ஊனமாக்கும் ஊடகங்கள் ( Vettimani Magazine : London )

Media

 

 

சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.

சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா ?

பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது ச‌மூக‌ம் அவ‌மான‌ப்ப‌டுகிற‌து.

டெல்லியில் கூட்டுப் பாலிய‌ல் வ‌ன்முறை ஒரு பெண்ணின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ போது இந்திய‌ தேச‌ம் கொந்த‌ளித்த‌து. வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ எத்த‌னையோ ஆயிர‌ம் இத்த‌கைய வ‌ன்கொடுமைக‌ள் இந்தியாவின் ஒவ்வோர் மாநில‌த்திலும் ந‌ட‌ந்து கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. ச‌மீப‌த்தில் இல‌ங்கையில் ஒரு ப‌தின் வ‌ய‌துச் சிறுமியின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கூட்டு பாலிய‌ல் வெறியாட்ட‌ம் ஆன்மாக்க‌ளை அதிர‌ வைத்திருக்கிற‌து. ம‌ல‌ரினும் மெல்லிய‌ள் என‌ க‌விதையில் பெண்ணைப் பாராட்டி விட்டு, மோக‌த்தின் பூட்ஸ் கால்க‌ளால் அவர்களை ந‌சுக்குவ‌தைக் காண்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்றே இத‌ய‌ம் க‌த‌றுகிற‌து.

த‌ன் ச‌கோத‌ரிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ கொடுமை க‌ண்டு ப‌த‌றித் த‌விக்க‌ வேண்டிய‌ ச‌மூக‌ம் அதை ப‌ட‌மெடுத்து ஃபேஸ் புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளாக‌வோ, வாட்ஸப் த‌க‌வ‌ல்க‌ளாக‌வோ அனுப்பிக் கொண்டிருக்கிற‌து. வ‌ன்கொடுமை ந‌ட‌ப்ப‌தைக் க‌ண்ட‌தும் ப‌த‌றிப் போய் த‌டுக்க‌ வேண்டிய‌ கைக‌ள் இன்று ஸ்மார்ட் போன்க‌ளில் ப‌ட‌ம் பிடிப்ப‌தையே முத‌ல் வேலையாய்ச் செய்கின்ற‌ன‌. புலிக் கூட்டில் விழுந்து விட்ட‌ வாலிப‌னை மீட்காம‌ல் அவ‌னை புலி என்ன‌ செய்கிற‌து என‌ ப‌ட‌ம் எடுத்துக் கொண்டிருந்த‌ அவ‌மான‌ச் ச‌மூக‌ம‌ல்லவா இது !

அதைத் தான் ஊட‌க‌ங்க‌ளும் செய்கின்ற‌ன‌. வ‌ன்கொடுமைக்கு ஆளான‌ ச‌கோத‌ரியை அவ‌ளுடைய‌ வ‌ர‌லாறை முழுக்க‌ முழுக்க‌ ப‌திவு செய்தும், திரும்ப‌த் திரும்ப‌ அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளைக் காட்டியும், குறுப்படங்களில் தலைகுனிய வைத்தும், மேலும் மேலும் அவ‌ளை அழித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌. துபாய் போன்ற‌ நாடுக‌ளில் ஒரு விப‌த்துப் ப‌ட‌த்தைக் கூட‌ ப‌த்திரிகையில் போட‌ அனும‌தி இல்லை. ஆனால் சுத‌ந்திர‌த்தில் திளைக்கும் ந‌ம‌து தேச‌ங்க‌ள் தான் “பிரேக்கிங் நியூஸ்” போட்டுப் போட்டு ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் குடும்ப‌த்தின‌ரை மீளாத் துய‌ர‌த்தில் இற‌க்கி விடுகின்ற‌ன‌.

அத்துட‌ன் ஊட‌க‌ங்க‌ள் நிற்ப‌தில்லை. “இந்த‌ வ‌ன்கொடுமைக்கு அந்த‌ப் பெண் அணிந்திருந்த‌ மிடி தான் கார‌ண‌மா ?” என‌ நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு விவாத‌ம் எனும் பெய‌ரில் ச‌மூக‌ம் இழைத்த‌ கொடுமைக்கு அந்த‌ப் பெண்ணையே குற்ற‌வாளியாக்கியும் விடுகின்ற‌ன‌ர். வெட்க‌ம் கெட்ட சில த‌லைவ‌ர்க‌ள் “பெண்கள் த‌வ‌றிழைக்க‌த் தூண்டினால் ஆண்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்” என‌ குரூர‌ப் பேட்டிக‌ளையும் த‌வ‌றாம‌ல் கொடுக்கின்ற‌ன‌ர்.

ஒரு பெண்ணை ச‌கோத‌ரியாக‌வோ, ம‌க‌ளாக‌வோ, தாயாக‌வோ பார்க்க‌த் தெரியாத‌ ம‌னித‌ன் இந்த‌ பூமியின் சாப‌க்கேடு. அத்த‌கைய‌ பிழைக‌ளுக்கு ஒத்து ஊதும் த‌லைவ‌ர்க‌ள் ம‌னுக்குல‌த்தின் வெட்க‌க்கேடு.

ஒரு அதிர‌டியான‌த் த‌க‌வ‌ல் த‌ங்க‌ள் ஊட‌க‌த்தின் வீச்சை அதிக‌ரிக்கும், ரேட்டிங்கை எகிற‌ச் செய்யும் என்ப‌த‌ற்காக‌ ம‌னிதாபிமான‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்து விட்டு நாள் முழுதும் நீட்டி முழ‌க்கும் ஊட‌க‌ங்க‌ள் ச‌ற்றே நிதானித்துச் சிந்திக்க‌ வேண்டும்.

த‌ங்க‌ளுடைய‌ நோக்க‌ம் கொடுமை இழைக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நீதி வ‌ழ‌ங்க‌ வேண்டும் எனும் நோக்கில் இருக்கிற‌தா ? இல்லை ஊட‌க‌த்திற்குத் தீனி போட‌வேண்டும் எனும் நிலையில் இருக்கிற‌தா ?. ஒருவேளை இத்த‌கைய‌ கொடுமை ந‌ம‌து இல்ல‌த்தில் நிக‌ழ்ந்தால் இதே நிக‌ழ்ச்சியை இப்ப‌டித் தான் கையாள்வோமா ? இல்லை க‌ண்ணீரோடு ப‌திவு செய்வோமா ? போன்ற‌ சில‌ அடிப்ப‌டை கேள்விக‌ளை எழுப்ப‌ வேண்டும். சரியானதை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்யும் சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

கான்பூர் இர‌யில் நிலைய‌த்தில் மின்சார‌ம் தாக்கி ஒரு குர‌ங்கு செய‌லிழ‌ந்து விழுந்த‌து. ப‌த‌றிப் போன‌ இன்னொரு குர‌ங்கு அதை உலுக்கி, அடித்து, த‌ண்ணீர் தெளித்து, க‌த‌றி நீண்ட‌ நெடிய‌ இருப‌து நிமிட‌ போராட்ட‌த்துக்குப் பின் அதை உயிருட‌ன் மீட்ட‌து. ஒரு குர‌ங்கு த‌ன‌து ச‌க‌ குர‌ங்கின் மீது காட்டிய ப‌ரிவும், அக்க‌றையும், அன்பும் ம‌னித‌ குல‌த்துக்கான‌ பாட‌ம‌ல்ல‌வா ? ஆறாவ‌து அறிவு ஆப‌த்தான‌தா ? ஐந்த‌றிவே அற்புத‌மா ?

நிறுத்தி நிதானிப்போம். வாழ்க்கை என்ப‌து ந‌ம‌து ஸ்மார்ட்போன்க‌ளில் இல்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளில் இல்லை. ந‌ம‌து உற‌வு என்ப‌து வாட்ஸ‌ப் த‌க‌வ‌ல்க‌ளில் இல்லை. ஐம்புல‌ன்க‌ளின் உரையாட‌லில் இருக்கிற‌து. கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி உற‌வுக‌ளை வ‌ள‌ர்ப்போம். வ‌லையில் சிக்கிய‌ ப‌ற‌வை சிற‌கை இழ‌க்கிற‌து. இணைய‌ வலையில் சிக்கிய மனிதர்கள் உற‌வை இழ‌க்கிறார்க‌ள். உண‌ர்வோடு இணைந்து வாழ்பவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌வ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை வெறும் வேடிக்கைத் த‌க‌வ‌லாய் இருப்ப‌தில்லை. வேத‌னைத் த‌க‌வ‌லாய் தான் இருக்கும்.

தொழில் நுட்ப‌த்தை நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ரை அது ந‌ம‌க்குப் ப‌ய‌ன‌ளிக்கும். தொழில்நுட்ப‌ம் ந‌ம்மை ப‌ய‌ன்ப‌டுத்த‌த் துவ‌ங்குகையில் வாழ்க்கை ப‌ய‌ம‌ளிக்கும். தொழில் நுட்ப‌ம் ந‌ம‌து ப‌ணியாள‌னாய் இருக்க‌ட்டும், அன்பு ம‌ட்டுமே ந‌ம‌து எஜ‌மானாய் இருக்க‌ட்டும்.

அன்பின்றி அமையாது உல‌கு.

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்

பெண்கள் ஸ்பெஷல் : குடும்பம், குழந்தை, வேலை…

தனது கைக்குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் தாய். குழந்தை எப்படியோ குப்புறப் படுத்துக் கொண்டது. தலையை நிமிர்த்த வலுவற்ற பச்சைக் குழந்தை அது. மூக்கு கட்டிலோடு ஒட்டிக் கொள்ள மூச்சுத் திணறி தவித்து, கடைசியில் தாய் வரும் முன் இறந்தே போனது அந்தக் குழந்தை. இது குவைத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

தனியே குழந்தையுடன் வாழும் தாயின் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பு எனலாம். எப்போதும் குழந்தையின் மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் தனியே செய்ய வேண்டும். சம்பாதிக்க வேண்டும். இப்படி நாலா பக்கமும் ஓடும் தாய்மார்களின் கஷ்டம் சொல்லி மாளாது.

வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிப்பதென்றால் பரவாயில்லை. எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையை ஓட்ட பணத்துக்கு எங்கே போவது ? “ஒருத்தர் மட்டும் வேலைக்கு போனா வாழ்க்கையை ஓட்ட முடியாது. ரெண்டு பேருமே வேலைக்கு போனா தான் சமாளிக்க முடியும்”. என மக்கள் குடும்பம் குடும்பமாக ஓடும் காலமல்லவா இது.

இத்தகைய அன்னையரின் முதல் சவால் இரண்டு குதிரைகளில் பயணிப்பது. இரண்டு வேறு திசைகளில் பயணிக்கும் குதிரைகளென்றால் என்ன செய்வது ? வாழ்க்கையை ஓட்ட வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம். குழந்தையை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் எனும் கவலை மறு புறம்.

குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குப் போவதே அன்னைக்கு மிகவும் கடினம். வீட்டிலும் விட முடியாதபடி சிறிய குழந்தையெனில் சொல்லவே வேண்டாம். ஒரு நல்ல “டே கேர்” செண்டரைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்கள் கேட்கும் மாதக் கட்டணம் இப்போதெல்லாம் இதயத்தை இரண்டு வினாடி நிறுத்திவிட்டுத் தான் துடிக்க வைக்கிறது. டே கேர் செண்டர்களின் கவனிப்புக்கும், அன்னையின் கவனிப்புக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது வேறு விஷயம்.

பாட்டி, தாத்தா, அப்பா என சந்தோசமான சூழலில் வளர வேண்டிய குழந்தை “காப்பகங்களில்” தனியே இருக்கும் போது ரொம்பவே சோர்ந்து விடுகிறது. இந்த மன மாற்றம் குழந்தையாய் இருக்கும் போது அதிகம் தெரிய வராது. வளர வளர குழந்தையின் குணாதிசயங்களில் வித்தியாசம் பளிச் என புலப்படும்.

அன்னையின் நிலமை சொல்லவே வேண்டாம். “மழலையின் விரல் விலக்கி அலுவலகம் விரையும் பொழுதுகள்” ரொம்பவே வருத்தமானது. அது வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு மட்டுமே புரிந்த சங்கதி. பெண்களின் மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமே இது தான்.

அத்துடன் சிக்கல் முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. டேகேர் செண்டர்களும் இத்தனை மணி முதல், இத்தனை மணி வரை என இயங்குகின்றன. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் செய்யக்கூடிய வேலையைத் தான் தேட வேண்டும் எனும் கட்டாயம் பெண்ணுக்கு ! பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில், அருகிலேயே உள்ள ஏதோ ஒரு அலுவலகத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே வழக்கமாகி விடும்.

பாலூட்டும் அன்னையருக்கு பிரச்சினை இன்னும் அதிகம். குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே அலுவலகம் செல்லவேண்டுமென பெரும்பாலான நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கும். சிறிய குழந்தையை சரியாகப் பராமரிக்க அன்னையையோ, பாட்டியையோ தவிர யாரால் முடியும் ? ஆனால் என்ன செய்வது ? பராமரிப்பு நிலையங்களைத் தான் நாடவேண்டும். பாலூட்டாமல் அன்னையும், குடிக்காமல் குழந்தையும் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றனர்.

நிறுவனங்களும் உஷாராக நிலமையைக் கவனிக்கும். இந்த வேலை உங்களுக்கு மிக முக்கியம், “வேலையை விட்டு நீங்கள் நிற்கப் போவதில்லை” என தெரிந்தால் அவ்வளவு தான். ஒரு அடிமை போல நடத்த ஆரம்பித்துவிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியது தான். கிடைக்கும் சம்பளமாவது கிடைக்கட்டும் எனும் மன நிலைக்குப் பெண்களைத் தள்ளி விட்டு நிறுவனங்கள் அமைதியாய் இருந்து விடும்.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் வாழும் பெண்களை சீண்டிப் பார்ப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் பலர் உண்டு. பெரும்பாலும் அலுவலக சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ நண்பர்கள் எனும் போர்வையில் நெருங்குவார்கள். பாச பேச்சுகளோ, ஜெண்டில் மேன் தோரணையோ இவர்கள் உரையாடல்களில் தெறிக்கும். கடைசியில் எல்லாம் பாலியல் தேடல்களாய் முடிந்து விடும்.

வெளியூர் பயணங்கள் போன்றவையெல்லாம் தனியே குழந்தையைக் கவனிக்கும் பெண்களால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இதனால் மற்றவர்களை விட அதிக திறமை இருந்தாலும் கூட வேலையில் பிரகாசிக்க முடியாமல் போய்விடுகிறது. பெரும்பான்மையான இலட்சியங்களும், கனவுகளும் முடங்கி விடுகின்றன. இதனால் வேலையில் திருப்தியின்மையே பெரும்பாலும் இத்தகைய அன்னையரை ஆட்டிப் படைக்கிறது.

கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தன்னந்தனியாய் தாயிடம் குழந்தை வளரும் போது வேறு பல சிக்கல்களும் வந்து சேர்கின்றன. மன அழுத்தமும், தன்னம்பிக்கைக் குறைபாடும் குழந்தைகளிடம் வர இது காரணமாகிவிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதோ, தோல்விகளை அதிகமாய் சந்திப்பதோ சகஜம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வீட்டு வேலை, அலுவலக வேலை, கூடுதல் பொறுப்புணர்வு, ஆதரவு இன்மை இவையெல்லாம் அன்னையரை பிடிக்கும் சிக்கல்களில் சில என்கிறது அந்த ஆய்வு.

இங்கிலாந்தின் சில்ட்ரன்ஸ் சொசைடி வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதையே பிரதிபலிக்கிறது. தனியே வாழ்பவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி, மன அழுத்தம், நல்ல பழக்கமின்மை என தடுமாறுகிறார்களாம்.

அலுவலக நேரத்தில் வீட்டின் தேவைகள் நினைவில் புரள்வதும், வீட்டு நேரத்தில் அலுவலக பயம் வருவதும் என இந்த தனிமைப் பெண்களின் மன அழுத்தம் அளவிட முடியாதது. என்கிறது இன்னொரு ஆய்வு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சிக்கல் மிகவும் அதிகம். மண முறிவு, குடும்ப வாழ்வில் நம்பிக்கையின்மை இவையெல்லாம் பெண்களை தனியே வாழ வைத்து விடுகின்றன. சுமார் 27 விழுக்காடு குழந்தைகள் தாயிடம் வசிப்பவர்கள் தானாம். இந்த குடும்பங்களில் 40 சதவீதம் வறுமையில் வாடுவதாய் சொல்கிறது அந்த ஆய்வு.

பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் பெரும்பாலும் சிக்கல் எழுவதில்லை. வசதி படைத்த வீடுகளில் வளரும் பிள்ளைகள் நல்ல உயர் நிலையை அடைவார்கள் என்கிறார் இங்கிலாந்தின் மனநல பேராசிரியர் மைக்கேல் லேம்ப். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு இதை நிரூபித்திருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்குத் தான் அதிக சிக்கல். குறைந்த வாடகையில் வீடு, குறைந்த விலையில் பொருட்கள் என பணமே இவர்களுடைய வாழ்க்கையின் பயணத்தை முடிவு செய்கிறது. இந்த போராட்டங்களின் விளைவாக, சுமார் 76 விழுக்காடு தாய்மார்கள் தேவையான 8 மணி நேர தூக்கத்தைப் பெறுவதேயில்லை என்கிறது மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்று.

இப்படியெல்லாம் கஷ்டத்தில் அல்லாடும் பெண்களுக்கு சமூகம் கை கொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பும், அங்கீகாரங்களும் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கிறது.

பெண்களால் குழந்தைகளைத் தனியே வளர்க்க முடியாது என்பதெல்லாம் சும்மா என்கிறது அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு. தனியே வாழ்க்கையை நடத்தும் பெண்கள் குழந்தைகளை வெற்றிகரமான வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லமுடியும் என அடித்துச் சொல்கிறது இது. ஆனால் அதற்காக அவள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை !

அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் காட்டாமல் இயல்பாய் இருப்பது. பொறுமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது. நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் அனைத்தையும் எதிர்கொள்வது. என தனியே வாழும் அன்னையரின் ஒற்றை வாழ்க்கை ஓராயிரம் வித்தியாசமான பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது !

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

 

கிடைக்கும் போனஸ் பணத்தில் ஏசி வாங்க வேண்டும், டி.வி வாங்க வேண்டும், பிரிட்ஜ் வாங்க வேண்டும் என திட்டமிடுவது சகஜம். அப்படி காத்திருந்து காத்திருந்து வாங்கும் பொருள் நமக்கு தலைவலியாய் மாறி விடக் கூடாது. அதற்கு கொஞ்சம் விஷயங்களை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

1. எந்தப் பொருள் வாங்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்தப் பொருளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அதே பொருள் அதே வசதிகளுடன் வேறு பிராண்டில் என்ன விலை என்பதைப் பாருங்கள். எந்தக் கம்பெனி நம்பிக்கையானது, எது அதிக கேரண்டி தருகிறது என்பதையெல்லாம் அறிந்தபின் முடிவெடுங்கள்.

2. இந்த விலையில் தான் பொருள் என முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் அந்த விலையில் கிடைக்கக் கூடிய நல்ல பொருள் எது என உங்கள் தேடுதல் கூர்மையாகும். தேவையில்லாமல் ஆசைப்பட்டு விழா நாளில் மனவருத்தம் கொள்ள வேண்டியிருக்காது.

3. பொருளை வாங்கும் முன் அந்த பொருள் குறித்த விமர்சனங்கள், அலசல்கள் போன்றவற்றை கவனமாய் படியுங்கள். விளம்பரங்களைப் பார்த்து உடனே வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதீர்கள். இணையத்தில் துழாவினால் அக்கு வேறு ஆணி வேறாக தகவல்களை அள்ளித் தருவார்கள்.

4. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, ஏசி போன்றவற்றை “பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறதே” என வாங்காதீர்கள். எப்படி அதைப் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை பேர் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை முறை பயன்படுத்தப் போகிறீர்கள். எந்த அறையில் அதை வைக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

5. “மின்சாரத்தைச் சேமிக்கும்” என நட்சத்திர அடையாளம் போட்டிருக்கும் பொருட்களை வாங்குவது நல்லது. அவை உங்களுடைய செலவையும் குறைக்கும். நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை நீங்கள் சேமிக்கும் போதும் நாட்டுக்காய் ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாராக்குகிறீர்கள் என்பது தான் பொருள்.

6. பொருள் வாங்கும் போது கேரண்டி அட்டை, வாரண்டி அட்டை, மேனுவல், ரசீதுகள் போன்ற அனைத்தையும் கவனமாய் கேட்டு வாங்குங்கள்.

7. பில்லைச் சரிபார்ப்பதும், கேரண்டி அட்டையில் சீல், கையொப்பம் எல்லாம் இடப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதும் அவசியம். வாங்கும் போது கடைக்காரர்கள் உங்களிடம் அன்பாய் சிரித்துப் பேசுவார்கள். பழுது என்று போனால் வேறு விதமாக உங்களிடம் நடந்து கொள்வார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

8. பொருளை வாங்கி வீட்டிக் கொண்டு வைத்து விட்டு எப்படி இயக்குவது என கற்றுக் கொள்ள வேண்டாம். கடையிலேயே இயக்குவது குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ரிமோட் சமாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

9. வாங்கும் போது மேனுவலைப் பார்த்து பொருளுடன் எல்லா இணை பொருட்களும் தரப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் எக்ஸ்டா இணைப்புகளை இலவசமாகக் கொடுப்பார்கள். மேனுவலைப் பார்த்தால் தான் அது தெரியும்.

10. சர்வீஸ் செண்டர் எங்கே இருக்கிறது ? ஒரு வருடத்துக்கான சர்வீஸ் ஒப்பந்தம் இட்டால் எவ்வளவு பணம் ஆகும் ? இந்த நிறுவனத்தின் சர்வீஸ் தரம் எப்படி இருக்கிறது ? சர்வீஸ் விலை எப்படி ? என்பதை முழுமையாய் அறிந்து கொள்ளுங்கள். பொருள் வாங்கியபின் நமக்குத் தேவை தரமான சர்வீஸ் தான். “சர்வீஸ் நல்லாயில்லை” என்றால் பொருளை வாங்காமல் இருப்பது விவேகம்.

பெண்கள் “வாயாடி”களாவது நல்லது !

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்கலாமே ..

எனது ஜூ.வி கட்டுரை

Michael-Jacksonமைக்கேல் ஜாக்ஸனின் இசை தான் ஓயாது என்று நினைத்தால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகளும் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. என் தம்பி மைக்கேலை பணத்துக்காக கூட இருந்தவர்களே கொலை செய்து விட்டார்கள் என கண்ணீரும் கம்பலையுமாய் அவருடைய சகோதரி லே டோயா சில நாட்களுக்கு முன் கொளுத்திப் போட்ட திரி, சரவெடியாய் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு மைக்கேல் ஜாக்ஸனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நீண்ட மௌனம் காப்பது பலருடைய மனதில் தீவிர சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. ஏதோ பிரம்ம ரகசியம் போல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் அதிலுள்ள மிக முக்கியமான தகவலை மைக்கேலின் நீண்டகால நண்பரான டெரி ஹார்வி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மைக்கேலின் மரணத்துக்குக் காரணம் அவரது உடலில் அளவுக்கு அதிகமாய் செலுத்தப்பட்டிருந்த புரோபோஃபோல் என்னும் மருந்து தான் என்கிறது குடும்பத்தினர் செய்த இரண்டாவது “போஸ்ட்மார்ட்ட” ரிப்போர்ட். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான். இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இன்னும் சில தினங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என பகீர் தகவலை வெளியிடுகிறார் அவர்.

டிப்ரிவேன் தயாரிப்பாக வரும் இந்த மருந்து அறுவை சிகிச்சை நேரத்தில் நோயாளிகளை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆபரேஷன் தியேட்டருக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இந்த மருந்தைப் பயன்படுத்துவது சட்ட விரோதம். ஆனால் மைக்கேல் மரணமடைவதற்குச் சற்று நேரத்துக்கு முன் அவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டிருந்தது என்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் !

அப்படிப் பார்த்தால் மைக்கேலின் வீட்டில் வைத்து மைக்கேலுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தானே பொருள் ? ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே அனுமதிக்கப்படாத மருந்து மைக்கேலின் வீட்டில் எப்படி வந்தது ? அதை அவருக்குப் பரிந்துரைத்தது யார் ? கொண்டு வந்து கொடுத்தது யார் ? என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு தீவிரமாய் களத்தில் குதித்திருப்பது நீங்கள் நினைப்பது போல அமெரிக்கப் போலீஸ் அல்ல ! டி.இ.எ எனப்படும் டிரக் என்ஃபோர்ஸ்மெண்ட் அட்மினிஷ்ட்டிரேஷன் ( Drug Enforcement Administration) அமைப்பு.

அவர்களுக்கு இதில் என்ன அக்கறை என கேட்கிறீர்களா ? அமெரிக்காவில் எங்கெங்கே சட்ட விரோதமாக மருந்துகள் உலவுகிறதோ அங்கெல்லாம் குதித்து விசாரிப்பது தான் டி.இ.எ வின் தலையாய கடமை. அந்த விஷயத்தில் இவர்கள் எஃப்.பி.ஐ க்குப் பக்க பலமாய் இருக்கிறார்கள். “அமெரிக்காவில் போலி மருந்துகள் தடைசெய்யப்பட்டன, திருப்பி அனுப்பப்பட்டன, அழிக்கப்பட்டன” என்றெல்லாம் அடிக்கடி வரும் செய்திகளுக்குப் பின்னால் கடுமையாய் உழைப்பவர்கள் இந்த டி.இ.எ அமைப்பினர் தான். 1973ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் காலத்தில் துவங்கப்பட்டு இன்றைக்கு வெகுவாய் வளர்ந்திருக்கிறது இந்த அமைப்பு.

இவர்கள் மைக்கேல் மரணத்தின் பின்னணியை அலசக் களமிறங்கியிருப்பது மைக்கேலின் குடும்பத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. மைக்கேலின் மரணம் ஒரு கொலை எனும் கண்ணோட்டத்தில் தான் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்புபவர்களில் மைக்கேல் குடும்பத்தினரை விட இப்போது இவர்கள் தான் தீவிரமாய் இருக்கிறார்கள்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், குற்றவாளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் போட்டியின்றிப் பெறுபவர்கள் இரண்டு டாக்டர்கள். ஒருவர் மைக்கேலின் பர்சனல் டாக்டர். கான்ராட் முர்ரே. இன்னொருவர் மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னும் ஒருவர் இந்த குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார் அவர் பெயர் விரைவில் தெரியவரும் என்கிறார் டெரி ஹார்வி.

விஷயம் கேள்விப்பட்டதும் டாக்டர் முர்ரே பதட்டமடைந்து “ஐயோ… நான் மைக்கேலின் உடலில் புரோபோஃபோல் மருந்தைச் செலுத்தவே இல்லை. எனக்கும் மைக்கேலின் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னை நம்புங்கள்” என புலம்பித் தள்ளியிருக்கிறார். “இன்னொரு முறை உங்களை விசாரிக்க வேண்டும் வாருங்கள்” என காவல் துறை அணுகியபோது, இப்போதைக்கு முடியாது என தனது வக்கீல் மூலமாக மறுத்து போலீஸ் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் வார்த்திருக்கிறார்.

மைக்கேலின் கழுத்திலும், உடல் முழுவதும் சரமாரியாய் இருந்த ஊசி குத்திய தடங்கள் ஏதோ ஒரு மாபெரும் மர்மத்தை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருப்பதாகவே கருதுகின்றனர் மைக்கேலின் குடும்பத்தினர்.

டாக்டர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்படும், அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என தகவல்கள் காட்டுத் தீயாய்ப் பரவினாலும், லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள். அப்படியெல்லாம் சட்டென ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. இப்போதைக்கு டாக்டர்களிடம் கேட்கப்பட்டிருப்பது விரிவான மருத்துவ அறிக்கைகள் மட்டுமே. யாரையும் இதுவரை சந்தேகப்பட்டு விசாரிக்கவில்லை. ஒன்றிரண்டு டாக்டர்கள் என்றல்ல, மைக்கேலுக்கு வைத்தியம் பார்த்த எல்லா டாக்டர்களிடமும் விரிவான அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. எல்லா அறிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்த பின்பு தான் அடுத்த கட்ட விசாரணைக்கான முடிவு எடுக்கப்படும்.

ஒருவேளை டாக்டர்கள் மீது விசாரணை வந்தாலும் கூட அது கொலைக் குற்றம் எனும் கண்ணோட்டத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. மருந்தை மருத்துவமனைக்கு வெளியே பயன்படுத்தியது, வேறு பெயர்களில் வாங்கியது, அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தியது போன்ற வழக்குகளின் கீழ் தான் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்கின்றனர் அவர்கள்.

இந்த லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகளின் பேச்சை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் வெஸ்னா மாராஸ் எனும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவர். இது போன்ற பல வழக்குகளுக்காக வாதாடிய அனுபவமுடையவர் அவர். டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரைப்பதும், அதன் மூலம் சில சிக்கல்கள் எழுவதும் சகஜமே. அதை பெரிய கிரிமினல் வழக்குகளாய் பார்க்க முடியாது என்பதும் உண்மை தான்.

ஆனால் மைக்கேலின் வழக்கில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. மைக்கேலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது புரோபோஃபோல் எனும் மருந்து. அதைப் பயன்படுத்த “அனெஸ்டீஷியன்ஸ்” க்கு மட்டுமே அனுமதி உண்டு. ஒருவேளை டாக்டர் முர்ரே அந்த மருந்தை மைக்கேலின் வீட்டில் பயன்படுத்தியிருந்தால், அவர் அனெஸ்டீஷியனாய் இல்லாத பட்சத்தில் இது ஒரு கொலை வழக்காக மாறும் சாத்தியம் உண்டு என்கிறார் அவர்.

எது நடந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் ஹாலிவுட் அதிரடித் திரைப்படம் போல காட்சிகள் பட் பட்டென மாறி விடாது. விசாரணைகள் முடியவும், சில முடிவுகள் வெளியே தெரிய வரவும் சில பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறார் அவர்.

மைக்கேலின் மரண விவகாரம் இப்படி இருக்க, மைக்கேல் ஜாக்சனைக் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் அடங்கிய பயோகிராபி ஒன்று அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது.

மைக்கேல் ஒரு ஹோமோ ! அவருக்கு தோழிகள் கிடையாது ஆனால் நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. அவர்களைக் “குஷி”ப்படுத்துவது மைக்கேலுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பெண்களைப் போல உடையணிந்து வெளியே செல்வார். இவருக்காகவே சாதாரண மேன்ஷன்களில் காத்திருக்கும் ஆண்களுடன் உல்லாசமாய் இருப்பார் என மைக்கேலின் அந்தரங்கத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த நூல்.

“Unmasked: The Final Years of Michael Jackson “ எனும் இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் ஹால்பர் தான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என அடித்துச் சொல்கிறார். மைக்கேல் தொடர்பு வைத்திருந்த பல ஆண்களை எனக்குத் தெரியும். ஆண்களுடன் உறவு வைக்கும் போது “இதோ… பாப் உலக மன்னன் உங்கள் லாலிபாப்பை….” என்று தான் ஆரம்பிப்பார் என மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு விவரிக்கிறார் மனுஷன்.

மைக்கேலின் ஆண் நண்பர்கள் பலரை நான் தனியே சந்தித்தேன். அதில் முக்கியமான ஒருவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் லாரன்ஸ். இவர் மைக்கேலுடன் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஹாலிவுட் ஹில்ஸ் வீட்டில் வைத்து உறவு கொண்டதாய் வரி வரியாய் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

இப்படியெல்லாம் மைக்கேலின் அந்தரங்கத்தை நூலாக்கி காசு பார்த்தவர், இப்போது மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான் எனக் கூறியிருக்கிறார். தனக்குக் காவல் துறையில் ஏராளம் நண்பர்கள் உண்டு என்றும், மைக்கேலின் மரணம் கொலை எனும் கோணத்தில் தான் அணுகப்படுகிறது என்றும், மூன்று டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு விரைவில் நடக்கும் எனவும் தன் பங்குக்குப் பேசி பரபரப்பைக் கூட்டுகிறார் அவர்.

இதே இயான் ஹால்பர் தான் “மைக்கேலின் வாழ்க்கை” மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே என கடந்த ஆண்டு பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது கிட்டத்தட்ட நிஜமாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய கருத்துக்களும் சிறப்புக் கவனத்தில் பார்க்கப்படுகின்றன.

இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று புதிய திடுக் தகவலை வெளியிட்டிருக்கிறார். மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். மைக்கேலின் முதல் இரண்டு குழந்தைகளுக்கும் இவர் தான் ‘பயலாஜிகல்’ அப்பாவாம். அதாவது இவருடைய உயிர் அணுக்களிலிருந்து தான் மைக்கேலுக்குக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனவம். யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மைக்கேலின் மனைவியிடம் கேட்கட்டும், அதிலும் நம்பிக்கையில்லையேல் டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என அதிரடியில் இறங்கியிருக்கிறார் டாக்டர்.

ஆளாளுக்கு குற்றச்சாட்டுகளையும், பரபரப்புகளையும் கிளப்பிக் கொண்டிருப்பதால், நிம்மதியான அடக்கம் கூட கிடைக்காமல் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது மைக்கேல் ஜாக்ஸன் என்னும் பாப் இசை மன்னனின் உடல்!

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !

technology-how-to-take-great-photos-on-y

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.

அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.

இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

x

நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…

கட்டுரை : பதறாயோ நெஞ்சமே…

Del641732002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி.

குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எனும் பெயரிலிருந்து ஆப்பிரிக்கா கீழே இறங்க முதலிடத்தில் இந்தியா அவமானகரமாக அமர்ந்திருப்பதாகச் சொல்கிறது யூனிசெஃப் அறிக்கை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரம் பட்டை தீட்டுதல், சிவகாசி சாத்தூர் அதைச்சுற்றிய பகுதிகளில் தீப்பெட்டி செய்தல் மற்றும் பட்டாசு செய்தல், பீடி சுற்றுதல்,  தென் மாவட்டங்களில் செங்கல் சூளைகள், முந்திரி ஆலைகள், காஷ்மீரில் கம்பளம் செய்யும் தொழில், உத்திரப்பிரதேச பானை செய்யுமிடங்கள், பிரோசாபாத்தில் கண்ணாடி தொழிற்சாலை இவை தவிர உணவகங்கள், சாலைகள், வீடுகள் எங்கும் இன்னும் இருக்கிறார்கள் பல இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள். பதினைந்து வருடத்துக்கு முந்திய கணக்கெடுப்பே இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் கல்வி கற்கவில்லை என்கிறது. இப்போது அந்த எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 5 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக சில கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

குமரி மாவட்டத்தின் செங்கல் சூளைகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் ஏராளமான அளவில் பணி செய்கிறார்கள். மண்ணைச் சேறாக்குவது, அதை மிதிப்பது, செங்கல் அறுப்பது, அதை அடுக்குவது, சுமப்பது என அனைத்து விதமான பணிகளையும் சிறுவர்கள் செய்கிறார்கள், மிகவும் குறைந்த ஊதியத்தில்.

இதைத் தவிர குமரிமாவட்டத்தில் சிறுவர்கள் முந்திரி ஆலைகளில் அதிகமாக வேலை செய்கிறார்கள். முந்திரி ஆலைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளே வேலைக்குச் செல்கிறார்கள். வறுக்கப்பட்ட முந்திரியை உடைப்பது, அதன் மெல்லிய தோலை நீக்குவது என பல வேலைகளை சிறுமிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த புகையினால் பல நோய்களும், முந்திரியின் திரவத்தினால் தோல் தீய்ந்து போதல் போன்ற பல அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.

பதிமூன்று, பதினான்கு வயதுக் குழந்தைகள் பலர் வீடுகளில் வேலைக்காக சேர்க்கப்படுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என எல்லா வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டிய சூழல். இரவில் தாமதமாய் தூங்கி பகலில் விடியும் முன்பே எழும்பும் இந்த சிறுமிகளின் மன உளைச்சல் அளவிட முடியாதது. படிக்கும் ஆர்வம் இருக்கும் பல சிறுமிகள் ஒரு அடிமை நிலையில் தங்கள் வாழ்க்கையை சமையல் கட்டில் இழந்து விடும் சூழல் இன்று பல இடங்களில்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசு வீட்டு வேலை மற்றும் உணவகங்களில் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. எனினும் நிலமை சீரடைந்தபாடில்லை. இது மட்டுமன்றி குழந்தைத் தொழிலாளர்கள் தடை செய்யப்படவேண்டிய இடங்கள் பல உள்ளன. அரசு சார் நிறுவனங்கள் பலவற்றில் குழந்தைகள் இன்னும் இருக்கிறார்கள்!

நெசவுத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் பல ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள். நெசவுத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்குக் காரணம் அவர்களுடைய சிறு கைகள் நூல் இழைகளை பக்குவமாய் சரிசெய்யும் என்பது தான். சிறுவர்களை வைத்து சிறு சிறு பொருட்களை விற்கச் செய்வது, அவர்களை ஷூ பாலிஸ் போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதும் இன்று பரவலாக நடந்து வருகிறது.

சிறுவர் சிறுமியரை போரிலும் பல இயக்கங்கள் பயன் படுத்துகின்றன. அவர்களால் பிறருடைய கவனத்தைக் கவராமல் தப்பிக்க முடியும் என்பதும், அவர்களை எளிதில் கட்டளைகளால் கட்டுப்படுத்தலாம் என்பதும், அவர்களுக்கு மூளைச் சலவை செய்வது எளிது என்பதும் முக்கிய காரணங்களாகும்.

எண்பதுகளில் ஈராக் ஈரான் போரின் போது சிறுவர்கள் பெருமளவில் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் நிலங்கள் வழியாக சிறுவர்களை அனுப்பி சோதிப்பதும், அவர்களை போரில் வலுக்கட்டாயமாக நுழைப்பதும் என அரசுகள் சிறுவர்களை கொடுமைப்படுத்தின. சுமார் மூன்று இலட்சம் குழந்தைப் போர் வீரர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் இறந்து, பலர் காயமுற்றும் தங்கள் வாழ்வின் மகத்துவமான பகுதியை இழந்துவிட்டனர் என்பது வேதனையான செய்தி. பல இயக்கங்கள் சிறுவர் சிறுமியரை போதைக்கு அடிமையாக்கி போரில் ஈடுபடச் செய்வதுண்டு. உள்ளூரிலேயே தேர்தல் காலங்களில் சிறுவர்கள் பல்வேறு விதமான அரசியல் வேலைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள், அதை அரசும் கண்டு கொள்வதில்லை.

சர்க்கஸ் போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியர் சாகசங்கள் செய்தும், கழைக்கூத்தாடிகளாகியும் வேலை செய்கின்றனர்.

இவை தவிர குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் சர்வதேச அளவில் கவலைக்குரிய ஒன்றாகவே மாறிவருகிறது. பாலியல் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தான் சமுதாயத்தின் மிகப்பெரும் அவமானம் எனக் கருத வேண்டும். குறைந்த பட்ச பணத்திற்காக மழலைகளின் எதிர்காலத்தை பாலியல் பயங்கரத்துக்குப் பலியிடுவதில் பல பெற்றோரே உடந்தையாய் இருக்கிறார்கள் என்பது உறைய வைக்கும் உண்மை.

சமீபத்தில் இந்தியாவில் ராஜமுந்திரி என்னுமிடத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய செயலை cnn-ibn வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். யூனிசெஃப் கணக்கெடுப்பு, சுமார் ஒரு இலட்சம் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் ஒவ்வோர் இரவும் பத்து முறை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறி பதை பதைக்க வைக்கிறது. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பது கவனிக்கப்படத் தக்க ஒன்று. பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளில் ஐவரில் ஒருவர் ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சித் தகவல்.

நோய்டா கொலையும், இந்தியாவின் பெருநகரங்களில் அடிக்கடி நடக்கும் குழந்தைகள் கடத்தலும், கொலையும் எல்லாமே குழந்தைகள் மீதான பாதுகாப்பு உணர்வு ஒரு சமூக உணர்வாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பறை சாற்றுகின்றன.

பண்டைக்காலங்களில் விவசாயத்தை நம்பியே வாழ்ந்த குடும்பத்தினர் தங்கள் குழந்தைகள் கல்வியறிவு பெறுவதைவிட அனுபவ அறிவு பெறுதல் சிறந்ததென்று விவசாயத்தில் ஈடுபடுத்தினர். அதை அவர்கள் குழந்தைத் தொழிலாகப் பார்க்கவில்லை. குடும்பத்திற்குத் தேவையான பணியாகவே கருதினார்கள். பின் காலம் செல்லச் செல்ல மாறிவரும் சூழலுக்கும், அமைப்புக்கும் ஏற்ப குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளும் மாறின.

நேபாளத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் உள்ளனர். சுமார் அறுபது சதவீதத்துக்கும் மேலான குழந்தைகள் இங்கே விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிற இடங்களில் குடிபெயரும் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பரிதாப நிலையையே கொண்டுள்ளனர். மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களும் இந்த நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் நிலை இன்று வளரும் நாடுகளில் மட்டுமே பெருமளவில் இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வறுமையே இதன் முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுவதனால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை குடும்பங்களில் செய்யாமல் குழந்தைத் தொழிலை அறவே ஒழிப்பது சாத்தியமில்லை. சட்டங்களினால் குழந்தைகளை வேலைக்கு வருவதை நிறுத்தும் அதே நேரத்தில் அந்த குழந்தைகளுக்குக் கல்வியை அளிப்பதற்குரிய வசதிகளையும் அரசு செய்தல் அவசியம்.

நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குழந்தைத் தொழிலாளர்கள் நிறைய பேர் இருந்த யூ.கே போன்ற பல மேலை நாடுகள் இன்று முழுவதும் அதிலிருந்து விடுபட்டு விட்டன. அதற்கு சட்டங்களும் அரசின் தொலைநோக்குப் பார்வையுமே காரணம் எனலாம்.

யூ.கேவில் குழந்தைப் பராமரிப்புக்கு ஏராளம் நலத் திட்டங்கள் உள்ளன. தாய்மை நிலையிலுள்ளவர்களுக்கு, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, தத்து எடுத்துக் கொண்டவர்களுக்கு என பல சலுகைகள் உள்ளன. பெற்றோருக்கு வரிகுறைப்பு , குழந்தை பராமரிப்பு நிதி என பல அமலில் உள்ளன.

தாய்மை நிலையில் உள்ளவர்களுக்கு முப்பத்தொன்பது வாரங்கள் வரை அரசே உதவி செய்கிறது. மருத்துவ செலவுக்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாயை யூ.கே அரசு குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அளிக்கிறது.

குழந்தையின் பதினாறு வயது முடியும் வரைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை நலத் திட்ட உதவிகளை அரசு செய்கிறது. கல்வி கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு 20 வயது வரை அரசு உதவி செய்கிறது. குறைந்த வருமானம் உடைய பெற்றோரின் குழந்தைகளுக்கு உணவு, பள்ளிச் சீருடை, கட்டணம் முதலியவற்றை அரசே செலுத்துகிறது. குழந்தைகளைப் பராமரிக்கும் பாதுகாவலர்களுக்கும் அரசு பல சலுகைகள் நல்குகிறது.

பிரான்ஸ் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை குழந்தை நலனுக்காய் நல்குகிறது. தாய்மார்களின் மருத்துவச் செலவு, பெற்றோருக்கு உதவித் தொகை, கல்வித் தொகை தவிர ரெயில்வே போன்ற இடங்களிலும் 40 விழுக்காடு குறைந்த கட்டணத்தின் இருபது வயது வரை உள்ளவர்கள் பயணிக்க வகை செய்கிறது. வளர்ந்த நாடுகளில் அமலில் உள்ள இதுபோன்ற நலத்திட்டங்கள் அங்கே குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டது.

நெதர்லாந்து நாட்டில் 1900ல் ஆறாம் வயது முதல் பன்னிரண்டாம் வயது வரையுள்ள சிறுவர் சிறுமியருக்குக் கல்வி கட்டாயமாக்கப் பட்டது. முதலில் வெற்றி பெறாமல் இருந்த இந்த திட்டம் அரசின் தீவிர கண்காணிப்பினாலும், அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளினாலும் வெற்றியடைந்தது. முதலில் வெறும் 9 விழுக்காடு சிறுவர் சிறுமியர் மட்டுமே கல்விக்கு அனுப்பப் பட்டனர்.

அதன்பின் 1969ம் ஆண்டு ஆறாம் வயது முதல் பதினைந்தாம் வயது வரை கட்டாயக் கல்வி எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது மேலும் திருத்தப்பட்டு 1975ம் ஆண்டு ஆறு முதல் பதினாறுவயது வரை என்று நிர்ணயிக்கப்பட்டது.

பெல்ஜியம் நாட்டிலும் 1914ல் ஆறு வயதுமுதல் பன்னிரண்டு வயது வரை கட்டாயக் கல்விமுறை அமலுக்கு வந்தது. அது வளர்ச்சியடைந்து 1983ம் ஆண்டில் ஆறு வயதுமுதல் பதினெட்டு வயதுவரை என்றானது. பிரிட்டனிலும் 1857க்கு முன் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியறிவற்றே இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலமையோ வியப்பூட்டுகிறது.

ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைவு 1989ம் ஆண்டு ‘குழந்தைகளின் உரிமை’ பற்றிய ஒப்பந்தம் ஒன்றை இட்டன. அதன் படி சிறுவர்களுக்கு 52 உரிமைகள் இருப்பதாக அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. 189 நாடுகளில் இதுவரை அதில் கையொப்பமிட்டுள்ளன.

குழந்தைகள் குழந்தைத் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படாமலும், விளையாட்டு மற்றும்  பொழுதுபோக்குகளில் ஈடுபடவும், வீடுகளில் தங்கி வளரும் உரிமையையும், ஆரோக்கியமான வாழ்வுக்கு உரிமையுடையவர்களாகவும், கல்விக்கு உரிமையுடையவர்களாகவும், கருத்துச் சுதந்திரம் உடையவர்களாகவும், வன்முறைகளிலிருந்து காப்பாற்றப்படவேண்டியவர்களாகவும் குழந்தைகளை அந்த ஒப்பந்தம் சித்தரித்தது.

எளிய வேலையோ, கடினமான வேலையோ குழந்தைகள் தங்களுடைய வாழ்வின் அடிப்படையாகிய கல்வி போன்ற உரிமைகளை விட்டு விட்டு வேலை செய்வதே மனித உரிமைக்கு எதிரானதாகும் என்பதை அவை பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமாக வலியுறுத்தின.

மேலை நாடுகளில் 1851 ல் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை விதிகள் எட்டு வயதுக்குக் குறைந்தவர்களை வேலைக்கு வைப்பதை தடை செய்தது. தங்கச் சுரங்கம் போன்ற இடங்களில் வயது பத்து என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் காலம் செல்லச் செல்ல அந்த வயது வரம்புகள் ஒத்துக் கொள்ள முடியாதவை என்று விலக்கிக் கொள்ளப்பட்டன. குழந்தைகள் வேலைக்குச் செல்வதே தவறு என்பது உணரப்பட்டது.

வீடுகளில் இருக்கும் புகைபோக்கிகளைச் சுத்தம் செய்வதற்காக பயிற்சி பெற்ற சிறுவர்கள் புகை போக்கிகளில் ஏறி சுத்தம் செய்வது மேலை நாடுகளில் முன்பு இருந்த வழக்கம். பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு இந்த சிறுவர்கள் ஆளாவதாகச் சொல்லி 1875ம் ஆண்டு அது தடை செய்யப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் கூடிய ஒருங்கிணைந்த நாடுகளின் ‘மில்லேனியம் டெவலப்மெண்ட் கோல்ஸ்’ எனும் திட்டம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாகக் கையில் எடுத்துள்ளது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை ஒரு சமூக, இன, நாட்டுப் பிரச்சனை அல்ல எனவே அதை ஒரு சர்வதேசப் பார்வையில் பார்க்கவும், ஒழிக்கும் முயற்சிகள் எடுக்கவும் இந்த திட்டம் முயல்கிறது.

உலக குழந்தைத் தொழிலாளர்களில் 8 கோடி பேர் கடினமான ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. தெருவில் பிச்சையெடுத்து அலையும் சிறுவர்கள் ஆப்பிரிக்காவில் மட்டும் 10 இலட்சம் பேர் இருக்கின்றனராம்.

ஒரு குடும்பத்தின் வருமானத்தில் எட்டு முதல் பன்னிரண்டு விழுக்காடு வரை குழந்தைகள் சம்பாதிப்பதாகவும், இதனால் குழந்தைத் தொழிலின் முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது குடும்ப சூழல் என்றும் யூனிசெஃப் தெரிவிக்கிறது.

சமூகத்தின் வேர்களில் கரையானாக அரித்துக் கொண்டிருக்கும் இந்த சிறுவர் தொழில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து மனிதநேயமும், தொலை நோக்குப் பார்வையும், சமூக அக்கறையும் கொண்ட எவருக்கும் இருக்கப் போவதில்லை. இதை ஒழிக்க முக்கியத் தேவை என்ன ? கல்வி !

கல்வியைக் கட்டாயமாக்கும் எந்த ஒரு மாநிலமும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது கேரள அரசு. மத்திய அரசு கல்விக்கென ஒதுக்கும் நிதியை விட அதிகமாக சுமார் 12 சதவீதம் அளவுக்கு கேரள அரசு ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கியதால் இன்று கல்வியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாய் திகழ்கிறது. அங்கே குழந்தைத் தொழிலாளர்களே இல்லை எனலாம். அப்படி யாரேனும் தென்பட்டால் அவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.

கல்விக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்பும்போது தற்காலிகமாய் தடைபட்டுப் போகும் குடும்ப வருமானம் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தின் எழுச்சிக்கே அடித்தளமாக அமைகிறது என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்வியறிவு பெறாமல் சிறு சிறு வேலைகளில் ஈடுபடும் சிறார்கள் தாங்கள் சூழ்ந்திருக்கும் மக்களின் பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விரைவிலேயே சமூக விரோத செயல்களைச் செய்யவும், தன்னை வாழவைக்காத சமூகத்தின் மீது வன்முறைக் கோபம் கொள்ளவும் பழகிவிடுகிறார்கள்.

2015ம் ஆண்டிற்குள் ஏழு வயதுமுதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்த சர்வதேசத் திட்டம் செயலாக்கம் பெற்றால் பல பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு அது அடித்தளமாக அமையும்.

கல்வி அளிக்க முடியாத சூழலில் குழந்தைகளை வேலை செய்வதைத் தடுப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் வெறுமனே இருந்துவிட முடியாது வாழ்க்கைக்குரிய சூழல் அவர்களுக்காய் அமைக்கப்பட வேண்டும். இன்று பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு ஆண் பெண் ஏற்றத் தாழ்வும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

எகிப்து, ஜிம்பாவே போன்ற நாடுகளில் அதிக அளவில் துவங்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைகளினால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1997க்குப் பிறகு பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிப்பதும், அந்த கல்வியைக் குழந்தை பெறுவதற்குரிய வாகன வசதிகளை செய்வதும் என உலக நாடுகள் பலவும் இப்போது குழந்தைத் தொழிலை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது.

குழந்தைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதால் குழந்தைகளின் கல்விச் செலவும், அந்த குழந்தையினால் வந்து கொண்டிருந்த வருமான இழப்பு எனும் இரட்டை இழப்பிற்கு குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. இதற்குரிய மாற்று வழிகளை குடும்பங்களும், அரசும் முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் வேலைக்குச் செல்தல் என்பது ஒன்று முதல் இரண்டு சதவீதம் மட்டுமே. அது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் இருபதை எட்டுகிறது. காரணம் வளர்ந்த நாடுகளில் காணப்படும் சட்டங்களின் செயலாக்கமும், விழிப்புணர்வும், சமூக அக்கறையுமே.

இந்தியாவில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் சட்டம் அமலில் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே அந்த விவரங்களைக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மூவாயிரத்து முப்பத்தெட்டு பள்ளிக்கூடங்கள் உள்ளன. தமிழகத்தில் 160 பள்ளிக்கூடங்களும், உத்திரப் பிரதேசத்தில் அதிக பட்சமாக 1075 பள்ளிக்கூடங்களும் உள்ளன.

உத்திரப்பிரதேசத்தில் தொழிலாளர் துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தான் சிறுவயதில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் அதை மறுத்து கல்வியே முக்கியம் என கைக்கொண்டதால் இன்று உயர் நிலையில் இருப்பதாகவும் சொல்லியிருப்பது குழந்தைத் தொழிலாளர் முறை எத்தனை உயரதிகாரிகளை முளையிலேயே கொல்கிறது என்பதைச் சொல்கிறது.

இந்தியாவில் குடும்பத்தாரால் நடத்தப்படும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை அரசு தடை செய்யவில்லை. எனவே பெரும்பாலான கிராமப்புறங்களில் சொந்த நிலத்தில் பணிசெய்யும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

ஏராளம் சட்டங்கள் எழுத்து வடிவில் இருந்தும் இன்னும் நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை ஏன் முற்றிலும் ஒழியவில்லை. ஒரு முக்கியமான காரணமாக தொழிற்சாலை நிறுவனத்தினர் கொடுக்கும் முட்டுக்கட்டை என்கின்றனர் விமர்சகர்கள். கம்பள ஆலை போன்றவற்றில் குழந்தைகளே பெருமளவில் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். அரசு கண்டு கொள்வதில்லை !

குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு வறுமை மட்டுமே ஒரே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகள் பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. வறுமையுடன் சேர்த்து, பெற்றோர் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் வயோதிகமாகவோ, ஊனமுற்ற நிலையிலோ இருத்தல், தாய் விதவையாக இருத்தல், பெற்றோர் குடி போன்ற போதைகளுக்கு அடிமையாய் இருத்தல் போன்றவையும் குழந்தைத் தொழிலாளர் நிலையை வளர்க்கின்றன.

மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும். குறிப்பாக குழந்தைகளால் வரும் வருமானம் தடைபடும் குடும்பங்களுக்கு அரசு ஏதாவது நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்க காவல் துறையில் தனி குழு அமைத்தல், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களை கடுமையாக தண்டித்தல், கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு இன்னொரு காரணமாக படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் எனும் நம்பகத் தன்மை இன்மையையும் குறிப்பிடலாம். பொறியாளர் தேர்வு முடித்தவர்களில் அறுபது விழுக்காட்டினரும், எம்.பி.எ படித்தவர்களில் எழுபத்தைந்து விழுக்காட்டினரும் இன்று வேலையின்றி அலைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எந்த வகையிலும் கல்வி கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை ஏற்படுத்தப் போவதில்லை. நம்பகத் தன்மையை அரசு உருவாக்க வேண்டும்.

கடனுக்காகவும், முன்பணத்துக்காகவும் கொத்தடிமைகள் போல உழைக்கும் சிறுவர்கள் பலர் பட்டாசு ஆலைகளில் உள்ளனர். இவர்களுடைய உளவியல் ரீதியான பாதிப்பு சொல்லக் கூடியதல்ல. கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்படும் சிறார்கள் அடைக்கப்படும் மறுவாழ்வு மையங்களின் நிலமையோ, சீர்திருத்தப் பள்ளிகளின் நிலமையோ கொத்தடிமை நிலையை விடப் பரிதாபம். மாதம் எட்டு ரூபாய் கூட இல்லை என்று அதிர்ச்சிச் செய்தி அளிக்கின்றன ஊடகத் தகவல்கள்.

2002ம் ஆண்டு மத்திய அரசு 2007க்குள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியைச் சாத்தியமாக்குவோம் என்று சூளுரைத்து சர்வ சிக்ஸா அபிமன் என்றொரு திட்டத்தைத் துவங்கியது. இப்போது ஆண்டு 2009 ! நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நாமறிவோம்.

குழந்தைத் தொழிலாளர் நிலை என்பது ஏதோ சில இடங்களில் நிலவி வரும் பிரச்சனையல்ல. இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான களங்கமும், உலக அரங்கில் நமது தேசத்தின் மீது சுமத்தப்படும் அவமானமும் என்பதை அனைவரும் உணரவேண்டும். பிரச்சனைகளை களையெடுக்க அரசும், அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு உறுதுணையாய் நாம் இருக்கவேண்டியது நம் தார்மீகக் கடமை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்

“கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.

 

EFG103

 

பாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.

மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.

படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.

போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.

பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.

இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ 12சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்

 

 

 

ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.

 

சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் …  என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.

கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !

 

இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )

 

 

வயது 17 ! குழந்தைகள் 7 !!

 pamela

பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையை அடைகிறார்களாம். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். மிச்சமிருப்போர், பதின் வயதுகளிலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கவனிக்கும் பொறுப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாய்மை நிலைக்காக பள்ளிக்கூட படிப்பை விட்டு விட்டு, வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய நாடுகளின் அநேகம்.

அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பமீலா என்பவருடைய கதை அதிர்ச்சியூட்டுகிறது. பதினேழே வயதான இந்தப் பெண் இப்போது ஏழு குழந்தைகளுக்குத் தாய் !

வறுமையின் உச்சகட்டத்தில் இருக்கும் குடும்பம் அவர்களுடையது. அரசு தரும் மானியத்தை வைத்து மட்டுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழல்.

pamela21

குழந்தைக்குத் தந்தையும் பமீலாவை விட்டுவிட்டு ஓடி விட தனியாளாய் அத்தனை குழந்தைகளையும் பராமரித்து வருகிறார் இவர்.

பதினான்காவது வயதில் ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்ற உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பிய பமீலாவை, இந்த வயதில் அப்படிச் செய்வது சட்ட விரோதம் எனக் கூறி அனுப்பி விட்டனர் மருத்துவர். விளைவு இப்போது அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ! இதில் இரண்டு முறை மூன்று மூன்று குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளிக்கூட படிப்பையெல்லாம் மூட்டை கட்டி விட்டு, கிடைத்த வேலை செய்து பிழைப்பை ஓட்டும் பமீலாவை பதின் வயதுத் தாய் படும் அவஸ்தைகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

கல்வியறிவற்ற நாடுகள், படிப்பறிவுள்ள நாடுகள், வறுமை நாடுகள், வளமான நாடுகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த தவறான குடும்ப உறவுகள் குறித்த கவலை சமூக நலம் விரும்பிகளுக்கு எப்போதுமே இருக்கத் தான் செய்கிறது !