ஊனமாக்கும் ஊடகங்கள் ( Vettimani Magazine : London )

Media

 

 

சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.

சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா ?

பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது ச‌மூக‌ம் அவ‌மான‌ப்ப‌டுகிற‌து.

டெல்லியில் கூட்டுப் பாலிய‌ல் வ‌ன்முறை ஒரு பெண்ணின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ போது இந்திய‌ தேச‌ம் கொந்த‌ளித்த‌து. வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ எத்த‌னையோ ஆயிர‌ம் இத்த‌கைய வ‌ன்கொடுமைக‌ள் இந்தியாவின் ஒவ்வோர் மாநில‌த்திலும் ந‌ட‌ந்து கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. ச‌மீப‌த்தில் இல‌ங்கையில் ஒரு ப‌தின் வ‌ய‌துச் சிறுமியின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கூட்டு பாலிய‌ல் வெறியாட்ட‌ம் ஆன்மாக்க‌ளை அதிர‌ வைத்திருக்கிற‌து. ம‌ல‌ரினும் மெல்லிய‌ள் என‌ க‌விதையில் பெண்ணைப் பாராட்டி விட்டு, மோக‌த்தின் பூட்ஸ் கால்க‌ளால் அவர்களை ந‌சுக்குவ‌தைக் காண்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்றே இத‌ய‌ம் க‌த‌றுகிற‌து.

த‌ன் ச‌கோத‌ரிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ கொடுமை க‌ண்டு ப‌த‌றித் த‌விக்க‌ வேண்டிய‌ ச‌மூக‌ம் அதை ப‌ட‌மெடுத்து ஃபேஸ் புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளாக‌வோ, வாட்ஸப் த‌க‌வ‌ல்க‌ளாக‌வோ அனுப்பிக் கொண்டிருக்கிற‌து. வ‌ன்கொடுமை ந‌ட‌ப்ப‌தைக் க‌ண்ட‌தும் ப‌த‌றிப் போய் த‌டுக்க‌ வேண்டிய‌ கைக‌ள் இன்று ஸ்மார்ட் போன்க‌ளில் ப‌ட‌ம் பிடிப்ப‌தையே முத‌ல் வேலையாய்ச் செய்கின்ற‌ன‌. புலிக் கூட்டில் விழுந்து விட்ட‌ வாலிப‌னை மீட்காம‌ல் அவ‌னை புலி என்ன‌ செய்கிற‌து என‌ ப‌ட‌ம் எடுத்துக் கொண்டிருந்த‌ அவ‌மான‌ச் ச‌மூக‌ம‌ல்லவா இது !

அதைத் தான் ஊட‌க‌ங்க‌ளும் செய்கின்ற‌ன‌. வ‌ன்கொடுமைக்கு ஆளான‌ ச‌கோத‌ரியை அவ‌ளுடைய‌ வ‌ர‌லாறை முழுக்க‌ முழுக்க‌ ப‌திவு செய்தும், திரும்ப‌த் திரும்ப‌ அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளைக் காட்டியும், குறுப்படங்களில் தலைகுனிய வைத்தும், மேலும் மேலும் அவ‌ளை அழித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌. துபாய் போன்ற‌ நாடுக‌ளில் ஒரு விப‌த்துப் ப‌ட‌த்தைக் கூட‌ ப‌த்திரிகையில் போட‌ அனும‌தி இல்லை. ஆனால் சுத‌ந்திர‌த்தில் திளைக்கும் ந‌ம‌து தேச‌ங்க‌ள் தான் “பிரேக்கிங் நியூஸ்” போட்டுப் போட்டு ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் குடும்ப‌த்தின‌ரை மீளாத் துய‌ர‌த்தில் இற‌க்கி விடுகின்ற‌ன‌.

அத்துட‌ன் ஊட‌க‌ங்க‌ள் நிற்ப‌தில்லை. “இந்த‌ வ‌ன்கொடுமைக்கு அந்த‌ப் பெண் அணிந்திருந்த‌ மிடி தான் கார‌ண‌மா ?” என‌ நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு விவாத‌ம் எனும் பெய‌ரில் ச‌மூக‌ம் இழைத்த‌ கொடுமைக்கு அந்த‌ப் பெண்ணையே குற்ற‌வாளியாக்கியும் விடுகின்ற‌ன‌ர். வெட்க‌ம் கெட்ட சில த‌லைவ‌ர்க‌ள் “பெண்கள் த‌வ‌றிழைக்க‌த் தூண்டினால் ஆண்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்” என‌ குரூர‌ப் பேட்டிக‌ளையும் த‌வ‌றாம‌ல் கொடுக்கின்ற‌ன‌ர்.

ஒரு பெண்ணை ச‌கோத‌ரியாக‌வோ, ம‌க‌ளாக‌வோ, தாயாக‌வோ பார்க்க‌த் தெரியாத‌ ம‌னித‌ன் இந்த‌ பூமியின் சாப‌க்கேடு. அத்த‌கைய‌ பிழைக‌ளுக்கு ஒத்து ஊதும் த‌லைவ‌ர்க‌ள் ம‌னுக்குல‌த்தின் வெட்க‌க்கேடு.

ஒரு அதிர‌டியான‌த் த‌க‌வ‌ல் த‌ங்க‌ள் ஊட‌க‌த்தின் வீச்சை அதிக‌ரிக்கும், ரேட்டிங்கை எகிற‌ச் செய்யும் என்ப‌த‌ற்காக‌ ம‌னிதாபிமான‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்து விட்டு நாள் முழுதும் நீட்டி முழ‌க்கும் ஊட‌க‌ங்க‌ள் ச‌ற்றே நிதானித்துச் சிந்திக்க‌ வேண்டும்.

த‌ங்க‌ளுடைய‌ நோக்க‌ம் கொடுமை இழைக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நீதி வ‌ழ‌ங்க‌ வேண்டும் எனும் நோக்கில் இருக்கிற‌தா ? இல்லை ஊட‌க‌த்திற்குத் தீனி போட‌வேண்டும் எனும் நிலையில் இருக்கிற‌தா ?. ஒருவேளை இத்த‌கைய‌ கொடுமை ந‌ம‌து இல்ல‌த்தில் நிக‌ழ்ந்தால் இதே நிக‌ழ்ச்சியை இப்ப‌டித் தான் கையாள்வோமா ? இல்லை க‌ண்ணீரோடு ப‌திவு செய்வோமா ? போன்ற‌ சில‌ அடிப்ப‌டை கேள்விக‌ளை எழுப்ப‌ வேண்டும். சரியானதை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்யும் சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

கான்பூர் இர‌யில் நிலைய‌த்தில் மின்சார‌ம் தாக்கி ஒரு குர‌ங்கு செய‌லிழ‌ந்து விழுந்த‌து. ப‌த‌றிப் போன‌ இன்னொரு குர‌ங்கு அதை உலுக்கி, அடித்து, த‌ண்ணீர் தெளித்து, க‌த‌றி நீண்ட‌ நெடிய‌ இருப‌து நிமிட‌ போராட்ட‌த்துக்குப் பின் அதை உயிருட‌ன் மீட்ட‌து. ஒரு குர‌ங்கு த‌ன‌து ச‌க‌ குர‌ங்கின் மீது காட்டிய ப‌ரிவும், அக்க‌றையும், அன்பும் ம‌னித‌ குல‌த்துக்கான‌ பாட‌ம‌ல்ல‌வா ? ஆறாவ‌து அறிவு ஆப‌த்தான‌தா ? ஐந்த‌றிவே அற்புத‌மா ?

நிறுத்தி நிதானிப்போம். வாழ்க்கை என்ப‌து ந‌ம‌து ஸ்மார்ட்போன்க‌ளில் இல்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளில் இல்லை. ந‌ம‌து உற‌வு என்ப‌து வாட்ஸ‌ப் த‌க‌வ‌ல்க‌ளில் இல்லை. ஐம்புல‌ன்க‌ளின் உரையாட‌லில் இருக்கிற‌து. கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி உற‌வுக‌ளை வ‌ள‌ர்ப்போம். வ‌லையில் சிக்கிய‌ ப‌ற‌வை சிற‌கை இழ‌க்கிற‌து. இணைய‌ வலையில் சிக்கிய மனிதர்கள் உற‌வை இழ‌க்கிறார்க‌ள். உண‌ர்வோடு இணைந்து வாழ்பவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌வ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை வெறும் வேடிக்கைத் த‌க‌வ‌லாய் இருப்ப‌தில்லை. வேத‌னைத் த‌க‌வ‌லாய் தான் இருக்கும்.

தொழில் நுட்ப‌த்தை நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ரை அது ந‌ம‌க்குப் ப‌ய‌ன‌ளிக்கும். தொழில்நுட்ப‌ம் ந‌ம்மை ப‌ய‌ன்ப‌டுத்த‌த் துவ‌ங்குகையில் வாழ்க்கை ப‌ய‌ம‌ளிக்கும். தொழில் நுட்ப‌ம் ந‌ம‌து ப‌ணியாள‌னாய் இருக்க‌ட்டும், அன்பு ம‌ட்டுமே ந‌ம‌து எஜ‌மானாய் இருக்க‌ட்டும்.

அன்பின்றி அமையாது உல‌கு.

கிறிஸ்தவம் : ஆன்மீக சுதந்திரம்

jesus12

 

சுதந்திரம் வேண்டுமா அடிமைத்தனம் வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? இந்தக் கேள்வியே மடத்தனமானது என்று தானே சொல்வீர்கள் ? அப்படி ஒரு பதிலைச் சொல்வதே சுதந்திரத்தின் அடையாளம் தான் இல்லையா ?. அடிமையாய் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உலகெங்கும் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் இதைத் தான் நமக்குச் சொல்லித் தருகின்றன. சமீபத்தில், சிங்களர்களின் அடக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் போராடியதும், இதற்காகத் தான். சுதந்திரம் எனும் வார்த்தையே அடக்குமுறைவாதிகளுக்கு அலர்ஜி. அதனால் தான், சுதந்திர சிறகுகளை நறுக்க மனிதாபிமானமற்ற படுகொலைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவும் சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. 1947 ஆகஸ்ட் 15 என்பது நமக்கெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஆனால் அந்த விடுதலையைப் பெறுவதற்கு இந்திய மண் தியாகம் செய்த உயிர்களும், தாங்கிய வலிகளும் சொல்லி முடிக்க முடியாதவை. இன்றைய இந்தியா, சட்டத்தின் பார்வையில் சுதந்திரமடைந்து விட்டது, ஆனால் அது இன்னும் சாதி, ஊழல், மதம் எனும் வேறு பல எஜமானர்களுக்குக் கீழே கைகட்டி அடிமையாய் நிற்கிறது.

இயேசு ஒற்றை வரியில் இதை மிக மிக அழகாக வெளிப்படுத்தினார். “பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ( யோவான் 8 : 34 பொ.மொ ) என்றார் அவர்.. ஆன்மீக அளவில் நாம் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பதை பளிச் என சொல்ல இதை விடப் பெரிய வசனம் தேவையில்லை. எந்த அதிகார சக்தி நமது செயல்களை நிர்ணயிக்கிறதோ அந்த சக்தியே நமக்கு எஜமான். எந்த சக்தியின் கட்டளைகளின் படி நாம் நடக்கிறோமோ அந்த சக்திக்குத் தான் நாம் அடிமைகளாய் இருக்கிறோம்.

நாம் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறோமா அல்லது இயேசுவுக்குள் சுதந்திரமாய் இருக்கிறோமா என்பதை அறிவது வெகு சுலபம். நமது ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசினாலே அந்தக் கேள்விக்கான பதில் நமக்குக் கிடைத்து விடும். காலையில் எழும்புகிறோம் பைபிள் வாசிப்பதும், ஜெபிப்பதும் நமக்கு முதன்மையாய் இருக்கிறதா ? அல்லது சுடச் சுட டீ குடித்து, டிவியில் நியூஸ் பார்ப்பது நமக்கு முக்கியமானதாய் இருக்கிறதா ?

அலுவலக அவசரத்தில் நம்மை எது வழிநடத்துகிறது ? கோபமா ? இயேசுவின் வழிகாட்டுதலான புன்னகை கலந்த சாந்தமா ? கோபத்தில் கத்தி, எரிச்சலில் சுற்றிக் கொண்டிருப்பீர்களென்றால் நீங்கள் கோபத்துக்கு அடிமையாய் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். கோபம் உங்களை வழிநடத்துகிறது என்பது தான் அதன் பொருள். கோபம் கொள்வது பாவம் என்பது நாம் அறிந்ததே. தம் சகோதரர் சகோதரியிடம் சினம் கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் ( மத் : 5 – 22 ) என்கிறார் இயேசு.

அலுவலகம் செல்லும் வழியில் வசீகரமான இளம்பெண்ணைப் பார்க்கிறீர்கள், உங்கள் பார்வை பாவம் செய்கிறதா ? அல்லது கண்ணியமாய்க் கடந்து போகிறதா ? கணினியில் வேலை செய்கிறீர்கள், சிற்றின்ப வழிகாட்டுதலுக்கான பக்கங்களில் உங்கள் மனம் உங்களை அழைத்துச் செல்கிறதா ? நண்பர்களோடு உரையாடுகிறீர்கள் உங்கள் உரையாடலில் பாலியல் நகைச்சுவைகள் பந்திவைக்கின்றனவா ? இதற்கான பதிலில் அடங்கியிருக்கிறது உங்கள் மனம் சுதந்திரமாய் இருக்கிறதா இல்லை சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கிறதா என்பது.

இப்படியே ஒவ்வொரு செயலையும் இயேசுவின் வாழ்க்கையோடும், வார்த்தையோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது ஆன்மீகத்தின் பாதையும், நமது போலித்தனத்தின் உண்மையும் வெளிப்படத் துவங்கும். பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் கூட தேவையில்லை. ஒரு சில மணி நேரங்களே போதுமானது. நியாயப் படுத்தல்கள் இல்லாத அலசல் இருந்தால் நமது வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து கொள்வது வெகு எளிது.

அப்படி என்னதான் உண்மை ? நாம் ஆன்மீக சுதந்திரம் அடையவில்லை எனும் மறுக்க முடியாத உண்மை. எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய இயலாது. ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு கொள்வார் ( மத் 6 : 24 ) என்றார் இயேசு. எவனும் ஒரே நேரத்தில் சுதந்திரமாகவும் அடிமையாகவும் இருக்க முடியாது என்பதே இறைமகன் சொல்லும் உண்மை. உலக செல்வங்கள் நமது செயல்களை நிர்ணயிக்கும்போது, கடவுளை வெறுக்கிறோம் ! செல்வத்தை நேசிப்பவன், கடவுளை வெறுக்கிறான். கடவுளை நேசிப்பவன் செல்வத்தைப் புறக்கணிக்கிறான். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் அன்பு செய்வதோ, அன்பைப் பகிர்ந்தளிப்பதோ இயலாத காரியம் என்பதே வேதாகமம் சொல்லும் உண்மை !

அதற்காக செல்வங்களே இருக்கக் கூடாதென்பதல்ல, அதை அன்பு செய்யக் கூடாது, அதை நோக்கி ஓடக் கூடாது, அதை முதலிடத்தில் வைத்துப் பயணம் செய்யக் கூடாது என்பதே புரிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும். அதனால் தான் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ( மத் 6 : 33 ) என்கிறார் இயேசு.

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது ! கோபத்திலிருந்து விடுபட்டுக் காமத்திற்கு அடிமைத்தனமாகி விடுகிறது மனசு. காமத்திலிருந்து விடுபட்டு பணத்தாசையில் அடைபடுகிறது. பணத்தாசையிலிருது விடுபட்டு புகழ் போதையில் புகுந்து விடுகிறது. புகைத்தலை நிறுத்தி விட்டுப் பான்பராக் போடும் இளைஞனைப் போல நமது ஆன்மீக அடிமைத்தனம் தளங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறதே தவிர விடுபடுவதில்லை.

உண்மையான சுதந்திரம் என்பது நாம் பாவத்திலிருந்து முழுமையாய் விலகி இயேசுவின் வழியில் தொடர்வதில் இருக்கிறது. இது இடுக்கமான வாயில். இதில் நுழைவது கடினம். “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே ( மத் 7: 13-14 ) .

இந்த இடுக்கமான வாயில் வழியே நுழைபவர்களை வழி நடத்திச் செல்ல தூய ஆவியானவர் தயாராய் இருக்கிறார். காரணம் அந்த நெருக்கமான பாதையில் நாம் சந்திக்கும் உலக நெருக்கங்கள் ஏராளமாய் இருக்கும். அவற்றோடான யுத்தத்துக்கு இறை வழிகாட்டுதல் வெகு அவசியம். இறையோடு நாம் இருக்கும் போது, யானை மீதிருக்கும் சிற்றெறும்பு போல நமக்கும் யானை பலம் கிடைத்து விடுகிறது. யுத்தம் இல்லாமல் சுதந்திரம் கிடைப்பதில்லை. ஆன்மீக சுதந்திரத்துக்கும் யுத்தம் அவசியமாகிறது. அது சஞ்சல மனதோடு நாம் செய்யும் யுத்தம்.

“மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது ( மத் 26 : 41 பொ.மொ ) ! அது பாவத்திற்குள் எளிதில் புகுந்து விடும். காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகைப் போல அது இலக்கில்லாமல் ஓடும். ‘இந்த ஒரு முறை மட்டும்’ என பாவம் ஆசை வார்த்தைகளோடு காத்திருக்கும். அந்த வழியில் செல்பவர்கள் ஏராளம். அதனால் அந்த வழியைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆட்டு மந்தை போல கணக்கில்லாமல் முன்னால் மக்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

அந்த வழி நமக்கு வேண்டாம், ஒரு முறை கூட வேண்டாம். ஆன்மீகத் தூய்மையே வேண்டும் என்பவர்கள் அபூர்வம். அழிந்து கொண்டிருக்கும் அபூர்வ விலங்குகளைப் போல அவர்களைக் கண்டுபிடிப்பதே பெரும் கடினம். அதனால் தான் அவர்கள் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாய் இருக்கிறது.

பாவம் வாசலில் உங்களைப் பல்லக்கு வைத்து அழைத்துச் செல்லும், தூய்மையோ அமைதியான, எளிமையான பாதையாய் உங்களுக்கு முன் இருக்கும். அதில் வசீகரம் இருப்பதில்லை, ஆனால் அதில் பயணிப்பவர்களுக்குத் தான் அதன் சுகமும், இன்பமும் தெரியும். தன்னை வெறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொள்ளாதவனால் அந்தப் பாதையில் நடக்க முடியாது. தனது சிலுவை என்பது தனது உலக விருப்பங்கள் அறையப்பட்ட சிலுவை என்பதே நிஜம்.

இந்திய சுதந்திரத்துக்காய் நாம் மகிழ்ச்சியடையும் இதே நேரத்தில் பாவ அடிமைத்தனத்துக்காக கண்ணீர் விடாவிட்டால் நமது கிறிஸ்தவ வாழ்க்கை அர்த்தமற்றதாய்ப் போய்விடும். இயேசுவுக்குள் சுதந்திரமாய் வாழவேண்டும் எனும் அதீத ஆர்வமும், இடைவிடாத போராட்டமுமே நம்மை சுதந்திரத்துக்குள் இட்டுச் செல்லும்.

என்னதான் சொன்னாலும் நான், அடிமையாய் தான் இருப்பேன் என அடம்பிடித்தால், இயேசுவுக்கு மட்டுமே அடிமையாய் இருப்பதென முடிவெடுப்போம்.அந்த அடிமைத்தனமே உண்மையான சுதந்திரம்.

தேசத்தின் விடுதலையைக் கொண்டாடுவோம்
தேகத்தின் விடுதலைக்காய் மன்றாடுவோம்

சேவியர்.

 

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்

மனோரமா இயர் புக் : Top 10 கணினி இதழ்கள்

கணினி இதழ்கள் :

 

 

 

 

 

 

கணினி யுகம் ஆரம்பமான காலத்திலிருந்து பல்வேறு கணினி இதழ்கள் வெளியாகத் துவங்கின. இன்று உலகெங்கும் நூற்றுக்கணக்கான கணினி ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பழைய மற்றும் புதிய சில கணினி இதழ்களின் அறிமுகம் இது.

1. பி.சி மேகசின் ( PC Magazine )

1982ம் ஆண்டிலிருந்தே வெளிவரும் கம்ப்யூட்டர் பத்திரிகை எனும் பெயர் இதற்கு உண்டு. 2009ம் ஆண்டு வரை அச்சு இதழாக வந்து கொண்டிருந்த இந்த இதழ் இப்போது இணைய இதழாக உருமாறியிருக்கிறது. www.pcmag.com என்பது இதன் இணைய தள முகவரி. நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம், மென்பொருள் வன்பொருள் குறித்த புதிய தகவல்கள், விமர்சனங்கள். மற்றும் வல்லுனர்களின் கட்டுரைகள் இதில் இடம்பெறுகிறது.

2. பைட் ( BYTE  )

கணினி உதயமான காலத்தில் முதலில் கால்பதித்த வெகு சில கணினி பத்திரிகைகளில் முக்கியமானது பைட். வாசிப்புக்குக் கொஞ்சம் கடினமான முழுக்க முழுக்க தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய பத்திரிகை இது. 1975ல் முதல் பதிப்பு வெளியானது. பல்வேறு மாற்றங்களுடன் 2011 வரை இதன் பெயர் இருப்பில் இருந்தது. தற்போது அது  http://www.informationweek.com/personal-tech/ எனும் தளத்துடன் இணைந்து இரண்டறக் கலந்து விட்டது.

3. பி.சி வேல்ட் (PC World )

சர்வதேச அளவில் பிரபலமான இன்னொரு கணினி பத்திரிகை பிசிவேர்ல்ட். 1982ல் முதல் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் வெற்றிகரமான இந்தப் பத்திரிகை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விருதுகளையும் அள்ளியிருக்கிறது. 2006ல் உலக அளவிலேயே அதிக அளவில் அச்சாகும் கணினிப் பத்திரிகை எனும் பெயருடன் 7. 5 இலட்சம் பிரதிகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது அது டிஜிடல் முகத்துக்குத் தாவி http://www.pcworld.com/ என இணையத்தில் முகம் காட்டுகிறது.

4. கம்ப்யூட்டர் வேர்ல்ட் ( Computer World )

1967ல் இருந்தே ஒரு கணினி இதழ் வெளியாகிறதெனில் அது இது தான். உலகின் முதல் கணினிப் பத்திரிகை என்பார்கள். மிகவும் பிரபலமான இந்த இதழ் மாதம் இருமுறையாக மலர்கிறது.  இதன் வடிவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளியாகின்றன. அச்சு, இணையம் என இரண்டு முகம் காட்டும் இந்த இதழை www.computerworld.com எனும் தளத்தில் சந்திக்கலாம்.

5. கிரியேட்டிவ் கம்ப்யூட்டிங் ( Creative Computing )

பழங்கால கணினி இதழ்களின் பட்டியலில் இதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. 1974 முதல் 1985 வரை இந்த இதழ் வெளியானது. புரோகிராம்களின் சோர்ஸ் கோட்-ஐ க் கொடுத்து அதை பயன்பாட்டாளர்கள் தங்கள் கணினியில் எழுதிப் பார்க்க வழி செய்தது இதன் சிறப்பு அம்சமாக இருந்தது. ஆனாலும் காலப் போக்கில் அதன் புகழ் மங்க நிறுவனம் இழுத்து மூடப்பட்டது !

6. வயர்ட் ( Wired )

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான கணினி பத்திரிகை வயர்ட். மென் வடிவிலும், அச்சு வடிவிலும் இந்தப் பத்திரிகை மிகப் பிரபலம். 1993ம் ஆண்டு துவக்கம் முதல் இந்த மாத இதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறது. www.wired.com எனும் இணைய தளத்தில் இதைக் காணலாம். இன்றைய பிரபல கணினிப் பத்திரிகைகளில் இதற்குத் தனி இடம் உண்டு.

7. மேக்ஸிமம் பி.சி Maximum PC

பூட் எனும் பெயரில் அறிமுகமாகி பிரபலமாய் இருக்கும் பத்திரிகை மேக்ஸிமம் பி.சி. http://www.maximumpc.com/ எனும் இணைய தளம் இந்தப் பத்திரிகைக்குரியது. தொழில்நுட்ப விஷயங்கள், பொருட்களின் தரமதிப்பீடு, தொழில்நுட்ப அலசல், வன்பொருட்களின் புதிய வருகை,என பல தரப்பட்ட விஷயங்களைக் கலந்து கட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது !

8. மேக் வேர்ல்ட் MacWorld

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் நிறைய உண்டு. அதில் மிகப் பிரபலமான பத்திரிகை இது. 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. மேக் லைஃப் எனும் பத்திரிகை இதன் போட்டியாளர் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதை விட இரண்டு மடங்கு அதிக சர்குலேஷனுடன் மேக்வேர்ல்ட் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. http://www.macworld.com என்பது இதன் இணைய தள முகவரி.

9. ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் Smart Computing

விமர்சகர்களின் தரவரிசையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் இதழ் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங். புதிய தொழில்நுட்ப விஷயங்களை வசீகரமான வகையில் தருவதில் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் இதழ் சிறப்பிடம் பிடிக்கிறது. http://www.smartcomputing.com/ என்பது இதற்கான இணைய தளம்.

10 பி.சி கேமர் PC Gamer

கணினி விளையாட்டுகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் ஏராளம் உண்டு. அதில் மிக முக்கியமானது பி.சி கேமர் எனும் மாத இதழ். 1993ன் இறுதியில் வெளியாகத் துவங்கிய பத்திரிகை இது. பல்வேறு நாடுகளில் இதன் வடிவங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. http://www.pcgamer.com/ என்பது இதன் இணையதள முகவரி.

 

 

நவீன ஆஞ்சனேயர் !!!

 Coral_Castle_3எட்வர்ட் லீட்ஸ்கால்னின் ஐந்து அடி உயரமும், வெறும் நாற்பத்து ஐந்து கிலோ எடையுமுள்ள மெல்லிய மனிதர். ஆனால் அவருக்குள் டன் டன்னாய் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

தனது 25வது வயதில் பட்டாம் பூச்சிக் கனவுகளுடன் பதினாறு வயதான ஆக்னஸ் எனும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் பாவம், திருமணத்துக்கு முந்தின நாள் ராத்திரி “மாப்பிள்ளை புடிக்கலை” என்று சொல்லி பெண் எஸ்கேப்.

எட்வர்ட் மனசில் அந்த தேவதை சிறகடித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் அமெரிக்காவிலுள்ள புளோரிடா பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினார். அங்கே அதி பயங்கர எடையுள்ள பவளப் பாறைகள் இருந்தன.

தனி ஆளாக அந்தப் பவளப் பாறைகளில் சிற்பங்கள் செய்யத் துவங்கினார் எட்வர்ட். பெரிய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சின்னச் சின்ன கருவிகள் மட்டும் தான். அந்த பவளப் பாறைகளினாலேயே ஒரு வீடையும் கட்டி ராக் கேட் பார்க் என அதற்குப் பெயரிட்டார். எப்போதோ தன்னை உதறிச் சென்ற ஹீரோயினுக்கு அந்த இடத்தையும் டெடிகேட் செய்தார்.

Coral_Castle_2ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இந்த பாறைகளை எப்படி புரட்டினார், நகர்த்தினார், உடைத்தார், தூக்கினார் என்பதெல்லாம் வியப்பான ரகசியங்கள். அதைவிடப் பெரிய ரகசியம் அத்தனை பாறைகளையும் ஒற்றை அனுமனாக தூக்கிக் கொண்டு போய் இன்னொரு இடத்தில் வைத்தார் என்பது தான்.

“எப்படிங்க இவ்ளோ எடையை தூக்கியிருக்கீங்க ? வெட்டியிருக்கீங்க ? “ என ஆச்சரியத்துடன் கேட்டால், “சீக்ரெட் தெரிஞ்சா இதெல்லாம் ஜுஜூபி மேட்டர் தான்” என்பார்.

தனது 64வது வயதில் 1951ல் எட்வர்ட் மரணமடைந்தார். அவருடைய பாறை ரகசியங்கள் இன்னும் உடைபடாமல் உறுதியுடனே இருக்கின்றன.

ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Ghost (9)

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப் பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே” கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொருவகை. மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

“நிறைவேறாத ஆசை” பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் “மெசெஞ்சர் பேய்கள்”. நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை. பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது. சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், “ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார்” என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய். சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்துவிட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் “பாதுகாக்கும் ஏஞ்சல்ஸ்” முக்கியமானவை. இவை ஒவ்வொருவருடைய தோளிலும் அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம். பல நேரங்களில் “மயிரிழையில்” தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க யாருமின்றி இறந்து போனால், அவர்கள் ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்.

பேய்களிலேயே இத்தனை வகையா… அடேங்கப்பா !

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !

technology-how-to-take-great-photos-on-y

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.

அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.

இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

x

நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…

மைக்கேல் ஜாக்சன் மரணம்

m5

தனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அவர் மரணமடைந்த ரொனால்ட் ரீகன் மெடிக்கல் செண்டரின் தலையை பல நியூஸ் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன, மருத்துவமனை வீதி ரசிகர்களின் விழும்பல்களால் நிரம்பி வழிகிறது.

வெற்றிகள், சர்ச்சைகள், மகிழ்ச்சி, சோகம், இயலாமை, நிராகரிப்பு என எல்லாவிதமான உணர்வுகளின் பாதைகளுக்குள்ளும் நடைபயின்று வந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் பயணம்.

ஐந்தாவது வயதில் வறுமையின் கருப்புப் பிடியில் தனது நான்கு சகோதரர்களுடன் இணைந்து பாடல்கள் பாட ஆரம்பித்த மைக்கேல் பின்னாளில் உலகையே தனது மந்திர அசைவுகளாலும், இசையினாலும் ஆட்டிப் படைப்பார் என அவரே நினைத்துப் பார்த்திருக்க சாத்தியமில்லை.

m4சகோதரர்களுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் நடத்திய ஜான்சன் 5 – இசைப்பயணத்திலேயே முத்திரை பதித்த ஜாக்சன், 1972ம் ஆண்டு தனியே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1982ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் தான் அவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது. இது அவர் தனியே வெளியிட்ட ஆறாவது ஆல்பம்.

750 மில்லியன் இசை ஆல்பங்களை விற்றுத் தீர்த்த சாதனை படைத்தவை தான் இவரது இசை.

இசையில் எவ்வளவு புகழோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் புகழ்பெற்றவராகவே இருந்தார் மைக்கேல் ஜாக்சன். சிறுவர்களுடன் தகாத உறவு வைத்திருந்தார் என அவர் மீது பல குற்றச் சாட்டுகள். இரண்டு முறை பிரச்சினை பூதாகரமாகி நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.

எனினும், கலைஞர்களுக்கே உரித்தான இளகிய மனசு மைக்கேல் ஜாக்சனுக்குள்ளும் இருந்தது. தனது வாழ்நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் மனிதநேயப் பணிகளுக்காகச் செலவிட்டு, உலகிலேயே அதிக பணம் செலவிட்ட பாப் பாடகர் எனும் கின்னஸ் பதிவையும் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

புகழின் வெளிச்சம் செல்லுமிடமெல்லாம் படர்ந்தாலும் தனது குழந்தைகளை வெளிச்சத்தில் விழாமலேயே வளர்த்த சாதுர்யமும் மைக்கேல் ஜாக்சனுக்கு இருந்தது.

புனைக்கதைகளுக்கே உரிய சுவாரஸ்யத் தகவல்களால் நிரம்பி வழிந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை.

ஒரு ஆக்சிஜன் சேம்பருக்குள் படுத்து புத்துணர்வு பெற்றுக் கொள்வார் என பரபரப்புச் செய்தி ஒரு காலகட்டத்தில் வேகமாய் பரவியது, யானை மனிதனுடைய எலும்புகளை வாங்கினான் என இன்னொரு முறை கதைகள் பரவியது. எவை உண்மையோ பொய்யோ மைக்கேல் ஜான்சனும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதில்லை “ முழு உடலையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இந்த நிறம் வந்ததா ? “ எனும் கேள்விக்கு “தோல் வியாதி” என சீரியசாய் சொன்னர் ஒருமுறை.

மைக்கேல் ஜாக்சனின் இசை இழைகளை ஏகத்துக்கும் காப்பியடித்திருக்கிறார்கள் நமது இசையமைப்பாளர்கள். கூடவே அவரது நடன அசைவுகளும் பலருக்கு இன்ஸ்பரேஷனாய் இருந்திருக்கிறது.

m2

இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கலைஞனுடைய நின்று போன இதயத்தின் மௌனமும் ஒரு சோக இசையாகவே வழிகிறது மனசின் மையத்தில்.

தமிழிஷில் வாக்களிக்க…

“ஹேர் டை” : ஆபத்தாகும் அழகுப் பொருள் !

 215 வயதான கர்லா ஹேரிஸ் க்கு நடனப் போட்டியில் கலந்து கொள்ளும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இரண்டொரு நாளில் நடனப் போட்டி. போட்டியில் அழகாய் தெரிய வேண்டும் எனும் உந்துதலால் தனது அழகிய நேரான கூந்தலுக்கு கொஞ்சம் வர்ணம் சேர்க்க விரும்புகிறாள் சிறுமி கர்லா.

லோரியல் நிறுவனத்தின் தயாரிப்பான கூந்தல் நிறமியை வாங்கி வருகிறாள். லோரியல் என்பது பாரிசை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் உலகிலேயே மிகப் பெரிய அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டுக்கு வந்து, தனது தலையில் கொஞ்சமாய் தலையில் அந்த “ஹேர் டை” யை தேய்க்கிறாள். கொஞ்சம் எரிச்சல், அரிப்பு வருவது போலத் தோன்றுகிறது. ஏன் அரிக்கிறது என யோசித்துக் கொண்டே தனது வேலையை முடித்துக் கொள்கிறாள்.

இரவில் நிம்மதியாய் தூங்கி, மறுநாள் காலையில் உற்சாகமாய் எழும்பிய சிறுமி, தனது பல வண்ணக் கூந்தல் எப்படி மிளிர்கிறது என கண்ணாடியில் பார்த்தபோது அதிர்ந்து போகிறாள். அவளுடைய முகம் ஒரு பூசணிக்காய் போல வீங்கியிருக்கிறது. !!

அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தையும் தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கின்றன என்பதற்கான ஒரு சிறு உதாரணம் தான் மேற்கூறிய இந்த நிகழ்வு.

அந்த ஹேர் டை யில் நச்சுப் பொருளான PPD எனும் வேதியல் பொருள் இருந்ததே இந்த ஒவ்வாமைக்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. இந்த பொருள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.1

 

உலகின் மாபெரும் நிறுவனத்தின் பொருட்களிலேயே இந்த விஷத் தன்மை இருக்கிறதெனில் மற்ற பொருட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் என அதிர்ந்து போயிருக்கின்றனர் விஷயம் கேள்விப்பட்டோர்.

வெறுமனே வீக்கம் வந்துவிட்டு விலகிப் போகும் சமாச்சாரம் என்று இதை தள்ளி விட முடியாது. இந்த வீக்கம் பெரிதாகி நாக்கு, தொண்டை போன்றவை அளவுக்கு அதிகமாகி வீங்கி விட்டால் உயிருக்கே ஆபத்து என்பது அச்சுறுத்தும் உண்மையாகும்.

” விஷப் பொருள் இருக்கிறது என்று தெரிந்தும் அதை அனுமதிப்பது என்பது அந்த நிறுவனத்தை நம்பும் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் செயல். இனிமேல் என் வாழ்நாளில் ஹேர் டை எனும் பேச்சுக்கே இடமில்லை” என கலங்கிப் போய் கூறுகிறாள் சிறுமி.

ஹேர் டை உபயோகிப்பவர்களில் 7.1 விழுக்காடு மக்களுக்கு ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுவதாக 2007ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இந்த அழகுப் பொருட்களிலெல்லாம் எந்த அச்சுறுத்தலும் இல்லை, மக்கள் இதைத் தைரியமாகப் பயன்படுத்தலாம் என லோரியல் நிறுவனம் தனது மறுப்பில் தெரிவித்துள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் நிகழ்வுகளைப் பொதுமைப் படுத்தக் கூடாது என்பது அவர்களின் வாதம். எனில் எதையும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது நமது விருப்பம் !

 

 

 

இந்த எஸ்.எம்.எஸ்-ஐப் படித்தால் மரணம் நிச்சயம் !!! கதையல்ல நிஜம்!!!

sms

எஸ்.எம்.எஸ் ஐ வாசித்தால் முதலில் தலை வலி வருகிறது. பின் அந்த வலி மிகக் கடுமையான வலியாக மாறி மூளையில் இரத்தக் கசிவை உருவாக்கி விடுகிறது. மூளையில் ஏற்படும் இந்த இரத்தக் கசிவு உயிரையே பறித்துக் கொள்கிறது.

இது மர்மக் கதையோ, அறிவியல் புனைக் கதையோ இல்லை உண்மை சம்பவம் என அடித்துச் சொல்கின்றனர் சிலர்.

இந்த பரபரப்பான செய்திகள் உலவிக் கொண்டிருப்பது எகிப்திலும், சவுதி அரேபியாவிலும்.

இந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் இப்போதெல்லாம் எந்த எஸ்.எம்.எஸ் வந்தாலும் படிக்காமலேயே அழித்து விடுகின்றனராம். எஸ்.எம்.எஸ் வருமோ எனும் பயத்திலேயே கழிகிறதாம் பலருடைய வாழ்க்கை.

எகிப்திய அரசும், நலவாழ்வுத் துறை அமைச்சகமும் இப்படிப்பட்ட வதந்திகளை நம்பவேண்டாம் என மக்களை அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால் மறைமுகமாக எகிப்திய காவல்துறை இந்தக் கதையின் பின்னணியை தீவிரமாய் ஆராய்ந்து வருகிறதாம்.

முன்பெல்லாம் பதினைந்து காசு அஞ்சலட்டையில் நமக்கு கடிதங்கள் வரும். இந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்து பதினைந்து பேருக்கு அனுப்பாவிடில் உன் தலை சுக்கு நூறாகவோ நூற்று ஐம்பதாகவோ உடைந்து விடும் என.

பள்ளிக்கூட நாட்களில் இப்படிப் பட்ட கடிதங்கள் வந்ததனால் மிரண்டு போய் ஒளித்து ஒளித்து கடிதம் எழுதிய நண்பர்கள் பலர் எனக்கும் இருந்தார்கள்.

பதின் வயதுகளில் எனக்கு அப்படி வந்த முதல் கடிதத்தை கிழித்துப் போடும் போது எனக்குள்ளும் சிறு பயம் இருக்கத் தான் செய்தது ! பின் அது வேடிக்கையாய் மாறி, யாருக்கு அப்படிப்பட்ட கடிதம் வந்தாலும் என்னிடம் கொண்டு வந்து கிழிக்கச் சொல்வார்கள். பள்ளிக்கூடத்தில் என்ன கிழிச்சேன் என்பதற்கு ஒரு பதில் இதுவாகவும் இருக்கலாம் என்பது எனது பள்ளிக்கூட சுவாரஸ்ய நினைவுகள்.

அஞ்சலட்டை என்பது, மின்னஞ்சலாகி, இப்போது எஸ்.எம்,எஸ் ஆகி இருக்கிறது. ஆவிகளைக் குறித்தும், வேற்றுக் கிரக வாசிகளைக் குறித்தும் கதை எழுதப் பிரியப்படுபவர்களுக்கு நல்ல தீனி… வெறென்ன சொல்ல ?

ஐயா vs அய்யா : இது அரசியல் பதிவல்ல !

 

tamilஇன்று தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது எங்கும் எதிலும் “அய்யா” மற்றும் “சின்ன அய்யா” வாசகங்கள்.

ஐயா என்று அழைப்பது பிழை என்று கருதி “அய்யா” என அழைக்கிறார்களா என்பது புரியாமல் குழம்பியதால்,
கூடவே பயணித்த நண்பனிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“ஒருவேளை நேமாலஜியாய் இருக்குமோ” என எனக்கு ஒரு கேள்வியையே பதிலாய் சொல்லி மேலும் குழப்பத்திலாழ்த்தினான்.  ( ஐயா படம் எடுத்த ஹரியிடம் கேட்டிருக்க வேண்டுமோ ? )

சின்ன வயதில் “ஐ” என்னும் வார்த்தை சுத்த உயிரெழுத்து, மெய்யாலுமே மெய் கலக்காதது என்றெல்லாம் பெருமையாய் படித்திருக்கிறேன். அந்த ஐ –க்கு இப்படி ஒரு நிராகரிப்பு நிகழ்ந்து விட்டதே என எனது ஐ கலங்கி கண்ணீர் வந்து விட்டது. அய்!!!!

அப்புறம் எனக்குள் ஒரு “ஐ”(அய்?)யம் எழுந்தது.

ஒருவேளை “ஐ” என்பது “ஜ” போல தோன்றுவதால் இதுவும் வடமொழிச் சொல் என நினைத்தார்களோ தமிழ் ஆர்வலர்கள் ? 

போன் கிடைத்தால் மக்கள் தொலைக்காட்சி தமிழ் அறிஞரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

காலையிலிருந்து ஐ(அய்?)ந்து மணி வரை யோசித்தும் ஒன்றும் பிடிபடாததால் வலையுலக தமிழ் தலைகளிடம் கேட்கலாம் எனும் யோசனையில் இங்கே பதிவிடுகிறேன்.

ஐயிரண்டு என்பது பத்து என்பது மாறி இப்போது ஐ-இரண்டு மீன்ஸ் கண் இரண்டு தானே என பதின் வயதுகள் கேட்கும் காலம் இது. ஐயய்யோ …. இருக்கிற ஒரு ஐயும் போகுமோ எனும் கவலையும் எழாமல் இல்லை 🙂

எனினும், போஸ்டர் அடிக்கும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கவனமாக எழுத்தை அடியுங்கள். குறில் நெடிலை கவனத்தில் கொள்ளுங்கள். !