ஊனம் தடையல்ல

 மோசமான குணாதிசயம் தவிர ஊனம் வேறு இல்லை 
 – ஸ்காட் ஹேமில்டன். 

ஏதேனும் சின்னக் குறைபாடு இருந்தால் கூட அதைச் சுட்டிக் காட்டி தனது தோல்வியையோ, சோம்பேறித்தனத்தையோ நியாயப்படுத்தும் மக்கள் நம்மைச் சுற்றி ஏராளம் ஏராளம். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடல் ஊனம் ஒரு பொருட்டே அல்ல !

பேராசிரியர் ஸ்டீபன் ஹாப்கின்ஸ் பற்றித் தெரியவில்லையென்றால் உங்களுக்கு அறிவியல் அலர்ஜி அன்று அர்த்தம். சமகால அறிவியலார்களில் வியப்பின் குறியீடாக இருப்பவர் இவர். இவருடைய “எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகம். உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை இதை “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனும் பெயரில் அற்புதமாய் தமிழ்ப் படுத்தியும் இருக்கிறது.

இதைத் தவிரவும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். பிரபஞ்சத்தைப் பற்றியும், உலகத்தின் தோன்றல் போன்றவை பற்றியும் இவர் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. இதில் வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால் இவருக்கு இருக்கும் நோய் தான்.

1942ம் ஆண்டு இவர் பிறந்தார். அவருடைய 21வது வயதில் இவருக்கு ஒரு மிகப்பெரிய நரம்பு சார் நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவருடைய நோய் அமியோட்ரோபிக் லேட்டரல் செலரோஸிஸ் (amyotrophic lateral sclerosis ) அதாவது உடல் மொத்தமும் செயலிழந்து போகும் நிலை.

இவரால் மூன்று சக்கர வாகனத்தை விட்டு எழும்ப முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. தலையை அசைக்கலாம். பேசுவதற்குக் கூட மைக் தேவைப்படும் ! தனது 21ம் வயதிலேயே இந்தக்  கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டார் இவர். “இன்னும் ரெண்டே வருஷம் தான்” என்று அவருக்கு டாக்டர்கள் கெடு விதித்தார்கள்.

இன்று அவருக்கு 70 வயது ! மரணத்தை வென்றது மட்டுமல்லாமல் அறிவியலையும் அறிந்து உலகையே வியக்க வைத்தார் இவர். 2009ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருதான “பிரசிடன்ஷியல் மெடல் ஆஃப் பிரீடம்” வழங்கப்பட்டது ! தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகட்த்தின் ஒரு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குனராக இருக்கிறார்.

அறிவியல் உலகை இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கும் மாமேதையான ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்க்கு அவருடைய குறைபாடு எப்போதாவது தடைக்கல்லாய் இருந்திருக்குமா ?

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ, கோபம் கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை நன்றாகவே வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் துவங்கினால் வாழ நேரம் கிடைக்காது” எனும் அவருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ள தன்னம்பிக்கை வாசகங்கள் உயிரை உலுக்குகின்றன.

ஊனம் உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை. அவர்கள் இன்னொரு ஏரியாவில் மிகவும் பலமானவர்களாக இருப்பார்கள். உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பதில்லை. சோதனைகளைத் தரும் இறைவன் அதைத் தாங்கும் மன உறுதியையும் சேர்த்தே தருகிறார். அதை நம்பிக்கையோடு பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே நமது பணி.

நிக் வாயிச்சஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? 1982ம் ஆண்டு அவர் பிறந்தார். துயரம் என்னவென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கிடையாது, இரண்டு கால்களும் கிடையாது. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும்.

ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் “லைஃப் வித்தவுட் லிம்ப்” எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?

தனக்கு ஊனம் இருக்கிறது என நினைப்பது மட்டுமே ஊனம். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்.