நினைவில் நிற்கும் கலாம் : A Christian Article

2003ம் ஆண்டு, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்னுடைய முழு கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டைய “உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஆண்டு மலரில்” எனது “வழியோரம் நதியூறும்” எனும் கவிதையையும் பிரசுரித்திருந்தது. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த காலம்.

அறக்கட்டளையின் தலைவர் ராம்மோகன் ஆண்டுவிழா மலர் ஒன்றை அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பினார். சிறிது நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் அப்துல் கலாம் அவரிடமிருந்து வந்தது.

“வழியோரம் நதியூறும்” கவிதையைப் படித்தேன். சேவியர் சிறப்பாக எழுதியிருந்தார். கவிஞருக்குப் பாராட்டுகள். என அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். நமது கவிதை ஒன்றை ஜனாதிபதி பாராட்டினார் எனும் மகிழ்ச்சியை விட, ஒரு ஜனாதிபதி ஒரு சாதாரண ஆண்டு விழா மலரைக் கூட படிக்கிறார். அதற்குக் கூட பதில் அளிக்கிறார் என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடையச் செய்தது.

ஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது என்று சொல்வார்க‌ள். ஏழையாய்ப் பிற‌ந்த‌ அப்துல் க‌லாமின் சொல் விண்வெளியையே எட்டிப் பார்த்த‌து. இது இளைய‌ ச‌மூக‌த்தின‌ருக்கு ஒரு பாட‌ம். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள் ம‌றைந்த‌ போது ஒரு விஷ‌ய‌ம் மிக‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து. அவ‌ர் விண்வெளியில் சாதித்த‌தோ, அணுவிய‌லில் சாதித்த‌தோ, ப‌த‌வியில் சாதித்த‌தோ எதுவுமே முன்னிலைப் ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. மூன்றே மூன்று விஷ‌ய‌ங்க‌ள் தான் முன்னால் நின்ற‌ன‌.

ஒன்று. அவ‌ருடைய எளிமை,

இரண்டு அவருடைய நேர்மை,

மூன்று மாண‌வ‌ ச‌மூக‌த்தின் மேல் அவ‌ர் கொண்டிருந்த‌ அக்க‌றை.

சாதார‌ வார்ட் க‌வுன்சில‌ர்க‌ள் வீதி வீதியாக‌ வாங்கிக் குவித்து, ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ளில் அராஜ‌க‌ம் செய்யும் கால‌ம் இது. நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வே இருந்த‌ அப்துல் காலாம் க‌டைசி வ‌ரை த‌ன‌து எளிய‌ வீட்டின் ஏழ்மையைக் கூட‌ மாற்ற‌ நினைக்க‌வில்லை என்ப‌து ந‌ம்ப‌ முடியாத‌ விய‌ப்பு.

ஒரு எம்.எல்.ஏ ப‌த‌விக்கு வ‌ந்தால் அவ‌ருடைய‌ அத்த‌னை சொந்த‌க்கார‌ர்க‌ளும் மாளிகை க‌ட்டி, தொழில் தொட‌ங்கி, வ‌ங்கியில் க‌ணிச‌மான‌ ப‌ண‌த்தையும் சேர்ப்பார்க‌ள். ஆனால் அப்துல் க‌லாமின் சொந்த‌க் கார‌ர்க‌ள் எல்லோருமே இன்னும் அதே ஏழ்மை ம‌ற்றும் எளிமை நிலையிலேயே இருக்கின்ற‌னர். இது நில‌வுக்கு ராக்கெட் விட்ட‌தை விட‌ப் புதுமையாய் இருக்கிற‌து.

அவ‌ரைப் ப‌ற்றி வ‌ருகின்ற‌ க‌தைக‌ளெல்லாம் சிலிர்ப்பூட்டுகின்ற‌ன‌. ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ள் அவ‌ரை அர‌வ‌ணைப்ப‌த‌ற்கு அவ‌ருடைய‌ எளிமையும், நேர்மையும், இனிமையான‌ குண‌மும், ச‌மூக‌ அக்க‌றையும் தான் கார‌ண‌ம். சமீப காலத்தில் இந்திய‌ தேசம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்டவர்கள் இர‌ண்டு பேர். ஒருவர் அன்னைத் தெரசா இன்னொருவர் அப்துல் கலாம்.

அன்னை தெர‌சா, இயேசுவே என‌து ம‌ண‌வாள‌ன் என‌ அறிக்கையிட்டு இயேசுவின் மீதான‌ அன்பிலும், விசுவாச‌த்திலும் நிலைத்திருந்த‌வ‌ர். அப்துல் க‌லாம் இஸ்லாமிய‌ர். இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கையில் நிலைத்திருந்த‌வ‌ர். ஆனால் இருவ‌ரையும் உல‌க‌ம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்ட‌து. கார‌ண‌ம் இருவ‌ரிட‌மும் இருந்த‌ இர‌ண்டு குண‌ங்க‌ள். ஒன்று எளிமை, இன்னொன்று இர‌க்க‌ம்.

விழாவுக்கு ஒரு ஆடை வாங்கி, நாளுக்கு ஒரு வேஷ‌ம் க‌ட்டும் ப‌ழ‌க்க‌ம் க‌லாமிட‌ம் இருக்க‌வில்லை. த‌ன‌து ஆடையைத் தைக்க தானே ஒரு சின்ன‌க் க‌டையில் கொண்டு போய் கொடுப்பாராம். தைக்க‌க் கொடுத்து விட்டு, “இர‌ண்டு தைய‌ல் போடுப்பா. அப்போ தான் சீக்கிர‌ம் பிரியாது” என்பாராம். இப்ப‌டி எளிமையாய் ஒரு த‌லைவ‌ர் இருக்க‌ முடியுமா ?

உல‌கின் அத்த‌னை மேடைக‌ளிலும் பேசிய‌வ‌ர், அத்த‌னை த‌லைவ‌ர்க‌ளுட‌னும் உரையாடிய‌வ‌ர், விஞ்ஞான‌த்தில் உச்ச‌த்தில் உலாவிய‌வ‌ர். ஆனால் க‌டைசிவ‌ரை அவ‌ர் எளிமையின் தெருக்களில் தான் உலவினார். அது தான் அவ‌ரை ஒரு ரோல் மாட‌லாக‌ உருமாற்றிய‌து.

அவ‌ருடைய‌ குணாதிச‌ய‌த்தைக் க‌ட்டியெழுப்பிய‌தில் பெரும்ப‌ங்கு அவ‌ருடைய‌ பெற்றோரைச் சாரும். யாரிட‌மும் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌க் கூடாது, எல்லோரையும் ம‌திக்க‌ வேண்டும், ச‌க‌ம‌னித‌னை நேசிக்க‌ வேண்டும், எளிமையாக‌ இருக்க‌ வேண்டும் எனும் அத்த‌னை உய‌ரிய‌ குண‌ங்க‌ளும் அவ‌ருக்கு அவ‌ருடைய‌ பெற்றோரிட‌மிருந்தே கிடைத்த‌ன‌.

“அவனவன் தன் தன் தாய்க்கும், த‌க‌ப்ப‌னுக்கும் ப‌ய‌ந்திருக்க‌வும்..” என‌ க‌ட‌வுள் லேவிய‌ராக‌ம‌த்தில் கூறுகிறார். தாய் த‌க‌ப்ப‌னின் ஆலோச‌னைக‌ளை அச‌ட்டை ப‌ண்ணாதிருக்க‌ வேண்டும் என‌ விவிலிய‌ம் வ‌லியுறுத்துகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் கெட்ட‌ க‌னியைத் த‌ருவ‌தில்லை. குழந்தைகளின் குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு அதிகம்.

“இயேசு த‌ன‌து சீட‌ர்க‌ளின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவி அடிமையின் ரூப‌னானார்”. அவ‌ர் ப‌ணிவைச் செய‌லில் காட்டினார். ஒரு ம‌னித‌ர் வாழ்க்கையில் உய‌ர‌ உய‌ர‌ ப‌ணிவில் மேலும் மேலும் செழிக்க‌ வேண்டும். ம‌னித‌ர்க‌ளில் உச்ச‌மாய் இருந்தார் மனித வடிவமாய் வந்த இயேசு. என‌வே அடிமையின் கோல‌மாய் த‌ன்னை தாழ்த்தினார்.

க‌லாம் கிறிஸ்த‌வ‌ர‌ல்ல‌. ஆனால் இயேசுவின் ப‌ணிவை அப்ப‌டியே செய‌ல்ப‌டுத்தினார். சிற‌ப்பு வ‌ர‌வேற்பு வேண்டவே வேண்டாம் என்பார், சிற‌ப்புக் க‌வ‌ன‌த்தைத் த‌விர்ப்பார். பாராட்டுக்குக் கூச்ச‌ப்ப‌டுவார். காவ‌லாளி ஆனாலும் ச‌ரி  ஒபாமா ஆனாலும் ச‌ரி ப‌ணிவில் வேறுபாடு காட்டுவ‌தில்லை. கார‌ண‌ம் அவ‌ர‌து ப‌ணிவு ஆளுக்கும், சூழ‌லுக்கும் த‌க்க‌ப‌டி மாறுவ‌தில்லை. அவருடைய இயல்பில் கலந்திருந்தது. நில‌த்தை மாற்றி ந‌ட்டாலும் மாம‌ர‌த்தில் ப‌லாப்ப‌ழ‌ம் காய்க்குமா என்ன‌ ?

தனக்கு விதிக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் தான் இறைவனின் சித்தப்படி வாழ்பவர்கள். இயேசு முப்பது ஆண்டுகள் மரங்களோடு வாழ்ந்தார். தச்சுத் தொழிலை அவர் முழு ஈடுபாட்டுடன் செய்தார். கலாம், ஏழ்மையான சிறு வயதில் நியூஸ் பேப்பர் விற்றும், சின்னச் சின்ன வேலைகள் செய்தும் தான் வாழ்க்கையை ஓட்டினார். எந்தக் கணத்திலும் அவர் தனக்கு இறைவன் அளித்த எல்லை போதவில்லை என முணுமுணுத்ததேயில்லை.

எந்தக் காலகட்டத்திலும் நேர்மையாய் இருப்பதே இறைவன் நமக்கிட்ட கட்டளை. எந்த ஒரு செயலிலும் நேர்மையைப் பார்த்துப் பார்த்துச் செய்பவர்களே கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்பவர்கள். “சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பவர்கள் தான் பெரியவற்றுக்கு அதிபதி ஆக முடியும்” என இயேசுவே சொல்கிறார். கலாம் தனது வாழ்க்கையில் அதைச் செய்து காட்டினார்.

அவ‌ருடைய‌ கையெழுத்துப் போட்ட செக்கை பிரேம் ப‌ண்ணி வைக்க‌ ஆசைப்ப‌ட்ட‌ க‌டைக்கார‌ர்க‌ளிட‌ம் ‘செக்கை போட்டு ப‌ண‌த்தை எடுங்க‌ள். உங்க‌ள் பொருள் இல‌வ‌ச‌மாய் என்னிட‌ம் இருக்க‌வேண்டாம். ப‌ண‌த்தைப் போடாவிட்டால் பொருளைத் திருப்பி அனுப்புவேன். பிளீஸ்” என‌ அடுத்த‌வ‌ர்க‌ளின் எந்த‌ வித‌ பொருளுக்கும், ச‌லுகைக்கும் ஆசைப்ப‌டாத‌ ம‌னித‌ர்க‌ளை நாம் க‌டைசியாய் எப்போது ச‌ந்தித்தோம் ?

சுய‌ந‌ல‌ம் இல்லாத‌ ஒரு வாழ்க்கையை க‌லாம் வாழ்ந்தார். அவ‌ருடைய‌ வாழ்க்கை த‌ன‌க்காக‌வோ, த‌ன‌து உற‌வின‌ர்க‌ளுக்காக‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளுக்காக‌வோ சொத்தை சேமிக்க‌ வேண்டும் என்று இருக்க‌வில்லை. த‌ன‌து வ‌ருமான‌த்தின் பெரும்ப‌குதியை பிற‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தை அவ‌ர் வ‌ழக்கமாக வைத்திருந்தார்.

ந‌ம‌க்கென‌ வாழ்ந்து ந‌ம‌க்கென‌ ம‌ரிக்கும் வாழ்க்கை கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைய‌ல்ல‌. க‌லாம் த‌ன‌க்கென‌ ம‌ட்டுமே வாழ‌வில்லை. அவர் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ளை நேசித்தார். அதுதான் க‌லாமை அடையாள‌ப்ப‌டுத்திய‌து.

க‌லாமின் வாழ்க்கை ந‌ம‌க்கு எளிமையான‌ வாழ்க்கையையும், ப‌ணிவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், நேர்மையையும், பிற‌ர் பொருளுக்கு ஆசைப்ப‌டாத‌ த‌ன்மையையும், சுய‌ந‌ல‌ம‌ற்ற‌ ம‌ன‌தையும் க‌ற்றுத் த‌ர‌ட்டும். க‌லாமைப் போன்ற‌ த‌லைவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு ஊக்க‌மூட்டும் முன்னுதார‌ண‌ங்க‌ள்.

அதே நேர‌த்தில், இறைம‌க‌ன் இயேசு ம‌ட்டுமே ந‌ம‌க்கு இருக்க‌ வேண்டிய‌ ஒரே வ‌ழிகாட்டி. அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளும், வாழ்க்கையும் ம‌ட்டுமே நாம் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ அடிச்சுவ‌டுக‌ள். க‌லாமின் வாழ்க்கையிலிருந்து ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எடுத்துக் கொள்வோம். எப்போதும் இறைம‌க‌ன் இயேசுவோடு ம‌ட்டுமே ந‌ம‌து செய‌ல்க‌ளை ஒப்பீடு செய்வோம்.

அனைவ‌ருக்கும் வாழ்த்துக‌ள்

 

அன்புட‌ன்

சேவிய‌ர்

அழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )

IT-industry-bcbay

அழைக்கும் ஐடி துறை

1

நீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும்.

“நல்லா இருக்கியாடே… ?”

“இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?”

வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்ணு தான். சம்பளத்திலோ, சமூக அங்கீகாரத்திலோ அதிக வேறு பாடு இருப்பதில்லை. இந்தியாவில் நிலமை தலை கீழ். அதனால் தான் ‘ஏதோ ஒரு வேலை’ என்பதைத் தாண்டி நல்ல வேலை, நல்ல சம்பளம் தரக்கூடிய வேலை, நல்ல அங்கீகாரம் கிடைக்கக் கூடிய வேலை என்றெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள்.

அத்தகைய கனவுத் தேடல்களின் இடமாக கடந்த பத்து இருபது ஆண்டுகளாக ஐடி துறை இளைஞர்களை வசீகரிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஐடி துறையின் மீதான அபரிமிதமான கவர்ச்சி சற்றே குறைந்தாலும், ஐடி துறை ஊழியர்களின் வாழ்க்கை வானவில் போல அழகானதல்ல என்பது புரிந்தாலும் அது தரும் பொருளாதாரம், மற்றும் அடையாளம் இரண்டும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஐ.டி யா… அட போப்பா.. அதெல்லாம் அறிவாளிகளுக்கானது என்று ஒரு சாராரும், அதெல்லாம் பொறியியல் படித்தவர்களுக்கு, அல்லது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமானது எனும் பரவலான சிந்தனையும் நம்மிடையே உண்டு.

உண்மையில், கணினி துறையில் பல்வேறு விதமான வேலைகள் உள்ளன. எல்லா வேலைக்கும் எஞ்சினியரிங் படித்திருக்கத் தேவையில்லை. கணினியில் முதுகலை படித்திருந்தால் மட்டுமே ஐ.டியில் நுழைய முடியும் எனும் சிந்தனையும் சரியானதல்ல.

அதே போல, கணினி துறை அவ்வளவு தான் இனிமேல் அது அழிந்து விடும் எனும் வாதங்களும் அபத்தமானவை. கணினி துறை அழியப்போவதில்லை. அது தனது முகத்தையும், உத்திகளையும், தளங்களையும் மாற்றிக்கொண்டிருக்குமே தவிர அழிந்து போவதில்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா இடங்களிலும் சகஜம் தான். ஆனால் அந்த மாற்றங்கள் ஐடி துறையில் வேகமாக வரும் என்பது ஒன்றே வித்தியாசம். அந்த மாற்றத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்பவர்கள் எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கலாம்.

உலக அளவில் செயலாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் 52 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். அமெரிக்காவில் ஒரு பொறியாளருக்கு ஆகும் செலவில் ‘கால்வாசி’ கொடுத்தால் இந்தியாவில் ஒரு சிறந்த பொறியாளர் கிடைப்பார். அவர் அந்த அமெரிக்கரை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பையும் கொடுப்பார் என்பது தான் இந்தியாவில் ஐடி துறை அபரிதமான வளர்ச்சியை அடைந்திருக்கக் காரணம்.

இன்றைக்கு ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் கோடானு கோடி பணத்தை இந்தியாவின் ஐடி துறையில் முதலீடு செய்கின்றன ? காரணம் இந்தியர்களின் திறமையும், அவர்களின் மூலம் நிறுவனங்கள் சம்பாதிக்கப்போகும் பில்லியன்களும் தான். ஐடி துறை வளரும். எனவே அது அழியும் என்றெல்லாம் நம்பி கவலைப்படவேண்டாம்.

ஒரு வேளை நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் கல்லூரியில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடைபெறும் என்றால், அதில் முழு கவனம் செலுத்தி ஒரு வேலையை வாங்கிவிட முயற்சி செய்யுங்கள். ஐ.டி துறையில் சேர்வதற்கு இன்றைய தேதியில் கிடைக்கும் மிக எளிய வழி அது தான்.

கேம்பஸ் இன்டர்வியூ காலை வாரி விட்டதா ? கவலையில்லை. வாழ்க்கை என்பது கேம்பஸ் இன்டர்வியூவில் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விஷயம் தான்.

எந்தத் துறையில் வேலைக்குச் சேரவேண்டுமானாலும் ஒரு சில அடிப்படைத் தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு கல்லூரிப் பட்டத்துடன், நல்ல உரையாடல் திறன், நல்ல மனதிடன், கூர்மையான சிந்தனை, நேர்முகத் தேர்வு பயிற்சிகள் போன்றவையெல்லாம் கூட உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.

ஐடி துறையில் இருக்கின்ற வேலைகள் என்னென்ன என்பதைக் குறித்து ஒரு சின்ன அறிமுகம் தரலாம் என நினைக்கிறேன். நம் எல்லோருக்கும் தெரிந்த வேலைகளிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

மென்பொருள் உருவாக்குபவர் (Software Developer)

 

மென்பொருள் பொறியாளர் என்றாலே சட்டென நினைவுக்கு வருகின்ற வேலைகளில் ஒன்று மென்பொருளை உருவாக்கும் பணி செய்பவர்கள். டெவலப்பர்கள். கணினி துறையில் உள்ள சிக்கலும், அதிலுள்ள வசந்தமும் ஒரே விஷயம் தான். பரந்து விரிந்த தொழில் நுட்பங்கள். எந்தத் தொழில் நுட்பத்தைப் படித்தால் நல்லது ? எது இன்றைக்கு ஹாட் சர்டிபிகேட் என்றெல்லாம் குழப்பங்கள் வருவது வெகு சகஜம்.

மென்பொருள் உருவாக்குபவர் வேலையில் நுழைய கணினி மென்பொருள் துறையில் பட்டம் இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் நியதியாக வைத்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாகவே அத்தகைய பொறியாளர்கள் இன்றைக்கு கிடைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். எனவே ஒரு கம்ப்யூட்டர் டிகிரி என்பதை அடிப்படையாக வைத்திருங்கள்.

ஓட்டப்பந்தயங்களில் பார்த்திருப்பீர்கள். முதலில் ஓடி வெற்றிக் கோப்பையைக் கையில் அள்ளுபவனுக்கும், நான்காவதாக வந்து தோல்வியில் தலையசைப்பவருக்கும் இடையே வெறும் ஒன்றோ இரண்டோ வினாடிகள் தான் அதிகபட்ச இடைவெளியாய் இருக்கும். அந்த வினாடிகள் தான் கோப்பையை நிர்ணயிக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்களை விட ஒரு சில ஸ்பெஷல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு எளிய வழி, சான்றிதழ் படிப்புகள் அதாவது சர்டிபிகேஷன் கோர்ஸ்கள். கல்லூரி முடிந்து வரும் எல்லோருக்கும் பட்டப்படிப்பு இருக்கும். அந்த கூட்டத்தில் நீங்கள் தனியே தெரிய வேண்டுமெனில் அதற்கு ஒரு சர்டிபிகேஷன் படிப்பு நிச்சயம் உதவும். உங்களுடைய நோக்கம் டெவலப்மென்ட் வேலை எனில் அதற்குரிய படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, ஜாவா, டாட் நெட், சி++, எஸ்.ஏ.பி, மெயின்ஃப்ரேம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இந்த வரிசையில் உங்களுக்கு எது சுவாரஸ்யமாய் இருக்கிறதோ, பிடித்தமாய் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு சர்டிபிகேஷன் செய்வது மிகவும் பயனளிக்கும்.

இந்த சான்றிதழ் விஷயத்திலும் நல்ல நிறுவனங்களில் பெறப்படும் சான்றிதழுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், சிஸ்கோ, சன் போன்ற நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒருவேளை அத்தகைய நிறுவனங்களில் வாங்குவது இயலாது என்று தோன்றினால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல நிறுவனம் ஒன்றில் ஒரு சான்றிதழ் பயிற்சியை முடித்துக் கொள்வது பயன் தரும். அதுவும் வசதிப்படாத சூழல் எனில் ஆன்லைனில் நிறைய சர்டிபிகேஷன் கோர்ஸ் கள் இருக்கின்றன அவற்றைப் படித்து ஒரு சில‌ சான்றிதழ் பெறுவதும் நல்லதே.

‘எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் சார்” என்பது பழைய கதை. “நான் இதுல தான் எக்ஸ்பர்ட், இந்த ஏரியால வேலை இருக்கா ?” என்பது ஐடி கதை. ஒரு ஏரியாவில் நீங்கள் வலுவாக இருப்பதே பல இடங்களில் நுனிப் புல் மேய்வதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

சுருக்கமாக, கணினி மென்பொருள் டெவலப்பர் வேலைக்கு கணினி பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, உரையாடல் திறன், தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை, விடா முயற்சி இவற்றை முதன்மையாகக் கொண்டிருங்கள்.

( பேசுவோம் )

Sony And Google Unveil Internet TV Set

2

அழைக்கும் ஐடி துறை

கடந்த வாரம் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை குறித்து பார்த்தோம். டெவலப்பர் எனும் வார்த்தையைக் கேட்டால் உடனே மனதில் “டெஸ்டர்” எனும் வார்த்தை ஒலித்தால் நீங்கள் மென்பொருள் துறையோடு நல்ல பரிச்சயம் உடையவர் என்று பொருள். டெஸ்டர் என்றால் சோதிப்பவர். டெவலப்பர்கள் எழுதும் மென்பொருள் சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பவர் தான் டெஸ்டர்.

டெஸ்டர் ( Software Tester )

மென்பொருள் துறையின் ஆரம்ப காலத்தில் இந்த டெஸ்டர்களுக்கு டெவலப்பர்களுக்கு இணையான மரியாதை இல்லை. அது இரண்டாம் தர வேலையாகவே பார்க்கப்பட்டது. ‘நான் வண்டியைச் செய்றவன். நீ ஓட்டிப் பாக்கறவன் தானே’ என்பது போல ஒரு இளக்காரம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறியது. மென்பொருள் துறையின் முதுகெலும்பாகவே அந்த பணி மாறிப்போனது.

மென்பொருளில் தவறு இல்லை என்பதை இந்த குழு உறுதி செய்த பின்பே மென்பொருள் இறுதி கட்டத்தை அடையும். முதலில் மென்பொருள் உருவாக்குபவர்களே சோதிப்பவர்களாகவும் இருந்தார்கள், பின்னர் சில டெஸ்டர்கள் டெவலப்பர்களுடன் இணைந்திருந்து மென்பொருளை சோதனை செய்தார்கள், இப்போது டெஸ்டிங் என்பது நிறுவனத்தின் தனி பாகமாக மாறிவிட்டது. வெறும் டெஸ்டிங்கை மட்டுமே செய்யும் நிறுவனங்களும் இன்று ஏராளமாக இயங்குகின்றன.

டெஸ்டிங் பிரிவில் முக்கியமாக மூன்று வேலைகளைச் செய்கிறார்கள்.

அ, மென்பொருள் பிழையில்லாமல் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்கிறார்கள்.

ஆ. அது செய்ய வேண்டிய வேலையைச் சரியாக செய்கிறதா ? செய்யக் கூடாத வேலைகளைச் செய்யாமல் இருக்கிறதா என்பதை சோதிக்கிறார்கள்.

இ. தேவையான அளவு வேகத்தில் மென்பொருள் இயங்குகிறதா என்பதைப் பரிசோதிக்கிறார்கள்.

குவாலிடி ரொம்ப முக்கியம் என்பவர்கள் டெஸ்டிங் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். “எப்பவும் உன் கண்ணுக்கு குறை மட்டும் தான்யா தெரியுது” என திட்டு வாங்குபவர்கள் அதை ஒரு பாசிடிவ் ஆக மாற்ற இந்தத் துறையில் சேரலாம்.

டெவலர்ப்பர்களைப் போலவே டெஸ்டிங் பொறியாளர்களுக்கும் ஒரு கணினி சார்ந்த பட்டம் இருப்பது சிறப்பு. ஆனால் சில நிறுவனங்கள் கணினி சார்ந்த பட்டம் இல்லாதவர்களையும் டெஸ்டிங் பணியின் ஜூனியர்களாகச் சேர்ப்பதுண்டு.

டெஸ்டிங் துறைக்கு ஒரு மிகப்பெரிய சாதகம் உண்டு. என்னத்த படிக்கிறது ? என டெவலப்பர்களைப் போல அதிக அளவு குழப்ப வேண்டிய தேவை இவர்களுக்கு இல்லை. பெரிய அளவில் பார்த்தால் இரண்டு பெரிய பிரிவுகளில் இவர்களை அடக்கி விடலாம்.

அ. மேனுவல் டெஸ்டர்ஸ்.

ஆ. ஆட்டோமேஷன் டெஸ்டர்ஸ்.

மேனுவல் டெஸ்டர்கள் என்பவர்கள் எந்தவிதமான சிறப்பு மென்பொருளும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளின் ஒவ்வொரு பணியையும் சோதிப்பார்கள். ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் அந்தப் பணியை ஏதேனும் ஒரு ஆட்டோமேஷன் டூல் மூலமாகச் செய்வார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

டெஸ்டிங்கில் சான்றிதழ் வாங்குவதும் ஒருவகையில் குழப்பமற்றதே. “சாப்ஃட்வேர் டெஸ்டிங்” எனும் சர்டிபிகேஷனை பெரும்பாலும் எல்லா முக்கிய பயிற்சி நிலையங்களும் வைத்திருக்கின்றன. சில வாரங்களோ, சில மாதங்களோ பயிற்சி பெறுவது ரொம்ப பயனளிக்கும். எந்த நிறுவன அல்லது பயிற்சி நிலைய சான்றிதழ் அதிக மதிப்பு வாய்ந்தது என்பதைப் பார்த்தபின்பே அதைப் பெற முயலுங்கள்.

டெஸ்டிங்கில் அடிப்படை கற்றபின்பே ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன் பெறவேண்டும். அதுவே சரியான முறை. ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆட்டோமேஷன் என்றால் என்ன ? அது என்னவெல்லாம் செய்யும் ? எங்கேயெல்லாம் பயன்படுத்தலாம் என அதன் அடிப்படைகளை அலசும் சர்டிபிகேஷன்.

க்யூ.டி.பி, செலினியம், ஆர்.எஃப்.டி என ஆட்டோமேஷனுக்கான ஏதோ ஒரு மென்பொருளில் எக்ஸ்பர்ட் ஆவது இன்னொரு வகை. ஹைச்.பி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் அதற்குரிய பிரத்யேக சான்றிதழ் பயிற்சிகளைத் தருகின்றன.

இந்த இரண்டு டெஸ்டிங் போலவே “பெர்ஃபார்மன்ஸ் டெஸ்டிங்” ஒன்றும் உண்டு. உருவாக்கப்பட்ட மென்பொருள் தேவையான வேகத்தில் இயங்குகிறதா என்பதை சோதித்து உறுதி செய்வதே இது. இதற்கென ஸ்பெஷல் டூல்ஸ் இருக்கின்றன. அந்த மென்பொருள்கள் பற்றிய சான்றிதழ்களுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ‘லோட் ரன்னர் சான்றிதழ்’ என்பது ஒரு சின்ன உதாரணம்.

டெஸ்டிங் துறையில் நுழைய நல்ல நுண்ணறிவு, ஆராயும் தன்மை, எதையும் வேறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் தேவை. அப்போது தான் யார் கண்ணிலும் படாமல் தப்பிக்கும் பிழைகளெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியும்.

ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். காரின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொருவர் தயாரிப்பார். அதை ஒட்டு மொத்தமாக ஒட்டிப்பார்ப்பவர்கள் ‘சோதனை’ பிரிவில் இருப்பவர்கள். ஓட்டிப் பார்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக கார் எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் போன்ற அத்தனை விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். அது போல தான் மென்பொருள் துறையிலும். டெவலப்பர்கள் ஒவ்வொரு பகுதியாய் உருவாக்குவார்கள். ஒட்டு மொத்தமாக சோதிப்பவர்கள் டெஸ்டர்கள். அவர்களுக்குத் தான் அந்த மென்பொருளின் ஒட்டு மொத்தப் பார்வையும், புரிதலும் இருக்க வேண்டும்.

டொமைன் ஸ்பெஷலிஸ்ட்( Domain Specialist )

‘டொமைன் ஸ்கில்ஸ்” என்பது எந்தத் துறைக்காக மென்பொருளை உருவாக்குகிறார்களோ, அந்தத் துறையைப் பற்றிய அறிவாகும். அது கணினியோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாக வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், வங்கியில் பணப் பரிமாற்றம் எப்படி நடைபெறும், அதில் என்னென்ன சட்ட திட்டங்கள், வரையறைகள் உண்டு. டெபிட் கார்ட் போன்றவை பயன்படுத்துவதன் வழிமுறைகள் போன்ற ‘தொழில் அறிவு’ இருந்தால் போதுமானது.

காப்பீட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், அதில் எப்படியெல்லாம் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் மாற்றத்துக்கு உட்படுகிறது. ஒரு சூழலில் பணத்தை கிளெய்ம் செய்ய வேண்டிவந்தால் அது எப்படி நடைபெறும் போன்ற அறிவு இருந்தால் போதும். இந்த அறிவு தான் உங்கள் மூலதனம்.

மென்பொருள் துறையில் அதிகம் செயல்படும் தளங்கள் பல உண்டு.

வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நலத்துறை, தகவல் தொடர்பு துறை, வணிகம் போன்றவை சில முக்கியமான தளங்கள்.

ஏற்கனவே ஐடியில் இருப்பவர்கள், கூடுதலாக இந்தத் தளங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பது ஐ.டி துறையில் டெவலப்மென்ட், டெஸ்டிங் போன்ற வேலைகளில் உயர உதவி செய்யும். வேலையில் சேர விரும்புபவர்களுக்கு “அனலிஸ்ட்”, “டொமைன் எக்ஸ்பர்ட்”, “சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்” போன்ற டொமைன் ஸ்பெஷல் வேலைகள் கிடைக்கவும் உதவி செய்யும். அந்தந்த துறையிலுள்ள நுணுக்கங்களைக் கற்றறிந்து இவர்கள் ஐடி துறையோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அது தான் விஷயம்.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு சர்டிபிகேஷன் கோர்ஸ் உண்டு. ஏதேனும் உங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதிலுள்ள சிறப்பு சான்றிதழ் ஒன்றைப் பெறுவது மிகவும் அவசியம்.

உதாரணமாக, அசோசியேட் இன் ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது காப்பீடு துறை சார்ந்த ஒரு சான்றிதழ்.இந்த சிறப்புப் பிரிவில் வேலையில் சேர்பவர்களுக்கு கணினி பட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களுக்கு ஏதோ ஒரு கல்லூரிப் பட்டம், மற்றும் அந்தந்த துறைகளிலுள்ள சிறப்பான அறிவு அதுவே முக்கியம்.

எனவே உங்களுக்கு ஒருவேளை இந்தத் துறைகளில் நல்ல முன் அனுபவம் இருந்தால், உதாரணமாக, எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தில் ஒரு பிரிவில் உங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டெனில் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டே நீங்கள் ஐ.டி துறையில் நுழைய முடியும் !

 

Sony And Google Unveil Internet TV Set

அழைக்கும் ஐடி துறை

3.

 

டேட்டாபேஸ் தொடர்பான வேலைகள் ( Database Related Jobs)

எந்த மென்பொருள் இயங்கவும் முக்கியமான தேவை டேட்டா எனப்படும் தகவல்கள். அந்தத் தகவல்களை சேமித்து வைக்கும் இடம் டேட்டாபேஸ் எனப்படும். இந்த தகவல்களை சேமிக்கும் முறை, அதை தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், தேவையான வேகத்தில் பயன்படுத்தும் முறை, அதைப் பாதுகாப்பாய் வைத்திருக்கும் வகை என தகவல்கள் சார்ந்த அனைத்து பணிகளையும் செய்பவர் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ( டிபிஏ) என அழைக்கப்படுவார். இந்த ஏரியாவின் இள நிலை ஊழியர் டேட்டாபேஸ் அனலிஸ்ட் என்பார்கள்.

இந்த வேலைக்கு கணினி மென்பொருள் துறையில் படித்திருக்கும் பட்டம் பயனளிக்கும் என்றாலும் அறிவியல் துறையில் பெற்றிருக்கும் ஏதோ ஒரு பட்டம் கூட பல நிறுவனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது ஆனந்தமான செய்தி. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்திருப்பவர்களைக் கூட அங்கீகரிக்கிறது.

இந்த வேலைக்கு சர்டிபிகேஷன் பயிற்சி மிக முக்கியம். எஸ்.க்யூ எல் எனப்படும் தொழில்நுட்பத்தில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டியது இதன் முக்கியமான தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் சான்றிதழ் அல்லது ஆரக்கிள் அளிக்கும் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் சான்றிதழ் போன்றவை மிகவும் சிறப்பான சான்றிதழ் பயிற்சிகளாகும்.

ஹார்ட்வேர் எஞ்சினியர் ( Hardware Engineer )

கணினி பணிகளைப் பொறுத்தவரை கணினி எனும் கருவி, அந்தக் கருவியில் இயங்கும் மென்பொருட்கள் எனும் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணினியில் இயங்கும் மென்பொருட்கள், மற்றும் கணினியை இயக்கும் மென்பொருட்கள், கணினிகளை இணைக்கும் மென்பொருட்கள் என்பவற்றையெல்லாம் ‘சாஃப்ட்வேர்’ எனும் ஒரு மிகப்பெரிய தலைப்பின் கீழ் அடைத்து விடலாம்.

அந்தக் கணினியில் இருக்கும் வன்பொருட்களை அதாவது ஹார்ட்வேர் பகுதிகள் சார்ந்த பணிகளைச் செய்பவர்கள் ஹார்ட்வேர் எஞ்சினியர்கள் எனப்படுவார்கள். இவர்களுடைய பணி மிகவும் முக்கியமானது. புதியவகையான கீபோர்ட்கள், மைக்ரோசிப்கள், பிரிண்டர்கள், ஹார்ட்டிஸ்கள் போன்றவற்றை வடிவமைக்கும் ஆய்வக பணிகள் இவற்றில் முக்கியமானது.

எந்த வகையானாலும் ஹார்ட்வேர் பொறியாளர்களின் தேவை எல்லா நிறுவனங்களுக்கும் உண்டு. கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது, இல்லையேல் எலக்ட்ரானிக் துறையில் பொறியாளர் பட்டம் பெற்றிருப்பது தேவை. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்த பணி, எனவே இதன் மீது ஆழமான விருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமானது இது.

மற்ற பணிகளைப் போலவே ஒரு சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது வன்பொருள் பணியிலும் அதிக நன்மை பயக்கும். மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களெல்லாம் சிறப்பு சான்றிதழ் பயிற்சிகளை அளிக்கின்றன. அவை தவிரவும் ஏராளமான நிறுவனங்கள் ஸ்பெஷல் சான்றிதழ் பயிற்சிகள் நடத்துகின்றன. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அதிக பலனளிக்கும்.

ஹெல்ப் டெஸ்ட் டெக்னீஷியன் ( HelpDesk Technician )

கணினி நிறுவனங்களில் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இந்த ஹெல்ப் டெஸ்ட் பணியாளர்களின் பணியையும் குறிப்பிடலாம். அதே போல கணினி துறையில் பட்டம் பெறாமலேயே ஐடி துறைக்குள் நுழைவதற்கான ஒரு கதவாகவும் இந்த பணி இருக்கிறது.

கணினி நிறுவனங்கள் பல விதமான கணினிகளால் நிரம்பியிருக்கும் என்பது அறிந்த விஷயம் தான். அந்த கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்வதும், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதும் இந்த ஹெல்ப் டெஸ்க் பணியாளர்களின் முக்கிய வேலை. கணினிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நிறுவனம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த ஆரோக்கியத்தை கட்டிக் காப்பதில் இவர்களுடைய பங்கும் முக்கியமானது.

நிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் இருந்தால் நேரடியாகச் சென்று பழுதுகளை நீக்குவதும், அவை வேறு வேறு இடங்களிலோ, வேறு வேறு மாநிலங்களிலோ இருந்தால் அவற்றை ஆன்லைன் மூலமாக சரிசெய்வதும் இவர்களுடைய பணிகளில் அடக்கம். கணினி சார்ந்த சிக்கல்களைப் பலருடன் பேசவும், சரிசெய்யவும் வேண்டியிருப்பதால் நல்ல உரையாடல் திறன் இவர்களுக்கு அவசியம்.

ஒரு பட்டம், அல்லது ஒரு நல்ல டிப்ளமோ படிப்பு கூடவே ஹார்ட்வேர் சர்ப்போர்ட் சார்பான ஒரு பயிற்சி இவை போதும் இந்த பணிக்குள் நுழைய. நுழைந்தபின் தங்களுடைய பணியை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவு படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்பது நிச்சயம்.

 

நெட்வர்க் சார்ந்த பணிகள். ( Networking Related Jobs)

 

கணினி நிறுவனத்தில் கணினிகள் நிரம்பியிருக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த கணினிகளெல்லாம் தனித் தனியே இருந்தால் தகவல் பரிமாற்றம் உட்பட எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறாது. எல்லா கணினிகளும் ஒரு சரியான தொழில்நுட்ப முறையில் இணைந்திருந்தால் மட்டுமே அது முழுமையான பணியை ஆற்ற முடியும்.

கணினிகளை சரியான வலைப்பின்னலின் இணைப்பது, அந்த இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது, தகவல் பரிமாற்றங்கள் தேவையான விதத்தில் நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பது, தகவல் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்துவது, ஒவ்வொருவருக்கும் அந்த நெட்வர்க்கில் என்னென்ன அனுமதிகள் கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது என நெட்வர்க்கிங் சார்ந்த சர்வ சங்கதிகளையும் நெட்வர்க்கிங் குழு செய்யும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருப்பது, அல்லது நெட்வர்க்கிங், எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது அடிப்படைத் தேவையாகக் கொள்ளப்படும். சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்த நபர்களையும் வேலையில் சேர்த்துக் கொள்கின்றன, ஆனால் அவர்கள் நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழ்களை பல முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை.

இந்த நெட்வர்க்கிங் ஏரியாவில் படிப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பல வேலைகள் உண்டு. நெட்வர்க் எஞ்ஜினியர், நெட்வர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட்வர்க் செக்யூரிடி அனலிஸ்ட், இன்டர்நெட்வர்க் எஞ்ஜினியர் போன்றவை சில உதாரணங்கள்.

டெக்னிகல் ரைட்டர். ( Technical Writer )

தொழில்நுட்பம் சார்ந்தவற்றை எழுதி வைப்பவர் என இந்தப் பணியைச் சொல்லலாம். ஐடி நிறுவனங்களில் பல்வேறு கோப்புகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை ‘தொழில்நுட்பம்’ சார்ந்தவை. இந்த தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அறிந்து, தெரிந்து வகைப்படுத்தி பிழையின்றி எழுதி வைக்கும் துறை தான் இது. இன்றைய தினத்தில் வளர்ந்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று.

தகவல்கள் சரியாக இருக்க வேண்டும், தகவல்கள் எளிமையாக இருக்கவேண்டும், தகவல்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும், தகவல்கள் வாசிக்க தூண்டுவதாக இருக்க வேண்டும் என பல ‘வேண்டும்’கள் இந்த வேலையில் உண்டு.

அட்டகாசமான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இந்த வேலைக்குத் தேவை என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் புரிந்திருப்பீர்கள். சிறப்பாக எழுதும் திறமையும் வேண்டும். கூடவே கணினி துறைபற்றிய அறிவும் அவசியம்.

ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டியது அடிப்படைத் தேவை. ஆங்கில இலக்கியம், ஜர்னலிசம் போன்ற பட்டங்கள் வசீகரிக்கும். வலைத்தளங்கள், நூல்கள், பயிற்சி நிலையங்கள் என உங்களை பட்டை தீட்டும் இடங்கள் பல உண்டு.

பட்டப்படிப்போடு கூட எழுதுவதற்குப் பயன்படக் கூடிய மென்பொருட்களின் மீது நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். எம்.எஸ் வேர்ட், ஃப்ரேம் மேக்கர், பேஜ் மேக்கர் அல்லது க்வார்க் போன்ற மென்பொருட்களில் ஏதேனும் சிலவற்றில் பரிச்சயமும், நல்ல அனுபவமும் இருப்பது அவசியம்.

Sony And Google Unveil Internet TV Set

4

கேம்ஸ் ரைட்டர் ( Games Writer )

 

எந்நேரமும் குழந்தைகள் போனும் கையுமாக இருந்து விளையாடிக்கொண்டிருப்பது இன்றைக்கு சர்வ சாதாரணக் காட்சியாகிவிட்டது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

கணினி, மொபைல், சமூக வலைத்தளங்கள் என இந்த விளையாட்டின் தளம் இப்போது பரந்துபட்டிருக்கிறது. ஒரு விளையாட்டின் கருவை உருவாக்குவது, அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது, அதன் விளையாட்டு முறைகளை நிர்ணயிப்பது, அதற்கான ஒலியை உருவாக்குவது, அதை சோதிப்பது என கணினி விளையாட்டுத் துறையில் பல்வேறு பணிகள் உள்ளன.

நல்ல கற்பனை வளம் இருக்க வேண்டியது இந்தப் பணியின் ஒரு முக்கிய தேவை. சிறுவர்கள், பதின்வயதினர் போன்றோரின் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியமான தேவை. ஒரு கருவை உருவாக்கி, அதை முழுமைப் படுத்தி சந்தைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பது இந்தப் பணியின் சிரமத்தை விளக்குகிறது.

இந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய வழி இது. ஒரு சின்ன கான்செப்ட் விளையாட்டை உருவாக்க வேண்டியது. அதன் சில பாகங்களை மாடலாக உருவாக்கி அதைப் பயன்படுத்தி வேலையில் நுழைய வேண்டியது. இதற்கென்று பல ஆன்லைன் குழுக்கள், ஃபாரம்கள், இணைய தளங்கள் உள்ளன.

பிடித்ததைச் செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் அருமையானது. விளையாட்டு தானே என்று விளையாட்டாய் நினைக்காதீர்கள், இதில் கிடைக்கும் சம்பளம் மற்ற துறைகளை விட மிக அதிகம்.

 

அனிமேஷன் துறை ( Animation Technology)

 

இன்றைக்கு மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் கணினி சார்ந்த துறைகளில் ஒன்று அனிமேஷன் துறை. இன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே இந்த அனிமேஷனின் கண்ணுக்குத் தப்ப முடியாது. எகிறிக் குதிக்கும் ஹீரோவைக் கட்டியிருக்கும் கயிறை அவிழ்ப்பதானாலும் சரி, பாடலில் பின்னால் வானத்தில் சூரியனை உதிக்கச் செய்வதானாலும் சரி, அணை உடைந்து வெள்ளம் பாய்வதானாலும் சரி, அல்லது ஹைடெக் ரோபோட்டிக் டெக்னிக்கல் ஆனாலும் சரி அனிமேஷன் இல்லாமல் திரைப்படம் இல்லை.

திரைப்படத்தைப் போலவே, விளம்பரங்கள், விளையாட்டுகள், பாடல்கள், இணையப் பக்கங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் அனிமேஷனின் துணையுடன் தான் நடக்கின்றன. இந்த அனிமேஷன் இன்றைக்கு ஒரு படி முன்னேறி முப்பரிமாண அனிமேஷன் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3டி தான் இப்போதைய ஹாட் டிரென்ட் என்று சொல்லலாம்.

பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் தேவை இங்கே இல்லை. ஆனால் கிராபிக்ஸ் டிசைனிங் சார்ந்த ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது ரொம்ப பயனளிக்கும். கூடவே அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், வீடியோ/போட்டோ எடிட்டிங் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்வது கை கொடுக்கும்.

சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது, அது நம்முடைய ரசனையாய் இருக்க வேண்டும். ஒருவகையில் கிராபிக்ஸ் கலையும் அப்படித் தான். ஒரு காட்சியைப் பார்த்ததும் அதை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம், அழகுபடுத்தலாம், மெருகூட்டலாம், மாற்றியமைக்கலாம் என்றெல்லாம் கற்பனைக் குதிரை உங்களுக்குள் ஓடத் துவங்கினால் நீங்கள் இதில் நுழையலாம்.

அனிமேஷன் துறை மிகக் கடுமையான வேலை வாங்கும் துறை. ஆனால் மிக மிக இனிமையான, சுவாரஸ்யமான பணி. தீவிர ஆர்வம் இருக்கிறவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.

 

அட்மின் & ஃபெஸிலிடிஸ் ( Admin and Facilities)

 

இவை நேரடியாக கணினி சார்ந்த பணிகள் அல்ல, ஆனால் ஐடி நிறுவனங்களில் தவறாமல் இருக்கக் கூடிய பணிகள். அலுவலகத்தில் பணியாளர்களின் வேலை சரியாக நடக்க துணை செய்யக் கூடிய ‘சப்போர்டிங்’ வேலையாட்கள் இவர்கள்.

திடீரென ஒரு புது புராஜக்ட் வருகிறது, ஒரு 25 பேர் அமரக் கூடிய இடம் வேண்டும் என்றால் இவர்கள் தான் களத்தில் குதித்து அதற்கான திட்டமிடுதலைச் செய்வார்கள். இருக்கைகள், மேஜைகள், அறைகள், கான்ஃபரன்ஸ் ஹால்கள் என எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வார்கள்.

அலுவலகத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் இவர்கள் மூலமாகத் தான் வரும். அது ஒரு பென்சில் ஆனாலும் சரி, பல இலட்சம் மதிப்புள்ள வீடியோ கான்ஃபரன்சிங் கருவியானாலும் சரி. சில அலுவலகங்களில் அதன் உட் பிரிவாக ‘பொருட்களை வாங்குதல்,பராமரித்தல்’ (Procurement)எனும் ஒரு பிரிவையும் கொண்டிருப்பார்கள்.

அலுவலகப் பணியாளகர்களுக்குத் தேவையான கைபேசிகள், அதன் சேவை சார்ந்த பராமரிப்புகள், அதன் வரவு செலவு மேலாண்மை போன்ற பணிகளும் அட்மின் எனும் பெரிய வகைக்குள் வரும். நிறுவனங்கள் அதற்கென ‘டெலி கம்யூனிகேஷன்’ (Telecommunication Department) அதாவது தகவல் தொடர்பு எனும் ஒரு உட்பிரிவை வைத்துக் கொள்வதும் உண்டு. அது அந்தந்த நிறுவனங்களின் அளவைப் பொறுத்த விஷயம்.

இந்த வேலைகளுக்கு நல்ல கம்யூனிகேஷன், உடலுழைப்பைச் செலுத்தத் தயங்காத மனம், ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை ‘ஃபாலோ’ செய்து முடிக்கும் திறமை போன்றவை முக்கியம். மற்றபடி பட்டப்படிப்புகள் ஏதும் தேவையில்லை.

 

மனிதவளப் பணிகள் ( Human Resources )

 

ஹைச்.ஆர் ஊழியர்கள் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. பணியாளர்கள் ஒரு நல்ல சூழலில் பணியாற்றுவதை ஊர்ஜிதப்படுத்துபவர்கள் இவர்கள். பெரும்பாலும் எம்.பி.ஏ படித்தவர்களே இந்த பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.

நிறுவனங்களில் வரைமுறைகளை வகுப்பதிலும், அதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும், அவர்களுடைய குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதிலும், அவர்கள் பாதுகாப்பான சூழலில் பணிசெய்வதை உறுதி செய்வதிலும் இவர்களுடைய பங்கீடு இருக்கும்.

பணியாளர்களுக்கு இடையே நடக்கும் நிழல் யுத்தம், கிண்டல், வம்பு போன்றவையெல்லாம் வரைமுறை தாண்டும் போது இவர்கள் தான் வந்து சமரம் செய்வார்கள். ஒருவரை எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்திலிருந்து கழற்றி விட இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

சில நிறுவனங்களில், ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் இவர்களே செய்வார்கள். பெரிய நிறுவனங்களெனில் ‘ரிக்ரூட்மென்ட்’ (Recruitment) எனும் ஒரு தனி துறையையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான ஆட்களை நிறுவனத்துக்கு தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் துணை செய்வார்கள்.

நல்ல உரையாடல் திறன் இந்த வேலைக்கு இன்றியமையானது. கூடவே பொறுமையும், நிதானமும், பாகுபாடு காட்டாத தன்மையும் இருக்க வேண்டியது அவசியம்.

 

விற்ப‌னை/விற்ப‌னை உத‌வி ( Sales and Sales Support)

 

சேல்ஸ் & சேல்ஸ் ச‌ப்போர்ட் என‌ப்ப‌டும் ப‌ணி ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளின் முதுகெலும்பான‌ ஒரு ப‌ணி. இத‌ற்கு அனுப‌வ‌ம் உடைய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே தேர்வு செய்ய‌ப்ப‌டுவார்க‌ள். பெரும்பாலும் எம்.பி.ஏ ப‌டித்த‌வ‌ர்க‌ளே இதில் நுழைவார்க‌ள், ஆனாலும் எந்த‌ ப‌ட்ட‌ம் என்ப‌து இங்கே முக்கிய‌ம் இல்லை.

இந்த‌ வேலை மூன்றுக‌ட்ட‌மாக‌ ந‌டைபெறும். ஒவ்வொரு க‌ட்ட‌த்திலும் அத‌ற்குரிய‌ ஸ்பெஷ‌லிஸ்ட் ப‌ணியாற்றுவார்க‌ள். நிறுவ‌ன‌த்துக்கு புதிதாக‌ வேலை வாங்குவ‌து தான் இவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி. ஒரு பிரிவின‌ர் எப்ப‌டியெல்லாம் ஒரு க‌ஸ்ட‌ம‌ரை க‌வ‌ர‌லாம் என்ப‌தைக் குறித்த‌ திட்ட‌மிடுத‌லைச் செய்வார்க‌ள். இவ‌ர்க‌ள் ‘பிரீ சேல்ஸ்” குழுவின‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டுவார்க‌ள். கஸ்டமரை வசீகரிக்கும் விதமான த‌க‌வ‌ல் சேக‌ரிப்புகள், ந‌ம‌து ப‌ல‌ம் என்ன‌, நிறுவ‌ன‌த்தின் த‌னித்துவ‌ம் என்ன‌ என்ப‌தையெல்லாம் அழ‌கான‌ பிர‌ச‌ன்டேஷ‌ன்க‌ள் மூல‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

இர‌ண்டாவ‌து பிரிவின‌ர் அந்த‌ பிர‌ச‌ன்டேஷ‌னை எடுத்துக் கொண்டு போய் நேர‌டியாக‌ க‌ஸ்ட‌ம‌ர் நிறுவ‌ன‌த்தின் மேல‌திகாரிக‌ளைப் பார்த்து அவ‌ர்க‌ளிடம் தமது அருமை பெருமைக‌ளை விள‌க்குப‌வ‌ர்க‌ள். வ‌சீக‌ர‌மாய்ப் பேசி, ந‌ம்பிக்கைக்குரிய‌ வித‌மாய்ப் பேசி, தேவைக்கு ஏற்றப‌டி பேசி நிறுவ‌ன‌த்தின் வ‌ருமான‌த்தைப் பெருக்குப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். விற்பனை ஒப்பந்தம் முடிந்தபின் மூன்றாவது பிரிவினர் களத்தில் குதித்து மற்ற வேலைகளையெல்லாம் கவனித்துக் கொள்வார்கள்.

இவ‌ர்க‌ளுக்கு நிறைய‌ மென்திற‌மைக‌ள் தேவை. உரையாட‌ல் திற‌மை, விவாத‌த் திற‌மை, பேர‌ம் பேசும் திற‌மை, க‌ஸ்ட‌ம‌ரின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் அறிந்து பேசும் திற‌மை, சுருக்க‌மாய்ப் பேசி விள‌ங்க‌ வைக்கும் திற‌மை என‌ ஏராள‌மான‌ மென் திற‌மைக‌ள் தேவை.

‘இவ‌ன் பேசிப் பேசியே ஊரை வித்துடுவான்’ என‌ உங்க‌ளை யாராவ‌து திட்டினால், உங்க‌ளுக்கு இந்த‌ வேலை ஒருவேளை செட் ஆக‌லாம் என‌ நினைத்துக் கொள்ளுங்க‌ள்.

 

Sony And Google Unveil Internet TV Set

5

வெப் டிசைனர்கள். ( Web Designers)

இணைய தளங்களை வடிவமைக்கும் பணி செய்பவர்கள் தான் வெப் டிசைனர்கள். நிறுவனத்தின் தேவைக்கேற்ப இவர்களுடைய பணி இருக்கும்.சில நிறுவனங்கள் வெப் டிசைனிங் பணியை முதன்மையாக வைத்துச் செயலாற்றுவதும் உண்டு.

கஸ்டமர்களுடைய தேவைக்கேற்ப அவர்களுடைய வலைத்தளங்களைப் புதிதாக வடிவமைப்பதோ, அல்லது இருக்கும் வலைப்பக்கங்களில் மாற்றங்களைச் செய்வதோ தான் இவர்களுடைய பணி. வலைத்தளங்களில் உள்ள கிராபிக்ஸ் வேலைகள் முதல், இணைய தளத்தின் செயல்பாடுகள் வரை இவர்களுடைய பணியில் அடங்கும்.

வெப் டிசைனர்களின் பணி பெரும்பாலும் வெப் டெவலப்பர்களுடன் இணைந்தே இருக்கும். இணைய தளத்தை வடிவமைப்பது டிசைனர்களின் பணி என்றால், அதன் பின்னணியில் இருக்கும் தகவல் பரிமாற்றம் செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவது இணைய தள டெவலப்பர்களின் பணியாக இருக்கும்.

வெப் டிசைனர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் அதிகரித்திருக்கிறது. தொடுதிரைக்கேற்ற வலைத்தளங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. எனவே டிசைனிங் வேலையில் விருப்பம் இருப்பவர்கள் தைரியமாக அந்தத் துறையில் கால் வைக்கலாம்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பானது என்றாலும் மற்ற பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு. வெப் டிசைனிங் மீது ஆர்வமும், ரசனையும், விருப்பமும் இருக்க வேண்டியது அவசியம்.

 

மொபைல் டெவலப்பர்கள் (Mobile Developers)

இன்றைக்கு கணினிகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே இன்றைக்கு மொபைல் டெவலப்பர்கள், மொபைல் டெஸ்டர்கள் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

டேப்லெட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கான மென்பொருள் கட்டுமானத்துக்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. எந்த கருவியில் வேண்டுமானாலும் இயங்கக் கூடிய கருவி சாரா மென்பொருட்கள் தயாரிப்பது ஒரு வகை. ஒவ்வொரு கருவிக்கும் தக்கபடியான மென்பொருட்களைத் தயாரிப்பது இன்னொரு வகை. இரண்டு வகையான பணிகளுக்கும் வரவேற்பு உண்டு.

அதே போல மொபைல் சார்ந்த சோதனைகளுக்கும் பல மென்பொருட்கள் உள்ளன, அவற்றைக் கற்று சான்றிதழ் பெறுவது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மொபைல்களுக்கான ஆப்ஸ்களைத் தயாரிப்பது இன்றைக்கு மிகவும் பரபரப்பான ஒரு பணி. திறமை இருந்தால் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம். சம்பளமும் அதிகம், புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் மன நிறைவும் கிடைக்கும்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது மொபைல் டெவலப்பர்களுக்கான அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. மொபைல் டெவலப்மென்ட் அல்லது டெஸ்டிங் மென்பொருளில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.

நவீன தொழில்நுட்பங்கள் (Emerging Technologies )

எமர்ஜிங் டெக்னாலஜீஸ் எனும் பிரிவில் அதி நவீன தொழில் நுட்பங்கள் வருகின்றன. கணினி பட்டப்படிப்புடன் இத்தகைய ஒரு அதி நவீன ஏரியாவில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது ஐடி துறையில் நுழைவதற்கான வாய்ப்பை வெகுவாக அதிகரிக்கும்.

கிளவுட் கம்யூட்டிங், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட், ரோபோட்டிக்ஸ், மொபிலிடி போன்றவையெல்லாம் இந்த நவீன தொழில்நுட்பக் குடையின் கீழ் வருகின்றன. இவற்றைக் குறித்து தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வதும், அது சார்ந்த ஒரு சான்றிதழைப் பெறுவதும், செமினார்களில் பங்கு பெறுவதும் உங்களை அத்தகைய துறையில் பணிசெய்ய தகுதியுடையவர்களாக மாற்றும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது இதன் அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கற்றுக் கொள்ளும் ஆர்வமும், புதியவற்றில் பணி செய்யும் தேடலும் இருப்பவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.

 

மெயின்ட‌னென்ஸ் அன்ட் ச‌ப்போர்ட் (Maintenance and Production Support )

மென்பொருளை உருவாக்குபவர்கள், அவற்றை தரப் பரிசோதனை செய்பவர்களைப் போல அந்த மென்பொருள் கஸ்டமரிடம் சென்றபிறகு அதைப் பராமரிப்பதும், அதில் வருகின்ற சிக்கல்களைக் கவனிப்பதும், சரி செய்வதும் இந்த குழுவினரின் பணியாக இருக்கும்.

டெவலப்பர், டெஸ்டர்களை விட சற்றே எளிமையான பணி. ஆனால் மிகவும் கவனமாக கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டிய பணி இது. பெரும்பாலும் இந்த துறையில் பகல் இரவு என மாறி மாறி உழைக்க வேன்டிய கட்டாயம் இருக்கும். காரணம், மென்பொருளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டி இருப்பது தான்.

கணினி பட்டம் இல்லாதவர்கள் கூட இந்த துறையில் நுழைய முடியும். ஏதோ ஒரு பட்டப்படிப்பு. கூடவே கணினி சார்ந்த ஒரு பயிற்சி இருந்தாலே இந்தத் துறையில் முயற்சி செய்யலாம்.

 

 

கணினி துறையில் இருக்கும் இந்த வேலைகளைப் பெறுவது எப்படி ? பெரும்பாலான நிறுவனங்கள் கீழ்க்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.

 

  1. ரெஸ்யூம் அல‌ச‌ல்.

 

ஐடி நிறுவ‌ன‌ங்க‌ள் ஒரு ந‌ப‌ரைத் தேர்வு செய்ய‌ முத‌லில் வாசிப்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ ப‌யோடேட்டாவைத் தான். அந்த‌ ப‌யோடேட்டா ஒரு அழ‌கான‌ விள‌ம்ப‌ர‌ம் போல‌ சுருக்க‌மாக‌, நேர்த்தியாக‌, சொல்ல‌ வ‌ந்த‌ விஷ‌ய‌த்தை ப‌ளிச் என‌ சொல்வ‌தாக‌ இருக்க‌ வேண்டும். முக்கியமாக முத‌ல் ப‌க்க‌த்தில் உங்க‌ள் ப‌ல‌ம், சான்றித‌ழ்க‌ள், ம‌திப்பெண் விப‌ர‌ம், விருதுக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிக‌ நேர்த்தியாக‌ எழுதி வையுங்க‌ள். வாசிப்ப‌வ‌ர்க‌ளை ப‌த்து முத‌ல், ப‌தினைந்து வினாடிக‌ளுக்குள் உங்க‌ள் ப‌யோடேட்டா க‌வ‌ர‌ வேண்டும் என்ப‌து அடிப்ப‌டை சிந்த‌னையாக‌ இருக்க‌ட்டும்.

 

  1. டெலிபோனிக் இன்ட‌ர்வியூ

 

ப‌யோடேட்டாவில் பிடித்த‌மான‌தைத் தேர்வு செய்த‌பின் நிறுவ‌ன‌ங்க‌ள் அந்த‌ ந‌ப‌ர்க‌ளை தொலைபேசியில் அழைத்து பேசுவ‌து வ‌ழ‌க்க‌ம். சில‌ துவ‌க்க‌ நிலை வேலைக‌ளுக்கு இது ந‌டைபெறாம‌லும் இருக்க‌லாம். ஒருவேளை போனில் பேச‌வேண்டிய‌ சூழ‌ல் உருவானால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள். டெலிபோனில் பேசியே ஆட்க‌ளை வேலைக்குத் தேர்வு செய்வ‌து ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். என‌வே டெலிபோனிக் இன்ட‌ர்வியூவில் அல‌ட்சிய‌மாய் இருக்க‌ வேண்டாம். உங்க‌ள் உட‌ல்மொழி அவ‌ர்களால் பார்க்க‌ முடியாது என்ப‌தால் குர‌ல் மிக‌த் தெளிவாக‌, நிதான‌மாக‌ இருக்க‌ட்டும். ச‌த்த‌ம் இல்லாத‌ சூழ‌லில் நின்று பேசுங்க‌ள். கேள்விக‌ளில் ச‌ந்தேக‌ம் இருந்தால் கேட்டு நிவ‌ர்த்தி செய்து கொள்ளுங்க‌ள். ப‌திலை சுருக்க‌மாக‌ச் சொல்லுங்க‌ள்.

 

  1. எழுத்துத் தேர்வு

 

இந்த‌ எழுத்துத் தேர்வு பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளில் உண்டு. அதுவும் ஆர‌ம்ப‌ நிலை ஊழிய‌ர்க‌ளுக்கு இது நிச்ச‌ய‌ம் உண்டு. இந்த‌ எழுத்துத் தேர்வு இர‌ண்டு க‌ட்ட‌மாக‌ இருக்கும். ஒன்று ஆப்டிடியூட் டெஸ்ட் என‌ப்ப‌டும் உங்க‌ளுடைய‌ சிந்த‌னைக் கூர்மையைச் சோதிக்கும் தேர்வு. இன்னொன்று தொழில்நுட்ப‌ அறிவைச் சோதிக்கும் தேர்வு. இர‌ண்டுக்குமான‌ மாதிரிக‌ள் இணைய‌த்தில் எக்க‌ச்ச‌க்க‌மாக‌ இருக்கின்ற‌ன‌. நிதான‌மாய்ப் ப‌யிற்சி எடுங்க‌ள்.

 

  1. குழு உரையாட‌ல்.

 

ஆங்கில‌த்தில் குரூப் டிஸ்க‌ஷ‌ன் என‌ அழைக்கப்படும் இந்த‌ உத்தி, இருக்கின்ற‌ பெரிய‌ குழுவிலிருந்து திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ளைப் பொறுக்கி எடுக்கும் எளிய‌ வ‌ழிமுறை. இந்த‌ குழு உரையாட‌லில் தைரிய‌மாக‌, தெளிவாக‌ பேச‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். அத‌ற்கு ந‌ல்ல‌ க‌ம்யூனிகேஷ‌ன் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். கொடுத்திருக்கும் த‌லைப்பில் பேசுவ‌து, குழுவின‌ரோடு க‌ல‌ந்து பேசுவ‌து, உட‌ல் மொழியை பாசிடிவாக‌ வைத்துப் பேசுவ‌து போன்ற‌வையெல்லாம் உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் ம‌திப்பெண்க‌ளைப் பெற்றுத் த‌ரும். உங்க‌ள் தைரிய‌ம், மொழி ஆளுமை, த‌லைமைப் ப‌ண்பு, குழுவோடு இணைந்து செய‌ல்ப‌டும் வித‌ம் இவையே பெரிதும் க‌வ‌னிக்க‌ப்ப‌டும். என‌வே தெரியாத‌ த‌லைப்பென்றால் கூட‌ இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு பேசுங்க‌ள்.

 

  1. நேர்முக‌த் தேர்வு

 

மிக‌ மிக‌ முக்கிய‌மான‌ க‌ட்ட‌ம் இந்த‌ நேர்முக‌த் தேர்வு. இங்கே நீங்க‌ள் த‌ன்ன‌ம்பிக்கையாய்க் காட்சிய‌ளிக்க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம். நேர்த்தியான‌ ஆடை. நேர‌ம் த‌வ‌றாமை. ப‌த‌ட்ட‌மில்லாத‌ ப‌தில்க‌ள் இவையெல்லாம் அவ‌சிய‌ம். நேர்முக‌த் தேர்வு என்ப‌து போலீஸ் குற்ற‌வாளியை விசாரிக்கும் இட‌ம‌ல்ல‌. உங்க‌ள் திற‌மை நிர்வாக‌த்துக்குப் ப‌ய‌ன்ப‌டுமா என்ப‌தை நிர்வாக‌ம் பார்ப்பதற்கும், இந்த‌ நிறுவ‌ன‌ம் ந‌ம‌க்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ருமா என‌ நாம் அறிந்து கொள்வ‌த‌ற்குமான‌ ஒரு உரையாட‌ல் என்றே வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌ ம‌ன‌நிலையில் இய‌ல்பாக‌ப் பேசுங்க‌ள்.

  1. ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூ.

மிக‌ எளிதாக‌வும், அதே நேர‌ம் க‌ணிக்க‌ முடியாத‌தாக‌வும் ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூக்க‌ள் இருக்கும். இங்கே தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ கேள்விக‌ள் ஏதும் இருக்காது. இங்கே உங்க‌ளுடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ள் தான் சோதிக்க‌ப்ப‌டும். நீங்க‌ள் நேர்மையான‌ ந‌ப‌ரா ?, நிறுவ‌ன‌த்தின் வ‌ள‌ர்ச்சியில் உத‌வுவீர்க‌ளா ? தெளிவான‌ கொள்கை வைத்திருக்கிறீர்க‌ளா ? வாழ்க்கையில் எதையெல்லாம் முத‌ன்மைப்ப‌டுத்துகிறீர்க‌ள் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை நேர‌டியாக‌க் கேட்டும் கேட்காம‌லும் இங்கே க‌ண்ட‌றிவார்க‌ள். குணாதிச‌ய‌ம் உங்க‌ளோடு பின்னிப் பிணைந்த‌து. அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள்.

இந்த‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள்.

வெற்றி வ‌ச‌மாகும். வாழ்த்துக‌ள்.

 

 

 

செல்ஃபி ! : Selfie ( Daily Thanthi Article )

kid
இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள்  செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌.

பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்ஃபி த‌னிய‌றைக‌ள் வ‌ரை நீள்கிற‌து. போனைக் கையில் எடுத்து வித‌வித‌மான‌ முக‌பாவ‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளைக் கிளிக்கிக் கொள்ளும் க‌லாச்சார‌ம் எல்லா இட‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டுகிற‌து.

“கேம‌ரால‌ த‌ன்னைத் தானே போட்டோ எடுக்கிற‌துல‌ என்ன‌ பிர‌ச்சினை” என்ப‌து தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் எழும் கேள்வியாக‌ இருக்கும். ஆனால் அது அத்த‌னை எளிதில் க‌ட‌ந்து போக‌க் கூடிய‌ விஷ‌ய‌ம் அல்ல‌ என்கிறார் உள‌விய‌லார் டேவிட் வேல். அத‌ற்கு அவ‌ர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்ட‌ர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.

பி.டி.டி என்ப‌து “தான் அழ‌காய் இல்லை, த‌ன‌க்கு ஏதோ ஒரு குறை இருக்கிற‌து என‌ ஒருவ‌ர் ந‌ம்புவ‌து. த‌ன்னுடைய‌ முக‌ம் ச‌ரியாக‌ இல்லை, த‌லை முடி ச‌ரியாக‌ இல்லை, மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, காது கொஞ்ச‌ம் பெரிசு என்றெல்லாம் த‌ன்னைப் ப‌ற்றி தாழ்வாய்க் க‌ருதிக் கொள்வ‌து. இந்த‌ பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து என்கிறார் அவ‌ர்.

இந்த‌ குறைபாடு இருப்ப‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌ங்க‌ளை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்க‌ள். அப்புற‌ம் அதை எடிட்ட‌ரில் போட்டு ச‌ரி செய்து பார்ப்பார்க‌ள், மீண்டும் எடுப்பார்க‌ள், மீண்டும் ட‌ச் அப் செய்வார்க‌ள். இப்ப‌டியே அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலையிலிருந்து தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலை வ‌ரைக்கும் நீள்கிற‌து.

“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த‌ பாதிப்பின் உச்ச‌த்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தின‌மும் ப‌த்து ம‌ணி நேர‌ம் செல்ஃபி எடுக்க‌வே செல‌வ‌ழிப்பாராம். ஒரு ப‌க்கா போட்டோ எடுத்தே தீருவேன் என‌ தொட‌ர்ந்து ப‌ட‌ம் பிடித்துப் பிடித்து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போவ‌தை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல‌, ஆறு மாத‌ கால‌ங்க‌ள் இப்ப‌டியே போயிருக்கிற‌து. இப்ப‌டியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிற‌து. ஆனாலும் அவ‌ருக்கு “க‌ட்சித‌மான‌ செல்ஃபி” சிக்க‌வில்லை !

க‌டைசியில் ஒருநாள் “ஒரு மிக‌ச் ச‌ரியான‌ செல்ஃபி கிடைக்க‌வே கிடைக்காது” எனும் முடிவுக்கு வ‌ந்திருக்கிறார். அந்த‌ முடிவு அவ‌ரை த‌ற்கொலை முய‌ற்சிக்கு இட்டுச் செல்ல‌, ப‌த‌றிப்போன‌ பெற்றோர் அவ‌ரை உள‌விய‌லார் டேவிட் வேலிட‌ம் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில்,  66% பேர் செல்ஃபி பாதிப்புட‌ன் இருக்கிறார்க‌ள் என்கிறார் அவ‌ர். செல்ஃபி எடுக்க‌ வேண்டும் என‌ உள்ளுக்குள் ப‌ர‌ப‌ர‌வென‌ ம‌ன‌ம் அடித்துக் கொள்வ‌து உள‌விய‌ல் பாதிப்பு என‌ அடித்துச் சொல்கிறார் அவ‌ர்.

செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உற‌வுச் சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌ என ஆய்வுக‌ள் சொல்கின்ற‌ன‌. “டேக‌ர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிற‌து. அதிக‌மாய் செல்ஃபி எடுத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் போடுவோர்க‌ள் ச‌க‌ ம‌னித‌ உற‌வுக‌ளில் ப‌ல‌வீன‌மாய் இருப்பார்க‌ள் என‌ அந்த‌ ஆய்வு கூறுகிற‌து.

அதிக‌மாக‌ செல்ஃபி எடுக்கும் ம‌ன‌நிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவ‌ர்க‌ள் செல்ஃபிட்டீஸ் என‌ பெய‌ரிட்டு அழைக்கின்ற‌ன‌ர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.

சில‌ஒரு நாள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்ட‌ர்லைன் செல்ஃபிட்டிஸ் !

சில‌ர் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்க‌ளை எடுத்து, மூன்றையுமே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்து எத்த‌னை லைக் வ‌ருகிற‌து, யார் என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதைக் க‌வ‌னித்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என‌ பெய‌ர்.

சீரிய‌ஸ் வ‌கை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் ! இவ‌ர்க‌ள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்ப‌டியே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், குழுக்க‌ளில் ப‌திவு செய்து கொண்டே இருப்பார்க‌ள்.

இதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்ப‌தே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அள‌வுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ந‌ஞ்சு என்ப‌து ம‌ட்டுமே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

இந்த‌ செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் ஏதோ க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளில் தோன்றிய‌து என்று தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் நினைக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ செல்பி ஆர‌ம்பித்து 175 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து என்ப‌து தான் விய‌ப்பூட்டும் விஷ‌ய‌ம். !

ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌தா !! அது தான் உண்மை. முத‌ன் முத‌லாக‌ செல்ஃபி எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்டு 1839. எடுத்த‌வ‌ர் பெய‌ர் ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸ்

Week 2

kid

உல‌கின் முத‌ல் செல்ஃபி எடுத்த‌வ‌ர் எனும் பெருமை இப்போதைக்கு ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸிட‌ம் தான் இருக்கிற‌து. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேம‌ராவை ஸ்டான்டில் நிற்க‌ வைத்துவிட்டு அத‌ன் முன்ப‌க்க லென்ஸ் மூடியைத் திற‌ந்தார். பிற‌கு ஓடிப் போய் கேம‌ராவின் முன்னால் அசையாம‌ல் ஒரு நிமிட‌ம் நின்றார். பிற‌கு மீண்டும் போய் கேம‌ராவின் கதவை மூடினார். பின்ன‌ர் அந்த‌ பிலிமை டெவ‌ல‌ப் செய்து பார்த்த‌போது கிடைத்த‌து தான் உல‌கின் முத‌ல் செல்ஃபி !

ஆனால் முத‌ன் முத‌லில் செல்ஃபி எனும் வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர் எனும் பெருமை அவ‌ருக்குக் கிடைக்க‌வில்லை. அது நாத‌ன் ஹோப் என்ப‌வ‌ருக்குக் கிடைத்த‌து. 2002ம் ஆண்டு அவ‌ருக்கு ஒரு சின்ன‌ விப‌த்து. விப‌த்தில் அடிப‌ட்ட‌ உத‌டுக‌ளோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அவ‌ர் த‌ன‌து அடிப‌ட்ட‌ உத‌டைப் ப‌ட‌ம்பிடித்தார். அதை இணைய‌த்தில் போட்டார். “ஃபோக‌ஸ் ச‌ரியா இல்லாத‌துக்கு ம‌ன்னிச்சுக்கோங்க‌, இது ஒரு செல்ஃபி, அதான் கார‌ண‌ம்” என்று ஒரு வாச‌க‌மும் எழுதினார். ஆனால் ச‌த்திய‌மாக‌ அந்த‌ வார்த்தை இவ்வ‌ள‌வு தூர‌ம் பிர‌ப‌ல‌மாகும் என‌ அவ‌ரே நினைத்திருக்க‌ வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த‌ வார்த்தை பிர‌ப‌ல‌மாக‌ ஆர‌ம்பித்த‌தும் அதை ஆங்கில‌ அக‌ராதியிலும் சேர்த்தார்க‌ள். “ஒருவ‌ர் டிஜிட‌ல் கேம‌ரா மூல‌மாக‌வோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்ப‌க்க‌ கேம‌ரா போன்ற‌ எத‌ன் மூல‌மாக‌வோ, த‌ன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்ப‌ட‌ம்” என‌ இத‌ற்கு ஒரு விள‌க்க‌த்தையும் அக‌ராதி கொண்டிருக்கிற‌து.

2012ம் ஆண்டு உல‌க‌ப் புக‌ழ்பெற்ற‌ டைம் ப‌த்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”.  2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அக‌ராதி “செல்ஃபியே இந்த‌ ஆண்டின் புக‌ழ்பெற்ற‌ வார்த்தை” என‌ அறிவித்த‌து.

ஆஸ்திரேலிய‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் முத‌ன் முத‌லில் இந்த‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் இந்த‌ வார்த்தையின் மூல‌ம் ஆஸ்திரேலியா என்று ப‌திவான‌து. 10 வ‌ய‌துக்கும் 24 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளில் 30 ச‌த‌வீத‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் சேர்கின்ற‌ன‌ என்கிற‌து ஒரு புள்ளி விவ‌ர‌ம்.

செல்ஃபியின் புக‌ழ் ப‌ர‌வுவ‌தைக் கேள்விப்ப‌ட்ட‌தும் செல்ஃபி என்றொரு ஆப்‍ ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து. முன்ப‌க்க‌ கேம‌ரா மூல‌மாக‌ எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே ப‌கிர‌ முடியும் என்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். ஒரு செல்ஃபிக்கு க‌மென்ட் கொடுக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க‌ முடியும். வேறு எதையும் எழுத‌ முடியாது. இந்த‌ ஆப்ளிகேஷ‌ன் ப‌தின் வ‌ய‌தின‌ரிடையே தீயாய்ப் ப‌ர‌விய‌து !

செல்ஃபி இப்ப‌டி இள‌சுக‌ளின் இத‌ய‌ங்க‌ளில் ப‌ற்றி எரிந்து கொண்டிருந்த‌ போது குர‌ங்கு எடுத்த‌ செல்ஃபி ஒன்று க‌ட‌ந்த‌ ஆண்டு மிக‌ப்பெரிய‌ பேசுபொருளாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க்கார‌ர் டேவிட் ஸ்லேட்ட‌ருக்குச் சொந்த‌மான‌ கேம‌ராவில் ப‌திவான‌ அந்த‌ ப‌ட‌த்தை, இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌திவு செய்திருந்த‌ன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இத‌னால் த‌ன‌க்கு பத்தாயிர‌ம் ப‌வுண்ட் ந‌ஷ்ட‌ம் என‌ வ‌ழ‌க்குப் ப‌திவு செய்தார் ஸ்லேட்ட‌ர்.

நீதிம‌ன்ற‌மோ இந்த‌ வ‌ழ‌க்கை விசித்திர‌மாய்ப் பார்த்த‌து. க‌டைசியில் அல‌சி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்க‌ள். “வில‌ங்குக‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌த்துக்கு ம‌னித‌ர்க‌ள் சொந்த‌ம் கொண்டாட‌ முடியாது”. அப்ப‌டி வில‌ங்கு செல்ஃபியும் உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை.

எது எப்ப‌டியோ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளுக்குச் ச‌ரியான‌ தீனி போட்டுக்கொண்டிருப்ப‌வை இந்த‌ செல்ஃபிக்க‌ள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளை மைய‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌து. அதில் 5.3 கோடி புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌. ஃபேஸ்புக், டுவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளிலும் செல்ஃபி ப‌ட‌ங்க‌ளும், குறிப்புக‌ளும் எக்க‌ச்ச‌க்க‌ம்.

86 வ‌து ஆஸ்க‌ர் விருது விழாவில் க‌லைஞ‌ர்க‌ளுட‌ன் எல‌ன் டிஜென‌ர்ஸ் எடுத்த‌ செல்ஃபி ஒன்று உல‌கிலேயே அதிக‌ முறை ரீ‍டுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் எனும் பெய‌ரைப் பெற்ற‌து. 3.3 மில்லிய‌ன் முறை அது ரீடுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌து !

இள‌சுக‌ளின் பிரிய‌த்துக்குரிய‌ விஷ‌ய‌ம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி ம‌ற்ற‌ நிலைக‌ளுக்கும் வெகு விரைவில் ப‌ர‌வியிருப்ப‌தையே இது காட்டுகிற‌து. நெல்ச‌ன் ம‌ண்டேலாவின் நினைவிட‌த்தில் உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ஒபாமா எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், த‌ன‌து அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளுட‌ன் சுவிஸ் அர‌சு எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் என‌ செல்ஃபியின் த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் ப‌ர‌விவிட்ட‌ன‌. எல்லாவ‌ற்றுக்கும் முத்தாய்ப்பாய் ச‌மீப‌த்தில் போப் ஆண்ட‌வ‌ரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்ட‌து விய‌ப்புச் செய்தியாய்ப் பேச‌ப்ப‌ட்ட‌து !

ப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் முத‌ல், போப் ஆண்ட‌வ‌ர் வ‌ரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேம‌ராக்க‌ள் ப‌திவு செய்திருக்கின்ற‌ன‌. 47 ச‌த‌வீத‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று ! அதிலும் ஆண்க‌ளை விட‌ செல்ஃபி மோக‌ம் பெண்க‌ளைத் தான் அதிக‌ம் பிடித்திருக்கிற‌தாம்.

பிலிப்பைன்ஸ் ந‌க‌ர‌ம் தான் செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌தாம். உல‌கிலேயே ந‌ம்ப‌ர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெய‌ர் அத‌ற்குக் கிடைத்திருக்கிற‌து.

செல்ஃபியின் ப‌ய‌ன்பாடும், சுவார‌ஸ்ய‌ங்க‌ளும் உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ப‌து ப‌த‌ற‌டிக்கும் செய்தியாகும்.

Week 3

kid

செல்ஃபி என்றாலே சுவார‌ஸ்ய‌ம் என‌ நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் ப‌றிக்கும் ஆப‌த்தும் நிர‌ம்பியிருக்கிற‌து என்பது தான்  ப‌த‌ற‌டிக்கும் செய்தி.

செல்ஃபிக்கு ர‌சிக‌ர்க‌ளாக‌ மாறியிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் இள‌ வ‌ய‌தின‌ர் தான். அவ‌ர்க‌ளுடைய‌ இள‌ இர‌த்த‌ம் துடிப்பான‌து. அத‌னால் த‌ங்க‌ள் செல்ஃபியில் அதிர‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் துடிக்கிறார்க‌ள். ப‌ல‌ வேளைக‌ளில் அது ஆப‌த்தான‌தாக‌ முடிந்து விடுகிற‌து.

ஸெனியா ப‌தினேழு வ‌ய‌தான‌ ப‌தின்ப‌ருவ‌ப் பெண். செல்ஃபி மோக‌ம் பிடித்து இழுக்க‌ 30 அடி உய‌ர‌ ரெயில்வே பால‌த்தில் ஏறினாள். ஒரு அழ‌கான‌ செல்ஃபி எடுத்தாள். துர‌திர்ஷ்ட‌ம் அவ‌ளுடைய‌ காலை வ‌ழுக்கி விட‌ கீழே விழுந்த‌வ‌ளுக்கு 1500 வாட்ஸ் மின்சார‌ வ‌ய‌ர் எம‌னாய் மாறிய‌து. ஆப‌த்தான‌ செல்ஃபி அவ‌ளுடைய‌ ஆயுளை முடித்து வைத்த‌து ! செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

காட்டுக்குள்ளே ஆப‌த்தான வில‌ங்குக‌ளைப் பார்க்கும்போது அதைப் பின்ன‌ணியில் விட்டு செல்ஃபி எடுப்ப‌து, டொர்னாடோ சுழ‌ற்காற்று சுழ‌ற்றிய‌டிக்கும் போது அத‌ன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்ப‌து, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உய‌ர‌மான‌ இட‌ங்க‌ளில் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம‌ர‌ண‌ம் எனும் சூழ‌லில் ப‌ட‌ம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என‌ செல்ஃபியை வைத்து ஆப‌த்தை அழைப்ப‌து இன்றைக்குப் ப‌ர‌வி வ‌ருகிற‌து.

கார‌ண‌ம் அத‌ற்குக் கிடைக்கும் ஆத‌ர‌வு. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் பகிரும்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ லைக் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே உயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து இத்த‌கைய‌ விளையாட்டுக‌ளில் ஈடுப‌டுகின்ற‌னர்.

இப்ப‌டி எடுக்க‌ப்ப‌டும் செல்ஃபிக்க‌ள் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு என்ப‌து இன்னும் ஊக்க‌ம் ஊட்டுகிற‌து. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் த‌லையின் நின்று லீ தாம்ச‌ன் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், போர்விமான‌த்திலிருந்து விமானி ஒருவ‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌ர்வ‌தேச‌ வான்வெளி நிலைய‌த்திலிருந்து விண்வெளி வீர‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌வுத் வ‌ங்கி உச்சியில் தொங்கியப‌டி கிங்ஸ்ட‌ன் எடுத்த‌ செல்பி என‌ ப‌த‌ற‌டிக்கும் செல்ஃபிக்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ப் பெரிது.

மொபைல்க‌ளில் எடுக்க‌ப்ப‌டும் புகைப்ப‌ட‌ங்க‌ளால் பாதுகாப்புக்கு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் என‌ எச்ச‌ரிக்கின்ற‌து அமெரிக்க‌ காவ‌ல்துறை. உங்க‌ளுடைய‌ ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்க‌ள் எங்கே இருக்கிறீர்க‌ள் என்பதை ஒருவர் துல்லிய‌மாய்க் க‌ண்டுபிடித்துவிடும் ஆப‌த்து உண்டு.

உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் உங்க‌ள் நான்கு தோழிய‌ருட‌ன் க‌ண்காணாத‌ காட்டுப் ப‌குதியில் இருக்கிறீர்க‌ள் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ஐந்து தோழிய‌ரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்க‌ள். பின்ன‌ணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த‌ புகைப்ப‌ட‌த்தை வைத்துக் கொண்டு ஒருவ‌ர் உங்க‌ள் இருப்பிட‌த்தை க‌ண்டுபிடித்து விட‌ முடியுமாம். அதெப்ப‌டி ?

ஸ்மார்ட் போன்க‌ளில் ஜி.பி.எஸ் பின்ன‌ணியில் இய‌ங்கிக் கொண்டே இருக்கும். அது உங்க‌ளுடைய‌ இருப்பிட‌த்தை உங்கள் புகைப்ப‌ட‌ங்க‌ளில் ரகசியக் குறியீடுகளாகப் ப‌திவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள்.  அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை ஒருவ‌ர் ட‌வுன்லோட் செய்து அத‌ற்கென்றே இருக்கும் சில‌ மென்பொருட்க‌ளில் இய‌க்கும் போது அந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விலாச‌ம் கிடைத்து விடுகிற‌து. சில‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள் கூட‌ இந்த‌ டீகோடிங் வேலையைச் செய்து த‌ருகின்ற‌ன‌.

“வீட்ல‌ த‌னியா போர‌டிக்குது” என‌ நீங்க‌ள் ஒரு செல்ஃபி போட்டால் உங்க‌ள் விலாச‌த்தைக் க‌ண்டுபிடித்து ஒருவ‌ர் உங்க‌ளை தொந்த‌ர‌வு செய்யும் சாத்திய‌ம் உண்டு என்ப‌து புரிகிற‌த‌ல்ல‌வா? ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌சீக‌ர‌ அழைப்புக‌ள‌ல்ல‌வா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். என‌வே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுங்க‌ள் என‌ அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஆப‌த்துக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டாலும், ம‌ருத்துவ‌த்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷ‌ய‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. குறிப்பாக‌ “செல்ஃபி வீடியோ” வை ம‌ருத்துவ‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ருடைய‌ பேச்சு, அசைவு போன்ற‌வ‌ற்றைப் ப‌திவு செய்து அதை ம‌ருத்துவ‌ ஆய்வுக்கு உட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் ஒருவ‌ருடைய‌ குறைபாடுக‌ளைக் க‌ண்டுபிடித்துச் ச‌ரிசெய்யும் முறை இப்போது வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.

இதையே பேச்சுக்க‌லையை வ‌ள‌ர்க்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளும் பயன்படுத்தலாம். குறிப்பாக‌ ஒருவ‌ருடைய‌ மொழி உச்ச‌ரிப்பு, ச‌த்த‌ம், தொனி, தெளிவு போன்ற‌ அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் ப‌திவு செய்து அத‌ன் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து பேச்சை எந்த‌ வித‌த்தில் மாற்ற‌ வேண்டும் என்ப‌தைக் க‌ண்டு பிடித்து ச‌ரி செய்ய‌ முடியும்.

இப்போதெல்லாம் வ‌ச‌தியாக‌ செல்ஃபி எடுக்க‌ “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிற‌து. நீள‌மான‌ குச்சி போன்ற‌ க‌ருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்க‌லாம். அந்த‌ குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் ப‌ட்ட‌னை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இத‌ன் மூல‌ம் குழுவின‌ராக‌ செல்ஃபி எடுப்ப‌து எளிதாகிவிடுகிற‌து. 2000 ர‌ஃபிக்க‌ள் நியூயார்க் ந‌க‌ரில் குழுமியிருந்த‌போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் செல்ஃபி மிக‌ப்பிர‌ப‌ல‌ம். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ செல்ஃபி குச்சியின் நீள‌ம் முப்ப‌து அடி !!!

செல்ஃபியின் மூல‌ம் பெரிய‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு கூட‌ க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து ! த‌ன‌து ந‌ண்ப‌னையே கொலை செய்து, அந்த‌ உட‌லுட‌னே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட‌ ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவ‌ன் அந்த‌ செல்ஃபி எடுக்காம‌ல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காம‌லேயே போயிருப்பான்.

இப்ப‌டி குற்ற‌ம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய‌ ப‌ல‌ரின் சுவார‌ஸ்ய‌க் க‌தைக‌ள் காவ‌ல்துறை அறிக்கைக‌ளில் இருக்கின்ற‌ன‌.

Week :4

 

kid

செல்ஃபி எடுப்ப‌து முன் கால‌த்தில் மிக‌ப்பெரிய‌ ச‌வாலான‌ விஷ‌ய‌மாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க் க‌லைக்கு முன்பு த‌ன்னைத் தானே ப‌ட‌ம் வ‌ரைந்து கொள்வதை வான்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ ஓவிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர். இவ‌ற்றை ஒருவ‌கையில் செல்ஃபி ஓவிய‌ம் என‌ வ‌கைப்ப‌டுத்த‌லாம்.

கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, கேம‌ராக்க‌ளின் அறிமுக‌ம் வ‌ந்த‌பின் அவை அவ்வ‌ப்போது ஆங்காங்கே நிக‌ழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. உட‌ன‌டி பிரிண்ட் போட்டுத் த‌ரும் போல‌ராய்ட் கேம‌ராக்க‌ள் வ‌ந்த‌பின் செல்ஃபிக‌ள் எடுப்ப‌து கொஞ்ச‌ம் எளிதாக‌ மாறிப் போன‌து.

இன்றைய‌ மொபைல் போன் கேம‌ராக்க‌ள் இந்த‌ செல்ஃபி எடுப்ப‌தை மிக‌வும் எளிதாக்கிய‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ச‌க‌ட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் த‌ள்ளுவ‌தையும் சாத்திய‌மாக்கியிருக்கிற‌து. அதுவும் செல்போனில் முன்ப‌க்க‌க் கேம‌ரா வ‌ந்த‌பின் செல்ஃபிக்க‌ள் சிற‌குக‌ட்டிப் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருக்கின்ற‌ன‌.

செல்ஃபிக்க‌ளின் அதிக‌ரிப்பு அதை அதிக‌மாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளிடையே அதீத‌ த‌ற்பெருமை, த‌ன்னைப் ப‌ற்றி மிக‌ உயர்வாய் நினைத்த‌ல், அடுத்த‌வ‌ர்க‌ளை விட‌ தான் உய‌ர்ந்த‌வ‌ன் எனும் நினைப்பு போன்ற‌வை அதிக‌ரிக்கும் என‌ ஆராய்ச்சியாள‌ர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிறார். இதை ஆங்கில‌த்தில் ந‌ர்ஸிசிச‌ம் (Narcissism) என்கின்ற‌ன‌ர்.

இதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் பெண்களிடம் அதிக‌மாய் இருந்தாலும் ஆண்கள் இதில் ச‌ற்றும் விதிவில‌க்க‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌த‌ற்காக‌ அவ‌ர் ஆண்க‌ளை ம‌ட்டுமே வைத்து இந்த ஆய்வை ந‌ட‌த்தினார் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

கையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்க‌ள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.

தாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.

இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.

சமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால் அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது !

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.

ஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.

ஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.

எதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.

ந‌ம்முடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளையும், ந‌ம்முடைய‌ வெற்றிக‌ளையும் நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ‘செல்ஃபியும் இருக்கிற‌து’ என்ப‌து ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌முட‌ன் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். அத‌ற்காக‌ செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ தீர்ப்பிடுவதோ, குறைத்து ம‌திப்பிடுவ‌தோ த‌வ‌றான‌து ! ந‌ம் கையில் இருக்கும் தொழில்நுட்ப‌த்தின் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சாவிக‌ளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு ச‌ரியான‌ பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக‌ இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை !

( Thanks Daily thanthi, Computer Jaalam )

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1

நேரம் !!!!

 

kvr1

நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு”  என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். !

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு ? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு ! செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.

கணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இருப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து  இருக்கிறது !

அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் ? என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை.

கணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் ! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை !
கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது ? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது ? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் !

2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.

3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா ? உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.

4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் !

5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.

6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் ! சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.

8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் !

9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.

10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.

டைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி !

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.

கண்ணோடு காண்பதெல்லாம்…

 

Google Glass

 

சண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது.

ஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் பார்த்து, “ஹே.. இதென்ன கட்டிடம்” என கேட்டால் கூகுள் கண்டுபிடித்துச் சொல்லும். ஒரு அட்டகாசமான அபூர்வக் காட்சியைப் பார்த்தால் வினாடியில் கிளிக்கிக் கொள்ளலாம். கேமரா எடுத்து, லென்ஸ் மாட்டி, மெமரி கார்ட் தேடி எனும் கஷ்டம் தாமதம் ஏதும் இல்லை ! தெரியாத மொழியை ஒருவர் பேசினால் அதையும் மொழிபெயர்த்துத் தெரிந்து கொள்ளலாம் ! வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, “பாத்து போப்பா, இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போன செம டிராபிக்” என அது எச்சரிக்கும் ! என சகட்டு மேனிக்கு “அட” போடவைக்கும் சமாச்சாரங்கள் நிரம்பியிருக்கின்றன.

தொழில் நுட்ப பைத்தியங்கள் என செல்லமாய் அழைக்கப்படுபவர்கள் போட்டி போட்டு வாங்கினார்கள் ! விலை வெறும் $1500 தான். முறைக்காதீங்க ! கண்ணில் கண்ணாடியைப் போல மாட்டிக் கொண்டு காண்பவற்றையெல்லாம் படமெடுத்து, அப்படியே ஃபேஸ்புக், டுவிட்டர் என ஷேர் பண்ணி மக்கள் சிலிர்த்தார்கள். அப்படியே “என் வீட்டுக்கு வழி சொல்லு” என சொன்னவர்களிடம் அது அவர்களை அலேக்காகக் கூட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டதாம். கண்ணுக்கு முன்னாடியே படம் பார்த்து தனியே சிரித்தவர்கள் வித்யாசமாகப் பார்க்கப் பட்டார்கள் !

ஆங்காங்கே பலர் தாக்கப்பட்டார்கள். தங்கள் சுதந்திரம் களவாடப்படுவதாக உருவான பயமா ? அல்லது நம்மகிட்டே இல்லையே எனும் எரிச்சலா தெரியவில்லை. கண்ணாடி உடைந்தவர்கள் $1500 போச்சே என அழுது புலம்பியிருப்பார்கள். இது இன்னும் முழுமையடையவில்லை, இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.

அடுத்த கட்டமாக மூக்குக்கு மேலே போடும் கண்ணாடியை விட்டு விட்டு, கண்ணுக்குள் பொருத்தும் கான்டாக்ட் லென்ஸ் பக்கம் தனது தொழில் நுட்பத்தை இறக்கி வைத்திருக்கிறது கூகுள். கண்ணுக்குள் இதைப் பொருத்திக் கொண்டால் இமைத்தாலே எதிரே இருப்பதைப் படமெடுக்கலாமாம். “செல்லமே உன்னை என் கண்ணுக்குள்ளே படமெடுத்தேன்” என நிஜமாவே காதலர்கள் கொஞ்சிக் கொள்ளலாம். “கண்ணுக்குள்ளே உன்னை வெச்சேன் கண்ணம்மா” என சோகத்தில் பாடியும் திரியலாம். அது அவரவர் விருப்பம். சுடச்சுட இதற்கான காப்புரிமையை வாங்கி வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம்.

ஆனால் இந்த கான்டாக்ட் லென்ஸ் பற்றி கூகுள் நிறுவனம் சொல்லும் விஷயங்கள் கூகுள் கண்ணாடியை விட அதிக சிலிர்ப்பூட்டுகின்றன. இதைப் போட்டுக் கொண்டு நடந்தால் காண்பவற்றைப் படமெடுக்கலாம் என்பது அடிப்படை விஷயம். அதை அப்படியே உங்கள் கணினிக்கோ, மொபைலுக்கோ வயர்லெஸ் மூலம் இணைத்து வீடியோவை சேமித்து வைக்கலாம் என்பது இன்னொரு விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாத சூழலில், வழியில் நீங்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறீர்களெனில் அதை அப்படியே உங்கள் கண் உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்து வைக்குமாம், ஒரு இமைத்தல் போதும்.

பார்வையில்லாதவர்களுக்கு இந்த கான்டாக்ட் ரொம்பவே உதவி செய்யுமாம். அதிலுள்ள சென்சார்கள் பார்வையற்றவர்களுக்கு ஒரு வகையில் செயற்கைக்கண் போல உதவும். எப்போ ரோட்டைக் கடக்கலாம், வழியில பள்ளம் இருக்கா, மேடு இருக்கா, கதவு இருக்கா என எல்லா விஷயங்களையும் இது சொல்லுமாம்.

தெரிந்த நபர்களை பதிவு செய்து வைத்துக் கொண்டு அந்த நபர்கள் அடுத்த முறை பக்கத்தில் வரும்போது, ‘ராமசாமி வரான்’ என உங்கள் காதில் கிசுகிசுக்குமாம். அதனால் யாராச்சும் ராமசாமி மாதிரி குரல் மாற்றிப் பேசி உங்களை ஏமாற்றவும் முடியாது ! ராமசாமி உங்களைக் கண்டும் காணாதது போல் போய்விடவும் முடியாது ! கூடவே மருத்துவ விஷயங்களையும் அதில் புகுத்தி உடம்பிலிருக்கும் குளுகோஸ் அளவு போன்ற விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்குமாம். !

விரல் நுனியில் உலகம் எனும் நிலை மாறி, விழி நுனியில் உலகம் எனும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது இல்லையா ?!


சேவியர்
நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி

அட… அங்கேயும் இதே நிலமை தானா !!

  முன்பெல்லாம் கிராமங்களில் “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்கும். அப்போது மணப்பெண் புகுந்த வீட்டுக்குள் “வலது காலை” எடுத்து வைத்து நுழைவார். இதற்காகவே சுற்றிலும் பாட்டிமார் நிற்பார்கள். “முதல்ல.. உன் வலது காலை எடுத்து உள்ளே வைம்மா” என்று அட்வைஸ்கள் விழும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது செண்டிமெண்ட். ரோமர்களுக்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து தான் நுழைவார்கள். அப்படி நுழைவது தான் ரொம்ப நல்லது என்பது அவர்களுடைய எண்ணம். இங்கிலாந்தில் இந்த செண்டிமெண்ட் இன்னும் ஒரு படி மேலே. அவர்கள் செருப்பு போடும் போது கூட வலது காலைத் தான் முதலில் போடுவார்கள். அப்படிப் போட்டால் ஆயுள் நீளும் என்பது அவர்களுடைய செண்டிமெண்ட்.

ஆஹா.. பல்லியே கத்திடுச்சு. நல்ல சகுனம் தான் என வீட்டிலிருக்கும் பல்லியின் தலையில் பாரத்தைப் போடும் செண்டிமெண்ட் நமது ! சும்மாவாச்சும் பல்லிக்கு இரண்டு அடி கொடுத்தாவது உச்சுக் கொட்ட வைப்பார்கள். இந்தோனேஷியாவிலும் இதே நம்பிக்கை இருக்கிறது. கெய்கோ எனும் சிறு பல்லி போன்ற ஒன்று சத்தம் போட்டால் குஷியாகி விடுகிறார்கள். அதுவும் குழந்தைகள் பிறக்கும் போது அது சத்தம் போட்டால் செண்டிமெண்டலாக எல்லாம் சுபம் !

வீட்டுக்குள்ளே செருப்புப் போட்டு நடப்பதில்லை நாம். “வீட்டுக்குள்ள செருப்பு போட்டு நடந்தா புனிதம் கெட்டுடும் ?” என்பது பெரிசுகளின் வாதம். செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைவது ஒருவகையில் மரியாதைக் குறைவு. தாய்லாந்திலும் இதே செண்டிமெண்ட் உண்டு. செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் வந்தால் அது பயங்கர இன்சல்ட் ஆக நினைக்கிறார்கள். தெருக்களைச் சுற்றி அழுக்கைச் சேகரித்து வரும் செருப்பு வெளியே கிடப்பது தான் நல்லதும் கூட.

வலது கையால் எதையும் கொடுக்க வேண்டும் என்பது நமது செண்டிமெண்ட். இனம், மதம், ஜாதி எல்லாவற்றையும் தாண்டி இந்த செண்டிமெண்ட் உலவுகிறது. இந்த செண்டிமெண்ட் அப்படியே இருக்கிறது தாய்லாந்தில். வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். இடது கை வலது கை மணிக்கட்டைப் பிடித்திருக்க வேண்டும். இப்படிக் கொடுத்தால் தான் கொடுப்பவருக்கும் நல்லது, வாங்குபவருக்கும் பயன் தரும். இது அவர்களுடைய செண்டிமெண்ட். 

உள்ளங்கை அரிக்குது. இன்னிக்கு நல்ல காசு வரும்போல இருக்கு. என நாம் சொல்வதைப் போலவே துருக்கியில் உள்ளவர்களும் சொல்கிறார்கள். அவர்களுடைய செண்டிமெண்ட் படி, இடது கையில் அரித்தால்  பணம் வரும். கொஞ்சம் இடம் மாறி வலது கையில் அரித்தால் அவ்வளவு தான். உள்ளதும் போய்விடுமாம் !

“பெரியவங்க இருக்கும்போ கால்மேல கால் போடாதே” என முந்தைய தலைமுறையினர் சொல்வார்கள். அது எதிரே இருப்பவர்களுக்குச் செய்யும் அவமரியாதை என்பது அவர்களுடைய எண்ணம். இதே செண்டிமெண்ட் தாய்லாந்திலும் உண்டு.  கால் மேல் கால் போட்டால் காலால் அடுத்தவரைச் காலால் சுட்டிக் காட்டுவது போல இருக்குமாம். அது அடுத்தவருக்குப் பெருத்த அவமானமாகிவிடும். எனவே கால் மேல கால் போடக் கூடாது என்பது அவர்களுடைய விளக்கம்.

“பூனை குறுக்கே வந்துச்சா வெளங்கினாப்ல தான் “ என்பது நம்ம ஊர் செண்டிமெண்ட் மட்டுமல்ல. அமெரிக்காவிலும் ஒரு காலத்தில் இந்த செண்டிமெண்ட் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. அதுவும் கறுப்புப் பூனை வந்தால் அதோ கதி தான்.  அந்த காரியத்தையே அப்படியே விட்டு விடுவார்களாம். காரணம், அவர்களைப் பொறுத்தவரை கறுப்புப் பூனை என்பது சாத்தானின் குறியீடு !

கிராமப் புறங்களில் ஒரு நம்பிக்கை உண்டு. ஏதாச்சும் பை கொடுத்தால் வெறுமனே கொடுக்க மாட்டார்கள். வெற்றுப் பை, வெற்றுப் பாத்திரம் எல்லாம் கொடுக்கக் கூடாது என்பது செண்டிமெண்ட். இது ஹவாய் தீவு மக்களிடையேயும் பிரபலமாய் இருக்கிறது. காசு ஏதும் இல்லாமல் பையைக் கொடுத்தால், அதில் காசே தங்காதாம். 

யாராச்சும் படுத்திருந்தா அவர்களைத் தாண்டிப் போகக் கூடாது. அப்படி தாண்டினால் அந்த நபர் வளர மாட்டார். அதுவும் குழந்தைகள் படுத்திருந்தால் தாண்டவே கூடாது. இதெல்லாம் நம்ம கிராமங்களின் செண்டிமெண்ட். இதுல சுவாரஸ்யம் என்னன்னா ? இந்த செண்டிமெண்ட் அமெரிக்காவிலும் உண்டு என்பது தான்.

ராத்திரி நகம் வெட்டக் கூடாது என்பதும் நம்ம ஊரில் கேட்டுப் பழகியது தான். இதே செண்டிமெண்ட் கொரியர்களிடமும் உண்டு. இரவில் நகம் வெட்டினால் அந்த நகத்தை எலிகள் வந்து தின்று விடுமாம். அப்படித் தின்றால் உங்கள் ஆன்மாவை அது அபகரித்துக் கொள்ளுமாம். அடேங்கப்பா !

 

 சேவியர்

IOF : பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !

Internet-of-Thingsன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !

இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.

பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.

பின்னர் டேட்டா கார்ட், வயர்லெஸ், பிராட்பேண்ட் வயர்லெஸ் என இணைய வகைகள் வந்து நிலமையை படு சுலபமாக்கிவிட்டன. இப்போது மடிக்கணினிகளும் மவுசை இழக்கத் துவங்கிவிட்டன. கைகளுக்கும், சட்டைப் பைகளுக்குமாய் ஓடித் திரியும் ஸ்மார்ட் போன்கள் இணையத்தை விரல் சொடுக்கில் தொட்டுத் திரும்புகின்றன.

இந்த நிலையைத் தாண்டி என்ன தான் வரப் போகிறது எனும் ஆர்வம் எப்போதுமே மனசில் இருக்கும். ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் போல ஏதோ ஒரு வசீகரம் நம்மை எப்போதுமே புரட்டிப் போடுகிறது இல்லையா ? அப்படி ஒரு வியப்பூட்டும் நிலையை இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ( IOF : Internet Of Things ) உருவாக்கும்.

ஒரு தகவல் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். சட்டென “கூகிள்” பக்கத்துக்குத் தாவி வார்த்தையை டைப் செய்து மவுஸைச் சொடுக்குவீர்கள் இல்லையா ? அது உங்கள் விண்ணப்பத்துக்குத் தேவையான பக்கங்களை அள்ளிக் கொண்டு வந்து தரும். இப்போது டைப் கூட செய்யத் தேவையில்லை, பேசினாலே போதும் என்பது புது வரவு !

அப்படி வந்து சேரும் பக்கங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய நிலை. இதில் அடிப்படை என்னவென்றால், தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர், எங்கோ ஒரு மூலையில் ஒரு தகவலை இணையத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.

அதுவும் தகவல்கள் மட்டுமே இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் இல்லையா ? இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா ( Internet of Data) எனலாம். அதாவது தகவல்களுக்கான இணையம்.

இதை அப்படியே கொஞ்சம் வசீகரக் கற்பனையில் விரித்துப் பாருங்கள். உலகில் இருக்கின்ற பொருட்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா  வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே  இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் ? இப்படி எழுந்த ஏகப்பட்ட “எப்படி இருக்கும்” எனும் கேள்விகளுக்கான விடையாகத் தான் வரப் போகிறது “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” அல்லது பொருட்களின் இணையம்.

“இணையம் என்றால் என்ன ? “ உலக அளவிலான வலையமைப்பு ஒன்று கணினி நெட்வர்க்களை ஒரு நேர்த்தியான தகவல் பரிமாற்ற இணைப்பு மூலம் (TCP/IP) இணைப்பது. “பொருட்கள்” என்பது என்ன ? “நம்மைச் சுற்றியுள்ள ஸ்பெஷல் அடையாளம் உள்ள, அல்லது தனித்துவ அடையாளம் இல்லாத விஷயங்கள்”.  இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தனித்துவ அடையாளம் மூலம் இனம் காண முடியும் ஒரு வலையமைப்பு. இது தான் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்”. என்னால் சொல்ல முடிந்த மிக எளிய விளக்கம் இது தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், இன்டர்வியூக்களில் கேட்கப்படலாம் !

இதன் மூலம் உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம் தனியே “அறிவு” வந்துவிடும். அதாவது செயற்கை அறிவு. உதாரணமாக இப்போதெல்லாம் காரில் ரிவர்ஸ் “சென்சார்கள்” இருப்பதை அறிவீர்கள் தானே. காரை பின்னோக்கி எடுக்கும்போது வண்டி எதிலாவது மோதுமா ?, எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது? என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா ? இப்படி ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் செயற்கை அறிவு கிடைப்பது தான் விஷயம்.

இதன் மூலம் பொருட்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், சூழலோடு பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். குழப்பமாக இருக்கிறதா ? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். கூகிள் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிரைவரே இல்லாமல் தனியே ஓடக் கூடிய கார் அது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும் எனும் தகவலை அதனிடம் சொல்லிவிட்டால் கார் உங்களைக் கூட்டிக் கொண்டு பத்திரமாய் அந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.

சில ஆயிரம் மைல் தூரங்கள் ஆனாலும் கார் தொடர்ந்து பயணிக்கும். டிராபிக் வரும்போது வண்டியை நிதானமாக்கும், சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல்களைக் கவனித்து அதன்படி நடக்கும், ஸ்பீட் லிமிட் போர்ட்கள் இருந்தால் அதன் படி காரை இயக்கும். பெட்ரோல் தீரப் போகிறது எனில் சொல்லும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எவ்வளவு நேரம் ஆகும் எனும் சகல ஜாதகத்தையும் சொல்லும். மதிய வேளை ஆனால், “இன்னும் நாலு மைல் தூரத்துல ஒரு பிரியாணி கடை வருது நிப்பாட்டவா ?” என கேட்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வயசில் படித்த அலாவுதீன் கதை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ?

இங்கே, கார் அதைச் சுற்றியிருந்த சிக்னல் லைட், தகவல் போர்ட், டிராபிக், டைம், காலநிலை என பல விஷயங்களோடு “கம்யூனிகேட்” செய்தது. அதாவது உரையாடியது, அல்லது தகவலைப் பெற்றுக் கொண்டது ! அதன் மூலம் தனது வேலையை கட்சிதமாய் முடித்தது. இந்த முறையில் விபத்துகள் கணிசமாகக் குறையும் என கணித்திருக்கிறார்கள். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் – ன் ஒரு சின்ன சாம்பிள்.

RFID – ஞாபகம் இருக்கிறதா ? NFC பற்றிப் பேசியபோது நாம் பார்த்தோம்.

ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio-frequency identification) என்பதன் ரத்தினச் சுருக்கம் தான் RFID. ஒரு பொருளிலுள்ள “டேக்” ( tag) வானொலி அலை மூலமாக ஒரு தகவலை பரிமாற்றுவது தான் இதன் அடிப்படை. காரில் போகும்போது காணும் ஒரு விளம்பரச் சுவரொட்டியிலுள்ள ஒரு டேக் உங்கள் கையிலுள்ள ஸ்மார்ட் போனுக்கு ஒரு தகவலைப் பரிமாற்றுவது இதன் மூலம் சாத்தியம். இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில் நுட்பம் தான் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் கனவுக்குக் கலர் அடிக்கப் போகிறது ! அத்தோடு இணைந்து உதவப் போவது பல வகையிலான சென்சார்கள்.

உணவு, போக்குவரத்து, அலுவலகங்கள், தண்ணீர் சப்ளை, உணவுப் பொருட்கள் மேலாண்மை போன்ற விஷயங்களில் இவை மிகப்பெரிய பணியைச் செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் சிந்தனையின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.

ஜி.இ நிறுவனம் வெள்ளோட்டம் விட்ட “ஸ்மார்ட் ஹாஸ்பிடல் ரூம்” வியக்க வைக்கிறது. இந்த அறையை அறையின் மேல்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சென்சார்கள் முழு நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவை தகவல்களை ஒரு ஸ்பெஷல் மென்பொருளுக்கு பரிமாற்றிக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை டாக்டர்கள் வருகின்றனர், நர்ஸ்கள் வருகின்றனர் என்பதை அது கவனிக்கிறது. நோயாளியைத் தொடும் முன்பும், பின்பும் டாக்டர் கை கழுவவில்லையேல் “டாக்டர், நீங்க கை கழுவ மறந்துட்டீங்க” என குரல் கொடுக்கும். நோயாளி  வலியால் துடித்தால் அவருடைய முக பாவனையை வைத்தே டாக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பும் ! ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா ? இவையெல்லாம் வரப் போகும் மாற்றத்துக்கான படிகளே.

வீடுகளுக்குப் பொருத்தப்படும் வாட்டர் சிஸ்டம், அவசர காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யும் சிஸ்டம், காலநிலை மாற்றத்தை முன்னரே கண்டறியும் திட்டம் என இந்த மாற்றத்தின் கிளைகள் பல இடங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.

தற்போது தயாராகி வரும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை பெரும்பாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய வகையிலேயே உருவாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. குறிப்பாக செல்போன் சேவை நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள், இணைய சேவை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நீளும் எல்லாரும் கைகோக்க வேண்டியது ரொம்ப முக்கியம் “குளோபல் பல்ஸ்” எனும் முயற்சியின் இயக்குனர் ராபர்ட் கிர்க்பேட்ரிக். இவர் இந்த ஒருங்கிணைப்பை “டேட்டா பிலன்ந்தராபி (data philanthropy) என பெயரிட்டு அழைக்கிறார்.

2020ம் ஆண்டு நிறைவேறிவிடும் எனும் கனவுடன் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் முயற்சியை உலக நிறுவனங்கள் தொடர்கின்றன. இந்தக் கனவு பல சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்று மாறிவரும் தொழில் நுட்பம். ஆண்டு தோறும் நிகழும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் திட்டத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்து, புதுமைப்படுத்த வைக்கிறது. இரண்டாவது இதற்கு அதிகப்படியான ‘எனர்ஜி’ தேவைப்படும். அந்த சக்தியை இயற்கையிலிருந்து உருவாக்கும் சக்தி கொண்ட பொருட்களை உருவாக்குவது அவசியம்.  மூன்றாவது, இது தனி மனித சுதந்திரத்தை குழியில் போட்டுவிடும் எனும் அச்சம் ! இதைத் தவிரவும் ஏகப்பட்ட தொழில்நுட்ப சாவல்கள், தொழில் நுட்பம் சாராத சவால்கள் இதைச் சுற்றி உலவுகின்றன.

இங்கிலாந்திலுள்ள சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நிகல் ஸேட்போல்ட் இது குறித்துப் பேசும்போது ரொம்ப உற்சாகமாகிவிடுகிறார். உலகம் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய அறிவுப் புள்ளியாய் உருமாறிவிடும். உங்கள் பிரிட்ஜ் முதல் பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் ஆப்பிள் வரை எல்லாமே தொடர்புக்குள் இருக்கும். “என்னைக் குடிக்காதே நான் காலாவதி ஆனவன்” என மருந்து பாட்டில் எச்சரிக்கும். இந்தப் பொருளை விட அடுத்த கடையில் இருக்கும் பொருள் விலைகுறைவு என பொருளே தகவல் சொல்லும். இப்படி ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற ஒரு உலகில் நீங்கள் உலவலாம். என வியக்க வைக்கிறார்.

இன்னும் சிறிது காலத்தில் “மூக்குக் கண்ணாடியை எங்கேடா வெச்சேன் பேராண்டி” எனக் கேட்கும் தாத்தாவுக்கு பேரன் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” மூலம் தேடி எடுத்துத் தருவான் ! கட்டிலுக்கு அடியிலிருந்து.

சேவியர்

நன்றி – தினத்தந்தி.

POS ! என்ன ? ஏன் ? எப்படி ?

“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ?” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ! காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட்.

மிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்காகக் கட்டாமல் மிச்சம் மீதியை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைப்பவர்களுக்கு அதுவே வட்டி மேல் வட்டி வந்து இரத்தம் உறிஞ்சும் அட்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை.

கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். பிறகு பணம் செலுத்துவதற்காக உங்களுடைய அட்டையைக் கடையில் கொடுப்பீர்கள் இல்லையா ? அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது ! அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

1973ல் ஐ.பி.எம் (IBM) நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபிஎம் 3650 மற்றும் ஐபிஎம் 3660 இரண்டும் தான் இவற்றின் முன்னோடி ! 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது ! இப்போதைய பி.ஓ.எஸ் கள் அதி நவீனம் !

கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. அதே போல பி.ஓ.எஸ் கருவியில் செயல்படுவதற்கென்றும் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. 1992ம் ஆண்டு மார்ட்டின் குட்வின் மற்றும் பாப் ஹென்றி எனும் இருவரும் இணைந்து ஐ.டி ரிடெயில் ( IT Retail) எனும் ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் செயலியில் செயல்படக் கூடிய அந்த மென்பொருளை இன்றைய “பி.ஓ.எஸ்” மென்பொருட்களின் பிதாமகன் என்று சொல்லலாம்  ! தப்பில்லை !

“பார் கோட்” (Bar Code) தெரியும் தானே ? பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே !. அது வந்த பிறகு பி.ஓ.எஸ் கருவிகளின் முகமும், அகமும் மாறிப் போய்விட்டது.

இன்றைக்கு வழக்கமாக இருக்கும் முறை இது தான். நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டைக் கொடுக்கும் போது விற்பனையாளர் அந்த கார்டை பி.ஓ.எஸ் கருவியில் தேய்க்கிறார். கருவி அந்த கார்டில் உள்ள எண்ணை ஸ்கேன் செய்து கொள்கிறது.

சில பி.ஓ.எஸ் கருவிகளில் தானாகவே எண் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அதை டைப் செய்ய வேண்டும் ! அதன் பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தையும் கொடுத்தால் கருவி ஒரு “செய்தி”யை நெட்வர்க்கிற்கு அனுப்பும். அந்த நெட்வர்க் “சுவிட்ச்”(Switch Software) எனப்படும் மென்பொருளுக்கு அந்தத் தகவலை அனுப்பும்.

சுவிட்ச் தான் நம்முடைய வங்கிக் கணக்கில் கை வைக்கும். கார்ட் நல்லது தானா ? அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா ? என பல சோதனைகளுக்குப் பிறகே அது வேலை பார்க்கத் துவங்கும். டெடிட் கார்டாய் இருந்தால் உடனடிப் பணக் குறைப்பும், கிரடிட் கார்ட் எனில் கணக்கில் வரவு வைக்கவும் சுவிட்ச் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. பெரும்பாலானவை “ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்சன்ஸ்” தான்.

உதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறுமுட்டச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் பில் வரும். உங்களுடைய கார்டை வைப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி “பில்” கொண்டு வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப தாராள மனம் படைத்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள் ? அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது ? நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே ? யோசித்ததுண்டா ?

இந்த டிப்ஸ் – டிரான்சாக்ஸன் “பிரி ஆத்” (Pre Auth) எனப்படும். பிரி ஆத்தரைசேஷன் ( Pre Authorization) என்பதன் சுருக்கம் தான் அது ! ஏற்கனவே ஒரு அனுமதி தகவல் பகிர்வை உங்கள் கார்டைப் பயன்படுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையேல் அது டம்மி டிரான்சாக்ஸனாக மாற்றப்பட்டுவிடும்.

வேகமான செயல்பாடு, பணத்தை நாலு தடவை எச்சில் தொட்டு எண்ணும் அவஸ்தையிலிருந்து விடுதலை, கணக்கு இடிக்குதே என தலையைச் சொறிவதிலிருந்து எஸ்கேப், எளிய பயன்பாடு, கள்ள நோட்டுப் பிரச்சினை இல்லை என ஏகப்பட்ட பயன்கள் இந்த பி.ஓ.எஸ் பயன்பாட்டில் உண்டு.

ஒரே ஒரு சிக்கல், இந்த கருவியின் பயன்பாட்டு அடிப்படையில் உரிமையாளர் பணம் கட்ட வேண்டும் என்பது தான். அந்தப் பணம் மென்பொருள் தயாரிப்பவர்கள், மெயின்டென்ய் செய்பவர்கள், இணையப் பயன்பாடு கொடுப்பவர்கள் என பலருக்கும் போய்ச் சேரும். அதற்கெல்லாம் சேர்ந்து பொருட்களில் விலை ஏற்றி உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள் என்பது சொல்லக் கூடாத தொழில் ரகசியம்.

இந்த பி.ஓ.எஸ் கருவிகளில் வயர் இணைக்கப்பட்டது, வயர்லெஸ் என இரண்டு வகைகள் உண்டு. இணைப்பு கருவிகள் டெலபோன் வயருடன் இணைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் கருவிகள் ‘கம்பியில்லாத் தந்தி’ தொழில் நுட்பத்தில் இயங்குவது ! போகும் வழியில் டிராபிக் போலீஸ்காரர் உங்களை வழிமறித்து “ஃபைன் “ கொடுக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின் வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும் !

வெளிநாடுகளில் வயர்லெஸ் பி.ஓ.எஸ் கருவிகள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் வண்டியை பார்க்கிங் செய்யும் இடமானாலும் சரி, பயணிக்கும் டேக்ஸி ஆனாலும் சரி, காய்கறி கடை ஆனாலும் சரி, ஹோட்டல் ஆனாலும் சரி எல்லா இடங்களிலும் வயர்லெஸ் மயம் தான் ! ரேடியோ அலைகள் மூலமாக தகவல்கள் அனுப்புவது தான் இவற்றின் அடிப்படை. இந்த கருவி ஒரு மாஸ்டர் கணினியுடன் இணைக்கப்பட்டு தகவல்கள் சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவற்றின் முதல் அங்கீகரிக்கப்பட்ட நியமம் உருவானது 1996ம் ஆண்டு. OPES எனும் இந்த   நியமத்தை மைக்ரோசாஃப்ட், எப்ஸன், என்.சி.ஆர் கார்பரேஷன், ஃபுஜிஸ்டு போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ஒன்று கூடி உருவாக்கின. 1996ம் ஆண்டு இதன் முதல் பாதம் மண்ணில் பதிந்தது ! OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது ! இது 1999ல் வெளியானது.

பி.ஓ.எஸ் கருவி வழியாகச் அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலையும் டிரான்ஸாக்சன் ( Transaction) என்று பொதுப்படையாக சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந்த தகவல்கள் ஒரு பி.ஓ.எஸ் கருவியிலிரிந்து இன்னொரு நெட்வர்க் வழியாக சுவிட்ச் நோக்கிப் போகும் இடம் பாதுகாப்புப் பிரச்சினை உடையது !  திருட்டுப் பயல்களால் திருடப்பட்டுவிடும் அபாயம் உண்டு. அதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அமைத்திருப்பார்கள்.

டெஸ், டபிள் டெஸ், டிரிப்பிள் டெஸ்( DES, Double DES, Tripple DES ) போன்றவையெல்லாம் பிரபலமானவை . DES என்பது Data Encryption Standard என்பதன் சுருக்கம். பி.ஓ.எஸ் கருவி தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதும், மறுமுனையில் அந்த செய்தி மீண்டும் சரியான படி வாசிக்கப்படுவதும் தான் இதன் அடிப்படை. அதை எத்தனை அடுக்கு சங்கேதமாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை டபிள், டிரிப்பிள் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

இன்னொரு பாதுகாப்பு முறை உண்டு. அது தான் இப்போது மிகப் பிரபலம். அதாவது ஒவ்வொரு செய்தியுடனும் ஒரு சங்கேதக் குறியீடு இருக்கும். எனவே திருடுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே தகவலைத் திருடினாலும் பியூஸ் போன பல்ப் போல அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்த முறையை டக்பிட் ( DUKPT – Derived Unique Key Per Transaction) என்கின்றார்கள்.

சில கடைகளுக்கு பல மாடிகள் இருக்கும். ஒவ்வொரு மாடியிலும் சிலப் பல பி.ஓ.எஸ் டிவைஸ் கள் இருக்கும். அவற்றில் எல்லாம் மொத்தம் என்னென்ன விற்பனை நடந்திருக்கின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வசதியையும் “பி.ஓ.எஸ்” மென்பொருட்கள் தருகின்றன. அதே போல நாட்டின் பல இடங்களில் இருக்கும் தொடர் கடைகளின் பி.ஓ.எஸ் டிவைஸ் கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்க்கும் வசதியும் மிக எளிதிலேயே கிடைக்கும் ! இவை வெப் பேஸ்ட் கருவி இணைப்பாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை !

பி.ஓ.எஸ் டிவைஸ் கள் பல வகை உண்டு. சில கருவிகள் மானிடர், பண டிராயர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் “கையொப்பம்” போடும் வசதி இருக்கும். சிலவற்றில் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸ்மார்ட் கார்ட் என எல்லா வகைகளையும் பயன்படுத்த முடியும், சிலவற்றில் செக்களைக் கூட ஸ்கேன் செய்ய முடியும். சில பி.ஓ.எஸ் டிவைஸ்களில் டிஸ்கவுண்ட் கூப்பன் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும் !  தேவைக்குத் தக்கபடி கிடைக்கும் என்பதே சுருக்கமாய் சொல்ல வந்த விஷயம்.

அடுத்த முறை கடைக்காரர் கார்டை ஸ்வைப் செய்யும்போ, “சார் இதுல என்ன செக்யூரிடி செக் யூஸ்பண்றீங்க ? டெஸ்ஸா ? இல்லை டக்பிட்டா ?” என கேட்டு அவரை மிரளச் செய்யுங்கள் !

நன்றி : தினத்தந்தி – மவுஸ் பையன்.

அசத்தப் போகும், NFC !

பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன !

அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்கிறது இல்லையா ?

“இப்படி தொடாமலேயே இயங்கும்” தொழில் நுட்பம் ஒரு இனிய ஆச்சரியம். தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல் என்று இதைச் சொல்லலாம். அது தான் “அட” என வியக்க வைக்கும் பல விஷயங்களைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. செல்போன் முதல் வை-ஃபை(WiFi) எனப்படும் வயர்லெஸ் இணையம் வரை தொடாமல் தொடும் விஷயங்களே அக்கிரமித்திருக்கின்றன.

அதிலும் “வயர்லெஸ் இணையம்” சாத்தியமானதால் இன்றைக்கு தொழில் நுட்பம் சட்டென பல படிகள் பாய்ந்து முன்னேறிவிட்டது என்று கூட சொல்லலாம். மொபைல்கள், டேப்லெட்கள், ரீடர்கள் என எல்லா கருவிகளிலும் இப்போது வை ராஜா வை என “வை ஃபை” ஆட்சி தானே !

எப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி புலிப் பாய்ச்சலாய் ஓடும் தொழில் நுட்பம் இணையம் வந்தபின் ராக்கெட் பாய்ச்சலாய் மாறியிருக்கிறது. அதன் தற்போதைய வசீகரிக்கும் அம்சம் தான் “நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்” (Near Field Communication – NFC ). அழகிய தமிழில் இதை அருகாமைத் தகவல் தொடர்பு என்று சொல்லலாம். பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் இதன் பயன் என்ன என்பது !

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களை செல்லமாய் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்வதன் மூலம் தகவலைப் பரிமாறுவது தான் இந்த நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷனின் அடிப்படை. சுருக்கமாக என்.எஃப்.சி. தொட்டும் தொடாமலும் உங்க பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை அபேஸ் செய்வார்கள் இல்லையா ? அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் ! இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடவேண்டும், அல்லது ரொம்ப ரொம்ப அருகில் உரசுவது போல வரவேண்டும். அப்போது தான் இங்கே தகவல் தொடர்பு சாத்தியம் !

மிக எளிமையான வழி. வயர்லெஸ், புளூடூத் போல இரண்டு கருவிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது, அது இது என எக்ஸ்ட்ரா டென்ஷன் ஏதும் இல்லை. ஜஸ்ட் லைக் தேட் தொட்டால் தகவல் பரவும் !

ரேடியோ அலைவரிசைத் தகவல் பரிமாற்றம் தான் இதன் உள்ளே ஒளிந்திருக்கின்ற தொழில் நுட்ப சீக்ரெட் ! ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio Frequency Identification ) ஸ்டான்டர்ட் இந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை. ISO/IEC 14443 , FeliCa போன்றவையெல்லாம் இந்த ஸ்டான்டர்களில் சில.

என்.எஃப்.சி  தொழில் நுட்பம் சாதாரணமான கிரடிட் கார்ட், எலக்ட்ரானிக் காசோலை, மொபைல் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும். கூகிள் வேலட் (google wallet ) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அது இந்த நுட்பத்தின் படி தான் இயங்குகிறது.

உதாரணமாக, கடையில் பொருள் வாங்கிவிட்டு என்ன செய்வீர்கள் ? கிரெடிட் கார்டைக் கொடுப்பீர்கள் ! அவர்கள் அந்தக் கார்டை மெஷினில் தேய்த்து, உங்கள் கையெழுத்து உட்பட இன்ன பிற சங்கதிகளை வாங்கி விட்டு அனுப்புவார்கள். யாராச்சும் உங்களுடைய கார்டை லவட்டிக் கொண்டு போய் பொருள் வாங்கினாலும், சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள்.

என்.எஃப்.சி  அதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. உங்களுடைய கார்ட் தகவல்கள் எல்லாமே உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இருக்கும். பொருள் வாங்கிவிட்டு போனை அந்தக் கருவியில் உரசினால் போதும். எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ செலுத்தலாம். ஒரு “பாஸ்வேர்ட்” வைத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான் ! இது ஒரு சின்ன உதாரணம்

என்.எஃப்.சி  பயன்பாடு எதிர்காலத்தில் மிரட்டக் கூடிய அளவில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம். உங்கள் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமானால் மொபைலினால் தொட்டால் போதும். சாவி இல்லாமலேயே பூட்டு திறந்து கொள்ளும். போனும் போனும் உரசிக் கொண்டால் அப்படியே விசிடிங் கார்டைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படியே போட்டோக்களை பரிமாறிக் கொள்ளலாம். விமான டிக்கெட் போனில் இருந்தால் போதும் என இதன் பயன்கள் எக்கச் சக்கம்.

இதன் பயன்பாடு நவீன சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டு மென்பொருட்களில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

எதிர்காலத்தில் வர்த்தகத்தில் என்.எஃப்.சி கொடி நாட்டும் என வர்த்தக ஜாம்பவான்கள் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். அதற்கு உதவுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஸ்மார்ட் போன், இன்னொன்று என்.எஃப்.சி டேக் (NFC Tag). என்.எஃப்.சி டேக் என்பதை பொருட்களில் இருக்கின்ற “பார் கோட்” போல நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.  பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்கும் போது ஸ்கேன் செய்து பில் போட்டுத் தருவார்கள் இல்லையா ? அதோடு நீங்கள் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

உதாரணமாக, காலையில் வீட்டுப் பேப்பரில் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் இந்த என்.எப்.சி டேக் சகிதம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் போனை அதன் மேல் தொட்டால் உங்களுக்கு அது இன்னும் பல விஷயங்களை போனில் தரும். “சிங்கப்பூர் செல்ல இன்றைக்கு ஸ்பெஷல் ஆஃபர். உடனே டிக்கெட்டை வாங்குங்கள்” என ஒரு விளம்பரம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். அந்த எண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்பீர்கள். பிறகு அந்த அலுவலகத்துக்கோ, அல்லது ஆன்லைனிலோ உங்களுடைய டிக்கெட்களை புக் செய்வீர்கள். இது தானே வழக்கம்?

என்.எப்.சி டேக் விளம்பரமெனில் இதில் எதுவும் தேவையில்லை. உங்கள் போன் அந்த இணைப்பை வாசிக்கும். அப்படியே விவரங்கள் போனில் வரும். அங்கிருந்து உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ஒரு காபி குடிக்கும் நேரத்தில் எல்லாம் சுபம் ! அடுத்த லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்களை என்.எஃப்.சி  நுட்பத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளும் வசதியை இப்போதே சேம்சங் போன்ற செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.

கடை வீதிக்குப் போகிறீர்கள். போகும் வழியில் தெருக்களிலோ, கடை வாசலிலோ ஒட்டப்பட்டிருக்கும் என்.எப்.சி டேக் பக்கத்தில் உங்கள் போனைக் கொண்டு போய் “ஒரு கிலோ கத்தரிக்காய், நாலு கிலோ வெங்காயம்” என ஆர்டர் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லலாம். நீங்கள் வீடு வந்து சேரும் போது பொருட்களும் வந்து சேரும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் சில கடைகள் இதற்காகவே இருக்கின்றன. கடைகளில் பொருட்களே இருக்காது. போனால் படங்களும், அதன் விலையும், என்.எஃப்.சி விளம்பரமும் மட்டுமே இருக்கும். உங்களுக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் தொட்டுக் கொள்ளுங்கள், பணத்தை போனிலேயே செலுத்துங்கள், வீட்டு அட்ரசைக் கொடுங்கள் வீட்டுக்கு பொருள் வந்து சேரும். வெண்டக்காயை ஒடிச்சுப் பாத்து தான் வாங்குவேன் என அடம்பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஷாப்பிங் ஐடியா !

பிரான்ஸிலுள்ள டோலோஸ் விமான நிலையத்தில் என்.எஃப்.சி மூலம் செக்-இன் செய்யலாம் எனும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். உங்களுடைய போர்டிங் பாஸ் எல்லாம் போனில் இருக்கும். கையை ஆட்டிக் கொண்டே விமானத்தில் ஏறுவது போல, போனை ஆட்டிக் கொண்டே உள்நுழைய அனுமதி பெறலாம் ! உலகிலேயே இந்த வசதி இந்த விமான நிலையத்தில் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ் !

2004ம் ஆண்டு மூன்று வர்த்தக ஜாம்பவான்கள் சோனி, நோக்கியா மற்றும் பிலிப்ஸ் இணைந்து இதற்கான வரைமுறையையும் விதிகளையும் நிர்ணயித்தார்கள். இன்று வரை அவையே என்.எஃப்.சியின் அடிப்படை விதிகளாக இருக்கின்றன ! இதெல்லாம் பழைய கால வரைமுறை. இதெல்லாம் மாற்றியாகவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் !

அறிவியல் படித்திருக்கிறீர்களா ? “இன்டக்டிவ் கப்ளிங்” (Inductive coupling) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது ! பத்து இருபது சென்டீமீட்டர்  வரை செயல்படும் என சிலர் வாதிடுவதுண்டு. எனினும் 4 சென்டீமீட்டர் என்பதே உத்தரவாத எல்லை !

ரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (Radio frequency identification (RFID) ) பற்றிச் சொன்னேன் இல்லையா ? அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பேசிவ் ஆர்.எஃப்.ஐ.டி, இன்னொன்று ஆக்டிவ் ஆர்.எஃப்.ஐ.டி. இரண்டாவது வகை பேட்டரியால்  சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் என்பதே அதி முக்கியமான வித்தியாசம். இதனால் இந்த தொடுபிணைப்பு தூரம் கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்பது ஒரு ஸ்பெஷல் பயன். போகும் வழியில் பஸ்ஸில் இருந்தபடியே போஸ்டரில் இருக்கும் “இணைப்பை வாசித்து” பொருளை வாங்கும் நிலை ஒருவேளை வரலாம் !

தொழில் நுட்ப அடிப்படையில் இது 13.56 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும். வினாடிக்கு 106 முதல் 424 கிலோபைட் அளவிலான தகவல்களை பரிமாற்றும். இது என்.எஃப்.சி சார்ந்த வர்த்தகத்துக்கு போதுமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்பாட்டு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று ரீட் அன்ட் ரைட் ( read and write ) விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இது பெருமளவில் பயன்படும். இரண்டாவது பியர் – டு – பியர் (peer to peer). இரண்டு செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடத்தும் விஷயம் இது. போட்டோக்கள், பாடல்கள், விசிடிங்கார்ட் போன்றவற்றை பரிமாறிக் கொள்வது போல!. மூன்றாவது கார்ட் எமுலேஷன் மோட் ( card emulation mode ) இது கிரெடிட் கார்ட் பயன்பாடு, டிக்கெட் வாங்குவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுவது !

எதிர்காலத்தில் என்.எஃப்.சி நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனும் நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன் ! இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது ? நாளை டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நம்முடைய போன் பயன்படலாம் !

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம், (மவுஸ் பையன்)

 

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

 

 

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !

புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group  ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட்  சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !

புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது ! அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல்  பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ! இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.

எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.

புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது !

மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

 

நன்றி : (மவுஸ் பையன் ) தினத்தந்தி…