பாஸ்புக், கிரெடிட் கார்ட், பின் நம்பர் என சர்வத்தையும் எண்டர் பண்ணினால் கிளீன் போல்ட். வங்கிக்குப் போன் செய்து விஷயத்தை உறுதிப்படுத்தினால் நீங்கள் சமர்த்து.

வீட்டிலிருந்தபடியே மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். நீங்கள் வீட்டிலிருந்தபடியே தயாரிக்க வேண்டியது இந்தப் பொருள் தான். தயாரிக்கும் பொருளை நாங்களே மாதா மாதம் வந்து வாங்கி கொள்வோம். பேனாவை எப்படிச் செய்வது என்பதை அறிய சிடி, புத்தகம், எல்லாம் அனுப்புவோம். தேவைப்படுவோருக்கு வீட்டில் வந்தே செய்முறை விளக்கமும் சொல்லித் தருவோம். முப்பதாம் தியதிக்குள் ரிஜிஸ்டர் செய்யுங்கள். பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்புங்கள். என கடிதம் வரும். அப்பாடா நமக்கொரு விடிவு காலம் என நினைத்தால் அது முடிவு காலமாகிவிடும். கொஞ்சம் யோசித்தால் கண்டத்திலிருந்து தப்பிக்கலாம்.

உங்கள் முகவெட்டு நன்றாக இருக்கிறதா ? உங்களுடைய புகைப்படங்களை அனுப்புங்கள். போட்டோ டெஸ்டில் பாஸாகி விட்டால் புதிதாக எடுக்கப்போகிற படத்தில் நீங்கள் தான் ஹீரோ/ஹீரோயின். புகைப்படங்களையும், எண்ட்ரீ பீஸாக வெறும் ஐநூறையும் அனுப்புங்கள். முகவரி இது தான் என ஒரு கோடம்பாக்கம் சந்து வந்து நிற்கும். அனுப்பினால் அவ்ளோ தான். எப்படியெல்லாமோ உங்கள் வாழ்க்கை திசைமாறி சீரழிய வாய்ப்பு உண்டு.

நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திடீரென உங்களுக்கு ஒரு போன் வரும். நான் உங்கள் கவிதைகளைப் படித்து பிரமித்துவிட்டேன். நான் இயக்குனர் லொடுக்கு பாண்டி. நான் ஒரு புது படம் தயாரிக்கிறேன். படத்தின் பெயர் “நிலாவில் மழை”. ஒரு பாட்டு எழுத வேண்டியிருக்கு. சுஜாதாம்மா தான் பாடறாங்க. மேடைல பாடற மாதிரி கான்சப்ட் அது. தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு. உங்களுக்கு சினிமா பாட்டு எழுத வருமா ? என தூண்டில் நீளும். ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுங்க, படம் வெளியானதும் பணத்தை நிச்சயம் தந்திடுவேன் என்பார்கள். ஆஹா.. உலகப் புகழ் என நினைத்தால் அம்பேல்.

திடீரென ஒரு மின்னஞ்சல் வரும். உங்கள் டேக்ஸ் ரீபண்ட் பணம் நாற்பத்திரண்டாயிரத்து எழுநூறு ரூபாய். நீங்க 2450 ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்புங்க. எந்த பெயருக்கு செக் அனுப்ப வேண்டும் என்பதை ஒரு முறை கன்பர்ம் செய்யுங்கள். என்றெல்லாம் கதை விடும். என்னடா இது கூப்பிட்டு கூப்பிட்டு கவர்மெண்ட் காசு குடுக்குது என நினைத்தால் நீங்கள் காலி.

வெளிநாட்டுல வேலை வேணுமா என கத்தரிக்காய் மாதிரி கூவிக் கூவி விற்கும் ரகம் ரொம்ப ஆபத்து. துபாய், பஹ்ரைன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் சமீப கால கூக்குரல் மலேஷியா. ஏதோ ஒரு பெரிய ஆயில் கம்பெனி பெயரில் இந்த வேலை ஏலம் நடக்கும். நீங்கள் பணத்தை ஆன்லைனில் அனுப்பிக் கொடுக்க வேண்டும். அப்பாடா, இப்போதான் தெய்வம் கண்ணைத் தொறந்திடுச்சு என மொத்தத்தையும் அடகு வெச்சு பணம் கட்டினீங்கன்னா அவ்ளோ தான். உஷாரா கவுன்சிலேட், கம்பெனி என எல்லா இடத்துலயும் தீர விசாரிச்சீங்கன்னா நீங்க சமத்து !

ஏமாற்று என்பது மூட்டைப் பூச்சி போல, ஒண்ணை நசுக்கினா எங்கிருந்தோ ஒன்பது வந்து சேரும். எனவே கவனமாய் இருக்க வேண்டியது நம்ம பொறுப்பு. இவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

1. திடீர் பணம், புகழ் போன்றவை வருகிறது எனும் திட்டங்கள், அழைப்புகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரே நாளில் மன்னனாக ஆசைப்படும் போது அதிக கவனம் அவசியம்.

2. “உடனே” என உங்களை அவசரப்படுத்தும் எதையும் உதாசீனப் படுத்தத் தயங்க வேண்டாம்.

3. இணையத்தில் உங்கள் தகவல்கள் எதையும் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தளம் பாதுகாப்பானது எனும் சிம்பல் இருந்தால் மட்டுமே கொடுங்கள்.

4. “முன் பணம்” கொடுக்க வேண்டியவற்றை ரொம்பவே அலசி ஆராயுங்கள். பெரும்பாலும் கம்பி நீட்டி விடும் காரியமாகத் தான் இருக்கும்.

5. எந்த விஷயத்தையும் அனுபவப்பட்ட நபர்களிடம் விவாதிக்க தயங்காதீர்கள்.

6. இணையம் சார்ந்த சமாச்சாரங்களெனில் அந்த தளம் எங்கிருந்து இயங்குகிறது, கூகிள் தேடலில் அந்த தளம் லிஸ்ட் ஆகிறதா, என்பதையெல்லாம் கண்டறியுங்கள். பொதுவான மின்னஞ்சல்களான யாகூ, கூகிள், ஜிமெயில் போன்றவை அல்வா பார்ட்டிகள் பயன்படுத்துவது !

7. சஞ்சலம் தான் முதல் எதிரி. “ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சே….” என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்.

8. உங்கள் கிரெடிட்கார்ட், வங்கி போன்றவற்றின் எண்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கிரடிட் கார்ட் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் செய்து கார்ட்டை பிளாக் செய்யலாம். அதை யாரும் பின்னர் பயன்படுத்த முடியாது.

9. ஒரு மின்னஞ்சல் கணக்கை தனியாக வைத்திருங்கள். அதை வைத்தே உங்கள் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் செய்யுங்கள். ஆன்லைனில் ஏதாவது பத்திரிகை, குரூப், பிளாக் போன்றவற்றுக்கு வேறு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

10. ஆன்லைன் குலுக்கல்கள், போட்டிகள் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. உங்களை சிங்கப்பூருக்கு அனுப்புகிறேன் என ஆசைகாட்டுபவற்றை நிராகரியுங்கள்.

11. உங்கள் வங்கிக் கணக்கு எண், செக் புக், ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்த ரசீதுகள், கட்டிய ரசீதுகள், இது போன்ற அத்தனையும் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேவை தீர்ந்ததும் கிழித்து விடுங்கள்.

12. ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் இரண்டு வேறு வேறு இடங்களில் சேமித்து வையுங்கள். பாஸ்வேர்ட்கள் எல்லாம் கடினமானதாக, யூகிக்க முடியாததாக, நீங்கள் மறக்காததாக இருக்க வேண்டும்.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல ஆண்டி வைரஸ் மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து ஆன்லைனிலேயே படித்து ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல போலி பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. உஷார். பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகளை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம் தான் வேஸ்ட்.

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் “உதவி” பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களுக்கே கொடுங்கள். நேரில் கொடுப்பதை விட சிறப்பானது வேறில்லை.

ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்

 lubnaஇப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.

என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.

தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் !

அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.

நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் !

journalists_activists_and_politicians_detained_inஎது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.

சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.

முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் !

நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.

லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் lubna12லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.

இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.

neelima-35பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி !

 ( ஓ..காட்…. இப்டீ எல்லாம் நட்குதா… நான் சூடான் பட்த்துலே நட்க்கவே மாட்டன்)

 

 

 

  

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால்…. வாக்களியுங்கள்…… நன்றி !

 

பி(கி)ல்லி சூனியம் !

 tipton-portrait

அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமாவில் 1914ல் பிறந்தார் இசைக்கலைஞர் பில்லி டிப்டன். சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். அவருடைய இளம் வயதிலேயே பெற்றோர் டைவர்ஸ் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்கள். அதனால் உறவினர் ஒருரிடம் ஐக்கியமாகி வளர்ந்தால் பில்லி. அதற்குப் பின் அவருடைய பெற்றோரைக் குறித்து அவரும் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை.

இசை ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட்டு எரிய ஜாஸ் பயின்றார். பின்னர் சாக்ஸபோன், அது இது என இசையில் வளர்ந்தார். ஊரிலுள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் முதலில் பாடினார். கொஞ்சம் கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின் ஓரளவு பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து ஊர் சுற்றினார். சென்ற இடங்களிலெல்லாம் நல்ல பெயர் கிடைத்தது. கே.எஃப்.எக்ஸ்.ஆர் எனும் ஒரு இசைக்குழுவையே ஆரம்பித்து நடத்துமளவுக்கு வளர்ந்தார்.

அடுத்த கட்டமாக இசை ஆல்பங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவருடைய ஸ்வீட் ஜோர்ஜியா பிரவுண் மற்றும் பில்லி டிப்டன் பிளேஸ் ஹை ஃபை ஆன் பியானோ இரண்டும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அப்புறமென்ன ஆல்பம் தயாரிப்புகள் தொடர்ந்தன. இவருக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருந்தார்கள். பல பெண்களுடன் “நெருக்கமாக” வாழ ஆரம்பித்தார். அதனால் இவரை ஒரு “பெண் பித்தன்” என்று கூட மக்கள் நினைத்தார்கள். ஒரு வழியாக 1960 கிட்டி கெல்லி எனும் பெண்ணுடன் வாழ்க்கையில் செட்டில் ஆனார். தம்பதியர் ஜான், ஸ்காட் மற்றும் வில்லியம்ஸ் என மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். பிள்ளைகளெல்லாம் “இவரு ரொம்ப நல்ல டாடி” என்று சொல்லுமளவுக்கு ஒரு நல்ல தந்தையாகவும் வாழ்ந்தார்.billybet

1989ல் தனது 74வது வயதில் பில்லி டிப்டன் இறந்தார். அப்போது தான் வெளிவந்தது உலகை அதிர்ச்சியூட்டும் ரகசியம். பில்லி டிப்டன் உண்மையில் ஆண் அல்ல ! ஒரு பெண் ! உலகமே வியந்தது. அவர் சுற்றித் திரிந்த பெண் தோழிகளெல்லாம் வியந்தனர். அவருடைய ரசிகர்கள், பிள்ளைகள், மனைவி எல்லோருமே அதிர்ந்தனர் !!! பத்திரிகைகளெல்லாம் முதல் பக்கத்தில் வியப்பு காட்டின.

பெண்களிடம் ரகசியம் நிற்காது என யாருப்பா சொன்னது ?

ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Ghost (9)

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப் பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே” கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொருவகை. மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

“நிறைவேறாத ஆசை” பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் “மெசெஞ்சர் பேய்கள்”. நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை. பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது. சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், “ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார்” என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய். சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்துவிட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் “பாதுகாக்கும் ஏஞ்சல்ஸ்” முக்கியமானவை. இவை ஒவ்வொருவருடைய தோளிலும் அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம். பல நேரங்களில் “மயிரிழையில்” தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க யாருமின்றி இறந்து போனால், அவர்கள் ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்.

பேய்களிலேயே இத்தனை வகையா… அடேங்கப்பா !

ரஷ்யாவைக் கழற்றி விடும் இந்தியா ! அமெரிக்க தந்திரமா ?

russian-army

அணுசக்தியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் சில மாதங்களுக்கு முன் நமது பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது. நானும் வந்து விட்டேன் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டது இந்தியா. வருடக் கணக்கில் கூட தண்ணீருக்கு அடியிலே பதுங்கிக் கிடக்கும் சக்தி கொண்டது இந்த நீர்மூழ்கிக் கப்பல். தரை, வான், கடல் என மூன்று இடங்களிலும் இனிமேல் இந்தியா படு ஸ்ட்ராங். இந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க உதவிய ரஷ்யாவுக்கு இந்தியா பாராட்டு மழையைப் பொழியவும் தவறவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இப்போது பழைய பந்தமெல்லாம் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ராணுவ சமாச்சாரங்களைப் பொறுத்தவரை ரஷ்யா தான் இந்தியாவுக்கு எல்லாமே. ஆனால் இப்போதோ நிலமை தலை கீழ். இனிமேல் இந்தியா ஆயுதங்களை வாங்கப் போவது ரஷ்யாவிடமிருந்தல்ல. அமெரிக்காவிடமிருந்து ! இதற்கான ஒப்பந்தத்தை போடுவதே ஹிலாரி கிளிண்டனின் கடந்த மாத இந்திய வரவின் நோக்கம்.

இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகியிருக்கும் இந்த ஒப்பந்தம் சுமார் 30 பில்லியன் டாலர்களுக்கானது. லாக்கீட் மார்ட்டின், போயிங் எனும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தான் இனிமேல் இந்தியாவுக்கான ஆயுதங்களைத் தயாரிக்கப் போகின்றன. ரஷ்யாவிடமிருந்து டாங்கிகளையும், பழைய ஒப்பந்த பாக்கிகளையும் மட்டுமே இந்தியா இனிமேல் பெறும். டாங்கிகள் விஷயத்தில் கூட இனிமேல் ரஷ்யா இந்தியாவின் ஏக போக சப்ளையராக இருக்கப் போவதில்லை.

இந்திய மீடியாக்கள் அடக்கி வாசித்த இந்த விஷயத்தை விலாவரியாக அலசுகின்றன ரஷ்ய நாளிதழ்கள். இந்தியாவின் இந்த முடிவு இந்தியாவை விட ரஷ்யாவுக்குத் தான் மாபெரும் இழப்பு. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய ராணுவ கஸ்டமராய் இருந்த இந்தியா போய்விட்டது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் பல்லுடைந்து கிடக்கும் ரஷ்யாவுக்கு இது மற்றுமொரு பலத்த அடி. என்றெல்லாம் ரஷ்ய தலைப்புச் செய்திகள் பதட்டப்படுகின்றன.

இந்தியாவின் முடிவில் தவறில்லை. பிரச்சினைக்குக் காரணம் ரஷ்யா தான். ரஷ்யா தரும் தரமற்ற ஆயுதங்களை வாங்க வேண்டுமென இந்தியாவிற்குத் தலையெழுத்தா என்ன ? சொல்லும் எதையும் சொன்ன நேரத்தில் ரஷ்யா கொடுப்பதில்லை. விமானம் தாங்கியான ‘அட்மிரல் கார்ஷ்கோவ்’ ஐ நவீனப்படுத்துங்கள் என இந்தியா சலிக்கும் வரை கேட்ட பின்பே சரி செய்தார்கள். தருகிறோம் என்று சொன்ன போர்க்கப்பல்களையோ, நீர்மூழ்கிக் கப்பல்களையோ சொன்ன நேரத்தில் தருவதில்லை. பின் எப்படி இந்திய ஒப்பந்தம் தொடரும் ?. இப்படியெல்லாம் ரஷ்யாவைப் பற்றி குற்றம் சாட்டுவது இந்தியா அல்ல. ரஷ்யாவின் ராணுவ அனலிஸ்ட்களே தான்.

ரஷ்யா இந்தியாவுக்குக் கடைசியாக அனுப்பிய ராக்கெட்களில் 50 சதவீதம் ராக்கெட்கள் பழுதானவை. இந்தியாவின் கோபம் நியாயமானதே. ரஷ்யாவிடம் இப்போது நவீனமும் இல்லை, திறமையான ஆட்களும் இல்லை. இதே நிலமை நீடித்தால் இந்தியாவைப் போல எல்லா கஸ்டமர்களையும் இழக்க வேண்டியது தான். உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்ப ரஷ்யா ஏதேனும் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறது ரஷ்யாவின் பிரவ்டா நாளிதழ்.

ரஷ்யாவிற்கு மாற்றாக ஒரு ராணுவ பார்ட்னரை இந்தியா தேட ஆரம்பித்து நீண்ட நாட்களாகிறது. இஸ்ரேல், பிரான்ஸ் என தேடுதல் வேட்டை நடத்திய இந்தியா கடைசியில் வந்து சேர்ந்திருப்பது அமெரிக்காவிடம். இந்தியாவுடனான பிஸினஸ் நழுவிப் போன கவலை ஒருபுறம். தனது பரம எதிரியான அமெரிக்காவுடன் இந்தியா கை கோர்ந்திருக்கிறதே எனும் பதட்டம் ஒருபுறம் என்பதே ரஷ்யாவின் இன்றைய நிலை.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதில் அமெரிக்கா கில்லாடி. ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தவே இப்படிப்பட்ட பல முயற்சிகளை எடுக்கிறது. ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி அதன் மூலம் ரஷ்யாவைப் பணிய வைக்கலாம் என்பதே அமெரிக்காவின் எண்ணம் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுடனான உறவின் விரிசலைச் சரிசெய்ய ரஷ்யா சீனாவை இறுகப் பிடித்திருக்கிறது. இரண்டு நாடுகளுமாக பல்வேறு பேச்சுவார்த்தைகளையும், உடன்பாடுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஜூலை கடைசியில் “அமைதிப் பணி 2009” எனும் ராணுவ அணி வகுப்பு ஒன்றை இரண்டு நாடுகளும் கூட்டாக நடத்தியிருக்கின்றன. இதற்கான கலந்துரையாடல், ஒப்பந்தம் எல்லாம் நடந்தது ரஷ்யாவின் கபார்ஸ்க் நகரில். அணிவகுப்பு நடந்ததோ சீனாவில் டயோனன் நகரில் !

“அமெரிக்காவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ரஷ்யாவுக்குத் தெரியும். ரஷ்யா இப்போது சீனாவுடன் நெருக்கமாக செயலாற்றுகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மிகவும் பலமானது. ரஷ்யா அமெரிக்காவைக் கண்டு ஒருபோதும் பயப்படப் போவதில்லை” என அதிரடியாகப் பேசுகிறார் அலெக்சாண்டர் கிராமாச்சின். இவர் ரஷ்யாவின் சர்வதேச தொடர்பாளராகவும், “,பொலிடிகல் மற்றும் மிலிடரி அனாலிசில்” நிறுவனத்தின் இயக்குனராகவும் இருப்பவர்.

ரஷ்யா ஒரு மாபெரும் சக்தி என்பதில் அமெரிக்காவுக்கு மாற்றுக் கருத்தில்லை. எங்களது பல கொள்கைகளை ரஷ்யா வெறுக்கிறது. அதே போல ரஷ்யாவின் பல கொள்கைகளை நாங்கள் வெறுக்கிறோம். நாடுகளிடையே கொள்கைகளில் வேற்றுமை வருவது சகஜம். ஆனாலும் இரண்டு நாடுகளும் நட்புறவுடன் செயல்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்கிறார் ஹிலாரி கிளிண்டன்.

ரஷ்யாவும் சீனாவும் ‘பெஸ்ட் பிரண்ட்ஸ்’ நாடகம் நடத்துகிறது. உண்மையில் ரஷ்யாவும் சீனாவும் ஒருபோதும் உண்மையான நட்புறவுடன் இருக்க முடியாது. ஒருவர் எல்லைக்குள் இன்னொருவர் புகுந்து பலம், பலவீனங்களைப் படிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள் எனும் கருத்தும் எழாமலில்லை.

எப்படியோ, ஒருபுறம் இந்தியா ரஷ்யாவுடனான அரை நூற்றாண்டு கால இறுக்கமான பிடியைத் தளர்த்தியிருக்கிறது. இன்னொரு புறம் ரஷ்யா, சீனாவுடனான உறவை வலுப்படுத்தியிருக்கிறது. இடையில் அமெரிக்கா இந்தியாவை இறுகப் பிடித்திருக்கிறது. இப்படி சர்வதேச அரங்கில் நிகழும் அரசியல் நாடகங்கள் திகில் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

டைரியில் எழுதாதவை : கமல், கந்தசாமி & அறிவுஜீவிகள் !

 Mohan_Kamal 

அறிவு ஜீவிகள் துவைத்துக் காயப்போட்ட உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கடந்த வாரம் தான் கிடைத்தது. நல்ல வேளை ! படத்தில் ஊடாடும் பார்ப்பனீயத் தன்மைகளையும், தார்மீகக் கோபங்களுக்குள் புதைக்கப்பட்ட வரலாற்று வன்மங்களையும் பிரித்தறியும் வல்லமை எனக்கு இல்லை. எனவே படத்தை ரொம்பவே ரசித்தேன் !! என்ன பண்ண, நானும் ஒரு காமன் (அட ! அந்த காமன் இல்லை) மேன் தானே !

 

சில சினிமாப்பாடல்களைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. ஒருவரி எழுதி விட்டு ஒரு கட்டிங் போட்டு வந்து அடுத்த வரி எழுதுவார்களோ என யோசிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு முரண் படுகிறார்கள் கவிஞர்கள். கவிதைக்கு முரண் அழகுங்கறதை தப்பா புரிஞ்சுகிட்டாங்களான்னே தெரியலை

முன்னாடியெல்லாம் ஒரு படத்தில எழுதும் பாடலுக்கும், இன்னொரு படத்தில் எழுதும் பாடலுக்கும் இடையே தான் முரண்படுவார்கள் கவிஞர்கள். அப்புறம் ஒரு படத்துல இருக்கும் இரண்டு பாடல்களுக்கிடையே முரண்படுவார்கள். சினிமா பாடலில் கூட ஏதாச்சும் கவிதை தேடும் மோசமான புத்தியுள்ள கூட்டத்தில் நானும் ஒருத்தன். “ஆட்டுப் பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு .. “ என்று கிழக்குச் சீமையில் எழுதிவிட்டு “அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் அன்பு வளக்கும் ஆட்டுப்பாலுங்க” என்று அண்ணாமலையில் எழுதிய கவிப்பேரரசு தான் இன்றும் என் பேவரிட் பாடலாசிரியர் 🙂

லேட்டஸ்ட் படங்களையே லேட்டா கேக்கற நிலமையில் இப்போ நான். ஓடிப் போய் கேசட் ரிலீசாகற முதல் நாளே பாட்டு கேக்கற வயசெல்லாம் ஓடிப்போச்சு. வளரும் கவிஞர் விவேகா கந்தசாமில லிரிக்ஸ்ல கலக்கியிருக்காருல்ல என்று என் நண்பன் சொன்னான் சில மாசத்துக்கு முன்னாடி. அப்படியா என்று ஒரு சந்தோஷ உற்சாகத்தில் பாட்டு கேட்டேன்…

ஒரு வரி, “கடவுள் இல்லேன்னு சொன்னார் ராமசாமி, காதல் இல்லேன்னு சொல்றான் இந்த கந்த சாமி” அடடே ! என பார்த்திபன் கவிதை போல வியந்தால் அடுத்த வரியில் ஐயா சொல்கிறார் “ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே… காதலொன்னும் யூதனில்லை கொல்லாதே..” அய்யோ போடா !

 

“கமல் 50  நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சைக் கேட்டு அசந்து விட்டேன். ரஜினியைப் பற்றி நான் கொண்டிருந்த பிம்பத்தையெல்லாம் உடைத்தெறிந்தேன். தீவிர கமல் ரசிகரான நான் நேற்று முதல் முறையாக நெகிழ்ந்தேன். ரஜினி உண்மையிலேயே கிரேட் தான்.” என்றார் பத்திரிகைத் துறையில் மிக உயரிய இடத்தில் இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர். அடடா கேட்காமல் போயிட்டோமேன்னு கொஞ்சம் பீல் பண்ணினேன். வேறென்ன பண்ண முடியும் ?

 

ஒரு முறை அமெரிக்காவில் ஓய்வாக ஒரு பிரபல நடிகருடன் அமர்ந்து “வைன்” பேச்சில் லயித்திருந்தேன். ஆள் தான் வில்லன்னு இல்லை, அவரோட நக்கல் எல்லாமே வில்லத்தனமாய் தான் இருந்தது.

“என்னய்யா விஜய்.. இளைய தளபதியாம் ? எந்த போருக்கு போனான்.. ஹா…ஹா..ஹா” என்று ஆரம்பித்து எல்லா இளம் நடிகர்களையும் ஒரு புரட்டு புரட்டி எடுத்தார் ஐயா. கடைசியில் கமலைப் பற்றியே பேச ஆரம்பித்தார்.

என்னய்யா உலக நாயகன் ? உலகத்துல எல்லாருக்கும் அவனை தெரியுமா ? அப்படின்னா உகாண்டாவுக்கும் அவன் தான் நாயகனா என சகட்டு மேனிக்கு பேசிக் கொண்டிருந்த அவர் கமலுடன் சரிக்கு சமமாக ஒரு படத்தில் நடித்தவர்.

ரொம்ப மப்பு தலைக்கு ஏற, “கமலுக்கு நடிக்கவே தெரியாது. ஏதோ மலச்சிக்கல் வந்தவன் மாதிரி முகத்தை வெச்சிருப்பான்” என கடைசியில் போட்டாரே ஒரு போடு. கையிலிருந்த பானத்தை ஒரே மூச்சில் லபக்கி விட்டு எஸ்கேப் ஆனேன்.

அவள் விகடன் : மேரி கோம் – இலட்சியங்கள் வீழ்வதில்லை.

Mary-Kom4

சானியா மிர்சாவைத் தெரியுமா என்று யாராவது கேட்டால் அவரை ஒரு வேற்றுக் கிரக வாசிபோல பார்ப்போம். சரி.. இருக்கட்டும் தப்பில்லை. மேரி கோம் யாரென கேட்டால் ? அது யாருங்க மேரி கோம் ? கேள்விப்பட்ட பெயராய் இல்லையே என இழுக்கிறீர்களா ?

நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி கைகளால் போன மாதம் பெற்றவர். நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். தேசிய அளவில் 10 தங்கப் பதக்கங்களும், சர்வதேச அளவில் 14 தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் பெற்றவர். இத்தனை சாதனைகள் செய்தும் பரபரப்பாகாமல் இருக்கும் இருபத்து ஏழு வயதான குத்துச் சண்டை வீராங்கனை.

வெற்றிக்கான வேட்கை இருந்தால் எதுவுமே தடையாகாது என்பதன் சமகால உதாரணம் தான் மேரி கோம். 1983 மார்ச் ஒன்றாம் தியதி மணிப்பூரின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தார் மேரி கோம். தந்தை தோன்பு கோம், தாயார் சனீகம் கோம் இருவருமே வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் தான். வறுமையில் உழன்ற மேரியின் ஆரம்ப கால இலட்சியம் பதக்கங்கள் வாங்கிக் குவிப்பதல்ல, விளையாட்டில் பரிசுப் பணம் வாங்கி பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக ஓட்டப் பந்தயம், அது இது என எல்லா விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார்.

அவளுடைய வாழ்க்கையை பாக்ஸிங் நோக்கி திருப்பி பெருமை தேடிக் கொண்டவர் பாக்ஸிங் வீரர் டிங்கோ சிங். இவரும் மணிப்பூர் காரர் தான். 1998ல் இவர் ஆசிய தங்கக் கோப்பையைப் பெற்று திரும்பிய போதுதான் மேரிக்குள்ளும் பாக்ஸிங் ஆசை படர்ந்தது. நன்றாக யோசித்து 2000ல் பாக்ஸிங் விளையாட்டில் நுழைந்தார். பாவம், கைக்குப் போடும் கிளவுஸ் வாங்க கூட பணமில்லாத சூழல் அவருக்கு. அனைத்தையும் சமாளித்தார். இரண்டே வாரங்கள் தான். விளையாட்டின் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்! அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு அவரிடம். ஆனால் இவர் பாக்ஸிங் கற்றுக் கொள்வது வீட்டில் யாருக்குமே தெரியாது.

ஒரு நாள் எதேச்சையாய் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த மேரியின் தந்தையின் கண்களின் தட்டுப்பட்டது ஒரு பெண்ணின். பதக்கத்துடன் சிரிக்கும் படத்தை உற்று உற்றுப் பார்த்தார். அது தன் மகளே தான். மேரி கோம் மாநில அளவில் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்ற செய்தி அது. அப்பாவுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆனந்தப் படுவதற்குப் பதிலாக கோபம் முகத்தில் குதித்தது. நீ குத்துச் சண்டை போடறியா ? அப்புறம் யாரு உன்னை கல்யாணம் செய்வான் ? அடிபட்டா என்ன செய்வே ? என தந்தைக்கு பல கவலைகள். ஆனால் தாய் ஆதரவுக் குரல் கொடுத்தார்.

மேரிகோம் கலப்பையில் கை வைத்து விட்டார். உழாமல் திரும்பிச் செல்ல நினைக்கக் கூட இல்லை. அங்கே ஆரம்பித்த அவருடைய விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, அர்ப்பணம் இவையெல்லாம் இன்று அவரை இந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அர்ஜூனா, பாரத ரத்னா, இந்தியன் ரியல் ஹீரோஸ் விருதுகளைத் தொடர்ந்து, கடந்த மாதம் உயரிய கேல் ரத்னா விருதையும் வழங்கி இந்திய அரசு மேரியை ஊக்கமூட்டியிருக்கிறது.P-420

மணிப்பூரில் அமைதி உருவாகட்டும். அந்த அமைதி இந்தியா முழுதும் பரவி இந்தியாவே அமைதியாய் இருக்கட்டும். என விருதை வாங்கிய கையோடு ஏங்கினார் மேரிகோம். அதற்கு ஒரு பின்னணி உண்டு. 2006ம் ஆண்டு தனது பெரும் பாசத்துக்குரிய மாமனாரை துப்பாக்கிக் குண்டுக்கு பலிகொடுத்த துர்பாக்கியம் அவருக்குள் வலிக்கிறது. எனக்கு உதவி செய்ய வந்த மாமனாரை யாரோ கொன்று விட்டார்கள். ஏன் கொன்றார்கள் எனும் கேள்விக்கு இன்னும் விடையில்லை. மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று ஒவ்வோர் கணமும் பிரார்த்திக்கிறேன். மேரி கோமின் வார்த்தைகளில் துயரம் கூடு கட்டிக் குடியிருக்கிறது.

இந்திய அரசின் விருது கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் மேரி கோம். கூடவே அடுத்த மாதம் வியட்னாமில் நடைபெறப்போகும் போட்டிக்கான பரபரப்பும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இதை எல்லாவற்றையும் விட மிக ஆனந்தமான விஷயம் அவர் ஒலிம்பிக்கில் விளையாடப் போகிறார் என்பது தான். 2012ல் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பாக்ஸிங்கில் கலந்து கொள்ள மேரிக்கு அழைப்பு வந்திருக்கிறது. இது என் வாழ்நாள் கனவு. இதில் வெற்றி பெற்று தேசத்தின் மார்பில் தங்கப் பதக்கம் குத்துவேன் என பரவசமாகிறார் மேரி.

ஐ.ஓ.எஸ் (Infinity Optimal Solutions Pvt. Ltd) ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் மேரியுடன் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இட்டுள்ளது. கூடவே ஒலிம்பிக் கோல்ட் குவஸ்ட் அமைப்பும் மேரியை ஸ்பான்சர் செய்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஒலிம்பிக் எனும் கனவை நிஜமாவதை இப்போதே என் கண்களில் காண்கிறேன் என பூரிக்கிறார் மேரி.

மேரி பாக்ஸிங்கில் நுழைந்த பின் திரும்பிச் செல்தல் என்ற கேள்வியே எழவில்லை. அடுத்தகட்டத்தை நோக்கிய தேடல் மட்டுமே எப்போதும் அவரிடம். தினமும் சுமார் ஆறுமணி நேரம் கடுமையான பயிற்சி செய்கிறார். இப்படி முழு மூச்சாக பாக்ஸிங்கில் இருப்பவருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள்!

கடந்த ஆண்டு சீனாவில் நடந்த போட்டியில் பதக்கம் வெல்வார் என அவரைத் தவிர யாருமே நம்பவில்லை. காரணம் சமீபத்தில் தான் இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தார். பயிற்சி எடுத்து வருடக்கணக்காகியிருந்தது. ஆனால் மேரி மட்டும் தன்னை நம்பினார். இரண்டு மாதங்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். விளைவு கைகளில் தங்கப் பதக்கம் ! இப்படி மேரி வாழ்வின் ஒவ்வோர் பக்கமும் நம்பிக்கைப் பாடங்களால் நிரம்பியிருக்கிறது.

MK1அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு இப்போது வயது இரண்டு. தனது கேல் ரத்னா விருதை இரட்டைச் செல்வங்களுக்குத் தான் சமர்ப்பித்திருக்கிறார், ஒரு பாசமான அம்மாவாக !. எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். இவருடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது இவரது கணவர். குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு மனைவியையும் உற்சாகப் படுத்தும் இரட்டை வேலை அவருக்கு. “அத்தனை சுமைகளையும் சிரித்துக் கொண்டே சுமக்கும் அவர் என்னோட சிறகில்லாத தேவ தூதன் என்று” தழுதழுக்கிறாள் மேரி.

ஏழ்மை இலட்சியங்களை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதை நேரில் பார்த்தவர் மேரி. போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்த பின்பு தான் தனது பெற்றோருக்கு வசிக்க ஒரு இடத்தை வாங்க இவரால் முடிந்திருக்கிறது. வறுமையில் வாடிக்கொண்டிருந்த தனது உடன்பிறப்புகளுக்கு உதவி செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் பெற்ற பணத்தையெல்லாம் இன்வெஸ்ட் செய்யும் மனநிலை இந்த வெள்ளை மனசுக்காரிக்கு இல்லை.

தனது பரிசுப் பணத்தில் பாதியையாவது ஏழை விளையாட்டு வீரர்களுக்கு செலவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். “எம்.சி. மேரி கோம் பாக்ஸிங் அகாடமி “ என அவர் ஆரம்பித்த பயிற்சி நிலையம் அவருடைய உன்னத மனதின் உதாரணம். அங்கே ஏழை விளையாட்டு வீரர்களுக்கு இலவசப் பயிற்சி நடக்கிறது. வெளியூரிலிருந்து வரும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சியுடன் சேர்த்து தங்குமிடம், உணவு எல்லாமே இலவசம் ! எல்லாம் தனது சொந்தப் பணத்திலிருந்து தான் செலவழிக்கிறார். சுமார் 20 பேர் இங்கே பயிற்சி பெற்று வருகிறார்கள். “ இந்தியாவில் கிரிக்கெட்டும், டென்னிசும் தவிர வேறு விளையாட்டுகளே இல்லையா” எனும் இவருடைய கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

மேரி விருது வாங்கியதில் இங்குள்ள மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். மேரியை அவர்கள் ஒரு அன்னையாகப் பார்க்கிறார்கள். “எங்கள் கோச் உயரிய விருதை வாங்கியதில் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவர் எங்களுக்கு கோச் அல்ல, வழிகாட்டும் தெய்வம்…” என கண் கலங்குகிறார் இங்கே பயிலும் நாகிசா எனும் மாணவி.

உறுதியான இலட்சியத்துடனும், உயர்ந்த உள்ளத்துடனும் வாழும் மேரியின் ஒலிம்பிக் கனவும் நனவாகட்டும்.

தமிழிஷில் வாக்க(கி)ளிக்க..

ஜூ.வி : கற்பு வாங்கலையோ …கற்பு !

EFG103

“பதின்மூன்றே வயதான இளம் பெண்ணின் விர்ஜினிடி விற்பனைக்கு”. அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கே விற்கப்படும் ! ரஷ்ய இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் உஷாரானது மாஸ்கோவின் காவல்துறை. பகிரங்கமாக இந்த விளம்பரத்தைக் கொடுத்தது யார் என சைபர் குழு அதிரடி விசாரணையில் குதித்தது. விசாரணை முடிவோ காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டது. காரணம், அந்த விளம்பரத்தைக் கொடுத்தது வேறு யாருமல்ல, அந்தப் பெண்ணின் தாய் !

இதே போல பதினாறு வயதான ஒரு பெண்ணின் கற்பும் ரஷ்ய இணைய தளம் ஒன்றில் ஏலம் போட்டு விற்கப்பட்டது. அங்கும் குற்றவாளி பெண்ணின் சொந்த அம்மாவே தான் ! இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரஷ்யாவில் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றன.

இப்படி ஒரு படு பாதகச் செயலைச் செய்த தாய்க்கு கொஞ்சமேனும் குற்ற உணர்வு இருக்குமா என பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பதின் மூன்று வயது மகள் அலியோனாவின் தாய் ஸ்வெட்லானா சந்தோசமாகப் பேசுகிறாள். நான்கு இலட்சம் ரூபிள்களுக்கு என் மகள் விலை போயிருக்கிறாள். இத்தனை விலை கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை என வியக்கிறார்.

பதினாறு வயது மகள் போலினாவின் கற்பு இலட்சம் ரூபிள்களுக்கு விலைபோயிருக்கிறது ! அவளுடைய தாய் மரியா மகளை கையோடு அழைத்துக் கொண்டு “கஸ்டமரிடம்” ஒப்படைத்திருக்கிறாள் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல்.

எனக்கு நிறைய கடன் இருக்கிறது. கடன்களை அடைக்க இது தான் எளிய வழி. கற்பைப் பாதுகாத்து வைத்து என்ன ஆகப் போகிறது ? இதையெல்லாம் நான் எனக்காகச் செய்யவில்லை. என் மகளுக்காகத் தான் செய்திருக்கிறேன். கடன்களை அடைத்தது போக மிச்சமிருக்கும் பணம் முழுதும் அவளோட கல்யாணச் செலவுக்குத் தான் என்கிறார் மரியா சர்வ சாதாரணமாக. இப்போ எனக்கு இளமையும் இல்லை. வயசும் இல்லை. இல்லேன்னா என்னோட கற்பையே ஒரு நல்ல விலைக்கு விற்றிருப்பேன் என்கிறார் தடாலடியாக ! 

அம்மாக்கள் தான் இப்படி சகஜமாய்ப் பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களோ கண் கலங்குகின்றனர். “இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியவே தெரியாது. போட்டோ எடுக்கலாம்ன்னு சொல்லித் தான் அம்மா என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா கடைசில ஆள் வெச்சு பலாத்காரம் பண்ணிட்டாங்க. என்னோட அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை” என விசும்பும் பதின் மூன்று வயது சிறுமி பள்ளிக்கூடம் செல்கிறாள்.Alina Percea

“எனக்கு இந்த சமாச்சாரமே தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்” என கண் கலங்கும் பதினாறு வயதுப் பெண்ணும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள்.  

இணையத்தில் சமீப காலமாகவே இந்த “விர்ஜினிடி” விற்பனை வெகு ஜோராக நடந்து வருகிறது. படிக்கப் பணமில்லை, ஆடம்பரமாய் செலவழிக்க வசதியில்லை, அம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் வேண்டும் என ஏதேதோ காரணங்களுக்காக கற்பு விற்கப்படுகிறது. இவர்களை ஏலத்தில் எடுக்கவும் போட்டா போட்டி நிலவுகிறது. எக்கச்சக்கமான பணம் ஒவ்வோர் ஏலத்திலும் கைமாறுகிறது. பெரும்பாலும் வெளி நாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் தான் இவர்களை ஏலத்தில் எடுக்கின்றனர்.

வேலைக்கு சர்டிபிகேட் சுமந்து திரிவது போல இவர்கள் தங்கள் விர்ஜினிடியை நிரூபிக்கும் மருத்துவ சர்ட்டிபிகேட்டுடன் அலைகிறார்கள்.  சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து இவர்கள்  “ஒரு நாள் முதல்வி” யாகிறார்கள்.

ரொமானியாவின் எலீனா, இத்தாலியப் பெண் பிக்கோ, பெருகுவே நாட்டு மாடல் அழகி, மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவி கேரிஸ் என கற்பை விற்போரின்  பட்டியல் மிக நீளமானது.

அமெரிக்காவில் வசித்து வரும் பதினெட்டு வயது ரொமாலியப் பெண் எலீனா பெர்சியா. கம்ப்யூட்டர் படிக்க காசில்லை, விற்பதற்கு பாத்திர பண்டம் ஏதும் இல்லை என கற்பை ஏலமிட்டார். 8800 பவுண்ட்களுக்கு ஏலத்தில் எடுத்தவர் இத்தாலியிலிருந்த தொழில் அதிபர் ஒருவர். அவர் எலீனாவை வெனிஸ் நகரத்துக்கு “பஸ்ட் கிளாசில்” பறக்க வைத்து அங்குள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

“பிசினஸ் நல்லா முடிஞ்சுது !” என எந்தவித சங்கோஜமும் இன்றி கூறும் எலினாவுக்கு வருத்தம் இரண்டே இரண்டு.

ஒன்று, ஐம்பதாயிரம் பவுண்ட் க்கு ஏலம் போகும்ன்னு நினைச்சேன். ஆனா ஜஸ்ட் எட்டாயிரத்து எண்ணூறு தான் கிடச்சுது. இரண்டு, ஒரு யூத் ஹீரோவை எதிர்பார்த்தேன் வந்தவரோ 45 வயசு குள்ள மனுஷன் !

“ஹோவர்ட் ஸ்டர்ன் ஷோ” என்பது ஹேவர்ட் ஸ்டர்ன்  என்பவரால் நடத்தப்படும் அமெரிக்காவிலுள்ள ஒரு ரேடியோ டாக் ஷோ. இந்த டாக் ஷோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேசினாள் நடாலி டைலன் எனும் 22 வயதுப் பெண். அந்த உரையாடலின் போது தனது கற்பை ஏலமிடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து கேட்டவர்களை திடுக்கிடச் செய்தார்.

சொன்னது போலவே இணையத்தில் கடைவிரித்த அவரது கற்பு சடசடவென ஏலத்தில் போனது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தனது கற்பு விலையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட நடாலி இன்னும் ஏலத்தை முடித்துக் கொள்ளவில்லை. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விலை பேசியிருக்கிறார்களாம். இன்னும் தினம் தோறும் இவரைக் குறித்த செய்திகள் தினமும் ஹாட்டாக உலவுகின்றன. ஏலத் தொலை மில்லியன் கணக்கில் எகிற நடாலி அதிர்ந்து போயிருக்கிறாராம். வியப்பின் உச்சியில் இருந்து கொண்டு “பெண்ணின் கற்பு விலை மதிப்பானது ! அதை விற்பதே நியாயமானது” என தத்துவம் பேசுகிறார் நடாலி.

Natalie Dylanகற்பு விற்பனையை சட்டம் “பாலியல் தொழில்” எனும் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இந்த விற்பனையைத் தடை செய்ய சட்டத்தால் முடியாது. ஒரு விதத்தில் வீட்டிலுள்ள பொருட்களை ஏலம் இடுவதைப் போலத் தான் இதையும் கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும் என்கிறார் அமெரிக்க வழக்கறிஞர் மார்க் ரண்டாசா.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் ஏலம் நடந்தாலோ, ஏலமிடும் நபர் பதினெட்டு வயதைக் கடந்தவர் என்றாலோ சட்டம் சைலண்டாய் தான் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ ஏஜெண்ட் டேவிட் ஸ்டாரெட்ஸ்.

ஆனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டு வரும் பணத்துக்கு ஒழுங்காக வரி கட்டவேண்டுமாம் ! சில இடங்களில் வரி சுமார் 70 சதவீதமாம் !!!

இப்படி தங்கள் கற்பை தாங்களே விற்பது பரவலாக நடந்தாலும், அம்மாவே பெண்ணின் கற்பை விற்றிருப்பது இது தான் முதல் முறை.  அந்த அம்மாக்கள்  கஸ்டமர்களுக்கு இட்ட ஒரே கண்டிஷன் “பாதுகாப்பா” உறவு கொள்ளுங்கள் என்பது தானாம்

இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்த இரண்டு அம்மாக்களும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் செய்த குற்றத்துக்கான பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டாம்.

“வயசுப் பிள்ளையை வளக்கிறது மடியில நெருப்பைக் கட்டிட்டு அலையற மாதிரி” என பதட்டப்படும் தாய்மார்களைப் பார்த்து தான் நமக்குப் பழக்கம். அதனால் தான் பிள்ளைகளை அசிங்கப்படுத்தும் தாய்மார்களை நினைத்தாலே அதிர்கிறது மனசு !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

ஜூ.வி : ஈரமில்லாத ஈரான் சட்டம்.

Iran prison 2“தலைவரே.. அவளுக்கு நாளை மரண தண்டனை “

“அதற்கென்ன …நிறைவேற்று”

“இல்லை. வந்து…. அவள் ஒரு கன்னிப் பெண்”

“ஓ… அப்படியா… அப்போ வழக்கம் போல், இன்று இரவு அவளைக் கெடுத்து விடு. அவள் சாகும்போது கன்னியாய் இருக்கக் கூடாது. அது முக்கியம் “

இது உரையாடல் உண்மை என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். இதற்குச் சாட்சியாய் இருப்பவை ஈரானின் சிறைகளின் சுவர்களும், அங்கே எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் அலறல்களும்.

ஈரான் நாட்டு பாசிஜ் ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஜ் வீரர். ருகோல்லா கோமினி கண்டுபிடித்த இயக்கம் தான் இந்த பாசிஜ் மிலிட்டரி. அதாவது நாட்டிலுள்ள பதினைந்து வயதுக்கும் நாற்பந்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒரு மக்கள் படை. 1979ம் ஆண்டு இது துவங்கப்பட்டது. “இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” எனும் அறைகூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி நாட்டில் மத நம்பிக்கைகளைப் பரப்புவது. மத மீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பது, போர்களில் ஈடுபடுவது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது.

கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா. இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம் போல வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராய் பலத்த பலத்த போராட்டங்கள்.

இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே என அவர்களை விடுவித்துவிட்டார் ஒரு பாசிஜ் வீரர். அவ்வளவுதான் அவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள். காரணம் ஈரானின் பார்வையில் 9 வயதான சிறுமிகளும், 13 வயதான சிறுவர்களும் பெரியவர்கள்!

இவர் சமீபத்தில் “ஜெருசலேம் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்த பேட்டி தான் உலகையே உலுக்கி எடுக்கிறது.

எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என் பெயரை சொல்ல மாட்டேன் என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். நான் பாசிஜ் வீரன். பதினாறு வயதில் நான் பாசிஜ் குழுவில் சேர்ந்தேன். சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. எனக்கு சாப்பாடு போட வழியில்லாத அம்மா, எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஜ் குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால் பட்டினியில் செத்துவிடுவேனோ, அல்லது போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.

பாசிஜ் குழு வில் எக்கச்சக்க சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண்களைப் பார்த்தால் “தொட்டு”த் தொட்டு சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒரு விதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான். என்றவர் தொடர்கிறார்.

எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. தலைவன் அலி ஹமினீ இடும் செயலை நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன். பொதுவாக அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாகவே இருக்கும். ஆனால்…. என நிறுத்தியவர் பிறகு சொன்னவை தான் உலுக்கி எடுக்கும் சம்பவங்கள்.

கொஞ்ச நாட்கள் ஜெயிலில் பணியாற்றினேன். ஜெயிலில் ஏராளம் சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது ஈரானியச் சட்டம்.

கன்னிப் பெண்களைக் கொல்ல சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி “கல்யாணம்” செய்து கொண்டு உறவு கொள்ள வேண்டும். அப்போது தான் மறுநாள் “சட்டப்படி” அவர்கள் கொல்லப்பட முடியும். கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை.

இந்த காலகட்டம் தான் எனக்கு மிகவும் கடினமான காலம். 18 வயதிலேயே பெண்களைக் “கல்யாணம் செய்து கெடுக்கும்” பணியைக் கொடுத்தார்கள். எனது பணிக்காக எனது மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனது மிகவும் வேதனைப்படும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை, இந்த பாலியல் உறவு தான் பயம். எங்கே நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.

சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம், கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள், தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.

அந்த திருமணங்களெல்லாம் சட்ட பூர்வமானவை. எனவே சட்ட ரீதியாகவோ, மத ரீதியாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். எனக்கும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உண்டு என கவலையுடன் முடிக்கிறார் அவர்.

அதிர வைக்கும் இத்தகைய பகிரங்க மனித உரிமை மீறல்களுக்கு எதிராய் ஏதேனும் தீர்வுகள் வருமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி !

0

 

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….