ஆன்மீகம் : சிறுவர்களின் உலகம்

jesus-with-children-0401

முதியவர்களைக் குறித்த சிந்தனையின் தொடர்ச்சியாக சிறுவர்களைக் குறித்து சிந்திப்பது ஆனந்தமாக இருக்கிறது. காரணம் விவிலியத்தில் சிறுவர்கள் சிறப்புக் கதா நாயகர்கள். அவர்களுக்கு இறைமகன் இயேசுவும், விவிலியமும் அளித்திருக்கும் முக்கியத்துவம் வியப்பூட்டுவது.

அதற்கு முன் இன்றைய தேசத்தில் சிறுவர்களின் நிலமை எப்படி இருக்கிறது என்பதை எட்டிப் பார்ப்போமா ?

உலக அளவில் அதிக குழந்தைகள், சிறுவர்களைக் கொண்டிருக்கும் நாடு எது தெரியுமா ? சந்தேகமே வேண்டாம். இந்தியாவே தான். சுமார் 40 கோடி பேர் இருக்கின்றனர். பெருமைப் பட அவசரப் படாதீர்கள். அவர்களில், சுமார் இரண்டு கோடி சிறுவர் சிறுமியர் இந்தியத் தெருக்களில் வாழ்கிறார்கள். அதாவது ஆதரவுக்கோ, அடைக்கலம் கொடுக்கவோ யாரும் இல்லாமல் தெருவே துணை என திரிகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி.

கல்வி குறித்தும், தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும், உலக மயமாதல் குறித்தும் நாம் அதிகம் அலசிக் காயப் போடுகிறோம். இன்றைய சூழலில் கல்வி வாசனையே இல்லாமல் வளரும் சிறுவர்கள் இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடி பேர் ! ஆறு வயதுக்கும், பதினான்கு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களை ஒட்டு மொத்தமாகப் பட்டியலிட்டால் அவர்களில் சரி பாதி பேருக்கு குறைந்த பட்சத் தேவையான ஆரம்பக் கல்வி கூட கிடைப்பதில்லை !

கல்வி இருக்கட்டும், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் ? அந்த விஷயத்தில் இன்னும் மோசம் நமது நாட்டில் போதுமான அளவு இல்லை. இல்லை, இல்லவே இல்லை ! என்பதே அக்மார்க் நிஜம். ஆண்டு தோறும் சுமார் இரண்டே முக்கால் கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களில் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே இறந்து விடுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை ! தினமும் சுமார் ஏழாயிரம் குழந்தைகள் டயரியா போன்ற சாதாரண நோய்களினால் இறந்து போகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி.

ஊட்டச்சத்து குறைவான நிலை இந்தியாவின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று. உலகிலேயே எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் தான் மிக அதிகம் எனும் துயர சாதனையும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆண்டு தோறும் சுமார் 75 இலட்சம் குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் தான் பிறக்கின்றனர். உலக அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் சுமார் 14 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 6 கோடி பேர் இருப்பது இந்தியாவில் !

பெண்குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். காலம் காலமாகவே நசுக்கப்படும் பெண்களின் நிலமை முழுதும் மாறிவிடவில்லை. சமூகம், குடும்பம் என பல இடங்களில் புறக்கணிப்புகளைப் பெறுவது இன்னும் நின்றபாடில்லை. சுமார் 20 சதவீதம் பெண் குழந்தை மரணங்கள் பாலியல் கொடுமையினால் நேர்வதாய் சொல்கிறது புள்ளி விவரம் ஒன்று. பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் தெரிந்த குடும்ப உறவினர்களால் நேர்கிறது என்பது பகீரடிக்கும் உண்மை.

சமூகப் புறக்கணிப்பைப் பற்றிப் பேசும்போது குழந்தைத் தொழிலாளர் நிலை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சுமார் ஒன்றே முக்கால் கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கின்றனராம். உலக அளவிலேயே இந்த விஷயத்தில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

“பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில் ( சங்கீதம் 127 3 : பொது மொழிபெயர்ப்பு) என்கிறது விவிலியம். ஆண்டவர் அருள்கின்ற செல்வத்தை நாம் இன்று எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மனம் பதை பதைக்கிறது இல்லையா ?

விவிலியத்தில் குழந்தைகளும், சிறுவர்களும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள் ( ஆதி 1 :28 ) என கடவுள் மனிதனுக்கு முதல் கட்டளையைக் கொடுத்து குழந்தைகளின் மண்ணுலக வருகையை ஆசீர்வதிக்கிறார். அதனால் தான், கடவுளின் கொடையாக இருக்கிறார்கள் அவர்கள்.

இறைவனின் வரங்களைப் பாழாக்காமல் இருக்க வேண்டியது நம்மிடம் தரப்பட்டிருக்கும் முதல் கடமை. குழந்தைகளை நல்வழியில் வளர்க்க வேண்டிய கடமையும் பெற்றோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது ஆன்மீகம் தொடங்கி, வாழ்க்கைப் பாடம் வரை நீள்கிறது.

“நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. ( உபா 6 : 7 பொ.மொ) என்கிறது விவிலியம். அது ஒரு வகையில் ஆன்மீக அறிவைச் சுட்டிக் காட்டுகிறது. இன்னொரு வகையில் குழந்தையின் கல்வியின் முதல் கடமை பெற்றோரைச் சார்ந்திருக்கிறது என்பதை விளக்குகிறது.

நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு: முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார் ( நீமொ 22 : 6 ) – எனும் இறை வசனம் அதை நமக்கு இன்னும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது ! அப்படியே பிள்ளைகள் பக்கத்திலும் திரும்பி “பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே என்கிறது நீதிமொழிகள்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் தவறு செய்யும் போது அடிப்பது என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு முன் எது சரியானது என்பதை குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். அது தான் முதல் தேவை. நமக்குத் தோன்றுவது போல நம் குழந்தைகளை நாம் வளர்த்த முடியாது. “என் புள்ளையை நான் அடிப்பேன் அதைக் கேக்க யாருக்கும் உரிமை இல்லை” என சொல்ல முடியாது. காரணம் குழந்தைகள் நம்மிடம் தரப்பட்டிருப்பவர்கள். கடவுளின் கொடைகள். நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. இறைவனுக்கே சொந்தமானவர்கள். நம்மிடம் தரப்பட்டிருக்கும் குழந்தைகளை அவர் விருப்பப்படி வளர்க்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய பணி.

தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள் ( எபேசியர் 6 : 4 ) எனும் விவிலிய வாக்கு நமக்கு கல்வியை எப்படிப் போதிக்க வேண்டும் எனும் வழி முறையைக் கூட காட்டுகிறது !குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது நற்செயல் என்கிறது தீமோத்தேயு முதலாம் நூல்.

“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை ( எபேசியர் 6 1 – 3 ) எனும் இறை வார்த்தைகள் குழந்தைகளுக்கும் தந்தையருக்கும் இடையே இருக்க வேண்டிய உறவை விளக்குகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இயேசு குழந்தைகளை எப்படியெல்லாம் நேசித்தார்,, குழந்தைத் தன்மையை எப்படியெல்லாம் சிலிர்ப்புடன் அணுகினார் என்பது புதிய ஆன்மீகப் புரிதல்களைத் தருகிறது.

விண்ணக வாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமெனில் சிறுவர்களாகவும், குழந்தைகளாகவும் மாற வேண்டியதன் தேவையை எடுத்துரைக்கிறார். “சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ‘ சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார் ( மார்க் 10 : 13 – 15 )

சிறு பிள்ளைகள் இயேசுவின் மிகப்பெரிய பிரியத்துக்குரியவர்களாக இருக்கின்றனர். இயேசு கோபமடையும் சந்தர்ப்பங்கள் மிகவும் அபூர்வம். தந்தையின் இல்லம் சந்தை போல மாறி, அதன் அர்த்தத்தை இழந்தபோது கோபமடைந்தார். இப்போது குழந்தைகளைத் தடுப்பதைக் கண்டு கோபமடைகிறார். காரணம் விண்ணரசு சிறு பிள்ளைகளைப் போல மாறுவோருக்கானது என்கிறார் இயேசு.

“நீ வளரவே மாட்டியா ?” என திட்டுவது தான் நமது இயல்பு. நீ சின்னப் பிள்ளையைப் போல மாற மாட்டாயா ? என்று கேட்பது இறைமகன் இயேசுவின் இயல்பு !

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.” ( மத்தேயு 18 : 3-5 ) எனும் இறை வார்த்தைகளில் இயேசு சிறு பிள்ளைகள் சார்ந்த மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறார்.

முதலாவது, குழந்தையைப் போல மாறுவது. சிறு பிள்ளைகள் எப்போதுமே தந்தையைச் சார்ந்தே இருப்பவர்கள். தந்தையின் கையைப் பிடித்து நடக்கும் போது உலகில் தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை குழந்தைக்கு இருக்கும். அதே போல இறைவனைச் சார்ந்தே இருக்கும் மனநிலை சிறு பிள்ளையாய் மாறுவதன் முதல் நிலை. சார்ந்து இருத்தல், இயேசுவின் அருளை தினம் தினம் பெற்று, அன்றன்றைக்குரிய செயல்களில் வாழ்வது. ஒவ்வொரு நாளும் புதுக் கிருபை நமக்குக் கடவுள் தருகிறார் என்கிறது விவிலியம். முழுமையாய் இறைவனைச் சார்ந்து இருக்கும் குழந்தை மனநிலை அதைப் பெற்றுக் கொள்கிறது.

இரண்டாவது, குழந்தையைப் போல தன்னைத் தாழ்த்திக் கொள்ளுவது. குழந்தை மனநிலை என்பது பெருமையை விரும்பித் திரிவதில்லை. தோல்விகளையும், அவமானங்களையும் தாமரை இலைமேல் விழும் நீரைப் போலவே பாவிக்கும். தாழ்மை கிறிஸ்தவத்தின் அடிப்படை. தாழ்மையை இழந்தபோது சாத்தான் உருவானான், விண்ணகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். இயேசுவோ சீடர்களின் பாதங்களைக் கூட பரவசத்தோடு கழுவும் பணிவைக் கொண்டிருந்தார். அத்தகைய தாழ்மையைக் கொள்வது குழந்தை மனநிலை. ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் கொடுத்து ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க இயேசுவின் பணியில் இணைந்தவன் ஒரு சிறுவன். அவனுடைய பெயர் கூட விவிலியத்தில் இல்லை ! நாமானை நலமாக்கத் துணை நின்ற சிறுமியின் பெயரும் விவிலியத்தில் இல்லை. சிறுவர்கள் தாழ்மையின் சின்னங்கள். அவர்கள் பெயருக்காக எதையும் செய்வதில்லை.

மூன்றாவது, சிறுபிள்ளையை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்தல். வெறுமனே ஏற்றுக் கொள்தலல்ல. குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும்போது அதை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்ளும் போது நாம் இறைவனை மகிமைப்படுத்துகிறோம். நாளைகளைக் குறித்த கவலையற்ற சிறுவர்கள் அன்றைய தினத்தை முழுமையாய் இறைவனோடு வாழ்தலின் சின்னங்கள். அவர்கள் தூய்மையானவர்கள். அத்தகைய தூய உள்ளத்தோர் விண்ணரசின் சொந்தக்காரர்கள் என்பதை இயேசு தனது மலைப்பொழிவில் உறுதிப்படுத்துகிறார்.

குழந்தையாய் மாறுவதும், குழந்தைகளை ஏற்றுக் கொள்வதும் நமக்கு தரப்பட்டிருக்கும் ஆன்மீகக் கட்டளைகள். குழந்தைகளுக்கு இடறல் உண்டாக்குபவர்களுக்கோ மிகப்பெரிய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” எனும் இயேசுவின் வார்த்தைகளின் வீரியம் அச்சமூட்டுகிறது. சிறியவர்களுக்கு எந்த விதத்திலும் இடஞ்சலாக இருக்கக் கூடாது என்பதே இயேசு சொல்லும் அழுத்தமான பாடம்.

சிறுவர்கள் நமது வாழ்வின் மிக முக்கியமானவர்கள். அவர்களை சிறந்த ஆன்மீக வெளிச்சத்தில் வளர்த்த வேண்டியது நமது கடமையாகும். நமது சமூகத்தில் இருக்கின்ற சிறுவர்களை நேசிப்போம், வழிகாட்டுவோம், ஏற்றுக் கொள்வோம். அவர்களை எந்த விதத்திலும் தவறான வழிக்கு அழைத்துச் செல்லாதிருப்போம்.

சிறு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கத் தானே இதுவரை அவசரம் காட்டினோம், இனிமேல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் துவங்குவோம்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

வயது 17 ! குழந்தைகள் 7 !!

 pamela

பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையை அடைகிறார்களாம். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். மிச்சமிருப்போர், பதின் வயதுகளிலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கவனிக்கும் பொறுப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாய்மை நிலைக்காக பள்ளிக்கூட படிப்பை விட்டு விட்டு, வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய நாடுகளின் அநேகம்.

அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பமீலா என்பவருடைய கதை அதிர்ச்சியூட்டுகிறது. பதினேழே வயதான இந்தப் பெண் இப்போது ஏழு குழந்தைகளுக்குத் தாய் !

வறுமையின் உச்சகட்டத்தில் இருக்கும் குடும்பம் அவர்களுடையது. அரசு தரும் மானியத்தை வைத்து மட்டுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழல்.

pamela21

குழந்தைக்குத் தந்தையும் பமீலாவை விட்டுவிட்டு ஓடி விட தனியாளாய் அத்தனை குழந்தைகளையும் பராமரித்து வருகிறார் இவர்.

பதினான்காவது வயதில் ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்ற உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பிய பமீலாவை, இந்த வயதில் அப்படிச் செய்வது சட்ட விரோதம் எனக் கூறி அனுப்பி விட்டனர் மருத்துவர். விளைவு இப்போது அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ! இதில் இரண்டு முறை மூன்று மூன்று குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளிக்கூட படிப்பையெல்லாம் மூட்டை கட்டி விட்டு, கிடைத்த வேலை செய்து பிழைப்பை ஓட்டும் பமீலாவை பதின் வயதுத் தாய் படும் அவஸ்தைகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

கல்வியறிவற்ற நாடுகள், படிப்பறிவுள்ள நாடுகள், வறுமை நாடுகள், வளமான நாடுகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த தவறான குடும்ப உறவுகள் குறித்த கவலை சமூக நலம் விரும்பிகளுக்கு எப்போதுமே இருக்கத் தான் செய்கிறது !