காதலின்றி அமையாது உலகு.

imagesCALNHQ4U

காதல் எனும் வார்த்தைக்கு இருக்கும் வசீகரம் வேறெந்த வார்த்தைக்கும் இல்லை. மதங்களின் மதில் சுவர்களோ, சாதிகளின் சதுப்பு நிலங்களோ, இனங்களின் தினவுகளோ, மொழிகளின் வாள்வீச்சுகளோ காதலை வெட்டி எறிய முடிவதில்லை. வெட்டி எறிய காதல் என்பது காய்கறியல்ல, அது காற்று ! காற்றை வெட்டித் துண்டுகளாக்கும் கத்தியை மானுடம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை !

உலகின் எந்த இலக்கியங்களும் தோன்றும் முன் தமிழில் காதல் தோன்றிவிட்டது. பண்டைய இலக்கியங்களில் காதல் ஏக்கங்களாலும், தீண்டல்களாலும், வீரத்தின் சாரல்களாலும் நனைந்து கிடந்தது. அறத்தையும், மறத்தையும் உயிரெனக் கொண்டிருந்த தமிழரின் வாழ்க்கை காதல் எனும் சரட்டினால் கட்டிப் பிணைக்கப்பட்டிருந்தது ! அதைத் தான் அகம் பாடுகிறது.

இன்றைய காதலர்கள் தங்கள் காதலியரின் கண்களை டிஜிடல் ஓவியம் என்கின்றனர். சற்றே முந்தைய காதலர்கள் கண்களில் பூக்களைப் பார்த்தார்கள், மீன்களைப் பார்த்தார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் வேலைப் பார்த்தார்கள், வில்லைப் பார்த்தார்கள். எப்படியோ காலம் காலமாக பெண்களின் கண்களை அவர்கள் பார்க்கத் தவறவில்லை என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

காதலின் கண்கள் புதைகுழிகள். அந்தக் கண்களில் இதயம் புதையுண்டு போகிறது. புதையுண்ட அந்தக் கண்களிலிருந்து நேரடியாக இதயத்தில் இறங்கிக் கொள்கின்றனர் காதலர்கள். சிலருக்கு அந்தக் கண்கள் பனிமலைகளாகின்றன, சிலருக்கு எரிமலைகளாகின்றன, சிலருக்கு ஆழ்கடலாகவும், சிலருக்கு தற்கொலை முனைகளாகவும் காட்சியளிக்கின்றன. எப்படியோ, காலம் காலமாக அந்தக் கண்களில் குதிக்க மட்டும் யாரும் தயங்குவதேயில்லை.

இன்றைக்கு காதல் என்பது ஒரு பொதுப்பெயராகிவிட்டது. அந்தக் காதல் எனும் உன்னதத்தின் மேலும் கீழும் ஒரு அடைமொழியை அமரவைத்து காதலின் அமரத்துவத்தை கேலிக்குரியதாக்கி விட்டது சமூகம். கள்ளக் காதல், போலிக் காதல், திருட்டுக் காதல் என்பதெல்லாம் காதலுக்கான அவமானங்கள். மோகத்தின் முனகல்களையும், மெத்தைத் தாகத்தின் பானங்களையும் காதல் எனும் குடுவைக்குள் அடைப்பதில் நியாயம் இல்லை என்பதை உண்மைக் காதலர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

உண்மைக் காதலில் காமத்தின் சாரல் உண்டு. ஆனால் அது அடைமழையாக மாறிக் கரைகளைக் கரைத்து விடுவதில்லை. காதல் என்பது கடலைத் தேடும் நதியைப் போன்றது. காமம் என்பது நதியைத் தேடிக் கரைதாண்டி ஓடும் கடலைப் போன்றது. நதி கடலில் கலப்பது இயல்பு, அது இரண்டறக் கலத்தல். கடல் கரைதாண்டுவது அழிவின் அழைப்பு. சுனாமியின் மிரட்டல்.

உண்மையான காதல் எப்போதுமே காதலர்களை வெற்றிகளை நோக்கியே பயணிக்க வைக்கும். வெற்றித் திலகமிட்டு போர்களம் அனுப்பும் சங்கக் காதலியர் அம்புகளுக்குள் தங்கள் அன்பைத் தோய்த்து அனுப்புகிறார்கள். அந்த ஊக்கம் அவர்களுக்கு புறமுதுகிடாத புஜங்களைப் பரிசளிக்கிறது. காதலியருக்காக தீயவற்றை விட்டு விடுவதும், நல்லவற்றைப் பற்றிக் கொள்வதுமாக உண்மைக் காதல் வசீகரிக்கும்.

தமிழரின் வாழ்வோடும், அடையாளத்தோடும், கலாச்சாரத்தோடும் காதல் செம்புலப் பெயல்நீர் போல் கலந்தே இருந்தது என்பதே வரலாறு. காதல் ரசம் சொட்டும் சிலைகளும், இலக்கியங்களும் அதன் சாட்சிகள். வேலன்டைன்ஸ் டே என்பது மேனாட்டு இறக்குமதி, காதல் விழா என்பது போலித்தனம் என கூச்சலிடுபவர்கள் உண்மையில் தமிழரின் வரலாறு அறியாதவர்கள்.

காதல் விழாவை இருபத்து எட்டு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடிய மன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன். காமன் விழா என அவன் அந்த விழாவை காதலர்களுக்காகக் கொண்டாடினான். உலகின் முதல் காதல் விழா இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

காதல் விழாவை நடத்துவதற்கு மன்னன் கட்டளைகளைப் பிறப்பிப்பதை மணிமேகலையும் கூறுகிறது. மக்கள் காதலில் களித்திருக்கட்டும், பிரிவினைகள் மறந்து ஆனந்தமாய் இருக்கட்டும், நல்ல பூங்காக்களில் அவர்கள் இருக்கட்டும், காதலர்க்கு இடையூறு வராமல் இருக்க காவல் ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்கிறார் மன்னன்.

இப்படி காதல் விழாக்களை முதலில் முன்னின்று நடத்தியது தமிழ் இனமே என்பதை காதலுடன் சொல்லும் அத்தனை தகுதியும் நமக்கு உண்டு. ஆனால் அது ஏதோ இறக்குமதி விழா என்பது போல சாயம் பூசுபவர்களையும், அதை வியாபார உத்திக்காகப் பயன்படுத்தும் வணிக மூளைகளையும் காதலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் என்பது காற்றைப் போன்றது, அது எல்லா நுரையீரல்களின் கதவுகளையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தட்டுகிறது. சிலர் அந்தச் சத்தத்தைக் கேட்பதில்லை. சிலர் கேட்டாலும் நிராகரித்து விடுகிறார்கள். சிலர் கேட்காத சத்தத்தைக் கூட கேட்டதாய்க் கருதிக் கொள்கிறார்கள். சிலர் அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்து காதலை உள்ளிழுக்கிறார்கள். எது எப்படியோ காற்று நுரையீரலையும், காதல் இதயங்களையும் தட்டுவதை நிறுத்துவதே இல்லை.

காதல் என்பது பூவைப் போன்றது. காதலியரை பூவோடு ஒப்பீடு செய்யாத காதலர்கள் இருக்க மாட்டார்கள். மலரினும் மெல்லிய இதழ்கள் காதலியின் உதடுகள் என்பவர்களே காதலில் கரைகிறார்கள். பூக்கள் பூக்காமல் இருப்பதில்லை. சில பூக்கள் பூஜையறைக்குச் செல்கின்றன, சில கூந்தல்களில் குடியேறுகின்றன, சில கவனிக்கப்படாமல் கருகிவிடுகின்றன. எது எப்படியோ பூக்கள் பூப்பதை நிறுத்துவதேயில்லை.

காற்றின் வெற்றி அதன் இருப்பில் தான் இருக்கிறது. அதை நாம் பார்க்கவில்லை என்பதாலோ, சுவாசிக்கவில்லை என்பதாலோ அது தோல்வியடைந்ததாய் அர்த்தமில்லை. பூவின் வெற்றி பூப்பதில் இருக்கிறது. பறிக்கவில்லை என்பதாலோ, சூடவில்லை என்பதாலோ பூ தோற்று விட்டதாய் அர்த்தமில்லை ! அது தான் காதலின் சிறப்பு ! காதல் தோன்றுவதே காதலின் வெற்றி !

காற்றின் அலைகளில் இசையாய்த் திரியும் ஒலி இழைகளை வானொலியின் சரியான அலைவரிசை இழுத்து எடுப்பது போல, காதலின் வாசனையை சரியான நாசிகள் நுகர்ந்து கொண்கின்றன. அவை பின்னர் கரம் கோத்து, உயிர்கோத்துக் கொள்கின்றன.

காதலியுங்கள் ! காதல் என்பது ஒரு நந்தவனம் போன்றது. காதலில் நடப்பவர்கள் நந்தவனத்தில் நடக்கிறார்கள். ஒரு முறை நடந்த திருப்தி இதயத்தின் தாழ்வாரங்களில் எப்போதும் சிறகடித்துக் கொண்டே இருக்கும். அது வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி.

காதலியுங்கள் ! காதல் என்பது வழியில் தென்படும் பூக்களையெல்லாம் முட்டிச் செல்லும் வண்டு அல்ல. ஒற்றைப் பூவை மட்டுமே தாங்கிப் பிடிக்கும் தண்டு. நீயின்றி நானில்லை எனும் நிலமையில் இணைந்திருக்கும் நிலை.

காதலியுங்கள் ! காதல் உங்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். உங்கள் உயிர் உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்களை இன்னோர் உயிராய் மாற்றி வைக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை இந்தக் காதலில் மட்டுமே சாத்தியம். நீங்கள் யார் என்பதையும் உங்கள் பலங்கள், பலவீனங்கள் அனைத்தையும் அதுதான் உங்களுக்குக் கற்றுத் தரும்.

காதலியுங்கள் ! காதல் வாழ்க்கையை அழகாக்கும். வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். வாழ்க்கையை வலுவாக்கும். அது பாதங்களுக்குக் கீழே பனித்துளியாக உங்கள் பயணங்களை கவிதையாக்கும். வெட்கத்தின் மூச்சுகளுடன் கனவுகளை காவியமாக்கும்.

காதலியுங்கள். காதல் என்றால் என்ன என்பதை அறிந்தபின் காதலியுங்கள். சீண்டலின் சிற்றின்பங்களும், மோகத்தின் முனகல்களும், மெத்தைத் தேடலின் முனைப்புகளும், விலக்கப்பட்ட கனிகளின் சுவைகளும் காதல் என கற்பித்துக் கொள்ளாதீர்கள்.

அரளிப்பூவுக்கு மல்லி என பெயர்சூட்டிக் கொள்ளலாம். ஆனால், அரளிப்பூவில் மல்லியின் வாசத்தை நுகர்வது இயலாது.

காதலிப்போருக்கும், காதலிக்கப் படுவோருக்கும், இனிய காதல் வாழ்த்துகள்.

சேவியர்
வெற்றிமணி, ஜெர்மனி

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்

விரல் நுனியில் விரசம்…

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ? புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.

இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது. பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள். அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.

லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது. இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும். இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்

சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.

அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !

இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது. ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம்.

பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம். சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.

இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம். விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.

இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !

பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து. செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாடவேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.

“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம். இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.

சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான். பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !. இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.

டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி. ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?

கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.

மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது. நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!

0

நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.

o

அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது. ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

o

ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு. இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !

o

சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !

0

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க

ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்

 lubnaஇப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.

என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.

தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் !

அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.

நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் !

journalists_activists_and_politicians_detained_inஎது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.

சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.

முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் !

நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.

லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் lubna12லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.

இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.

neelima-35பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி !

 ( ஓ..காட்…. இப்டீ எல்லாம் நட்குதா… நான் சூடான் பட்த்துலே நட்க்கவே மாட்டன்)

 

 

 

  

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால்…. வாக்களியுங்கள்…… நன்றி !

 

அவள் விகடன் : மேரி கோம் – இலட்சியங்கள் வீழ்வதில்லை.

Mary-Kom4

சானியா மிர்சாவைத் தெரியுமா என்று யாராவது கேட்டால் அவரை ஒரு வேற்றுக் கிரக வாசிபோல பார்ப்போம். சரி.. இருக்கட்டும் தப்பில்லை. மேரி கோம் யாரென கேட்டால் ? அது யாருங்க மேரி கோம் ? கேள்விப்பட்ட பெயராய் இல்லையே என இழுக்கிறீர்களா ?

நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி கைகளால் போன மாதம் பெற்றவர். நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். தேசிய அளவில் 10 தங்கப் பதக்கங்களும், சர்வதேச அளவில் 14 தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் பெற்றவர். இத்தனை சாதனைகள் செய்தும் பரபரப்பாகாமல் இருக்கும் இருபத்து ஏழு வயதான குத்துச் சண்டை வீராங்கனை.

வெற்றிக்கான வேட்கை இருந்தால் எதுவுமே தடையாகாது என்பதன் சமகால உதாரணம் தான் மேரி கோம். 1983 மார்ச் ஒன்றாம் தியதி மணிப்பூரின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தார் மேரி கோம். தந்தை தோன்பு கோம், தாயார் சனீகம் கோம் இருவருமே வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் தான். வறுமையில் உழன்ற மேரியின் ஆரம்ப கால இலட்சியம் பதக்கங்கள் வாங்கிக் குவிப்பதல்ல, விளையாட்டில் பரிசுப் பணம் வாங்கி பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக ஓட்டப் பந்தயம், அது இது என எல்லா விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார்.

அவளுடைய வாழ்க்கையை பாக்ஸிங் நோக்கி திருப்பி பெருமை தேடிக் கொண்டவர் பாக்ஸிங் வீரர் டிங்கோ சிங். இவரும் மணிப்பூர் காரர் தான். 1998ல் இவர் ஆசிய தங்கக் கோப்பையைப் பெற்று திரும்பிய போதுதான் மேரிக்குள்ளும் பாக்ஸிங் ஆசை படர்ந்தது. நன்றாக யோசித்து 2000ல் பாக்ஸிங் விளையாட்டில் நுழைந்தார். பாவம், கைக்குப் போடும் கிளவுஸ் வாங்க கூட பணமில்லாத சூழல் அவருக்கு. அனைத்தையும் சமாளித்தார். இரண்டே வாரங்கள் தான். விளையாட்டின் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்! அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு அவரிடம். ஆனால் இவர் பாக்ஸிங் கற்றுக் கொள்வது வீட்டில் யாருக்குமே தெரியாது.

ஒரு நாள் எதேச்சையாய் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த மேரியின் தந்தையின் கண்களின் தட்டுப்பட்டது ஒரு பெண்ணின். பதக்கத்துடன் சிரிக்கும் படத்தை உற்று உற்றுப் பார்த்தார். அது தன் மகளே தான். மேரி கோம் மாநில அளவில் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்ற செய்தி அது. அப்பாவுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆனந்தப் படுவதற்குப் பதிலாக கோபம் முகத்தில் குதித்தது. நீ குத்துச் சண்டை போடறியா ? அப்புறம் யாரு உன்னை கல்யாணம் செய்வான் ? அடிபட்டா என்ன செய்வே ? என தந்தைக்கு பல கவலைகள். ஆனால் தாய் ஆதரவுக் குரல் கொடுத்தார்.

மேரிகோம் கலப்பையில் கை வைத்து விட்டார். உழாமல் திரும்பிச் செல்ல நினைக்கக் கூட இல்லை. அங்கே ஆரம்பித்த அவருடைய விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, அர்ப்பணம் இவையெல்லாம் இன்று அவரை இந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அர்ஜூனா, பாரத ரத்னா, இந்தியன் ரியல் ஹீரோஸ் விருதுகளைத் தொடர்ந்து, கடந்த மாதம் உயரிய கேல் ரத்னா விருதையும் வழங்கி இந்திய அரசு மேரியை ஊக்கமூட்டியிருக்கிறது.P-420

மணிப்பூரில் அமைதி உருவாகட்டும். அந்த அமைதி இந்தியா முழுதும் பரவி இந்தியாவே அமைதியாய் இருக்கட்டும். என விருதை வாங்கிய கையோடு ஏங்கினார் மேரிகோம். அதற்கு ஒரு பின்னணி உண்டு. 2006ம் ஆண்டு தனது பெரும் பாசத்துக்குரிய மாமனாரை துப்பாக்கிக் குண்டுக்கு பலிகொடுத்த துர்பாக்கியம் அவருக்குள் வலிக்கிறது. எனக்கு உதவி செய்ய வந்த மாமனாரை யாரோ கொன்று விட்டார்கள். ஏன் கொன்றார்கள் எனும் கேள்விக்கு இன்னும் விடையில்லை. மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று ஒவ்வோர் கணமும் பிரார்த்திக்கிறேன். மேரி கோமின் வார்த்தைகளில் துயரம் கூடு கட்டிக் குடியிருக்கிறது.

இந்திய அரசின் விருது கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் மேரி கோம். கூடவே அடுத்த மாதம் வியட்னாமில் நடைபெறப்போகும் போட்டிக்கான பரபரப்பும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இதை எல்லாவற்றையும் விட மிக ஆனந்தமான விஷயம் அவர் ஒலிம்பிக்கில் விளையாடப் போகிறார் என்பது தான். 2012ல் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பாக்ஸிங்கில் கலந்து கொள்ள மேரிக்கு அழைப்பு வந்திருக்கிறது. இது என் வாழ்நாள் கனவு. இதில் வெற்றி பெற்று தேசத்தின் மார்பில் தங்கப் பதக்கம் குத்துவேன் என பரவசமாகிறார் மேரி.

ஐ.ஓ.எஸ் (Infinity Optimal Solutions Pvt. Ltd) ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் மேரியுடன் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இட்டுள்ளது. கூடவே ஒலிம்பிக் கோல்ட் குவஸ்ட் அமைப்பும் மேரியை ஸ்பான்சர் செய்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஒலிம்பிக் எனும் கனவை நிஜமாவதை இப்போதே என் கண்களில் காண்கிறேன் என பூரிக்கிறார் மேரி.

மேரி பாக்ஸிங்கில் நுழைந்த பின் திரும்பிச் செல்தல் என்ற கேள்வியே எழவில்லை. அடுத்தகட்டத்தை நோக்கிய தேடல் மட்டுமே எப்போதும் அவரிடம். தினமும் சுமார் ஆறுமணி நேரம் கடுமையான பயிற்சி செய்கிறார். இப்படி முழு மூச்சாக பாக்ஸிங்கில் இருப்பவருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள்!

கடந்த ஆண்டு சீனாவில் நடந்த போட்டியில் பதக்கம் வெல்வார் என அவரைத் தவிர யாருமே நம்பவில்லை. காரணம் சமீபத்தில் தான் இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தார். பயிற்சி எடுத்து வருடக்கணக்காகியிருந்தது. ஆனால் மேரி மட்டும் தன்னை நம்பினார். இரண்டு மாதங்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். விளைவு கைகளில் தங்கப் பதக்கம் ! இப்படி மேரி வாழ்வின் ஒவ்வோர் பக்கமும் நம்பிக்கைப் பாடங்களால் நிரம்பியிருக்கிறது.

MK1அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு இப்போது வயது இரண்டு. தனது கேல் ரத்னா விருதை இரட்டைச் செல்வங்களுக்குத் தான் சமர்ப்பித்திருக்கிறார், ஒரு பாசமான அம்மாவாக !. எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். இவருடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது இவரது கணவர். குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு மனைவியையும் உற்சாகப் படுத்தும் இரட்டை வேலை அவருக்கு. “அத்தனை சுமைகளையும் சிரித்துக் கொண்டே சுமக்கும் அவர் என்னோட சிறகில்லாத தேவ தூதன் என்று” தழுதழுக்கிறாள் மேரி.

ஏழ்மை இலட்சியங்களை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதை நேரில் பார்த்தவர் மேரி. போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்த பின்பு தான் தனது பெற்றோருக்கு வசிக்க ஒரு இடத்தை வாங்க இவரால் முடிந்திருக்கிறது. வறுமையில் வாடிக்கொண்டிருந்த தனது உடன்பிறப்புகளுக்கு உதவி செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் பெற்ற பணத்தையெல்லாம் இன்வெஸ்ட் செய்யும் மனநிலை இந்த வெள்ளை மனசுக்காரிக்கு இல்லை.

தனது பரிசுப் பணத்தில் பாதியையாவது ஏழை விளையாட்டு வீரர்களுக்கு செலவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். “எம்.சி. மேரி கோம் பாக்ஸிங் அகாடமி “ என அவர் ஆரம்பித்த பயிற்சி நிலையம் அவருடைய உன்னத மனதின் உதாரணம். அங்கே ஏழை விளையாட்டு வீரர்களுக்கு இலவசப் பயிற்சி நடக்கிறது. வெளியூரிலிருந்து வரும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சியுடன் சேர்த்து தங்குமிடம், உணவு எல்லாமே இலவசம் ! எல்லாம் தனது சொந்தப் பணத்திலிருந்து தான் செலவழிக்கிறார். சுமார் 20 பேர் இங்கே பயிற்சி பெற்று வருகிறார்கள். “ இந்தியாவில் கிரிக்கெட்டும், டென்னிசும் தவிர வேறு விளையாட்டுகளே இல்லையா” எனும் இவருடைய கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

மேரி விருது வாங்கியதில் இங்குள்ள மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். மேரியை அவர்கள் ஒரு அன்னையாகப் பார்க்கிறார்கள். “எங்கள் கோச் உயரிய விருதை வாங்கியதில் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவர் எங்களுக்கு கோச் அல்ல, வழிகாட்டும் தெய்வம்…” என கண் கலங்குகிறார் இங்கே பயிலும் நாகிசா எனும் மாணவி.

உறுதியான இலட்சியத்துடனும், உயர்ந்த உள்ளத்துடனும் வாழும் மேரியின் ஒலிம்பிக் கனவும் நனவாகட்டும்.

தமிழிஷில் வாக்க(கி)ளிக்க..

ஜூ.வி : கற்பு வாங்கலையோ …கற்பு !

EFG103

“பதின்மூன்றே வயதான இளம் பெண்ணின் விர்ஜினிடி விற்பனைக்கு”. அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கே விற்கப்படும் ! ரஷ்ய இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் உஷாரானது மாஸ்கோவின் காவல்துறை. பகிரங்கமாக இந்த விளம்பரத்தைக் கொடுத்தது யார் என சைபர் குழு அதிரடி விசாரணையில் குதித்தது. விசாரணை முடிவோ காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டது. காரணம், அந்த விளம்பரத்தைக் கொடுத்தது வேறு யாருமல்ல, அந்தப் பெண்ணின் தாய் !

இதே போல பதினாறு வயதான ஒரு பெண்ணின் கற்பும் ரஷ்ய இணைய தளம் ஒன்றில் ஏலம் போட்டு விற்கப்பட்டது. அங்கும் குற்றவாளி பெண்ணின் சொந்த அம்மாவே தான் ! இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரஷ்யாவில் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றன.

இப்படி ஒரு படு பாதகச் செயலைச் செய்த தாய்க்கு கொஞ்சமேனும் குற்ற உணர்வு இருக்குமா என பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பதின் மூன்று வயது மகள் அலியோனாவின் தாய் ஸ்வெட்லானா சந்தோசமாகப் பேசுகிறாள். நான்கு இலட்சம் ரூபிள்களுக்கு என் மகள் விலை போயிருக்கிறாள். இத்தனை விலை கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை என வியக்கிறார்.

பதினாறு வயது மகள் போலினாவின் கற்பு இலட்சம் ரூபிள்களுக்கு விலைபோயிருக்கிறது ! அவளுடைய தாய் மரியா மகளை கையோடு அழைத்துக் கொண்டு “கஸ்டமரிடம்” ஒப்படைத்திருக்கிறாள் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல்.

எனக்கு நிறைய கடன் இருக்கிறது. கடன்களை அடைக்க இது தான் எளிய வழி. கற்பைப் பாதுகாத்து வைத்து என்ன ஆகப் போகிறது ? இதையெல்லாம் நான் எனக்காகச் செய்யவில்லை. என் மகளுக்காகத் தான் செய்திருக்கிறேன். கடன்களை அடைத்தது போக மிச்சமிருக்கும் பணம் முழுதும் அவளோட கல்யாணச் செலவுக்குத் தான் என்கிறார் மரியா சர்வ சாதாரணமாக. இப்போ எனக்கு இளமையும் இல்லை. வயசும் இல்லை. இல்லேன்னா என்னோட கற்பையே ஒரு நல்ல விலைக்கு விற்றிருப்பேன் என்கிறார் தடாலடியாக ! 

அம்மாக்கள் தான் இப்படி சகஜமாய்ப் பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களோ கண் கலங்குகின்றனர். “இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியவே தெரியாது. போட்டோ எடுக்கலாம்ன்னு சொல்லித் தான் அம்மா என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா கடைசில ஆள் வெச்சு பலாத்காரம் பண்ணிட்டாங்க. என்னோட அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை” என விசும்பும் பதின் மூன்று வயது சிறுமி பள்ளிக்கூடம் செல்கிறாள்.Alina Percea

“எனக்கு இந்த சமாச்சாரமே தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்” என கண் கலங்கும் பதினாறு வயதுப் பெண்ணும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள்.  

இணையத்தில் சமீப காலமாகவே இந்த “விர்ஜினிடி” விற்பனை வெகு ஜோராக நடந்து வருகிறது. படிக்கப் பணமில்லை, ஆடம்பரமாய் செலவழிக்க வசதியில்லை, அம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் வேண்டும் என ஏதேதோ காரணங்களுக்காக கற்பு விற்கப்படுகிறது. இவர்களை ஏலத்தில் எடுக்கவும் போட்டா போட்டி நிலவுகிறது. எக்கச்சக்கமான பணம் ஒவ்வோர் ஏலத்திலும் கைமாறுகிறது. பெரும்பாலும் வெளி நாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் தான் இவர்களை ஏலத்தில் எடுக்கின்றனர்.

வேலைக்கு சர்டிபிகேட் சுமந்து திரிவது போல இவர்கள் தங்கள் விர்ஜினிடியை நிரூபிக்கும் மருத்துவ சர்ட்டிபிகேட்டுடன் அலைகிறார்கள்.  சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து இவர்கள்  “ஒரு நாள் முதல்வி” யாகிறார்கள்.

ரொமானியாவின் எலீனா, இத்தாலியப் பெண் பிக்கோ, பெருகுவே நாட்டு மாடல் அழகி, மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவி கேரிஸ் என கற்பை விற்போரின்  பட்டியல் மிக நீளமானது.

அமெரிக்காவில் வசித்து வரும் பதினெட்டு வயது ரொமாலியப் பெண் எலீனா பெர்சியா. கம்ப்யூட்டர் படிக்க காசில்லை, விற்பதற்கு பாத்திர பண்டம் ஏதும் இல்லை என கற்பை ஏலமிட்டார். 8800 பவுண்ட்களுக்கு ஏலத்தில் எடுத்தவர் இத்தாலியிலிருந்த தொழில் அதிபர் ஒருவர். அவர் எலீனாவை வெனிஸ் நகரத்துக்கு “பஸ்ட் கிளாசில்” பறக்க வைத்து அங்குள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

“பிசினஸ் நல்லா முடிஞ்சுது !” என எந்தவித சங்கோஜமும் இன்றி கூறும் எலினாவுக்கு வருத்தம் இரண்டே இரண்டு.

ஒன்று, ஐம்பதாயிரம் பவுண்ட் க்கு ஏலம் போகும்ன்னு நினைச்சேன். ஆனா ஜஸ்ட் எட்டாயிரத்து எண்ணூறு தான் கிடச்சுது. இரண்டு, ஒரு யூத் ஹீரோவை எதிர்பார்த்தேன் வந்தவரோ 45 வயசு குள்ள மனுஷன் !

“ஹோவர்ட் ஸ்டர்ன் ஷோ” என்பது ஹேவர்ட் ஸ்டர்ன்  என்பவரால் நடத்தப்படும் அமெரிக்காவிலுள்ள ஒரு ரேடியோ டாக் ஷோ. இந்த டாக் ஷோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேசினாள் நடாலி டைலன் எனும் 22 வயதுப் பெண். அந்த உரையாடலின் போது தனது கற்பை ஏலமிடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து கேட்டவர்களை திடுக்கிடச் செய்தார்.

சொன்னது போலவே இணையத்தில் கடைவிரித்த அவரது கற்பு சடசடவென ஏலத்தில் போனது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தனது கற்பு விலையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட நடாலி இன்னும் ஏலத்தை முடித்துக் கொள்ளவில்லை. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விலை பேசியிருக்கிறார்களாம். இன்னும் தினம் தோறும் இவரைக் குறித்த செய்திகள் தினமும் ஹாட்டாக உலவுகின்றன. ஏலத் தொலை மில்லியன் கணக்கில் எகிற நடாலி அதிர்ந்து போயிருக்கிறாராம். வியப்பின் உச்சியில் இருந்து கொண்டு “பெண்ணின் கற்பு விலை மதிப்பானது ! அதை விற்பதே நியாயமானது” என தத்துவம் பேசுகிறார் நடாலி.

Natalie Dylanகற்பு விற்பனையை சட்டம் “பாலியல் தொழில்” எனும் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இந்த விற்பனையைத் தடை செய்ய சட்டத்தால் முடியாது. ஒரு விதத்தில் வீட்டிலுள்ள பொருட்களை ஏலம் இடுவதைப் போலத் தான் இதையும் கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும் என்கிறார் அமெரிக்க வழக்கறிஞர் மார்க் ரண்டாசா.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் ஏலம் நடந்தாலோ, ஏலமிடும் நபர் பதினெட்டு வயதைக் கடந்தவர் என்றாலோ சட்டம் சைலண்டாய் தான் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ ஏஜெண்ட் டேவிட் ஸ்டாரெட்ஸ்.

ஆனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டு வரும் பணத்துக்கு ஒழுங்காக வரி கட்டவேண்டுமாம் ! சில இடங்களில் வரி சுமார் 70 சதவீதமாம் !!!

இப்படி தங்கள் கற்பை தாங்களே விற்பது பரவலாக நடந்தாலும், அம்மாவே பெண்ணின் கற்பை விற்றிருப்பது இது தான் முதல் முறை.  அந்த அம்மாக்கள்  கஸ்டமர்களுக்கு இட்ட ஒரே கண்டிஷன் “பாதுகாப்பா” உறவு கொள்ளுங்கள் என்பது தானாம்

இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்த இரண்டு அம்மாக்களும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் செய்த குற்றத்துக்கான பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டாம்.

“வயசுப் பிள்ளையை வளக்கிறது மடியில நெருப்பைக் கட்டிட்டு அலையற மாதிரி” என பதட்டப்படும் தாய்மார்களைப் பார்த்து தான் நமக்குப் பழக்கம். அதனால் தான் பிள்ளைகளை அசிங்கப்படுத்தும் தாய்மார்களை நினைத்தாலே அதிர்கிறது மனசு !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

“கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.

 

EFG103

 

பாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.

மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.

படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.

போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.

பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.

இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ 12சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்

 

 

 

ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.

 

சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் …  என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.

கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !

 

இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )

 

 

புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…

 smoke1நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.

அந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.

எனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

புகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப்  புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.

நிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது!

பாலூட்டுதல் நல்லது : அன்னைக்கா ? குழந்தைக்கா ?

 42-20795158

அழகுக்காகவும், இளமைக்காகவும் குழந்தைகளுக்குப் பாலூட்ட மறுக்கும் இன்றைய இளம் அன்னையர்களுக்கு எச்சரிக்கை ஊட்டுகிறது பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று.

பாலூட்டுவதால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது எனும் தகவல்களுடன், பாலூட்டுவதால் தாய்க்கு பிற்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ஒரு வருட காலம் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த பயன்கள் அதிக அளவில் இருக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

சுமார் ஒன்றரை இலட்சம் தாய்மார்களை வைத்து மிகவும் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்கள் இளம் அன்னையரை பாலூட்ட உற்சாகப் படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

யூகே வில் சுமார் 35 விழுக்காடு அன்னையர் குழந்தைகளுக்கு ஒரு முறைகூட பாலூட்டியதில்லை என்கிறது திகைக்க வைக்கும் புள்ளி விவரம் ஒன்று.

பாலூட்டும் அன்னையருக்கு உயர் குருதி அழுத்தம் வரும் வாய்ப்பும், அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பும் பெருமளவு குறைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

 

அன்னையர் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தேவைகளையும், அவசியத்தையும் உலக அளவில் வலியுறுத்துவது அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்வதற்கும், அன்னையர் வாழ்வின் அடுத்த கட்டம் நலமானதாய் அமைவதற்கும் வழிவகை செய்கிறது. அதை இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்பித்து வைக்கின்றன என்பதில் மிகையில்லை.

“ஹேர் டை” : ஆபத்தாகும் அழகுப் பொருள் !

 215 வயதான கர்லா ஹேரிஸ் க்கு நடனப் போட்டியில் கலந்து கொள்ளும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இரண்டொரு நாளில் நடனப் போட்டி. போட்டியில் அழகாய் தெரிய வேண்டும் எனும் உந்துதலால் தனது அழகிய நேரான கூந்தலுக்கு கொஞ்சம் வர்ணம் சேர்க்க விரும்புகிறாள் சிறுமி கர்லா.

லோரியல் நிறுவனத்தின் தயாரிப்பான கூந்தல் நிறமியை வாங்கி வருகிறாள். லோரியல் என்பது பாரிசை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் உலகிலேயே மிகப் பெரிய அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டுக்கு வந்து, தனது தலையில் கொஞ்சமாய் தலையில் அந்த “ஹேர் டை” யை தேய்க்கிறாள். கொஞ்சம் எரிச்சல், அரிப்பு வருவது போலத் தோன்றுகிறது. ஏன் அரிக்கிறது என யோசித்துக் கொண்டே தனது வேலையை முடித்துக் கொள்கிறாள்.

இரவில் நிம்மதியாய் தூங்கி, மறுநாள் காலையில் உற்சாகமாய் எழும்பிய சிறுமி, தனது பல வண்ணக் கூந்தல் எப்படி மிளிர்கிறது என கண்ணாடியில் பார்த்தபோது அதிர்ந்து போகிறாள். அவளுடைய முகம் ஒரு பூசணிக்காய் போல வீங்கியிருக்கிறது. !!

அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தையும் தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கின்றன என்பதற்கான ஒரு சிறு உதாரணம் தான் மேற்கூறிய இந்த நிகழ்வு.

அந்த ஹேர் டை யில் நச்சுப் பொருளான PPD எனும் வேதியல் பொருள் இருந்ததே இந்த ஒவ்வாமைக்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. இந்த பொருள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.1

 

உலகின் மாபெரும் நிறுவனத்தின் பொருட்களிலேயே இந்த விஷத் தன்மை இருக்கிறதெனில் மற்ற பொருட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் என அதிர்ந்து போயிருக்கின்றனர் விஷயம் கேள்விப்பட்டோர்.

வெறுமனே வீக்கம் வந்துவிட்டு விலகிப் போகும் சமாச்சாரம் என்று இதை தள்ளி விட முடியாது. இந்த வீக்கம் பெரிதாகி நாக்கு, தொண்டை போன்றவை அளவுக்கு அதிகமாகி வீங்கி விட்டால் உயிருக்கே ஆபத்து என்பது அச்சுறுத்தும் உண்மையாகும்.

” விஷப் பொருள் இருக்கிறது என்று தெரிந்தும் அதை அனுமதிப்பது என்பது அந்த நிறுவனத்தை நம்பும் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் செயல். இனிமேல் என் வாழ்நாளில் ஹேர் டை எனும் பேச்சுக்கே இடமில்லை” என கலங்கிப் போய் கூறுகிறாள் சிறுமி.

ஹேர் டை உபயோகிப்பவர்களில் 7.1 விழுக்காடு மக்களுக்கு ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுவதாக 2007ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இந்த அழகுப் பொருட்களிலெல்லாம் எந்த அச்சுறுத்தலும் இல்லை, மக்கள் இதைத் தைரியமாகப் பயன்படுத்தலாம் என லோரியல் நிறுவனம் தனது மறுப்பில் தெரிவித்துள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் நிகழ்வுகளைப் பொதுமைப் படுத்தக் கூடாது என்பது அவர்களின் வாதம். எனில் எதையும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது நமது விருப்பம் !