ஊனம் தடையல்ல

 மோசமான குணாதிசயம் தவிர ஊனம் வேறு இல்லை 
 – ஸ்காட் ஹேமில்டன். 

ஏதேனும் சின்னக் குறைபாடு இருந்தால் கூட அதைச் சுட்டிக் காட்டி தனது தோல்வியையோ, சோம்பேறித்தனத்தையோ நியாயப்படுத்தும் மக்கள் நம்மைச் சுற்றி ஏராளம் ஏராளம். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடல் ஊனம் ஒரு பொருட்டே அல்ல !

பேராசிரியர் ஸ்டீபன் ஹாப்கின்ஸ் பற்றித் தெரியவில்லையென்றால் உங்களுக்கு அறிவியல் அலர்ஜி அன்று அர்த்தம். சமகால அறிவியலார்களில் வியப்பின் குறியீடாக இருப்பவர் இவர். இவருடைய “எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகம். உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை இதை “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனும் பெயரில் அற்புதமாய் தமிழ்ப் படுத்தியும் இருக்கிறது.

இதைத் தவிரவும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். பிரபஞ்சத்தைப் பற்றியும், உலகத்தின் தோன்றல் போன்றவை பற்றியும் இவர் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. இதில் வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால் இவருக்கு இருக்கும் நோய் தான்.

1942ம் ஆண்டு இவர் பிறந்தார். அவருடைய 21வது வயதில் இவருக்கு ஒரு மிகப்பெரிய நரம்பு சார் நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவருடைய நோய் அமியோட்ரோபிக் லேட்டரல் செலரோஸிஸ் (amyotrophic lateral sclerosis ) அதாவது உடல் மொத்தமும் செயலிழந்து போகும் நிலை.

இவரால் மூன்று சக்கர வாகனத்தை விட்டு எழும்ப முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. தலையை அசைக்கலாம். பேசுவதற்குக் கூட மைக் தேவைப்படும் ! தனது 21ம் வயதிலேயே இந்தக்  கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டார் இவர். “இன்னும் ரெண்டே வருஷம் தான்” என்று அவருக்கு டாக்டர்கள் கெடு விதித்தார்கள்.

இன்று அவருக்கு 70 வயது ! மரணத்தை வென்றது மட்டுமல்லாமல் அறிவியலையும் அறிந்து உலகையே வியக்க வைத்தார் இவர். 2009ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருதான “பிரசிடன்ஷியல் மெடல் ஆஃப் பிரீடம்” வழங்கப்பட்டது ! தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகட்த்தின் ஒரு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குனராக இருக்கிறார்.

அறிவியல் உலகை இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கும் மாமேதையான ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்க்கு அவருடைய குறைபாடு எப்போதாவது தடைக்கல்லாய் இருந்திருக்குமா ?

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ, கோபம் கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை நன்றாகவே வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் துவங்கினால் வாழ நேரம் கிடைக்காது” எனும் அவருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ள தன்னம்பிக்கை வாசகங்கள் உயிரை உலுக்குகின்றன.

ஊனம் உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை. அவர்கள் இன்னொரு ஏரியாவில் மிகவும் பலமானவர்களாக இருப்பார்கள். உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பதில்லை. சோதனைகளைத் தரும் இறைவன் அதைத் தாங்கும் மன உறுதியையும் சேர்த்தே தருகிறார். அதை நம்பிக்கையோடு பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே நமது பணி.

நிக் வாயிச்சஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? 1982ம் ஆண்டு அவர் பிறந்தார். துயரம் என்னவென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கிடையாது, இரண்டு கால்களும் கிடையாது. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும்.

ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் “லைஃப் வித்தவுட் லிம்ப்” எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?

தனக்கு ஊனம் இருக்கிறது என நினைப்பது மட்டுமே ஊனம். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்.

சிரியுங்கள்

புனிதர்களோடு அமர்ந்து அழுவதை விட  பாவிகளோடு சேர்ந்தாவது 
சிரிப்பதையே விரும்புவேன்  –  பில்லி ஜோயல்

சிலர் சிரிப்பதற்குக் காசு கேட்பார்கள். உம்மணாமூஞ்சிகள் என அவர்களுக்கு ஒரு செல்லப் பெயரை வைத்து உலகம் அழைக்கும். சிலரோ சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சிரிப்பு ஒரு அற்புதமான விஷயம். என்ன செய்ய, இன்றைய நாகரீக உலகில் பல வேளைகளில் சிரிப்பதே கூட அநாகரீகமாய் பார்க்கப்படுகிறது !

கிராமங்களிலுள்ள கல்யாண வீடுகளைப் போய்ப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து சிரியோ சிரியென சிரித்து மகிழ்வது வெகு சகஜமாகக் காணக் கிடைக்கும் காட்சி. ஆனால் நகர்ப்புறத்தில் அது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே ஒரு சின்ன சத்தம் எழுந்தால் கூட  “சத்தம் போடாதேப்பா, மெதுவா மெதுவா” என ஏதோ தீவிரவாதிகளில் ரகசியத் திட்டம் போலத் தான் பேசிக்கொள்கிறார்கள்.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது. வஞ்சகமில்லாமல் சிரித்து வாழ்பவர்களுக்கு எண்டோதெலியத்தை ஆரோக்கியமாக்குகிறது. இரத்தக் குழாய்கள் சீராக இயங்குகின்றன என்பதெல்லாம் மருத்துவ உலகம் சொல்லும் ஆராய்ச்சி விளக்கங்கள்.

ஏதோ சிரிப்பது மனம் சார்ந்த விஷயம் என எட்டியே நிற்பவர்கள் கொஞ்சம் பக்கம் வாருங்கள். சிரிப்பதால் உடல் ஆரோக்கியம் தான் கணிசமாக ஏறுகிறது. மூளைக்கு அதிக ஆக்சிஜன் ஏற்றுமதியாகி, மூளை சட்டென சுறுசுறுப்பாகிறது. உடல் தசைகள், முக தசைகள் போன்றவை மிகவும் ஆரோக்கியமாக விளங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அப்படியே உடலுக்குள்ளும் பாய்ந்து ஒட்டுமொத்த உடலையுமே ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது.

சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

நிறுவனங்கள் இப்போது சிரிப்பு விஷயத்தைச் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்தால் தான் வேலை நன்றாக நடக்கும் என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் அவை ஊழியர்களுக்கென சிரிப்பு மூட்டும் கிச்சு கிச்சு நிகழ்ச்சிகளையும், கிச்சு கிச்சு பொழுதுபோக்கு அம்சங்களையும் நடத்துகின்றன.

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார்.

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது.

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்பு தனி மனித பயன் என்பதையும் தாண்டி வேலை சார்ந்த விஷயங்களிலும் ஊழியர்களை மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கிறது என்பது ஸ்பெஷல் செய்தி. சிரிப்பை அதிகம் நேசிப்பவர்கள் அதிக சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. இதன் மூலம் வேலையில் முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவையான கிரியேட்டிவிட்டி, புதுமைச் சிந்தனை போன்றவற்றை தூசு தட்டி சரிப்படுத்தும் வல்லமையும் சிரிப்புக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதற்கும், அடுத்த நபரை உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கும் கூட இந்த சிரிப்பு ரொம்பவே பயனுள்ளதாய் இருக்கிறது. கூடவே ஒரு பாசிடிவ் வேலைச் சூழலை இத்தகைய உற்சாகமான சிரிப்பு தருகிறது !

எனவே, சிரிப்பு ஒரு சீரியஸ் சமாச்சாரம் என்பதை மனதில் எழுதுங்கள்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

kvr5

ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.

“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”

” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.

“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.

சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.

” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள்.  அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்”  குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குரு கடைசியாகச் சொன்னார்,

“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”

குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.

குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.

தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.

அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு க‌ண‌வ‌னின் க‌ன‌வு அன்பு என்ப‌தைத் த‌விர‌ வேறு என்ன‌வாக‌ இருக்க‌ முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புக‌ளைக் கூட‌ அவ‌ன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு க‌ரை புர‌ண்டு ஓடினால் போதும்.

பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.

விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் ம‌னைவி வேண்டும் என்ப‌து ஆண்க‌ளின் க‌ன‌வுக‌ளில் முக்கிய‌மான‌து.

ஆணும் பெண்ணும் இர‌ண்டு சிற‌குக‌ளாக‌ மாறி குடும்ப‌ம் உட‌லைச் சும‌ந்து செல்ல‌ வேண்டும். ஆணும் பெண்ணும் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளாக‌ மாறி நாண‌ய‌த்துக்கு ம‌திப்பு கூட்ட‌ வேண்டும். ப‌க‌லின் வெப்ப‌மாய் ஆண் மாறும் போது, இர‌வின் த‌ண்மையாய் பெண் மாற‌ வேண்டும். வெப்ப‌மாய் பெண் மாறினால் நில‌வாய் ஆண் மாற‌ வேண்டும். இப்ப‌டி இணைந்து ப‌ய‌ணிக்கும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள் போல‌ இணைந்தே திரியும் ஒரு அற்புத‌ வாழ்க்கை க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் சிற‌ப்பிட‌ம் பிடிக்கும்.

பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.

1

நேர‌டியாக‌ எதையும் பேசுவ‌து ஆண்க‌ளின் இய‌ல்பு. பாத்திர‌த்தின் ச‌த்த‌த்திலோ, க‌த‌வை சாத்தும் வேக‌த்திலோ, பிள்ளைக‌ளைத் திட்டும் வார்த்தைக‌ளிலோ கோப‌த்தைக் காட்டுவ‌து பெண்க‌ளின் இய‌ல்பு. எதையும் நேர‌டியாக‌ப் பேசும் நிலைக்கு த‌ன‌து ம‌னைவி வ‌ர‌வேண்டும். அதுவும் க‌ண்க‌ளில் அன‌லோடு வ‌ராம‌ல் நிழலோடு வ‌ர‌வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் நிச்ச‌ய‌ம் உண்டு.

2

ப‌க்க‌த்து வீட்டுக் க‌தைக‌ளிலிருந்தோ, சீரிய‌லில் வ‌ரும் குடும்ப‌ங்க‌ளிலிருந்தோ, தூர‌த்துச் சொந்த‌க்கார‌னின் ப‌ஜ்ஜி உரையாட‌ல்க‌ளிலிருந்தோ, அம்மாக்க‌ளின் உர‌ச‌ல்க‌ளில் இருந்தோ அடுத்த‌ ச‌ண்டைக்கான‌ நெருப்பை ம‌னைவி பெற்று விட‌க் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத‌ ம‌னித‌ன் இருக்க‌ முடியுமா ?

3

” ப‌திலை ந‌ம்ப‌ப் போவ‌தில்லை” எனும் முடிவுட‌ன், “ஏங்க‌ லேட்டு…” என‌க் கேட்கும் ம‌னைவிக்குப் ப‌தில் சொல்லும் உல‌க‌ ம‌கா ச‌ங்க‌ட‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ வேண்டும் எனும் க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் இருக்க‌ முடியுமா ?

4

ந‌ம‌க்கு ம‌ட்டும் ஏன் ம‌ற‌தியை ஆண்ட‌வ‌ன் கொடுத்தான். பெண்க‌ளுக்கு ம‌ட்டும் ஏன் ஞாப‌க‌ ச‌க்தியை அள‌வுக்கு அதிக‌மாக‌ கொடுத்தார். “கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை உட‌னே ம‌ற‌ந்து ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ம‌ன‌சுல‌ வெச்சுக்க‌ மாட்டாளா” என் ம‌னைவி ? எனும் க‌ன‌வில்லாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

5

வீட்டுக்காக‌, ம‌னைவிக்காக‌ என்ன‌ செய்தாலும் ஒரு சின்ன‌ பாராட்டு கூட‌ கிடைக்க‌ மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன‌ த‌ப்பு ப‌ண்ணினா கூட‌ போஸ்ட‌ர் அடிச்சு ஒட்டாத‌ குறையா ச‌ண்டை ந‌ட‌க்குது. எப்போ ந‌ம்ம‌ ம‌னைவி நாம‌ ப‌ண்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பாராட்ட‌ப் போறாங்க‌ ? எனும் க‌ன‌வு வ‌ராம‌ல் போகுமா என்ன ?

6

பிள்ளைங்க‌ள‌ பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா அம்மாவைப் பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா தோழிக‌ளைப் பாக்க‌ வேண்டிய‌து. ஒண்ணும் இல்லேன்னா சீரிய‌லைப் பாக்க‌ வேண்டிய‌து. எப்போ தான் ந‌ம்ம‌ ம‌னைவி ந‌ம்மைப் பார்ப்பாங்க‌ எனும் எதிர்பார்ப்பு க‌ல‌ந்த‌ க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் யார் ?7

தாம்ப‌த்ய‌ம் என்ப‌து ஆன‌ந்த‌த்தின் ப‌கிர்த‌ல். அது வ‌லுக்க‌ட்டாய‌மாய் எழுதி வாங்கும் உயில்ப்ப‌த்திர‌ம் அல்ல‌. அதில் உட‌ல்க‌ளை விட‌ அதிக‌ம் உண‌ர்வுக‌ள் பேச‌ வேண்டும். அதை ஒரு ஆயுத‌மாக‌வோ, ப‌ழி வாங்கும் யுத்தியாக‌வோ ம‌னைவி ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூடாது எனும் க‌ன‌வு க‌ண‌வ‌னுக்கு இல்லாமல் போகுமா.

8

என்னை புரிஞ்சுக்க‌வே மாட்டீங்க‌” என‌ ம‌னைவியின் குர‌ல் ஒலிக்காத‌ வீடுக‌ள் இருக்க‌ முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள‌வில்லை என்றே ம‌னைவிக‌ள் சொல்வார்க‌ள். புரிந்து கொள்வ‌து என்ப‌து அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை, சொல்வ‌த‌ற்கெல்லாம் ஆமாம் போடுவ‌து. இந்த‌ நிலை மாற‌ வேண்டுமென‌ ப‌க‌ல் க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டோ ?

9

ந‌ன்றி என்ப‌து ரொம்ப‌ காஸ்ட்லி விஷ‌ய‌மா என்ன‌ ? ஒரு சின்ன‌ ந‌ன்றி கூட‌ சொல்ல‌ மாட்டாங்க‌ளா ந‌ம்ம‌ மனைவி என‌ புல‌ம்பாத( ம‌ன‌துக்குள் தான் ) க‌ண‌வ‌ன் யார் ? ம‌னைவி ந‌ம் செய‌லுக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டுமென‌ க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

10

நாம் எடுக்கின்ற‌ முய‌ற்சிக‌ளுக்கு ஊக்க‌மும், ஆத‌ர‌வும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌ன்க‌ளின் க‌ன‌வுக‌ளில் ஒன்று. அப்ப‌டி முழு ஆத‌ர‌வு கிடைக்காவிட்டால் கூட‌ குத‌ர்க்க‌மாய்ப் பேசி எரிச்ச‌ல‌டைய‌ச் செய்யாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌க் க‌ன‌வு தானே !

இப்படி எல்லா க‌ண்க‌ளிலும் க‌ன‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌, அந்த‌க் க‌ன‌வுக‌ள் ப‌லிப்ப‌தும் ப‌லிக்காத‌தும் ம‌னைவிய‌ரின் க‌டிவாள‌த்தில் அட‌ங்கியிருக்கின்ற‌ன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?

ச‌ரி, ம‌னைவிய‌ரின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாம‌லேயே உங்க‌ளுக்குத் தெரியும். அப்புற‌மென்ன‌ ? க‌ன‌வுக‌ள் தொட‌ர‌ வாழ்த்துக‌ள்.

*

நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி & லண்டன்

ஊனமாக்கும் ஊடகங்கள் ( Vettimani Magazine : London )

Media

 

 

சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.

சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா ?

பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது ச‌மூக‌ம் அவ‌மான‌ப்ப‌டுகிற‌து.

டெல்லியில் கூட்டுப் பாலிய‌ல் வ‌ன்முறை ஒரு பெண்ணின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ போது இந்திய‌ தேச‌ம் கொந்த‌ளித்த‌து. வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ எத்த‌னையோ ஆயிர‌ம் இத்த‌கைய வ‌ன்கொடுமைக‌ள் இந்தியாவின் ஒவ்வோர் மாநில‌த்திலும் ந‌ட‌ந்து கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. ச‌மீப‌த்தில் இல‌ங்கையில் ஒரு ப‌தின் வ‌ய‌துச் சிறுமியின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கூட்டு பாலிய‌ல் வெறியாட்ட‌ம் ஆன்மாக்க‌ளை அதிர‌ வைத்திருக்கிற‌து. ம‌ல‌ரினும் மெல்லிய‌ள் என‌ க‌விதையில் பெண்ணைப் பாராட்டி விட்டு, மோக‌த்தின் பூட்ஸ் கால்க‌ளால் அவர்களை ந‌சுக்குவ‌தைக் காண்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்றே இத‌ய‌ம் க‌த‌றுகிற‌து.

த‌ன் ச‌கோத‌ரிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ கொடுமை க‌ண்டு ப‌த‌றித் த‌விக்க‌ வேண்டிய‌ ச‌மூக‌ம் அதை ப‌ட‌மெடுத்து ஃபேஸ் புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளாக‌வோ, வாட்ஸப் த‌க‌வ‌ல்க‌ளாக‌வோ அனுப்பிக் கொண்டிருக்கிற‌து. வ‌ன்கொடுமை ந‌ட‌ப்ப‌தைக் க‌ண்ட‌தும் ப‌த‌றிப் போய் த‌டுக்க‌ வேண்டிய‌ கைக‌ள் இன்று ஸ்மார்ட் போன்க‌ளில் ப‌ட‌ம் பிடிப்ப‌தையே முத‌ல் வேலையாய்ச் செய்கின்ற‌ன‌. புலிக் கூட்டில் விழுந்து விட்ட‌ வாலிப‌னை மீட்காம‌ல் அவ‌னை புலி என்ன‌ செய்கிற‌து என‌ ப‌ட‌ம் எடுத்துக் கொண்டிருந்த‌ அவ‌மான‌ச் ச‌மூக‌ம‌ல்லவா இது !

அதைத் தான் ஊட‌க‌ங்க‌ளும் செய்கின்ற‌ன‌. வ‌ன்கொடுமைக்கு ஆளான‌ ச‌கோத‌ரியை அவ‌ளுடைய‌ வ‌ர‌லாறை முழுக்க‌ முழுக்க‌ ப‌திவு செய்தும், திரும்ப‌த் திரும்ப‌ அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளைக் காட்டியும், குறுப்படங்களில் தலைகுனிய வைத்தும், மேலும் மேலும் அவ‌ளை அழித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌. துபாய் போன்ற‌ நாடுக‌ளில் ஒரு விப‌த்துப் ப‌ட‌த்தைக் கூட‌ ப‌த்திரிகையில் போட‌ அனும‌தி இல்லை. ஆனால் சுத‌ந்திர‌த்தில் திளைக்கும் ந‌ம‌து தேச‌ங்க‌ள் தான் “பிரேக்கிங் நியூஸ்” போட்டுப் போட்டு ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் குடும்ப‌த்தின‌ரை மீளாத் துய‌ர‌த்தில் இற‌க்கி விடுகின்ற‌ன‌.

அத்துட‌ன் ஊட‌க‌ங்க‌ள் நிற்ப‌தில்லை. “இந்த‌ வ‌ன்கொடுமைக்கு அந்த‌ப் பெண் அணிந்திருந்த‌ மிடி தான் கார‌ண‌மா ?” என‌ நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு விவாத‌ம் எனும் பெய‌ரில் ச‌மூக‌ம் இழைத்த‌ கொடுமைக்கு அந்த‌ப் பெண்ணையே குற்ற‌வாளியாக்கியும் விடுகின்ற‌ன‌ர். வெட்க‌ம் கெட்ட சில த‌லைவ‌ர்க‌ள் “பெண்கள் த‌வ‌றிழைக்க‌த் தூண்டினால் ஆண்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்” என‌ குரூர‌ப் பேட்டிக‌ளையும் த‌வ‌றாம‌ல் கொடுக்கின்ற‌ன‌ர்.

ஒரு பெண்ணை ச‌கோத‌ரியாக‌வோ, ம‌க‌ளாக‌வோ, தாயாக‌வோ பார்க்க‌த் தெரியாத‌ ம‌னித‌ன் இந்த‌ பூமியின் சாப‌க்கேடு. அத்த‌கைய‌ பிழைக‌ளுக்கு ஒத்து ஊதும் த‌லைவ‌ர்க‌ள் ம‌னுக்குல‌த்தின் வெட்க‌க்கேடு.

ஒரு அதிர‌டியான‌த் த‌க‌வ‌ல் த‌ங்க‌ள் ஊட‌க‌த்தின் வீச்சை அதிக‌ரிக்கும், ரேட்டிங்கை எகிற‌ச் செய்யும் என்ப‌த‌ற்காக‌ ம‌னிதாபிமான‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்து விட்டு நாள் முழுதும் நீட்டி முழ‌க்கும் ஊட‌க‌ங்க‌ள் ச‌ற்றே நிதானித்துச் சிந்திக்க‌ வேண்டும்.

த‌ங்க‌ளுடைய‌ நோக்க‌ம் கொடுமை இழைக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நீதி வ‌ழ‌ங்க‌ வேண்டும் எனும் நோக்கில் இருக்கிற‌தா ? இல்லை ஊட‌க‌த்திற்குத் தீனி போட‌வேண்டும் எனும் நிலையில் இருக்கிற‌தா ?. ஒருவேளை இத்த‌கைய‌ கொடுமை ந‌ம‌து இல்ல‌த்தில் நிக‌ழ்ந்தால் இதே நிக‌ழ்ச்சியை இப்ப‌டித் தான் கையாள்வோமா ? இல்லை க‌ண்ணீரோடு ப‌திவு செய்வோமா ? போன்ற‌ சில‌ அடிப்ப‌டை கேள்விக‌ளை எழுப்ப‌ வேண்டும். சரியானதை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்யும் சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

கான்பூர் இர‌யில் நிலைய‌த்தில் மின்சார‌ம் தாக்கி ஒரு குர‌ங்கு செய‌லிழ‌ந்து விழுந்த‌து. ப‌த‌றிப் போன‌ இன்னொரு குர‌ங்கு அதை உலுக்கி, அடித்து, த‌ண்ணீர் தெளித்து, க‌த‌றி நீண்ட‌ நெடிய‌ இருப‌து நிமிட‌ போராட்ட‌த்துக்குப் பின் அதை உயிருட‌ன் மீட்ட‌து. ஒரு குர‌ங்கு த‌ன‌து ச‌க‌ குர‌ங்கின் மீது காட்டிய ப‌ரிவும், அக்க‌றையும், அன்பும் ம‌னித‌ குல‌த்துக்கான‌ பாட‌ம‌ல்ல‌வா ? ஆறாவ‌து அறிவு ஆப‌த்தான‌தா ? ஐந்த‌றிவே அற்புத‌மா ?

நிறுத்தி நிதானிப்போம். வாழ்க்கை என்ப‌து ந‌ம‌து ஸ்மார்ட்போன்க‌ளில் இல்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளில் இல்லை. ந‌ம‌து உற‌வு என்ப‌து வாட்ஸ‌ப் த‌க‌வ‌ல்க‌ளில் இல்லை. ஐம்புல‌ன்க‌ளின் உரையாட‌லில் இருக்கிற‌து. கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி உற‌வுக‌ளை வ‌ள‌ர்ப்போம். வ‌லையில் சிக்கிய‌ ப‌ற‌வை சிற‌கை இழ‌க்கிற‌து. இணைய‌ வலையில் சிக்கிய மனிதர்கள் உற‌வை இழ‌க்கிறார்க‌ள். உண‌ர்வோடு இணைந்து வாழ்பவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌வ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை வெறும் வேடிக்கைத் த‌க‌வ‌லாய் இருப்ப‌தில்லை. வேத‌னைத் த‌க‌வ‌லாய் தான் இருக்கும்.

தொழில் நுட்ப‌த்தை நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ரை அது ந‌ம‌க்குப் ப‌ய‌ன‌ளிக்கும். தொழில்நுட்ப‌ம் ந‌ம்மை ப‌ய‌ன்ப‌டுத்த‌த் துவ‌ங்குகையில் வாழ்க்கை ப‌ய‌ம‌ளிக்கும். தொழில் நுட்ப‌ம் ந‌ம‌து ப‌ணியாள‌னாய் இருக்க‌ட்டும், அன்பு ம‌ட்டுமே ந‌ம‌து எஜ‌மானாய் இருக்க‌ட்டும்.

அன்பின்றி அமையாது உல‌கு.

ஆன்மீகம் : உயிர்ப்பு : உயிர்த்தெழவேண்டிய சிந்தனைகள்.

jesus2

இப்படி ஒரு காட்சியை சிந்தித்துப் பாருங்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு அடக்கம் செய்யப்படுகிறார். அவ்வளவு தான் இயேசுவின் வாழ்க்கை. இயேசுவின் வாழ்க்கை அத்துடன் நிறைவடைந்திருந்தால் இன்றைக்கு கிறிஸ்தவம் இருந்திருக்காது. இயேசுவின் சீடர்களெல்லாரும் பழைய வலைகளை தூசுதட்டிக் கொண்டு கடலில் இறங்கியிருப்பார்கள். மூணு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம்பா இன்னும் கொஞ்சம் சம்பாதிச்சிருக்கலாம் என சிலர் முணுமுணுத்திருப்பார்கள்.

“பாவம், ஒரு நல்ல மனுஷன். இருந்த காலத்துல எல்லாருக்கும் உதவி செஞ்சாரு” என கூட்டம் கூடி ஒரு நாலு வருஷம் அவரைப் பற்றி அனுதாபப்பட்டிருப்பார்கள். செவி வழிக் கதைகளாக ஒரு தலைமுறை இயேசுவை நினைவில் வைத்திருந்திருக்கும். அதிகபட்சமாய், இயேசு ஒரு இறைவாக்கினர் எனும் பட்டியலுக்குள் அடைபட்டு வரலாறாக மாறியிருப்பார் ! அவ்வளவு தான்.
ஆனால், உயிர்ப்பு தான் இயேசுவைக் கடவுளின் மகனாக அங்கீகாரம் செய்தது. சீடர்களின் பயத்தையும், நடுக்கத்தையும் துரத்தியது. மானிட மகனின் விண்ணேற்புக்கும், தூய ஆவியானவரின் இறங்குதலுக்கும் அடிப்படையாய் அமைந்தது ! இயேசு வாழ்ந்த போது தயாராக்கிய சீடர்களை, பிரிந்த போது பணிக்கான உறுதியேற்கச் செய்ததும் இயேசுவின் உயிர்ப்பு தான்.

கிறிஸ்தவ விழாக்களில் மிகவும் அற்புதமான விழா என்றால் அது உயிர்ப்பு தான். அது தான் அற்புதங்களின் மீதான நமது நம்பிக்கையையும், இயேசுவின் இரண்டாம் வருகையின் மீதான எதிர்பார்ப்பையும் வலுப்பெறச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை ! உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் ஆன்மீக நதியே அந்த விழாவின் சிறப்பாக இருக்க வேண்டும். மற்றபடி மட்டன் பிரியாணியும், கோழியும் சாப்பிடும் நாளாக அந்த நாள் மாறிப் போனால் அந்த விழாவுக்கும் மற்ற மதத்தினர் கொண்டாடும் பட்டாசு விழாக்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை.

“நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” ( யோ : 9:5 ) என்ற இயேசு, உலகை விட்டு விடைபெறுவதன் மூலம் “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” ( மத் 5 : 14 ) என்று அந்த ஒளியை கிறிஸ்தவர்களுக்கு வழங்குகிறார். இயேசு உலகில் இருக்கையில் தான் இந்த உலகின் ஒளியாய் இருந்தார். அவர் பிரிந்தபின் அந்த ஒளியாய்த் திகழவேண்டியது இயேசுவை நம்பும் நாம் என்பதே இறையியல் உண்மையாகும். நமது வாழ்க்கை இயேசுவைப் போல ஒளிவிடவேண்டும், உலகிற்கு ஒளியாய் மாற வேண்டும் என்பது இயேசுவின் உயிர்ப்பு சொல்லும் முதன்மைச் செய்தியாகும் !

‘உயிர்ப்பும் உயிரும் நானே எனில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்’ எனும் இயேசுவின் வார்த்தைகள் செயலாற்றம் பெற்ற தினமாக உயிர்ப்பு நாள் நமக்கு முன்னால் நிற்கிறது. ஒரு புறம் இயேசு இந்த நாளில் உயிர்க்கவில்லை, இயேசுவின் உயிர்ப்பை ஒரு விழாவாக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கொண்டாடவில்லை, இயேசுவின் உயிர்ப்பு உண்மையில் ‘பாகான்’ விழாவின் கிறிஸ்தவ வடிவம் என்றெல்லாம் விவிலிய ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டியும், இயேசு உயிர்த்தார், நமக்காக, நமது விசுவாச வலிமைக்காக எனும் உண்மையைக் கண்டு கொள்வது உயிர்ப்பு சொல்லும் இன்னொரு சிந்தனையாகும் !

மரணம் வலி மிகுந்தது. துயரமானது. மரணத்தின் மீதான அச்சம் கொடுமையானது. நமது மரணத்தை விட நாம் நேசிப்பவர்களின் மரணத்தையே நாம் அதிகம் வெறுக்கிறோம். அதனால் தான் கடவுள் ஆபிரகாமின் விசுவாசத்தை உறுதிப்படுத்த “ஈசாக்கின்” உயிரைப் பலியாகக் கேட்டு சோதித்தார். மரணம் எனும் பயத்தையும், மரணம் எனும் அதிர்ச்சியையும் கடந்து செல்வதற்கு நமது ஆன்மீக விசுவாசம் வலுவடைய வேண்டும் அல்லவா ? அந்த வலிமையைத் தான் மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகிறது. இந்த உலகைத் தாண்டிய ஒரு எதிர்நோக்கு, இந்த உலகைத் தாண்டிய ஒரு வாழ்க்கை அதுவே நமக்கு உற்சாகத்தையும், மரணத்தைக் கண்டு அஞ்சாத மனதையும் தருகிறது.

அதே வேளையில் அந்த வாழ்க்கையில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டை வாங்கத் தவறி விடக் கூடாது. விண்ணக வாழ்வுக்கான நுழைவுச் சீட்டு பூமியில் மட்டுமே வினியோகிக்கப்படும். அதை விண்ணக வாயிலில் பிளாக்கில் வாங்கி விட முடியாது. திரியேக நாதரின் மீதான ஆழமான நம்பிக்கையும், அந்த விசுவாசத்தைச் செயல்களில் பிரதிபலிக்கும் வாழ்க்கையும் தான் அதைப் பெற்றுத் தரும். புவி வாழ்க்கை ஒரு டிரெய்லர் போல. உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கை என்பது விண்ணக வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையில் நுழைவதற்கான செயல்களை இந்த வாழ்க்கையில் செய்ய வேண்டும். அந்த தீராத தாகத்தை உயிர்ப்பு நமக்கு தரவேண்டும்.

இயேசுவின் வாழ்வும், சிலுவை மரணமும், உயிர்ப்பும் நமக்குச் சொல்லும் இன்னொரு முக்கியமான சிந்தனை மன்னிப்பைப் பற்றியது ! நமது வாழ்வின் தேடல்கள் மறுமை சார்ந்தவையாய் இருக்க முக்கியமான தேவை மன்னிப்பு. நமது போராட்டங்கள் மனிதர்களோடு இராமல், சாத்தானோடு இருக்க வேண்டும். மன்னிப்பு என்பதை தனது மரணத்தின் முந்தைய வினாடி வரை இயேசு செயலாற்றிக் காட்டினார். நமக்குள் விரோதத்தின் சிந்தனைகள் இறந்து, மன்னிப்பின் மகத்துவம் உயிர்த்தெழ வேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டியது உயிர்ப்புக் காலத்தின் முக்கியமான தேவை !

“மறு பிறப்பு’ எனும் கிறிஸ்துவுக்குள் பிறக்கும் அனுபவம் நாம் கிறிஸ்தவத்தில் நுழைகையில் உருவாகிறது. பலருடைய வாழ்க்கை அத்துடன் நின்று விடுகிறது. விதை முளைத்து செடியாகி, பின் அப்படியே நின்று விடுவதைப் போல. மறு உயிர்ப்பு அனுபவம் நமக்கு முக்கியமான தேவை. இயேசுவோடு சேர்ந்து நாமும் இறந்து, அவரோடு சேர்ந்து உயிர்க்கையில் அவருடைய சாயலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதாமுக்குக் கடவுள் தனது சாயலைக் கொடுத்தார். நாம் கடவுளின் சாயலை, பாவத்தை மரணமடையச் செய்து பரமனில் உயிர்ப்பதன் மூலம், பெற்றுக் கொள்ளவேண்டும். சிலுவையில் இயேசு நமது பாவங்களுக்காக இறந்தார் எனில், நாம் இன்னும் பாவத்தைச் சாகடிக்காமல் இருந்தால் மீட்பு எப்படி பிறக்க முடியும் ? பாவங்களைக் கொன்று, உயிர்த்து எழுவதில் தான் நமது உயிர்ப்பு விழா அர்த்தப்படும்.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தவர்கள் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் போட முடியும். யூதாஸ், அன்னா, கயபா, படை வீரர்கள் என அந்தப் பட்டியல் நீளும் ! உண்மையில் அவர்களின் பிம்பங்களாகத் தானே நாம் வாழ்கிறோம் ? இயேசு சொன்னதை இயேசுவின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் நம்பவில்லை. அதை தேவ தூஷணம் என்றார்கள். இயேசு சொன்னதை நாமும் இன்று நம்புவதில்லை. நம்பியிருந்தால் அவருடைய வார்த்தைகளைக் கடைபிடித்திருப்போம். என்னை நம்புபவன் அதை செயலில் காட்டவேண்டும் என்று தானே இயேசுவே போதித்தார். நாம் செயல்படாத விசுவாசத்தைக் கொண்டிருக்கும் வரை தொடர்ந்து இயேசுவைச் சிலுவையில் தானே அறைகிறோம் !

பாஸ்டில் ஆலயத்தில், 1520ம் ஆண்டு மார்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய உரை அற்புதமானது ! “சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டது என நீங்கள் நம்பினால், உங்களுக்காக அது நசுக்கப்பட்டது என்பது உண்மையாகிவிடும். இந்த விதையால் மனுக்குலம் மகிழும் என நீங்கள் நம்பினால், நீங்களும் சேர்ந்தே அந்த மகிழ்ச்சியில் இணைகிறீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக சர்ப்பத்தின் தலையை நசுக்கித் தான் மீட்படைய வேண்டும் எனும் கட்டாயம் இருந்திருந்தால் அது மிகவும் கடினமானதாகவும், ஏன் இயலாத ஒன்றாகவும் மாறியிருக்கக் கூடும். ஆனால் இப்போதோ கிறிஸ்துவால் அது மிகவும் எளிதாகியிருக்கிறது. நாம் அனைவரும் உண்மையாகவே கிறிஸ்துவை இன்னும் ஆழமாய் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கிறிஸ்துவோடு உயிர்த்தெழவேண்டும். அப்போது கிறிஸ்து தந்தையில் மகிமையடைந்தது போல, நாம் கிறிஸ்துவில் மகிமையடைவோம் !” – என்றது அவரது உரை !

உயிர்ப்பு தான் சாத்தானின் அத்தனை கொடுக்கையும் உடைத்து, இயேசுவை நமது திருச்சபையின் தலைவராக்கியது. உயிர்ப்பு தான் மரணத்தின் மீதான வெற்றியைத் தந்திருக்கிறது. உயிர்ப்பு தான் இயேசு மீண்டும் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து வருவார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. உயிர்ப்பு தான் கிறிஸ்தவர்களை கிறிஸ்துவின் பிள்ளைகளாகவும், கிறிஸ்தவ ஆன்மீகத்தின் வீரர்களாகவும் உருவாக்கியிருக்கிறது.

எத்தனையோ ஆண்டுகள் உயிர்ப்பு தினத்தைக் கொண்டாடியிருப்போம். எல்லா ஆண்டும் நாம் கொண்டாடுவது இயேசுவின் உயிர்ப்பைத் தான். நமது உயிர்ப்பைப் பற்றிய சிந்தனை நமக்கு இருப்பதில்லை. காரணம், நமது பாவத்தைப் பற்றிய புரிதலோ, விழிப்புணர்வோ நம்மிடம் இருப்பதில்லை. இந்த ஆண்டாவது அந்தப் புரிதலுடன் கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடுவோம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சகோதரர் ஸ்பர்ஜன் ஒரு அழகான காட்சியைச் சொல்கிறார். கிறிஸ்துவைப் போல அவருடைய தூய்மையான வாழ்வுக்குள் நுழைவதைப் பற்றிய காட்சி அது. புனித வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் அதி முக்கியத் தேவை !

ஒரு நதியில் சில்லென தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவர் அதில் கையை வைத்துப் பார்த்து “அய்யோ.. குளிரில் விறைத்துப் போகிறேன்” என்கிறார். இன்னொருவர் காலை வைத்துப் பார்த்து, “ஐயோ நடு நடுங்குகிறேன்” என்கிறார். இன்னொருவர் ஓடிவந்து முழுதாய் நதியில் குதித்து நீச்சலடிக்கிறார், “வாவ்… ரொம்ப உற்சாகமாய் இருக்கிறது” என்கிறார். கிறிஸ்துவின் புதிய வாழ்க்கைக்குள் நுழையும் அனுபவம் இப்படித் தான் இருக்க வேண்டும். முழுமையாய் அர்ப்பணித்து விடுதல். பாவமற்ற வாழ்க்கையைக் கண்டு பயப்படுவதோ, தயங்குவதோ நம்மை புதிய வாழ்க்கைக்குள் வழி நடத்தாது. சந்தேகங்கள், பயங்கள், தயக்கங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு முழுமையாய்க் குதிப்பதே மிக முக்கியம் !

இந்த உயிர்ப்பு தினத்தில் நாம் நமது உயிர்ப்பையும் சிந்திப்போம், இயேசுவின் உயிர்ப்பை மட்டுமல்ல !
அனைவருக்கும், உயிர்ப்பின் நல் வாழ்த்துகள்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ இதழ்..

கிறிஸ்தவம் : தபசுகாலம் சொல்வதென்ன ?

 

lent-40-days

 

நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான், ‘எனக்குப் பிடிக்கவே புடிக்காத ஒரு காலகட்டம் இந்தத் தவக்காலம் தான்’. “ஏன் அப்டி சொல்றே?” என்று திருப்பிக் கேட்டேன். “இல்ல, இந்த நாப்பது நாளும் வீட்ல கோழியும் அறுக்க மாட்டாங்க, மீனும் வாங்க மாட்டாங்க. ஈஸ்டருக்குத் தான் இனிமே நான்வெஜ் ! இந்த நாற்பது நாளும் நமக்கு தவக்காலம், கோழிகளுக்கு நல்லகாலம் ! ” என்று சிரித்தான்.

தவக்காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய்த் தொடுகிறது. லெந்து நாட்களின் முழுமையான புரிதல் பெரும்பாலானவர்களிடம் இல்லை. அது துயரத்துடன் கடந்து போகவேண்டிய ஒரு காலகட்டம் என்றே பலரும் நினைக்கிறார்கள். கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இந்தத் தவக்காலத்தை ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு பிரிவினர், இந்தக் காலகட்டத்தை கெட்டபழக்கங்களுக்குத் தற்காலிகத் தடை போடும் காலமாகப் பார்க்கிறார்கள். தம் அடிக்கிறவங்களும், தண்ணி அடிக்கிறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நாற்பது நாட்கள் அதை விட்டு விலகியிருப்பார்கள். அசைவத்தை ஒரு கட்டு கட்டுபவர்கள் இந்தக் காலகட்டத்தில் கீரை தின்று முழி பிதுங்குவார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை ஆலயத்துக்குப் போவார்கள். முடிந்தால் ஏழைகளுக்குக் கொஞ்சம் நல்ல விஷயங்களைச் செய்வார்கள்.

ஒறுத்தல் முயற்சி என்று இதைப் பெயரிட்டு அழைக்கிறார்கள். “உங்களுக்கு ரொம்பப் புடிச்ச ஒரு விஷயத்தைக் கடவுளுக்காக விட்டு விடுங்கள்” என்பதே அவர்களுடைய சிந்தனையில் அடிப்படை. சாப்பாடு, சினிமா, என்று இருந்த பிடித்த விஷயங்கள் இன்றைக்கு மாறி விட்டது. வீடியோ கேம்ஸ், அனிமேஷன் மூவீஸ், எஸ்.எம்.எஸ், இன்டர்நெட் என விருப்பங்கள் மாறிவிட்டன. எனவே நிஜமாகவே மக்கள் ‘அடுத்த நாப்பது நாள் நான் வெட்டியா எஸ்.எம்.எஸ் அனுப்பவே மாட்டேன்’ என்றெல்லாம் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்.

நோன்பு அதாவது உபவாசம் இருப்பது இந்தக் காலகட்டத்தில் ஒரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். சிலருக்கு அது வெள்ளிக்கிழமை. சிலருக்கு ஞாயிறு. இன்னும் சிலருக்கு அதெல்லாம் முடியாத சமாச்சாரம்.  ‘எனக்கு சாப்டலேன்னா தலைவலி வந்துடும்’, ‘எப்பவும் டிராவல்ல இருக்கிறதனால சாப்டாம இருக்க முடியல’ என்று சில சால்ஜாப்புகள் அவர்களுடைய கைவசம் எப்போதும் இருக்கும். இந்த நோம்பு காலம் புதிய ஏற்பாட்டில், இயேசுவின் மறைவை ஒட்டி முளைத்த விஷயம் அல்ல. எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் நோன்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது இயேசுவின் மறைவுக்குப் பின்பு கண்டு பிடிக்கப்பட்ட ஒன்று அல்ல, பழைய வழக்கத்தின் தொடர்ச்சியே.

தவக்காலம் சாம்பல் புதனில் துவங்கி, உயிர்ப்பில் முடிவடைகிறது என்பது நமக்குத் தெரிந்தது தான். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் அதி முக்கியமான நிகழ்வு உயிர்ப்பு தான். இயேசுவின் உயிர்ப்பு தான் அவரை ‘இறைவாக்கினர்’ எனும் நிலமையிலிருந்து ‘இறைமகன்’ எனும் நிலைக்கு மாற்றி நமது விசுவாசத்தை ஆழப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் அதை பல வேளைகளில் உணர்வதில்லை. நமது வீடுகளிலோ, காலன்டர்களிலோ இருக்கின்ற இயேசுவின் படங்களில் ‘இயேசு உயிர்த்து எழுகின்ற’ காட்சி இருக்குமா என்றால் சந்தேகமே. பெரும்பாலும் சிலுவையில் அறையப்பட்டு தொங்கும் ஒரு பாவப்பட்ட முகமோ, கதவைத் தட்டும் இயேசுவோ தான் கண்களுக்குத் தட்டுப்படுவார்.

தவக்காலத்தின் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது. இந்த சாம்பல் புதன் தினம் கிபி 900 களில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் இது சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது. ஆரம்ப காலத்தில் தவக்காலம் என்பது நாற்பது மணி நேரமாக இருந்திருக்கிறது. இது இயேசுவின் பாடுகள் மற்றும் கல்லறையில் அவர் இருந்த காலத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் இது ஆறு நாட்கள் என மாற்றப்பட்டு, கிபி 800களில் 40 நாட்களாக மாற்றப்பட்டது.

சாம்பல் புதனுக்கும், உயிர்ப்புக்கும் இடையே இருக்கும் 40 நாட்களில் ஓய்வுநாட்கள், அதாவது ஞாயிற்றுக் கிழமைகள், கணக்கில் வராது என்பதை நாம் அறிவோம். இந்த நாற்பது எனும் கணக்கு இயேசுவின் நாற்பது நாள் வனாந்தர அனுபவத்தில் நாம் நுழையும் முயற்சி என விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

சாம்பல் புதனுக்கு முன்னால் இருக்கிறதே ஒரு செவ்வாய்க்கிழமை. இதற்கும் உலகின் சில பாகங்களில் ஒரு முக்கியத்துவம் உண்டு. பிரான்சில் இந்த நாளை “மார்டி கிராஸ்” என்று அழைக்கிறார்கள். ஜெர்மானியர்கள் இந்த நாளை “ஃபாஸ்சிங்” என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவான பெயராக “ஷ்ரோவ் செவ்வாய்” என இந்த நாள் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் என்ன செய்வார்கள் தெரியுமா ? எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவு சாப்பிட்டு ரொம்ப சந்தோசமாக இந்த நாளைக் கொண்டாடுவார்களாம்.

தவக்காலம் என்பது ஒரு அடையாளத்தின் நாளாகிப் போய்விட்டதோ எனும் கவலை எழுவது இயல்பே. தவக்காலம் இயேசுவின் பாடுகளைச் சிந்தித்து அழுவதற்கான காலமோ, அல்லது அந்த சோகத்தை முகத்தில் பூசிக்கொண்டு திரிவதற்கான காலமோ அல்ல. நமது பாவங்களைக் குறித்து சிந்தித்து அதிலிருந்து மனம் திரும்பி வெளியே வருவதற்கு தூய ஆவியின் உதவியை நாடும் காலம். இயேசுவே சொல்கிறார், “எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று ! மீட்பு என்பது குடும்பம் குடும்பமாகவும் வரலாம். எனவே ஒட்டு மொத்த குடும்பத்துக்காகவே செபிக்கவும், அழவும் நாம் அழைக்கப்படுகிறோம். நோவாவின் காலத்தில் நேர்ந்ததும் அதுவே. நோவா மட்டும் பேழையில் நுழையவில்லை, அவரோடு அவருடைய குடும்பத்தினரையும் கடவுள் காப்பாற்றினார்..

மனம் திரும்புதலே தவக்காலத்தின் அடிப்படை. அதற்கு முதலில் எதிலிருந்து மனதைத் திருப்ப வேண்டும் எனும் புரிதல் அவசியம். மிக முக்கியமாக பாவத்திலிருந்து நாம் திரும்ப வேண்டும். நாம் என்னதான் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தாலும் “மீண்டும் பிறக்கும்” அனுபவம் இல்லையேல் மீட்பு இல்லை என்கிறார் இயேசு. “ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான். யோ:3:3″ ஒளியில் வாழும் வாழ்க்கையே கிறிஸ்து சொன்ன வாழ்க்கை. இருளில் இருப்பவர்கள் இருள் சார்ந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். அது பாவம் சூழ்ந்த வாழ்க்கை. வெளிச்சத்தை விரும்புபவர்கள் இறைவனின் திருமுன் வருவார்கள். இந்த தவக்காலம் முதலில் நமக்குச் சொல்லித் தருவது நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு மனம் திரும்பவேண்டும் எனும் முடிவை எடுப்பது தான்.

நீங்கள் செய்த ஒரு கொலைக்காக உங்கள் தந்தை ஜெயிலுக்குப் போகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். தந்தையை ஜெயிலில் அடித்து உதைத்து தூக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். அவருடைய துயரத்தையும் மரணத்தையும் நினைத்து அழுது கொண்டே நீங்கள் மீண்டும் மீண்டும் சட்ட விரோத செயல்கள் செய்து கொண்டிருந்தால் அதன் பயன் என்ன ? தந்தை உங்களைக் காப்பாற்ற உயிர்விட்டதன் பயன் என்ன ? உங்களுடைய செயல்கள் உங்களை ஒரு நாள் நிச்சயம் அழிவுக்குக் கொண்டு செல்லும் இல்லையா ? இதையே இயேசுவின் வாழ்க்கை நமக்குச் சொல்லித் தருகிறது. நமது பாவங்களுக்காக அவர் உயிரை விட்டார். நாமோ தொடர்ந்து பாவம் செய்கிறோம், தண்டனைக்கான நியாயத் தீர்ப்பு நாளை நாம் மறந்தே போய்விடுகிறோம்.

அதை நினைவில் கொள்வதற்கான அழைப்பாக நாம் இந்த தவக்காலத்தை மனதில் கொள்ளலாம். நமக்கு நன்றாகத் தெரிந்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முதலில் இறைவனின் உதவியை நாடவேண்டும். சிற்றின்பம், கோபம் போன்ற பாவங்கள் இயேசு நேரடியாகவே கண்டித்தவை. அவற்றிலிருந்து வெளியே வரும்போது நம்மிடமிருக்கும் அடுத்த நிலை பாவங்கள் தெரியத் துவங்கும். அதையும் விடடு விடவேண்டும். இப்படி படிப்படியாக ஒவ்வொரு பாவமாக விட்டு விடும் போது நாம் இயேசு வாழ்ந்த வாழ்க்கையை நோக்கி நகர்கிறோம் என்று பொருள். இயங்காமல் இருக்கும் காஸ்ட்லி காரை விட ஓடிக்கொண்டிருக்கும் மாட்டு வண்டியே மேலானது ! ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு பாவமாக நாம் விட்டு விடுதலே புனிதத்தை நோக்கிய வாழ்க்கையின் முதல் படி.

இயேசு மனிதனாய் வந்ததன் நோக்கமே அது தான். ஆதாம் மனுக்குலத்தின் முதல் துளி. ஆதாம் ஏவாளுடன் பாவமும் துவங்கியது. காயின் பாவத்தின் அடுத்த நிலைக்குச் சென்றான். மனுக்குலம் படிப்படியாய் இருளடைந்தது. ஆங்காங்கே தோன்றிய வெளிச்ச விதைகள் தவிர எங்கும் கும்மிருட்டு. அந்த இருட்டை அழித்து மீண்டும் ஒரு தூய வாழ்க்கைக்கான வாய்ப்பையும், வழியையும் நமக்கு உருவாக்கித் தந்தது தான் இயேசு செய்த பணி. நாம் இயேசுவின் வார்த்தைகளையும், வாழ்க்கையையும் இறுக்கிப் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் அவருடைய வாசனை வீச வேண்டும். அதுவே அற்புதமான கிறிஸ்தவ அனுபவம்.

பாவம் எனும் மிகப்பெரிய இருட்டைக் கடந்தால் நமக்கு அடுத்தடுத்த வழிகள் புலப்படும். ‘தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் ஆகாது” எனும் இயேசுவின் போதனை உலக செல்வங்களிலிருந்து நாம் மீட்படைய அழைப்பு விடுக்கிறது. நியாயப் பிரமாணங்களைக் கோடிட்டுக் காட்டி எளியவர்களை வஞ்சித்த பரிசேயர்கள் இயேசுவால் புறக்கணிக்கப்பட்டனர். சட்டங்களிலிருந்து விடுதலை பெற்று அன்பில் நிலைபெற அது நமக்கு அழைப்பு விடுக்கிறது. ‘பயப்படாதீர்கள்’ எனும் இயேசுவின் போதனை விசுவாசத்தை இறுகப்பற்றிக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்தையும் பகிர்ந்து ஏழைகளுக்குக் கொடுக்கச் சொன்ன இயேசுவின் போதனை சுயநலத்தை வெறுக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்த அர்த்தங்களைப் பற்றிக் கொள்வதே தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம். அதைத் தாண்டிய அடையாளங்கள் இரண்டாம் பட்சமே. இதையே பைபிளும் நமக்குப் போதிக்கிறது. உதாரணமாக கிறிஸ்துவின் பிறந்த நாளையோ, லெந்து நாட்களையோ இயேசுவின் அப்போஸ்தலர்கள் கொண்டாடவில்லை. அதைக் குறித்த நிகழ்வுகளோ, முக்கிய குறிப்புகளோ முதல் நூற்றாண்டிலும் காணப்படவில்லை. கிபி 325ல் நெசியா கவுன்சில் தான் லெந்து நாட்களை அங்கீகரித்தது! நாமும் லெந்து நாட்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதே முக்கியம், அடையாளங்களை அல்ல.

எத்தனையோ தபசுகாலங்கள் வந்து போய்விட்டன. எத்தனையோ தபசு காலங்களை நாம் அனுசரித்து முடித்தும் விட்டோம். கடந்த தபசு நாளுக்கும், இந்த நாளுக்கும் இடையே நாம் எவ்வளவு தூரம் பாவத்தை விட்டு விலகியிருக்கிறோம். எவ்வளவு தூரம் இயேசுவை நெருங்கியிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு படியேனும் முன்னேற்றம் இல்லையேல் நமது தபசு காலங்கள் உண்மையில் வீணானவையே !

இந்த தபசுகாலத்திலாவது ஒரு உறுதி மொழி எடுப்போம். நமக்குத் தெரிந்த பாவங்களை விலக்குவோம். இருட்டுக்குள் இருக்கும் வரை நமது பாவங்கள் நமக்குத் தெரிவதில்லை. நாம் ஒவ்வொரு பாவத்தை விலக்கும் போதும் இயேசுவின் ஒளி நம்மீது கொஞ்சம் அதிகமாய்ப் பாயும். அது நமது அடுத்தடுத்த பாவங்களை நமக்கு அடையாளம் காட்டும். அவற்றையும் நாம் இறைவனின் அருளால் கடப்போம். இப்படியே தொடர்ந்து இயேசுவோடு நடப்போம். அதுவே ஆன்மீக வளர்ச்சி. அதுவே இயேசு விரும்பிய மாற்றம்.

மனமாற்றம் என்பது உணவையோ, உடையையோ மாற்றுவதல்ல, மனதை முழுமையாய் இறைவன் பக்கமாய்த் திருப்புவதே.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

கிறிஸ்தவம் : தரமான வாழ்வே, வரமான வாழ்வு

 

qw

வெண்டக்காயை உடைச்சுப் பாத்து வாங்கு, முருங்கக் காயை முறுக்கிப் பாத்து வாங்கு என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சந்தையில் பொருட்கள் வாங்கும் போது இதையெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. வாங்கும் காய்கறி தரமான காய்கறியாய் இருக்க வேண்டும் எனும் ஆர்வம் தான் அதன் காரணம். எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் கழுகுக் கவனம் நம்மிடம் இருக்கும். புழு விழுந்த கத்தரிக்கா ஒரு மூட்டை வாங்குவதை விட நல்ல கத்தரிக்கா கால் கிலோ வாங்கணும் என்பது தானே நமது அக்மார்க் திட்டம்.

இன்னும் ஒரு படி மேலே போய் புடவைக் கடையில் போய் பார்த்தால் தெரியும், நூலை இழுத்துப் பார்த்து, ஓரத்தைக் கசக்கிப் பார்த்து, ‘ஏங்க இது ஒரிஜினல் தானா’ என நாலு தடவை கடைக்காரரை இம்சைப்படுத்தி, மலை போன்ற புடவைக் குவியல்களிடையே ஒன்றை எடுக்க பெண்கள் நடத்தும் தேடல். நொந்து நூடூல்ஸாகிப் போகும் கணவர்களுக்கென்றே கடைகளின் ஓரமாய் ஒரு சோபா போட்டிருப்பார்கள். அந்த சோபாக்களில் அமர்ந்து கணவர்கள் விடும் குறட்டைக்குக் காரணம், பெண்களின் தரமான புடவைத் தேடல் தான்.

இதே சிந்தனை தான் எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் இருக்கும். தங்கமோ, நிலமோ, உடையோ எதுவானாலும், தரமானதையே தேடுவோம். இதே சிந்தனை தான் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அதையே இயேசு விரும்புகிறார். தரமான கிறிஸ்தவ வாழ்க்கை, நம்முடைய தினசரி வாழ்க்கையில் வெளிப்படவேண்டும்.

இயேசு தன்னோட காலத்தில் ஆயிரக்கணக்கான ஆட்கள் தன் பின்னால் வரணும் என்று நினைக்கவில்லை. போற இடமெல்லாம் போஸ்டர் ஒட்டவேண்டும் என்றோ, கட் அவுட் வைத்து கௌரவிக்க வேண்டுமென்றோ அவர் ஆசைப்படவில்லை. ஒரு சின்ன குழு. அதை ரொம்ப நல்ல குழுவாக உருவாக்க வேண்டும், என்பது தான் அவருடைய சிந்தனை. அதனால் தான் வெறும் பன்னிரண்டு பேருடன் அவருடைய பணியின் அஸ்திவாரத்தை உருவாக்கினார். அவர்களுக்கு பணிவைப் போதித்தார், துணிவைப் போதித்தார், விசுவாசத்தைப் போதித்தார். இன்றைக்கு கிறிஸ்தவம் இத்தனை பெரிய அளவில் விரிவடைந்திருக்கக் காரணம் அந்த சின்னக் குழு தான். அவர்களுக்குள் இருந்து செயலாற்றிய தூய ஆவியானவரும், விசுவாசமும் தான்.

இன்றைக்கு நாடுகள் கடந்து, தேசங்களின் எல்லைகள் தாண்டி பயணம் செய்கிறோம். இயேசுவின் பயண எல்லை வெறும் 200 மைல் சுற்றளவு தான் என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். எவ்வளவு தூரம் பயணம் செய்தேன், எத்தனை இலட்சம் மக்களை சந்தித்தேன் எனும் புள்ளி விவரங்களை இயேசு விரும்பவில்லை. பயணத்திலும் அர்த்தமான பயணத்தையே விரும்பினார். கிலோ மீட்டர்களால் தன்னுடைய பயணத்தை அவர் குறித்து வைக்கவில்லை.

இயேசுவின் போதனைகள் கூட ‘அளவு’ எனும் புற எல்லையைத் தாண்டி, புனிதம் எனும் அக எல்லையையே குறி வைத்தது. அதில் தான் இறை வாழ்வின் உயர்ந்த தரம் அடங்கியிருக்கிறது. இயேசுவின் போதனைகள் சட்டங்களாக இல்லாமல் போனதன் காரணம் அது தான். சட்டங்கள் இருந்தால் வேற வழியில்லாமல் அதைக் கடை பிடிப்பவர்களாகத் தான் மக்கள் இருப்பார்கள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்றொரு சட்டம் இருப்பதால் பிறருடைய பொருட்களை விட்டு வைக்கிறோம். ஆனால் பிறர் மீதான அன்பினால் நாம் அப்படி இருப்பதே உயரிய வாழ்க்கை ! அதனால் தான் இயேசு சொன்னார், “பாத்திரத்தின் வெளிப்பக்கத்தை சுத்தம் செய்வதல்ல, உள் பக்கத்தை சுத்தம் செய்வதே அவசியம்” என்று.

நல்ல இதயம் என்பது தரமான வாழ்க்கையின் அடிப்படை. தூய்மையான மனம், தூய்மையான சிந்தனை, இவை இருந்தால் நமது செயல்களும் நல்ல செயல்களாகத் தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். அகத்தின் அழகு மட்டுமல்ல, அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியும். என்னதான் தங்கத்தால வேலி கட்டி, சர்க்கரைத் தண்ணி ஊத்தி வளத்தினாலும் மாமரத்தில் மாதுளம் பழம் காய்க்கப் போவதில்லை. உள்ளே உள்ள தன்மை தான் செயலில் வெளிப்படும். எனவே தான் மனம் சார்ந்த போதனைகளை இயேசு முதன்மைப் படுத்தினார்..

ஆலயத்தில் இரண்டு காசு போட்ட விதவையை இயேசு பாராட்டியதன் காரணம் அது தானே ! அள்ளி அள்ளிக் கொடுப்பதல்ல முக்கியம். ஆனந்தத்தோடு கொடுப்பதே முக்கியம். பத்தில் ஒரு பங்கு கொடு – என்பது சட்டம். அதற்காக பத்தில் ஒரு பங்கு கொடுப்பவர்களெல்லாம் ஆனந்தத்தோடு கொடுப்பார்கள் என்று சொல்லமுடியுமா ? எவ்வளவு கொடுக்கிறியோ அதை மகிழ்ச்சியோடு கொடு. என்பது தான் இயேசுவின் போதனை. இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல முக்கியம், எப்படிப்பட்ட மனநிலையில குடுக்கிறோம் என்பது தான் முக்கியம், என்கிறார் இயேசு.

ஒருவன் கொலை செய்யாமலோ, பாலியல் தவறு செய்யாமலோ, களவு செய்யாமலோ இருப்பதற்குக் “காரணம்” என்ன என்பதையே இயேசு நோக்கினார். நீ வெறும் சட்டத்துக்காக இதையெல்லாம் செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் கடவுளின் மீதான அன்பினால் இதையெல்லாம் செய்தால் உனக்கு நிச்சயம் பலன் உண்டு. காரணம் அது தான் உன்னுடைய உண்மையான மனதை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் இயேசுவின் போதனை பத்து கட்டளைகளாக வரவில்லை. அன்பின் இரண்டு கிளைகளாக வந்தது. இறைவனை நேசி, மனிதனை நேசி ! அவ்வளவு தான்.

கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே என்றெல்லாம் இயேசு போதிக்கவில்லை. அதன் அடுத்த நிலைக்குச் சென்றார். கொலை அல்ல, கொலைக்குக் காரணமான கோபம் கூட உன்னிடம் இருக்க வேண்டாம் என்றார். விபச்சாரம் செய்யாமல் இருப்பதல்ல, அடுத்த பெண்ணை இச்சையுடன் நோக்குவதையே நிறுத்து என்றார். களவு செய்யாமல் இருப்பதல்ல, அடுத்தவனை உன்னைப் போல நினை என்றார். இயேசு வேர்களை விசாரித்தார். தூய்மையின் அடுத்தடுத்த நிலைகள் என்பது நமக்கு உள்ளே இறங்குவது. புனிதப் பயணம் என்பது நாம் செல்வதல்ல, நமக்குள் செல்வது.

நோன்பு இருக்கணுமா, இரு. ஆனால் வேறு யாருக்கும் சொல்லாதே. செபம் செய், ரொம்ப நல்லது. ஆனால் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு செபம் செய். ஓவரா பிதற்றத் தேவையில்லை, ரொம்ப நேரம் பேசத் தேவையில்லை. சுருக்கமா சொன்னாலே போதும். அது நல்ல ஆத்மார்த்தமான பிரார்த்தனையாய் இருக்கணும். அவ்வளவு தான். இயேசுவின் போதனைகள் உண்மையானவை. தரத்தின் உச்சத்தைத் தொட்ட எளிமையான போதனைகள்.

மோசேயின் சட்டங்களை பல இடங்களில் இயேசு மீறி புதிய வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கியதன் காரணம் மக்களின் வாழ்க்கையை தரமானதாக மாற்றுவதற்குத் தான். மணமுறிவு என்பதை சகட்டு மேனிக்கு நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் இயேசு என்ன சொன்னார் ? ஆதியில் கடவுள் ஆணும் பெண்ணுமாகத் தான் படைத்தார். எனவே மண முறிவு என்பதை பாலியல் குற்றம் எனும் ஒரு காரணம் தவிர வேறு எதற்காகவும் பண்ண வேண்டாம் என்றார். ‘உங்கள் கடின உள்ளத்தின் காரணமாகத் தான்’ மோசே அப்படி ஒரு போதனையைத் தந்தார் என்று சொல்வதன் மூலம் இயேசுவின் சிந்தனை நமக்கு பளிச் என தெரிகிறது இல்லையா ?

விபச்சாரப் பாவத்தில் பிடிபட்ட பெண்ணையும் மோசேயின் கட்டளையைக் காட்டி கற்களோடு விரட்டியது கும்பல். இயேசு சட்டங்களைப் பேசவில்லை. ஆதாரங்களைக் கேட்கவில்லை. சமூகத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அடியோடு அகற்றுவேன் என புரட்சி செய்யவில்லை. கூட்டத்தினரின் உள் மனதோடு பேசச் சொன்னார். ‘உங்களில் பாவம் செய்யாதவன்’ முதல் கல்லை எறியட்டும் என்றார்.

இப்படி இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே, தரமான வாழ்க்கைக்கான தேடலாகத் தான் இருந்தது. போதனைகள் அர்த்தமுள்ளவையாக மட்டுமே இருந்தது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் நிச்சயம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இது. தரமான வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியது ! போலித்தனமான வாழ்க்கையை விட்டு விலக வேண்டியது. ஆத்மார்த்தமான ஒரு அன்னியோன்யத்தை இயேசுவோடு உருவாக்கிக் கொள்ள வேண்டியது.

அதற்கு செய்ய வேண்டிய முதல் காரியம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் சிந்தனைகளை விலக்க வேண்டியது. ரொம்ப நேரம் செபம் செய்யாட்டா மக்கள் என்ன நினைப்பாங்க ? நோன்பு இருக்கேன்னு சொல்லாட்டா என்ன நினைப்பாங்க ? ஏழைகளுக்கு தர்மம் பண்ணாம போன நம்ம இமேஜ் போயிடுமோ ? கோயிலுக்கு பணம் கொடுக்காட்டா நம்ம பேரு போயிடுமோ ? இப்படிப்பட்ட பிறர் சார்ந்த சிந்தனைகளை ஒதுக்க வேண்டியது வெகு அவசியம்.

ஆன்மீகம் நமக்கும் இயேசுவுக்குமான அன்பைச் சொல்லும் பாதை. அதில் இயேசு என்ன சொல்கிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்பதே முக்கியம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல. அப்படித் தான் ஏரோது பயந்தான். விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டினான். பிலாத்து, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேப்பா என கைகளைக் கழுவினான்.

அந்த பயம் இல்லாதவர்கள் இயேசுவை வாழ்ந்து காட்டினார்கள். அதிகாரிகளின் முன்னால் “உயிர்த்த இயேசுவுக்கு நாங்கள் சாட்சிகள்” என்றனர். சிலுவையில் என்னை தலைகீழாய் அறையுங்கள் பிளீஸ் என கேட்டு வாங்கி மரணத்தைப் பெற்றனர். அவையெல்லாம் தரமான விசுவாசத்தின் சான்றுகளாய் இருந்தன.

நாமும் நமது வாழ்க்கையை ஒரு அவசரப் பரிசீலனைக்கு உட்படுத்துவோம். நமது செயல்களெல்லாம் ஒவ்வொரு நாளும் ஆழ்மன அன்பின் வெளிப்பாடாக இருக்கட்டும் என நினைப்போம். உள்ளத்தில் உள்ளதையே வாய் பேசும், எனவே உள்ளத்தை தூர் வாருவோம்.

தரமான வாழ்க்கையே வரமான வாழ்க்கை என்பதை உணர்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்

சேவியர்

எநன்றி :

கிறிஸ்தவம் : திரித்துவமும், மருத்துவமும்.

angel

விவிலியப் பாடசாலையில் பயிலும் ஐந்துவயதான மகள் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.

‘அப்பா…. தேவதைகள் தூங்குமா ?’.

‘தூங்கும் என்று தான் நினைக்கிறேன்’ தந்தை சொன்னார்.

‘அப்படியானால் அவர்கள் எப்படி இரவு உடை அணிந்து கொள்வார்கள் ? சிறகுகள் தடுக்காதா ?’ மகள் கேட்டாள். தந்தை சிரித்துக் கொண்டார்..

பைபிளை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் இப்படித்தான் இருக்கின்றன. விவிலியத்தின் மையக்கருத்தாக நிலைவாழ்வு என்பதும், மீட்பு என்பதும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க பலர் தங்கள் அறியாமையினால் வறட்டுக் கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறார்கள். கிறிஸ்தவத்துக்கு வெளியே இருக்கும் மக்கள் மட்டும் தான் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்றில்லை. வெளியே ஒலிக்கும் இத்தகையக் கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவர்களிடமும் வரவேற்பைப் பெற ஆரம்பித்து விடுகிறது. ‘ஆமா, அந்த கேள்வியிலும் ஒரு லாஜிக் இருக்கு இல்லையா” என பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய கேள்விக்கான விடையைத் தேடி விவிலியத்தைப் புரட்டினால் பதில்களைத் தூய ஆவியானவர் அவர்களுக்குக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் பலரும் அப்படிச் செய்வதில்லை. நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பைபிளைப் படிப்பதை விட அதிக நேரம் பைபிள் குறித்த நூல்களைப் படிக்கச் செலவிடுவோம். அது ஒரு விளக்க உரையாய் இருக்கலாம், அல்லது ஒரு விவிலிய ஆராய்ச்சியாய் இருக்கலாம், அல்லது புதிய ஒரு கோட்பாடோ, கொள்கையோ எதுவாகவும் இருக்கலாம்.

வார்த்தை தேவனாயிருந்தது. அந்த தேவனை நாம் தினமும் தரிசிக்க முடிகிறது. நமது வாழ்க்கையின் வழிகாட்டியாக வேதாகமம் நமக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வோர் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகள் பைபிளில் இருக்கின்றன.

காலம் காலமாக நம்மிடையே நாம் எழுப்பும் கேள்விகளில் முக்கியமானதாக மருத்துவம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மருந்து உட்கொள்ளலாமா ? இல்லை நம்பிக்கை மட்டுமே நம்மை நலமாக்குமா ? இந்தக் கேள்விக்கு உண்மையான பதில், குணமளித்தல் இறைவனிடமிருந்து வருகிறது என்பதே. அந்த இறைவன் மருந்தை நிராகரித்தாரா, வரவேற்றாரா என்பதை வைத்து நம்முடைய வழியை சரிபார்த்துக் கொள்ள முடியும். மருந்தை உட்கொண்டாலும் குணமளிப்பவர் கடவுளெனில் ஏன் மருந்து உட்கொள்ள வேண்டும் ? காரணம், அதுவே இறைவன் நமக்காக வகுத்த வாழ்க்கை முறை – என்பது தான்.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” என்கிறார் இயேசு. பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை என்பதை இயேசு தனது போதனையின் மூலம் மிகத் தெளிவாகவே அறிவுறுத்துகிறார். பார்வையற்றவனின் கண்களில் சேற்றைப் பூசுவது கூட மருத்துவத்தின் அங்கீகாரம் என்றே விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விவிலிய ஆசிரியர் லூக்கா ஒரு மருத்துவராக இருந்திருக்கலாம் எனும் நம்பிக்கை பல ஆய்வாளர்களுக்கு உண்டு. காரணம் அவருடைய எழுத்துகளில் தெரியும் விவிலிய வாசனை. பிளாக் எம் சி எனும் விவிலிய ஆய்வாளர் அந்தக் கூற்றை மறுக்கிறார். மறுப்பதற்கு அவர் சொல்லும் காரணம் சுவாரஸ்யமானது. “அந்தக் காலத்தில் இருந்த சாதாரண நபர்களுக்கே லூக்கா வுக்கு இருந்த அளவுக்கு மருத்துவ அறிவு உண்டு” என்பது தான். அத்தகைய மருத்துவ அறிவோடு வாழ்ந்த இயேசுவின் சீடர்கள் இயேசுவின் போதனைகளை மாற்றியிருக்க வாய்ப்பே இல்லை. மருத்துவம் தேவையில்லை என்பது இயேசுவின் போதனையாய் இருந்திருந்தால் தூய ஆவியானவர் வேதாகமத்தில் அதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

மோசேக்கு இருந்த மருத்துவ அறிவுக்கும், வழிகாட்டலுக்கும் இன்றைய பிரபல மருத்துவர்களே வியப்பு கலந்த வரவேற்பைக் கொடுக்கிறார்கள். தொழுநோயாளிகளின் ஆடைகளை தீயினால் சுட்டெரிக்க வேண்டும் ( லேவியர் – 13 : 52 ) என மோசே கட்டளையிட்டிருந்தார். நவீன மருத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா ? தொழுநோய் மனித உடலை விட்டு வெளியே வந்து தூசிலோ, ஆடையிலோ மூன்று வாரங்களோ, அதற்கு அதிகமான வாரங்களோ உயிர்ப்புடன் இருக்குமாம் ! மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தின் உயர் நிலையை மோசே அறிந்திருக்கிறார் என்பது வியப்பு. அது இறைவன் மூலமாகவே வந்திருக்கும் என்பதில் வியப்பில்லை ! அதே போலத் தான் மோசேயின் தூய்மை குறித்த போதனைகளும். கடந்த நூறு ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்டறிந்தவற்றை மோசே 3500 ஆண்டுகளுக்கு முன்பே போதித்திருந்தார் என்பது ஆச்சரியம் தான் இல்லையா ?

யாக்கோபு 5 : 14 – 15 தான் மருந்து கூடாது என்பவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் விவிலிய வசனம். விசுவாசமுள்ள செபம் பிணியாளியை இரட்சிக்கும் எனும் வசனம் நமக்கு ஊக்கமூட்டுகிறது. மீன்டும் மீண்டும் செபிக்கத் தூண்டுகிறது. ஆனால் வசனங்களை வசனங்களுடன் ஒப்புமைப்படுத்தி வாசிப்பதே சிறந்தது. மருத்துவத்தை விட மேலாக இறைவிசுவாசத்தை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் மருத்துவத்தை நிராகரித்து விசுவாசத்தைப் பற்றிக் கொள்வது என்பது, இயேசுவின் ஒரு வசனத்தைப் பற்றிக் கொண்டு அவருடைய பல வசனங்களை நிராகரிப்பதற்கு சமம்.

இறைவன் எங்குமே மருத்துவம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இன்னும் சொல்லப் போனால் தேவைக்கேற்ற மருத்துவத்தையே அவர் பரிந்துரைக்கிறார். மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து ( நீதி 17: 22 – பொ.மொ ) என நலமளிக்கும் மருந்தையும், ஆனந்தமான மனதையும் விவிலியம் ஒப்பிட்டுப் பேசுகிறது. மகிழ்வார்ந்த மனம் இறைவனின் விருப்பம் என ஒத்துக் கொள்ளும் நாம், நலமளிக்கும் மருந்தையும் ஒத்துக் கொள்ளவேண்டும் இல்லையா ?

எசேக்கியேலுக்கு எசாயா பரிந்துரைத்த மருத்துவ முறையும் நினைவில் கொள்ளத் தக்கதே. “எசேக்கியா நலமடைய, ஒரு அத்திப் பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் வைத்துக் கட்டுங்கள்” என சொல்லியிருந்தார். ( ஏசாயா 38 : 22 ). ஏசாயாவை விட விசுவாசத்தில் ஆழமானவர்கள் என்று நம்மைக் கருதிக் கொள்ள முடியுமா ? அவர் மருத்துவ வழியையும், இறைவனின் மீதான நம்பிக்கையையும் ஒரு சேர மனதில் கொண்டிருந்தாரே ! எரேமியாவை எடுத்துக் கொள்ளுங்கள். “அங்கே மருத்துவர் இல்லையா? அப்படியானால், என் மகளாகிய மக்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?” ( எரேமியா 8 :22 ) என்கிறாரே எரேமியா. அவருடைய விசுவாசத்தைக் கேள்வி கேட்க முடியுமா ?

“தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின் பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து” 1 திமோ 5 :23 என்கிறார் பவுல். விசுவாசத்தின் பிம்பமாய் இருக்கும் பவுல் இறைவனின் விருப்பத்தை மீறி சொல்வார் என்று வாதிட முடியுமா ?

சரி, அப்படியே லாஜிக்கல் பேர்வழிகளாகவே நாம் இருக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மிடம் பணம் குறைவாக இருக்கும்போது பணத்துக்காக பணம் வைத்திருக்கும் நல்ல மனம் படைத்த ஒருவரை நாடிப் போய் கேட்பதுண்டு. அது போலவே உடல் நலம் குறைவாக இருக்கும் போது உடல் நலக் குறையைத் தீர்க்க உதவுவார்களோ அவர்களிடம் செல்வது தானே முறை. பணத் தேவை வரும்போதோ, உணவுத் தேவை வரும்போதோ பெரும்பாலும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவார் எனும் ‘மாஜிகல்’ களை நாம் சார்ந்திருப்பதில்லை. ஆனால் உடல் நலத்தில் மட்டும் ஏன் ஒரு மேஜிகலை எதிர்பார்க்க வேண்டும் ? எந்த ஒரு சூழலானாலும் இறைவன் தானே செயலாற்றுகிறார்.

இயேசுவை ஆலய உச்சிக்குக் கூட்டிச் சென்ற சாத்தான், “இங்கிருந்து கீழே குதி, தூதர்கள் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்” என்று சொன்னபோது இயேசு குதிக்கவில்லை. படிகள் இருக்கும் ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே இறங்கி வர படிகளைப் பயன்படுத்துவதே தேவையானது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை படிகளே இல்லாத கட்டிடமெனில் இயேசு குதித்திருக்கக் கூடும், தந்தையவர்கள் இயேசுவை நிச்சயம் தாங்கியிருப்பார். அமேசான் காடுகளில் நீங்கள் அகப்பட்டால், அங்கே உங்களுக்காய் கடவுள் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லையென்றால், அங்கே மருந்துகளைப் பயன்படுத்த முடியாது. அந்த சூழல்களில் இறைவனே நேரடித் துணை. மற்றபடி எங்கெல்லாம் இறைவன் நமக்காக உதவிகளை ஆயத்தப்படுத்தியிருக்கிறாரோ, அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்துவதே சரியானது.

ஒரு சிங்கம் ஒருவனைத் துரத்திக் கொண்டு வந்தது. அவனோ அசையாமல் நின்றான். ஓடு, ஓடு வீட்டுக்குள் புகுந்து கொள் என எல்லோரும் கத்தினார்கள். அவனோ, கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என நடுவழியில் நின்றான். சிங்கம் அவனைக் கொன்றது. இறந்தவன் கடவுளிடம் சென்றான். கடவுளே நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை என முறையிட்டான். அவரோ, நான் உன்னைக் காப்பாற்ற கடுமையாக முயன்றேன். பல பேருடைய வாய் வழியாக, “ஓடு ஓடு” என உன்னை அவசரப் படுத்தினேன். நீ தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்று சொன்னாராம். கடவுள் நமக்காக வழிகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் போது, நமது விருப்பப்படி தான் கடவுள் நம்மைக் குணப்படுத்த வேண்டும் என அவரைக் கட்டாயப்படுத்த முடியுமா ?

மனிதன் கடவுளாக முடியாது. ஆனால் மனிதர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது என்று சொல்ல முடியுமா ? அப்படிச் சொல்பவர்கள் வேலை தேடித் திரியும்போது மனிதர்களைச் சார்ந்திருப்பதில்லையா ? வீடு கட்டும் போது ? பயணங்களில் ? திருமணத்தில் ? இன்னும் பலவற்றில் பிறரைச் சார்ந்திருப்பதில்லையா அப்படியெனில் மருத்துவ விஷயத்தில் மட்டும் ஏன் வித்தியாசமான கோட்பாடைக் கடைபிடிக்க வேண்டும் ?

கடைசியாக மிக முக்கியமான ஒன்று. கிறிஸ்தவத்தின் அடைப்படை இறைவன் மீதான விசுவாசமே. அந்த விசுவாசம் இல்லாத மருத்துவம் வீணானதே. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போல, ‘நம்பிக்கை வை’ என்னிடம் என்று பலமுறை கடவுள் சொல்லியும் நாம் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை பல நேரங்களில் பலவீனப்பட விட்டு விடுகிறோம்.

இயேசு வாழ்ந்த காலத்தில் பலரைக் குணப்படுத்தினார், பிறவியிலேயே பார்வையற்றவன், பல்லாண்டுகாலமாக தொழுநோயாய் இருந்தவன் என நீளும் பட்டியல் நாம் அறிந்ததே. அவர்களுடைய குணமடைந்த நிகழ்வை நாம் உற்றுப் பார்த்தால் குணமடைந்தவர்கள் இயேசுவின் மீது நல்ல நம்பிக்கை கொண்டிருந்ததை அறியலாம். ‘உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்று இயேசு பலமுறை சொல்கிறார். நம்பிக்கையில்லாவிடில் நீ அதிசயங்களைக் காணமுடியாது என்று தெள்ளத் தெளிவாக எச்சரிக்கையும் விடுக்கிறார். பேதுரு இயேசுவை நம்பியபோது கடல்மீது நடந்தார். அந்த நம்பிக்கை தளர்ந்தவுடன் தண்ணீரில் மூழ்கினார்.

இந்த நம்பிக்கை நமக்குள் அடிப்படையாய் இருக்க வேண்டியது அவசியம். அதன் மேல், இறைமகன் நமக்குத் தந்திருக்கும் அறிவையும், ஞானத்தையும் பயன்படுத்த வேண்டும். விவிலியம் முழுக்க இறைவனின் பண்புகளும் அவருடைய சித்தமும் தெரிகிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என ஏராளம் பைபிளின் விசுவாச மாந்தர்கள் தங்கள் இறை விசுவாசத்தையும், மருத்துவப் பார்வையையும் தந்திருக்கின்றனர்.

தூய ஆவியானவரின் துணையுடன் நாம் விவிலியத்தை வாசிக்கும் போது நமக்கு உண்மைகள் புலப்படும். பைபிள் நாம் வெளியே செல்லும்போது சட்டென வாசித்துப் பார்க்கும் ஒரு மேஜிகல் நூல் அல்ல. பைபிள் வாசிக்காம போன ஆக்ஸிடன்ட் ஆயிடுமோ, எக்ஸாம் பெயில் ஆயிடுவோமோ, போற காரியம் வெளங்காதோ என்பதற்காக வாசிக்கும் ‘மிரட்டும்’ நூல் அல்ல. அது வாழ்வின் அடிப்படை நூல் என்பதை மனதில் கொள்வோம். வார்த்தைகளின் வெளிச்சத்தில் வாழ்க்கையை அமைப்போம். இறைமகனின் வழியில் பயணம் தொடர்வோம்.

வீணான கேள்விகள் கேட்டு வாழ்வை வீணாக்காமல்
இறைவனில் இணைந்து வாழ்வை வளமாக்குவோம்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்தவம் : ஆன்மீக சுதந்திரம்

jesus12

 

சுதந்திரம் வேண்டுமா அடிமைத்தனம் வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? இந்தக் கேள்வியே மடத்தனமானது என்று தானே சொல்வீர்கள் ? அப்படி ஒரு பதிலைச் சொல்வதே சுதந்திரத்தின் அடையாளம் தான் இல்லையா ?. அடிமையாய் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உலகெங்கும் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் இதைத் தான் நமக்குச் சொல்லித் தருகின்றன. சமீபத்தில், சிங்களர்களின் அடக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் போராடியதும், இதற்காகத் தான். சுதந்திரம் எனும் வார்த்தையே அடக்குமுறைவாதிகளுக்கு அலர்ஜி. அதனால் தான், சுதந்திர சிறகுகளை நறுக்க மனிதாபிமானமற்ற படுகொலைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவும் சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. 1947 ஆகஸ்ட் 15 என்பது நமக்கெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஆனால் அந்த விடுதலையைப் பெறுவதற்கு இந்திய மண் தியாகம் செய்த உயிர்களும், தாங்கிய வலிகளும் சொல்லி முடிக்க முடியாதவை. இன்றைய இந்தியா, சட்டத்தின் பார்வையில் சுதந்திரமடைந்து விட்டது, ஆனால் அது இன்னும் சாதி, ஊழல், மதம் எனும் வேறு பல எஜமானர்களுக்குக் கீழே கைகட்டி அடிமையாய் நிற்கிறது.

இயேசு ஒற்றை வரியில் இதை மிக மிக அழகாக வெளிப்படுத்தினார். “பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ( யோவான் 8 : 34 பொ.மொ ) என்றார் அவர்.. ஆன்மீக அளவில் நாம் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பதை பளிச் என சொல்ல இதை விடப் பெரிய வசனம் தேவையில்லை. எந்த அதிகார சக்தி நமது செயல்களை நிர்ணயிக்கிறதோ அந்த சக்தியே நமக்கு எஜமான். எந்த சக்தியின் கட்டளைகளின் படி நாம் நடக்கிறோமோ அந்த சக்திக்குத் தான் நாம் அடிமைகளாய் இருக்கிறோம்.

நாம் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறோமா அல்லது இயேசுவுக்குள் சுதந்திரமாய் இருக்கிறோமா என்பதை அறிவது வெகு சுலபம். நமது ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசினாலே அந்தக் கேள்விக்கான பதில் நமக்குக் கிடைத்து விடும். காலையில் எழும்புகிறோம் பைபிள் வாசிப்பதும், ஜெபிப்பதும் நமக்கு முதன்மையாய் இருக்கிறதா ? அல்லது சுடச் சுட டீ குடித்து, டிவியில் நியூஸ் பார்ப்பது நமக்கு முக்கியமானதாய் இருக்கிறதா ?

அலுவலக அவசரத்தில் நம்மை எது வழிநடத்துகிறது ? கோபமா ? இயேசுவின் வழிகாட்டுதலான புன்னகை கலந்த சாந்தமா ? கோபத்தில் கத்தி, எரிச்சலில் சுற்றிக் கொண்டிருப்பீர்களென்றால் நீங்கள் கோபத்துக்கு அடிமையாய் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். கோபம் உங்களை வழிநடத்துகிறது என்பது தான் அதன் பொருள். கோபம் கொள்வது பாவம் என்பது நாம் அறிந்ததே. தம் சகோதரர் சகோதரியிடம் சினம் கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் ( மத் : 5 – 22 ) என்கிறார் இயேசு.

அலுவலகம் செல்லும் வழியில் வசீகரமான இளம்பெண்ணைப் பார்க்கிறீர்கள், உங்கள் பார்வை பாவம் செய்கிறதா ? அல்லது கண்ணியமாய்க் கடந்து போகிறதா ? கணினியில் வேலை செய்கிறீர்கள், சிற்றின்ப வழிகாட்டுதலுக்கான பக்கங்களில் உங்கள் மனம் உங்களை அழைத்துச் செல்கிறதா ? நண்பர்களோடு உரையாடுகிறீர்கள் உங்கள் உரையாடலில் பாலியல் நகைச்சுவைகள் பந்திவைக்கின்றனவா ? இதற்கான பதிலில் அடங்கியிருக்கிறது உங்கள் மனம் சுதந்திரமாய் இருக்கிறதா இல்லை சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கிறதா என்பது.

இப்படியே ஒவ்வொரு செயலையும் இயேசுவின் வாழ்க்கையோடும், வார்த்தையோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது ஆன்மீகத்தின் பாதையும், நமது போலித்தனத்தின் உண்மையும் வெளிப்படத் துவங்கும். பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் கூட தேவையில்லை. ஒரு சில மணி நேரங்களே போதுமானது. நியாயப் படுத்தல்கள் இல்லாத அலசல் இருந்தால் நமது வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து கொள்வது வெகு எளிது.

அப்படி என்னதான் உண்மை ? நாம் ஆன்மீக சுதந்திரம் அடையவில்லை எனும் மறுக்க முடியாத உண்மை. எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய இயலாது. ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு கொள்வார் ( மத் 6 : 24 ) என்றார் இயேசு. எவனும் ஒரே நேரத்தில் சுதந்திரமாகவும் அடிமையாகவும் இருக்க முடியாது என்பதே இறைமகன் சொல்லும் உண்மை. உலக செல்வங்கள் நமது செயல்களை நிர்ணயிக்கும்போது, கடவுளை வெறுக்கிறோம் ! செல்வத்தை நேசிப்பவன், கடவுளை வெறுக்கிறான். கடவுளை நேசிப்பவன் செல்வத்தைப் புறக்கணிக்கிறான். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் அன்பு செய்வதோ, அன்பைப் பகிர்ந்தளிப்பதோ இயலாத காரியம் என்பதே வேதாகமம் சொல்லும் உண்மை !

அதற்காக செல்வங்களே இருக்கக் கூடாதென்பதல்ல, அதை அன்பு செய்யக் கூடாது, அதை நோக்கி ஓடக் கூடாது, அதை முதலிடத்தில் வைத்துப் பயணம் செய்யக் கூடாது என்பதே புரிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும். அதனால் தான் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ( மத் 6 : 33 ) என்கிறார் இயேசு.

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது ! கோபத்திலிருந்து விடுபட்டுக் காமத்திற்கு அடிமைத்தனமாகி விடுகிறது மனசு. காமத்திலிருந்து விடுபட்டு பணத்தாசையில் அடைபடுகிறது. பணத்தாசையிலிருது விடுபட்டு புகழ் போதையில் புகுந்து விடுகிறது. புகைத்தலை நிறுத்தி விட்டுப் பான்பராக் போடும் இளைஞனைப் போல நமது ஆன்மீக அடிமைத்தனம் தளங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறதே தவிர விடுபடுவதில்லை.

உண்மையான சுதந்திரம் என்பது நாம் பாவத்திலிருந்து முழுமையாய் விலகி இயேசுவின் வழியில் தொடர்வதில் இருக்கிறது. இது இடுக்கமான வாயில். இதில் நுழைவது கடினம். “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே ( மத் 7: 13-14 ) .

இந்த இடுக்கமான வாயில் வழியே நுழைபவர்களை வழி நடத்திச் செல்ல தூய ஆவியானவர் தயாராய் இருக்கிறார். காரணம் அந்த நெருக்கமான பாதையில் நாம் சந்திக்கும் உலக நெருக்கங்கள் ஏராளமாய் இருக்கும். அவற்றோடான யுத்தத்துக்கு இறை வழிகாட்டுதல் வெகு அவசியம். இறையோடு நாம் இருக்கும் போது, யானை மீதிருக்கும் சிற்றெறும்பு போல நமக்கும் யானை பலம் கிடைத்து விடுகிறது. யுத்தம் இல்லாமல் சுதந்திரம் கிடைப்பதில்லை. ஆன்மீக சுதந்திரத்துக்கும் யுத்தம் அவசியமாகிறது. அது சஞ்சல மனதோடு நாம் செய்யும் யுத்தம்.

“மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது ( மத் 26 : 41 பொ.மொ ) ! அது பாவத்திற்குள் எளிதில் புகுந்து விடும். காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகைப் போல அது இலக்கில்லாமல் ஓடும். ‘இந்த ஒரு முறை மட்டும்’ என பாவம் ஆசை வார்த்தைகளோடு காத்திருக்கும். அந்த வழியில் செல்பவர்கள் ஏராளம். அதனால் அந்த வழியைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆட்டு மந்தை போல கணக்கில்லாமல் முன்னால் மக்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

அந்த வழி நமக்கு வேண்டாம், ஒரு முறை கூட வேண்டாம். ஆன்மீகத் தூய்மையே வேண்டும் என்பவர்கள் அபூர்வம். அழிந்து கொண்டிருக்கும் அபூர்வ விலங்குகளைப் போல அவர்களைக் கண்டுபிடிப்பதே பெரும் கடினம். அதனால் தான் அவர்கள் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாய் இருக்கிறது.

பாவம் வாசலில் உங்களைப் பல்லக்கு வைத்து அழைத்துச் செல்லும், தூய்மையோ அமைதியான, எளிமையான பாதையாய் உங்களுக்கு முன் இருக்கும். அதில் வசீகரம் இருப்பதில்லை, ஆனால் அதில் பயணிப்பவர்களுக்குத் தான் அதன் சுகமும், இன்பமும் தெரியும். தன்னை வெறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொள்ளாதவனால் அந்தப் பாதையில் நடக்க முடியாது. தனது சிலுவை என்பது தனது உலக விருப்பங்கள் அறையப்பட்ட சிலுவை என்பதே நிஜம்.

இந்திய சுதந்திரத்துக்காய் நாம் மகிழ்ச்சியடையும் இதே நேரத்தில் பாவ அடிமைத்தனத்துக்காக கண்ணீர் விடாவிட்டால் நமது கிறிஸ்தவ வாழ்க்கை அர்த்தமற்றதாய்ப் போய்விடும். இயேசுவுக்குள் சுதந்திரமாய் வாழவேண்டும் எனும் அதீத ஆர்வமும், இடைவிடாத போராட்டமுமே நம்மை சுதந்திரத்துக்குள் இட்டுச் செல்லும்.

என்னதான் சொன்னாலும் நான், அடிமையாய் தான் இருப்பேன் என அடம்பிடித்தால், இயேசுவுக்கு மட்டுமே அடிமையாய் இருப்பதென முடிவெடுப்போம்.அந்த அடிமைத்தனமே உண்மையான சுதந்திரம்.

தேசத்தின் விடுதலையைக் கொண்டாடுவோம்
தேகத்தின் விடுதலைக்காய் மன்றாடுவோம்

சேவியர்.

 

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்

ஆன்மீகம் : நீதியையே நாடுவோம்

jesus_new_robe_man
இன்றைய சமூகம் பலவீனங்களின் மொத்த உருவமாய் இருக்கிறது. மனிதர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். மனித நேயம் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகிவிட்டது. சுயநலங்களின் சுருக்குப் பைகளுக்குள் மனிதர்கள் தங்களை இறுக்கி முடிந்து விட்டனர். அதனால்தான் அரையடி நிலத்தை விட மனித உயிர் மலினமாகிவிட்டது. பீடிக்காகக் கூட படுகொலைகள் நடக்கின்றன. வலிமையற்ற முதியவர்களும், பெண்களும் கூட நகைகளுக்காக வன்முறைத் தாக்குதலுக்கு பலியாகின்றனர். பாலியல் அத்துமீறல்கள் புற்றுநோயாய் சமூகத்தில் புரையோடிவிட்டது.

சம நிலையற்ற சமூகம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ராக்கெட் விட்டால் கூட எட்டமுடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதனால் தான் பட்டினியால் உயிர்விடும் மனிதர்கள் இருக்கும் ஊரிலேயே, ஓவர் சாப்பாட்டினால் உயிரிழக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். உணவுக்காக ஓடும் மக்கள் இருக்கும் தெருவிலேயே உணவு செரிப்பதற்காக ஓடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

சமநிலையற்ற சமூகம் தான் வன்முறைகளும், சமூக விரோத செயல்களும் உருவாகக் காரணமாயிருக்கிறது. நீதி, நியாயம் எனும் இரும்புக் கோட்டையை கரன்சித் தாள்களே வளைத்து விடுகின்றன. நீதியைக் கூட நிதியே நிர்ணயம் செய்யும் சமூகத்தில் ஏழைகளின் குரல்வளையில் திகிலும், நம்பிக்கையின்மையுமே தேங்கிக் கிடக்கிறது.

என்னதான் தீர்வு ? அதிகார வர்க்கத்தின் வீட்டுத் தோட்டத்தில் நீதி நாய்க்குட்டியைப் போல வாலாட்டும் தேசத்தில் எளியவன் எப்போது தான் நீதி பெறுவது ? செல்வந்தர்களின் செல்லப் பிராணியாய் நீதி குழைகின்ற நாட்டில் ஏழைகள் எப்போது தான் ஏறி வருவது ? என்னதான் தீர்வு ? சிறைகளை நிரப்பும் போராட்டமா ? அல்லது சிறைகளை உடைக்கும் போராட்டமா ?

விவிலியம் நம்மை போராட அழைக்கிறதா ? ஒரு அதிகார மையத்தை உருவாக்கி சமூகத்தின் நீதியை நிர்ணயிக்க அழைப்பு விடுக்கிறதா ?

கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு தர விரும்பிய நீதியையும், இயேசு சொல்ல விரும்பிய நீதியின் விளக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது  மிகவும் அவசியமாகிறது.

நீதியின் மேல் பசி தாகமுள்ளோர் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்றும், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது என்றும் இயேசு சொல்கிறார் ( மத் : 5 – 6, 5-10 ). நீதியைக் குறித்த பார்வை நமக்கு இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார் என்பதையே அவருடைய வார்த்தைகள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன.

ஆனால் இயேசு சொன்ன நீதி என்பது உலக நீதியிலிருந்து வேறுபடுகிறது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

சட்டங்களினால் மனித வாழ்க்கையைக் கட்டமைத்து, அந்த சட்டங்களை விட்டு விலகுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வழக்கம் உலக நியதி. அதைத் தான் பரிசேயர்களும் செய்தார்கள். அவர்கள் ஏழை மக்கள் மேல் கடுமையான நுகத்தைத் திணித்தார்கள். ஏழைகளின் இயலாமைகளைவிட தங்கள் சட்டங்களே மேல் என்றார்கள். எக்கேடு கெட்டாயினும் சட்டத்தை நிறைவேற்று என்றார்கள்.

“சட்டங்கள் இருப்பது  மனிதர்களுக்காக, மனிதர்கள் இருப்பது சட்டங்களுக்காக அல்ல” என்பதே இயேசுவின் போதனை. அதுவே இயேசு சொன்ன நீதி. அதனால் தான் அவர் (மத்தேயு 5:20) வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் – என அழுத்தமாய்ச் சொன்னார்.

இயேசுவின் அந்த போதனையின் அற்புத உதாரணமாய் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணின் நிகழ்வைக் கூறலாம். சட்டங்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக இருந்தன. ஆனால் இயேசு வழங்கிய நீதியோ சட்டங்களின் அடிப்படையில் இருக்கவில்லை. அது அன்பின் அடிப்படையிலேயே இருந்தது. “உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்” என இயேசு சொல்லி அந்தப் பெண்ணை சட்டத்தின் கல்லெறிக்குத் தப்புவிக்கிறார். சட்டத்தின் பார்வையில் அங்கே நீதி மறுக்கப்பட்டது, ஆனால் இயேசுவின் பார்வையில் அங்கே தான் நீதி நிலைநாட்டப்பட்டது ! மரணிக்கச் செய்வதல்ல, மன்னிக்கச் செய்வதே நீதி என்பது அவருடைய புதிய போதனையாய் இருந்தது.

உலகத்தின் நீதி, தவறிழைப்பவர்களை சிறைகளில் தள்ளுவதில் இருக்கிறது. சிறையில் தள்ளப்படாமல் விடும்போது நீதி மறுக்கப்பட்டதாய் உலகம் கொதித்துப் போய்விடுகிறது. “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என அன்று கத்தியவர்களைப் போல, “தூக்கில் போடும், தூக்கில் போடும்” என இன்றும் குரல்கள் ஓயாமல் ஒலிக்கின்றன. இயேசுவின் நீதியோ, “சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பதில் இருந்தது”. சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பவர்கள் விண்ணக வாழ்வுக்குச் செல்வோரின் கூட்டத்தில் சேரும் வாய்ப்பு அதிகம். “நான் சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்றாரல்லவா இயேசு !

திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்தவர்களுடைய உவமை எல்லோருக்கும் தெரியும். அதில் இயேசு நீதியின் இன்னொரு பரிமாணத்தையே நமக்குக் காட்டி விடுகிறார். விடியற்காலையில் தோட்டத்தில் வேலை செய்ய நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் என வேலைக்கு ஆட்களை அமர்த்துகிறார் உரிமையாளர். அவர்கள் மகிழ்வுடன் வேலைக்குச் செல்கின்றனர்.

காலை 9 மணி, மதியம் 12 மணி என இரண்டு தடவை வழியில் காண்போரை வேலைக்கு அனுப்பி “வேலை செய்யுங்கள் நேர்மையானதை உங்களுக்குக் கொடுப்பேன்” என அவர்களை அனுப்புகிறார். தங்களுக்குக் கிடைக்கப் போகின்ற கூலி என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. “நேர்மையானது கிடைக்கும்” என்பது மட்டுமே அவர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி. மாலை 5 மணிக்கும் சிலரை திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்புகிறார், அவர்களிடம் கூலி தருவேன் என்று கூட அவர் சொல்லவில்லை. அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஏதேனும் கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்பது மட்டுமே அவர்களுடைய சிந்தனை.

மாலை 6 மணிக்கு கூலி கொடுக்கும் நிகழ்வு. கடைசியாக வந்தவர்கள் ஒரு மணி நேரம் உழைத்தவர்கள். அவர்களுக்கு ஒரு நாளுக்குரிய ஒரு தெனாரியம் கூலி வழங்கப்பட்டது. அவர்கள் வியப்புடனும் மகிழ்வுடனும் விடைபெற்றிருப்பார்கள். முதலில் வந்தவர்கள் கடைசியில் வந்தவர்களை விட 12 மடங்கு அதிகம் உழைத்தவர்கள். 12 தெனாரியம் கிடைக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் ஒரே ஒரு தெனாரியம் தான் கிடைத்தது. அவர்கள் தலைவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.

தலைவரோ, ” தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்” என்கிறார்.

உலக நீதி என்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தெனாரியம் என்றால் பன்னிரண்டு மணி நேரத்துக்கு பன்னிரண்டு தெனாரியம் என கணக்கிடும். கடவுளோ உள்ளத்தைப் பார்ப்பவர். அவர் வேலைக்கேற்ற கூலியைக் கொடுப்பவர் அல்ல, தேவைக்கேற்ற கூலியைக் கொடுப்பவர். தகுதியானதைத் தகுதியானவர்களுக்குத் தருவதே உலக நீதி, தகுதியற்றவர்களுக்கும் தருவதே இயேசுவின் நியதி. அதனால் தான் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழியச் செய்கிறார். தகுதியற்ற நமக்கும் மீட்பைத் தருகிறார். அழைத்தலுக்குச் செவிகொடுத்து உழைப்பவர் அனைவரையும் அவர் சமமாய் நடத்துகிறார்.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் எனும் பழங்கால நீதியின் நவீன வடிவமே சட்டங்கள். இயேசு அதைத் தலைகீழாய் மாற்றுகிறார். மன்னிப்பையே முன்னிறுத்துகிறார்.. மறுகன்னத்தைக் காட்டும் பொறுமையையும், தாழ்மையையுமே பிரதானப்படுத்துகிறார். மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் கொடுக்கச் சொல்கிறார். அதாவது கிளைகளில் விளையும் பழங்களைச் சரிசெய்ய வேண்டுமெனில் வேர்களையே விசாரிக்க வேண்டும் என்கிறார். கண்ணுக்குக் கண் என்றும், பல்லுக்குப் பல் என்றும் திரிந்தால் உலகம் முழுதும் பிடுங்கப்பட்ட கண்களும், பறிக்கப்பட்ட பற்களுமே நிரம்பும். அதுவல்ல இயேசுவின் நீதி. மன்னிப்பின் மூலம் விளைகின்ற ஆரோக்கியமான உறவே இயேசுவின் நீதி. உறவின் உன்னத வடிவமாக சிலுவையில் தொங்கியதே இயேசுவின் நீதி ! எனவே தான் நண்பர்களை நேசிப்பதல்ல பெரிது, எதிரிகளையும் நேசிப்பதையே விரும்பு என்கிறார்.

இயேசுவின் நீதி என்பது போராட்டத்தில் இருக்கவில்லை. தன்னைத் தான் போராடி வெற்றி கொள்வதில் இருந்தது. தனது பலவீனங்களை இயேசுவின் பலத்தோடு இணைத்துக் கொண்டு செய்யும் போராட்டமாய் அது இருந்தது. எனவே தான் திராட்சைச் செடியாகிய அவருடன் கிளைகளாக நாம் இணைந்தே இருப்பது அவசியமாகிறது. “ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை” என எப்போதும் வழுவாமல் வாழும் வழியை அந்த நிலையே நமக்குக் காட்ட முடியும்.

இயேசுவின் நீதி சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அரவணைப்பதில் இருந்தது. தீண்டத் தகாதவர்களாய் இருந்த தொழுநோயாளிகளை அரவணைத்தார், பலவீனரான பெண்களை பணியில் அனுமதித்தார், குழந்தைகளைக் கூட அன்பாய் அரவணைத்தார். சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராக அவருடைய செயல்பாடுகள் புதிய நீதியை புரிய வைத்தன.

இயேசுவின் நீதி சமூக சாதீய ஏற்றத் தாழ்வுகளை தகர்த்தது. சமாரியப் பெண்ணைத் தேடிச் சென்று மீட்பை வழங்கினார் இயேசு. ஒதுக்கியும், அவமானப்படுத்தியும் வைக்கப்பட்ட விலைமாதர்களையும், பாவிகளையும், வரிவசூலிப்பவர்களையும் சரிசமமாய்ப் பாவித்து சமத்துவ சமூகத்தின் புதிய வழியைக் காட்டினார். அதே நேரத்தில் போலித்தனப் பரிசேயர்களையும், மதத் தலைவர்களையும், ஆளும் வர்க்கத்தையும் வளைந்து கொடுக்காமல் எச்சரித்தார்.

இயேசுவின் நீதி விடுதலை வழங்குவதில் இருந்தது. உலகம் பார்க்கும் விடுதலை அல்ல, பாவத்திலிருந்தும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுவிப்பதில் அவருடைய நீதி இருந்தது.

நீதிமான்களையல்ல, பாவிகளையே தேடி வந்தேன் என இயேசு சொல்வது நீதிமான்களுக்கு எதிரானதல்ல. தன்னை நீதிமான்கள் என காட்டிக் கொண்ட பரிசேயர்கர்களுக்கு எதிரானது. போலித்தனமான பரிசேயத் தனத்துக்கு எதிரானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறுதி அழைப்பின் போது, “நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியே பிரிப்பேன்” என்கிறார் இயேசு. நீதியான வாழ்க்கையையே நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்கிறார் என்பதன் தெளிவான அழைப்பு அதுவே..

எனது அரசு இந்த உலகைச் சார்ந்ததல்ல என்கிறார் இயேசு. எனவே இயேசுவின் நீதியும் இந்த உலகைச் சார்ந்ததாய் இருக்கப் போவதில்லை. இயேசுவின் நீதி, அன்பின் நீதி. அன்பை மனதில் தேக்கி அதன் பாய்ச்சலில் சமூகத்தைக் கழுவ நினைத்த நீதி. இன்றைய உலகின் தேவையும் அந்த நீதியே ! நீதிக்காகக் குரல் கொடுக்க நாம் எழும்புகையில் இந்த சிந்தனைகள் நமக்குள் எழட்டும். நாம் நீதி என எதை நினைக்கிறோம் ? இயேசுவின் பார்வையில் நீதியானதையா ? இல்லை உலகின் பார்வையில் நீதியானதையா ? எனும் கேள்வி அணையாமல் எரியட்டும்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை இயேசுவின் பார்வையில் நீதியானதையே செய்யும். அது சகோதரனுக்கு எதிராய் வழக்குப் பதிவு செய்வதில்லை. ஏழையின் விண்ணப்பங்களை நிராகரித்து நகர்வதில்லை. அரையடி நிலத்துக்காய் அடித்துக் கொள்வதில்லை. யாவரையும் சமமாய்ப் பாவிக்கும் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கும். தனி வாழ்க்கையில் தூய்மையையும், பணிவையுமே நேசிக்கும் என்பது மனதில் நிலைக்கட்டும்.

நீதி என்பது உலகப் போராட்டமல்ல,
அது, அன்பின் நீரோட்டம்.

சேவியர்.

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.