ரஷ்யாவைக் கழற்றி விடும் இந்தியா ! அமெரிக்க தந்திரமா ?

russian-army

அணுசக்தியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் சில மாதங்களுக்கு முன் நமது பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது. நானும் வந்து விட்டேன் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டது இந்தியா. வருடக் கணக்கில் கூட தண்ணீருக்கு அடியிலே பதுங்கிக் கிடக்கும் சக்தி கொண்டது இந்த நீர்மூழ்கிக் கப்பல். தரை, வான், கடல் என மூன்று இடங்களிலும் இனிமேல் இந்தியா படு ஸ்ட்ராங். இந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க உதவிய ரஷ்யாவுக்கு இந்தியா பாராட்டு மழையைப் பொழியவும் தவறவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இப்போது பழைய பந்தமெல்லாம் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ராணுவ சமாச்சாரங்களைப் பொறுத்தவரை ரஷ்யா தான் இந்தியாவுக்கு எல்லாமே. ஆனால் இப்போதோ நிலமை தலை கீழ். இனிமேல் இந்தியா ஆயுதங்களை வாங்கப் போவது ரஷ்யாவிடமிருந்தல்ல. அமெரிக்காவிடமிருந்து ! இதற்கான ஒப்பந்தத்தை போடுவதே ஹிலாரி கிளிண்டனின் கடந்த மாத இந்திய வரவின் நோக்கம்.

இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகியிருக்கும் இந்த ஒப்பந்தம் சுமார் 30 பில்லியன் டாலர்களுக்கானது. லாக்கீட் மார்ட்டின், போயிங் எனும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தான் இனிமேல் இந்தியாவுக்கான ஆயுதங்களைத் தயாரிக்கப் போகின்றன. ரஷ்யாவிடமிருந்து டாங்கிகளையும், பழைய ஒப்பந்த பாக்கிகளையும் மட்டுமே இந்தியா இனிமேல் பெறும். டாங்கிகள் விஷயத்தில் கூட இனிமேல் ரஷ்யா இந்தியாவின் ஏக போக சப்ளையராக இருக்கப் போவதில்லை.

இந்திய மீடியாக்கள் அடக்கி வாசித்த இந்த விஷயத்தை விலாவரியாக அலசுகின்றன ரஷ்ய நாளிதழ்கள். இந்தியாவின் இந்த முடிவு இந்தியாவை விட ரஷ்யாவுக்குத் தான் மாபெரும் இழப்பு. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய ராணுவ கஸ்டமராய் இருந்த இந்தியா போய்விட்டது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் பல்லுடைந்து கிடக்கும் ரஷ்யாவுக்கு இது மற்றுமொரு பலத்த அடி. என்றெல்லாம் ரஷ்ய தலைப்புச் செய்திகள் பதட்டப்படுகின்றன.

இந்தியாவின் முடிவில் தவறில்லை. பிரச்சினைக்குக் காரணம் ரஷ்யா தான். ரஷ்யா தரும் தரமற்ற ஆயுதங்களை வாங்க வேண்டுமென இந்தியாவிற்குத் தலையெழுத்தா என்ன ? சொல்லும் எதையும் சொன்ன நேரத்தில் ரஷ்யா கொடுப்பதில்லை. விமானம் தாங்கியான ‘அட்மிரல் கார்ஷ்கோவ்’ ஐ நவீனப்படுத்துங்கள் என இந்தியா சலிக்கும் வரை கேட்ட பின்பே சரி செய்தார்கள். தருகிறோம் என்று சொன்ன போர்க்கப்பல்களையோ, நீர்மூழ்கிக் கப்பல்களையோ சொன்ன நேரத்தில் தருவதில்லை. பின் எப்படி இந்திய ஒப்பந்தம் தொடரும் ?. இப்படியெல்லாம் ரஷ்யாவைப் பற்றி குற்றம் சாட்டுவது இந்தியா அல்ல. ரஷ்யாவின் ராணுவ அனலிஸ்ட்களே தான்.

ரஷ்யா இந்தியாவுக்குக் கடைசியாக அனுப்பிய ராக்கெட்களில் 50 சதவீதம் ராக்கெட்கள் பழுதானவை. இந்தியாவின் கோபம் நியாயமானதே. ரஷ்யாவிடம் இப்போது நவீனமும் இல்லை, திறமையான ஆட்களும் இல்லை. இதே நிலமை நீடித்தால் இந்தியாவைப் போல எல்லா கஸ்டமர்களையும் இழக்க வேண்டியது தான். உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்ப ரஷ்யா ஏதேனும் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறது ரஷ்யாவின் பிரவ்டா நாளிதழ்.

ரஷ்யாவிற்கு மாற்றாக ஒரு ராணுவ பார்ட்னரை இந்தியா தேட ஆரம்பித்து நீண்ட நாட்களாகிறது. இஸ்ரேல், பிரான்ஸ் என தேடுதல் வேட்டை நடத்திய இந்தியா கடைசியில் வந்து சேர்ந்திருப்பது அமெரிக்காவிடம். இந்தியாவுடனான பிஸினஸ் நழுவிப் போன கவலை ஒருபுறம். தனது பரம எதிரியான அமெரிக்காவுடன் இந்தியா கை கோர்ந்திருக்கிறதே எனும் பதட்டம் ஒருபுறம் என்பதே ரஷ்யாவின் இன்றைய நிலை.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதில் அமெரிக்கா கில்லாடி. ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தவே இப்படிப்பட்ட பல முயற்சிகளை எடுக்கிறது. ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி அதன் மூலம் ரஷ்யாவைப் பணிய வைக்கலாம் என்பதே அமெரிக்காவின் எண்ணம் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுடனான உறவின் விரிசலைச் சரிசெய்ய ரஷ்யா சீனாவை இறுகப் பிடித்திருக்கிறது. இரண்டு நாடுகளுமாக பல்வேறு பேச்சுவார்த்தைகளையும், உடன்பாடுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஜூலை கடைசியில் “அமைதிப் பணி 2009” எனும் ராணுவ அணி வகுப்பு ஒன்றை இரண்டு நாடுகளும் கூட்டாக நடத்தியிருக்கின்றன. இதற்கான கலந்துரையாடல், ஒப்பந்தம் எல்லாம் நடந்தது ரஷ்யாவின் கபார்ஸ்க் நகரில். அணிவகுப்பு நடந்ததோ சீனாவில் டயோனன் நகரில் !

“அமெரிக்காவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ரஷ்யாவுக்குத் தெரியும். ரஷ்யா இப்போது சீனாவுடன் நெருக்கமாக செயலாற்றுகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மிகவும் பலமானது. ரஷ்யா அமெரிக்காவைக் கண்டு ஒருபோதும் பயப்படப் போவதில்லை” என அதிரடியாகப் பேசுகிறார் அலெக்சாண்டர் கிராமாச்சின். இவர் ரஷ்யாவின் சர்வதேச தொடர்பாளராகவும், “,பொலிடிகல் மற்றும் மிலிடரி அனாலிசில்” நிறுவனத்தின் இயக்குனராகவும் இருப்பவர்.

ரஷ்யா ஒரு மாபெரும் சக்தி என்பதில் அமெரிக்காவுக்கு மாற்றுக் கருத்தில்லை. எங்களது பல கொள்கைகளை ரஷ்யா வெறுக்கிறது. அதே போல ரஷ்யாவின் பல கொள்கைகளை நாங்கள் வெறுக்கிறோம். நாடுகளிடையே கொள்கைகளில் வேற்றுமை வருவது சகஜம். ஆனாலும் இரண்டு நாடுகளும் நட்புறவுடன் செயல்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்கிறார் ஹிலாரி கிளிண்டன்.

ரஷ்யாவும் சீனாவும் ‘பெஸ்ட் பிரண்ட்ஸ்’ நாடகம் நடத்துகிறது. உண்மையில் ரஷ்யாவும் சீனாவும் ஒருபோதும் உண்மையான நட்புறவுடன் இருக்க முடியாது. ஒருவர் எல்லைக்குள் இன்னொருவர் புகுந்து பலம், பலவீனங்களைப் படிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள் எனும் கருத்தும் எழாமலில்லை.

எப்படியோ, ஒருபுறம் இந்தியா ரஷ்யாவுடனான அரை நூற்றாண்டு கால இறுக்கமான பிடியைத் தளர்த்தியிருக்கிறது. இன்னொரு புறம் ரஷ்யா, சீனாவுடனான உறவை வலுப்படுத்தியிருக்கிறது. இடையில் அமெரிக்கா இந்தியாவை இறுகப் பிடித்திருக்கிறது. இப்படி சர்வதேச அரங்கில் நிகழும் அரசியல் நாடகங்கள் திகில் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை !

 மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின் வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.

சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை  இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி !

வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக மாறியிருக்கிறது.

ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும் சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.

இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை, சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு காரணங்கள் நிரப்புகின்றன.

சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால் கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.

தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு. சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.

பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

சீனாவின் ஜூராசிக் பார்க்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஜூராசிக் பார்க் எனும் திரைப்படத்தை இயக்கியபின் டைனோசர் குறித்த அறிதல் உலகின் கடை கோடி வரைக்கும் சட்டென பரவியது.

எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், சிறுவர்கள், வணிக வியாபார நிறுவனங்கள் என பல்வேறு நிலையினரின் ஆர்வத்தை அந்தத் திரைப்படம் தூண்டி விட்டது என்றால் மிகையல்ல. தற்போது சீனாவின் மிகப்பெரிய டைனோசர் பார்க் பார்வையாளர்களுக்காய் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் யுனான் பகுதியில் துவங்கப்பட்டுள்ள டைனோசர் பள்ளத்தாக்கு கிராபிக்ஸ் கலக்கல்களுக்கான தளம் அல்ல. உண்மையிலேயே டைனோசர்களின் உறை நிலை படிமங்கள் புதைந்து கிடக்கும் கல்லறைத் தோட்டம் அது.

இந்தப் பூங்காவில் 60 உண்மையான டைனோசர் எலும்புக் கூடுகள் உள்ளன என்பது வியப்பூட்டும் செய்தியாகும். இதில் நூறு மில்லியன் வருடங்களுக்கு முந்தைய எலும்புக் கூடும் உண்டு என சொல்லப்படுகிறது.

பலகோடி ரூபாய் செலவில், நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் உள்ளே ஆங்காங்கே சிறுவர்களைக் குஷிப்படுத்தும் விதமாக பல டைனோசர் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை துவங்கப்பட்ட இந்த பூங்காவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.