செல்ஃபி ! : Selfie ( Daily Thanthi Article )

kid
இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள்  செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌.

பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்ஃபி த‌னிய‌றைக‌ள் வ‌ரை நீள்கிற‌து. போனைக் கையில் எடுத்து வித‌வித‌மான‌ முக‌பாவ‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளைக் கிளிக்கிக் கொள்ளும் க‌லாச்சார‌ம் எல்லா இட‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டுகிற‌து.

“கேம‌ரால‌ த‌ன்னைத் தானே போட்டோ எடுக்கிற‌துல‌ என்ன‌ பிர‌ச்சினை” என்ப‌து தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் எழும் கேள்வியாக‌ இருக்கும். ஆனால் அது அத்த‌னை எளிதில் க‌ட‌ந்து போக‌க் கூடிய‌ விஷ‌ய‌ம் அல்ல‌ என்கிறார் உள‌விய‌லார் டேவிட் வேல். அத‌ற்கு அவ‌ர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்ட‌ர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.

பி.டி.டி என்ப‌து “தான் அழ‌காய் இல்லை, த‌ன‌க்கு ஏதோ ஒரு குறை இருக்கிற‌து என‌ ஒருவ‌ர் ந‌ம்புவ‌து. த‌ன்னுடைய‌ முக‌ம் ச‌ரியாக‌ இல்லை, த‌லை முடி ச‌ரியாக‌ இல்லை, மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, காது கொஞ்ச‌ம் பெரிசு என்றெல்லாம் த‌ன்னைப் ப‌ற்றி தாழ்வாய்க் க‌ருதிக் கொள்வ‌து. இந்த‌ பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து என்கிறார் அவ‌ர்.

இந்த‌ குறைபாடு இருப்ப‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌ங்க‌ளை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்க‌ள். அப்புற‌ம் அதை எடிட்ட‌ரில் போட்டு ச‌ரி செய்து பார்ப்பார்க‌ள், மீண்டும் எடுப்பார்க‌ள், மீண்டும் ட‌ச் அப் செய்வார்க‌ள். இப்ப‌டியே அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலையிலிருந்து தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலை வ‌ரைக்கும் நீள்கிற‌து.

“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த‌ பாதிப்பின் உச்ச‌த்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தின‌மும் ப‌த்து ம‌ணி நேர‌ம் செல்ஃபி எடுக்க‌வே செல‌வ‌ழிப்பாராம். ஒரு ப‌க்கா போட்டோ எடுத்தே தீருவேன் என‌ தொட‌ர்ந்து ப‌ட‌ம் பிடித்துப் பிடித்து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போவ‌தை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல‌, ஆறு மாத‌ கால‌ங்க‌ள் இப்ப‌டியே போயிருக்கிற‌து. இப்ப‌டியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிற‌து. ஆனாலும் அவ‌ருக்கு “க‌ட்சித‌மான‌ செல்ஃபி” சிக்க‌வில்லை !

க‌டைசியில் ஒருநாள் “ஒரு மிக‌ச் ச‌ரியான‌ செல்ஃபி கிடைக்க‌வே கிடைக்காது” எனும் முடிவுக்கு வ‌ந்திருக்கிறார். அந்த‌ முடிவு அவ‌ரை த‌ற்கொலை முய‌ற்சிக்கு இட்டுச் செல்ல‌, ப‌த‌றிப்போன‌ பெற்றோர் அவ‌ரை உள‌விய‌லார் டேவிட் வேலிட‌ம் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில்,  66% பேர் செல்ஃபி பாதிப்புட‌ன் இருக்கிறார்க‌ள் என்கிறார் அவ‌ர். செல்ஃபி எடுக்க‌ வேண்டும் என‌ உள்ளுக்குள் ப‌ர‌ப‌ர‌வென‌ ம‌ன‌ம் அடித்துக் கொள்வ‌து உள‌விய‌ல் பாதிப்பு என‌ அடித்துச் சொல்கிறார் அவ‌ர்.

செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உற‌வுச் சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌ என ஆய்வுக‌ள் சொல்கின்ற‌ன‌. “டேக‌ர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிற‌து. அதிக‌மாய் செல்ஃபி எடுத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் போடுவோர்க‌ள் ச‌க‌ ம‌னித‌ உற‌வுக‌ளில் ப‌ல‌வீன‌மாய் இருப்பார்க‌ள் என‌ அந்த‌ ஆய்வு கூறுகிற‌து.

அதிக‌மாக‌ செல்ஃபி எடுக்கும் ம‌ன‌நிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவ‌ர்க‌ள் செல்ஃபிட்டீஸ் என‌ பெய‌ரிட்டு அழைக்கின்ற‌ன‌ர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.

சில‌ஒரு நாள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்ட‌ர்லைன் செல்ஃபிட்டிஸ் !

சில‌ர் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்க‌ளை எடுத்து, மூன்றையுமே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்து எத்த‌னை லைக் வ‌ருகிற‌து, யார் என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதைக் க‌வ‌னித்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என‌ பெய‌ர்.

சீரிய‌ஸ் வ‌கை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் ! இவ‌ர்க‌ள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்ப‌டியே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், குழுக்க‌ளில் ப‌திவு செய்து கொண்டே இருப்பார்க‌ள்.

இதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்ப‌தே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அள‌வுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ந‌ஞ்சு என்ப‌து ம‌ட்டுமே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

இந்த‌ செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் ஏதோ க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளில் தோன்றிய‌து என்று தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் நினைக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ செல்பி ஆர‌ம்பித்து 175 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து என்ப‌து தான் விய‌ப்பூட்டும் விஷ‌ய‌ம். !

ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌தா !! அது தான் உண்மை. முத‌ன் முத‌லாக‌ செல்ஃபி எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்டு 1839. எடுத்த‌வ‌ர் பெய‌ர் ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸ்

Week 2

kid

உல‌கின் முத‌ல் செல்ஃபி எடுத்த‌வ‌ர் எனும் பெருமை இப்போதைக்கு ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸிட‌ம் தான் இருக்கிற‌து. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேம‌ராவை ஸ்டான்டில் நிற்க‌ வைத்துவிட்டு அத‌ன் முன்ப‌க்க லென்ஸ் மூடியைத் திற‌ந்தார். பிற‌கு ஓடிப் போய் கேம‌ராவின் முன்னால் அசையாம‌ல் ஒரு நிமிட‌ம் நின்றார். பிற‌கு மீண்டும் போய் கேம‌ராவின் கதவை மூடினார். பின்ன‌ர் அந்த‌ பிலிமை டெவ‌ல‌ப் செய்து பார்த்த‌போது கிடைத்த‌து தான் உல‌கின் முத‌ல் செல்ஃபி !

ஆனால் முத‌ன் முத‌லில் செல்ஃபி எனும் வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர் எனும் பெருமை அவ‌ருக்குக் கிடைக்க‌வில்லை. அது நாத‌ன் ஹோப் என்ப‌வ‌ருக்குக் கிடைத்த‌து. 2002ம் ஆண்டு அவ‌ருக்கு ஒரு சின்ன‌ விப‌த்து. விப‌த்தில் அடிப‌ட்ட‌ உத‌டுக‌ளோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அவ‌ர் த‌ன‌து அடிப‌ட்ட‌ உத‌டைப் ப‌ட‌ம்பிடித்தார். அதை இணைய‌த்தில் போட்டார். “ஃபோக‌ஸ் ச‌ரியா இல்லாத‌துக்கு ம‌ன்னிச்சுக்கோங்க‌, இது ஒரு செல்ஃபி, அதான் கார‌ண‌ம்” என்று ஒரு வாச‌க‌மும் எழுதினார். ஆனால் ச‌த்திய‌மாக‌ அந்த‌ வார்த்தை இவ்வ‌ள‌வு தூர‌ம் பிர‌ப‌ல‌மாகும் என‌ அவ‌ரே நினைத்திருக்க‌ வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த‌ வார்த்தை பிர‌ப‌ல‌மாக‌ ஆர‌ம்பித்த‌தும் அதை ஆங்கில‌ அக‌ராதியிலும் சேர்த்தார்க‌ள். “ஒருவ‌ர் டிஜிட‌ல் கேம‌ரா மூல‌மாக‌வோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்ப‌க்க‌ கேம‌ரா போன்ற‌ எத‌ன் மூல‌மாக‌வோ, த‌ன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்ப‌ட‌ம்” என‌ இத‌ற்கு ஒரு விள‌க்க‌த்தையும் அக‌ராதி கொண்டிருக்கிற‌து.

2012ம் ஆண்டு உல‌க‌ப் புக‌ழ்பெற்ற‌ டைம் ப‌த்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”.  2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அக‌ராதி “செல்ஃபியே இந்த‌ ஆண்டின் புக‌ழ்பெற்ற‌ வார்த்தை” என‌ அறிவித்த‌து.

ஆஸ்திரேலிய‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் முத‌ன் முத‌லில் இந்த‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் இந்த‌ வார்த்தையின் மூல‌ம் ஆஸ்திரேலியா என்று ப‌திவான‌து. 10 வ‌ய‌துக்கும் 24 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளில் 30 ச‌த‌வீத‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் சேர்கின்ற‌ன‌ என்கிற‌து ஒரு புள்ளி விவ‌ர‌ம்.

செல்ஃபியின் புக‌ழ் ப‌ர‌வுவ‌தைக் கேள்விப்ப‌ட்ட‌தும் செல்ஃபி என்றொரு ஆப்‍ ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து. முன்ப‌க்க‌ கேம‌ரா மூல‌மாக‌ எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே ப‌கிர‌ முடியும் என்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். ஒரு செல்ஃபிக்கு க‌மென்ட் கொடுக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க‌ முடியும். வேறு எதையும் எழுத‌ முடியாது. இந்த‌ ஆப்ளிகேஷ‌ன் ப‌தின் வ‌ய‌தின‌ரிடையே தீயாய்ப் ப‌ர‌விய‌து !

செல்ஃபி இப்ப‌டி இள‌சுக‌ளின் இத‌ய‌ங்க‌ளில் ப‌ற்றி எரிந்து கொண்டிருந்த‌ போது குர‌ங்கு எடுத்த‌ செல்ஃபி ஒன்று க‌ட‌ந்த‌ ஆண்டு மிக‌ப்பெரிய‌ பேசுபொருளாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க்கார‌ர் டேவிட் ஸ்லேட்ட‌ருக்குச் சொந்த‌மான‌ கேம‌ராவில் ப‌திவான‌ அந்த‌ ப‌ட‌த்தை, இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌திவு செய்திருந்த‌ன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இத‌னால் த‌ன‌க்கு பத்தாயிர‌ம் ப‌வுண்ட் ந‌ஷ்ட‌ம் என‌ வ‌ழ‌க்குப் ப‌திவு செய்தார் ஸ்லேட்ட‌ர்.

நீதிம‌ன்ற‌மோ இந்த‌ வ‌ழ‌க்கை விசித்திர‌மாய்ப் பார்த்த‌து. க‌டைசியில் அல‌சி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்க‌ள். “வில‌ங்குக‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌த்துக்கு ம‌னித‌ர்க‌ள் சொந்த‌ம் கொண்டாட‌ முடியாது”. அப்ப‌டி வில‌ங்கு செல்ஃபியும் உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை.

எது எப்ப‌டியோ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளுக்குச் ச‌ரியான‌ தீனி போட்டுக்கொண்டிருப்ப‌வை இந்த‌ செல்ஃபிக்க‌ள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளை மைய‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌து. அதில் 5.3 கோடி புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌. ஃபேஸ்புக், டுவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளிலும் செல்ஃபி ப‌ட‌ங்க‌ளும், குறிப்புக‌ளும் எக்க‌ச்ச‌க்க‌ம்.

86 வ‌து ஆஸ்க‌ர் விருது விழாவில் க‌லைஞ‌ர்க‌ளுட‌ன் எல‌ன் டிஜென‌ர்ஸ் எடுத்த‌ செல்ஃபி ஒன்று உல‌கிலேயே அதிக‌ முறை ரீ‍டுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் எனும் பெய‌ரைப் பெற்ற‌து. 3.3 மில்லிய‌ன் முறை அது ரீடுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌து !

இள‌சுக‌ளின் பிரிய‌த்துக்குரிய‌ விஷ‌ய‌ம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி ம‌ற்ற‌ நிலைக‌ளுக்கும் வெகு விரைவில் ப‌ர‌வியிருப்ப‌தையே இது காட்டுகிற‌து. நெல்ச‌ன் ம‌ண்டேலாவின் நினைவிட‌த்தில் உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ஒபாமா எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், த‌ன‌து அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளுட‌ன் சுவிஸ் அர‌சு எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் என‌ செல்ஃபியின் த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் ப‌ர‌விவிட்ட‌ன‌. எல்லாவ‌ற்றுக்கும் முத்தாய்ப்பாய் ச‌மீப‌த்தில் போப் ஆண்ட‌வ‌ரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்ட‌து விய‌ப்புச் செய்தியாய்ப் பேச‌ப்ப‌ட்ட‌து !

ப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் முத‌ல், போப் ஆண்ட‌வ‌ர் வ‌ரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேம‌ராக்க‌ள் ப‌திவு செய்திருக்கின்ற‌ன‌. 47 ச‌த‌வீத‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று ! அதிலும் ஆண்க‌ளை விட‌ செல்ஃபி மோக‌ம் பெண்க‌ளைத் தான் அதிக‌ம் பிடித்திருக்கிற‌தாம்.

பிலிப்பைன்ஸ் ந‌க‌ர‌ம் தான் செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌தாம். உல‌கிலேயே ந‌ம்ப‌ர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெய‌ர் அத‌ற்குக் கிடைத்திருக்கிற‌து.

செல்ஃபியின் ப‌ய‌ன்பாடும், சுவார‌ஸ்ய‌ங்க‌ளும் உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ப‌து ப‌த‌ற‌டிக்கும் செய்தியாகும்.

Week 3

kid

செல்ஃபி என்றாலே சுவார‌ஸ்ய‌ம் என‌ நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் ப‌றிக்கும் ஆப‌த்தும் நிர‌ம்பியிருக்கிற‌து என்பது தான்  ப‌த‌ற‌டிக்கும் செய்தி.

செல்ஃபிக்கு ர‌சிக‌ர்க‌ளாக‌ மாறியிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் இள‌ வ‌ய‌தின‌ர் தான். அவ‌ர்க‌ளுடைய‌ இள‌ இர‌த்த‌ம் துடிப்பான‌து. அத‌னால் த‌ங்க‌ள் செல்ஃபியில் அதிர‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் துடிக்கிறார்க‌ள். ப‌ல‌ வேளைக‌ளில் அது ஆப‌த்தான‌தாக‌ முடிந்து விடுகிற‌து.

ஸெனியா ப‌தினேழு வ‌ய‌தான‌ ப‌தின்ப‌ருவ‌ப் பெண். செல்ஃபி மோக‌ம் பிடித்து இழுக்க‌ 30 அடி உய‌ர‌ ரெயில்வே பால‌த்தில் ஏறினாள். ஒரு அழ‌கான‌ செல்ஃபி எடுத்தாள். துர‌திர்ஷ்ட‌ம் அவ‌ளுடைய‌ காலை வ‌ழுக்கி விட‌ கீழே விழுந்த‌வ‌ளுக்கு 1500 வாட்ஸ் மின்சார‌ வ‌ய‌ர் எம‌னாய் மாறிய‌து. ஆப‌த்தான‌ செல்ஃபி அவ‌ளுடைய‌ ஆயுளை முடித்து வைத்த‌து ! செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

காட்டுக்குள்ளே ஆப‌த்தான வில‌ங்குக‌ளைப் பார்க்கும்போது அதைப் பின்ன‌ணியில் விட்டு செல்ஃபி எடுப்ப‌து, டொர்னாடோ சுழ‌ற்காற்று சுழ‌ற்றிய‌டிக்கும் போது அத‌ன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்ப‌து, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உய‌ர‌மான‌ இட‌ங்க‌ளில் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம‌ர‌ண‌ம் எனும் சூழ‌லில் ப‌ட‌ம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என‌ செல்ஃபியை வைத்து ஆப‌த்தை அழைப்ப‌து இன்றைக்குப் ப‌ர‌வி வ‌ருகிற‌து.

கார‌ண‌ம் அத‌ற்குக் கிடைக்கும் ஆத‌ர‌வு. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் பகிரும்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ லைக் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே உயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து இத்த‌கைய‌ விளையாட்டுக‌ளில் ஈடுப‌டுகின்ற‌னர்.

இப்ப‌டி எடுக்க‌ப்ப‌டும் செல்ஃபிக்க‌ள் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு என்ப‌து இன்னும் ஊக்க‌ம் ஊட்டுகிற‌து. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் த‌லையின் நின்று லீ தாம்ச‌ன் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், போர்விமான‌த்திலிருந்து விமானி ஒருவ‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌ர்வ‌தேச‌ வான்வெளி நிலைய‌த்திலிருந்து விண்வெளி வீர‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌வுத் வ‌ங்கி உச்சியில் தொங்கியப‌டி கிங்ஸ்ட‌ன் எடுத்த‌ செல்பி என‌ ப‌த‌ற‌டிக்கும் செல்ஃபிக்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ப் பெரிது.

மொபைல்க‌ளில் எடுக்க‌ப்ப‌டும் புகைப்ப‌ட‌ங்க‌ளால் பாதுகாப்புக்கு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் என‌ எச்ச‌ரிக்கின்ற‌து அமெரிக்க‌ காவ‌ல்துறை. உங்க‌ளுடைய‌ ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்க‌ள் எங்கே இருக்கிறீர்க‌ள் என்பதை ஒருவர் துல்லிய‌மாய்க் க‌ண்டுபிடித்துவிடும் ஆப‌த்து உண்டு.

உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் உங்க‌ள் நான்கு தோழிய‌ருட‌ன் க‌ண்காணாத‌ காட்டுப் ப‌குதியில் இருக்கிறீர்க‌ள் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ஐந்து தோழிய‌ரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்க‌ள். பின்ன‌ணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த‌ புகைப்ப‌ட‌த்தை வைத்துக் கொண்டு ஒருவ‌ர் உங்க‌ள் இருப்பிட‌த்தை க‌ண்டுபிடித்து விட‌ முடியுமாம். அதெப்ப‌டி ?

ஸ்மார்ட் போன்க‌ளில் ஜி.பி.எஸ் பின்ன‌ணியில் இய‌ங்கிக் கொண்டே இருக்கும். அது உங்க‌ளுடைய‌ இருப்பிட‌த்தை உங்கள் புகைப்ப‌ட‌ங்க‌ளில் ரகசியக் குறியீடுகளாகப் ப‌திவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள்.  அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை ஒருவ‌ர் ட‌வுன்லோட் செய்து அத‌ற்கென்றே இருக்கும் சில‌ மென்பொருட்க‌ளில் இய‌க்கும் போது அந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விலாச‌ம் கிடைத்து விடுகிற‌து. சில‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள் கூட‌ இந்த‌ டீகோடிங் வேலையைச் செய்து த‌ருகின்ற‌ன‌.

“வீட்ல‌ த‌னியா போர‌டிக்குது” என‌ நீங்க‌ள் ஒரு செல்ஃபி போட்டால் உங்க‌ள் விலாச‌த்தைக் க‌ண்டுபிடித்து ஒருவ‌ர் உங்க‌ளை தொந்த‌ர‌வு செய்யும் சாத்திய‌ம் உண்டு என்ப‌து புரிகிற‌த‌ல்ல‌வா? ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌சீக‌ர‌ அழைப்புக‌ள‌ல்ல‌வா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். என‌வே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுங்க‌ள் என‌ அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஆப‌த்துக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டாலும், ம‌ருத்துவ‌த்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷ‌ய‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. குறிப்பாக‌ “செல்ஃபி வீடியோ” வை ம‌ருத்துவ‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ருடைய‌ பேச்சு, அசைவு போன்ற‌வ‌ற்றைப் ப‌திவு செய்து அதை ம‌ருத்துவ‌ ஆய்வுக்கு உட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் ஒருவ‌ருடைய‌ குறைபாடுக‌ளைக் க‌ண்டுபிடித்துச் ச‌ரிசெய்யும் முறை இப்போது வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.

இதையே பேச்சுக்க‌லையை வ‌ள‌ர்க்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளும் பயன்படுத்தலாம். குறிப்பாக‌ ஒருவ‌ருடைய‌ மொழி உச்ச‌ரிப்பு, ச‌த்த‌ம், தொனி, தெளிவு போன்ற‌ அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் ப‌திவு செய்து அத‌ன் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து பேச்சை எந்த‌ வித‌த்தில் மாற்ற‌ வேண்டும் என்ப‌தைக் க‌ண்டு பிடித்து ச‌ரி செய்ய‌ முடியும்.

இப்போதெல்லாம் வ‌ச‌தியாக‌ செல்ஃபி எடுக்க‌ “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிற‌து. நீள‌மான‌ குச்சி போன்ற‌ க‌ருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்க‌லாம். அந்த‌ குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் ப‌ட்ட‌னை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இத‌ன் மூல‌ம் குழுவின‌ராக‌ செல்ஃபி எடுப்ப‌து எளிதாகிவிடுகிற‌து. 2000 ர‌ஃபிக்க‌ள் நியூயார்க் ந‌க‌ரில் குழுமியிருந்த‌போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் செல்ஃபி மிக‌ப்பிர‌ப‌ல‌ம். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ செல்ஃபி குச்சியின் நீள‌ம் முப்ப‌து அடி !!!

செல்ஃபியின் மூல‌ம் பெரிய‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு கூட‌ க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து ! த‌ன‌து ந‌ண்ப‌னையே கொலை செய்து, அந்த‌ உட‌லுட‌னே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட‌ ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவ‌ன் அந்த‌ செல்ஃபி எடுக்காம‌ல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காம‌லேயே போயிருப்பான்.

இப்ப‌டி குற்ற‌ம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய‌ ப‌ல‌ரின் சுவார‌ஸ்ய‌க் க‌தைக‌ள் காவ‌ல்துறை அறிக்கைக‌ளில் இருக்கின்ற‌ன‌.

Week :4

 

kid

செல்ஃபி எடுப்ப‌து முன் கால‌த்தில் மிக‌ப்பெரிய‌ ச‌வாலான‌ விஷ‌ய‌மாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க் க‌லைக்கு முன்பு த‌ன்னைத் தானே ப‌ட‌ம் வ‌ரைந்து கொள்வதை வான்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ ஓவிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர். இவ‌ற்றை ஒருவ‌கையில் செல்ஃபி ஓவிய‌ம் என‌ வ‌கைப்ப‌டுத்த‌லாம்.

கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, கேம‌ராக்க‌ளின் அறிமுக‌ம் வ‌ந்த‌பின் அவை அவ்வ‌ப்போது ஆங்காங்கே நிக‌ழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. உட‌ன‌டி பிரிண்ட் போட்டுத் த‌ரும் போல‌ராய்ட் கேம‌ராக்க‌ள் வ‌ந்த‌பின் செல்ஃபிக‌ள் எடுப்ப‌து கொஞ்ச‌ம் எளிதாக‌ மாறிப் போன‌து.

இன்றைய‌ மொபைல் போன் கேம‌ராக்க‌ள் இந்த‌ செல்ஃபி எடுப்ப‌தை மிக‌வும் எளிதாக்கிய‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ச‌க‌ட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் த‌ள்ளுவ‌தையும் சாத்திய‌மாக்கியிருக்கிற‌து. அதுவும் செல்போனில் முன்ப‌க்க‌க் கேம‌ரா வ‌ந்த‌பின் செல்ஃபிக்க‌ள் சிற‌குக‌ட்டிப் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருக்கின்ற‌ன‌.

செல்ஃபிக்க‌ளின் அதிக‌ரிப்பு அதை அதிக‌மாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளிடையே அதீத‌ த‌ற்பெருமை, த‌ன்னைப் ப‌ற்றி மிக‌ உயர்வாய் நினைத்த‌ல், அடுத்த‌வ‌ர்க‌ளை விட‌ தான் உய‌ர்ந்த‌வ‌ன் எனும் நினைப்பு போன்ற‌வை அதிக‌ரிக்கும் என‌ ஆராய்ச்சியாள‌ர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிறார். இதை ஆங்கில‌த்தில் ந‌ர்ஸிசிச‌ம் (Narcissism) என்கின்ற‌ன‌ர்.

இதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் பெண்களிடம் அதிக‌மாய் இருந்தாலும் ஆண்கள் இதில் ச‌ற்றும் விதிவில‌க்க‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌த‌ற்காக‌ அவ‌ர் ஆண்க‌ளை ம‌ட்டுமே வைத்து இந்த ஆய்வை ந‌ட‌த்தினார் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

கையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்க‌ள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.

தாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.

இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.

சமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால் அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது !

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.

ஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.

ஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.

எதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.

ந‌ம்முடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளையும், ந‌ம்முடைய‌ வெற்றிக‌ளையும் நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ‘செல்ஃபியும் இருக்கிற‌து’ என்ப‌து ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌முட‌ன் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். அத‌ற்காக‌ செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ தீர்ப்பிடுவதோ, குறைத்து ம‌திப்பிடுவ‌தோ த‌வ‌றான‌து ! ந‌ம் கையில் இருக்கும் தொழில்நுட்ப‌த்தின் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சாவிக‌ளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு ச‌ரியான‌ பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக‌ இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை !

( Thanks Daily thanthi, Computer Jaalam )

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன.

பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது !

தந்தி, தந்தி என்றொரு சமாச்சாரம் இருந்தது ஞாபகம் இருக்கிறதா ? அதை இனிமேல் அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் தான் கேட்க முடியும். எந்த பிரச்சினையானாலும் “பிரதமருக்கு தந்தி கொடுப்பது” அவர்கள் மட்டும் தான். மற்ற எல்லோருமே மின்னஞ்சல், போன், எஸ்.எம்.எஸ், 3ஜி என எங்கேயே போய்விட்டார்கள்.

இப்படியே வழக்கொழிந்து போன விஷயங்கள், அல்லது புதுமையான வகையில் உருமாறிய விஷயங்கள் நிறையவே உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் நமது புத்தகங்களும் இணைந்து விடுமோ எனும் நிலை உருவாகி வருகிறது.

மென்புத்தகங்களின் வருகையும், அதை வாசிக்க வசதியாக வந்திருக்கின்ற ரீடர்கள், டேப்லெட்கள் போன்றவையும் அச்சுப் புத்தகங்களின் வளர்ச்சியை அசைக்கத் துவங்கியிருக்கின்றன. உலக அளவில் அச்சுப் புத்தகங்களின் விலை பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

ஒரு புத்தகத்தைச் சுமக்கும் எடையில் ஒரு புக் ரீடரை நீங்கள் தூக்கிச் சுமக்கலாம். சொல்லப் போனால் ஒரு நாவல் சுமார் 300 கிராம் எடை உண்டு. ஆனால் பொதுவான ரீடர்கள் 200 கிராம் எடையை விடக் குறைவு தான். அதில் சுமார் 1400 நாவல்களைச் சேமிக்கலாம். இப்படி மிக எளிமையான வாய்ப்பு வந்திருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை விட்டு விட்டு மென் பக்கமாய் தலை சாய்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

பயணத்தின் போதெல்லாம் ரீடர்கள் ரொம்பவே உதவியாக இருக்கும் என்பதைச் சொல்லவும் தேவையில்லை. இந்த ஆண்டைய முதல் காலாண்டு புள்ளி விவரம் என்ன சொல்கிறது தெரியுமா ? சுமார் 25% அச்சுப் புத்தகங்கள் விற்பனைச் சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நீல்சனின் அறிக்கைபடி கடந்த ஆண்டில் சுமார் 11% அச்சுப் புத்தக விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது !

“அச்சுப் புத்தகங்களின் வீழ்ச்சி கண்கூடு. 2020ல் அச்சுப் புத்தகங்கள் ரொம்பக் கொஞ்சமே இருக்கும். மென்புத்தகங்களே ஆட்சி புரியும்”  என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.பி.டெய்லர்.

இசை உலகை எடுத்துக் கொண்டால் இன்றைக்கு சிடிக்களின் விற்பனை ரொம்பக் கம்மி. அதுவும் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபாட் போன்றவை அறிமுகமானபின் வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு சரிவு ஏற்பட்டது. காரணம் மக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதை விரும்பியது தான்! ஐ-டியூன் போன்ற பணம் கொடுத்து இறக்குமதியாகும் தளங்களில் விற்பனை ஜோராக நடக்கிறது. இதே நிலை இனிமேல் புத்தகங்களுக்கும் வரும்.

எப்போது வேண்டுமானாலும் பிடித்தமான நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் எனும் நிலை வரும். இதனால் நூலுக்காக கடை கடையாய் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

புத்தம் புதிய நாவல்களும் மென்வடிவமாகவே தயாரானால் “ஹாரி பாட்டர்” கணக்கான ரசிகர்கள் கொட்டும் பனியில் புத்தகத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றுப்புறச் சூழலுக்கும் இது ரொம்ப நல்லது. மரங்கள் பிழைக்கும். பெரிய பெரிய அச்சு நிறுவனங்களெல்லாம் ஓய்வெடுக்கும் !

ஹாரிபாட்டர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ஹாரிபாட்டர் நாவல்கள் மென் வடிவம் பெற்றன. சில நாட்களிலேயே சுமார் 8 கோடி ரூபாய்களுக்கான நூல்கள் விற்றுத் தீர்ந்தன ! ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20,000 ரூபாய்க்கான விற்பனை ஹாரிபாட்டர் மூலம் நடந்து கொண்டிருக்கிறதாம் !

மென்புத்தகங்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விற்பனை எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருக்கிறது. புத்தக வாசனை வேண்டும், சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் உடையவர்கள் இன்னும் அச்சுப் புத்தகங்களையே நாடி வருகின்றனர்.

மென்புத்தகங்களின் வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே ! படிக்கும் பழக்கம் அதன் மூலம் அதிகரித்தால் இரட்டை மகிழ்ச்சி !

 

நன்றி : மவுஸ் பையன், தினத் தந்தி.

திரைப்படத்திலிருந்து காமிக்ஸ் !

காமிக்ஸ் புத்தகம் என்றாலே மலரும் நினைவுகள் உங்கள் மனதில் நிழலாடக் கூடும். ஜேம்ஸ்பாண்ட், இரும்புக்கை மாயாவி என்றெல்லாம் வசீகரித்த காமிக்ஸ் வரலாறு கொஞ்சம் தொய்ந்து போய் விட்டது. தொலைக்காட்சியின் தாக்கம் காமிக்ஸ் புத்தகங்களின் வீச்சைப் பாதித்து விட்டன என்பது பரவலான குற்றச் சாட்டு. ஆனாலும் “படக்கதைக்கு” ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அத்தகைய ரசிகர்களை இந்தச் செய்தி குஷிப்படுத்தும் என நம்புகிறேன். சீனாவிலுள்ள ஹெஃபி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மென்ங் வேங் தங்கள் குழுவினரின் புது மென்பொருள் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்த மென்பொருள் ஒரு திரைப்படத்தைக் கொடுத்தால் அப்படியே அதன் காமிக்ஸ் வெர்ஷனைத் தந்து விடுமாம். சினிமாவில் கதாபாத்திரங்கள் பேசும் வார்த்தைகளை அப்படியே ஒரு சின்ன கட்டத்துக்குள் அடக்கி, அச்சு அசலான காமிக்ஸ் பக்கங்களை இது உருவாக்குகிறது.

இந்த மென்பொருள் குறித்த விரிவான செய்தியை ‘ஐ.இ.இ.இ டிரான்ஷாக்ஸன் ஆன் மல்டிமீடியா’ எனும் இதழில் அவர் எழுதியிருக்கிறார். மூவி2காமிக்ஸ் (Movie2Comics) என இந்த மென்பொருளுக்கு அவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பே பல மென்பொருட்கள் படங்களை காமிக்ஸ் வடிவமாக்கும் முயற்சியில் இறங்கி கொஞ்சம் கொஞ்சம் வெற்றியும் பெற்றன. ஆனால் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் ஒரு படத்தை காமிக்ஸ் ஆக மாற்றுவது இதுவே முதன் முறை! 85 சதவீதம் சரியாக இந்த மென்பொருள் காமிக்ஸைத் தருகிறது. கொஞ்சம் டயலாக் பெட்டியை அங்கே இங்கே இழுத்து வைக்கும் டச் அப் வேலைகளைச் செய்தால் காமிக்ஸ் புக் ரெடி.

காமிக்ஸ் தயாரிப்பவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம். எந்த ஒரு ஹிட் படத்தையும் சில நிமிடங்களிலேயே படக் கதையாக உருமாற்றி விடலாம்.

சாதாரண மக்களுக்கும் இது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம் தான். தங்களுடைய கல்யாண வீடியோவையோ, சுற்றுலா வீடியோவையோ, அல்லது குழந்தைகளின் வீடியோக்களையோ காமிக்ஸ் புத்தகங்களாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே !.

சோதனை முயற்சியாக அவர்கள் செய்து காட்டிய டெமோவில் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களான “டைட்டானிக்” ஷெர்லக் ஹோம்ஸ், மற்றும் த மெசேஜ் எனும் மூன்று படங்களிலுள்ள சில காட்சிகளை எடுத்திருந்தார்கள். 2 முதல் 7 நிமிடங்கள் வரையிலான இந்தக் காட்சிகளை ‘படக் கதையாக’ மாற்றிக் காட்டினார்கள் !

இந்த காமிக்ஸ் வடிவத்தை பார்த்தவர்களெல்லாம் வெகுவாகப் பாராட்டினார்களாம். நல்ல விஷயம் தான், நாமும் பாராட்டுவோம்.

*

 Thanks :  தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம் (மவுஸ் பையன்)

ஜூ.வி : கற்பு வாங்கலையோ …கற்பு !

EFG103

“பதின்மூன்றே வயதான இளம் பெண்ணின் விர்ஜினிடி விற்பனைக்கு”. அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கே விற்கப்படும் ! ரஷ்ய இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் உஷாரானது மாஸ்கோவின் காவல்துறை. பகிரங்கமாக இந்த விளம்பரத்தைக் கொடுத்தது யார் என சைபர் குழு அதிரடி விசாரணையில் குதித்தது. விசாரணை முடிவோ காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டது. காரணம், அந்த விளம்பரத்தைக் கொடுத்தது வேறு யாருமல்ல, அந்தப் பெண்ணின் தாய் !

இதே போல பதினாறு வயதான ஒரு பெண்ணின் கற்பும் ரஷ்ய இணைய தளம் ஒன்றில் ஏலம் போட்டு விற்கப்பட்டது. அங்கும் குற்றவாளி பெண்ணின் சொந்த அம்மாவே தான் ! இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரஷ்யாவில் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றன.

இப்படி ஒரு படு பாதகச் செயலைச் செய்த தாய்க்கு கொஞ்சமேனும் குற்ற உணர்வு இருக்குமா என பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பதின் மூன்று வயது மகள் அலியோனாவின் தாய் ஸ்வெட்லானா சந்தோசமாகப் பேசுகிறாள். நான்கு இலட்சம் ரூபிள்களுக்கு என் மகள் விலை போயிருக்கிறாள். இத்தனை விலை கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை என வியக்கிறார்.

பதினாறு வயது மகள் போலினாவின் கற்பு இலட்சம் ரூபிள்களுக்கு விலைபோயிருக்கிறது ! அவளுடைய தாய் மரியா மகளை கையோடு அழைத்துக் கொண்டு “கஸ்டமரிடம்” ஒப்படைத்திருக்கிறாள் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல்.

எனக்கு நிறைய கடன் இருக்கிறது. கடன்களை அடைக்க இது தான் எளிய வழி. கற்பைப் பாதுகாத்து வைத்து என்ன ஆகப் போகிறது ? இதையெல்லாம் நான் எனக்காகச் செய்யவில்லை. என் மகளுக்காகத் தான் செய்திருக்கிறேன். கடன்களை அடைத்தது போக மிச்சமிருக்கும் பணம் முழுதும் அவளோட கல்யாணச் செலவுக்குத் தான் என்கிறார் மரியா சர்வ சாதாரணமாக. இப்போ எனக்கு இளமையும் இல்லை. வயசும் இல்லை. இல்லேன்னா என்னோட கற்பையே ஒரு நல்ல விலைக்கு விற்றிருப்பேன் என்கிறார் தடாலடியாக ! 

அம்மாக்கள் தான் இப்படி சகஜமாய்ப் பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களோ கண் கலங்குகின்றனர். “இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியவே தெரியாது. போட்டோ எடுக்கலாம்ன்னு சொல்லித் தான் அம்மா என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா கடைசில ஆள் வெச்சு பலாத்காரம் பண்ணிட்டாங்க. என்னோட அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை” என விசும்பும் பதின் மூன்று வயது சிறுமி பள்ளிக்கூடம் செல்கிறாள்.Alina Percea

“எனக்கு இந்த சமாச்சாரமே தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்” என கண் கலங்கும் பதினாறு வயதுப் பெண்ணும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள்.  

இணையத்தில் சமீப காலமாகவே இந்த “விர்ஜினிடி” விற்பனை வெகு ஜோராக நடந்து வருகிறது. படிக்கப் பணமில்லை, ஆடம்பரமாய் செலவழிக்க வசதியில்லை, அம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் வேண்டும் என ஏதேதோ காரணங்களுக்காக கற்பு விற்கப்படுகிறது. இவர்களை ஏலத்தில் எடுக்கவும் போட்டா போட்டி நிலவுகிறது. எக்கச்சக்கமான பணம் ஒவ்வோர் ஏலத்திலும் கைமாறுகிறது. பெரும்பாலும் வெளி நாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் தான் இவர்களை ஏலத்தில் எடுக்கின்றனர்.

வேலைக்கு சர்டிபிகேட் சுமந்து திரிவது போல இவர்கள் தங்கள் விர்ஜினிடியை நிரூபிக்கும் மருத்துவ சர்ட்டிபிகேட்டுடன் அலைகிறார்கள்.  சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து இவர்கள்  “ஒரு நாள் முதல்வி” யாகிறார்கள்.

ரொமானியாவின் எலீனா, இத்தாலியப் பெண் பிக்கோ, பெருகுவே நாட்டு மாடல் அழகி, மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவி கேரிஸ் என கற்பை விற்போரின்  பட்டியல் மிக நீளமானது.

அமெரிக்காவில் வசித்து வரும் பதினெட்டு வயது ரொமாலியப் பெண் எலீனா பெர்சியா. கம்ப்யூட்டர் படிக்க காசில்லை, விற்பதற்கு பாத்திர பண்டம் ஏதும் இல்லை என கற்பை ஏலமிட்டார். 8800 பவுண்ட்களுக்கு ஏலத்தில் எடுத்தவர் இத்தாலியிலிருந்த தொழில் அதிபர் ஒருவர். அவர் எலீனாவை வெனிஸ் நகரத்துக்கு “பஸ்ட் கிளாசில்” பறக்க வைத்து அங்குள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

“பிசினஸ் நல்லா முடிஞ்சுது !” என எந்தவித சங்கோஜமும் இன்றி கூறும் எலினாவுக்கு வருத்தம் இரண்டே இரண்டு.

ஒன்று, ஐம்பதாயிரம் பவுண்ட் க்கு ஏலம் போகும்ன்னு நினைச்சேன். ஆனா ஜஸ்ட் எட்டாயிரத்து எண்ணூறு தான் கிடச்சுது. இரண்டு, ஒரு யூத் ஹீரோவை எதிர்பார்த்தேன் வந்தவரோ 45 வயசு குள்ள மனுஷன் !

“ஹோவர்ட் ஸ்டர்ன் ஷோ” என்பது ஹேவர்ட் ஸ்டர்ன்  என்பவரால் நடத்தப்படும் அமெரிக்காவிலுள்ள ஒரு ரேடியோ டாக் ஷோ. இந்த டாக் ஷோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேசினாள் நடாலி டைலன் எனும் 22 வயதுப் பெண். அந்த உரையாடலின் போது தனது கற்பை ஏலமிடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து கேட்டவர்களை திடுக்கிடச் செய்தார்.

சொன்னது போலவே இணையத்தில் கடைவிரித்த அவரது கற்பு சடசடவென ஏலத்தில் போனது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தனது கற்பு விலையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட நடாலி இன்னும் ஏலத்தை முடித்துக் கொள்ளவில்லை. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விலை பேசியிருக்கிறார்களாம். இன்னும் தினம் தோறும் இவரைக் குறித்த செய்திகள் தினமும் ஹாட்டாக உலவுகின்றன. ஏலத் தொலை மில்லியன் கணக்கில் எகிற நடாலி அதிர்ந்து போயிருக்கிறாராம். வியப்பின் உச்சியில் இருந்து கொண்டு “பெண்ணின் கற்பு விலை மதிப்பானது ! அதை விற்பதே நியாயமானது” என தத்துவம் பேசுகிறார் நடாலி.

Natalie Dylanகற்பு விற்பனையை சட்டம் “பாலியல் தொழில்” எனும் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இந்த விற்பனையைத் தடை செய்ய சட்டத்தால் முடியாது. ஒரு விதத்தில் வீட்டிலுள்ள பொருட்களை ஏலம் இடுவதைப் போலத் தான் இதையும் கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும் என்கிறார் அமெரிக்க வழக்கறிஞர் மார்க் ரண்டாசா.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் ஏலம் நடந்தாலோ, ஏலமிடும் நபர் பதினெட்டு வயதைக் கடந்தவர் என்றாலோ சட்டம் சைலண்டாய் தான் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ ஏஜெண்ட் டேவிட் ஸ்டாரெட்ஸ்.

ஆனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டு வரும் பணத்துக்கு ஒழுங்காக வரி கட்டவேண்டுமாம் ! சில இடங்களில் வரி சுமார் 70 சதவீதமாம் !!!

இப்படி தங்கள் கற்பை தாங்களே விற்பது பரவலாக நடந்தாலும், அம்மாவே பெண்ணின் கற்பை விற்றிருப்பது இது தான் முதல் முறை.  அந்த அம்மாக்கள்  கஸ்டமர்களுக்கு இட்ட ஒரே கண்டிஷன் “பாதுகாப்பா” உறவு கொள்ளுங்கள் என்பது தானாம்

இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்த இரண்டு அம்மாக்களும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் செய்த குற்றத்துக்கான பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டாம்.

“வயசுப் பிள்ளையை வளக்கிறது மடியில நெருப்பைக் கட்டிட்டு அலையற மாதிரி” என பதட்டப்படும் தாய்மார்களைப் பார்த்து தான் நமக்குப் பழக்கம். அதனால் தான் பிள்ளைகளை அசிங்கப்படுத்தும் தாய்மார்களை நினைத்தாலே அதிர்கிறது மனசு !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன்னா இப்படித்தான் …

எல்லாரையும் போல இருக்கணும்னு ஏன் நினைக்கிறே ? நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாமே” இந்த வார்த்தையை குத்து மதிப்பா எத்தனை தடவை கேட்டிருப்போம். 

ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா எப்படி இருக்கும், சுவாரஸ்யமான இந்த படங்கள் சொல்லக் கூடும்.

நள்ளிரவு மின்னல்

One

ஐந்தில் வளையாதது…

 

Two

மி… த.. பர்ஸ்டு….

 

Six

தூக்கத்துல கொட்டாவி விடற வியாதி உண்டா..

Fine

வெள்ளைப் புறா ஒன்று.. 

Three

அதான்… அதே தான் !

Four

 

தமிழிஷில் வாக்களிக்க…

குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

 

genelia-20தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது.

போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம்.

இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப்.

குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள்.

அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை  வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் !

புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…

 smoke1நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.

அந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.

எனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

புகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப்  புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.

நிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது!

அலசல் : எனது புதிய நூல்

எண்ணிக்கைக் கணக்கில் இது எனது பதினோராவது புத்தகம் எனினும், இதுவே எனது முதல் கட்டுரைத் தொகுப்பு என்பதில் மனதில் சிறப்பிடம் பெறுகிறது.

வாய்ப்பு இருந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசித்தால் விமர்சனம் தாருங்கள்

அன்புடன்
சேவியர்

அருவி வெளியீடு
9444302967
பக்கங்கள் 128
விலை  : 70/-
  

 

சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூலுக்காக அளித்த பின்னுரை

சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மை பறவைகளாக்கி விடுகின்றன.

ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராய் வெற்றி கண்டிருக்கிறார். தற்கால தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் அவர்.

போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆழம் கண்டு எழுதியிருக்கிறார்.

ஒற்றை முத்தெடுக்க முக்கடலிலும் மூழ்க சம்மதம் கொண்ட சேவியரின் இந்நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு தான். ஆனால், அதனுள்ளே உண்மையின் சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.

இவை கற்பனையின் விளைச்சல்கள் அல்ல. கருத்துருக்கள். எதுகுறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும்.

அருவியின் பெருமை மிகு வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த விதை நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.

– சுந்தரபுத்தன்.

இந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

வேர்களைத் தேடி
 

‘உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா ? ‘ என்னும் வினாவோடு ஒருமுறை என்னை அணுகினார் நண்பர் ஒருவர். தாத்தாவின் தந்தை பெயரைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே அப்போது தான் எனக்கு உறைத்தது   . நன்றாகத் தெரியும் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் போதிய அறிவு நமக்கு இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.

நாம் பணிசெய்யும் துறை சார்ந்த விஷயங்களோ, நாம் வசிக்கும் இடம் சார்ந்த விஷயங்களோ, நாம் பயன்படுத்தும் பொருள் சார்ந்த விஷயங்களோ அல்லது நாம் கலந்து கொள்ளும் விழா சார்ந்த விஷயங்களோ எதை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தெரியாத வரலாற்று வேர்கள் அவற்றுக்குள் மறைந்து கிடக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்களின் சிலிர்ப்பு போல பல பொருட்களின் பூர்வீகம் சிலிர்க்க வைக்கிறது. எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் அணுகுகையில் இந்த சிலிர்ப்பு இன்னும் விரிவடைகிறது.

அந்த சிலிர்ப்பின் அனுபவத்தைக் கொண்டு அறிவின் வெளிச்சத்தை விரிவுபடுத்தும் கட்டுரைகளை இந்த நூலில் நீங்கள் காண முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உணடு.

தெரிந்த பொருட்கள் தெரியாத தகவல்கள் என்னும் கண்ணோட்டத்தில் அணுகி எழுதப்பட்ட கட்டுரைகளே இதில் பெரும்பாலானவை. தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான  களஞ்சியம் இதழில் தொடர்ந்து வெளியான கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல்.

கவிதை, கதை எனும் இலக்கிய வடிவங்களைத் தாண்டி கட்டுரைகள் எனும் வடிவத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நூல் இது என்பது நெஞ்சுக்கு சற்றே நெருக்கமாய் இடம் பிடித்துக் கொள்கிறது.

பாசாங்கில்லாத புன்னகையுடனும் தணியாத சமூக வேட்கையுடனும் பத்திரிகைத் துறையில் இயங்கி வரும் நண்பர் யாணன் அவர்கள் தமிழோசை களஞ்சியம் இதழுக்காக கணினி துறை சார்ந்த கட்டுரைகள் சில வேண்டும் என்று கேட்டார். அந்த கட்டுரைகளுக்குக் கிடைத்த வாசகர் கடிதங்களே தொடர்ந்து பல விஷயங்களைக் குறித்து வாரம் தோறும் எழுத வைத்தது. அதற்காக தமிழோசைக்கும், நண்பர் யாணன் அவர்களுக்கும் என்னுடைய முதல் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

உற்சாகமாய் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவியின் பரபரப்புடன் பதிப்பகத் துறையில் இயங்கி வரும் நண்பர் பூபதி அவர்களுக்கும், இந்த கட்டுரைகளை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் எனும் அவருடைய வேட்கைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய எழுத்துப் பயணத்தின் கூடவே நடந்து  தொடர் உற்சாகம் வழங்கி வரும் நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கும்,  தோழர் சுந்தரபுத்தன், எழுத்தாளர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

கட்டுரைகளின் நேர்த்திக்கான தகவல் சேமிப்புகளில் பெருமளவுக்கு உதவி செய்த எனது துணைவியார் ஸ்டெல்லா அவர்களுக்கும், நண்பர் பென்கிருபா , மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்…

har_sa.jpg
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த ஆங்கில நியூஸ் சானலை திருப்பினாலும் இந்திய இளைஞர்களின் கோபமான பேச்சுகளும், பேட்டிகளும், நேர்காணல்களும் என அல்லோலகல்லோலப் பட்டுப் போனது கிரிக்கெட் விவகாரம்.

ஸ்டீவ் பக்னர் இந்தியர்கள் விளையாடும் போது தவறான தீர்ப்புகளையே வழங்குகிறார், ஹர்பஜன் மீதான தடை நீடிக்கப் பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ் களிலும் இந்தியர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வேகத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

கிரிக்கெட், இந்தியர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை விட முக்கியமாகிப் போய் விட்டது என்பதையே கொடும்பாவி எரிப்புகளும், கோப ஆர்பாட்டங்களும் வெளிப்படுத்தின.

எங்கேயாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்களா தெரியவில்லை. தினத்தந்தி படித்தால் தான் அந்த விஷயம் தெரியும்.

நிறவெறிக்கு எதிராக கடுமையாகப் போராடும் இந்தியா இதை அனுமதிக்காது என ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தனர் எல்லா சானல்களிலும், யாரோ ஒருவர்.

இத்தனை ஆவேசப்படக் கூடிய அளவுக்கு இந்த நிகழ்வு விஸ்வரூபமெடுத்ததற்கு இந்தியா இரண்டாவது டெஸ்டில் தோற்று விட்டது என்பதே முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆஸ்திரேலியர்களின் சுப்பீரியாரிடி காம்ப்ளஸ், மற்றும் கிரிக்கெட்டில் காலம் ககலமாய் நிகழ்ந்து வரும் பிரிவினை பேதங்களும் யாரும் அறியாததல்ல.

என்னதான் இருந்தாலும், ஒரு விளையாட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் இவ்வளவு முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டியது தானா ?

நிறவெறிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதற்காக இத்தனை பிரயர்த்தனம் செய்ய நமக்கு உண்மையிலேயே அருகதை இருக்கிறதா ?

பல்லாயிரம் மக்களை மதரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் கொன்று குவித்த நிகழ்வுகள் நம் கண்முன்னே நிகழ்ந்த போதோ, அதற்குக் காரணமானவர்களை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியபோதோ ஊடகங்கள் இத்தனை ஆவேசப்பட்டனவா ?

பழங்குடியினருக்கு எதிராகவோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடக்கும் வர்க்கபேத போராட்டங்களை முழுக்க முழுக்க ஓர் சமூக அக்கறையுடன் ஊடகங்கள் முழங்கியிருக்கின்றனவா ?

இன்றும் கூட நிகழும் ஆலய எரிப்புப் போராட்டங்களையும், அதை நியாயப்படுத்தும் அறிக்கைகளையும் இந்த ஊடகங்கள் நடுநிலையோடு விமர்சிக்கின்றனவா ? அல்லது அலசுகின்றனவா ?

ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்கோ, ஷில்பா ஷெட்டிக்கோ அல்லது ஐஸ்வர்யா ராயின் குடும்பத்துக்கோ மட்டுமே முக்கியத்துவம் தருவது தான் ஊடகங்களின் பணியா ?

கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்ததால் பெரிது படுத்தப்படும் இந்த சம்பவம் வேறு விளையாட்டுகளில் நிகழ்ந்திருந்தால் ஒரு சிறு பெட்டிச் செய்தியோடு தானே முடிந்து போயிருக்கும்.

வர்த்தகத்தைத் தாண்டி எதையும் சிந்திக்காத ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறும் என்று சொல்ல முடியாது.

போராட்டங்களின் மூலமாக இந்தியா புனிதமான கைகளைக் கொண்டிருக்கிறது என்று உலகிற்குச் சொல்வதாக ஊடகங்கள் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இப்படிச் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா?. ஊடகங்கள் மேல் நோக்கியே பார்க்காமல் சற்று கீழ்நோக்கியும் பார்த்தல் நலம்.

கடைசியில் கிரிக்கெட் விளையாட்டிலும் பணம் தான் விளையாடப் போகிறது. இந்தியா விளையாடாது என்று அறிவித்தால் அந்த நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

எனவே இந்தியா விளையாடும், ஐசிசியோ, பிசிசியோ எதுவாய் இருந்தாலும் கடைசியில் எடுக்கும் முடிவு விளையாட்டைத் தொடர்வதாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் விளையாட்டின் மீது நீங்களோ நானோ கொண்டிருக்கும் ஆர்வமல்ல.

பணம் ! வியாபாரம். அவ்வளவே !!!