பாகிஸ்தானின் பாதுகாப்பு வேடம் கலைந்தது

sl

தீவிரவாதிகளின் தாயகமான பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சர்வதேச அளவில் மாபெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

நெஞ்சிலும், கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில் இலங்கை வீரர்கள் இரத்தம் சொட்டச் சொட்ட திகிலுடன் இருந்ததாகத் தெரிவிக்கும் செய்திகள் விளையாட்டு ரசிகர்களை மட்டுமன்றி உலக நலவாழ்வை மதிக்கும் அனைவரையுமே திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதவில்லை என இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் சொல்லி வந்ததையெல்லாம் சகட்டு மேனிக்கு மறுத்து வந்த பாகிஸ்தான் இந்த தாக்குதலில் நிலைகுலைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அயல் நாடுகளைத் தாக்க தனது வீட்டில் வரைபடம் வரைய தீவிரவாதிகளுக்கு வாய்ப்பளித்த பாகிஸ்தான் இப்போது தான் வேட்டியில் விட்ட ஓணானினால் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறது

ஒரு அயல் நாட்டு கிரிக்கெட் குழுவுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் பரிதாபத்தின் சின்னமாகவே காட்சியளிக்கிறது. பாகிஸ்தானின் விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை அணியுடன் கேட்டிருக்கும் மன்னிப்பே அதற்கான ஒரு சாட்சி.

உலக கிரிக்கெட் குழுக்கள் (பிசிசிஐ) உட்பட தெரிவிக்கும் அதிர்ச்சியும் இரங்கலும் நிலைமையைச் சரிசெய்து விட முடியாது எனினும், பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான உலக நாடுகளின் அணுகுமுறையை இன்னும் தீவிரப்படுத்தும் என நம்பலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்டன் ஒரு சனிக்கிழமை.

கடந்த சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரா.ரா அணிக்குமிடையே நடந்த போட்டியை சென்னையில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாழ்நாளிலேயே மைதானத்துக்குச் சென்று இதுவரை ஒரு விளையாட்டையும் பார்த்ததில்லை என்பது ஒரு காரணம் என்றால், சுமார் அறுபது நண்பர்கள் ஒன்றாகச் சென்றது தான் சுவாரஸ்யமாய் செல்ல வைத்த முதன்மைக் காரணம்.

கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத வெறி ஏதும் இல்லை என்பதால் வெற்றியோ தோல்வியோ எதுவும் என்னைப் பாதிக்கவில்லை.

ஆனால் மைதானத்தில் அமர்ந்திருந்த அந்த மூன்று – நான்கு மணி நேரமும் ஒரு நடன அரங்கத்துக்குள் இருந்தது போல அற்புதமான அனுபவமாய் இருந்தது.

கிரிக்கெட் போட்டிகளைக் காலங் காலமாய் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட இது போல ஒரு அனுபவத்தை இதுவரை கண்டதில்லை எனுமளவுக்கு ஐ.பி.எல் இருந்தது.

ரசிக்க வைத்தது பாடல்களும், இசையும் தான்.

ஷேன் வார்னேயும், மார்கெல்லும், நிட்டினியும் ஓடிக்கொண்டிருந்த அரங்கத்தில் “பொதுவாக எம் மனசு தங்கம், எங்கிட்ட மோதாதே, மை நேம் ஈஸ் பில்லா” என்றெல்லாம் தமிழ் பாடல்கள் பட்டையைக் கிளப்பியது பரம சந்தோஷம்.

பார்த்திவ் பட்டேல் பவுண்டரி விரட்டியபோது “பார்க்கத் தான் சின்னப் பையன் நானப்பா..” என்பது போன்ற டைமிங் பாடல்கள் வேறு.

நடனமும், இசையும், கூச்சலும், நண்பர்களின் கலாட்டாவும் நிறைந்த ஒரு மாலைப் பொழுதை வெகுநாட்களுக்குப் பின் சந்தித்த திருப்தி திரும்பி வரும்போது நிறைந்திருந்தது.

கிரிக்கெட் நல்லதோ, கெட்டதோ. ஐ.பி.எல் தேவையோ, தேவையில்லையோ. அவ்வப்போது நண்பர் புடைசூழ கவலைகளை வெளியே கொட்டி விட்டு கொட்டமடிப்பது தேவையாய் படுகிறது மனதுக்கு.

 

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்…

har_sa.jpg
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த ஆங்கில நியூஸ் சானலை திருப்பினாலும் இந்திய இளைஞர்களின் கோபமான பேச்சுகளும், பேட்டிகளும், நேர்காணல்களும் என அல்லோலகல்லோலப் பட்டுப் போனது கிரிக்கெட் விவகாரம்.

ஸ்டீவ் பக்னர் இந்தியர்கள் விளையாடும் போது தவறான தீர்ப்புகளையே வழங்குகிறார், ஹர்பஜன் மீதான தடை நீடிக்கப் பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ் களிலும் இந்தியர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வேகத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

கிரிக்கெட், இந்தியர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை விட முக்கியமாகிப் போய் விட்டது என்பதையே கொடும்பாவி எரிப்புகளும், கோப ஆர்பாட்டங்களும் வெளிப்படுத்தின.

எங்கேயாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்களா தெரியவில்லை. தினத்தந்தி படித்தால் தான் அந்த விஷயம் தெரியும்.

நிறவெறிக்கு எதிராக கடுமையாகப் போராடும் இந்தியா இதை அனுமதிக்காது என ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தனர் எல்லா சானல்களிலும், யாரோ ஒருவர்.

இத்தனை ஆவேசப்படக் கூடிய அளவுக்கு இந்த நிகழ்வு விஸ்வரூபமெடுத்ததற்கு இந்தியா இரண்டாவது டெஸ்டில் தோற்று விட்டது என்பதே முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆஸ்திரேலியர்களின் சுப்பீரியாரிடி காம்ப்ளஸ், மற்றும் கிரிக்கெட்டில் காலம் ககலமாய் நிகழ்ந்து வரும் பிரிவினை பேதங்களும் யாரும் அறியாததல்ல.

என்னதான் இருந்தாலும், ஒரு விளையாட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் இவ்வளவு முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டியது தானா ?

நிறவெறிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதற்காக இத்தனை பிரயர்த்தனம் செய்ய நமக்கு உண்மையிலேயே அருகதை இருக்கிறதா ?

பல்லாயிரம் மக்களை மதரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் கொன்று குவித்த நிகழ்வுகள் நம் கண்முன்னே நிகழ்ந்த போதோ, அதற்குக் காரணமானவர்களை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியபோதோ ஊடகங்கள் இத்தனை ஆவேசப்பட்டனவா ?

பழங்குடியினருக்கு எதிராகவோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடக்கும் வர்க்கபேத போராட்டங்களை முழுக்க முழுக்க ஓர் சமூக அக்கறையுடன் ஊடகங்கள் முழங்கியிருக்கின்றனவா ?

இன்றும் கூட நிகழும் ஆலய எரிப்புப் போராட்டங்களையும், அதை நியாயப்படுத்தும் அறிக்கைகளையும் இந்த ஊடகங்கள் நடுநிலையோடு விமர்சிக்கின்றனவா ? அல்லது அலசுகின்றனவா ?

ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்கோ, ஷில்பா ஷெட்டிக்கோ அல்லது ஐஸ்வர்யா ராயின் குடும்பத்துக்கோ மட்டுமே முக்கியத்துவம் தருவது தான் ஊடகங்களின் பணியா ?

கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்ததால் பெரிது படுத்தப்படும் இந்த சம்பவம் வேறு விளையாட்டுகளில் நிகழ்ந்திருந்தால் ஒரு சிறு பெட்டிச் செய்தியோடு தானே முடிந்து போயிருக்கும்.

வர்த்தகத்தைத் தாண்டி எதையும் சிந்திக்காத ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறும் என்று சொல்ல முடியாது.

போராட்டங்களின் மூலமாக இந்தியா புனிதமான கைகளைக் கொண்டிருக்கிறது என்று உலகிற்குச் சொல்வதாக ஊடகங்கள் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இப்படிச் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா?. ஊடகங்கள் மேல் நோக்கியே பார்க்காமல் சற்று கீழ்நோக்கியும் பார்த்தல் நலம்.

கடைசியில் கிரிக்கெட் விளையாட்டிலும் பணம் தான் விளையாடப் போகிறது. இந்தியா விளையாடாது என்று அறிவித்தால் அந்த நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

எனவே இந்தியா விளையாடும், ஐசிசியோ, பிசிசியோ எதுவாய் இருந்தாலும் கடைசியில் எடுக்கும் முடிவு விளையாட்டைத் தொடர்வதாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் விளையாட்டின் மீது நீங்களோ நானோ கொண்டிருக்கும் ஆர்வமல்ல.

பணம் ! வியாபாரம். அவ்வளவே !!!