சிறுகதை : ஒரு குரலின் கதை

Nina Davuluri

 

கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு. தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….” மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை” விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ” :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?” விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான் குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

 

 

சேவியர்

சிறுகதை : யோவ்… இண்டர்நெட் வேலை செய்யலைய்யா…

  

“சுவிட்சை ஆன் பண்ணியிருக்கீங்களா சார் ” மறு முனையில் பேசிய கஸ்டமர் சர்வீஸ்காரனுடைய பேச்சைக் கேட்கக் கேட்க கிருபாவுக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டு பதில் சொன்னான். 

“ஆன் பண்ணியிருக்கேன்” 

“உங்க மோடம்ல லைட் எரியுதா ?” 

“சுவிட்சைப் போட்டா லைட் எரியாம மோடமேவா எரியும்?” 

“சார்… பிளீஸ் சொல்லுங்க.. எத்தனை லைட் எரியுது ? 

“நாலு லைட்… பச்சை பச்சையா எரியுது” 

“அப்போ ஏதோ மிஸ்டேக். இரண்டாவதா இருக்கிற லைட் மஞ்சள் கலரா எரியணும்” 

“பாஸ்… இதையெல்லாம் நான் லாஸ்ட் ஒன் வீக்கா உங்க கிட்டே டெய்லி போன் பண்ணி சொல்லிட்டு இருக்கேன். நீங்க தான் வயரு சுவத்துல இருக்கா, சுவரு வீட்டுல இருக்கா, வீட்ல கரண்ட் இருக்கான்னு கடுப்படிக்கிறீங்க” 

“சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்… எவ்ளோ நாளா இண்டர்நெட் வர்க் ஆகலைன்னு சொன்னீங்க ?” 

“இன்னியோட முழுசா ஒரு வாரம்” 

“ஓ..கே சார்… உங்க பழைய கம்ப்ளையண்ட் நம்பர் என்ன ?” 

சொன்னான். 

“பிளீஸ் ஹோல்ட் ஆன்” மறுமுனை சொல்லி முடித்ததும் போனில் ஏதோ இசை வழியத் தொடங்கியது. மெலிதான இசைதான். ஆனால் இந்த சூழலில் அது கர்ண கொடூரமாய்த் தெரிந்தது. 

இந்த ஹோல்ட் ஆனைக் கண்டு பிடிச்சவனைக் கொல்லணும். நாலு கேள்வி கேட்டுட்டு ஹோல்ட்ல போட்டுட்டு டீ குடிக்க போயிடறாங்க போல. பத்து நிமிசம் கழிச்சு சாவாகாசமா வந்து சாவடிப்பாங்க. கிருபாவின் எரிச்சல் ஏறிக் கொண்டிருந்தது. 

இருக்காதா பின்னே. போன மாசம் தான் பிரியாவுக்கு அவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆச்சு. நிச்சயதார்த்தம் ஆன முதல் நாள்ல இருந்து எப்போவும் ஸ்கைப் தான் ஒரே துணை. நெட்ல பேசறது, வெப் கேம்ல சிரிச்சுக்கிறது, இ மெயில்ல போட்டோ அனுப்பிக்கிறது ன்னு வாழ்க்கை சுவாரஸ்யமா ஓடிட்டே இருந்தது. சுவாரஸ்யத்தோட உச்சத்துல இருந்தப்போ தான் ஒரு நாள் சட்டுன்னு அந்த சிக்கல் வந்துது. இண்டர் நெட் கணக்ட் ஆகலை ! 

நெட் கனெக்ட் ஆகாததெல்லாம் ஒரு பெரிய சர்வதேசக் குற்றம் கிடையாது தான். இன்னிக்கு பெப்பே காட்டும். கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்தா கணெக்ட் ஆயிடும். இதுக்குன்னு சில ஸ்பெஷல் வைத்தியங்கள் உண்டு. 

முதல்ல மோடம் பின்னாடி இருக்கிற வயரை எல்லாம் கழற்றிட்டு திரும்ப மாட்டணும். என்னத்த கழட்டறோம்ன்னும் எதுக்கு கழட்டறோம்னும் யாருக்கும் தெரியாது. ஆனா ஒரு தடவை புல்லா கழற்றி மாட்டினா செத்துப் போன மேடம் வேலை செய்ய சாத்தியம் இருபது சதவீதம் உண்டு. 

அதுவும் வேலைக்காவலைன்னா இருக்கவே இருக்கு சிஸ்டம் ரீஸ்ட்டார்ட். கம்ப்யூட்டரை ஒரு வாட்டி ஷட்டவுன் பண்ணி ஆன் பண்ணினா அதுபாட்டுக்கு எல்லா கனெக்ஷன்களையும் தூசு தட்டு ஜம்முன்னு இண்டர்நெட் வேலை செய்ய ஆரம்பிக்கும். 

இப்படி எல்லா முதலுதவிகளும் செய்து பார்த்து கிருபாவுக்கே சலிப்பு வந்துடுச்சு. இந்த வாட்டி தான் இப்படிப் படுத்துது. என்ன பண்ணினாலும் வேலைக்காவலை. தெரியாத் தனமா இந்த பி.எஸ்.என்.எல் வேற வாங்கித் தொலச்சுட்டேன். வேற பிரைவட் கம்பெனின்னா கூப்பிட்டா உடனே வந்து நிப்பாங்க. முதல்ல இதை தலையைச் சுத்தி தூரப் போடணும். கிருபாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஸ்பீக்கர் போனில் இன்னும் மியூசிக் தான் ஓடிக் கொண்டிருந்தது. 

கண்டிப்பா அந்த ….. போனை ஹோல்ட் பண்ணிட்டு டீ குடிக்கத் தான் போயிருக்கும்.  பொறம்போக்கு… கிருபா சத்தமாகவே அந்த வார்த்தையைச் சொல்லி அருகிலிருந்து சேரை எட்டி உதைத்துத் தள்ளியபோது மியூசிக் நின்றது. 

ஐயையோ .. மிதிச்ச மிதியில போனும் கட்டாச்சோ என ஒரு வினாடி கிருபா திடுக்கிட்டான். நல்ல வேளை அப்படியெல்லாம் நடக்கவில்லை. இல்லேன்னா மறுபடியும் போன் பண்ணி “பிரஸ் ஒன் பார் இங்கிலீஸ்” ன்னு கேக்கறதுக்கு பதிலா மோடத்தையே எரிச்சுடலாம் என்று அவனுக்குத் தோன்றியது. 

“தேக்ஸ் ஃபார் ஹோல்டிங் சார்” 

“சரி சரி.. டீ குடிச்சாச்சா ?” 

“ஐ.. டிடிண்ட் கெட் யூ சார்…” 

“எவ்ளோ நேரம் தான் ஹோல்ட்ல போடுவீங்க. இந்த மியூசிக் கேட்டுக் கேட்டு காதெல்லாம் வலிக்குது. உங்களுக்கு ரெஸ்ட் எடுக்கணும்ன்னு தோணினா ஹோல்ட் ல போட்டுடுவீங்க. அப்படித்தானே ? உண்மையைச் சொல்லுங்க… ” 

மறுமுனையில் அவன் சிரித்தான். “நோ சார்.. நான் உங்க டேட்டா எல்லாம் செக் பண்ணிட்டு இருந்தேன்” 

“ஓ… மறுபடியும் ஒரு செக்கிங்ஆ ? சரி… ஏதாச்சும் யூஸ் புல்லா கிடைச்சுதா ? இல்லை இன்னொரு நயன் டிஜிட் நம்பர் தருவீங்களா ? கஸ்டமர் கம்ப்ளையிண்ட் நம்பர்ன்னு. ” 

“நோ சார்… உங்க பிராப்ளம் என்னன்னு கண்டு பிடிச்சாச்சு” 

“ஓ ரியலி… தேங்க் காட்…. கேக்கவே சந்தோசமா இருக்கு. ? என்ன பிராப்ளம் ? நெட்வர்க் இஷ்யூவா ? ” 

“நோ.. நோ சார். எங்க சைட் எந்த பிராப்ளமும் இல்லை. உங்க சைட்ல தான்” 

“என் சைட்ல என்னய்யா பிராப்ளம்” 

“நீங்க இந்த மாசம் பணமே கட்டலை சார். சோ, டிஸ்கணக்ட் பண்ணியிருக்காங்க. உங்களுக்கு இண்டிமேஷன் கூட அனுப்பியிருக்காங்களே” 

மறுமுனையில் அவன் சொல்லச் சொல்ல கிருபாவுக்கு பக் என்றானது. ஐயையோ…. எப்படி மறந்தேன் ? பணமே கட்டாமல் இண்டர்நெட்டை துண்டித்திருக்கிறார்கள். அந்த விஷயம் தெரியாமல் ஒருவாரமாக எல்லோரிடமும் எகிறிக் குதித்து களேபரம் பண்ணியிருக்கிறேன். நினைக்க நினைக்க கிருபாவிற்கு தன் மேலேயே கடுப்பாய் இருந்தது. 

லவ் மூடில் பணம் கட்டவே மறந்து போன சமாச்சாரம் அவனுக்கு ரொம்ப லேட்டாக உறைத்தது. 

“சார்… இருக்கீங்களா ?” 

“யா… ஐ…ஐ..யாம் சாரி… ஐ.. பர்காட்… நான் பணத்தைக் கட்டிடறேன்” கிருபாவின் குரலின் சுருதி ஏகத்துக்குக் குறைந்திருந்தது. 

“ஈஸ் தெயர் எனிதிங் எல்ஸ் ஐ கேன் டு பார் யூ சார்” மறுமுனையில் கேட்டவனுடைய குரலில் கொஞ்சம் நக்கல் இருந்தது போல தோன்றவே “நோ.. தேங்க்ஸ்” என்று சொல்லாமலேயே போனைக் கட் பண்ணினான் கிருபா. 

அவனுக்கு முன்னால் பளீர் பச்சை நிறத்தில் எரிந்து கொண்டிருந்த மோடம் விளக்குகள் அவனைப் பார்த்து கை கொட்டிச் சிரிப்பதாய் தோன்றியது அவனுக்கு. 

ஃ 

 
 

  

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே 

அறிவியல் புனைக் கதை : உண்மையா அது என்ன ?


இன்று

தனக்கு முன்னால் கூடியிருந்த பதினேழு விஞ்ஞானிகளின் முன்னிலையில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கத் துவங்கினார் வர்மா.

இந்தக் கருவி ஆராய்ச்சியாளர்களுக்காகவே கண்டுபிடிக்கப் பட்ட கருவி. வரலாறுகளைத் துருவித் திரிபவர்களுக்கு இந்தக் கருவி ஒரு கடவுள் என்று கூட சொல்லலாம். உதாரணமாக அகழ்வாராய்ச்சி போன்றவற்றில் கிடைக்கும் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு அந்தக் காலகட்டத்தை துல்லியமாகவும் விரிவாகவும் இந்தக் கருவி மூலம் கண்டுபிடிக்கலாம்.

வெறும் ஊகங்கள் எனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல வரலாற்று முடிவுகளை இந்தக் கருவி மாற்றி எழுதும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் புழங்கும் பொருட்களில் அந்தந்த காலகட்டத்தின் இயல்புகள் பதிவாகியிருக்கும் என்பதே எனது ஆராய்ச்சியின் மையம். உதாரணமாக ஒரு மண் குவளையை அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்தால் அதைக் கொண்டு அந்த காலகட்டத்தை முழுமையாக இந்தக் கருவி சொல்லிவிடும்.

அதுவும் காட்சியாக. உபயோகிக்கும் கருவியின் தன்மை, பழக்கம், சமூகத் தொடர்பு இவற்றைக் கொண்டு இந்தக் காட்சிப் படத்தின் தன்மை அமையும். தேவையான அளவு மூலக்கூறுகள் இல்லாத பட்சத்தில் இது வெறும் ஒரு புகைப்படமாய் கிடைக்கும்.

ஒரு எழுத்தாளனின் எழுத்தாணி உங்களுக்குக் கிடைத்தால் இந்த கருவியிடம் கொடுங்கள். அவருடைய படத்தையும், அவரது சூழலையும், வீட்டையும் வாழ்க்கையையும் கொஞ்சம் நேரடியாகவே கண்டுகொள்ளலாம். இது தான் இந்தக் கருவியின் சுருக்கமான அறிமுகம்.

இந்தக் கருவி தனது அடுத்த கட்டமாக, அந்தக் காலத்தின் ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது. அதாவது நமது ஒலி அலைகள் காற்றில் அலைந்து திரியும் எனவும், அது அழிவுறாது எனவும் கூறிய அறிவியலின் அடிப்படையில் இந்தக் கருவி தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.

‘இந்தக் கண்டு பிடிப்பினால் நிகழக்கூடிய பயன்களை நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது ஆனால் இதன் நம்பகத் தன்மை என்ன?’  கேள்வி எழுந்தது

ஒரு சில குறிப்பிட்ட சோதனைகளை மேற்கொண்டிருக்கிறோம். அதன் முடிவுகள் அனைத்தையும் இப்போது வெளியிட தலைமைக் குழு அனுமதிக்கவில்லை.

“எத்தனை ஆண்டுகள் வரை இந்த ஆராய்ச்சி பின்னோக்கிச் செல்லும் ?” அடுத்த கேள்வி எழுந்தது

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்கள் வரை இதிலிருந்து கிடைக்கிறது. சில பொருட்கள் காலங்களைத் தாண்டியும் பழக்கத்தில் இருக்கும் போது அதன் உண்மையான சூழல் சரிவர பதிவாகாமல் போகவும் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தக் கண்டு பிடிப்பில் குறிப்பிட வேண்டிய மிக சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.

வர்மா சொல்ல பார்வையாளர்கள் கூர்மையானார்கள்.

அதாவது ஏதேனும் ஒரு மனிதனின் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தால், அவன் யார் எப்படி இருந்தான், எங்கே இருந்தான் என்பதை மிகத் தெளிவாக இந்த கருவி காட்டிவிடும். வர்மா சொல்லச் சொல்ல பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.

ஒரு உதாரணத்தை மட்டும் குழுவின் அனுமதியுடன் இப்போது சொல்கிறேன். நமக்குத் தரப்பட்ட ஒரு எலும்பை வைத்துப் பார்த்ததில் அது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பிரபலமான பெண்மணியினுடையது என்பது தெரிய வந்திருக்கிறது.

தற்போதைய நூற்றாண்டு மறந்து போன அந்த பெண்மணியின் பெயர் இளவரசி டயானா. 1997ல் அவர் ஒரு விபத்தில் மரணமடைந்திருக்கிறார்.
 
என்று சொல்ல கூடியிருந்தவர்கள் சிலர் தங்கள் பெருவிரல் நகத்தைப் பார்த்தார்கள். அவர்களுடைய உடலில் இம்பிளாண்ட் செய்யப்பட்டிருந்த கருவி ஆண்டு 2470 என்றது.

அன்று

வருடம் 2008.

“மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போனால் என்னதான் செய்வது ? ஏதேனும் செய்தாக வேண்டும். அதற்காக வேற்றுக் கிரகங்களுக்குச் செல்வதும் நாம் நினைப்பது போல சாத்தியமில்லை. ஆனால் ஒன்று மட்டும் சாத்தியம்“  விக்கி பேசிக்கொண்டிருந்தான்.

அந்த பல்கலைக் கழக செமினாரில், விக்கி தனது வயிட் பேப்பரை விளக்கிக் கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள் கொட்டாவியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இது மிகவும் எளிதான யோசனை. ஆனால் இதை மிகவும் தீவிரமாய் ஆராய்ந்தால் எதிர்காலத்தில் இடப் பற்றாக்குறை என்பதே இருக்காது. நாமே கிரகங்களை உருவாக்கிக் கொள்ளலாம்”

விக்கி சொல்ல கூடியிருந்தவர்கள் சிரித்தனர்.

விக்கி தொடர்ந்தான். இது சிரிப்பிற்கான சமாச்சாரமல்ல. நடைமுறை சாத்தியமானதே. கிரகம் என்று சொன்னதால் ஏதோ என்னவோ என கற்பனை செய்ய வேண்டாம். பறக்கும் நவீன குமிழிகளை ஏற்படுத்துவதே அது.

அதாவது தற்போதைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போல சில கிலோமீட்டர்கள் சதுர பரப்பளவுள்ள பறக்கும் நகரங்களை சுகாதார குமிழிகளுக்குள் அடைத்து அதை வானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விட வேண்டும். பூமியில் இடப்பற்றாக்குறை இருக்காது, மிதக்கும் குமிழிகள் தன்னிறைவு கொண்டவையாக இருக்க வழிகள் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற சில கருவிகள் கண்டுபிடிக்கப்படலாம், அல்லது பெட்ரோல் நிரப்புவதைப் போல ஆக்சிஜனை நிரப்பலாம். இந்தக் குமிழி வானில் மிதக்க அதன் அடிப்பாகத்தில் மிகப்பெரிய தளம் அமைத்து மிதக்கும் வாயு நிரப்பலாம்.

இன்னும் சொல்லப்போனால், ஏலியன்களின் பறக்கும் தட்டு போல அவை வானில் நிற்கலாம், அதிலிருந்து பூமிக்கு சிறப்பு வாகனங்கள் இயக்கலாம், 

விக்கி சொல்லிக் கொண்டே போக, கூடியிருந்தவர்கள் ஏதோ ஒரு நாவலைக் கேட்பது போல சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் அருகில் இருந்தவர்களிடம் விக்கியைப் பற்றி ஏகத்துக்கு கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

இன்று

வருடன் 2470. வர்மா தொடர்ந்தார்.

எப்போதுமே முதல் சுவடுக்குப் பிறகு தான் அடுத்த சுவடு தொடரமுடியும். அந்த வகையில் இன்றைக்கு நாம் மிதந்து கொண்டிருக்கும் இந்த குமிழி  கூட முன்பே பழைய மக்களால் முயன்று பார்த்திருக்கக் கூடியதாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

கடந்த வாரம் சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைத்தது. முன்பொரு காலத்தில் அனுமர் என்னும் ஒரு கதாபாத்திரம் ஒரு மலையைத் தூக்கிச் சுமப்பதாக ஒரு கதை உண்டாம். பழைய காலத்தில் எல்லாவற்றையுமே தீவிரமாக ஆராய்ந்து அதை பூடகமாய் சொல்லி வைப்பார்கள்.

எனவே அவர்களுடைய மிதக்கும் மலை என்பது இன்றைய குமிழ் தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அனுமர் என்பவர் பூமிக்கும் வானத்திலுள்ள குமிழிக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும் குறியீடு. அதாவது நமது டி.எஸ்.376767 குமிழிக்கும் பூமிக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் நமது ஒளி இயங்கி டிஸ்வா 376767 எனக் கொள்ளலாம்.

இப்படி பல சுவாரஸ்யமான விளக்கங்கள் நமக்குக் கிடைக்க இந்த கருவி நமக்கு மிகவும் பயன் படும்.

இன்றைக்கு நமது கண்களில் இம்ப்ளாண்ட் செய்யப்பட்டிருப்பதைப் போல முன்பு அக்ஸஸ் சிஸ்டம் இருந்திருக்கவில்லை. எனவே மனிதர்கள் இப்போது இருப்பதைப் போல ஒரு குளோபல் மானிட்டரிங் கீழ் வரவில்லை.

இப்போது இருப்பதைப் போல தப்பிக்க முடியாத சூழல் கூட அன்றைக்கு இல்லை. சிலர் சட்டத்தின் கண்களிலிருந்து தப்பி ஒளிந்து கூட வாழ்க்கை நடத்த முடிந்திருக்கிறது.

இன்றைக்கு இருப்பதைப் போல தண்டனை என்பது நமது உடலில் இம்ப்ளாண்ட் செய்யப்பட்டிருக்கும் கருவியை இயக்கி மரணமோ, ஊனமோ, வலியோ தருவதல்ல என்பதும் நாம் அறிய முடிகிறது.

அத்தகைய ஒரு அறிவியல் பலமற்ற வாழ்க்கையைத் தான் இரண்டாயிரத்தின் துவக்கங்களில் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு ஆறு இலட்சம் குமிழிகளில் வாழும் அறுநூறு கோடி மக்கள் தான் அன்றைய உலக மொத்த மக்கள் தொகையே ! என்பது வியக்க வைக்கிறது. அத்தனை குறைவான மக்கள் தொகையை வைத்துக் கொண்டு உலகம் அப்போதே திணறியிருக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி. இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள இந்த கருவி மிகவும் பயன்படும்.

வர்மா சொல்லச் சொல்ல கூடியிருந்தவர்கள் விரல்களை வட்ட வடிவமாய் அசைத்து தாங்கள் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார்கள்.

அன்று 2008

“சார்… என்னோட வயிட் பேப்பர் பிரசண்டேஷன் எப்படி இருந்தது சார்” விக்கி பிரபசர் பாண்டுரங்கனின் காதருகே பவ்யமாய் கிசுகிசுத்தான்.

“என்னய்யா பிரசண்ட் பண்ணினே ? நீ என்ன பெரிய சுஜாதான்னு நினைப்பா ? ஓவரா கற்பனையை வளத்துக்காதேன்னு எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன். குமிழி, கிமிழின்னு சொல்லி கோல்டன் வாய்ப்பை கோட்டை விட்டுட்டியே ?”  பாண்டுரங்கன் கடுப்பானார்.

“சார்.. எதிர்கால உலகம்ங்கற தலைப்பில வித்தியாசமா ஏதாச்சும் சொல்லணும்ன்னு யோசிச்சிட்டே இருந்தேன் சார். இந்த ஐடியா எப்படியோ மனசுக்குள்ள சம்மணம் போட்டு அமர்ந்துச்சு. எழுத எழுத வித்தியாசமா கற்பனைகள் வந்துட்டே இருந்துது. அதனால தான் அதை எழுதினேன். எனக்கென்னவோ எதிர்காலத்துல இது சாத்தியமாகலாம்ன்னு தான் தோணிச்சுது. அதனால தான் அதையே பிரசண்ட் பண்ணினேன். ஆனா அதுக்கு இப்படி ஒரு பதிலை நீங்க சொல்லுவீங்கன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை” விக்கி சோகமானான்.

“இதப்பாரு, எகிப்து, துருக்கி, ஜோர்தான் – இப்படி பல நாடுகளை அலசி, அவற்றுக்கிடையே இருக்கக்கூடிய தண்ணீர் பகிர்வை ஆராய்ந்து ரம்யா ஒரு பிரசண்டேஷன் குடுத்தா பார்த்தியா ? இன்னும் ஐம்பது வருஷத்துல தண்ணிக்காக நாடுகளுக்கு இடையே சண்டை வருமாம். அவ்ளோ அற்புதமா அலசி சொல்லியிருக்கா ? நீ என்னடான்னா குமிழிங்கறே, மிதக்குங்கறே, கற்பனைங்கறே, விற்பனைங்கறே. சரி..சரி.. போ.. அடுத்த வருஷமாவது நல்லா பண்ணு.” பாண்டுரங்கன், காண்டுரங்கனாகி கிளம்பினார்.

இன்று

“வர்மா.. உன்னோட கண்டுபிடிப்புக்கு அதுக்குள்ள டி.எஸ்.373459 கிட்டேயிருந்து எதிர்ப்பு வந்துடுச்சி. இந்த கண்டுபிடிப்பை உடனே அழிக்கணுமாம். இல்லேன்னா நம்ம குமிழிக்கு பிரச்சனை தருவாங்களாம்” வர்மாவிடம் ஆராய்ச்சிக் குழு தலைவர் பேசினார்.

“என்னவாம்… என்ன பிரச்சனையாம் ?”

“இல்லை.. பல ஆயிரம் வருஷங்களா அவங்க நம்பிட்டிருக்கிற மத நம்பிக்கைகளை எல்லாம் இந்தக் கருவி அழிச்சுடுமாம். மதம், மதநூல்கள், மதத் தலைவர்கள், புராணங்கள் எல்லாவற்றோட உண்மை நிலையும் இந்தக் கருவியால வெளியே வந்துடும்ன்னு அவங்க பயப்படறாங்க”

“அது நல்லது தானே சார்… உண்மை எல்லாருக்கும் தெரியட்டுமே ?”

“அப்படியில்லை வர்மா. டி.எஸ்.376767 ங்கறது மிர்ஸா தெய்வத்தை வணங்கறவங்களோட குமிழி. அந்த தெய்வம் பொய்யின்னு ஒருவேளை நீ சொல்லிடுவியோன்னு பயப்படறாங்க. அப்படியே ஒவ்வோர் மதம் சார்ந்த குமிழிகளும் பயந்துட்டு நமக்கு எதிரா போராட ஆரம்பிச்சுடுவாங்களோன்னு எனக்கு கவலையா இருக்கு ?. அறிவியல் கண்டுபிடிப்பை விட மக்களுடைய மத உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கணும்ன்னு சர்வதேச குமிழிக் குழு சொல்லிடுமோன்னு டென்ஷனா இருக்கு”

“அவங்க எது வேணும்னாலும் பண்ணட்டும் சார். எதுவேணா சொல்லட்டும். அதுக்காக இந்த உழைப்பை வீணடிக்கக் கூடாது சார். இந்த கண்டுபிடிப்பை நாம நல்லமுறையில பயன்படுத்தணும் சார்.” வர்மா ஆவேசமாய் பேச தலைவர் சாந்தமாய் பேசினார்.

“ இந்த உலகத்துல எதையும் நாம மறைவா செய்ய முடியாது வர்மா.. அது உனக்கே தெரியும். கொஞ்சம் பொறுமை காப்போம்”

“என்னசார்…. இப்போ என்ன பண்ண சொல்றீங்க. உண்மையைச் சொன்னா எவனுமே நம்ப மாட்டேங்கறான்… உண்மை என்ன அவ்வளவு மோசமா ?”

‘என்ன ஏதோ புதுசா சொல்றே ? என்ன உண்மை ?’

நேற்று, என்னோட சிந்தனையை ஐநூறு ஆண்டுக்கு முந்தைய ஒருத்தனுக்கு அனுப்பி வெச்சேன். அவன் அங்கே நிராகரிப்பை வாங்கிட்டு நிக்கறான். நான் இங்கே நிராகரிப்பை வாங்கிட்டு நிக்கறேன்.

அவன் எதிர்கால உண்மையைச் சொன்னான். நான் கடந்த கால உண்மையை சொல்ல நினைச்சேன்.

வர்மா சொல்ல தலைவர் நெற்றி சுருக்கினார்.

அந்த வேலையை நீ இன்னும் வுடலையா ? யாரந்த அப்பாவி ?

ஏதோ ஒரு விக்கி. 2008ல இருக்கான்.