வயிறை வணங்காதீர் : Christian Article

“எல்லாம் நாலு சாண் வயிறுக்காகத் தான்” என்பதையோ. “வயித்துப் பொழப்பைப் பாக்கணும்ல” எனும் வார்த்தையையோ கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது. உணவு நாம் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று.

அதே போல, நமக்கு வருகின்ற நோய்களில் பெரும்பாலானவை நமது உணவுப் பழக்கத்திலிருந்தே வருகிறது என்கிறது மருத்துவம். சத்தில்லாத உணவைச் சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் திணிப்பது, அளவுக்கு அதிகமான‌ உணவுகளைத் திணிப்பது என நமது உணவுப் பழக்கம் திசை மாறிவிட்டது. அது நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது.

தேவை எனும் ஓட்டம், ஆசை எனும் திசையில் பயணிக்கும் போது தான் பிரச்சினைகள் துவங்குகின்றன. “சர்ச்ல ஆண்டு விழாவுக்கு மட்டன் பிரியாணி போடணுமா, மீன் குழம்புச் சாப்பாடு போடணுமா ?” எனும் விவாதங்கள் சண்டைகளாகிப் போன அவலங்களும் உண்டு. முதன்மையான தேடல் எது என்பதில் தெளிவின்மையே இத்தகைய சண்டைகளின் காரணம்.

உணவுப் பிரச்சினை சின்ன விஷயம் அல்ல. அது பல சாம்ராஜ்யங்களைச் சரிய வைத்திருக்கிறது. பல ஆட்சிகளை மலர வைத்திருக்கிறது. ஒருபக்கம் ஒபிசிடி எனப்படும் அதீத எடை நோய்க்கு குழந்தைகள் பலியாகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கு சுமார் முப்பத்தோரு இலட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.

இத்தனையும் ஏன் ? உலகில் பாவம் நுழையக் காரணமானதே ஏவாளுக்கு ஒரு பழத்தைச் சாப்பிடவேண்டும் என தோன்றிய ஆசை தானே ! சுவைக்கும் ஆசையைத் தடுக்க முடியாத ஏவாள் பாவத்தின் முதல் சுவடை எடுத்து வைத்தாள் !

இயேசு உணவை வெறுக்கவில்லை. உண்மையில் உணவில் இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் முழுமையாக விலக்கியது அவர் தான். “மனிதனின் உடலுக்குள் செல்வது அவனைத் தீட்டுப்படுத்தாது” எனும் வ‌ச‌ன‌த்தின் வ‌ழியாக‌ விரும்புவ‌தைச் சாப்பிட‌லாம் எனும் அங்கீகார‌த்தை அவ‌ர் ந‌ம‌க்குக் கொடுத்திருக்கிறார்.

நன்றாக உண்டு குடித்த அவரை மக்கள் போஜனப் பிரியன் என்றார்கள். “மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” ( லூக்கா 7 :34 ) என்றார் இயேசு.

எதை இயேசுவுக்காக உங்களால் வெறுக்க முடியுமோ, அதை நேசியுங்கள் என்பது கடவுளின் போதனைகளின் உள்ளார்ந்த அர்த்தம். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தார். எல்லாவற்றையும் விட அதிகமாய் மகனை நேசித்தார். ஒரு கட்டத்தில் ஈசாக் ஆபிரகாமின் கடவுள் போல மாறிப் போனான். கடவுள் ஆபிரகாமை அழைத்து, ‘மகனைப் பலியிடு’ என்றார். அந்தக் கணத்தில் ஆபிரகாம் விழித்தெழுந்தார். கடவுளுக்காக தன் மகனை இழக்கத் தீர்மானித்தார். அது தான் அவரை விசுவாசத்தின் தந்தையாய் மாற்றியது.

இயேசு உண்டார் குடித்தார். ஆனால் உணவை முழுமையாய் வெறுத்து நாற்பது நாட்கள் விரதமும் இருந்தார். அவருக்கு உணவு என்பது தேவையைச் சந்திக்கும் விஷயமாக இருந்ததே தவிர, ஆசையை பூர்த்தி செய்யும் ரசனையாக இருக்கவில்லை. நாவின் ருசிக்காக ஓடி ஓடி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 23:21 இப்படிச் சொல்கிறது.

“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்”. உணவு இல்லாதவனை ஏழை என்போம். உண‌வு ஒருவ‌னை ஏழையாக்கும் என்ப‌தை பைபிள் தான் ந‌ம‌க்குச் சொல்கிற‌து.

உண‌வின் மீது அதீத‌ நாட்ட‌ம் ஏற்ப‌டும் போது அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கிற‌து. அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கும் போது சிந்த‌னை முழுதும் அதுவே நிர‌ம்புகிற‌து. சிந்த‌னை முழுதும் அது நிர‌ம்பும் போது அவ‌னுக்கு அது க‌ட‌வுளாகிப் போகிற‌து.

“அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே” ( பிலிப்பியர் 3 : 19 ) என ப‌வுல் அவ‌ர்க‌ளைத் தான் சொல்கிறார். உபவாசம் என்பது பலருக்கு வனவாசம் போல கசப்பதற்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததே !

க‌ட‌வுளைத் த‌விர‌ எதை முத‌ன்மைப் ப‌டுத்தினாலும் அது ‘சிலை வ‌ழிபாடாகிற‌து’. சில‌ருக்கு ப‌ண‌ம். சில‌ருக்கு புக‌ழ். சில‌ருக்கு உண‌வு ! என‌ சிலை வ‌ழிபாடு வேறுப‌டுகிற‌து. க‌ற்சிலையை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ள் நாம். ஆனால் வேறு எந்தெந்த‌ சிலைக‌ளை வ‌ழிப‌டுகிறோம் என்ப‌தை உண‌ர வேண்டும்.

“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால் எதற்கும் நான் அடிமையாகி விட மாட்டேன்” என்ப‌தே உண‌வைக் குறித்த‌ ந‌ம‌து பார்வையாய் இருக்க‌ வேண்டும் என‌ ப‌வுல் அறிவுறுத்துகிறார்.

ம‌னித‌ன் அப்ப‌த்தினால் ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌வுளின் வாயினின்று வ‌ரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான். என்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு உண‌வாக‌ வேண்டும். அதுவே மிக‌வும் முக்கிய‌மான‌து ! “ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதே இயேசுவின் வருகையின் நோக்கம் ( உரோ 8:4 ) என்கிறார் பவுல்.

உணவு என்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லாது என பலரும் தவறாக நினைத்து விடுகிறோம். லோத்தின் காலத்தில் இருந்த தீமையானது பெருந்தீனி என்கிறது பைபிள் ! ஈசா தனது தலைமகன் உரிமையை இழந்து வாழ்க்கையில் வீழ்ச்சியடையக் காரணம் உணவு ஆசை என்கிறது பைபிள். ஏலியின் மகன்களும், இஸ்ரயேல் மக்களும் உணவு ஆசையினால் வீழ்ச்சியடைவதை பைபிள் பதிவு செய்திருக்கிறது.

அர‌ச‌ன் உண்கின்ற‌ அட்ட‌காச‌மான‌ உண‌வை வேண்டாம் என‌ ம‌றுத்து எளிமையான‌ உண‌வை தேர்ந்தெடுத்த‌ தானியேலை க‌ட‌வுள் ஆசீர்வ‌தித்தார். க‌டைசிவ‌ரை அவ‌ரோடு இருந்தார்.

“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்கிறார் பவுல் ( 1 கொரிந்தியர் 6 : 19). எனவே இறைவனுக்கு மகிமையானதை  மட்டுமே உண்ணவும் வேண்டும்.

சுய கட்டுப்பாடு இதற்கு மிகவும் முக்கியம். சுய கட்டுப்பாடு என்பது நாம் முயற்சி செய்வதால் வருவதல்ல. தூய ஆவியானவர் நமது உள்ளத்துக்குள் வருவதே. “ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” ( கலாத்தியர் 5 : 17 ). இதைப் புரிந்து கொள்வதில் தான் உணவின் மீதான வேட்கை குறைய முதல் தேவை !

இதைப் புரிந்து கொண்டதால் தான் பவுல், “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” ( 1 கொரி 9 :27) என்கிறார். நற்செய்தி அறிவித்தலின் முக்கியத் தேவைகளில் ஒன்று உடலில் இச்சையான உணவு வேட்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

உணவை விட மேலாய் நாம் எதை ரசிக்க வேண்டும் ?

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (ச‌ங் 34 : 8) என்கிறது சங்கீதம். ந‌ம‌து சுவை ந‌ர‌ம்புக‌ள் நாவில் அல்ல‌, வாழ்க்கையில் இருக்க‌ வேண்டும். அத‌ற்கு நாம் இறைம‌க‌னைச் சுவைக்க‌ வேண்டும்.”

“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.” ( யோவான் 6 :35). என்றார் இயேசு. தினமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரை உண்பவர்களாக இருக்க வேண்டும்.

இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு பாலைப் போல‌ இருக்க‌ வேண்டும். “புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்” ( 1 பேதுரு 2: 2) எனும் வ‌ச‌ன‌த்துக்கு ஏற்ப‌ நாம் இறைவார்த்தையைப் ப‌ருகுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும்.

ஆன்மீக‌ உண‌வையும், பான‌த்தையும் ப‌ருகும் போது உட‌லின் தேவைக‌ள் இர‌ண்டாம் ப‌ட்சாமாகிவிடும் என்ப‌தையே இயேசு வ‌லியுறுத்துகிறார். “எதை உண்போம், எதைக் குடிப்போம் எனும் க‌வ‌லை வேண்டாம்” என‌ இயேசு சொன்ன‌த‌ன் பொருள் இது தான்.

உணவின் மீதான வேட்கையைக் கூட குறைக்க முடியாவிடில், பாலியல் இச்சை, கோபம், பண ஆசை போன்ற வேட்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி ?

எனவே இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் கொள்வோம்.

  1. சுவையான‌ உண‌வுக்காக‌த் தேடி ஓடும் ம‌ன‌நிலையை விட்டு வெளியே வ‌ருவோம். அது நோயையும், சோர்வையும் தான் த‌ரும். வார்த்தையாகிய‌ இறைவ‌னைத் தேடி ஓடும் ம‌ன‌நிலையை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.
  1. “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார் இயேசு (யோவான் 4:34). அதே திருவுள‌த்தை நிறைவேற்றுவ‌தே நம‌து உண‌வு எனும் சிந்த‌னையை ம‌ன‌தில் கொள்வோம்.
  1. உண‌வு என்ப‌து க‌ள‌ஞ்சிய‌த்தை இடித்துப் பெரிதாக்கி சேமிப்ப‌த‌ற்கான‌த‌ல்ல‌. வ‌றிய‌வ‌ர்க‌ளோடும், ஏழைக‌ளோடும் ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌து. ஏழை இலாச‌ரை உதாசீன‌ம் செய்யாம‌ல் ச‌மூக‌த்தின் ப‌சிக்கு உண‌வ‌ளிக்கும் ம‌னித‌ர்க‌ளாக வாழவேண்டும் எனும் ம‌னித‌ நேய‌த்தை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.

ப‌டைத்த‌வ‌ர் கொடுத்த‌தே உண‌வு, அதை ப‌டைத்த‌வ‌ருக்கு மேலாக‌ உய‌ர்த்தாதிருப்போம் !

 

 

சேவிய‌ர்

பைபிள் மாந்தர்கள் 23 (தினத்தந்தி) : இப்தா ( Jephthah)

இப்தா ஒரு வலிமையான போர் வீரன். ஒரு விலைமாதிற்குப் பிறந்தவன். எனவே அவனுடைய தந்தையின் குடும்பத்தினர் அவரை வெறுத்து துரத்தி விட்டார்கள். அவர் தப்பி ஓடி தோபு எனும் நாட்டில் வாழ்ந்து வந்தார். கடவுளின் அழைப்பு இப்தாவுக்கு வந்தது !

எத்தனை முறை பட்டாலும் திருந்தாத இனமாக இருந்தது இஸ்ரயேல். கடவுளின் தொடர்ந்த அன்பையும், பாதுகாப்பையும் பெற்ற அவர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து வேற்று தெய்வங்களை வழிபடத் துவங்கினார்கள். எனவே அவர்கள் பலவீனமடைந்து எதிரிகளால் மீண்டும் அடிமையாக்கப் பட்டார்கள். அம்மோனியர்கள் அவர்களை நீண்ட நெடிய பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மீண்டும் கடவுளிடம் கதறி மன்றாடினார்கள். இந்த முறை கடவுள் சட்டென மனம் இரங்கவில்லை. மீண்டும் மீண்டும் வழி விலகிச் செல்லும் மக்கள் மீது கோபம் கொண்டார். “வேறு தெய்வங்களைத் தேடிப் போனீர்களே..அவர்களே உங்களை விடுவிக்கட்டும் என்றார்”. மக்களோ தொடர்ந்து வேண்டினர்.

தங்களிடம் இருந்த வேற்று தெய்வ வழிபாடுகளை எல்லாம் விலக்கினர். மனம் திருந்தியதைச் செயலில் காட்டியதால் கடவுள் மனமிரங்கினார். அம்மோனியருக்கு எதிராக யார் போரிட்டு வெல்வாரோ அவரே நம் தலைவர் என மக்கள் தங்களுக்குள் முடிவு செய்தார்கள். அப்போது தான் இப்தா அழைக்கப்பட்டார்.

இப்தா மக்களிடம் வந்து,”என்னை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் என்னை அழைப்பீர்களோ ?” என தனது மன வருத்தத்தைக் கொட்டினார். மக்கள் அவரை சமாதானப் படுத்தி தங்கள் விடுதலைக்காகப் போரிடுமாறு வேண்டினார்கள். அவரும் ஒத்துக் கொண்டார்.

முதல் முயற்சியாக அம்மோனிய மன்னனிடம் ஒரு தூதனை அனுப்பி சமாதானம் செய்து கொள்ள முயன்றார். எதிரி மன்னன் விட்டுக் கொடுக்கவில்லை. எனவே போர் ஒன்றே முடிவு எனும் நிலை உருவானது. கடவுளின் அருள் இப்தாவின் மீது நிரம்பியது.

இப்தா ஒரு நேர்ச்சை செய்தார். “கடவுளே, நீர் எதிரிகளை என் கையில் ஒப்புவித்தால். நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது என் வீட்டு வாயிலில் இருந்து யார் புறப்பட்டு வருகிறாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரை எரிபலியாகத் தருவேன்” என்றார்.

போர் நடந்தது. ஆண்டவர் அருளுடன் போரிட்ட இப்தா வெற்றி பெற்றார். பதினெட்டு ஆண்டு கால துயர வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இப்தா மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். இந்த செய்தியைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுடன் மேள தாளங்களுடனும் அவரைச் சந்திக்க அவர் வீட்டு வாயிலில் இருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் இப்தாவின் அன்பு மகள். ஒரே மகள். அவருக்கு வேறு பிள்ளைகளே இல்லை !

இப்தா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கதறினார்.. “ஐயோ மகளே.. என்னைத் துன்பத்தில் தள்ளி விட்டாயே” என்று புலம்பி தனது நேர்ச்சை பற்றி மகளிடம் சொன்னார். மகிழ்ச்சிக் கொண்டாட்டம் சட்டென கலைய, நிலைகுலைந்து போய் நின்றாள் மகள். ஆனாலும் கடவுளின் விருப்பமே நடக்கட்டும். இரண்டு மாதங்கள் நான் என் தோழியருடன் மலைகளில் சுற்றித் திரிந்து எனது கன்னிமை குறித்து நான் துக்கம் கொண்டாட வேண்டும் என்றாள் கண்ணீருடன்.

தந்தை தலையசைத்தார். மகள் மலைகளுக்கு பயணமானாள். இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் கன்னியாகவே தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்பா நான் தயார் என்றாள். இப்தா கடவுளுக்குச் செய்த நேர்ச்சையை நிறைவேற்றினார்.

அதிர்ச்சியும், வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த வாழ்க்கை இப்தாவுடையது. கடவுளுக்குக் கொடுத்த வாக்கை மன உறுதியுடன் இப்தா காப்பாறினார். அந்த நாட்களில் வீடுகளின் கீழ்த் தளத்திலும், வாயிலிலும் கால்நடைகளை பராமரிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் இப்தா நேர்ச்சை செய்திருக்கலாம். ஆனால் வெற்றி பெற்றவரை எதிர்கொள்ள வீட்டிலிருக்கும் பெண்கள் ஆடிப்பாடி செல்வார்கள் (1 சாமுவேல் 18 : 6-7 ) என்பதும் அன்றைய வழக்கமே ! எப்படியோ, கடவுளின் அழைப்பை அப்படியே ஏற்காமல் இப்தா செய்த நேர்ச்சை தேவையற்ற ஒன்று

தந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற தன்னையே தந்த அந்த பெயர் தெரியா பெண்ணின் அன்பும், இறையச்சமும் பிரமிக்கவும் வெலவெலக்கவும் வைக்கிறது.

அழைப்புக்குக் கடவுள் செவி கொடுக்கவில்லையெனில் முதலில் நமது பாவங்களையெல்லாம் விலக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இறைவனின் வார்த்தைகளைச் சோதித்தறியும் தேவையற்ற நேர்ச்சைகளை ஒதுக்க வேண்டும். இறைவனின் முன் செய்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தனது வாழ்க்கையை விட இறைவனையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.  என பல வேறுபட்ட படிப்பினைகள் இப்தாவின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

பைபிள் மாந்தர்கள் 22 (தினத்தந்தி) : அபிமெலக்கு

abimelech

இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்த எருபாகால் எனும் கிதியோனுக்கு பல மனைவியரும், எழுபது பிள்ளைகளும் இருந்தனர். செக்கேம் எனுமிடத்திலிருந்த வைப்பாட்டி மூலமாய் அவருக்கு அபிமெலெக்கு எனும் ஒரு முரட்டு மகனும் இருந்தான். கிதியோன் வயதாகி இறந்தார். இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பிற தெய்வங்களை வழிபட்டு பாவத்தில் விழுந்தார்கள்.

எருபாகாலுக்கு அபிமெலக்கை மன்னனாக்குதில் உடன்பாடு இருந்ததில்லை. எனவே அபிமெலக்கு சூழ்ச்சியாக தனது தாயின் சகோதரர்களிடம் சென்று, உணர்வு ரீதியாகப் பேசி தந்தைக்குப் பிறகு தலைமை இடத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவர்கள் அவனுடைய பேச்சில் மயங்கினார்கள். பாகால் பெரித் – கோயிலில் இருந்து எழுபது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தனர். அவன் அந்தப் பணத்தைக் கொண்டு கொலையாளர்களை வாங்கினான். நேரடியாகத் தன்னுடைய சகோதரர்கள் வீட்டுக்குச் சென்று அவர்கள் எழுபது பேரையும் ஒரே கல்லில் வைத்து அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தான். கடைசி மகனான யோத்தாம் ஒளிந்து கொண்டதால் தப்பித்தான்.

முரடனான அபிமெலெக்கை மக்கள் அரசனாக்கினார்கள். யோத்தாம் அதைக் கண்டு கலங்கினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க கெரிசிம் மலைக்கு மேல் ஏறிநின்று ஒரு கதையைச் சொன்னார். மரங்களெல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு அரசனாய் இருக்கும் படி ஒலிவ மரத்திடம் கேட்டன. ஒலிவ மரமோ ‘பயன்படக்கூடிய எண்ணை தயாரிக்கும் பணி எனக்கு உண்டு’ தலைவனாய் இருக்க முடியாது என்றது. மரங்கள் அத்தி மரத்திடம் சென்றன,’ எனக்குப் பழங்கள் விளைவிக்கும் வேலையிருக்கிறது’ என அத்தி மரம் மறுத்தது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் சென்றன, ‘எனக்கு திராட்சை ரசம் தயாரிக்கும் வேலையிருக்கிறது, அதுதான் முக்கியம்’ என கொடியும் கை விரித்தது.

மரங்களெல்லாம் முட்புதரிடம் போய், அரசனாய் இருக்கும் படி கேட்டன. ஒன்றுக்கும் உதவாத முட்செடி ‘வாருங்கள் நானே உங்கள் அரசன். என் நிழலில் இளைப்பாறுங்கள். இல்லையேல் என்னிடமிருந்து கிளர்ந்தெழும் நெருப்பு மிகப்பெரிய அழிவை உருவாக்கும்’ என்றது.

கதையை சொல்லிய யோத்தாம் மக்களிடம் கண்ணீரோடு பேசினார். என் தந்தை உங்களை மீட்டார். எப்படியெல்லாம் வழிநடத்தினார். அவரையும் கடவுளையும் விட்டு விலகிய நீங்கள் அழிவீர்கள் என சாபமிட்டார். பின்னர் முரடன் அபிமெலெக்குவுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தார்.

அபிமெலெக்கு மூன்று ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். கடவுள் அபிமெலக்குக்கு எதிராக மக்கள் மனதில் பகையை ஊட்டினார். நாட்டில் நிம்மதியும், அமைதியும் விலக, வழிப்பறி, கொலை, கொள்ளையெல்லாம் நடந்தன.  அப்போது  மக்களிடையே ககால் என்பவன் வீரனாய் தோன்றினான். மக்கள் அவனுக்கு ஆதரவு கொடுத்தனர். அவன் அபிமெலக்கை எதிர்த்துப் பேசினார்.

அபிமெலக்கின் வீரன் செபூல், அந்த நகரின் அதிகாரியாய் இருந்தான். அவன் இந்த விஷயத்தை அபிமெலெக்கின் காதுகளில் போட்டான். செபூல், ககாலின் கூடவே இருந்து அவனுக்கு எதிராக சதி வேலை செய்தான். அபிமெலக்கின் வீரர்களிடம் அவனை மாட்டி விட்டான். ககால் வீரமாகப் போரிட்டான் ஆனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தப்பி ஓடினான்.

அபிமெலக் மக்கள் மீது கடும் கோபம் கொண்டு அவர்களை அழிக்கத் துவங்கினான். நகரை அழித்து, நகரில் உப்பைத் தூவினான். மிச்சமிருந்த மக்களில் சுமார் ஆயிரம் பேர் பயந்து போய் எல்பெரித் பாகால் கோயிலுக்குள் போய் பூட்டிக் கொண்டனர். கோயிலுக்குள் இருந்தால் தப்பலாம் என நினைத்தனர். அபிமெலெக்கோ மரங்களை வெட்டி கோயிலைச் சுற்றிலும் அடுக்கி, கோயிலையே எரித்துக் கொக்கரித்தான்.

நகருக்கு நடுவே ஒரு பெரிய கோட்டை இருந்தது. மக்கள் தலைதெறிக்க ஓடிப் போய் அதற்குள் ஒளிந்து கொண்டனர். கோட்டையைப் பிடிக்கும் கர்வத்துடன் அபிமலெக் கோட்டை வாசலை நெருங்கினான். ஆனால் கோட்டைக்கு மேல் ஒரு பெண் கையில் அம்மிக் கல்லுடன் தயாராய் இருந்தாள். கோட்டைக் கதவருகே அவன் வந்ததும் கல்லை நேராகத் தலையில் போட, தலை பிளந்து விழுந்தான் அபிமெலக்கு.

உயிர் பிரியும் கணத்திலும் தன் கர்வத்தை விடவில்லை அவன். அருகிலிருந்த வீரனை நோக்கி, என்னை உன் வாளால் வெட்டிக் கொன்று விடு. ஒரு பெண்ணின் கையால் செத்தேன் என்பது எனக்கு அவமானம் என்றான். வீரனும் அவனைக் குத்திக் கொன்றான். ஆனாலும் வரலாறு அந்தப் பெண்ணின் பெயரை மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டது. “அபிமெலக்கைக் கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா?” எனும் 2 சாமுவேல் 11 : 21 வசனம் அதை தெளிவாக்குகிறது !

இறை அழைத்தல் இல்லாமல் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டு, கர்வத்தைத் தலையில் சுமந்து கொண்டு, வன்முறையாலும், சுய பலத்தாலும் அனைத்தையும் சாதிக்க நினைப்பவர்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை அபிமெலக் வாழ்க்கை மீண்டும் ஒரு முறை நமக்கு விளக்குகிறது!

பைபிள் மாந்தர்கள் 11 (தினத்தந்தி) : பன்னிரண்டு சகோதரர்கள்

Joseph

யாக்கோபுக்கு  பன்னிரண்டு ஆண் பிள்ளைகள்.  அவர்களில் கடைக்குட்டிக்கு முந்தைய பையன் யோசேப்பு. அப்பாவுக்கு செல்லப் பிள்ளை. அதனால், யோசேப்பின் சகோதர்களெல்லாம் அவரிடம் கொஞ்சம் பொறாமை கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் யோசேப்புக்கு அவன் தந்தை ஒரு அழகிய வேலைப்பாடுள்ள ஒரு அங்கியைப் பரிசளித்தார். சகோதரர்களின் கோபம் இன்னும் அதிகமானது. யோசேப்புக்கு கனவுகளின் பயன்களைச் சொல்லும் திறமை வாய்த்திருந்தது. ஒரு நாள் அவன் தான் கண்ட கனவைப் பற்றி சகோதரர்களிடம் சொன்னார்.

“நாம எல்லாரும் வயலில் அறுத்த அரிகளைக் கட்டுகளாகக் கட்டிக் கொண்டிருந்தோம். அப்போது எனது அரிக்கட்டு எழும்பி நிற்க, உங்களுடைய அரிக்கட்டுகளெல்லாம் எனது அரிக்கட்டை விழுந்து தொழுதன”, என்றார். சகோதரர்களுடைய கோபம் பல மடங்கானது. “ஓ… நீ எங்களையெல்லாம் ஆட்சி செய்யலாம் என நினைக்கிறாயோ” என கர்ஜித்தனர்.

கொஞ்ச நாட்கள் கழிந்து யோசேப்பு வேறொரு கனவைக் கண்டான். அதையும் சகோதரர்களிடம் சொன்னான். “சூரியனும், நிலவும், பதினோரு நட்சத்திரங்களும் என்னை வணங்கக் கண்டேன்” என்றான். இப்போது தந்தை யாக்கோபுக்கே குழப்பம். “நானும், உன் அம்மாவும், எல்லா சகோதரர்களும் உன்னை வணங்க வேண்டுமோ ?” என கேட்டார்.

நாட்கள் நகர்ந்தன. யாக்கோபின் சகோதரர்களெல்லாம் வெகு தூரத்தில் ஆடு மேய்க்கச் சென்றிருந்தார்கள். தந்தை யோசேப்பை அழைத்தார்.  “உன் சகோதரர்களைப் போய் பார்த்து வா” என்றார். அவரும் போனார். அவர் வருவதை தூரத்திலிருந்து  கண்ட சகோதர்கள் எரிச்சலடைந்தார்கள். “இதோ வராண்டா கனவு மன்னன். இவனைக் கொன்று குழியில போடுவோம். அப்பா கிட்டே போய், ஏதோ காட்டு விலங்கு அடிச்சு கொன்னுடுச்சு என சொல்லுவோம்” என சதித் திட்டம் தீட்டினார்கள். சகோதரர்களில் மூத்தவனான ரூபன் மட்டும், “வேண்டாம், இவனை கொல்ல வேண்டாம். பாலை வனத்தில இருக்கும் ஆழ்குழியில போட்டுவிடுவோம்” என்று சொன்னார். எப்படியாச்சும் யோசேப்பைக் காப்பாற்ற வேண்டும் என்பது ரூபனின் நோக்கம்.

கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக ஒரு வணிகர் கூட்டம் வந்தது. சகோதரர்களில் ஒருவரான யூதா, “இவனை குழியில் தள்ளுவதை விட விற்று விடுவோம்” என சொல்லி 20 வெள்ளிக்காசுக்கு அவனை விற்றான். யோசேப்புக்கு அப்போது ஏறக்குறைய பதினேழு வயது. அப்போது ரூபன் அங்கே இல்லை. அவன் வந்தபோது யோசேப்பைக் காணோமே என அழுதான்.

எல்லோரும் வீடு திரும்பினர். சகோதரர்கள் யோசேப்பின் அங்கியில் ஒரு வெள்ளாட்டுக் கிடாயின் ரத்தத்தை தோய்த்து, “அப்பா,, இது யோசேப்போட அங்கியா பாருங்க, வழியில கிடந்துது” என்று சொல்லிக் கொடுத்தார்கள். தந்தை அதிர்ந்தார். தனது செல்ல மகன் இறந்து விட்டானே என கதறிப் புலம்பி துக்கம் அனுசரித்தார்.

யோசேப்பைக் கொண்டு போன வணிகர்களோ, அவனை எகிப்து நாட்டு பார்வோன் மன்னனின் மெய்க்காப்பாளனான போர்திபாவிடம் யோசேப்பை விற்றனர்..

யோசேப்பின் வாழ்க்கை இறைவனின் திட்டத்தை மிக அழகாகப் பிரதிபலிக்கிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கையை வகுத்திருக்கிறார். அதன் படி அவர்களை நடத்துகிறார். அதை நம்பி இறைவனில் நிலைத்திருப்பதே நமது அழைப்பு.

நமது பலவீனங்களில் பலத்தைப் புகுத்துவது இறைவனின் மகத்துவமான செயல் என்கிறது பைபிள். உடைபடாத முட்டை குஞ்சுக்கு சவப்பெட்டி ஆகிவிடும். உடையாத விதை மண்ணுக்குள் வீணாகும். உடையாத மனிதனும் அப்படியே. இறைவன் உடைபட்ட மனிதர்களையே தேடுகிறார். உடைபடுதல் என்பது உடல் பலவீனம் அல்ல. ‘என்னால் எதுவும் செய்ய முடியாது, இறைவனே என்னை வழிநடத்தட்டும்’ என இறைக்கு முன் அடிமையாவது.

யோசேப்பு தலைவனாக வேண்டும் என்பது கடவுளின் திட்டம். யோசேப்புக்கு வருகின்ற எல்லா கெட்ட விஷயங்களையும் நன்மையாக மாற்றுகிறார். அவரைக் கொல்ல நினைக்கையில், வியாபாரிகளை அனுப்புகிறார் ! வியாபாரிகளும் அவரை வாங்குகிறார்கள். வியாபாரிகள் அவரை எகிப்திற்குக் கொண்டு போகிறார்கள். அதுவும் நேரே அரண்மனையில் மெய்க்காப்பாளனிடம் விற்கின்றனர். அது தான் இறைவன் அவரைக் கொண்டு சேர்க்க விரும்பிய இடம்.

“”கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் – உரோமையர் 8 : 28″ என்கிறது பைபிள்.

மனித பார்வையில் நல்லவை நடந்திருந்தால் ஒருவேளை இறை சித்தம் நிறைவேறியிருக்காது. சகோதரர்கள் யோசேப்பு மீது கோபம் கொள்ளாமல் இருந்திருந்தால், விற்காமல் இருந்திருந்தால் யோசேப்பு ஒரு மேய்ப்பனாக வாழ்க்கையை முடித்திருக்கக் கூடும்.

சோதனைகள் நமக்கு வரும்போது, இது இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதன் பாகம் என உறுதியாய் நம்பி அவருடைய அன்பில் நிலைத்திருந்தால் எல்லாமே நன்மையாய் முடியும் என்பதேக் கதை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

பைபிள் மாந்தர்கள் 10 (தினத்தந்தி) : ராகேல் – லேயா

ராகேல் – லேயா

rachel and leah

ஆபிரகாமின் மகனான ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள். இளையவனான யாக்கோபுக்கு தந்தையின் வாழ்த்து கிடைத்ததால் மூத்த மகன் ஏசாவுக்கு கடும் கோபம். அவனைக் கொல்லத் திட்டமிடுகிறான். அதை அறிந்த பெற்றோர், அவனை தூரதேசத்திலிருக்கும் தாய்மாமனான லாபான் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தாய்மாமன் பெண்ணைக் கல்யாணம் செய்து சந்தோசமாக இருக்கட்டும் என்பது அவர்களுடைய திட்டம்.

யாக்கோபு தாய்மானனின் ஊரை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டார். வழியில் ஒரு நாள் இரவு தூங்கும்போது ஒரு கனவு கண்டார். பூமியிலிருந்து வானத்துக்கு ஏணி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.. ஆண்டவர் அதற்கு மேல் நின்று கொண்டு “உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். என் பாதுகாப்பும், ஆசீர்வாதமும் எப்போதும் உனக்கு உண்டு” என வாக்களித்தார்.

உற்சாகமான யாக்கோபு தாய்மானம் ஊரை அடைந்தார். நகருக்கு அருகேயிருந்த கிணற்றில் மந்தைக்குத் தண்ணி காட்ட ஒரு அழகிய இளம் பெண் வந்தாள். அவள் பெயர் ராகேல். அவள் தான் தனது தாய்மாமன் மகள் என அறிந்ததும் யாக்கோபு அவளை கட்டியணைத்து கண்ணீர் விட்டு நடந்த விஷயங்களையெல்லாம் சொன்னார். அவள் வியந்தாள். வீட்டிலிருந்த எல்லோரும் யாக்கோபை மிக அன்புடன் வரவேற்றார்கள். யாக்கோபு அங்கே தங்கினான்.

நீ என் உறவினர் தான். இருந்தாலும், உன் வேலைக்கு என்ன சம்பளம் வேண்டும் கேள். என்றார் லாபான். “ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்கிறேன். உங்கள் மகள் ராகேலை எனக்கு மணம் செய்து கொடுங்கள்” என்றார் யாக்கோபு. ராகேலுக்கு ஒரு அக்கா உண்டு. அவள் அழகில் கொஞ்சம் கம்மி. பெயர் லேயா. லாபான் சம்மதித்தார்.

ஏழு ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபுக்கும் ராகேலுக்கும் திருமண விருந்து நடந்தது. அன்று இரவு முதலிரவில் ராகேலுக்குப் பதில் லேயாவை அனுப்பி வைத்தார் தந்தை. யாக்கோபு அறியவில்லை. மறு நாள் காலையில் தான் அதிர்ச்சியடைந்தார்.

“மன்னித்துக் கொள். மூத்தவள் இருக்கும்போ எப்படி இளையவளுக்குக் கல்யாணம். ஒரு ஏழு நாள் கழித்து இளையவளையும் திருமணம் செய்து கொள். ஆனால் மீண்டும் ஒரு 7 வருஷம் நீ எனக்காக உழைக்க வேண்டும்” என்றார் லாபான். யாக்கோபு சம்மதித்தான். அப்படி அக்கா தங்கை இருவரையுமே மணந்தான்.

காலங்கள் கடந்தன. “இப்போது நான் என் மனைவி பிள்ளைகளுடன் விடைபெறுகிறேன்” என்றார் யாக்கோபு. அவருக்கு 11 பிள்ளைகள் இருந்தார்கள். “கூலியாக எனக்கு மந்தையிலுள்ளவற்றில் கலப்பு நிறமோ, வரியோ, புள்ளியோ உள்ள செம்மரியாடுகள், வெள்ளாடுகள் மற்றும் கறுப்பு ஆட்டுக்குட்டிகள் எனக்கான ஊதியம்” என்றார். லாபான் ஒத்துக் கொண்டார். ஆனால் அன்று இரவே அத்தகைய ஆடுகளையெல்லாம் மந்தையிலிருந்து பிரித்து தூரமாய் ஒட்டிச் சென்று விட்டார்.

யாக்கோபு தளரவில்லை. புன்னை, வாதுமை மற்றும் அர்மோன் மரத்து பச்சைக் கிளைகளை வெட்டு அவற்றின் தோலை வரி வரியாய் உரித்தோ, புள்ளி புள்ளியாய் வெட்டியோ வைத்தார். ஆடுகள் பொலியும் நேரத்தில் அவற்றுக்கு முன்னே அந்தக் கொம்புகளைப் போட்டார். வலிமையான ஆடுகள் பொலியும் போதெல்லாம் அப்படியே செய்தார். அதைப் பார்த்துப் பொலிந்த ஆடுகளெல்லாம் வரியுடைய அல்லது புள்ளிகளையுடைய குட்டிகளையே ஈன்றன !

கொஞ்ச காலத்திலேயே லாபானின் சூழ்ச்சியை முறியடித்து யாக்கோபு மிகப்பெரிய மந்தைக்குச் சொந்தக்காரர் ஆனார். அந்த மந்தை லாபானின் மந்தையை விட மிகவும் வலிமையானதாகவும் ஆனது ! யாக்கோபு பின்னர் தன் சகோதரனோடு அன்பில் இணைந்தார். கடவுள் அவரை “இஸ்ரயேல்” என பெயரிட்டார். அவரிடமிருந்தே கடவுளின் பிரியத்துக்குரிய சந்ததியான இஸ்ரேல் உருவானது !.

கடவுளின் சித்தமும், திட்டங்களும் சுவாரஸ்யமானவை. யாக்கோபு இளைஞனாய் இருந்த காலத்தில் ஏமாற்றுக் காரனான இருந்தான். கடவுள் அவனை ஒரு இனத்தின் தலைவராக்க விரும்பினார். ஆனால் அதற்கு முன் யாக்கோபு சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொள்வது அவசியமானதாய் இருந்தது.

அதற்குத் தான் லாபான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இளைய மகள் என நினைத்து மூத்த மகளைத் திருமணம் செய்கிறார் யாக்கோபு. பிறரை ஏமாற்றிப் பழக்கப்பட்ட யாக்கோபு ஏமாந்து போகிறார். மீண்டும் அவரது உழைப்பு இரண்டு மடங்காகிறது ! ராகேல் – லேயாள் எனும் இரு மனைவியரிடையே மன உளைச்சல்களையும் சம்பாதிக்கிறார்.

யாக்கோபு வலிமையாய் மாறுகிறான். ஆனாலும் கடவுள் அவனை பயன்படுத்தவில்லை. காரணம் அவர் தனது சொந்த  முயற்சியினால் அனைத்தையும் சாதிக்க நினைக்கிறார். கடைசியில் அவர் கால் செயலிழந்து, முழுமையாய் வீழ்ச்சியடைகையில் முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போது தான் அவர் இஸ்ரயேல் என அழைக்கப்படுகிறார்.

லாபான், தந்திரமாய் செய்த தவறுகளுக்கெல்லாம் விளைவுகள் கிடைக்கின்றன. தவறிழைக்கும் மனிதர்கள் கடவுளின் பார்வையிலிருந்து தப்புவதில்லை ! அதற்கு லாபான் விதிவிலக்கல்ல.

கடவுளை முழுமையாய் நம்புகையில் அவர் நமக்கு மிகச்சிறந்த வழியைக் காட்டுகிறார். நம்மை வழிநடத்தியும் செல்கிறார். அரைகுறை மனதுடனும், நிரம்பிய சுய பலத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்கையில் அவர் ஓரமாய் நின்று விடுகிறார்.

பலம் பெற வேண்டுமெனில் பலவீனனாய் மாற வேண்டும் என்பதே கடவுள் சொல்லும் பாடம் !

 

பைபிள் மாந்தர்கள் 9 (தினத்தந்தி) : இரட்டையர்கள் ஈசா – யாக்கோபு

Jacob-Blessing-Isaac

ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கிற்கு 40 வயதாக இருந்தபோது ரபேக்காவைத் திருமணம் செய்தார்.  சுமார் 19 வருடங்கள் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை. ஈசாக் உருக்கமாக செபித்தான். ரபேக்கா கர்ப்பமானாள். இரட்டைக் குழந்தைகள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கருவறையிலேயே இரண்டு பேரும் முட்டி மோதிக் கொண்டார்கள்.

ரபேக்கா ஆண்டவரிடம் கேட்டாள்.  ஆண்டவர் அவளிடம், “உன்னுடைய வயிற்றிலிருந்து இரண்டு பெரிய இனங்கள் தோன்றும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார். ரபேக்கா அமைதியானாள். பேறுகாலம் வந்தது. முதலில் ஒரு குழந்தை வெளிவந்தது. உடல் முழுக்க ரோமமும், செந்நிறமுமாக அந்தக் குழந்தை இருந்தது. இரண்டாவது குழந்தை முதல் குழந்தையின் குதிகாலைப் பிடித்துக் கொண்டே வெளிவந்தது. முதல் குழந்தைக்கு ஏசா என்றும், இரண்டாவது குழந்தைக்கு யாக்கோபு என்றும் பெயரிட்டனர்.

ஏசா வேட்டையில் கில்லாடி. விதவிதமாய் வேட்டையாடிக் கொண்டு வரும் உணவினால் ஈசாக்கிற்கு அவன் மீது அதிக பிரியம். யாக்கோபுவோ அமைதியாய், வீட்டைச் சுற்றி வரும் பழக்கமுடையவனாய் இருந்தான். அவன் அம்மாவின் செல்லப் பிள்ளை.

ஏசா ஒரு நாள் வேட்டையாடி களைத்துப் போய் வந்தான். அப்போது யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக் கொண்டிருந்தான். “ரொம்பப் பசிக்குது கொஞ்சம் கூழ் கொடு” என்றான் ஏசா. யாக்கோபுவோ குறுக்குப் புத்தியுடன், “கூழ் தருகிறேன். உன் தலைமகனுக்குரிய உரிமையை எனக்குத் தா” என்றான். அவனும் கொடுத்தான். வெறும் ஒரு சாப்பாட்டுக்காக ஏசா தனது மூத்த மகனுக்குரிய உரிமையை இழந்தான்.

காலங்கள் உருண்டோடின. ஈசாக் வாழ்வின் இறுதி கட்டத்துக்கு வந்தார். அவருடைய கண்பார்வை மங்கியது. ஒரு நாள் அவர்  ஏசாவை அழைத்து, “ நீ போய் வேட்டையாடி எனக்கு சுவையாய் சமைத்துக் கொடு. நான் உனக்கு ஆசி வழங்குவேன்” என்றார். ஏசா காட்டுக்குக் கிளம்பினான்.

இந்த உரையாடலை ரகசியமாய்க் கேட்டுக் கொண்டிருந்த ரபேக்கா அவசரம் அவசரமாய் யாக்கோபை அழைத்து விஷயத்தைச் சொன்னாள். கூடவே,, “நீ போய் நம்ம மந்தையிலிருந்து ரெண்டு கொழுத்த ஆட்டுக் குட்டியை அடித்து வா. நான் சமைத்துத் தரேன். நீ ஏசா மாதிரி போய் ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்றாள்.

“அம்மா, என் உடல் ஏசா மாதிரி ரோமமா இருக்காது.. கண்டுபிடிச்சா வாழ்த்துக்குப் பதிலா சாபம் தான் கிடைக்கும்” யாக்கோபு தயங்கினார். ரபேக்கா ஊக்கமூட்டினாள். காரியங்கள் மளமளவென நடந்தன. யாக்கோபு கொண்டு வந்த ஆட்டுக்குட்டிகளை ரபேக்கா சமைத்தாள். கூடவே ஆட்டின் தோலை எடுத்து யாக்கோபின் கைகளில் கட்டினாள். ஏசாவின் ஆடைகளை எடுத்து யாக்கோபை உடுத்தச் செய்தாள்.

யாக்கோபு உணவுடன் தந்தையின் அருகே சென்றார். “அப்பா ஏசா வந்திருக்கிறேன்” யாக்கோபு சொன்னார். “ஏசாவா, அதற்குள் வேட்டை முடிந்து விட்டதா.. யாக்கோபின் குரல் போல இருக்கிறதே” ஈசாக் சந்தேகித்தார்.. “நான் ஏசா தான்” யாக்கோபு மீண்டும் பொய் சொன்னர். ஈசாக் அவனை அருகே அழைத்து கைகளைத் தடவினார். ம்ம்… ரோமம் அடர்ந்த கைகள். நெருங்கி அவனுடைய ஆடையின் வாசனையை நுகர்ந்தார். ம்ம்… ஏசாயின் வாசனை. இப்போது ஈசாக் முழுமையாய் ஏமாந்தார். தனது கையை யாக்கோபின் தலையில் வைத்தார். நாடுகளுக்கும், மக்களுக்கும், சகோதரர் யாவருக்கும் நீயே தலைவன்” என்றார்.

காட்டிலிருந்து ஏசா திரும்பி வந்தபோது விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். கதறிப் புலம்பினார். ஈசாக் வருந்தினார், ஆனாலும் ஆசீர்வாதத்தைத் திரும்பப் பெற முடியாது என கைகளை விரித்தார்.

″உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்″ என்றார். ( தொடக்க நூல் 25 : 23 ). என்று கடவுள் ஏற்கனவே ரெபேக்காவிடம் சொல்லியிருந்தார். அந்த திட்டம் கடைசியில் நிறைவேறுகிறது. ஆனால் அவர் விரும்பிய வழியில் நடந்ததா என்பது கேள்விக்குறியே !

பெற்றோர் செய்யக் கூடாத ஒரு செயல் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது. ஈசாக்கும் ரபேக்காவும் காட்டுகிறார்கள். அது சகோதரர்களுக்கிடையே சிறுவயதிலிருந்தே கசப்புணர்வை உருவாக்கி விடுகிறது.

ஈசாக் தனது வாழ்வில் அனைத்தை விடவும் உணவை நேசிக்கிறார்.ஆசி வழங்குவதற்கு முன்பு கூட, சாப்பாடு கொண்டு வா. அதை முதலில் ருசிக்கட்டும் என்கிறார். உணவு அவருக்குக் கடவுளாய் மாறிவிடுகிறது.

ஏசாவோ, கஞ்சிக்காக ‘தலைமகன்’ எனும் உயரிய ஆசீர்வாதத்தை இழக்கிறான். விரும்பிய பெண்களையெல்லாம் மணக்கிறான். சகோதரன் மேல் கொலை வெறி கொள்கிறான். என ஆன்மீகம் அகன்று விட்ட நிலையையே அது காட்டுகிறது.

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அதை அவர் மிகவும் அற்புதமான முறையில் நடத்துவார். அவரை நம்புவதும், அவர் காட்டும் வழியில் நடப்பதுமே அவசியம் ! என்பதையே இரட்டையர் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது.

பைபிள் மாந்தர்கள் 8 (தினத்தந்தி) : ஈசாக் !

ஈசாக் !

4320480586_839e41e9c2

ஈசாக் என்றதும் சட்டென என்ன ஞாபகத்துக்கு வருகிறது ? ஆபிரகாம் அவருடைய ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடத் துணிந்த செயலைத் தவிர ? ஈசாக்கின் வாழ்க்கை மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறது !

ஈசாக் தனது மனைவி ரெபேக்காவுடன் கெரார் என்னுமிடத்துக்குச் சென்றார். அங்கே பெலிஸ்திய மன்னன் அபிமெலேக்கு அரசாண்டு கொண்டிருந்தான். ரெபேக்கா மிகவும் அழகானவளாக இருந்தாள்., அந்தக் காலத்தில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருந்தது. அன்னியர்கள் யாரேனும் அழகான மனைவியுடன் நாட்டில் நுழைந்தால், அவளை அடைவதற்காக கணவனைக் கொன்று விடுவது சர்வ சாதாரணம். எனவே “யார் இந்தப் பெண்” என கேட்டவர்களிடமெல்லாம் “இவள் என் சகோதரி” என்றே சொல்லி வந்தார்.

ஒரு நாள் இவள் ஈசாக்கின் மனைவி எனும் உண்மை மன்னனுக்குத் தெரிய வந்தது. மன்னன் உடனே இந்த விஷயத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, யாரும் ஈசாக்கையோ, அவருடைய மனைவியையோ தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தான். பின் சில காலத்துக்குப் பின் ஈசாக் அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

கெரார் பள்ளத்தாக்கில் ஈசாக்கின் ஊழியர்கள் ஒரு கிணறு தோண்டினார்கள். தண்ணீர் பீறிட்டு எழுந்தது. அந்தப் பகுதியிலுள்ள மேய்ப்பர்களோ, இந்தக் கிணறு எங்களுடையதே.. இதை உங்களுக்குத் தரமுடியாது என சண்டை பிடித்தனர்.. ஈசாக்கு, அமைதியாக அடுத்த இடத்துக்குச் சென்றார்.

இரண்டாவதாக வேறு ஒரு கிணறைத் தோண்டினார்கள். அங்கும் தண்ணீக் கிடைத்தது. அங்கும் தகராறு எழுந்தது. அப்போதும் ஈசாக்கு அமைதியாக விலகிச் சென்றார்.

மூன்றாவது வேறொரு இடத்தில் ஒரு கிணறு தோண்டினார்கள். அங்கே சண்டை ஏற்படவில்லை. எனவே ஈசாக்கு அங்கேயே தங்கினார், இதுவே கடவுள் தனக்கு அளித்த இடம் என அவர் நம்பினார்.

விசுவாசத்தின் தந்தை, தனது சொந்தத் தந்தையாகும் பாக்கியம் ஈசாக்கிற்குக் கிடைத்தது. ஆபிரகாம் எல்லாவற்றிலும் கடவுளை முதலிடத்தில் வைத்து வாழ்க்கையை நடத்தியவர். அதற்காக தனது மகனைக் கூட இழக்கத் தயாராகி விட்டவர் தான் ஈசாக். எனவே தந்தையின் ஆன்மீக வாசனை ஈசாக்கின் வாழ்க்கையிலும் நிரம்பியிருந்தது எனலாம்.

கடவுளை முதல் இடத்தில் வைக்கும் போது மனிதர்களோடான பகை உணர்ச்சிகள் மறைந்து விடுகிறது. மறு உலக வாழ்க்கையை நோக்கிய பயணத்தில், இவ் வுலக வாழ்க்கை செல்வங்கள், சண்டை சச்சரவுகள் போன்றவை முக்கியமற்றதாகி விடுகின்றன.

“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; என்றார் ( யோ : 22 – 36 ) இயேசு. இவ்வுலகைச் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே இவ்வுலக மனிதரோடு போராடுவார்கள். விண்ணக வாழ்க்கையை நோக்கிப் பயணம் செய்பவர்களுடைய சிந்தனை எப்போதுமே பாவத்தோடான போராட்டமாகவே இருக்கும்.

ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள் ( மத் 5 : 40 ) என்கிறார் இயேசு. விட்டுக் கொடுத்தலும், சண்டைகளைத் தவிர்த்தலுமே இயேசு சொன்ன பாடம். அதைத் தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் எனும் போதனையின் மூலம் உரக்கச் சொன்னார்.

பழைய ஏற்பாட்டில் கடவுளின் அருள் பெற்ற மக்கள் போர்களில் வென்றார்கள், எதிரிகளை முறியடித்தார்கள். உலக செல்வங்களைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் புதிய ஏற்பாடு நமக்கு ஆன்மீகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. மனிதர்களோடான சண்டைகளை முற்றிலும் தவிர்த்து, சாத்தானோடும் அவனுடைய பாவ தூண்டுதல்களோடும் மட்டுமே சண்டையிட புதிய ஏற்பாடு அழைப்பு விடுக்கிறது.

புதிய ஏற்பாட்டில் இயேசு  காட்டிய வழி, பழைய ஏற்பாட்டு ஈசாக்கின் வாழ்க்கை யிலேயே இருந்தது வியப்பான விஷயம். அதனால் தான் ஈசாக் முப்பிதாக்களில் ஒருவராக இருக்கிறார்.

ஈசாக்கின் வாழ்க்கை முழுதும் நல்ல விஷயங்களாலேயே நிறைந்திருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய பிள்ளைகள் மீதே பாகுபாடு காட்டும் மனநிலை தான் அவரிடம் இருந்தது. அபிமலேக்கு மன்னனிடம் பொய் சொல்லும் மனநிலை தான் இருந்தது. ஆனால் பிற மனிதர்களிடம் சண்டையில்லாமல் செயல்பட வேண்டிய உயரிய குணம் அவரிடம் இருந்தது.

ஈசாக்கின் வாழ்க்கை நமக்கு மனிதர்களோடான சண்டைகளை தவிர்த்து விடவேண்டும் எனும் உயரிய குணத்தைச் சொல்லித் தருகிறது. அந்தக் குணத்தை மனதில் கொண்டாலே இன்றைக்கு நிகழ்கின்ற பல்லாயிரம் பிரச்சினைகள் நம்மை விட்டு மறைந்து விடும்.

பைபிள் மாந்தர்கள் 6 (தினத்தந்தி) : ஆபிரகாம்

Tiepolo-Abraham-and-Isaac-wga

நூறு வயது வரை குழந்தைக்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் ? அந்தக் குழந்தையை கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சுவார்கள். தரையிலேயே விட மாட்டார்கள். அதன்பின் அவர்களுடைய வாழ்க்கையே அந்தக் குழந்தையைச் சுற்றித் தான் அமையும் இல்லையா ? ஆபிரகாம் – சாரா வுக்கும் அப்படித் தான் இருந்தது. இருவருக்குமாய் பிறந்த முதல் குழந்தை ஈசாக். குழந்தை பிறந்த போது ஆபிரகாமுக்கு நூறு வயது, சாராவுக்கு தொன்னூறு வயது !

கடவுள் ஆபிரகாமை அழைத்தார். “ஆபிரகாம், உன் அன்பு மகனை மோரியா நிலப்பகுதியிலுள்ள மலையில் எனக்கு எரிபலியாகச் செலுத்து” என்றார். நூறு ஆண்டுகள் தவத்தின் பயனாக கடவுள் கொடுத்த வாரிசு, அவனையே எரி பலியாகச் செலுத்தச் சொல்கிறார் கடவுள். ஆபிரகாம் மறு பேச்சு பேசவில்லை. மறு நாள் அதிகாலையில் ஈசாக்கையும், பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல்கிறார். கடவுள் சொன்ன இடத்துக்குச் செல்ல மூன்று நாட்கள் பயணிக்க  வேண்டியிருந்தது.

அங்கிருந்து மலையில் ஏறிப் போக வேண்டும். விறகுக் கட்டை எடுத்து மகனின் தோளில் வைக்கிறார். கத்தியையும், தீயையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். அப்போது தான் ஈசாக் கேட்டான்.

“விறகு இருக்கிறது, கத்தி இருக்கிறது, நெருப்பு இருக்கிறது. பலியிட வேண்டிய ஆட்டுக்குட்டி எங்கே அப்பா ?”

“கடவுள் தருவார் மகனே” ஆபிரகாம் சொன்னார்.

மலைக்கு மேல் சென்று, ஈசாக்கைக் கட்டி விறகின் மேல் கிடத்தினார் ஆபிரகாம். அடுத்து கத்தியை எடுத்து மகனை வெட்ட வேண்டும். நெருப்பினால் சுடவேண்டும். எரிபலி நிறைவேறிவிடும். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட கத்தியை கையிலெடுத்தார். அப்போது கடவுளின் குரல் கேட்டது.

“ஆபிரகாம், நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்பதை அறிந்து கொண்டேன். பையன் மேல் கை வைக்காதே” என்றார். ஆபிரகாம் மகிழ்ந்தார். சுற்றிலும் பார்த்தார்.. ஒரு ஆட்டுக்குட்டி முட்செடியில் கொம்பு சிக்கிக் கொண்டு தத்தளிப்பதைக் கண்டார். அதைப் பிடித்து அதே பீடத்தில் எரிபலியாய் செலுத்தினார் !

மனதைப் பதை பதைக்க வைக்கும் ஆபிரகாமின் விசுவாசம் எட்டி விட முடியாத உயரத்தில் இருக்கிறது. முப்பிதாக்கள் எனும் வரிசையில் ஆபிரகாம் முதலில் நிற்பதற்குக் காரணமே அவரது அசைக்க முடியாத இறை விசுவாசம் தான்.

ஈசாக்கைப் பலியிட ஆபிரகாம் சென்றபோது அவருக்கு வயது 125. ஈசாக் 25 வயது நிரம்பிய வலிமையான இளைஞர். ஈசாக் தந்தையின் விண்ணப்பத்தைக் கேட்டு, தன்னையே பலியாகக் கொடுக்க சம்மதித்திருக்க வேண்டும் என்பதே இறையியலாளரின் கருத்து. விசுவாசத்தின் தந்தை, தனது மகனை அதே ஆழமான விசுவாசத்தில் வளர்த்திருக்கிறார் என்பதே வியப்பளிக்கும் செய்தி !

மலையடிவாரம் வரை பணியாளர்கள் கூடவே வருகிறார்கள். அவர்களிடம், “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்″ என்றார் ஆபிரகாம். ( ஆதி 22 : 5 ). திரும்பி வருவோம் – எனும் விசுவாசம் ஆபிரகாமுக்கு எப்படி வந்தது ?

“உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்” ஆதி : 17 : 19, எனும் கடவுள் ஆபிரகாமிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார். அதை ஆபிரகாம் முழுமையாக நம்பினார். என்ன ஒரு வியப்பூட்டும் விசுவாசம் !

கடவுள் ஆபிரகாமிடம் தனிமையாக, இரவில் பேசுகிறார். வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆபிரகாம் அந்த கட்டளையை நிறைவேற்றாவிட்டாலும் யாரும் அறியப் போவதில்லை. ஆனால் ஆபிரகாமோ, மனிதனின் அங்கீகாரமல்ல, கடவுளின் அங்கீகாரத்தையே முக்கியமாகத் தேடினார்

ஆபிரகாம் மிகப்பெரிய செல்வந்தனாய் இருந்தார். சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது தான் “நாட்டை விட்டு வெளியேறு” என்கிறார் கடவுள். ஆபிரகாம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது அவருக்கு வயது 75 ! எழுபத்தைந்து வயதில் எல்லாவற்றையும் விட்டு விட்டு நாடோடியாய் திரிய ஆபிரகாமின் விசுவாசம் அவரை இயக்கியது !

பயணத்தில் அவருடைய  லோத்தும் கூடவே செல்கிறார். காலங்கள் கடக்கின்றன.  ஆபிரகாமும் லோத்தும் ஒரே இடத்தில் வசிக்க வசதியில்லை எனும் நிலை எழுந்தபோது ஆபிரகாம் லோத்திடம், உனக்கு எந்த இடம் பிடித்திருக்கிறதோ அதை நீ முதலில் தேர்ந்தெடு. மற்ற இடத்தை நான் எடுத்துக் கொள்கிறேன் என்கிறார். பணிவும், சண்டையில்லாத சூழலையும், தனது உரிமையைக் கூட விட்டுக் கொடுக்கும் தாழ்மையும் ஆபிரகாமிடம் இருந்தது.

ஆபிரகாமின் விசுவாசமும், பொறுமையும், பணிவும், இறையச்சமும் நமக்கெல்லாம் மிகப்பெரிய ஆன்மீகப் பாடம் !

 

பைபிள் மாந்தர்கள் 4 (தினத்தந்தி) : நோவா !

illustration-of-noahs_ark

சுமார் ஐநூறு வயதான ஒரு கிழவர் அமர்ந்து மரங்களை முறித்தும், சீராக்கியும் ஒரு படகு செய்கிறேன் என்று அமர்ந்தால் என்ன நினைப்பீர்கள் ? அதுவும் தண்ணீர் வரவே வாய்ப்பு இல்லாத ஒரு கட்டாந்தரையில் படகு உண்டாக்கத் துவங்கினால் ? அப்படித் தான் இருந்திருக்கும் நோவா படகு செய்ய ஆரம்பித்த போது !

அந்த காலகட்டத்தில் தான் அவருக்கு சேம், காம், எபேத்து எனும் மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.  பூமியில் மக்கள் பலுகிப் பெருகத் துவங்கியிருந்தார்கள். பாவமும் மக்களிடையே பெருகத் துவங்கியிருந்தது. கோபமான கடவுள் பூமியை அழிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

நோவா மட்டும் ஒரு நல்ல மனிதராக இருந்தார். கடவுள் அவரிடம் “ நீ ஒரு பேழை செய்ய வேண்டும்” என்றார். பூமியை தண்ணீரால் அழிக்க வேண்டும், நோவாவின் குடும்பத்தினரையும், உயிரின வகைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்.

பேழை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுளே சொல்கிறார். நீளம் 300 முழம், அகலம் 50 முழம், கோபர் மரத்தில் செய்ய வேண்டும், உள்பக்கம் என்ன பூசவேண்டும் என முழு கட்டுமான விவரங்களையும் கொடுக்கிறார்.

நோவா பேழை செய்ய ஆரம்பித்தார்.  சுமார் நூறு ஆண்டுகள் அவர் பேழை செய்தார். குறிப்பிட்ட நாள் வந்தது. நோவாவும் குடும்பமும் கடவுள் சொன்னதும் பேழைக்குள் செல்கின்றனர். விலங்கினங்களை கடவுளே பேழைக்குள் வரவைக்கிறார். பேழையின் கதவையும் கடவுளே மூடிவிடுகிறார். ஏழு நாட்களில், மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு தொடங்கியது. பெருமழை பொழிந்தது.

நாற்பது இரவும், நாற்பது பகலும் அடைமழை. மலைகளுக்கும் மேலே பல முழம் உயரத்தில் தண்ணீர். நூற்றைம்பது நாட்கள் தண்ணீர் பெருக்கு. பூமி ஒட்டு மொத்தமாகக் கழுவப்பட்டது. எல்லா உயிரினங்களும் மாண்டு போயின ! தண்ணீர் வற்றுவதற்கு மீண்டும் ஒரு நூற்றைம்பது நாட்கள். கடவுள் அவர்களை வெளியே வரச் சொன்ன போது அவர்கள் வெளியே வந்தார்கள்.

உலகில் அதுவரை வாழ்ந்த எல்லா உயிரினங்களும், மனிதர்களும் அழிக்கப்பட நோவானின் சந்ததி மட்டுமே மிஞ்சியது ! வெளியே வந்ததும் முதல் வேலையாக, நோவா கடவுளுக்குப் பலி செலுத்தி நன்றியை வெளிப்படுத்தினார்.

கிறிஸ்தவம் நோவாவை மிக முக்கியமான ஆன்மீகத் தலைவராகப் பார்க்கிறது.

“நீ ஒரு பேழையைச் செய்” என கடவுள் சொன்னபோது, எதற்காக பேழை செய்ய வேண்டும் ? ஏன் கோபர் மரம் ? ஏன்  இந்த குறிப்பிட்ட அளவு ? என எந்த  ஒரு கேள்வியையும் நோவா கேட்கவில்லை.

தனது வேலைக்கு என்ன கூலி கிடைக்கும் ? யார் தனக்கு மரங்கள் கொண்டு தருவார்கள் ? யார் கீல் பூசி உதவுவார்கள் என்றெல்லாம் நோவா கணக்குப் போடவில்லை.

பேழை செய்யச் சொன்னதும், கர்வம் கொண்டு தானே ஒரு கட்டுமானப் பணியாளன் ஆகிவிடவில்லை. கடவுள் சொன்ன அளவுகளை அப்படியே பின்பற்றுகிறார். அகலத்தைப் போல ஆறு மடங்கு அளவு நீளம் கொண்டது அந்தப் பேழை. இன்றைய கப்பல் தயாரிப்புகளின் அடிப்படை இந்த அளவு தான் என்கிறது “லைஃப் அப்ளிகேஷன் பைபிள் ஸ்டடி” நூல்.

‘லாஜிக்’ பார்த்தோ, சுய அறிவை வைத்தோ நோவா எதையும் செய்யவில்லை. கடவுளையே சார்ந்திருந்தார். மழை தொடங்குவதற்கும் 7 நாட்களுக்கு முன்னே பேழையில் சென்றவர், மழை நின்றபின்பும் கடவுள் சொல்லும் வரை பேழையை விட்டு வெளியே வரவில்லை !

நிகழாத ஒரு செயல் நிகழலாம் என்பதை நோவா நம்பினார்.. உலகில் அன்று வரை மழை பெய்ததில்லை. பூமியின் பனி மட்டுமே பூமியைச் செழிப்பாக்கிக் கொண்டிருந்தது.

வரலாற்று அறிஞர்கள் நோவா 480வது வயதில் பேழை செய்ய ஆரம்பித்ததாய் சொல்கிறார்கள். அப்படியெனில் 120 ஆண்டுகளின் உழைப்பு அதில் உண்டு. முதல் இருபது வருடங்கள் வேலை செய்கையில் அவருக்குக் குழந்தைகள் இல்லை.

வேலை சட்டென முடியவில்லையே எனும் எரிச்சலும், கோபமும் அவரிடம் இல்லை. கடவுள் பேழை செய்யச் சொன்னார். ஆனால் அதன் பின் சுமார் நூறு ஆண்டுகள் கடவுள் பேசியதாய் வரலாறு இல்லை. இருந்தாலும் நோவா தனது பணியிலிருந்து பின் வாங்கவில்லை.

நோவா பேழை செய்தபோது உயிரினங்கள் எப்படி உள்ளே வரப் போகின்றன என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அதை கடவுளிடமே விட்டு விட்டார். எல்லாம் கடவுளின் திட்டப்படி நடந்தன.

பேழையிலிருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக கடவுளுக்குப் பலி செலுத்துகிறார் நோவா.. கடவுளே எல்லாவற்றிலும் முதன்மையாய் இருக்க வேண்டும் என்பதிலிருந்து அவர் பின் வாங்கவில்லை.

நோவாவின் வாழ்விலிருந்து இந்தப் பாடங்களைக் கற்றுக் கொள்வோம் !

பைபிள் மாந்தர்கள் 3 (தினத்தந்தி) : காயீன் – ஆபேல்

Italian Baroque Painting of the Killing of Abel and the Banishment of Cain --- Image by © Geoffrey Clements/CORBIS  ORG XMIT: 12873731

(Italian Baroque Painting of the Killing of Abel and the Banishment of Cain — Image by © Geoffrey Clements)

காயீனும், ஆபேலும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வந்திருந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிறந்த பிள்ளைகள். காயீன் மூத்தவன். ஆபேல் இளையவன். பெற்றோருக்குப் பிறந்த முதல் மனிதன் காயீன் ! அவனுக்குத் தோட்டத்தில் பயிடும் வேலை ! உலகின் முதல் விவசாயி. ஆபேலுக்கோ ஆடுகளை மேய்க்கும் பணி.

காயீன் நிலத்தில் விளைந்தவற்றைக் கொண்டு வந்தான். ஆபேல் தனது மந்தையிலிருந்த கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். கடவுள் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டு, காயீனின் காணிக்கையைப் புறக்கணித்தார். காயீன் தனது சகோதரன் மீது கோபம் கொண்டான். மனிதனின் முதல் கோபம். கடவுள் அவனிடம் “ஏன் முக வாட்டமாய் இருக்கிறாய். நீ நல்லது செய்தாய் உயர்வடைவாய். பாவம் உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கியாளவேண்டும்” என்றார். இருந்தாலும்… காயீனின் சினம் குறையவில்லை.

“தம்பீ, வா.. வயல்வெளிக்குப் போகலாம்” காயீன் கூப்பிட்டான்.

அண்ணன் கூப்பிட்டதும் மறு பேச்சு பேசாமல் உற்சாகமாய் ஓடி வந்தான் தம்பி. வயல்வெளிக்குச் சென்றதும், தனது தம்பியின் மீது பாய்ந்து அவனைக் கொன்றான் காயீன். உலகின் முதல் கொலை ! கடவுள் காயீனை அழைத்து, “ஆபேல் எங்கே” எனக் கேட்டார். அவனோ “ எனக்குத் தெரியாது, நான் என்ன அவனுக்குக் காவலாளியா ?” என்று கேட்டான். கடவுளின் கோபம் அதிகரிக்க, அவனைச் சபித்து துரத்தி விட்டார்.

கடவுள் காணிக்கையின் அளவைப் பார்த்து காணிக்கையை அங்கீகரிப்பவரல்ல. அவர் மனதைப் பார்ப்பவர். “ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை” என்கிறது பைபிள். ஆபேலைக் கனிவுடன் கண்ணோக்குகிறார், அதனால் அவனுடைய காணிக்கைகளையும் ஏற்றுக் கொள்கிறார்.. காயீனை அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை, அதனால் தான் அவனுடைய காணிக்கைகளும் கண்ணோக்கப்படவில்லை !

நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார் – ( எபிரேயர் 7 : 4 ). என்கிறது பைபிள். ஆபேலுடைய பலிகள் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், நேர்மையாளனின் காணிக்கையாகவும் இருந்தன என்பதே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும்.

“தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்  என்கிறார் இயேசு.

காயீன் ஆபேலின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.

  1. இறைவனுக்கான காணிக்கைகளில் அளவு முக்கியமல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். நாம் அங்கீகரிக்கப்படாவிட்டால், நமது காணிக்கை அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே ஒரு நேர்மையான வாழ்க்கை வாழவேண்டியது அவசியம்.
  2. சகோதரன் மீது சினம் கொள்பவர்கள் மாபெரும் பாவத்தைச் செய்கிறார்கள். சகோதரனோடு பிணக்கு இருந்தால் அதை நாமாகவே முன் சென்று சரி செய்ய வேண்டும்.
  3. இறைவனின் கண்களை விட்டு நமது பாவத்தை மறைப்பது என்பது, தரைக்குள் தலையைப் புதைத்து வைத்து விட்டு தப்பித்து விட்டதாய் நினைக்கும் தீக்கோழியைப் போன்றது.
  4. முதன்மையானவற்றையே கடவுளுக்குப் படைக்க வேண்டும். ஆபேல் தனக்கு ரொம்பவும் பிடித்த உயர்வானவற்றைக் கடவுளுக்குக் கொடுத்தான். சிறந்தவற்றை ஆண்டவருக்கு விருப்பத்துடன் கொடுப்பது ஆன்மீகத்தின் அடையாளம்.
  5. காயீன் செலுத்திய பலிதலை சிறந்ததா என்பது குறிப்பிடப் படவில்லை. எனவே அவை முதல் தரமானதில்லை என்றும் கருதிக் கொள்ளலாம். வெறுமனே சடங்குக்காகக் காணிக்கை செலுத்துபவர்கள் மதவாதத்தின் அடையாளம்.
  6. பாவம் செய்யும் மனிதன் இறைவனில் ஆனந்தம் கொள்வதில்லை. காயீனின் முகம் வாடிப்போய் இருந்தது. பாவத்தை விலக்கும் போதே உண்மையான ஆனந்தம் வந்து சேரும்.
  7. அடுத்தவருடைய வெற்றியோ அங்கீகாரமோ நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக நம்மை விட இளையவர்கள் சிறந்து விளங்கினால் பகையுணர்வு கொள்ளாமல் இருக்க வேண்டும்
  8. பாவம் என்பது நமது வாசலில் படுத்திருக்கும். அதை அடக்கியாளாவிட்டால் எந்த வேளையிலும் அது வீட்டுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும்.
  9. ஆபேல் தனது சகோதரன் அழைத்தபோது எந்த சந்தேகமும் படாமல் அவனுடன் சென்றான். அத்தகைய தூய்மையான சந்தேகமற்ற மனதை இறைவன் விரும்புகிறார்.
  10. நேர்மையாளனுக்கு எதிராய் கையை உயர்த்துகையில், இறைவனின் சினம் நம் மீது திரும்புகிறது !

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.