30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?!

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கக் கூடாது. முதல்ல லைஃப்ல செட்டில் ஆயிடணும். சின்னதா ஒரு அப்பார்ட்மெண்டாவது வாங்கணும். அப்புறம் தான் குழந்தையைப் பற்றி யோசிக்கணும். இது தான் பெரும்பாலான இளசுகளின் சிந்தனை. முன்பெல்லாம் கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம் கையில் குழந்தை இல்லையென்றால் கொஞ்சம் நக்கலாய்ப் பார்ப்பார்கள். இப்போ நிலமை தலை கீழ். “என்னடா அதுக்குள்ள அப்பாவாயிட்டே” என கிண்டல் தான் வரும்.

திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளத் தான் பலரும் விரும்புகிறார்கள். லைஃபை என்ஜாய் பண்ணணும், சம்பாதிக்கணும், ஹாயா இருக்கணும். இதை இளம் வயதினர் தங்கள் தேசிய கீதமாகவே ஆக்கிவிட்டார்கள். இப்படி திருமணத்தைத் தள்ளிப் போட்டு, அப்புறம் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது ரொம்பவே ஆபத்து என எச்சரிக்கின்றன அடுக்கடுக்காய் வரும் ஆராய்ச்சிகள்.

இளம் வயதில் அப்பாவாகி விடுபவர்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. வயதான பின் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடுகிறது. அவர்கள் நோஞ்சான்களாகவோ, டல்லடிக்கும் பிள்ளைகளாகவோ வளர்கிறார்கள். அவர்களுடைய மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் ஒழுங்கற்ற தன்மை வந்து விடுகிறது. எனும் நிஜம் திகைப்பூட்டுகிறது.

இதைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்ய களமிறங்கியது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். அதனுடன் கைகோர்த்துக் கொண்டது இங்கிலாந்தின் கோபன்ஹாகன் மருத்துவமனை. இதற்கு நிதியுதவி செய்தது வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பும், டானிஷ் புற்று நோய் குழுவும்.

அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. மருத்துவ உலகில் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பல்வேறு நோய்களுக்கான மர்ம முடிச்சை அது அவிழ்த்திருக்கிறது. அதாவது ஆண்கள் வயதாகும் போது அவர்களுக்கு பெனிங் விரை புற்றுநோய் எனும் ஒரு நோய் வந்து விடுகிறது. இந்த நோயை ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ் என்கிறது மருத்துவம். இது ஆபத்தான புற்று நோய் என்று அலறாதீர்கள். இது இருப்பதே கூட பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.

அமைதியாக குட்டிக் குட்டியாக இருக்கும் இந்த புற்று நோய் அணுக்கள் ஜெம் செல்களில் பாதிப்பை உருவாக்கி விடுகின்றன. இந்த ஜெம் செல்கள் தான் உயிரணுக்களை உருவாக்க வேண்டும். அப்படி அவை உயிரணுக்களை உருவாக்கும் போது இந்த நோயின் தாக்கமும் உயிரணுவில் பதிவாகி விடுகிறது. அந்த பாதிப்பு பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏக்களில் சைலண்டாய் போய் அமர்ந்து கொள்கிறது. குழந்தை வளர வளர இந்த டி.என்.ஏ தனது சுய ரூபத்தைக் காட்டுகிறது. இது தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியில் விரும்பத் தகாத மாற்றங்கள் உருவாகக் காரணம். குழந்தை இறந்தே பிறப்பதற்கும் கூட இது ஒரு காரணமாகி விடுகிறது.

மிகச் சிறிய துணிக்கைகளாக இந்த புற்று நோய் ஆரம்பமாகிறது. வயதாக வயதாக இந்த செல்கள் பலுகிப் பெருகுகின்றன. விளைவு ? உயிரணுக்களும் அதிக அளவில் பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் இந்த உயிரணுக்களால் உருவாகும் குழந்தைகள் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றன. வயதான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பொதுவான நோய்கள் வர இதுதான் காரணம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ வில்கீ. பிறவிச் சிக்கல்களுக்கும் விரை புற்று நோய்க்கும் இடையேயான தொடர்பை விளக்கும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. 

இந்த பாதிப்பினால் வரும் நோய்களின் பட்டியல் அதிர்ச்சியூட்டுகிறது. அக்கோண்ரோபிளாசியா எனப்படும் நோய் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதித்து குள்ளமாக்கி விடுகிறது. அபெர்ட் எனப்படும் நோய் ஒழுங்கற்ற முகம், ஒழுங்கற்ற கை, கால்களைக் குழந்தைக்குத் தந்து விடுகிறது.  நூனன் சிண்ட்ரோம் எனப்படும் நோய் குழந்தைகளை குறுகிய கழுத்து, கோணலான முகம், கூடு கட்டும் நெஞ்சு என ஊனமாக்கி விடுகிறது. கேஸ்டிலோ சிண்ட்ரோம் எனப்படும் நோய் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற தோல், வலுவற்ற மூட்டுகள், சமநிலையற்ற ஹார்மோன் வளர்ச்சி என ஏகப்பட்ட சிக்கல்கள். லேட்டாக குழந்தை பெற்றுக் கொள்வது எனும் சிம்பிள் மேட்டர் தான் இத்தகைய அச்சுறுத்தும் நோய்களுக்கெல்லாம் காரணம் என்பது தான் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது. 

நேச்சர் ஜெனடிக்ஸ் எனும் புத்தகம் இந்த ஆராய்ச்சியின் முழு தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது. இப்போது இந்த ஆராய்ச்சி மேலும் சில நோய்களின் மூலத்தை அறிய களமிறங்கியிருக்கிறது. அதில் முக்கியமான மூன்று நோய்கள் ஆட்டிஸ்ம், ஸ்கிட்ஸேப்ரேனியா மற்றும் மார்பகப் புற்று நோய்.

ஆட்டிஸ்ம் ( autism) என்பது  மூளையைத் தாக்கும் நோய். இந்த நோய் வரும் குழந்தைகள் சுமார் மூன்று வயது வரை வெகு சாதாரணமாய் இருப்பார்கள். அதன் பின் குழந்தையின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரியும். இத்தகைய குழந்தைகளிடம் வந்து சேரும் பிரச்சினைகள் கவனச் சிதைவு, ஒரே போன்ற செயல்களைச் செய்து கொண்டே இருப்பது, உற்சாகம் இல்லாமை, பேசுவதில் பிரச்சினை போன்றவை. இந்தக் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்தவும் செய்வார்கள். 

ஸ்கிட்ஸேப்ரேனியா (Schizophrenia) என்பது மூளையின் செயல்பாடுகளில் இயல்பற்ற நிலையை உருவாக்கும் ஒரு நோய். இந்த நோய் வந்த குழந்தைகள் எதையெதையோ பிதற்றுவார்கள், ஏதேதோ கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய சிந்தனை, பழக்கம் எல்லாவற்றிலும் பளிச் என வேறுபாடு தெரியும். இந்த நோய்கள் வரக் காரணம் இந்த ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ்  அல்லது இது போன்ற வேறு ஏதோ ஒன்று என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. 

முன்பெல்லாம் குழந்தைப் பிறப்புக்கு பெண்களின் வயது தான் முக்கியம் என்பார்கள். ஆண்களென்றால் எந்த வயதில் வேண்டுமானாலும் அப்பாவாகலாம் என மீசை முறுக்கினார்கள். ஆனால் சமீப காலமாக வருகின்ற ஆராய்ச்சிகள் ஆண்களின் முறுக்கு மீசையில் மண் அள்ளிப் போடுகின்றன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி முப்பது வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறது. நாற்பதைத் தாண்டி விட்டால் குழந்தைக்கு பெரிய பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கிறதாம்.

இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதே நல்லது. குறிப்பாக உயிரணுக்களின் இயக்கமும், வலிமையும் இளமையில் ஆரோக்கியமாக இருக்கின்றன. எனவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது, பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. வயதான ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன. நவீன தம்பதியரில் ஐந்தில் ஒரு தம்பதியருக்கு கருத்தரிப்பதில் தாமதம் நிலவுகிறது என்பது அதிர்ச்சிகர உண்மை!.

வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் முன்னிருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால், குடும்ப ஆனந்தம் பின் இருக்கைக்குத் தள்ளப்பட்டு விடும். இந்த கசப்பான உண்மையையே இந்த ஆராய்ச்சிகள் அதிர்ச்சியுடன் விவரிக்கின்றன.

நன்றி : ஜூனியர் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?

அனிதா அந்த நிறுவனத்தின் மரியாதைக்குரிய அதிகாரி. அவரிடம் சுமார் நாற்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்தில் அவருக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. வேலையை முடிப்பதிலாகட்டும், ஊழியர்களைக் கவனிப்பதிலாகட்டும் அவர் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் அனிதாவுக்கு கொஞ்ச நாளாவே மூட் அவுட். எதிலும் பற்றற்ற தன்மை அவருடைய வேலையிலும் தெரிந்தது. எதிலும் போதிய கவனம் இல்லை. கொடுக்கின்ற வேலைகளிலும் தாமதம். அதுவரை தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு சூப்பர் மேனேஜராய் இருந்த அவர் அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தார்.

இதையெல்லாம் கவனித்து வந்த அனிதாவின் மேனேஜர் சாம்பமூர்த்திக்கு உள்ளூர ரொம்பக் கவலை. அவர் கொஞ்சம் வயதானவர். தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தை மீசையிலும் தலையிலும் வெள்ளையாய் எழுதி வைத்திருப்பவர். கடந்த ஆறு வருடங்களாக அனிதாவின் மேனேஜர் அவர் தான். ஒரு நிர்வாகி என்பதற்கும் மேலாக ஒரு மகளைப் போன்ற பாசத்தைக் கண்களில் எப்போதுமே வைத்திருப்பார். அனிதாவின் தடுமாற்றங்கள் அவருக்கு ரொம்பவே கவலையளித்தது. ஒரு நாள் மாலைப் பொழுதில் அவர் இண்டர்காமில் அனிதாவை அழைத்தார்.

அனிதா கண்ணாடிகளால் சூழப்பட்டிருந்த சாம்பமூர்த்தியின் அறைக்கதவைத் தட்டினாள்.

“சொல்லுங்க சார்”

“உக்காரும்மா, கொஞ்சம் பேசணும்”

அனிதா குழப்பத்துடன் அவருக்கு மேஜைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“அனிதா எப்படிம்மா இருக்கே ?”

“என்னசார் திடீர் கேள்வி.. நல்லா இருக்கேன் சார் “

“அனிதா… உன்னை எனக்கு ஆறு வருஷமா தெரியும். வேலையில நீ எப்பவுமே சோடை போனதில்லை. ஆனாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை” சாம்பமூர்த்தி சொல்லி விட்டு சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

“இப்போ நாலஞ்சு மாசமா உன்னைக் கவனிக்கிறேன். ரொம்பவே குழப்பமா இருக்கே. கவனம் சிதறுது. உற்சாகம் காணாம போயிடுச்சு. அடிக்கடி சோர்வாயிடறீங்க. வாட் ஹேப்பண்ட் ?”

“ஒண்ணும் இல்லையே சார்… “ அனிதா சொல்ல சாம்பமூர்த்தி புன்னகைத்தார்.

“வீட்ல ஏதும் பிராப்ளமா ?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை சார்… “ சொல்லி முடிக்கும் போதே அனிதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அனிதாவின் கண்களில் முளைத்த கண்ணீர் சாம்பமூர்த்தியை சங்கடப்படுத்தியது.

“சரிம்மா.. நீ ஒரு வாரம் லீவ் போட்டு உன்னோட ஹஸ்பண்ட் கூட எங்கேயாவது போய்ட்டு வா. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிடும். “ அவர் சொல்ல அனிதா தலை கவிழ்ந்தாள்.

“ஹஸ்பண்ட் கூட போறதா ? ஹஸ்பண்டை விட்டுட்டுப் போகணும்ன்னு அவர் நினைக்கிறாரு. டைவர்ஸ் கிடைக்குமான்னு கேக்கறாரு சார் ?” அனிதாவின் குரல் தழுதழுக்க சாம்பமூர்த்தி அதிர்ந்து போனார்.

அனிதாவுடன் பேசப் பேச அவளுடைய சூழல் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. பிரச்சினை ஒண்ணும் புதுசில்லை. காலம் காலமாக பெரும்பாலான தம்பதியர் சந்திக்கின்ற பிரச்சினை தான். அவரு வீட்ல ஒரே பையன். அப்பா கிடையாது. அம்மா தான் எல்லாமே. காலைல காபி போடறதுல இருந்து, கால் தடுக்கினா மருந்து போடறது வரை எல்லாமே அம்மா தான். இப்போ கூடவே ஒரு ஆள் மனைவி !

கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் அம்மாவை தனியே விட்டு விட்டு ஹனிமூன் போனபோது தான் அவருக்கும் அம்மாவை மிஸ் பண்ணும் உணர்வு வந்திருக்கிறது ! கூடவே இருந்தபோது ஒன்றும் தோன்றவில்லை. எங்கோ தூரத்தில் அம்மாவை விட்டு விட்டு மனைவியின் அருகில் அமர்ந்து செய்த படகுச் சவாரி சேகருக்கு ரசிக்கவில்லை.

“ஏங்க சோகமா இருக்கீங்க, என்னாச்சு ? உடம்பு சரியில்லையா ”

“இல்லே அனிதா, மனசு சரியில்லை. அம்மா பாவம் அங்கே தனியா இருந்து என்ன பண்றாங்களோ ?”

சேகரின் பதில் அனிதாவுக்கு எரிச்சலைக் கிளப்பியது. “ஹனிமூன் நேரத்துல கூட அம்மா நெனப்பு தானா ?” என அனிதாவின் மனம் புகைந்தது.

அந்த சின்ன நெருப்புப் பொறி தான். எப்படா ஹனிமூன் முடியும் என காத்திருந்தது போல கணவன் பதறி அடித்து வீட்டுக்கு ஓடியதும். வந்ததும் வராததுமாய் அம்மா, அம்மா என உருகியதும் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிளட் பிரஷரை ஏற்றி விட்டது. அது மாமியார் மீதான வெறுப்பாய் முளைக்கத் துவங்கியது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு கணவனே கதியென வந்து நிற்கிறேன். அவருக்கு அம்மாவின் தோளில் தொங்கணுமா ? என அனிதாவுக்குள் எழுந்த குரல்கள் தினம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர, அவளுடைய நிம்மதியே போய் விட்டது.

அதன்பின் எது செய்தாலுமே தான் நிராகரிக்கப் படுவதாகவும், மாமியார் தான் மரியாதைக்குரியவராய் இருப்பது போலவும் அவளுக்குள் காட்சிகள் விரிந்தன. அது கணவன் மனைவியிடையே விவாதம், ஊடல், சண்டை என வளர்ச்சியடைந்தது.

“உன்னைக் கட்டிகிட்டதோட என் நிம்மதியே போச்சு. எனக்கு அம்மா தான் முக்கியம். உன்னால அதை சகிச்சுக்க முடியாட்டா டைவர்ஸ் பண்ணிக்கலாம்” என சேகர் சொன்ன வார்த்தை தான் அவளை ஒட்டு மொத்தமாக உலுக்கி விட்டது. அலுவலகத்திலும் அவளுடைய கவனம் ஒட்டு மொத்தமாய்ப் போய்விட்டது.

அனிதா, தனது கவலைகளையெல்லாம் சாம்பமூர்த்தியிடம் கொட்டினாள். அவருக்குப் புரிந்து போய்விட்டது. தனது அனுபவத்தின் மூலைகளிலிருந்து அனிதாவின் பிரச்சினைகளுக்கான விடைகளை எடுக்க ஆரம்பித்தார்.

அனிதாவின் கதை இன்றைய பெரும்பாலான பெண்களுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது தான் உண்மை.

“அம்மாவா, நானா ? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் மேரிடல் கவுன்சிலிங் வல்லுனர்கள். யூகேவில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது ! 

அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.

தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் பிள்ளையார் சுழி. அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் கிரெட்சன் எனும் ஆலோசகர்.

அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.

“மனைவியா ? அம்மாவா ? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என ஆண்குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.

இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா ? ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.

வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில்  பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை !. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.

யோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட  வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். “உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்”. சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.

உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும் ? எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.

உங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போ எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க ? அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் ! 

உங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.

உங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் !

அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.

மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.

சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் ? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ? 

மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான் !

அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. “அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு” என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். “ என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்” ன்னு மாமியார் சொன்னா, “ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா “ ன்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா “உங்க ஆளுங்க கிட்டே பேசும்போ மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ” ன்னு நக்கல் அடிக்காதீங்க.

சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

 நன்றி : பெண்ணே நீ

கூட்டுக் குடும்பம் எனும் சுவர்க்கம்

 

குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழல் இது. கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என கேட்கக் கூடிய நிலைக்குத் தள்ளி விட்டது இன்றைய வாழ்க்கை முறை. இத்தகைய சூழலில் வியக்க வைக்கும் விதமாக ஒரே குடும்பத்திலுள்ள 80 பேர் ஒன்றாகக் கூடி இன்பமாகப் பொழுதைச் செலவிட்ட உன்னதமான அனுபவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள டிவான் என்னுமிடத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என பல இடங்களிலும் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடியிருக்கின்றனர். நான்கு தலைமுறை உறுப்பினர்களைக் கொண்ட இந்த குடும்பத்தில் அதிக வயதான எழுபத்து ஏழு வயதான டோனி கிக் முதல், மூன்று மாதக் குழந்தையான மெற்றில்டா எனும் பேரக் குழந்தை வரை அடக்கம்.

இந்த மொத்தக் குடும்பமுமே பீட்டர் கிரீன் பீல்ட் மற்றும் அவரது மனைவி ஃபெயித் இவர்களுடையது. இந்தக் குடும்பத்திலுள்ள எழுபத்து ஏழு வயதான டாக்டர் கிரீன்பீல்ட் என்பவருக்கு பத்து குழந்தைகள் இருபத்தாறு பேரப் பிள்ளைகள்.

1969ம் ஆண்டிலிருந்து வருடம் தோறும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தின் ஒன்று கூடுவது வழக்கம் என்று தெரியவரும் போது வியப்பில் புருவங்கள் விரிகின்றன. கடந்த 2005ம் ஆண்டு அதிக பட்சமாக இந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் 112 பேர் ஒன்றுகூடியிருக்கின்றனர். அது கிரீன் பீல்ட் அவர்களின் மனைவியின் தந்தை ஜார்ஜ் தனது நூற்று இரண்டாவது வயதில் எல்லோருடனும் பொழுதைச் செலவிட வேண்டும் என விரும்பியதால் நிகழ்ந்தது என நினைவு கூர்கிறார் கிரீன் பீல்ட். ஆனந்தமான குடும்ப சந்திப்பு நடந்த மன நிறைவில் ஜார்ஜ் தனது 103 வது வயதில் கடந்த 2006 ல் மரணமடைந்திருக்கிறார்.

ஒரே இடத்தில் ஆனந்தமாக சிரித்து, பலவிதமான விளையாட்டுகளை விளையாடி பொழுதைப் போக்குவதைப் போல ஆனந்தமான அனுபவம் வேறு இல்லை என ஆனந்தம் மிளிர பேசுகிறார் கிரீன் பீல்ட். கடற்கரையில் ஒன்று கூடி மணல் வீடு கட்டி விளையாடுவது இவர்களின் முக்கியமான பொழுது போக்குகளின் ஒன்றாம் !

ஒரு வீட்டுக்குள்ளே இரு சுவர்கள் கட்டி தனித்தனி குடும்பம் நடத்தும் இன்றைய பலவீனமான உறவுகளிடையே கிரீன் பீல்ட் குடும்பம் வியக்க வைக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் தேவையை உலகுக்கு உரக்கச் சொல்லும் உதாரணக் குடும்பமாகவும் மிளிர்கிறது.

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்

 புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த  வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை – அதை
விட்டொழித்தால் தவழுமே புன்னகை