குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 5

எதிர்பாரா இனிமைகள் இருக்கட்டும் !

kvr5

வசந்திக்கும், ஆனந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இருவரும் கடந்த சில நாட்களாக ஒழுங்காகப் பேசிக்கொள்வதில்லை. ஆனந்த் அலுவலக வேலை என காலையிலேயே கிளம்பி, இராத்திரி தான் வருகிறார். இடைப்பட்ட நேரங்களிலும் அதிகம் போன் செய்வதில்லை.

வேலை வேலைன்னு வேலையையே கட்டிகிட்டு அழுங்க ! என வசந்தி எரிச்சல் பட, என் வேலையோட கஷ்டம் உனக்கெங்கே புரியப்போகிறது என ஆனந்த் திருப்பி எரிச்சல் பட, உறவில் சின்ன விரிசல். வசந்தி தன் தோழியரிடம் இதைப்பற்றிப் புலம்ப அவர்கள் ஆளாளுக்கு தூபம் போட்டார்கள். அவருக்கு வேற ஏதாச்சும் லவ் இருக்குமோ, அலுவலகத்துல கனெக்‌ஷன் இருக்குமோ, உன்னைப் பிடிக்காம போயிருக்குமோ என ஏராளம் “மோ, மோ, மோ” என பேசி அவளுடைய நிம்மதியையே கெடுத்து விட்டார்கள். இறுக்கம் இருவருக்கும் இடையே இருந்த விரிசலை பெரிதாக்கிக் கொண்டே இருந்தது.

அந்த நாள் வந்தது !! இதுக்கும் மேல பொறுக்க முடியாது, ரெண்டுல ஒண்ணு பாத்துடணும். சும்மா விடப் போறதில்லை. அவரு வரட்டும் என வசந்தி காத்திருந்தாள். மாலையில் ஆனந்த் வந்தான். தனது கோபத்தைக் கொட்ட வேண்டுமென எழுந்த வசந்தி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனந்த் புன்னகைத்துக் கொண்டே கையில் இருந்த ஒரு சின்ன பார்சலை அவளிடம் நீட்டினான்.

என்னங்க இது ?

கடைக்குப் போயிருந்தேன், இந்த வாட்சைப் பாத்தேன். உன் கைக்கு சூப்பரா இருக்கும்ன்னு தோணுச்சு அதான் வாங்கினேன்.

எனக்கா ?

உனக்கில்லாம வேற யாருக்கு நான் வாங்க போறேன்டா ? ஆனந்த் குரலில் நேசம் குழைத்தான்.

ரொம்ப நல்லாயிருக்கு.

தேங்க்ஸ். உங்கிட்டே ஒரு கிரீம் கலர் சாரி இருக்கில்ல, மயில் படம் எல்லாம் பார்டர்ல வருமே, உனக்கு எடுப்பா இருக்குமே ஒரு சாரி, அதுக்கு இந்த வாட்ச் ரொம்ப நல்லா இருக்கும்.

ஆனந்த் சொல்ல வசந்தி கண்கலங்கினாள். அவரை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள்.

சாரிங்க.. கொஞ்ச நாளாவே, நாம சரியா பேசல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.

ஆமா.. நான் தான் சாரி சொல்லணும். வேலை டென்ஷன்ல வீட்டையே கவனிக்க முடியாம ஆயிடுச்சு. இனிமே அதெல்லாம் கம்மி பண்ணிக்கணும். ம்ம்ம்… சரி வா.. வெளியே போய் ஒரு காஃபி சாப்டு வரலாம். ஆனந்த் சொல்ல, இது வரை இருந்த மன இறுக்கம், பிணக்கு, விரிசல் எல்லாம் சட்டென மறைய மகிழ்ச்சியுடன் உள்ளறைக்குப் போனாள் வசந்தி. சில்மிஷ விரல்களோடு ஆனந்தும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சின்னச் சின்ன இனிய ஆச்சரியங்கள் தான் குடும்ப வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. இதை அனுபவசாலிகள் சட்டென ஒத்துக் கொள்வார்கள். புரியாதவர்களுக்கு ஒரு புதிராக இருக்கும். வசந்தி எதிர்பாராத நேரத்தில் ஆனந்த் கொடுத்த அந்த சின்னப் பரிசு ஒரு கசப்பான சூழலை சட்டென இனிப்பாக மாற்றியது. தாம்பத்ய வாழ்க்கையின் சூட்சுமம் இது தான்.

கல்யாணத்துக்கு முன்னாடி இந்த கிரியேட்டிவ் விஷயங்கள் காதலர்களுக்கு உச்சத்தில் இருக்கும். என்ன பரிசு கொடுக்கலாம். எப்படி நம்ம ஆளை இம்ப்ரஸ் பண்ணலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள். அதுக்குத் தக்கபடி நிறைய பரிசுகள், எதிர்பாராத இனிய நிகழ்வுகள் என அசத்துவார்கள்.

காதலி, காதலன் சார்ந்த எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். “நம்ம ஆளு இருமின நாள் இது”, ‘என் ஆளு குப்புறப் படுத்து தலை நிமிர்ந்த நாள் இது’ என சர்வ தினங்களையும் மனசில் கல்வெட்டாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் எத்தனை மணி, எந்த நிமிடத்தில், என்ன நடந்தது என்பதைக் கூட மனசில் கொத்தி வைப்பார்கள். அதனால் தான் காதல் காலம் எல்லாருக்குமே ஒரு உற்சாகத்தின் அருவியாய் ஓடிக் கொண்டே இருக்கும்.

கல்யாணம் ஆச்சுன்னா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடும். பிறந்த நாளே கூட மறந்த நாளாகிப் போகும். “முன்னாடியெல்லாம் நம்மாளுக்கு நம்ம மேல கரிசனை அதிகம். இப்பல்லாம் நாம முக்கியமில்லாம போயிட்டோம்” என கணவனும், மனைவியும் கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ! அதற்கு என்ன செய்யவேண்டுமெனும் கேள்விக்கு, ‘பிறந்த நாள், திருமண நாள் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து பரிசு கொடுக்க வேண்டும், வாழ்த்து சொல்ல வேண்டும்’ என நீங்கள் சொன்னால் நீங்கள் சாதாரண தம்பதி ! அதைக் கூட சொல்லவில்லையென்றால், நீங்கள் கிளீன் போல்ட் கேஸ், என்பது வேறு விஷயம். ஆனால் அதைத் தாண்டி நிறைய இருக்கிறது !

எதிர்பாராத இனிய ஆச்சரியங்கள். அது தான் ரொம்ப முக்கியம். அது பல விதங்களிலும் இருக்கலாம். உங்களுடைய ரசனை, வசதி, விருப்பம் என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த ஆச்சரியங்கள் உருவாகும் என்பது தான் சுவாரஸ்யம்.

ஒரு சனிக்கிழமையோ, ஓய்வாய் இருக்கும் ஒரு நாளிலோ ஒரு சின்ன விசிட் அடியுங்கள். கொஞ்சம் தூரத்தில் ஏதோ ஒரு பீச் ரெசார்ட், அல்லது ஒரு மலையோர கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்கள் ரொம்ப சவுகரியம். ஏற்கனவே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்து விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு டிரிப் போய் வாருங்கள் ! மீண்டும் ஒரு ரொமான்டிக் பயணம் ஆரம்பிக்கும்.

ஒரு நாள் காலையில் உங்கள் மனைவி எழும்பும் முன்பே எழுந்து பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணி விட்டு மனைவியை எழுப்பிப் பாருங்கள். ஒரு சேஞ்சுக்காக நான் உனக்கு சமைச்சு வெச்சிருக்கேன், சாப்பிட்டு பாரு என ஒரு ஆச்சரியம் கொடுங்கள். உங்களுடைய சமையலின் ருசி எப்படி என்பதல்ல முக்கியம். உங்களுடைய கரிசனை மனைவியை நெகிழச் செய்யும் !

ஷாப்பிங் போறது மனைவிகளோட சர்வதேசக் குணம். அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியே வரும்போது ஒரு சின்ன பர்ஸ், ஒரு டி ஷர்ட், ஏதோ ஒண்ணு வாங்கி கணவனுக்குக் கொடுங்கள். உங்க பர்ஸ் பழசாச்சுல்ல, அதான் வாங்கினேன், நல்லாயிருக்கா என கேளுங்கள். அட, நம்ம மனைவிக்கு நம்ம மேல எவ்வளவு கரிசனை என நினைப்பார் கணவன். முக்கியமாக கணவனின் விருப்பம் என்ன, அவனுடைய தேவை என்ன என்பதை அறிந்து வைத்திருந்தால் இது உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும் !

ஒரு குட்டிக் கவிதை, ஒரு சின்ன லவ் லெட்டர், ஒரு சின்ன மின்னஞ்சல் படம், உங்கள் காதலைச் சொல்ல, உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள. இப்படி ஏதாவது யோசித்துச் செய்யுங்கள். “நீ என் வாழ்க்கையில் வந்தது இறைவனின் வரம். என் கடின நேரங்களில் உன் அன்பை நினைக்கும் போது தான் மனம் லேசாகிறது” என உங்கள் ஆத்மார்த்த அன்பை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் உறவு மேம்படும்.

ஒரு நாள் மதிய வேளையிலோ, மாலை வேளையிலோ உங்கள் துணையின் அலுவலகத்துக்கு விசிட் அடியுங்கள். அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கோ, காஃபி ஷாப்புக்கோ போய் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். “சும்மா உன் கூட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணணும் போல இருந்துச்சு, அதான் வந்தேன்” என சொல்லுங்கள். இருக்கின்ற மன வருத்தங்களெல்லாம் போயே போச்சு !

ஒரு மாலை வேளையில், அல்லது மதிய வேளையில் உங்கள் மனைவியுடன் அமர்ந்து ஒரு நல்ல ரொமான்டிக் மூவி பாருங்கள். நல்ல டிவிடி வாங்கி வந்து பாருங்கள். கொறிப்பதற்கு உங்கள் மனைவியின் ஃபேவரிட் ஐட்டம் ஒன்றை தயாராக்கி வைத்திருக்க வேண்டியது தான் ஹைலைட். அருகருகே அமர்ந்து சிரித்துக் கொண்டே, பாருங்கள், காதல் தழைக்கும் !

சில சில்மிஷ விளையாட்டுகள், வரவேற்பறை சமையலறை என பழைய காதலுடன் நெருக்கமாய் இருக்கும் தருணங்கள் என மூச்சுக் காற்றை வெப்பமாக்குங்கள். காதல் தாவரம் மூச்சுக் காற்றில் சடசடவென வளரும், மோகத் தீயில் அது மொட்டுகளை சட்டென மலர்த்தும். எதிலும் போலித் தனம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்.

உங்களுடைய செல்போன், டேப்லெட்ஸ், லேப்டாப்ஸ், புக்ஸ் எல்லாவற்றையும் ஒரு நாள் மறந்து விட்டு சும்மா வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசுங்கள். பழைய கதைகளை, அலுவலக சுவாரஸ்யங்களை, பேசுவதும் கேட்பதும் இனிமையான தருணங்கள். அவை காதலை வளரவைக்கும் நிமிடங்கள்.

கட்டிப்புடி வைத்தியம் ரொம்ப நல்லது ! போயிட்டு வரேன்னு சொல்றதானாலும் சரி, காலைல குட்மார்ணிங் சொல்றதுன்னாலும் சரி, ஒரு 2 நிமிட கட்டிப்புடி வைத்தியம் மனசை லேசாக்கும், உறவை ஸ்ட்ராங்காக்கும் என்பது உண்மை !

உங்கள் வாழ்க்கைத் துணைவருடைய பழைய புகைப்படங்கள் கொஞ்சம் எடுத்து ஒரு ஆல்பமாகவோ, ஒரு கொலாட்ஜ் ஆகவோ செய்து ஒரு நாள் அவரிடம் கொடுங்கள். “பழைய நாட்களெல்லாம் ஞாபகம் வந்துச்சு அதான் இதைப் பண்ணினேன்” என்று. சுவாரஸ்யமாகவும், இனிமையாகவும் இருக்கும் !

கணவனுக்கோ, மனைவிக்கோ இருக்கக் கூடிய நட்பு வட்டாரத்தை மதியுங்கள். ஒரு நாள் திடீரென, நண்பர்களைப் போய் பாருங்க, அவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க என அனுமதி கொடுங்கள். அடுத்தவர் விருப்பங்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஒரு இனிய ஆச்சரியம் !

தொழில் நுட்பமும், சமூக வலைத்தளங்களும் சுழற்றியடிக்கும் சூழலில் அவற்றையெல்லாம் கூட உங்கள் காதல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. ஒரு குட்டி எஸ்.எம்.எஸ், ஒரு ஃபேஸ்புக் செய்தி, ஒரு மின்னஞ்சல் காதல் என உங்கள் சிந்தனைக் குதிரையை வரிக்குதிரையாக வலம் வரச் செய்யுங்கள். காதல் வானில் வானவில்களுக்குப் பஞ்சமே இருக்காது !

மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்துகிறேன், சின்னச் சின்ன ஆச்சரியங்கள், பெரிய பெரிய ஆனந்தங்களின் அடிப்படை. அனைத்தையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யவேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்

 

எல்லோருக்குள்ளும் உறையும் குளம்

asdasdasdasd

குளம் குறித்த கனவுகளும், நினைவுகளும் இல்லாதவர்கள் குளத்தோடான பரிச்சயம் இல்லாதவர்கள். அதிலும் குறிப்பாக பால்யகாலத்தில் கிராமத்துக் குளங்களில் பல்டியடித்தவர்களுக்குள் எப்போதும் உறைந்து கிடக்கும் அந்த கனாக் காணும் குளங்கள். எங்கே சென்றாலும் அவர்கள் அதை ஒரு நினைவுக் குமிழியாகச் சுமந்து திரிகிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் அழகிய தருணங்களில் அவர்கள் அந்த நினைவுக் குமிழியைத் திறந்து குளத்தின் வாசனையை ஆழமாய் உள்ளிழுக்கின்றனர். இன்னும் சிலர் குளத்தை ஒரு பாயாய்ச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். வேனிற்காலத்தின் வியர்வை அருவிகளுக்கிடையே குளத்தின் ஞாபகத்தை உதறி விரித்து அதில் ஈரத் துளிகளை இழுத்தெடுக்க முயல்கின்றனர்.

குளங்கள் வேறெதையும் அறிவதில்லை. தனக்குள் குதிக்கும் மழலைகளின் கால்களுக்கு அவை ஈரக் கம்பளத்தை விரித்துச் சிரிக்கின்றன. கரையோரங்களில் சிப்பிகளுக்குச் சகதி வீடுகளை சம்பாதித்துக் கொடுக்கின்றன. கலுங்கின் இடையிடையே நீக்கோலிகளுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. ஈரச் சகதிகளின் ஓரங்களில் கெண்டை மீன்களை ஒளித்து வைத்து வேடிக்கை காட்டுகின்றன.. குளம் ஒரு அன்னை. தனக்குள் நுழையும் அத்தனை பேருக்கும் பாரபட்சமின்றி ஒரே ஈரத்தைத் தான் பகிர்ந்தளிக்கிறாள். தனது அகலமான கைகளை விரித்து, கோழி தன் குஞ்சுகளை சிறகுகளுக்குள் அடைகாப்பது போல அரவணைத்துக் கொள்கிறாள்.

எனது பால்யத்தின் கிளைகளில் நினைவுகளின் குருவிகள் சிறகுலர்த்துகின்றன. அவை சிலிர்க்கும் இறகுகளிலிருந்து பல குளங்கள் தெறித்து விழுகின்றன. சர்ப்பக் குளம் எனது பால்யத்தின் பாதங்களுக்கு ள் இன்னும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் குளத்தின் கலுங்கில் அமர்ந்திருக்கின்றன ஏராளம் கதைகள். யாரேனும் கேட்பார்களோ எனும் எதிர்பார்ப்பைத் தேக்கி வைத்து அவை காத்திருக்கின்றன. நிராகரிக்கப்படும் தருணங்களில் அந்தக் கதைகள் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயல்கின்றன. ஆனால் குளம் மீண்டும் அவற்றைக் கரையேற்றித் ஈரத்தால் தலைதுவட்டி அமர வைக்கிறது.

கோனார் எருமைகளை ஓட்டியபடி நுழையும் சாய்வான படிக்கட்டொன்று அந்தக் குளத்தில் உண்டு. எருமைகள் அவருக்குத் தோழன். ஆறறிவுள்ள மனிதர்களிடமிருந்து வருகின்ற நிறமாற்றங்கள் ஐந்தறிவு விலங்குகளுக்கு இருப்பதில்லை. அவருக்கு எருமையின் நிறம் கறுப்பு அவ்வளவே. வைக்கோலைச் சுருட்டி அவற்றின் முதுகில் படிந்திருக்கும் அழுக்கை அவர் அழுத்தமாய்த் தேய்க்கும் போது ஒரு மசாஜ் சென்டரில் மயங்கிக் கிடக்கும் நிலையில் எருமைகள் கிடக்கும். எருமை மாடென்று யாரேனும் அவரைத் திட்டினால் ஒருவேளை அது அவரைப் பொறுத்தவரை இனிமையான பாராட்டாய் காதுகளில் நுழையக் கூடும். குளிப்பாட்டி முடித்து ஒவ்வொரு எருமையாய் கரையில் ஏற்றி, மூக்கணாங்கயிறைச் சுருட்டி அவற்றின் முதுகில் வைத்தால் அவை அசையாமல் நிற்கும் !

சங்கேத வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியது விலங்குகளாய்த் தான் இருக்க முடியும். கயிறைச் சுருட்டி முதுகில் வைத்தால் அசையாமல் நிற்கும் எருமைகள், அதே கயிறை முதுகிலிருந்து எடுத்து விட்டால் நடக்கத் துவங்கிவிடுகின்றன. விலங்குகள் மனிதர்களின் தோழர்களல்ல, சொந்தங்கள். கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து கால்நடைகளை வளர்ப்பதில்லை கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள். அவர்களுக்கு பால்கொடுக்காத மாடும், சம்பாதிக்காத மகனும் ஒரே மாதிரி தான். வருமானம் வரவில்லையென வழியனுப்பி வைப்பதில்லை. முடிந்தபட்டும் பாசத்தைப் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

குளங்கள் ரகசியங்களைத் தனக்குள்ளே புதைத்து வைக்கின்றன. குளங்களுக்குள் இறங்கும் மனிதர்களின் குலங்களை அவை பார்ப்பதில்லை. குணங்களை அவை வெளியே சொல்வதில்லை. மத்தியான வேளைகளில், ஆளரவமற்ற குளக்கரையில் ரகசியத் தவறுகள் செய்யும் அவசரக் காதலர்களை அது நாட்டாமை முன் கொண்டு நிறுத்துவதில்லை. சலனமற்ற முதுகுடன் அவை அமைதியாய் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றின் நீர் வளையங்கள் மட்டும் ஒரு வெட்கத்தின் வீணை இசையாய் மௌனத்துடன் அலைந்து அடங்குகிறது.

வண்ணான் தனது அழுக்கு மூட்டையை அவிழ்த்து வைக்கும் பகுதி ஒன்று சர்ப்பக் குளத்தில் உண்டு. அவனுடைய வறுமையின் ஓசை அந்தக் கற்களில் ஆக்ரோஷமாய் வந்து மோதும் துணிகளின் வாயிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். அவன் ஊரின் அழுக்கைக் கழுவி முடித்து கனமான மூட்டையுடன் கரையேறுவான். அவனுடைய பிய்ந்து போன கைகளின் துணுக்குகளை மவுனமாய் ஏந்தியபடி குளம் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்.

பால்யத்தின் பரவசம் குளங்களே. அவற்றின் முதுகில் ஏறி நீச்சல் அடித்து மறுகரையில் ஒதுங்குகையில் சாம்ராஜ்யத்தைப் பிடித்த சக்கரவர்த்தியாய் மனதுக்குள் ஒரு வீரவாளும், கிரீடமும் உருண்டு வரும். அதன் கரையோரங்களில் டவல்களால் குட்டிக் குட்டி மீன்களைப் பிடிக்கும் போது அவை  குளத்திலிருந்து தப்பி மனதில் நீந்தத் துவங்கும். சிப்பிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது தனிக் கலை. ஒரு இடத்தில் ஒரு சிப்பி அகப்பட்டால் அதைச் சுற்றி அடுக்கடுக்காய், மண்ணுக்குள் சிப்பிகளின் பேரணியே ஒளிந்திருக்கும் வாய்ப்பு உண்டு என்பது பாடம். அள்ளி அள்ளி அதைப் பைகளில் சேமிக்கும் போது சாதனையாளனாய் மனம் சந்தோசப்படும்.

எல்லா நினைவுகளையும் குளம் தனது தண்ணீரின் மேலும், படிக்கட்டுகளிலும், கலுங்கிலும், கரையோர மரங்களிலும் எழுதி வைக்கிறது. தண்ணீர் உலரும்போது கதைகள் மண்ணுக்குள் இளைப்பாறுகின்றன. வெயிலில் உடைந்து கிடக்கும் குளத்தின் இடுக்குகளில் அவை அடுத்த நீரின் வருகைக்காய்க் காத்திருக்கின்றன. மீண்டும் தண்ணீர் வரும்போது விதையிலிருந்து சட்டென வெளிக்கிளம்பும் ஒரு அமானுஷ்ய மரம் போல மீண்டும் தண்ணீரின் மேல் அசைவாடத் துவங்குகின்றன.

குளங்கள் பால்யத்தின் போதிமரங்கள். அவை நிம்மதியின் ஞானத்தை மனதுக்குள் ஊற்றி நிறைக்கின்றன. காலம் மனிதனை குளங்களை விட்டு நகரங்களை நோக்கித் தகரப் பேருந்துகளில் அடக்கி அனுப்புகிறது. அவன் தனது நினைவுகளில் மட்டுமே அடைகாக்கும் குளத்துடன் பயணிக்கிறான். அந்தக் குளம் அடிக்கடி அவனது கனவில் குஞ்சுகளைப் பொரிக்கிறது.

வருடங்களின் விரட்டல்களுக்குக் பின்னும் குளம் நமது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பால்யகாலத்தில் கடல்போலத் தோன்றும் குளம் இப்போது சின்னதாகச் சிரிக்கும். அதன் கரையோரங்களில் நடக்கையில் காற்றில் அலையும் கால்நூற்றாண்டுக்கு முந்தைய சிரிப்புச் சத்தங்களைப் பொறுக்கி எடுக்க முடியும். அவை இப்போதும் குளத்தைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும். சொல்லிய சொல்லும், சிரித்த சிரிப்பும், அழுத அழுகையும் காற்றின் அலைவரிசையை விட்டு எங்கும் விலகிவிடுவதில்லை. அவை ஒலி இழைகளாகக் காற்றில் அலைந்து கொண்டே இருக்கின்றன. அதைச் சரியான அலைவரிசையில் இழுத்தெடுக்க நமது மனம் ஒரு வானொலியாய் அவ்வப்போது மாறும். உணர்வுகளின் ஒத்த அலைவரிசையில் அவை தெள்ளத் தெளிவாகக் கேட்கின்றன..

நகரங்களின் அவசர வாழ்க்கையில் குளங்கள் இருப்பதில்லை. இருக்கின்ற குளங்களும் காங்கிரீட் கால்களுக்குள்ளே நசுங்கி, மகாபலிபோல மண்ணுக்குள் மண்ணாகிப் போய்விடுகின்றன. குளங்களுக்கு மேல் விரிகின்ற பூமியின் அடுக்குமாடி பிரமிப்புகள் தங்கள் கொண்டையிலோ, பின் முற்றத்திலோ நீச்சல் குளங்களைப் பொரிக்கின்றன. மணல் இல்லாத, மீன்களும், சிப்பிகளும் இல்லாத, குளிக்கும் எருமைகளும், வெளுக்கும் வண்ணானும் தொலைந்து போன நீச்சல் குளங்கள் பிளாஸ்டிக் பூக்களைப் போல பல்லிளிக்கின்றன. அறைகளில் குளித்தபின்பே வாசனைகளற்ற அந்தக் குளங்களில், குளிக்க வருகின்றனர் அந்தஸ்தின் பிள்ளைகள். குளோரின் போர்த்திய தண்ணீரின் எரிச்சலில் இருந்து தப்பிக்க கண்கள் கண்ணாடி முகமூடிகளுடன் இமைக்கின்றன. குளத்தை விட்டுக் கரையேறியபின்னும் ஷவர்களில் குளித்து விட்டு தான் வெளியேறுகின்றனர் மக்கள்.

நடுத்தர நகரவாசிகளுக்கு குளங்கள் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அடைபட்டுவிட்டன. கைப்பிடி உடைந்து போன பிளாஸ்டிக் பாத்திரங்களில் அவர்கள் குளங்களை அள்ளி அள்ளிக் குளித்துக் கொள்கிறார்கள். அவை உதட்டுக் கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைகையில் உப்புக் கரிக்கின்றன. இன்னும் சிலருக்கு துளித்துளியாய் ஷவர்களின் மெல்லிய துளைகள் வழியாக விழுந்து கொண்டே இருக்கிறது கிராமத்துப் பால்யத்தில் அவரவர் நீந்தி விளையாடிய குளம்.

ஏதேனும் ஒரு கதையில், “ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது” என வாசிக்கும்போது எல்லோரின் மனதிலும் சட்டென மின்னி வரும் குளங்களே அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் குளம். குளங்கள் வற்றுவதுண்டு, ஆனால் அவை அழிவதில்லை. ஒவ்வோர் மனிதனின் நினைவுப் பிரதேசத்தின் மன விளிம்புகளிலும் இன்னும் நீர்வளையங்களை உருவாக்கிக் கொண்டே அமைதியாய் இருக்கிறது.

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

 அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6  சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் !  8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது !  எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட். 

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் ! 

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

திரைப்படத்திலிருந்து காமிக்ஸ் !

காமிக்ஸ் புத்தகம் என்றாலே மலரும் நினைவுகள் உங்கள் மனதில் நிழலாடக் கூடும். ஜேம்ஸ்பாண்ட், இரும்புக்கை மாயாவி என்றெல்லாம் வசீகரித்த காமிக்ஸ் வரலாறு கொஞ்சம் தொய்ந்து போய் விட்டது. தொலைக்காட்சியின் தாக்கம் காமிக்ஸ் புத்தகங்களின் வீச்சைப் பாதித்து விட்டன என்பது பரவலான குற்றச் சாட்டு. ஆனாலும் “படக்கதைக்கு” ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அத்தகைய ரசிகர்களை இந்தச் செய்தி குஷிப்படுத்தும் என நம்புகிறேன். சீனாவிலுள்ள ஹெஃபி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மென்ங் வேங் தங்கள் குழுவினரின் புது மென்பொருள் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்த மென்பொருள் ஒரு திரைப்படத்தைக் கொடுத்தால் அப்படியே அதன் காமிக்ஸ் வெர்ஷனைத் தந்து விடுமாம். சினிமாவில் கதாபாத்திரங்கள் பேசும் வார்த்தைகளை அப்படியே ஒரு சின்ன கட்டத்துக்குள் அடக்கி, அச்சு அசலான காமிக்ஸ் பக்கங்களை இது உருவாக்குகிறது.

இந்த மென்பொருள் குறித்த விரிவான செய்தியை ‘ஐ.இ.இ.இ டிரான்ஷாக்ஸன் ஆன் மல்டிமீடியா’ எனும் இதழில் அவர் எழுதியிருக்கிறார். மூவி2காமிக்ஸ் (Movie2Comics) என இந்த மென்பொருளுக்கு அவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பே பல மென்பொருட்கள் படங்களை காமிக்ஸ் வடிவமாக்கும் முயற்சியில் இறங்கி கொஞ்சம் கொஞ்சம் வெற்றியும் பெற்றன. ஆனால் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் ஒரு படத்தை காமிக்ஸ் ஆக மாற்றுவது இதுவே முதன் முறை! 85 சதவீதம் சரியாக இந்த மென்பொருள் காமிக்ஸைத் தருகிறது. கொஞ்சம் டயலாக் பெட்டியை அங்கே இங்கே இழுத்து வைக்கும் டச் அப் வேலைகளைச் செய்தால் காமிக்ஸ் புக் ரெடி.

காமிக்ஸ் தயாரிப்பவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம். எந்த ஒரு ஹிட் படத்தையும் சில நிமிடங்களிலேயே படக் கதையாக உருமாற்றி விடலாம்.

சாதாரண மக்களுக்கும் இது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம் தான். தங்களுடைய கல்யாண வீடியோவையோ, சுற்றுலா வீடியோவையோ, அல்லது குழந்தைகளின் வீடியோக்களையோ காமிக்ஸ் புத்தகங்களாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே !.

சோதனை முயற்சியாக அவர்கள் செய்து காட்டிய டெமோவில் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களான “டைட்டானிக்” ஷெர்லக் ஹோம்ஸ், மற்றும் த மெசேஜ் எனும் மூன்று படங்களிலுள்ள சில காட்சிகளை எடுத்திருந்தார்கள். 2 முதல் 7 நிமிடங்கள் வரையிலான இந்தக் காட்சிகளை ‘படக் கதையாக’ மாற்றிக் காட்டினார்கள் !

இந்த காமிக்ஸ் வடிவத்தை பார்த்தவர்களெல்லாம் வெகுவாகப் பாராட்டினார்களாம். நல்ல விஷயம் தான், நாமும் பாராட்டுவோம்.

*

 Thanks :  தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம் (மவுஸ் பையன்)

புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா ?

“புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கவே புடிக்காது” என பல பெண்கள் அங்காலய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒன்று தான் புத்திசாலி என அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது உண்மையிலேயே ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்கள் கொஞ்சம் அலர்ஜியாய் இருக்கலாம்.

பெரும்பாலான புத்திசாலி ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். ஒருவேளை ஒரு பையன் புத்திசாலிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறானென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.

“சும்மா கடல் பக்கத்துல உக்காந்து கடலை போடக் கூப்பிட்டா அங்கே வந்து கூட மால்கம் கிளேட்வெல் எழுதின பிளிங்க் புக் படிச்சியாடா ? வாவ் சூப்பர். த பவர் ஆஃப் திங்கிங், வித்தவுட் திங்கிங் தான் அதோட கான்சப்ட்” என கடுப்படிக்கிறா என ஒரு காதலர் சலித்துக் கொண்டார். ரொம்ப அறிவான பொண்ணுன்னா இந்த மாதிரி உலக விஷயங்களையெல்லாம் பேசுவாங்க. நம்ம ஹீரோவுக்கு அந்த ஏரியா வீக்குன்னா “இந்த புத்தி சாலிப் பொண்ணுகளே இப்படித் தான்” என்று புலம்ப வாய்ப்பு உண்டு.

இன்னும் சிலருக்கு பொண்ணுன்னா நாம வரைஞ்ச கோட்டைத் தாண்டக் கூடாதுங்கற ஒரு ஆணாதிக்க சிந்தனை இருக்கும். புத்தியில்லாத பொண்ணுன்னா நாம சொல்றதைக் கேப்பா. நாம போய் “கிளையண்ட் கான்ஃபரன்ஸ் ல புராஜக்ட் பிளான் டெமோன்ஸ்ட்ரேட் பண்ணினேன்” ன்னு பீட்டர் உட்டா நம்பபிடுவா ன்னு நினைக்கிறாங்க. எப்பவுமே நம்மை விட ஒரு ஸ்டெப் கீழே பொண்ணு இருக்கணுன்னு நினைக்கறவங்களோட மனநிலை இது.

இன்னும் சிலர் என்னன்னா புத்திசாலிப் பொண்ணுன்னாலே “சுயமான பொண்ணு” ன்னு நினைக்கிறாங்க. அதாவது தனியா வாழறதுக்கு அவளுக்கு பயம் கிடையாதுங்கற நினைப்பு இருக்கும். அதாவது தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலை அவளுக்கு இல்லை எனும் சிந்தனை. ஒருவேளை நாம பண்ற டகால்டி வேலையெல்லாம் தெரிஞ்சுபோச்சுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போனாலும் போயிடுவாளோங்கற பயம் இருக்கும். அந்த பயத்துல “எதுக்கு புத்திசாலிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு” என பின் வாங்க வாய்ப்பு உண்டு.

பசங்கதான் இப்படின்னா, பசங்களோட அம்மா, அப்பாக்கள் இன்னும் ஒரு படி மேலே. கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கும்போ  “பொண்ணு பையனை விட அதிகம் படிச்சிருக்கா. பையனுக்கு அடங்கி இருக்க மாட்டா” என பில்டப் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். “தான் கம்மியா படிச்சதனால தான் கணவனுக்கு அடங்கி இருக்கிறோம்” என நினைக்கிறார்களோ என்னவோ ? அது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

இந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இணையா படிச்சிருக்கிற பெண்களை விரும்புகிறார்கள். அதாவது கம்ப்யூட்டர் படிச்ச பையன் அதே லைன்ல படிச்ச பொண்ணை விரும்புகிறான். இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி, இந்த வேலையில உள்ள கஷ்டம் இதே வேலையில இருக்கிற இன்னொருத்தருக்குத் தான் தெரியும்ங்கற மனநிலை. இன்னொன்னு தெரிஞ்ச ஏரியாங்கறதனால வேலை வாங்கிக் கொடுக்கலாம்ங்கற எண்ணம்.

பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு வெச்சுக்கோங்க, புத்திசாலிப் பொண்ணை முடிஞ்ச மட்டும் அவாய்ட் பண்ணுவாங்க. கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவங்க வாழ்க்கைல சிக்கல் வர வாய்ப்பு அதிகம். “ஏங்க, இப்படி பண்ணியிருக்கலாமே” ன்னு ஒரு சின்ன கருத்து சொன்னா கூட “ரொம்ப படிச்ச திமிரு. அதனால நான் செய்றதெல்லாம் தப்பா தெரியுது”. என எகிற ஆரம்பித்து விடுவார்கள். உண்மையிலேயே மனைவி சொல்வது சரியா தப்பா என்றெல்லாம் ஆராய அவர்கள் முயல்வதில்லை.

“ஆண்கள் தங்களை விடப் புத்திசாலித் தனமான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயங்குவார்கள்” என்கின்றனர் சில உளவியலார்கள். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்த ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பல வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னால் அறிவார்ந்த பெண்கள் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. பல ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். உரையாடல்களில் நல்ல அர்த்தத்துடன் பேச அவர்களால் முடியும் என்பது அவர்கள் சொல்லும் ஒரு காரணம்.

முக்கியமான ஒரு விஷயம், தினமும் நியூஸ் பேப்பர் படிச்சுட்டு புள்ளி விவரங்கள் பேசறதெல்லாம் புத்திசாலித் தனத்துல வராது. ஒரு பிரச்சினை வருதுன்னா அதுல இருந்து எப்படி எத்தரப்புக்கும் இழப்பின்றி மீளலாம்ன்னு யோசிப்பதில் தெரியலாம் புத்திசாலித்தனம். குடும்பத்தை ஆனந்தமாகவும், வளமாகவும் கொண்டு போக திட்டமிடுவதில் மிளிரலாம் புத்திசாலித்தனம். குழந்தை வளர்ப்பைக் கையாள்வதில் வெளிப்படலாம் புத்திசாலித்தனம். பெண் புத்திசாலியாய் இருப்பது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஆனால் என்ன, “தான் புத்திசாலி” எனும் தற்பெருமையை உச்சந்தலையில் ஒட்டி வைக்காமல் இருக்க வேண்டும்.

பெண் வீட்டை ஆளணும், ஆண் நாட்டை ஆளணுங்கற கதையெல்லாம் கற்காலமாயிடுச்சு. இந்த கால மாற்றத்தில் தம்பதியர் தங்களோட ஈகோவை மூட்டை கட்டி வெச்சுட்டு, அன்பா பழக ஆரம்பிச்சா இப்படிப்பட்ட  பிரச்சினைகளே வராது என்பது தான் நிஜம். நீயா நானா போட்டி போட குடும்பம் ஒண்ணும் பிளே கிரவுண்ட் இல்லையே ! என்ன சொல்றீங்க ?

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

அழகா இல்லேன்னா வெளியே போ…

“அழகா இல்லாதவங்களுக்கு இங்கே இடமில்லை” அப்படி போர்ட் மாட்டி ஒரு இணையதளம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா ? பியூட்டிபுல் பீபுள்.காம் எனும் பெயர் கொண்ட அந்த இணையதளம் தான் இன்றைய தேதியில் உலகிலேயே மிகப்பெரிய டேட்டிங் நெட்வர்க். அழகில்லாதவங்களுக்கு அங்கே அனுமதி இல்லையாம். அழகு இருக்கா இல்லையான்னு எப்படி முடிவெடுக்கறாங்க ? 

முதல்ல அந்த தளத்துல போய் உங்க போட்டோவை அப்லோட் பண்ணி, உங்களைப் பற்றிய சிறு குறிப்பும் வரையவேண்டும். உடனே அந்த தளத்தில இருக்கிற அழகர்களும், அழகிகளும் சேர்ந்து உங்களுக்கு மார்க் போடுவாங்க. எப்படி ? ஆணுக்கு பெண்களெல்லாம் ஓட்டு போடுவாங்க. பெண்களுக்கு ஆண்கள் ஜொள் ஓட்டு போடுவாங்க !

“ஆள் சூப்பர்”, “பரவாயில்லை”, “ஊஹூம் அவ்வளவு நல்லாயில்ல”, “ஐயோ வேண்டவே வேண்டாம்” இப்படி நாலுல ஒண்ணை டிக் பண்ணுவாங்க. சூப்பர்ன்னு நிறைய பேரு சொன்னா உங்களுக்கு அங்கே இடம் உண்டு. இல்லேன்னா பொட்டியைக் கட்டிட்டு கிளம்ப வேண்டியது தான். உலக அழகியே போனாலும், அங்கே இருக்கிறவங்க “இவ அழகிதான்” ன்னு சொன்னாதான் இடம் கிடைக்கும்.

ஏதோ ஒண்ணோ ரெண்டோ பேரு வேலையில்லாம இதுல இருக்காங்கன்னு நினைக்காதீங்க. உறுப்பினர்களோட எண்ணிக்கை ஐம்பது இலட்சத்தை தாண்டிடுச்சாம். என்னதான் நடக்குது இங்கே ? வேறென்ன ? வெட்டியா உக்காந்து மார்க் போடறது, அழகா இருக்கிற துணையைத் தேடிப் புடிச்சு கடலை போடறது, ஜொள் வடிக்கிறது, தள்ளி கிட்டு போறது, இத்யாதி இத்யாதி என இந்த சைட் சமீப காலமாக ரொம்ப ஹாட்.

வர்ற விண்ணப்பத்துல 80 சதவீதமும் நிராகரிக்கப்படுமாம். சராசரியா வெறும் 20 சதவீதம் மக்கள் மட்டும் தான் அழகு உடையவர்களா ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றவங்க சோர்ந்து போய் திண்ணைக்கே திரும்ப வேண்டியது தான். “என்ன பண்ண அழகு இருந்தா தான் எல்லோருக்குமே புடிக்குது. என்னதான் வெளியே வேற விதமா பேசினாலும், அழகைத் தேடித் தான் நாம ஓடறோம். நமக்கு கண்கள் தான் இருக்கு, ஆண்டெனாவா இருக்கு ?”  என தத்துவம் பேசுகிறார் இதன் கர்த்தா கிரேக் ஹாட்ஜ்

இவர் ஹிண்ட்ஸோடு சேர்ந்து 2001ம் ஆண்டு டென்மார்க்ல இந்த தளத்தை ஆரம்பிக்கும்போ இது இப்படி பட்டையைக் கிளப்பும் என நினைத்திருக்கவில்லை. 2009 கடைசியில் தான் இந்த தளம் சூடு போட்ட மீட்டர் கணக்கா எகிறியது. இன்னிக்கு இந்த தளம் 12 மொழிகள்ள ஏகப்பட்ட நாடுகள்ல  இயங்குதுன்னா பாத்துக்கோங்க !

இதுல வேற ஒவ்வொரு நாட்டுக்காரங்களும் அந்த அழகுக் குழுல சேர போட்டி போட ஆரம்பிச்சுட்டாங்க. பிரிட்டிஷ் ஆண்கள் எட்டுக்கு ஒருத்தர் எனும் விகிதத்துல தான் இதுல சேர முடியுதாம். பிரிட்டிஷ் பெண்களோட நிலமை 30 சதவீதமாம். இந்த அழகு சைட்ல ஆதிக்கம் செலுத்தறது ஸ்வீடன் ஆண்கள் தானாம் அவங்க 65% அழகர்களா இருக்காங்களாம். பெண்கள்ள நார்வேஜியன் தான் முதலிடம் 76 சதவீதம் பெண்கள் அங்கே அழகோ அழகு தானாம். அப்போ லாஸ்ட்ல இருக்கிறது ? ஜெர்மன் பொண்ணுங்களாம் ! இந்தியா இன்னும் ஆட்டத்துக்குள்ள வரல போல !

ஒருதடவை உறுப்பினராகிட்டா லைஃப் லாங் நீங்க அழகியா தொடரவும் முடியாது. உங்க லேட்டஸ்ட் போட்டோல நீங்க கொஞ்சம் அசிங்கமா தெரிஞ்சாலும் அவுட் தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி  சுமார் 5000 பேரை இங்கேருந்து துரத்தியிருக்காங்க. விஷயம் என்னன்னு பார்த்தா, அவங்க கொஞ்சம் குண்டாயிட்டாங்களாம் ! அடப் பாவமே !

இதுல சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னன்னா இந்த தளத்தை ஆரம்பிச்ச கிரேக் ஹாட்ஜ்க்கு சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு. பொண்ணை “பியூட்டிபுல் பீபுள். காம் ல தானே புடிச்சீங்க” ன்னு கேட்டா, “சேச்சே .. இல்லை “ என்கிறார். இதெந்த ஊர் நியாமுங்கோ ?

 Thanks : Pennae Nee

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன்னா இப்படித்தான் …

எல்லாரையும் போல இருக்கணும்னு ஏன் நினைக்கிறே ? நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாமே” இந்த வார்த்தையை குத்து மதிப்பா எத்தனை தடவை கேட்டிருப்போம். 

ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா எப்படி இருக்கும், சுவாரஸ்யமான இந்த படங்கள் சொல்லக் கூடும்.

நள்ளிரவு மின்னல்

One

ஐந்தில் வளையாதது…

 

Two

மி… த.. பர்ஸ்டு….

 

Six

தூக்கத்துல கொட்டாவி விடற வியாதி உண்டா..

Fine

வெள்ளைப் புறா ஒன்று.. 

Three

அதான்… அதே தான் !

Four

 

தமிழிஷில் வாக்களிக்க…

பாலூட்டுதல் நல்லது : அன்னைக்கா ? குழந்தைக்கா ?

 42-20795158

அழகுக்காகவும், இளமைக்காகவும் குழந்தைகளுக்குப் பாலூட்ட மறுக்கும் இன்றைய இளம் அன்னையர்களுக்கு எச்சரிக்கை ஊட்டுகிறது பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று.

பாலூட்டுவதால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது எனும் தகவல்களுடன், பாலூட்டுவதால் தாய்க்கு பிற்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ஒரு வருட காலம் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த பயன்கள் அதிக அளவில் இருக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

சுமார் ஒன்றரை இலட்சம் தாய்மார்களை வைத்து மிகவும் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்கள் இளம் அன்னையரை பாலூட்ட உற்சாகப் படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

யூகே வில் சுமார் 35 விழுக்காடு அன்னையர் குழந்தைகளுக்கு ஒரு முறைகூட பாலூட்டியதில்லை என்கிறது திகைக்க வைக்கும் புள்ளி விவரம் ஒன்று.

பாலூட்டும் அன்னையருக்கு உயர் குருதி அழுத்தம் வரும் வாய்ப்பும், அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பும் பெருமளவு குறைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

 

அன்னையர் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தேவைகளையும், அவசியத்தையும் உலக அளவில் வலியுறுத்துவது அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்வதற்கும், அன்னையர் வாழ்வின் அடுத்த கட்டம் நலமானதாய் அமைவதற்கும் வழிவகை செய்கிறது. அதை இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்பித்து வைக்கின்றன என்பதில் மிகையில்லை.

இந்த இடம் எங்கே இருக்கு சொல்லுங்க பாக்கலாம் !!!

 

அழகான தெளிந்த நீர்…
தலையாட்டும் மரங்கள்….
இலக்கிய நூலில் வரது மாதிரி ரம்மியமா இருக்கே இந்த இடம் …
ஊட்டி பக்கமா ? இல்லை கொடைக்கானல் பக்கமா ?

ஊஹூம்… ஊஹூம்

 

பெரிய ஆறு மாதிரியும் இருக்கு,
ஒரு நதி மாதிரியும் இருக்கே….

ஒருவேளை காவிரி….  ???

ம்ஹூம்..

 

ஓ…
இது பெருசா தெரியுதே…
ஏதேனும் அணையா ?
பாபனாசம் ???

ம்ம்ம்ம்ஹூஊம்…

 

மேகமெல்லாம் சூப்பரா தான் இருக்கு
ஆனா,
அதை வெச்சு இடத்தையெல்லாம் கண்டுபிடிக்க முடியுமா என்ன ?

தெரியலையே !!…
.

.

.

 

 

அடப்பாவி…
இதை முதல்லயே காட்டித் தொலைச்சிருக்கலாமே
இது சென்னை, வேளச்சேரி ஏரியும், அதில் கலக்கும் கூவக் குப்பையும் தானே.

ஹி…ஹி… ஆமா… ஆமா !!!