பெண்கள் ஸ்பெஷல் : குடும்பம், குழந்தை, வேலை…

தனது கைக்குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் தாய். குழந்தை எப்படியோ குப்புறப் படுத்துக் கொண்டது. தலையை நிமிர்த்த வலுவற்ற பச்சைக் குழந்தை அது. மூக்கு கட்டிலோடு ஒட்டிக் கொள்ள மூச்சுத் திணறி தவித்து, கடைசியில் தாய் வரும் முன் இறந்தே போனது அந்தக் குழந்தை. இது குவைத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

தனியே குழந்தையுடன் வாழும் தாயின் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பு எனலாம். எப்போதும் குழந்தையின் மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் தனியே செய்ய வேண்டும். சம்பாதிக்க வேண்டும். இப்படி நாலா பக்கமும் ஓடும் தாய்மார்களின் கஷ்டம் சொல்லி மாளாது.

வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிப்பதென்றால் பரவாயில்லை. எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையை ஓட்ட பணத்துக்கு எங்கே போவது ? “ஒருத்தர் மட்டும் வேலைக்கு போனா வாழ்க்கையை ஓட்ட முடியாது. ரெண்டு பேருமே வேலைக்கு போனா தான் சமாளிக்க முடியும்”. என மக்கள் குடும்பம் குடும்பமாக ஓடும் காலமல்லவா இது.

இத்தகைய அன்னையரின் முதல் சவால் இரண்டு குதிரைகளில் பயணிப்பது. இரண்டு வேறு திசைகளில் பயணிக்கும் குதிரைகளென்றால் என்ன செய்வது ? வாழ்க்கையை ஓட்ட வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம். குழந்தையை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் எனும் கவலை மறு புறம்.

குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குப் போவதே அன்னைக்கு மிகவும் கடினம். வீட்டிலும் விட முடியாதபடி சிறிய குழந்தையெனில் சொல்லவே வேண்டாம். ஒரு நல்ல “டே கேர்” செண்டரைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்கள் கேட்கும் மாதக் கட்டணம் இப்போதெல்லாம் இதயத்தை இரண்டு வினாடி நிறுத்திவிட்டுத் தான் துடிக்க வைக்கிறது. டே கேர் செண்டர்களின் கவனிப்புக்கும், அன்னையின் கவனிப்புக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது வேறு விஷயம்.

பாட்டி, தாத்தா, அப்பா என சந்தோசமான சூழலில் வளர வேண்டிய குழந்தை “காப்பகங்களில்” தனியே இருக்கும் போது ரொம்பவே சோர்ந்து விடுகிறது. இந்த மன மாற்றம் குழந்தையாய் இருக்கும் போது அதிகம் தெரிய வராது. வளர வளர குழந்தையின் குணாதிசயங்களில் வித்தியாசம் பளிச் என புலப்படும்.

அன்னையின் நிலமை சொல்லவே வேண்டாம். “மழலையின் விரல் விலக்கி அலுவலகம் விரையும் பொழுதுகள்” ரொம்பவே வருத்தமானது. அது வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு மட்டுமே புரிந்த சங்கதி. பெண்களின் மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமே இது தான்.

அத்துடன் சிக்கல் முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. டேகேர் செண்டர்களும் இத்தனை மணி முதல், இத்தனை மணி வரை என இயங்குகின்றன. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் செய்யக்கூடிய வேலையைத் தான் தேட வேண்டும் எனும் கட்டாயம் பெண்ணுக்கு ! பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில், அருகிலேயே உள்ள ஏதோ ஒரு அலுவலகத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே வழக்கமாகி விடும்.

பாலூட்டும் அன்னையருக்கு பிரச்சினை இன்னும் அதிகம். குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே அலுவலகம் செல்லவேண்டுமென பெரும்பாலான நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கும். சிறிய குழந்தையை சரியாகப் பராமரிக்க அன்னையையோ, பாட்டியையோ தவிர யாரால் முடியும் ? ஆனால் என்ன செய்வது ? பராமரிப்பு நிலையங்களைத் தான் நாடவேண்டும். பாலூட்டாமல் அன்னையும், குடிக்காமல் குழந்தையும் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றனர்.

நிறுவனங்களும் உஷாராக நிலமையைக் கவனிக்கும். இந்த வேலை உங்களுக்கு மிக முக்கியம், “வேலையை விட்டு நீங்கள் நிற்கப் போவதில்லை” என தெரிந்தால் அவ்வளவு தான். ஒரு அடிமை போல நடத்த ஆரம்பித்துவிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியது தான். கிடைக்கும் சம்பளமாவது கிடைக்கட்டும் எனும் மன நிலைக்குப் பெண்களைத் தள்ளி விட்டு நிறுவனங்கள் அமைதியாய் இருந்து விடும்.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் வாழும் பெண்களை சீண்டிப் பார்ப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் பலர் உண்டு. பெரும்பாலும் அலுவலக சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ நண்பர்கள் எனும் போர்வையில் நெருங்குவார்கள். பாச பேச்சுகளோ, ஜெண்டில் மேன் தோரணையோ இவர்கள் உரையாடல்களில் தெறிக்கும். கடைசியில் எல்லாம் பாலியல் தேடல்களாய் முடிந்து விடும்.

வெளியூர் பயணங்கள் போன்றவையெல்லாம் தனியே குழந்தையைக் கவனிக்கும் பெண்களால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இதனால் மற்றவர்களை விட அதிக திறமை இருந்தாலும் கூட வேலையில் பிரகாசிக்க முடியாமல் போய்விடுகிறது. பெரும்பான்மையான இலட்சியங்களும், கனவுகளும் முடங்கி விடுகின்றன. இதனால் வேலையில் திருப்தியின்மையே பெரும்பாலும் இத்தகைய அன்னையரை ஆட்டிப் படைக்கிறது.

கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தன்னந்தனியாய் தாயிடம் குழந்தை வளரும் போது வேறு பல சிக்கல்களும் வந்து சேர்கின்றன. மன அழுத்தமும், தன்னம்பிக்கைக் குறைபாடும் குழந்தைகளிடம் வர இது காரணமாகிவிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதோ, தோல்விகளை அதிகமாய் சந்திப்பதோ சகஜம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வீட்டு வேலை, அலுவலக வேலை, கூடுதல் பொறுப்புணர்வு, ஆதரவு இன்மை இவையெல்லாம் அன்னையரை பிடிக்கும் சிக்கல்களில் சில என்கிறது அந்த ஆய்வு.

இங்கிலாந்தின் சில்ட்ரன்ஸ் சொசைடி வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதையே பிரதிபலிக்கிறது. தனியே வாழ்பவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி, மன அழுத்தம், நல்ல பழக்கமின்மை என தடுமாறுகிறார்களாம்.

அலுவலக நேரத்தில் வீட்டின் தேவைகள் நினைவில் புரள்வதும், வீட்டு நேரத்தில் அலுவலக பயம் வருவதும் என இந்த தனிமைப் பெண்களின் மன அழுத்தம் அளவிட முடியாதது. என்கிறது இன்னொரு ஆய்வு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சிக்கல் மிகவும் அதிகம். மண முறிவு, குடும்ப வாழ்வில் நம்பிக்கையின்மை இவையெல்லாம் பெண்களை தனியே வாழ வைத்து விடுகின்றன. சுமார் 27 விழுக்காடு குழந்தைகள் தாயிடம் வசிப்பவர்கள் தானாம். இந்த குடும்பங்களில் 40 சதவீதம் வறுமையில் வாடுவதாய் சொல்கிறது அந்த ஆய்வு.

பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் பெரும்பாலும் சிக்கல் எழுவதில்லை. வசதி படைத்த வீடுகளில் வளரும் பிள்ளைகள் நல்ல உயர் நிலையை அடைவார்கள் என்கிறார் இங்கிலாந்தின் மனநல பேராசிரியர் மைக்கேல் லேம்ப். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு இதை நிரூபித்திருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்குத் தான் அதிக சிக்கல். குறைந்த வாடகையில் வீடு, குறைந்த விலையில் பொருட்கள் என பணமே இவர்களுடைய வாழ்க்கையின் பயணத்தை முடிவு செய்கிறது. இந்த போராட்டங்களின் விளைவாக, சுமார் 76 விழுக்காடு தாய்மார்கள் தேவையான 8 மணி நேர தூக்கத்தைப் பெறுவதேயில்லை என்கிறது மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்று.

இப்படியெல்லாம் கஷ்டத்தில் அல்லாடும் பெண்களுக்கு சமூகம் கை கொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பும், அங்கீகாரங்களும் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கிறது.

பெண்களால் குழந்தைகளைத் தனியே வளர்க்க முடியாது என்பதெல்லாம் சும்மா என்கிறது அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு. தனியே வாழ்க்கையை நடத்தும் பெண்கள் குழந்தைகளை வெற்றிகரமான வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லமுடியும் என அடித்துச் சொல்கிறது இது. ஆனால் அதற்காக அவள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை !

அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் காட்டாமல் இயல்பாய் இருப்பது. பொறுமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது. நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் அனைத்தையும் எதிர்கொள்வது. என தனியே வாழும் அன்னையரின் ஒற்றை வாழ்க்கை ஓராயிரம் வித்தியாசமான பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது !

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

பெண்கள் “வாயாடி”களாவது நல்லது !

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்கலாமே ..

பாத்ரூம்…… !!! : பெண்ணே நீ கட்டுரை

 public_toilet

“உலகிலேயே மிக நீளமான கழிப்பிடம் எது ?” எனும் கேள்விக்கு “இந்தியன் ரயில்வே” என்று ஒரு நகைச்சுவைப் பதில் உண்டு.

இது வெறுமனே சிரித்து விட்டுப் போக வேண்டிய நகைச்சுவையல்ல. இந்தச் நகைச்சுவைக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்ற கனமான சோகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது கவனிக்கப்பட வேண்டியவர்களால் கவனிக்கப்படாமல் கண் மூடித் தனமாக நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை.

சிங்காரச் சென்னை மாநகரையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் இருக்கின்றன ? அவற்றில் எத்தனை சுத்தமாக இருக்கின்றன ? எத்தனை பாதுகாப்பாய் இருக்கின்றன ? தமிழகத்தின் தலை நகராம் சென்னையிலேயே இந்த நிலை எனில் புற நகரங்கள், சிறு நகரங்களின் கதைகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமா ?

இந்த அவசரச் சிக்கலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களே. பயணங்களிலோ, குடும்பத் தேவைகளுக்காக நகரில் அலைய நேர்கையிலோ பொதுக் கழிப்பிட வசதி இல்லாமல் அவர்கள் அவஸ்தைப்படுவது வாடிக்கை நிகழ்ச்சியாகி விட்டது.

ஆண்களைப் போல எந்த இடத்தையும் பொதுக் கழிப்பிடமாக்கிக் கொள்ள முடியாமல், நல்ல, பாதுகாப்பான, பொதுக் கழிப்பிடங்களுக்காக அவள் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறாள். அப்படியும் நிலைமை கை மீறிப் போனால் வேறு வழியில்லாமல் ஏதேனும் அங்காடிகளிலோ, உணவகங்களிலோ சென்று உபாதையைக் கழிக்க வேண்டிய நிலை பெண்ணுக்கு.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் எனில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. பெண்ணுக்கே உரிய பல்வேறு சிக்கல்களினால் அவள் கழிப்பறைகளில் எடுத்துக் கொள்ளக் கூடிய நேரம் ஆண்களை விட மிக அதிகம்.

அதை உணர்ந்த அமெரிக்கா ஆண்களுக்கான ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்காய் இரண்டு கழிப்பிடங்கள் வேண்டும் என சட்டம் இயற்றியிருக்கிறது. உதாரணத்துக்கு நியூயார்க்கின் யாங்கீ ஸ்டேடியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன், அங்கே ஆண்களுக்காய் இருக்கின்ற கழிப்பறைகள் 176.  பெண்கள் கழிப்பிடங்கள் 358 !

உலக அளவிலான IPC (International Plumbing Code) யும் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 எனும் விகிதத்தில் இருப்பது மிகவும் நல்லது, தேவையானது என அறிவுறுத்தியிருப்பதும் கவனிக்கத் தக்கது. நமது நாட்டிலோ 1:1 எனும் விகிதத்தில் கூட கழிப்பிடங்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

புள்ளி விவரங்களை வெட்கத்துடன் வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது நமது தேசம். இன்னும் 50 விழுக்காடு பள்ளிக் கூடங்களில் சிறுமிகளுக்கென தனியான கழிப்பிட வசதி இல்லை என்கிறது மாவட்ட உயர்கல்வி தகவலின் (DISE) 2007 – 2008 ம் ஆண்டின் புள்ளி விவரக் கணக்கு ஒன்று.  பள்ளிக் கூடங்களிலேயே இந்த நிலமையெனில் பொது இடங்களில் கேட்கவும் வேண்டுமா ?

கி.மு 2500 களிலேயே இந்தியாவில் மக்கள் அமர்ந்து பயன்படுத்தக் கூடிய, சுட்ட செங்கற்களால் ஆன, பாதாளச் சாக்கடைகளோடு இணைந்த கழிப்பிடங்கள் இருந்தன என்கிறது ஹரப்பா அகழ்வாராய்ச்சி. அதுவும் ஒவ்வோர் வீட்டுக்கும் ஒவ்வொரு கழிவறை இருந்திருக்கிறது. அப்படியெனில் உலகிலேயே கழிப்பிட வசதிகளில் முதன் முதலில் அசத்திக் காட்டிய நாடு இந்தியா தான். ஆனால் இப்போதைய நிலமை ?

உருவாகி சில  நூறு ஆண்டுகள் மட்டுமே ஆன அமெரிக்கா போன்ற நாடுகளெல்லாம் இன்று கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை விஷயங்களில் தன்னிகரில்லாமல் இருக்க, பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாமோ வெறும் வரலாறுகளைப் புரட்டுவதிலும், வீண் பெருமை பேசுவதிலும் மட்டுமே தன்னிறைவு அடைந்திருக்கிறோமோ என நினைக்கத் தோன்றுகிறது.

இன்றைக்கு உலக அளவில் 2.6 பில்லியன் மக்கள் சரியான கழிப்பிட வசதி இல்லாமல் இருக்கிறார்கள். இதில் 1.3 பில்லியன் மக்கள் இந்தியாவையும், சீனாவையும் சார்ந்தவர்கள். கி.மு 2500 ல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கழிப்பிடம் !. கி.பி 2009 ல் 80 சதவீதம் மக்களுக்கு சரியான கழிப்பிட வசதி இல்லை !!. இதுவே கழிப்பிட விஷயத்தில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி.

இந்தியாவில் வருகின்ற 80 விழுக்காடு நோய்களுக்கும் கழிவு கலந்த தண்ணீரே காரணமாகிறது என இந்தியாவின் கழிப்பிடப் பெருமையை அறிக்கை மூலம் பறைசாற்றுகிறது உலக நலவாழ்வு நிறுவனம் (WHO). உலகிலேயே பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் மூன்றாவது நாடு நமது இந்தியா என பெருமையடிப்பதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது ?

சரியான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் இல்லை. இருக்கும் கழிப்பிடங்களில் சுத்தம் என்பது சுத்தமாய் இல்லை. சுத்தமில்லாத கழிப்பிடங்களில் பாதுகாப்பாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை. இது தான் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பொதுக்கழிப்பிடங்களின் இன்றைய நிலை.

பொதுக் கழிப்பிட சுகாதாரத்துக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு டாலர் பணத்துக்கும் ஏழு டாலர் சமமான பொருளாதார வளர்ச்சி சமூகத்தில் உருவாகும் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். சுகாதாரமான கழிவறைகள் நலமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

உலக மயமாதலும், வணிக மயமாதலும், தனியார் மயமாதலும் எதுவும் இந்தியாவின் கழிப்பிடத்தின் தரத்தை இம்மியளவும் முன்னேற்றவில்லை என்பதே நிஜம். சரியான வரையறைகளோ, வழிமுறைகளோ, திட்டங்களோ இல்லாமல் இந்தியாவில் பொதுக் கழிப்பிட திட்டங்களெல்லாம் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உழலும் பெண்ணுக்கு மேலும் ஒரு சுமையாகவே மாறியிருக்கிறது.

0

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

Pablo-Picasso-Mother-And-Child-25656காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.

சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர்  இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.

பெண்கள் கவனத்துக்கு….

vidisha-_2_பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

காபியும், கருவுறுதலும்…

41

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.
காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு சாதாரண நபருடைய லிவர் நூறு மில்லி காஃபைனை வெளியேற்ற இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நூறு மில்லி காஃபைன் என்பது எவ்வளவு ? ஒரு கப் காபியில் சுமார் 75 முதல் 200 மில்லி காஃபைன் இருக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காஃபைன் விஷம் பெண்களுக்கு மட்டும் தானா பிரச்சனையைக் கொடுக்கிறது ? காஃபைனுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது

காபி குடிக்காமல் என்னால் இருக்கவே முடியாதே ! கொஞ்சம் கூட குடிக்க முடியாதா என அலறும் காபி பிரியர்களை அமைதிப்படுத்த, தினமும் முன்னூறு மில்லிகிராம் காபி என்பது ஆரோக்கியத்துக்கு அதிக ஊறு விளைவிக்காது என்று அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

பாலியல் : முகம் சொல்லும் யாரை நம்பலாம் என !!!

சதுர முகம், நீளமான மூக்கு, சிறிய கண்கள் கொண்ட ஆணா ? பெண்களே உஷார் இவர்களுடைய கவனம் எல்லாம் மோகம் கமகமக்கும் சிற்றின்பத்தில் தான். ஆழமான காதல் உணர்வில் இல்லை.

அகலமான பெண்கள், பெரிய உதடுகள் கொண்ட பெண்களா ( ஏஞ்சலினா ஜூலி கண்களுக்குள் வருகிறாரா ) !! ஆண்களே உஷார் கொஞ்ச நாளிலேயே கழற்றி விட்டு விட்டு ஓடி விடுவார்கள்.

இதையெல்லாம் நம்ம ஊர் நாடி ஜோசியமோ, முக ஜோசியமோ சொல்லவில்லை. தர்காம், செயிண்ட்ஸ் ஆண்ட்ரூஸ், மற்றும் அபெர்தீன் பல்கலைக் கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒருவருடைய முகத்தை வைத்தே அவருடைய “காதல்” நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பதே இவர்களுடைய ஆராய்ச்சியின் சாராம்சம்.

திடகாத்திரமான புஜ பராக்கிரம சல்மான் கான்களை விட அமைதியான, மென்மையான குணாதிசயங்கள் கொண்ட ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். அப்பாடா இனிமே ஜிம்மில் எண்ணிக்கை குறையும் !

குறுகிய கால காதல் உறவை வைத்துக் கொள்ள விரும்பும் பெண்கள் அதிக கவர்ச்சியுடன் காணப்படுவார்கள் எனவும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பெண்கள் நீண்ட கால உறவையே ஆசிக்கிறார்கள் என்றும், குறுகிய நட்பு வளையங்களில் அதிகம் விழுவதில்லை எனவும் இதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இவையெல்லாம் கடந்து நீண்ட நாட்கள் பழகியபின் ஒருவர் ஒருவரிடம் அதிக ஈடுபாடு ஏற்பட, பின்னர் முக நக நட்பது நட்பன்று என்பதை கண்டு கொள்வர் என்பது இயற்கையின் நியதி.

இதற்கு முன்பும் முகத்தை வைத்து ஒருவருடைய உடல்நலம், குணாதிசம் போன்றவற்றை அறியும் ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. எனினும் ஒருவருடைய காதல் வாழ்க்கைக்கும் முகத்துக்கும் இடையேயான தொடர்பு ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என காதலுடன் சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

காஃபியும் கருச்சிதைவும்

tea.jpg

தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

பெண்களுக்கான புதிய காரட்

carrot.jpg

காய்கறிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்புக் குணாதிசயம் இருக்கிறது. அதனால் தான் மருத்துவம் காய்கறிகள் உண்பதை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

ஊக்கப்படுத்துவதுடன் நின்று விடாமல் அதிக சத்துள்ள புதிய காய்கறி இனங்களை உருவாக்குவதிலும் மருத்துவ உலகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
உருளைக்கிழங்கு, புரோக்கோலி, தக்காளி உட்பட பல காய்கறிகள் ஏற்கனவே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு புதிய இனங்கள் பெறப்பட்டுள்ளன.

அதன் வரிசையில் இப்போது புதிய வகை காரட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரட் வழக்கமான காரட்டை விட அதிக கால்சியம் சத்து உடையதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காரட் வழக்கமான காரட்டை விட 41 விழுக்காடு அதிக அளவில் கால்சியம் சத்தை உடலுக்குத் தருகிறதாம்.

உடலுக்கு அதிக கால்சியம் சத்து கிடைப்பதனால், கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு சார்பான பிற நோய்கள் வரும் வாய்ப்பை பெருமளவு குறைக்கிறதாம். பெண்களை முதுமைக்காலத்தில் அதிகமாய் தாக்கும் எலும்பு சார்ந்த நோய்களைத் தவிர்க்க இந்த காரட் பெருமளவில் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆராய்ச்சி இன்னும் பல கட்டங்களை எட்ட வேண்டியிருக்கிறது எனவும் அதன் பின்பே பயன்பாட்டாளர்களை சென்றடையும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காரட்டைக் குறித்து வரும் செய்திகள் உற்சாகமூட்டும் அதே வேளையில், இதன் மூலம் ஏதும் பக்க விளைவுகள் இருக்குமோ எனும் பயமும் துளிர்விடத் தான் செய்கிறது.

உடல் எடையும், தாய்மை நிலையும்

mother.jpg

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்கத் துவங்குகிறார்கள் என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று டச் அறிவியலார்களால் வெளியிடப்பட்டுள்ளது.

மாறி வரும் உணவுப் பழக்கங்களாலும், பரம்பரை குணாதிசயங்களினாலும் உடல் எடை அதிகரித்து வருவது இன்று ஒரு சர்வதேசப் பிரச்சனையாக இருக்கிறது. வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த இந்த சிக்கல் தாராளமயமாக்கலில் தயவாலும், பீட்சா, கோக் போன்ற உணவுப் பழக்கங்களினாலும் இன்று இந்தியாவிலும் வேர்விட ஆரம்பித்திருக்கிறது,

இந்த உடல் எடை அதிகரிப்பு பல விதங்களில் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைச் சூழலைப் பரிசளிக்கும் இந்த இன்னல் இப்போது தாய்மைக்கே வேட்டு வைப்பதாக தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியான செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஏற்கனவே உடல் எடை அதிகமாய் உள்ள தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் பல சிக்கல்கள் வரும் வாய்ப்பு உண்டு எனவும், தாய்மார்களின் உடல் எடைக்கும் குழந்தைக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் சில ஆராய்ச்சிகள் தங்கள் முடிவுகளை வெளியிட்டிருந்தன.

இப்போது கருத்தரிப்பதிலேயே சிக்கல் என்னும் புதிய ஆராய்ச்சி உண்மையிலேயே பெண்களை, அதிலும் குறிப்பாக அதிக எடை நோயினால் அவதிப்படும் பெண்களை பெருமளவில் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உட்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அதிக எடை சிக்கலினால் அவதிப்படுபவர்கள் மீண்டும் உடல் எடையைக் குறைத்தால் அவர்களால் மீண்டும் தாய்மை அடையும் வாய்ப்பு அதிகரிக்கும் எனும் தகவல் சற்று ஆறுதலாய் இருக்கிறது.

அதிக எடை எனும் சிக்கல் உருவாக்கும் இன்னல்களைக் குறித்து தினமும் வரும் தகவல்கள் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்வதுடன், அடுத்த தலைமுறையை சரியான பாதையில் அழைத்துச் செல்ல நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும் செய்கிறது என்பதை கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால் இத்தகைய சிக்கல்கள் நம்மை அணுகுவதில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கை நலமாகும்.