கிறிஸ்தவம் : தரமான வாழ்வே, வரமான வாழ்வு

 

qw

வெண்டக்காயை உடைச்சுப் பாத்து வாங்கு, முருங்கக் காயை முறுக்கிப் பாத்து வாங்கு என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சந்தையில் பொருட்கள் வாங்கும் போது இதையெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. வாங்கும் காய்கறி தரமான காய்கறியாய் இருக்க வேண்டும் எனும் ஆர்வம் தான் அதன் காரணம். எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் கழுகுக் கவனம் நம்மிடம் இருக்கும். புழு விழுந்த கத்தரிக்கா ஒரு மூட்டை வாங்குவதை விட நல்ல கத்தரிக்கா கால் கிலோ வாங்கணும் என்பது தானே நமது அக்மார்க் திட்டம்.

இன்னும் ஒரு படி மேலே போய் புடவைக் கடையில் போய் பார்த்தால் தெரியும், நூலை இழுத்துப் பார்த்து, ஓரத்தைக் கசக்கிப் பார்த்து, ‘ஏங்க இது ஒரிஜினல் தானா’ என நாலு தடவை கடைக்காரரை இம்சைப்படுத்தி, மலை போன்ற புடவைக் குவியல்களிடையே ஒன்றை எடுக்க பெண்கள் நடத்தும் தேடல். நொந்து நூடூல்ஸாகிப் போகும் கணவர்களுக்கென்றே கடைகளின் ஓரமாய் ஒரு சோபா போட்டிருப்பார்கள். அந்த சோபாக்களில் அமர்ந்து கணவர்கள் விடும் குறட்டைக்குக் காரணம், பெண்களின் தரமான புடவைத் தேடல் தான்.

இதே சிந்தனை தான் எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் இருக்கும். தங்கமோ, நிலமோ, உடையோ எதுவானாலும், தரமானதையே தேடுவோம். இதே சிந்தனை தான் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அதையே இயேசு விரும்புகிறார். தரமான கிறிஸ்தவ வாழ்க்கை, நம்முடைய தினசரி வாழ்க்கையில் வெளிப்படவேண்டும்.

இயேசு தன்னோட காலத்தில் ஆயிரக்கணக்கான ஆட்கள் தன் பின்னால் வரணும் என்று நினைக்கவில்லை. போற இடமெல்லாம் போஸ்டர் ஒட்டவேண்டும் என்றோ, கட் அவுட் வைத்து கௌரவிக்க வேண்டுமென்றோ அவர் ஆசைப்படவில்லை. ஒரு சின்ன குழு. அதை ரொம்ப நல்ல குழுவாக உருவாக்க வேண்டும், என்பது தான் அவருடைய சிந்தனை. அதனால் தான் வெறும் பன்னிரண்டு பேருடன் அவருடைய பணியின் அஸ்திவாரத்தை உருவாக்கினார். அவர்களுக்கு பணிவைப் போதித்தார், துணிவைப் போதித்தார், விசுவாசத்தைப் போதித்தார். இன்றைக்கு கிறிஸ்தவம் இத்தனை பெரிய அளவில் விரிவடைந்திருக்கக் காரணம் அந்த சின்னக் குழு தான். அவர்களுக்குள் இருந்து செயலாற்றிய தூய ஆவியானவரும், விசுவாசமும் தான்.

இன்றைக்கு நாடுகள் கடந்து, தேசங்களின் எல்லைகள் தாண்டி பயணம் செய்கிறோம். இயேசுவின் பயண எல்லை வெறும் 200 மைல் சுற்றளவு தான் என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். எவ்வளவு தூரம் பயணம் செய்தேன், எத்தனை இலட்சம் மக்களை சந்தித்தேன் எனும் புள்ளி விவரங்களை இயேசு விரும்பவில்லை. பயணத்திலும் அர்த்தமான பயணத்தையே விரும்பினார். கிலோ மீட்டர்களால் தன்னுடைய பயணத்தை அவர் குறித்து வைக்கவில்லை.

இயேசுவின் போதனைகள் கூட ‘அளவு’ எனும் புற எல்லையைத் தாண்டி, புனிதம் எனும் அக எல்லையையே குறி வைத்தது. அதில் தான் இறை வாழ்வின் உயர்ந்த தரம் அடங்கியிருக்கிறது. இயேசுவின் போதனைகள் சட்டங்களாக இல்லாமல் போனதன் காரணம் அது தான். சட்டங்கள் இருந்தால் வேற வழியில்லாமல் அதைக் கடை பிடிப்பவர்களாகத் தான் மக்கள் இருப்பார்கள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்றொரு சட்டம் இருப்பதால் பிறருடைய பொருட்களை விட்டு வைக்கிறோம். ஆனால் பிறர் மீதான அன்பினால் நாம் அப்படி இருப்பதே உயரிய வாழ்க்கை ! அதனால் தான் இயேசு சொன்னார், “பாத்திரத்தின் வெளிப்பக்கத்தை சுத்தம் செய்வதல்ல, உள் பக்கத்தை சுத்தம் செய்வதே அவசியம்” என்று.

நல்ல இதயம் என்பது தரமான வாழ்க்கையின் அடிப்படை. தூய்மையான மனம், தூய்மையான சிந்தனை, இவை இருந்தால் நமது செயல்களும் நல்ல செயல்களாகத் தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். அகத்தின் அழகு மட்டுமல்ல, அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியும். என்னதான் தங்கத்தால வேலி கட்டி, சர்க்கரைத் தண்ணி ஊத்தி வளத்தினாலும் மாமரத்தில் மாதுளம் பழம் காய்க்கப் போவதில்லை. உள்ளே உள்ள தன்மை தான் செயலில் வெளிப்படும். எனவே தான் மனம் சார்ந்த போதனைகளை இயேசு முதன்மைப் படுத்தினார்..

ஆலயத்தில் இரண்டு காசு போட்ட விதவையை இயேசு பாராட்டியதன் காரணம் அது தானே ! அள்ளி அள்ளிக் கொடுப்பதல்ல முக்கியம். ஆனந்தத்தோடு கொடுப்பதே முக்கியம். பத்தில் ஒரு பங்கு கொடு – என்பது சட்டம். அதற்காக பத்தில் ஒரு பங்கு கொடுப்பவர்களெல்லாம் ஆனந்தத்தோடு கொடுப்பார்கள் என்று சொல்லமுடியுமா ? எவ்வளவு கொடுக்கிறியோ அதை மகிழ்ச்சியோடு கொடு. என்பது தான் இயேசுவின் போதனை. இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல முக்கியம், எப்படிப்பட்ட மனநிலையில குடுக்கிறோம் என்பது தான் முக்கியம், என்கிறார் இயேசு.

ஒருவன் கொலை செய்யாமலோ, பாலியல் தவறு செய்யாமலோ, களவு செய்யாமலோ இருப்பதற்குக் “காரணம்” என்ன என்பதையே இயேசு நோக்கினார். நீ வெறும் சட்டத்துக்காக இதையெல்லாம் செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் கடவுளின் மீதான அன்பினால் இதையெல்லாம் செய்தால் உனக்கு நிச்சயம் பலன் உண்டு. காரணம் அது தான் உன்னுடைய உண்மையான மனதை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் இயேசுவின் போதனை பத்து கட்டளைகளாக வரவில்லை. அன்பின் இரண்டு கிளைகளாக வந்தது. இறைவனை நேசி, மனிதனை நேசி ! அவ்வளவு தான்.

கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே என்றெல்லாம் இயேசு போதிக்கவில்லை. அதன் அடுத்த நிலைக்குச் சென்றார். கொலை அல்ல, கொலைக்குக் காரணமான கோபம் கூட உன்னிடம் இருக்க வேண்டாம் என்றார். விபச்சாரம் செய்யாமல் இருப்பதல்ல, அடுத்த பெண்ணை இச்சையுடன் நோக்குவதையே நிறுத்து என்றார். களவு செய்யாமல் இருப்பதல்ல, அடுத்தவனை உன்னைப் போல நினை என்றார். இயேசு வேர்களை விசாரித்தார். தூய்மையின் அடுத்தடுத்த நிலைகள் என்பது நமக்கு உள்ளே இறங்குவது. புனிதப் பயணம் என்பது நாம் செல்வதல்ல, நமக்குள் செல்வது.

நோன்பு இருக்கணுமா, இரு. ஆனால் வேறு யாருக்கும் சொல்லாதே. செபம் செய், ரொம்ப நல்லது. ஆனால் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு செபம் செய். ஓவரா பிதற்றத் தேவையில்லை, ரொம்ப நேரம் பேசத் தேவையில்லை. சுருக்கமா சொன்னாலே போதும். அது நல்ல ஆத்மார்த்தமான பிரார்த்தனையாய் இருக்கணும். அவ்வளவு தான். இயேசுவின் போதனைகள் உண்மையானவை. தரத்தின் உச்சத்தைத் தொட்ட எளிமையான போதனைகள்.

மோசேயின் சட்டங்களை பல இடங்களில் இயேசு மீறி புதிய வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கியதன் காரணம் மக்களின் வாழ்க்கையை தரமானதாக மாற்றுவதற்குத் தான். மணமுறிவு என்பதை சகட்டு மேனிக்கு நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் இயேசு என்ன சொன்னார் ? ஆதியில் கடவுள் ஆணும் பெண்ணுமாகத் தான் படைத்தார். எனவே மண முறிவு என்பதை பாலியல் குற்றம் எனும் ஒரு காரணம் தவிர வேறு எதற்காகவும் பண்ண வேண்டாம் என்றார். ‘உங்கள் கடின உள்ளத்தின் காரணமாகத் தான்’ மோசே அப்படி ஒரு போதனையைத் தந்தார் என்று சொல்வதன் மூலம் இயேசுவின் சிந்தனை நமக்கு பளிச் என தெரிகிறது இல்லையா ?

விபச்சாரப் பாவத்தில் பிடிபட்ட பெண்ணையும் மோசேயின் கட்டளையைக் காட்டி கற்களோடு விரட்டியது கும்பல். இயேசு சட்டங்களைப் பேசவில்லை. ஆதாரங்களைக் கேட்கவில்லை. சமூகத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அடியோடு அகற்றுவேன் என புரட்சி செய்யவில்லை. கூட்டத்தினரின் உள் மனதோடு பேசச் சொன்னார். ‘உங்களில் பாவம் செய்யாதவன்’ முதல் கல்லை எறியட்டும் என்றார்.

இப்படி இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே, தரமான வாழ்க்கைக்கான தேடலாகத் தான் இருந்தது. போதனைகள் அர்த்தமுள்ளவையாக மட்டுமே இருந்தது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் நிச்சயம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இது. தரமான வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியது ! போலித்தனமான வாழ்க்கையை விட்டு விலக வேண்டியது. ஆத்மார்த்தமான ஒரு அன்னியோன்யத்தை இயேசுவோடு உருவாக்கிக் கொள்ள வேண்டியது.

அதற்கு செய்ய வேண்டிய முதல் காரியம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் சிந்தனைகளை விலக்க வேண்டியது. ரொம்ப நேரம் செபம் செய்யாட்டா மக்கள் என்ன நினைப்பாங்க ? நோன்பு இருக்கேன்னு சொல்லாட்டா என்ன நினைப்பாங்க ? ஏழைகளுக்கு தர்மம் பண்ணாம போன நம்ம இமேஜ் போயிடுமோ ? கோயிலுக்கு பணம் கொடுக்காட்டா நம்ம பேரு போயிடுமோ ? இப்படிப்பட்ட பிறர் சார்ந்த சிந்தனைகளை ஒதுக்க வேண்டியது வெகு அவசியம்.

ஆன்மீகம் நமக்கும் இயேசுவுக்குமான அன்பைச் சொல்லும் பாதை. அதில் இயேசு என்ன சொல்கிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்பதே முக்கியம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல. அப்படித் தான் ஏரோது பயந்தான். விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டினான். பிலாத்து, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேப்பா என கைகளைக் கழுவினான்.

அந்த பயம் இல்லாதவர்கள் இயேசுவை வாழ்ந்து காட்டினார்கள். அதிகாரிகளின் முன்னால் “உயிர்த்த இயேசுவுக்கு நாங்கள் சாட்சிகள்” என்றனர். சிலுவையில் என்னை தலைகீழாய் அறையுங்கள் பிளீஸ் என கேட்டு வாங்கி மரணத்தைப் பெற்றனர். அவையெல்லாம் தரமான விசுவாசத்தின் சான்றுகளாய் இருந்தன.

நாமும் நமது வாழ்க்கையை ஒரு அவசரப் பரிசீலனைக்கு உட்படுத்துவோம். நமது செயல்களெல்லாம் ஒவ்வொரு நாளும் ஆழ்மன அன்பின் வெளிப்பாடாக இருக்கட்டும் என நினைப்போம். உள்ளத்தில் உள்ளதையே வாய் பேசும், எனவே உள்ளத்தை தூர் வாருவோம்.

தரமான வாழ்க்கையே வரமான வாழ்க்கை என்பதை உணர்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்

சேவியர்

எநன்றி :

கிறிஸ்தவம் : திரித்துவமும், மருத்துவமும்.

angel

விவிலியப் பாடசாலையில் பயிலும் ஐந்துவயதான மகள் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.

‘அப்பா…. தேவதைகள் தூங்குமா ?’.

‘தூங்கும் என்று தான் நினைக்கிறேன்’ தந்தை சொன்னார்.

‘அப்படியானால் அவர்கள் எப்படி இரவு உடை அணிந்து கொள்வார்கள் ? சிறகுகள் தடுக்காதா ?’ மகள் கேட்டாள். தந்தை சிரித்துக் கொண்டார்..

பைபிளை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் இப்படித்தான் இருக்கின்றன. விவிலியத்தின் மையக்கருத்தாக நிலைவாழ்வு என்பதும், மீட்பு என்பதும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க பலர் தங்கள் அறியாமையினால் வறட்டுக் கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறார்கள். கிறிஸ்தவத்துக்கு வெளியே இருக்கும் மக்கள் மட்டும் தான் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்றில்லை. வெளியே ஒலிக்கும் இத்தகையக் கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவர்களிடமும் வரவேற்பைப் பெற ஆரம்பித்து விடுகிறது. ‘ஆமா, அந்த கேள்வியிலும் ஒரு லாஜிக் இருக்கு இல்லையா” என பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய கேள்விக்கான விடையைத் தேடி விவிலியத்தைப் புரட்டினால் பதில்களைத் தூய ஆவியானவர் அவர்களுக்குக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் பலரும் அப்படிச் செய்வதில்லை. நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பைபிளைப் படிப்பதை விட அதிக நேரம் பைபிள் குறித்த நூல்களைப் படிக்கச் செலவிடுவோம். அது ஒரு விளக்க உரையாய் இருக்கலாம், அல்லது ஒரு விவிலிய ஆராய்ச்சியாய் இருக்கலாம், அல்லது புதிய ஒரு கோட்பாடோ, கொள்கையோ எதுவாகவும் இருக்கலாம்.

வார்த்தை தேவனாயிருந்தது. அந்த தேவனை நாம் தினமும் தரிசிக்க முடிகிறது. நமது வாழ்க்கையின் வழிகாட்டியாக வேதாகமம் நமக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வோர் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகள் பைபிளில் இருக்கின்றன.

காலம் காலமாக நம்மிடையே நாம் எழுப்பும் கேள்விகளில் முக்கியமானதாக மருத்துவம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மருந்து உட்கொள்ளலாமா ? இல்லை நம்பிக்கை மட்டுமே நம்மை நலமாக்குமா ? இந்தக் கேள்விக்கு உண்மையான பதில், குணமளித்தல் இறைவனிடமிருந்து வருகிறது என்பதே. அந்த இறைவன் மருந்தை நிராகரித்தாரா, வரவேற்றாரா என்பதை வைத்து நம்முடைய வழியை சரிபார்த்துக் கொள்ள முடியும். மருந்தை உட்கொண்டாலும் குணமளிப்பவர் கடவுளெனில் ஏன் மருந்து உட்கொள்ள வேண்டும் ? காரணம், அதுவே இறைவன் நமக்காக வகுத்த வாழ்க்கை முறை – என்பது தான்.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” என்கிறார் இயேசு. பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை என்பதை இயேசு தனது போதனையின் மூலம் மிகத் தெளிவாகவே அறிவுறுத்துகிறார். பார்வையற்றவனின் கண்களில் சேற்றைப் பூசுவது கூட மருத்துவத்தின் அங்கீகாரம் என்றே விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விவிலிய ஆசிரியர் லூக்கா ஒரு மருத்துவராக இருந்திருக்கலாம் எனும் நம்பிக்கை பல ஆய்வாளர்களுக்கு உண்டு. காரணம் அவருடைய எழுத்துகளில் தெரியும் விவிலிய வாசனை. பிளாக் எம் சி எனும் விவிலிய ஆய்வாளர் அந்தக் கூற்றை மறுக்கிறார். மறுப்பதற்கு அவர் சொல்லும் காரணம் சுவாரஸ்யமானது. “அந்தக் காலத்தில் இருந்த சாதாரண நபர்களுக்கே லூக்கா வுக்கு இருந்த அளவுக்கு மருத்துவ அறிவு உண்டு” என்பது தான். அத்தகைய மருத்துவ அறிவோடு வாழ்ந்த இயேசுவின் சீடர்கள் இயேசுவின் போதனைகளை மாற்றியிருக்க வாய்ப்பே இல்லை. மருத்துவம் தேவையில்லை என்பது இயேசுவின் போதனையாய் இருந்திருந்தால் தூய ஆவியானவர் வேதாகமத்தில் அதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

மோசேக்கு இருந்த மருத்துவ அறிவுக்கும், வழிகாட்டலுக்கும் இன்றைய பிரபல மருத்துவர்களே வியப்பு கலந்த வரவேற்பைக் கொடுக்கிறார்கள். தொழுநோயாளிகளின் ஆடைகளை தீயினால் சுட்டெரிக்க வேண்டும் ( லேவியர் – 13 : 52 ) என மோசே கட்டளையிட்டிருந்தார். நவீன மருத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா ? தொழுநோய் மனித உடலை விட்டு வெளியே வந்து தூசிலோ, ஆடையிலோ மூன்று வாரங்களோ, அதற்கு அதிகமான வாரங்களோ உயிர்ப்புடன் இருக்குமாம் ! மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தின் உயர் நிலையை மோசே அறிந்திருக்கிறார் என்பது வியப்பு. அது இறைவன் மூலமாகவே வந்திருக்கும் என்பதில் வியப்பில்லை ! அதே போலத் தான் மோசேயின் தூய்மை குறித்த போதனைகளும். கடந்த நூறு ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்டறிந்தவற்றை மோசே 3500 ஆண்டுகளுக்கு முன்பே போதித்திருந்தார் என்பது ஆச்சரியம் தான் இல்லையா ?

யாக்கோபு 5 : 14 – 15 தான் மருந்து கூடாது என்பவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் விவிலிய வசனம். விசுவாசமுள்ள செபம் பிணியாளியை இரட்சிக்கும் எனும் வசனம் நமக்கு ஊக்கமூட்டுகிறது. மீன்டும் மீண்டும் செபிக்கத் தூண்டுகிறது. ஆனால் வசனங்களை வசனங்களுடன் ஒப்புமைப்படுத்தி வாசிப்பதே சிறந்தது. மருத்துவத்தை விட மேலாக இறைவிசுவாசத்தை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் மருத்துவத்தை நிராகரித்து விசுவாசத்தைப் பற்றிக் கொள்வது என்பது, இயேசுவின் ஒரு வசனத்தைப் பற்றிக் கொண்டு அவருடைய பல வசனங்களை நிராகரிப்பதற்கு சமம்.

இறைவன் எங்குமே மருத்துவம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இன்னும் சொல்லப் போனால் தேவைக்கேற்ற மருத்துவத்தையே அவர் பரிந்துரைக்கிறார். மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து ( நீதி 17: 22 – பொ.மொ ) என நலமளிக்கும் மருந்தையும், ஆனந்தமான மனதையும் விவிலியம் ஒப்பிட்டுப் பேசுகிறது. மகிழ்வார்ந்த மனம் இறைவனின் விருப்பம் என ஒத்துக் கொள்ளும் நாம், நலமளிக்கும் மருந்தையும் ஒத்துக் கொள்ளவேண்டும் இல்லையா ?

எசேக்கியேலுக்கு எசாயா பரிந்துரைத்த மருத்துவ முறையும் நினைவில் கொள்ளத் தக்கதே. “எசேக்கியா நலமடைய, ஒரு அத்திப் பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் வைத்துக் கட்டுங்கள்” என சொல்லியிருந்தார். ( ஏசாயா 38 : 22 ). ஏசாயாவை விட விசுவாசத்தில் ஆழமானவர்கள் என்று நம்மைக் கருதிக் கொள்ள முடியுமா ? அவர் மருத்துவ வழியையும், இறைவனின் மீதான நம்பிக்கையையும் ஒரு சேர மனதில் கொண்டிருந்தாரே ! எரேமியாவை எடுத்துக் கொள்ளுங்கள். “அங்கே மருத்துவர் இல்லையா? அப்படியானால், என் மகளாகிய மக்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?” ( எரேமியா 8 :22 ) என்கிறாரே எரேமியா. அவருடைய விசுவாசத்தைக் கேள்வி கேட்க முடியுமா ?

“தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின் பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து” 1 திமோ 5 :23 என்கிறார் பவுல். விசுவாசத்தின் பிம்பமாய் இருக்கும் பவுல் இறைவனின் விருப்பத்தை மீறி சொல்வார் என்று வாதிட முடியுமா ?

சரி, அப்படியே லாஜிக்கல் பேர்வழிகளாகவே நாம் இருக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மிடம் பணம் குறைவாக இருக்கும்போது பணத்துக்காக பணம் வைத்திருக்கும் நல்ல மனம் படைத்த ஒருவரை நாடிப் போய் கேட்பதுண்டு. அது போலவே உடல் நலம் குறைவாக இருக்கும் போது உடல் நலக் குறையைத் தீர்க்க உதவுவார்களோ அவர்களிடம் செல்வது தானே முறை. பணத் தேவை வரும்போதோ, உணவுத் தேவை வரும்போதோ பெரும்பாலும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவார் எனும் ‘மாஜிகல்’ களை நாம் சார்ந்திருப்பதில்லை. ஆனால் உடல் நலத்தில் மட்டும் ஏன் ஒரு மேஜிகலை எதிர்பார்க்க வேண்டும் ? எந்த ஒரு சூழலானாலும் இறைவன் தானே செயலாற்றுகிறார்.

இயேசுவை ஆலய உச்சிக்குக் கூட்டிச் சென்ற சாத்தான், “இங்கிருந்து கீழே குதி, தூதர்கள் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்” என்று சொன்னபோது இயேசு குதிக்கவில்லை. படிகள் இருக்கும் ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே இறங்கி வர படிகளைப் பயன்படுத்துவதே தேவையானது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை படிகளே இல்லாத கட்டிடமெனில் இயேசு குதித்திருக்கக் கூடும், தந்தையவர்கள் இயேசுவை நிச்சயம் தாங்கியிருப்பார். அமேசான் காடுகளில் நீங்கள் அகப்பட்டால், அங்கே உங்களுக்காய் கடவுள் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லையென்றால், அங்கே மருந்துகளைப் பயன்படுத்த முடியாது. அந்த சூழல்களில் இறைவனே நேரடித் துணை. மற்றபடி எங்கெல்லாம் இறைவன் நமக்காக உதவிகளை ஆயத்தப்படுத்தியிருக்கிறாரோ, அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்துவதே சரியானது.

ஒரு சிங்கம் ஒருவனைத் துரத்திக் கொண்டு வந்தது. அவனோ அசையாமல் நின்றான். ஓடு, ஓடு வீட்டுக்குள் புகுந்து கொள் என எல்லோரும் கத்தினார்கள். அவனோ, கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என நடுவழியில் நின்றான். சிங்கம் அவனைக் கொன்றது. இறந்தவன் கடவுளிடம் சென்றான். கடவுளே நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை என முறையிட்டான். அவரோ, நான் உன்னைக் காப்பாற்ற கடுமையாக முயன்றேன். பல பேருடைய வாய் வழியாக, “ஓடு ஓடு” என உன்னை அவசரப் படுத்தினேன். நீ தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்று சொன்னாராம். கடவுள் நமக்காக வழிகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் போது, நமது விருப்பப்படி தான் கடவுள் நம்மைக் குணப்படுத்த வேண்டும் என அவரைக் கட்டாயப்படுத்த முடியுமா ?

மனிதன் கடவுளாக முடியாது. ஆனால் மனிதர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது என்று சொல்ல முடியுமா ? அப்படிச் சொல்பவர்கள் வேலை தேடித் திரியும்போது மனிதர்களைச் சார்ந்திருப்பதில்லையா ? வீடு கட்டும் போது ? பயணங்களில் ? திருமணத்தில் ? இன்னும் பலவற்றில் பிறரைச் சார்ந்திருப்பதில்லையா அப்படியெனில் மருத்துவ விஷயத்தில் மட்டும் ஏன் வித்தியாசமான கோட்பாடைக் கடைபிடிக்க வேண்டும் ?

கடைசியாக மிக முக்கியமான ஒன்று. கிறிஸ்தவத்தின் அடைப்படை இறைவன் மீதான விசுவாசமே. அந்த விசுவாசம் இல்லாத மருத்துவம் வீணானதே. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போல, ‘நம்பிக்கை வை’ என்னிடம் என்று பலமுறை கடவுள் சொல்லியும் நாம் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை பல நேரங்களில் பலவீனப்பட விட்டு விடுகிறோம்.

இயேசு வாழ்ந்த காலத்தில் பலரைக் குணப்படுத்தினார், பிறவியிலேயே பார்வையற்றவன், பல்லாண்டுகாலமாக தொழுநோயாய் இருந்தவன் என நீளும் பட்டியல் நாம் அறிந்ததே. அவர்களுடைய குணமடைந்த நிகழ்வை நாம் உற்றுப் பார்த்தால் குணமடைந்தவர்கள் இயேசுவின் மீது நல்ல நம்பிக்கை கொண்டிருந்ததை அறியலாம். ‘உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்று இயேசு பலமுறை சொல்கிறார். நம்பிக்கையில்லாவிடில் நீ அதிசயங்களைக் காணமுடியாது என்று தெள்ளத் தெளிவாக எச்சரிக்கையும் விடுக்கிறார். பேதுரு இயேசுவை நம்பியபோது கடல்மீது நடந்தார். அந்த நம்பிக்கை தளர்ந்தவுடன் தண்ணீரில் மூழ்கினார்.

இந்த நம்பிக்கை நமக்குள் அடிப்படையாய் இருக்க வேண்டியது அவசியம். அதன் மேல், இறைமகன் நமக்குத் தந்திருக்கும் அறிவையும், ஞானத்தையும் பயன்படுத்த வேண்டும். விவிலியம் முழுக்க இறைவனின் பண்புகளும் அவருடைய சித்தமும் தெரிகிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என ஏராளம் பைபிளின் விசுவாச மாந்தர்கள் தங்கள் இறை விசுவாசத்தையும், மருத்துவப் பார்வையையும் தந்திருக்கின்றனர்.

தூய ஆவியானவரின் துணையுடன் நாம் விவிலியத்தை வாசிக்கும் போது நமக்கு உண்மைகள் புலப்படும். பைபிள் நாம் வெளியே செல்லும்போது சட்டென வாசித்துப் பார்க்கும் ஒரு மேஜிகல் நூல் அல்ல. பைபிள் வாசிக்காம போன ஆக்ஸிடன்ட் ஆயிடுமோ, எக்ஸாம் பெயில் ஆயிடுவோமோ, போற காரியம் வெளங்காதோ என்பதற்காக வாசிக்கும் ‘மிரட்டும்’ நூல் அல்ல. அது வாழ்வின் அடிப்படை நூல் என்பதை மனதில் கொள்வோம். வார்த்தைகளின் வெளிச்சத்தில் வாழ்க்கையை அமைப்போம். இறைமகனின் வழியில் பயணம் தொடர்வோம்.

வீணான கேள்விகள் கேட்டு வாழ்வை வீணாக்காமல்
இறைவனில் இணைந்து வாழ்வை வளமாக்குவோம்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்தவம் : ஆன்மீக சுதந்திரம்

jesus12

 

சுதந்திரம் வேண்டுமா அடிமைத்தனம் வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? இந்தக் கேள்வியே மடத்தனமானது என்று தானே சொல்வீர்கள் ? அப்படி ஒரு பதிலைச் சொல்வதே சுதந்திரத்தின் அடையாளம் தான் இல்லையா ?. அடிமையாய் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உலகெங்கும் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் இதைத் தான் நமக்குச் சொல்லித் தருகின்றன. சமீபத்தில், சிங்களர்களின் அடக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் போராடியதும், இதற்காகத் தான். சுதந்திரம் எனும் வார்த்தையே அடக்குமுறைவாதிகளுக்கு அலர்ஜி. அதனால் தான், சுதந்திர சிறகுகளை நறுக்க மனிதாபிமானமற்ற படுகொலைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவும் சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. 1947 ஆகஸ்ட் 15 என்பது நமக்கெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஆனால் அந்த விடுதலையைப் பெறுவதற்கு இந்திய மண் தியாகம் செய்த உயிர்களும், தாங்கிய வலிகளும் சொல்லி முடிக்க முடியாதவை. இன்றைய இந்தியா, சட்டத்தின் பார்வையில் சுதந்திரமடைந்து விட்டது, ஆனால் அது இன்னும் சாதி, ஊழல், மதம் எனும் வேறு பல எஜமானர்களுக்குக் கீழே கைகட்டி அடிமையாய் நிற்கிறது.

இயேசு ஒற்றை வரியில் இதை மிக மிக அழகாக வெளிப்படுத்தினார். “பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ( யோவான் 8 : 34 பொ.மொ ) என்றார் அவர்.. ஆன்மீக அளவில் நாம் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பதை பளிச் என சொல்ல இதை விடப் பெரிய வசனம் தேவையில்லை. எந்த அதிகார சக்தி நமது செயல்களை நிர்ணயிக்கிறதோ அந்த சக்தியே நமக்கு எஜமான். எந்த சக்தியின் கட்டளைகளின் படி நாம் நடக்கிறோமோ அந்த சக்திக்குத் தான் நாம் அடிமைகளாய் இருக்கிறோம்.

நாம் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறோமா அல்லது இயேசுவுக்குள் சுதந்திரமாய் இருக்கிறோமா என்பதை அறிவது வெகு சுலபம். நமது ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசினாலே அந்தக் கேள்விக்கான பதில் நமக்குக் கிடைத்து விடும். காலையில் எழும்புகிறோம் பைபிள் வாசிப்பதும், ஜெபிப்பதும் நமக்கு முதன்மையாய் இருக்கிறதா ? அல்லது சுடச் சுட டீ குடித்து, டிவியில் நியூஸ் பார்ப்பது நமக்கு முக்கியமானதாய் இருக்கிறதா ?

அலுவலக அவசரத்தில் நம்மை எது வழிநடத்துகிறது ? கோபமா ? இயேசுவின் வழிகாட்டுதலான புன்னகை கலந்த சாந்தமா ? கோபத்தில் கத்தி, எரிச்சலில் சுற்றிக் கொண்டிருப்பீர்களென்றால் நீங்கள் கோபத்துக்கு அடிமையாய் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். கோபம் உங்களை வழிநடத்துகிறது என்பது தான் அதன் பொருள். கோபம் கொள்வது பாவம் என்பது நாம் அறிந்ததே. தம் சகோதரர் சகோதரியிடம் சினம் கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் ( மத் : 5 – 22 ) என்கிறார் இயேசு.

அலுவலகம் செல்லும் வழியில் வசீகரமான இளம்பெண்ணைப் பார்க்கிறீர்கள், உங்கள் பார்வை பாவம் செய்கிறதா ? அல்லது கண்ணியமாய்க் கடந்து போகிறதா ? கணினியில் வேலை செய்கிறீர்கள், சிற்றின்ப வழிகாட்டுதலுக்கான பக்கங்களில் உங்கள் மனம் உங்களை அழைத்துச் செல்கிறதா ? நண்பர்களோடு உரையாடுகிறீர்கள் உங்கள் உரையாடலில் பாலியல் நகைச்சுவைகள் பந்திவைக்கின்றனவா ? இதற்கான பதிலில் அடங்கியிருக்கிறது உங்கள் மனம் சுதந்திரமாய் இருக்கிறதா இல்லை சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கிறதா என்பது.

இப்படியே ஒவ்வொரு செயலையும் இயேசுவின் வாழ்க்கையோடும், வார்த்தையோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது ஆன்மீகத்தின் பாதையும், நமது போலித்தனத்தின் உண்மையும் வெளிப்படத் துவங்கும். பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் கூட தேவையில்லை. ஒரு சில மணி நேரங்களே போதுமானது. நியாயப் படுத்தல்கள் இல்லாத அலசல் இருந்தால் நமது வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து கொள்வது வெகு எளிது.

அப்படி என்னதான் உண்மை ? நாம் ஆன்மீக சுதந்திரம் அடையவில்லை எனும் மறுக்க முடியாத உண்மை. எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய இயலாது. ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு கொள்வார் ( மத் 6 : 24 ) என்றார் இயேசு. எவனும் ஒரே நேரத்தில் சுதந்திரமாகவும் அடிமையாகவும் இருக்க முடியாது என்பதே இறைமகன் சொல்லும் உண்மை. உலக செல்வங்கள் நமது செயல்களை நிர்ணயிக்கும்போது, கடவுளை வெறுக்கிறோம் ! செல்வத்தை நேசிப்பவன், கடவுளை வெறுக்கிறான். கடவுளை நேசிப்பவன் செல்வத்தைப் புறக்கணிக்கிறான். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் அன்பு செய்வதோ, அன்பைப் பகிர்ந்தளிப்பதோ இயலாத காரியம் என்பதே வேதாகமம் சொல்லும் உண்மை !

அதற்காக செல்வங்களே இருக்கக் கூடாதென்பதல்ல, அதை அன்பு செய்யக் கூடாது, அதை நோக்கி ஓடக் கூடாது, அதை முதலிடத்தில் வைத்துப் பயணம் செய்யக் கூடாது என்பதே புரிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும். அதனால் தான் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ( மத் 6 : 33 ) என்கிறார் இயேசு.

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது ! கோபத்திலிருந்து விடுபட்டுக் காமத்திற்கு அடிமைத்தனமாகி விடுகிறது மனசு. காமத்திலிருந்து விடுபட்டு பணத்தாசையில் அடைபடுகிறது. பணத்தாசையிலிருது விடுபட்டு புகழ் போதையில் புகுந்து விடுகிறது. புகைத்தலை நிறுத்தி விட்டுப் பான்பராக் போடும் இளைஞனைப் போல நமது ஆன்மீக அடிமைத்தனம் தளங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறதே தவிர விடுபடுவதில்லை.

உண்மையான சுதந்திரம் என்பது நாம் பாவத்திலிருந்து முழுமையாய் விலகி இயேசுவின் வழியில் தொடர்வதில் இருக்கிறது. இது இடுக்கமான வாயில். இதில் நுழைவது கடினம். “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே ( மத் 7: 13-14 ) .

இந்த இடுக்கமான வாயில் வழியே நுழைபவர்களை வழி நடத்திச் செல்ல தூய ஆவியானவர் தயாராய் இருக்கிறார். காரணம் அந்த நெருக்கமான பாதையில் நாம் சந்திக்கும் உலக நெருக்கங்கள் ஏராளமாய் இருக்கும். அவற்றோடான யுத்தத்துக்கு இறை வழிகாட்டுதல் வெகு அவசியம். இறையோடு நாம் இருக்கும் போது, யானை மீதிருக்கும் சிற்றெறும்பு போல நமக்கும் யானை பலம் கிடைத்து விடுகிறது. யுத்தம் இல்லாமல் சுதந்திரம் கிடைப்பதில்லை. ஆன்மீக சுதந்திரத்துக்கும் யுத்தம் அவசியமாகிறது. அது சஞ்சல மனதோடு நாம் செய்யும் யுத்தம்.

“மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது ( மத் 26 : 41 பொ.மொ ) ! அது பாவத்திற்குள் எளிதில் புகுந்து விடும். காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகைப் போல அது இலக்கில்லாமல் ஓடும். ‘இந்த ஒரு முறை மட்டும்’ என பாவம் ஆசை வார்த்தைகளோடு காத்திருக்கும். அந்த வழியில் செல்பவர்கள் ஏராளம். அதனால் அந்த வழியைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆட்டு மந்தை போல கணக்கில்லாமல் முன்னால் மக்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

அந்த வழி நமக்கு வேண்டாம், ஒரு முறை கூட வேண்டாம். ஆன்மீகத் தூய்மையே வேண்டும் என்பவர்கள் அபூர்வம். அழிந்து கொண்டிருக்கும் அபூர்வ விலங்குகளைப் போல அவர்களைக் கண்டுபிடிப்பதே பெரும் கடினம். அதனால் தான் அவர்கள் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாய் இருக்கிறது.

பாவம் வாசலில் உங்களைப் பல்லக்கு வைத்து அழைத்துச் செல்லும், தூய்மையோ அமைதியான, எளிமையான பாதையாய் உங்களுக்கு முன் இருக்கும். அதில் வசீகரம் இருப்பதில்லை, ஆனால் அதில் பயணிப்பவர்களுக்குத் தான் அதன் சுகமும், இன்பமும் தெரியும். தன்னை வெறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொள்ளாதவனால் அந்தப் பாதையில் நடக்க முடியாது. தனது சிலுவை என்பது தனது உலக விருப்பங்கள் அறையப்பட்ட சிலுவை என்பதே நிஜம்.

இந்திய சுதந்திரத்துக்காய் நாம் மகிழ்ச்சியடையும் இதே நேரத்தில் பாவ அடிமைத்தனத்துக்காக கண்ணீர் விடாவிட்டால் நமது கிறிஸ்தவ வாழ்க்கை அர்த்தமற்றதாய்ப் போய்விடும். இயேசுவுக்குள் சுதந்திரமாய் வாழவேண்டும் எனும் அதீத ஆர்வமும், இடைவிடாத போராட்டமுமே நம்மை சுதந்திரத்துக்குள் இட்டுச் செல்லும்.

என்னதான் சொன்னாலும் நான், அடிமையாய் தான் இருப்பேன் என அடம்பிடித்தால், இயேசுவுக்கு மட்டுமே அடிமையாய் இருப்பதென முடிவெடுப்போம்.அந்த அடிமைத்தனமே உண்மையான சுதந்திரம்.

தேசத்தின் விடுதலையைக் கொண்டாடுவோம்
தேகத்தின் விடுதலைக்காய் மன்றாடுவோம்

சேவியர்.

 

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்