மனைவியிடம் கணவன் என்னதான் எதிர்பார்க்கிறான் ?

kvr1


ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.

“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”

” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.

“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.

சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.

” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள். அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்” குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குரு கடைசியாகச் சொன்னார்,

“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”

குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.

குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.

தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.

அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு க‌ண‌வ‌னின் க‌ன‌வு அன்பு என்ப‌தைத் த‌விர‌ வேறு என்ன‌வாக‌ இருக்க‌ முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புக‌ளைக் கூட‌ அவ‌ன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு க‌ரை புர‌ண்டு ஓடினால் போதும்.

பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.

விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் ம‌னைவி வேண்டும் என்ப‌து ஆண்க‌ளின் க‌ன‌வுக‌ளில் முக்கிய‌மான‌து.

ஆணும் பெண்ணும் இர‌ண்டு சிற‌குக‌ளாக‌ மாறி குடும்ப‌ம் உட‌லைச் சும‌ந்து செல்ல‌ வேண்டும். ஆணும் பெண்ணும் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளாக‌ மாறி நாண‌ய‌த்துக்கு ம‌திப்பு கூட்ட‌ வேண்டும். ப‌க‌லின் வெப்ப‌மாய் ஆண் மாறும் போது, இர‌வின் த‌ண்மையாய் பெண் மாற‌ வேண்டும். வெப்ப‌மாய் பெண் மாறினால் நில‌வாய் ஆண் மாற‌ வேண்டும். இப்ப‌டி இணைந்து ப‌ய‌ணிக்கும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள் போல‌ இணைந்தே திரியும் ஒரு அற்புத‌ வாழ்க்கை க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் சிற‌ப்பிட‌ம் பிடிக்கும்.

பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.

1

நேர‌டியாக‌ எதையும் பேசுவ‌து ஆண்க‌ளின் இய‌ல்பு. பாத்திர‌த்தின் ச‌த்த‌த்திலோ, க‌த‌வை சாத்தும் வேக‌த்திலோ, பிள்ளைக‌ளைத் திட்டும் வார்த்தைக‌ளிலோ கோப‌த்தைக் காட்டுவ‌து பெண்க‌ளின் இய‌ல்பு. எதையும் நேர‌டியாக‌ப் பேசும் நிலைக்கு த‌ன‌து ம‌னைவி வ‌ர‌வேண்டும். அதுவும் க‌ண்க‌ளில் அன‌லோடு வ‌ராம‌ல் நிழலோடு வ‌ர‌வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் நிச்ச‌ய‌ம் உண்டு.

2

ப‌க்க‌த்து வீட்டுக் க‌தைக‌ளிலிருந்தோ, சீரிய‌லில் வ‌ரும் குடும்ப‌ங்க‌ளிலிருந்தோ, தூர‌த்துச் சொந்த‌க்கார‌னின் ப‌ஜ்ஜி உரையாட‌ல்க‌ளிலிருந்தோ, அம்மாக்க‌ளின் உர‌ச‌ல்க‌ளில் இருந்தோ அடுத்த‌ ச‌ண்டைக்கான‌ நெருப்பை ம‌னைவி பெற்று விட‌க் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத‌ ம‌னித‌ன் இருக்க‌ முடியுமா ?

3

” ப‌திலை ந‌ம்ப‌ப் போவ‌தில்லை” எனும் முடிவுட‌ன், “ஏங்க‌ லேட்டு…” என‌க் கேட்கும் ம‌னைவிக்குப் ப‌தில் சொல்லும் உல‌க‌ ம‌கா ச‌ங்க‌ட‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ வேண்டும் எனும் க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் இருக்க‌ முடியுமா ?

4

ந‌ம‌க்கு ம‌ட்டும் ஏன் ம‌ற‌தியை ஆண்ட‌வ‌ன் கொடுத்தான். பெண்க‌ளுக்கு ம‌ட்டும் ஏன் ஞாப‌க‌ ச‌க்தியை அள‌வுக்கு அதிக‌மாக‌ கொடுத்தார். “கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை உட‌னே ம‌ற‌ந்து ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ம‌ன‌சுல‌ வெச்சுக்க‌ மாட்டாளா” என் ம‌னைவி ? எனும் க‌ன‌வில்லாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

5

வீட்டுக்காக‌, ம‌னைவிக்காக‌ என்ன‌ செய்தாலும் ஒரு சின்ன‌ பாராட்டு கூட‌ கிடைக்க‌ மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன‌ த‌ப்பு ப‌ண்ணினா கூட‌ போஸ்ட‌ர் அடிச்சு ஒட்டாத‌ குறையா ச‌ண்டை ந‌ட‌க்குது. எப்போ ந‌ம்ம‌ ம‌னைவி நாம‌ ப‌ண்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பாராட்ட‌ப் போறாங்க‌ ? எனும் க‌ன‌வு வ‌ராம‌ல் போகுமா என்ன ?

6

பிள்ளைங்க‌ள‌ பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா அம்மாவைப் பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா தோழிக‌ளைப் பாக்க‌ வேண்டிய‌து. ஒண்ணும் இல்லேன்னா சீரிய‌லைப் பாக்க‌ வேண்டிய‌து. எப்போ தான் ந‌ம்ம‌ ம‌னைவி ந‌ம்மைப் பார்ப்பாங்க‌ எனும் எதிர்பார்ப்பு க‌ல‌ந்த‌ க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் யார் ?7

தாம்ப‌த்ய‌ம் என்ப‌து ஆன‌ந்த‌த்தின் ப‌கிர்த‌ல். அது வ‌லுக்க‌ட்டாய‌மாய் எழுதி வாங்கும் உயில்ப்ப‌த்திர‌ம் அல்ல‌. அதில் உட‌ல்க‌ளை விட‌ அதிக‌ம் உண‌ர்வுக‌ள் பேச‌ வேண்டும். அதை ஒரு ஆயுத‌மாக‌வோ, ப‌ழி வாங்கும் யுத்தியாக‌வோ ம‌னைவி ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூடாது எனும் க‌ன‌வு க‌ண‌வ‌னுக்கு இல்லாமல் போகுமா.

8

என்னை புரிஞ்சுக்க‌வே மாட்டீங்க‌” என‌ ம‌னைவியின் குர‌ல் ஒலிக்காத‌ வீடுக‌ள் இருக்க‌ முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள‌வில்லை என்றே ம‌னைவிக‌ள் சொல்வார்க‌ள். புரிந்து கொள்வ‌து என்ப‌து அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை, சொல்வ‌த‌ற்கெல்லாம் ஆமாம் போடுவ‌து. இந்த‌ நிலை மாற‌ வேண்டுமென‌ ப‌க‌ல் க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டோ ?

9

ந‌ன்றி என்ப‌து ரொம்ப‌ காஸ்ட்லி விஷ‌ய‌மா என்ன‌ ? ஒரு சின்ன‌ ந‌ன்றி கூட‌ சொல்ல‌ மாட்டாங்க‌ளா ந‌ம்ம‌ மனைவி என‌ புல‌ம்பாத( ம‌ன‌துக்குள் தான் ) க‌ண‌வ‌ன் யார் ? ம‌னைவி ந‌ம் செய‌லுக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டுமென‌ க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

10

நாம் எடுக்கின்ற‌ முய‌ற்சிக‌ளுக்கு ஊக்க‌மும், ஆத‌ர‌வும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌ன்க‌ளின் க‌ன‌வுக‌ளில் ஒன்று. அப்ப‌டி முழு ஆத‌ர‌வு கிடைக்காவிட்டால் கூட‌ குத‌ர்க்க‌மாய்ப் பேசி எரிச்ச‌ல‌டைய‌ச் செய்யாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌க் க‌ன‌வு தானே !

இப்படி எல்லா க‌ண்க‌ளிலும் க‌ன‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌, அந்த‌க் க‌ன‌வுக‌ள் ப‌லிப்ப‌தும் ப‌லிக்காத‌தும் ம‌னைவிய‌ரின் க‌டிவாள‌த்தில் அட‌ங்கியிருக்கின்ற‌ன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?

ச‌ரி, ம‌னைவிய‌ரின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாம‌லேயே உங்க‌ளுக்குத் தெரியும். அப்புற‌மென்ன‌ ? க‌ன‌வுக‌ள் தொட‌ர‌ வாழ்த்துக‌ள்.

 

ஏமாற்றும் காதலனா ?

kvr3

“அவன் இப்படிச் செய்வான்னு கொஞ்சம் கூட நினைச்சே பாக்கலடி” ர‌ம்யாவின் விசும்பல் பிரியாவையும் கலங்க வைத்தது.

கடந்த ஒரு வாரமா இந்தப் புலம்பல் தான். ர‌ம்யாவை எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் பிரியா ரொம்பவே குழம்பிப் போனாள். இருக்காதா பின்னே ? அவன் செய்த காரியம் அப்படி !

அந்த அவன் மிஸ்டர். விஜ‌ய் ! விஜ‌யும், ர‌ம்யாவும் உயிருக்கு உயிராய் பழகினார்கள். அதிலும் ர‌ம்யாவுக்கு விஜ‌ய் தான் எல்லாமே. விஜ‌ய் இல்லாத ஒரு வாழ்க்கையையெல்லாம் அவள் நெனச்சுக் கூட பாத்ததில்லை. நின்னா, பேசினா, சாப்பிட்டா என எப்பவுமே புராணம் தான். அப்படி இறுக்கமாய் இருந்த ர‌ம்யா-விஜ‌ய் காதலில் கொஞ்ச நாளாகவே சின்னச் சின்ன விரிசல்கள். காரணம் விஜ‌யின் வாழ்க்கையில் புதிதாய் நுழைந்திருந்த பெண். சுடர் !

இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து வனப்புடன் வந்த சுடருக்கு நெடுநெடுவென வளர்ந்திருந்த விஜ‌யின் மீது ஒரு சபலம். உரசல்களில் பற்றிக் கொண்டான் விஜ‌ய். விஜ‌ய்க்கு ர‌ம்யாவின் அன்பையும் மீறி சுடரின் மேனியின் மீது மோகம் முளை விட்டது. அடிக்கடி இருவரும் தனியே சந்தித்துக் கொள்வதெல்லாம் சகஜமாய் இருந்தது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கடுகளவு கூட ர‌ம்யா சந்தேகப் பட்டதே இல்லை. கடந்த வாரம் விஜ‌யின் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதம் தான் அவளைப் புரட்டிப் போட்டது. நான்கைந்து டன் மலையை தலையில் போட்டதுபோல இருந்தது அந்த மெல்லிய காகிதம்.

சுடர் தான் காதலை காகிதத்தில் பொழிந்திருந்தாள். “ஓனி மோனிக் கண்ணா” என்றெல்லாம் அவள் எழுதியிருந்த கடிதம் ஏதோ சுடரும் விஜ‌யும் நான்கு ஜென்மமாகக் காதலித்து வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டது. போதாக்குறைக்கு சமீபகாலமாக நடந்த அவர்களுடைய காதல் சில்மிஷங்களையெல்லாம் வேறு கடிதத்தில் கிறுக்கியிருக்க ர‌ம்யாவுக்கு வாழ்க்கையே இருட்டியது.

“விட்டுருடி.. கல்யாணத்துக்கு முன்னாடியே விஷயம் தெரிஞ்சுதேன்னு சந்தோசப்படு. கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி அடுத்தவ வாலைப் புடிச்சு சுத்தியிருந்தான்னா என்ன பண்றது?” பிரியாவின் நிஜமான அக்கறையைக் கேட்கும் நிலையில் ர‌ம்யா இல்லை.

“விஜ‌ய் கூட ஏமாற்றுவானா ? பச்சைப் புள்ளை மாதிரி இருப்பானே ! அப்போ இவ்ளோ நாள் பொழிஞ்ச அன்பெல்லாம் சும்மாவா ? என்னை விட அவ இப்போ அவனுக்கு பெட்டரா தெரியுதா ? “   ர‌ம்யாவின் மனதில் கேள்விகளுக்குப் பதிலாய் கேள்விகளே முளைத்தன.

பிரியாவும் ர‌ம்யாவும் நீண்டகால தோழிகள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு அவர்களைத் தவிர வேறு தோழிகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய தோழிகள். பிரியா கொஞ்சம் ஸ்மார்ட் பேர்வழி. அவளே இந்த இந்த சூழ்நிலையைச் சமாளிக்க ரொம்பவே திணறிவிட்டாள்.

வாரம் ஒன்று ஓடியது.

ர‌ம்யாவிடம் கடந்த வாரத்தில் இருந்த படபடப்பும், வெறுப்பும் கொஞ்சம் தணிந்திருந்தது. எதிரே நீளமாய், நீலமாய் தெரிந்த கடலைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று பேச ஆரம்பித்தாள் பிரியா.

“ர‌ம்யா…. விஜ‌ய் பத்தி நீ என்ன நினைக்கிறே ?”

“நினைக்கிறதுக்கு என்ன இருக்கு ? லாஸ்ட் ஒன் வீக் நான் அவன் கூட பேசலை. அவன் கூட பேசாம ஒரு வாரம் இருக்கிறது இதான் பஸ்ட் டைம். எப்படியோ சமாளிச்சுட்டேன்.”

“வெரி குட்… இத பாரு… உன்னோட வெல் விஷரா சொல்றேன். இனிமே இந்த விஜ‌ய் உனக்கு வேண்டாம்..”

“நானும் அப்படித் தான் நினைக்கிறேன்… பட்…”

“என்ன இழுக்கறே…”

“இல்லே… பழைய விஷயங்களையெல்லாம் நினைக்கும்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ஸீ… கஷ்டப்படவேண்டியது அவன். நீயில்லை. நீ எந்தத் தப்பும் பண்ணல. அதனால தான் சொல்றேன். இனி அவனோட உன் வாழ்க்கை சந்தோசமா இருக்காது” பிரியா சொல்ல ஆரம்பித்தாள்.

உன்னோட நம்பிக்கையை அவன் எப்போ உடைச்சானோ அந்த வினாடியே இந்த பந்தம் முடிஞ்சு போச்சு. கையும் களவுமா பிடிபட்டுட்டான். அதனால தான் உன் கிட்டே ஒரு விளக்கம் சொல்லக் கூட ஆளைக் காணோம். இப்போதைக்கு சுடரோட பிடியில அவன் கிடக்கட்டும். பட், என்னிக்காவது அவன் ரியலைஸ் பண்ணுவான்.

பஸ்ட் ஆஃப் ஆல், நீ இந்த முடிவை மிக மிகத் தெளிவா எடுத்தே ஆகணும். நோ மோர் விஜ‌ய் இன் யுவர் லைஃப். இது தான் ரொம்ப முக்கியம். இந்த முடிவைப் பொறுத்து தான் உன்னோட அடுத்தடுத்த முன்னேற்றமே இருக்கும். சோ, மறுபடியும் சொல்றேன். அவன் வேண்டாம்ங்கற முடிவை கல்வெட்டு மாதிரி மனசுல எழுதிக்கோ.

இந்த விஷயம் இதோட முடிஞ்சு போகாது. என்னிக்கு அவனுக்கு சுடர் சுடுதோ அல்லது போரடிக்குதோ உடனே உன்னைத் தேடுவான். உன்னோட அருமை அவனுக்கு அப்போ தான் தெரியும். இல்லேன்னா, உன்னோட தேவை அவனுக்கு அப்போ வரும். மே பி, அவன் உன்னை தொந்தரவு பண்ணுவான். ரொம்ப செண்டிமெண்டா பேசி குழப்பப் பாப்பான். இல்லேன்னா பழைய எவிடன்ஸ் எதையாச்சும் வெச்சு மிரட்டப் பாப்பான். அதனால ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். நீ வேற யாரையாச்சும் லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ அவன் சைக்கோத் தனமா கூட செயல்படக் சேன்ஸ் இருக்கு. நான் உன்னை பயப்படுத்தறதுக்காக சொல்லல, தட்ஸ் லைஃப் !

பிரியா சொல்லச் சொல்ல ர‌ம்யாவுக்கு பயமும், குழப்பமும் ஒருசேர வந்து தொற்றிக் கொண்டது. “கை ரேகை பாக்கறீங்களாம்மா” என்று நெருங்கிய பாட்டியை நிராகரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள் பிரியா. ர‌ம்யா மணலில் கிறுக்கத் தொடங்கினாள்.

ஒருவேளை அவன் போன் பண்ணினா நல்லது. இல்லேன்னா நீயே ஒரு போன் பண்ணி, “சாரி.. இனிமே நமக்குள்ள எந்த விதமான உறவும் கிடையாது” ன்னு தெளிவா சொல்லிடு. உன்னோட குரல்ல ஏமாற்றம், அழுகைம், ஏக்கம், கோபம் ன்னு எதுவும் காட்டாதே. ரொம்ப நார்மலா பேசு. நீ என்ன மனநிலைல பேசறேன்னு அவனுக்கு தெரியக் கூடாது. பட், நீ இனிமே அவனை லவ் பண்ணப் போறதில்லேங்கற மெசேஜ் அவனுக்குப் போய் சேரணும் அது முக்கியம். காரணம் கேட்டான்னா, சுடரோட “கொஞ்சல் லெட்டர்” மேட்டரை கிளியரா சொல்லிடு.

நிறைய பேர் பண்ற ஒரு பெரிய தப்பு என்னண்ணா, “சரி, லவ் தான் பண்ணலே.. ஃபைன்… பிரண்ட்ஸா இருப்போமே ?” ன்னு ஒரு படி இறங்கிடறது தான். இந்த விஷயத்துல ஆம்பளைங்க ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. தேவையில்லாம உன்னோட டென்ஷனும், மன அழுத்தமும் அதிகமாகும். ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ, ஒரு தடவை சின்சியரா லவ் பண்ணின ஒருத்தனை ஒரு நல்ல நண்பனா உன்னால பாக்கவே முடியாது. உன்னால என்ன, யாராலயுமே பாக்க முடியாது. இது தான் உண்மை ! மற்ற டயலாக்ஸ் எல்லாமே வெறும் சால்ஜாப்பு தான்.

உன்னைப் பாக்கணும், உன் கிட்டே கொஞ்சம் பேசணும்ன்னு இறங்கி வந்தான்னா அவாய்ட் பண்ணு. “இப்போ முடியாது வேணும்ன்னா ஒரு ஆறு மாசம் கழிச்சு மீட் பண்ணுவோமே” ன்னு சொல்லு. சந்திக்கிறது ரொம்ப டேஞ்சர். உன்னோட உறுதி உடையவும் கூடாது, உன் வாழ்க்கை சிதையவும் கூடாது. சோ, அவனைப் பாக்கறதை அவாய்ட் பண்ணியே ஆகணும்.

அவனை ஞாபகப் படுத்தற பொருள் எதையும் வீட்லயோ, கையிலயோ வெச்சுக்காதே. அவனோட லவ் லெட்டர்ஸை எல்லாம் கிழிச்சுப் போடு. போட்டோ கீட்டோ ஏதாச்சும் இருந்தா எரிச்சுப் போடு. அவன் தந்த கிஃப்ட் ஏதாச்சும் இருந்தா ஒண்ணு அவன் கிட்டேயே குடுத்துடு. இல்லேன்னா டிஸ்போஸ் பண்ணிடு. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவனை ஞாபகப் படுத்தும். இது ரொம்ப கஷ்டம். எவ்வளவுக்கு எவ்வளவு அவனோட நினைவையும், அவனை ஞாபகப் படுத்தற பொருட்களையும் விட்டு தூரமா போறியோ அந்த அளவுக்கு நீ சீக்கிரமா நார்மல் ஆயிடுவே. இது தான் நிறைய கவுன்சிலிங்ல சொல்ற பாலபாடம்.

அதே போல அவனோட பேவரிட் பிளேஸஸ், ஹோட்டல்ஸ், அவனோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கொஞ்ச நாளைக்கு அவாய்ட் பண்ணு. அவனோட பிரண்ட்ஸ் மூலமா அவனுக்கு தேவையில்லாத இன்பர்மேஷன் போறதுக்கு அது காரணமாயிடும். அவனை நேரில பாக்க வேண்டிய சேன்ஸ் கூட வந்துடும். தட்ஸ் நாட் குட். உன்னோட மனசும் ரொம்ப காயப்படும். சோ, அதையெல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்ணு.

அவனோட எஸ்.எம்.எஸ், இ-மெயில் எதுக்குமே நீ ரிப்ளை பண்ணாதே. அது கெஞ்சலா இருக்கலாம், கொஞ்சலா இருக்கலாம், மிரட்டலா இருக்கலாம். நீ அதை வாசித்தது போலவே காட்டிக்க வேண்டாம். ஜஸ்ட் இக்னோர் ! அவ்ளோ தான். அவனுக்கு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு வரி அனுப்பத் தோணும், பட்.. வேண்டாம். சொல்லாம இருக்கிற வார்த்தைக்குத் தான் மரியாதை அதிகம். வலிமையும் அதிகம் ! சோ, ஜஸ்ட் இக்னோர் !

இந்த பிரிவை ஒரு துக்கம் மாதிரி அனுசரிக்காதே. ஒரு புதிய தொடக்கம் மாதிரி கொண்டாடு. தேவையில்லாம ரொமாண்டிக் சாங் கேக்கறது. குப்புறப் படுத்து சொகப் பாட்டு கேக்கறது. புலம்பறது. அவன் இல்லேன்னா லைஃப்பே இல்லேன்னு பெனாத்தறது எல்லாமே சுத்த வேஸ்ட். நல்ல எனர்ஜட்டிக் விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்தணும். அது தான் ரொம்ப முக்கியம்.

ஏதாச்சும் இருந்தா என் கிட்டே கொட்டு. சும்மா மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்காதே. தேவையில்லாம மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டுப் பூட்டினா இல்லாத நோயெல்லாம் வந்து சேரும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துட்டு ஜாலியா இருக்கப் பாரு. உனக்குப் பிடிச்ச விஷயங்களை நிறைய செய். படம் பாரு. டூர் போ. பிரண்ட்ஸைப் போய் பாரு. பட், ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. விஜ‌யை வெறுப்பேத்தணும்ன்னு நினைச்சு எதையும் செய்யாதே. அது நீ அவனை மறக்கலேங்கறதுக்கு அடையாளம். சோ, எதைச் செஞ்சாலும் உனக்காக, உன் சந்தோசத்துக்காக செய் !

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நாளைக்கு அவன் வீட்டுக்கு வந்து கெஞ்சினான், மன்னிச்சுடுன்னு சொன்னான், தப்பு பண்ணிட்டேன்னு அழுதான்னு சொல்லிட்டு வராதே. அடிச்சே கொன்னுடுவேன். ஸ்டாப் ஈஸ் ஸ்டாப் ! அவ்ளோ தான். புல் ஸ்டாப் போட்டதை மாத்தாதே. இன்னிக்கு சுடரைத் தேடி போனவன், நாளைக்கு இன்னொரு பொண்ணைத் தேடிப் போகமாட்டான்னு என்ன நிச்சயம் ?

ஒருவேளை உனக்குள்ள ரொம்ப ஆத்திரம் இருந்தா, நீ ஒருதடவை விஜ‌யைப் பார்த்து பேசிடு. பட், பேசும்போ “இது தான் லாஸ்ட் டைம். இனிமே பேச மாட்டேன். நீ இப்படி என்னை ஏமாத்துவேன்னு நினைச்சுப் பாக்கலேன்னு” பேசலாம் தப்பில்லை. இது உன்னோட சாய்ஸ். அவன்கிட்டே நேரடியா பேசி இந்த ரிலேஷனை முடிக்கணும்ன்னு உனக்கு கட்டாயமா தோணினா மட்டும் இதைப் பண்ணு.

டைம் ஈஸ் த பெஸ்ட் ஹீலர் ன்னு சொல்லுவாங்க. அது இந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப உண்மை. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும். வாழ்க்கைல நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கொ. அது தான் உண்மையும் கூட ! உன்னோட எமோஷன்ஸ், கோபம், எரிச்சல் எல்லாத்தையும் எழுது. எழுதறது ஒரு வடிகால். ஆனா அதை அப்படியே அவனுக்கு அனுப்பி மட்டும் வெச்சுடாதே !

மைண்டை டைவர்ட் பண்ணனும். அது தான் முக்கியம். ஏதாச்சும் புது ஹாபி ஆரம்பிக்கலாம். யோகா கிளாஸ் போலாம். டு சம்திங். அவன் உன்னைப்பற்றி ஏதாச்சும் கதை கட்டி வுட்டா உடட்டும். அவன் எப்படிப்பட்டவன் ன்னு நீ அதை வெச்சு புரிஞ்சுக்கலாம். அடிக்கிற காத்துக்கெல்லாம் வேலி கட்ட முடியாது.

“என்ன சொல்றதெல்லாம் புரியுதா ? இல்லை கனவுலகத்துல இருக்கியா ?”

“கேட்டுட்டு தான் இருக்கேன் பிரியா … நீ சொல்றதெல்லாம் சரி தான்… பட் அவன் சைட்ல இருந்து என்ன ரியாக்ஷன் வரும்னு தெரியலயே”

“என்ன பண்ணுவான்னு நினைக்கிறே ? “

“ஒண்ணும் தெரியல. பட், அவனை நான் கழற்றி வுட்டதுல நிச்சயம் கடுப்பாவான்.”

“அவனோட கேரக்டரை வெச்சு அவன் எப்படி பிகேவ் பண்ணுவான்னு நீ புரிஞ்சுக்கலாமேடி”

“ஊஹூம்.. அவன் ஒரு கல்லுளி மங்கன். விஜ‌யைப் பொறுத்தவரை அவன் என்ன பண்ணுவான்னு சொல்லவே முடியாதுடி….”

அவன் கூட இவ்ளோ நாள் பழகியிருக்கே ! அவனைப் பற்றி தெரியாம இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு இண்டரஸ்டிங் மேட்டர் சொல்றேன்.

இந்த கழற்றி விட்ட கேஸ்களை ஐந்து டைப்பா பிரிக்கலாம். ஒண்ணு புரிந்து கொள்ளக் கூடியவர். சென்ஸிபிள் டைப் ன்னு சொல்லுவாங்க. நேருக்கு நேரா பேசி, என்ன பிரச்சினை, ஏன் பிரியறேன்னு சொன்னா போதும். புரிஞ்சுப்பாங்க. ரொம்ப ஈஸி டைப் இவங்க தான். “என்னன்னு சொல்லத் தெரியல, பட் இந்த ரிலேஷன் வேண்டாம்ன்னு தோணுது” ன்னு சொன்னா கூட ஓகே சொல்லிட்டு கிளம்பிடுவாங்க.

இரண்டாவது டைப் கம்ப்ளையிண்ட் டைப். வைனிங் பீப்பிள் ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க. உன்னோட பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் போய் புலம்பித் தள்ளுவாங்க. அவங்க கிட்டே உன்னோட பெயர் டேமேஜ் ஆகறமாதிரி நடந்துப்பாங்க. எப்படியாவது உன்னை மோசமானவளா காட்ட டிரை பண்ணுவாங்க. இந்த மாதிரி ஆட்கள் கிட்டே எதிர்த்துப் பேசக் கூடாது. உன் கிட்டே கேட்கிறவங்க கிட்டேயெல்லாம் டென்ஷன் ஆகாம, “இனிமே இந்த காதல்ல நம்பிக்கை இல்லை” ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.

மூணாவது டைப் ஆதிக்க டைப். எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வெச்சுக்கப் பாப்பாங்க. ரொம்ப கடுமையா நடந்துக்கவோ, வீட்டுல வந்து நேரடியா பேசவோ டிரை பண்ணுவாங்க. தன்னோட வலிமையால இந்த பிரச்சினையைக் கையாள நினைப்பாங்க. முரண்டு பிடிக்காம ஆனா அதே நேரம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.

நாலாவது டைப் சுய பச்சாதாப டைப் ன்னு சொல்லலாம். ரொம்ப பரிதாபமா, எளிமையா, மென்மையா உன்னோட மனசை மாத்தப் பாப்பாங்க. ரொம்ப செண்டிமெண்ட் கதை பேசி, மெல்ல சில்மிஷ வேலை காட்டி இழுக்கப் பாப்பாங்க. சமயத்துல குடம் குடமா கண்ணீர் கூட வடிப்பாங்க. சோ, இந்த மாதிரி ஆட்களை அவங்க போக்கிலேயே போய் புரிய வைக்கணும்.

கடைசி டைப் தற்கொலை கேஸ். இது ரொம்ப டேஞ்சர் கேஸ். திடீர்ன்னு கையை வெட்டிகிட்டு செத்துப் போவாங்க. சிலர் தற்கொலை பண்ணமாட்டாங்க, ஆனா செத்துடுவேன்னு பேசிப் பேசியே உன்னை குழப்புவாங்க. பயமுறுத்துவாங்க. உன்னை ஒரு பிளாக் மெயில் வட்டத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடுவாங்க. இவங்க கிட்டேயும் கொஞ்சம் கவனமா பேசணும்.

சொல்லி நிறுத்திய பிரியா வித்தியாவைப் பார்த்தாள்.

“இப்போ சொல்லுடி, உன்னோட பழைய ஆள் எந்த டைப் ?”

“கண்டிப்பா சூயிசைட் கேஸ் இல்லை ! அந்த அளவுக்கு அவன் தைரியசாலியும் இல்லை, கோழையும் இல்லை, அரைவேக்காடு ” சொல்லிவிட்டுச் சிரித்த ர‌ம்யாவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பிரியா.

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 5

எதிர்பாரா இனிமைகள் இருக்கட்டும் !

kvr5

வசந்திக்கும், ஆனந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இருவரும் கடந்த சில நாட்களாக ஒழுங்காகப் பேசிக்கொள்வதில்லை. ஆனந்த் அலுவலக வேலை என காலையிலேயே கிளம்பி, இராத்திரி தான் வருகிறார். இடைப்பட்ட நேரங்களிலும் அதிகம் போன் செய்வதில்லை.

வேலை வேலைன்னு வேலையையே கட்டிகிட்டு அழுங்க ! என வசந்தி எரிச்சல் பட, என் வேலையோட கஷ்டம் உனக்கெங்கே புரியப்போகிறது என ஆனந்த் திருப்பி எரிச்சல் பட, உறவில் சின்ன விரிசல். வசந்தி தன் தோழியரிடம் இதைப்பற்றிப் புலம்ப அவர்கள் ஆளாளுக்கு தூபம் போட்டார்கள். அவருக்கு வேற ஏதாச்சும் லவ் இருக்குமோ, அலுவலகத்துல கனெக்‌ஷன் இருக்குமோ, உன்னைப் பிடிக்காம போயிருக்குமோ என ஏராளம் “மோ, மோ, மோ” என பேசி அவளுடைய நிம்மதியையே கெடுத்து விட்டார்கள். இறுக்கம் இருவருக்கும் இடையே இருந்த விரிசலை பெரிதாக்கிக் கொண்டே இருந்தது.

அந்த நாள் வந்தது !! இதுக்கும் மேல பொறுக்க முடியாது, ரெண்டுல ஒண்ணு பாத்துடணும். சும்மா விடப் போறதில்லை. அவரு வரட்டும் என வசந்தி காத்திருந்தாள். மாலையில் ஆனந்த் வந்தான். தனது கோபத்தைக் கொட்ட வேண்டுமென எழுந்த வசந்தி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனந்த் புன்னகைத்துக் கொண்டே கையில் இருந்த ஒரு சின்ன பார்சலை அவளிடம் நீட்டினான்.

என்னங்க இது ?

கடைக்குப் போயிருந்தேன், இந்த வாட்சைப் பாத்தேன். உன் கைக்கு சூப்பரா இருக்கும்ன்னு தோணுச்சு அதான் வாங்கினேன்.

எனக்கா ?

உனக்கில்லாம வேற யாருக்கு நான் வாங்க போறேன்டா ? ஆனந்த் குரலில் நேசம் குழைத்தான்.

ரொம்ப நல்லாயிருக்கு.

தேங்க்ஸ். உங்கிட்டே ஒரு கிரீம் கலர் சாரி இருக்கில்ல, மயில் படம் எல்லாம் பார்டர்ல வருமே, உனக்கு எடுப்பா இருக்குமே ஒரு சாரி, அதுக்கு இந்த வாட்ச் ரொம்ப நல்லா இருக்கும்.

ஆனந்த் சொல்ல வசந்தி கண்கலங்கினாள். அவரை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள்.

சாரிங்க.. கொஞ்ச நாளாவே, நாம சரியா பேசல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.

ஆமா.. நான் தான் சாரி சொல்லணும். வேலை டென்ஷன்ல வீட்டையே கவனிக்க முடியாம ஆயிடுச்சு. இனிமே அதெல்லாம் கம்மி பண்ணிக்கணும். ம்ம்ம்… சரி வா.. வெளியே போய் ஒரு காஃபி சாப்டு வரலாம். ஆனந்த் சொல்ல, இது வரை இருந்த மன இறுக்கம், பிணக்கு, விரிசல் எல்லாம் சட்டென மறைய மகிழ்ச்சியுடன் உள்ளறைக்குப் போனாள் வசந்தி. சில்மிஷ விரல்களோடு ஆனந்தும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சின்னச் சின்ன இனிய ஆச்சரியங்கள் தான் குடும்ப வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. இதை அனுபவசாலிகள் சட்டென ஒத்துக் கொள்வார்கள். புரியாதவர்களுக்கு ஒரு புதிராக இருக்கும். வசந்தி எதிர்பாராத நேரத்தில் ஆனந்த் கொடுத்த அந்த சின்னப் பரிசு ஒரு கசப்பான சூழலை சட்டென இனிப்பாக மாற்றியது. தாம்பத்ய வாழ்க்கையின் சூட்சுமம் இது தான்.

கல்யாணத்துக்கு முன்னாடி இந்த கிரியேட்டிவ் விஷயங்கள் காதலர்களுக்கு உச்சத்தில் இருக்கும். என்ன பரிசு கொடுக்கலாம். எப்படி நம்ம ஆளை இம்ப்ரஸ் பண்ணலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள். அதுக்குத் தக்கபடி நிறைய பரிசுகள், எதிர்பாராத இனிய நிகழ்வுகள் என அசத்துவார்கள்.

காதலி, காதலன் சார்ந்த எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். “நம்ம ஆளு இருமின நாள் இது”, ‘என் ஆளு குப்புறப் படுத்து தலை நிமிர்ந்த நாள் இது’ என சர்வ தினங்களையும் மனசில் கல்வெட்டாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் எத்தனை மணி, எந்த நிமிடத்தில், என்ன நடந்தது என்பதைக் கூட மனசில் கொத்தி வைப்பார்கள். அதனால் தான் காதல் காலம் எல்லாருக்குமே ஒரு உற்சாகத்தின் அருவியாய் ஓடிக் கொண்டே இருக்கும்.

கல்யாணம் ஆச்சுன்னா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடும். பிறந்த நாளே கூட மறந்த நாளாகிப் போகும். “முன்னாடியெல்லாம் நம்மாளுக்கு நம்ம மேல கரிசனை அதிகம். இப்பல்லாம் நாம முக்கியமில்லாம போயிட்டோம்” என கணவனும், மனைவியும் கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ! அதற்கு என்ன செய்யவேண்டுமெனும் கேள்விக்கு, ‘பிறந்த நாள், திருமண நாள் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து பரிசு கொடுக்க வேண்டும், வாழ்த்து சொல்ல வேண்டும்’ என நீங்கள் சொன்னால் நீங்கள் சாதாரண தம்பதி ! அதைக் கூட சொல்லவில்லையென்றால், நீங்கள் கிளீன் போல்ட் கேஸ், என்பது வேறு விஷயம். ஆனால் அதைத் தாண்டி நிறைய இருக்கிறது !

எதிர்பாராத இனிய ஆச்சரியங்கள். அது தான் ரொம்ப முக்கியம். அது பல விதங்களிலும் இருக்கலாம். உங்களுடைய ரசனை, வசதி, விருப்பம் என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த ஆச்சரியங்கள் உருவாகும் என்பது தான் சுவாரஸ்யம்.

ஒரு சனிக்கிழமையோ, ஓய்வாய் இருக்கும் ஒரு நாளிலோ ஒரு சின்ன விசிட் அடியுங்கள். கொஞ்சம் தூரத்தில் ஏதோ ஒரு பீச் ரெசார்ட், அல்லது ஒரு மலையோர கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்கள் ரொம்ப சவுகரியம். ஏற்கனவே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்து விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு டிரிப் போய் வாருங்கள் ! மீண்டும் ஒரு ரொமான்டிக் பயணம் ஆரம்பிக்கும்.

ஒரு நாள் காலையில் உங்கள் மனைவி எழும்பும் முன்பே எழுந்து பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணி விட்டு மனைவியை எழுப்பிப் பாருங்கள். ஒரு சேஞ்சுக்காக நான் உனக்கு சமைச்சு வெச்சிருக்கேன், சாப்பிட்டு பாரு என ஒரு ஆச்சரியம் கொடுங்கள். உங்களுடைய சமையலின் ருசி எப்படி என்பதல்ல முக்கியம். உங்களுடைய கரிசனை மனைவியை நெகிழச் செய்யும் !

ஷாப்பிங் போறது மனைவிகளோட சர்வதேசக் குணம். அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியே வரும்போது ஒரு சின்ன பர்ஸ், ஒரு டி ஷர்ட், ஏதோ ஒண்ணு வாங்கி கணவனுக்குக் கொடுங்கள். உங்க பர்ஸ் பழசாச்சுல்ல, அதான் வாங்கினேன், நல்லாயிருக்கா என கேளுங்கள். அட, நம்ம மனைவிக்கு நம்ம மேல எவ்வளவு கரிசனை என நினைப்பார் கணவன். முக்கியமாக கணவனின் விருப்பம் என்ன, அவனுடைய தேவை என்ன என்பதை அறிந்து வைத்திருந்தால் இது உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும் !

ஒரு குட்டிக் கவிதை, ஒரு சின்ன லவ் லெட்டர், ஒரு சின்ன மின்னஞ்சல் படம், உங்கள் காதலைச் சொல்ல, உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள. இப்படி ஏதாவது யோசித்துச் செய்யுங்கள். “நீ என் வாழ்க்கையில் வந்தது இறைவனின் வரம். என் கடின நேரங்களில் உன் அன்பை நினைக்கும் போது தான் மனம் லேசாகிறது” என உங்கள் ஆத்மார்த்த அன்பை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் உறவு மேம்படும்.

ஒரு நாள் மதிய வேளையிலோ, மாலை வேளையிலோ உங்கள் துணையின் அலுவலகத்துக்கு விசிட் அடியுங்கள். அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கோ, காஃபி ஷாப்புக்கோ போய் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். “சும்மா உன் கூட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணணும் போல இருந்துச்சு, அதான் வந்தேன்” என சொல்லுங்கள். இருக்கின்ற மன வருத்தங்களெல்லாம் போயே போச்சு !

ஒரு மாலை வேளையில், அல்லது மதிய வேளையில் உங்கள் மனைவியுடன் அமர்ந்து ஒரு நல்ல ரொமான்டிக் மூவி பாருங்கள். நல்ல டிவிடி வாங்கி வந்து பாருங்கள். கொறிப்பதற்கு உங்கள் மனைவியின் ஃபேவரிட் ஐட்டம் ஒன்றை தயாராக்கி வைத்திருக்க வேண்டியது தான் ஹைலைட். அருகருகே அமர்ந்து சிரித்துக் கொண்டே, பாருங்கள், காதல் தழைக்கும் !

சில சில்மிஷ விளையாட்டுகள், வரவேற்பறை சமையலறை என பழைய காதலுடன் நெருக்கமாய் இருக்கும் தருணங்கள் என மூச்சுக் காற்றை வெப்பமாக்குங்கள். காதல் தாவரம் மூச்சுக் காற்றில் சடசடவென வளரும், மோகத் தீயில் அது மொட்டுகளை சட்டென மலர்த்தும். எதிலும் போலித் தனம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்.

உங்களுடைய செல்போன், டேப்லெட்ஸ், லேப்டாப்ஸ், புக்ஸ் எல்லாவற்றையும் ஒரு நாள் மறந்து விட்டு சும்மா வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசுங்கள். பழைய கதைகளை, அலுவலக சுவாரஸ்யங்களை, பேசுவதும் கேட்பதும் இனிமையான தருணங்கள். அவை காதலை வளரவைக்கும் நிமிடங்கள்.

கட்டிப்புடி வைத்தியம் ரொம்ப நல்லது ! போயிட்டு வரேன்னு சொல்றதானாலும் சரி, காலைல குட்மார்ணிங் சொல்றதுன்னாலும் சரி, ஒரு 2 நிமிட கட்டிப்புடி வைத்தியம் மனசை லேசாக்கும், உறவை ஸ்ட்ராங்காக்கும் என்பது உண்மை !

உங்கள் வாழ்க்கைத் துணைவருடைய பழைய புகைப்படங்கள் கொஞ்சம் எடுத்து ஒரு ஆல்பமாகவோ, ஒரு கொலாட்ஜ் ஆகவோ செய்து ஒரு நாள் அவரிடம் கொடுங்கள். “பழைய நாட்களெல்லாம் ஞாபகம் வந்துச்சு அதான் இதைப் பண்ணினேன்” என்று. சுவாரஸ்யமாகவும், இனிமையாகவும் இருக்கும் !

கணவனுக்கோ, மனைவிக்கோ இருக்கக் கூடிய நட்பு வட்டாரத்தை மதியுங்கள். ஒரு நாள் திடீரென, நண்பர்களைப் போய் பாருங்க, அவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க என அனுமதி கொடுங்கள். அடுத்தவர் விருப்பங்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஒரு இனிய ஆச்சரியம் !

தொழில் நுட்பமும், சமூக வலைத்தளங்களும் சுழற்றியடிக்கும் சூழலில் அவற்றையெல்லாம் கூட உங்கள் காதல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. ஒரு குட்டி எஸ்.எம்.எஸ், ஒரு ஃபேஸ்புக் செய்தி, ஒரு மின்னஞ்சல் காதல் என உங்கள் சிந்தனைக் குதிரையை வரிக்குதிரையாக வலம் வரச் செய்யுங்கள். காதல் வானில் வானவில்களுக்குப் பஞ்சமே இருக்காது !

மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்துகிறேன், சின்னச் சின்ன ஆச்சரியங்கள், பெரிய பெரிய ஆனந்தங்களின் அடிப்படை. அனைத்தையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யவேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்

 

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 4

நமக்கே நமக்கான நேரங்கள்

couple

வெயில் சுட்டெரிக்கும் மத்தியான நேரம் பீச் பக்கம் போனால் பார்க்க முடியும் வெயிலுக்கே சவால் விடும் காதலர்களை. சூரியபகவானே டென்ஷன் ஆகிற அளவுக்கு அவரை அலட்சியப் படுத்தி காதலில் கலந்திருப்பார்கள் காதலர்கள். திருமணம் முடியும் வரை, அல்லது காதல் முறியும் வரை இந்த நெருக்கமும், பிணைப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் நேரம் கிடைச்சா கூட அந்த சைக்கிள் கேப்பில் சந்திக்கவும், பேசவும், தனிமையாய் நேரம் செலவிடவும் காதலர்களின் மனம் தவியாய்த் தவிக்கும். இந்தத் தவிப்பு தான் காதல் எனும் செடிக்கு உரமும், தண்ணீரும், காற்றும் சர்வ சங்கதிகளும்.

திருமணம் ஆனபின் லைசன்ஸ்ட் காதலர்களாக ஆசை அறுபது, மோகம் முப்பது என ஒரு தொன்னூறு நாள் உலகம் சுற்றியபின் ஒரு சோர்வும், சின்ன இடைவெளியும் உருவாகிவிடும். இந்த இடைவெளியும் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். திருமண பந்தங்களின் சிக்கல்களின் ஆணிவேர் இது தான் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். திருமணம் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கும், திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. காதலை மட்டுமே வளர்க்கும் பணி திருமணம் வரை ! காதலோடு சேர்ந்து குடும்பத்தையும் வளர்க்கும் பணி அதன் பின்பானது !

ஒரு சினிமா டிரைலர் பாக்கறீங்க. பரபரப்பா, சுறு சுறுப்பா, கண்ணுக்கு வசீகரமா, பிரமிப்பா இருக்கு இல்லையா. டிரைலர் உருவாக்கும் எதிர்பார்ப்பை எல்லா சினிமாவும் பூர்த்தி செஞ்சிருக்கா ? இல்லை ! பூர்த்தி செய்திருந்தால் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாத் தானே இருக்கணும் ? பல சினிமாக்கள் அந்த டிரைலர் தந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியாமல் தோல்வியடைகிறது. சில படங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வெற்றிப் படமாகுது. சில படங்கள் எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகுது.

திருமண வாழ்க்கையும் இப்படித் தான். ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வளர்த்து கொண்டால் ஏமாற்றங்கள் பரிசாய்க் கிடைக்கலாம். டிரைலருக்கு ஓவரா செலவு செஞ்சா படம் முழுக்க நீங்க அதையே எதிர்பார்த்து ஏமாந்து போகலாம். இங்கே தேவையானது இரண்டு விஷயம். ஒன்று, அளவான எதிர்பார்ப்பு. இரண்டு, தொடர்ச்சியான அன்பு !

திருமணத்துக்கு முன்பு எப்படி நீங்கள் இருவரும் நேரம் செலவிட்டீர்களோ அதே போல, அல்லது அதை விட அதிகமாக நேரம் செலவிடுவதில் இருக்கிறது உங்களுடைய திருமண வாழ்க்கையின் வெற்றி. திருமணம் முடிந்த பின் ஒரு குழந்தை பிறக்கும் வரை கூட செலவிட நேரம் நிறைய இருக்கும். ஆனால் ஒரிரு குழந்தைகளும் பிறந்தபின் எப்படி ? அதெல்லாம் முடியாத காரியம் என சட்டென ஒரு முடிவெடுப்பதை விட, அதை சாத்தியப்படுத்துவது எப்படி என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள்.

திருமண வாழ்க்கையின் வெற்றி என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான புரிதலிலும், நெருக்கத்திலும் தான் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சொந்தக்காரங்க, வருமானம், குழந்தைகள், வேலை, பொழுதுபோக்கு, இத்யாதி இத்யாதி எல்லாமே இரண்டாம் பட்சம் தான் ! முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும் ! இந்தப் பிணைப்பை இறுக்கமாக்க என்ன செய்யவேண்டும் ? சிம்பிள் ! அதிக நேரம் கணவன் மனைவி, தனிமையில் நேரம் செலவிட வேண்டும் !

அவ்வப்போது கணவன் மனைவி இருவருமாக வெளியே போவது ஒரு வழிமுறை. குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் போதோ, அல்லது ஒரு நாள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டோ, அல்லது நண்பர்கள் வீட்டில் விட்டு விட்டோ, கணவனும் மனைவியும் தனியாக அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்துக்குப் போய் மனம் விட்டுப் பேசுவது உறவை உற்சாகமாய் வைத்திருக்கும். ஒருவேளை வெளியே செல்ல வாய்ப்பே இல்லாவிட்டால் கூட குழந்தைகள் தூங்கிய பின் நிலவொளியில் அமர்ந்து கதைகள் பேசலாம் ! அந்த உரையாடலில் வேலை, நாளை செய்ய வேண்டிய பணிகள், பிரச்சினைகள் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு சுவாரஸ்யமான விஷயங்களையோ காதல் காலத்தின் நினைவுகளையோ அசைபோடுங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

பெரிய பெரிய விஷயங்களில் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இல்லை. அது ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்களில் தான் இருக்கிறது. உதாரணமா, உங்கள் மனைவி சமையல் செய்து கொண்டிருக்கும் போது, “மணம் சூப்பரா இருக்கே”, ” ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா ?”, என ஒரு சின்ன புன்னகையுடன் மனைவியின் அருகில் சிறிது நேரம் இருப்பதே நீங்கள் அவரை மதிக்கிறீர்கள், அவரை அன்பு செய்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டி விடும். ஒரு சின்ன புன்னகை, ஒரு சின்ன கண்ணசைவு, ஒரு சின்ன நிகழ்வுப் பகிர்வு எல்லாமே உறவின் இறுக்கத்தைத் துளித் துளியாய் அதிகரிக்கும் !

ரெண்டு பேருக்குமே பிடிச்ச மாதிரி ஒரு ஹாபி கண்டு பிடிங்க, அல்லது மியூசிக், ஓவியம், இப்படி ஏதாச்சும் எக்ஸ்ட்ரா கிளாஸ் கண்டு பிடிங்க, இருவரும் சேர்ந்து நேரம் செலவிடவும் நெருக்கத்தை அதிகரிக்கவும் இது ரொம்ப ரொம்ப உதவும். ஒண்ணும் இல்லேன்னா அடிக்கடி ரெண்டு பேரும் வெளியே போய் காப்பியாவது குடிச்சிட்டு வாங்க ! அந்த அரைமணி நேர அருகாமை கூட அன்பை வளமாக்க உதவும்.

திருமணமாகி நாட்கள், மாதங்கள், வருடங்கள் செல்லச் செல்ல தம்பதியர்கள் சோர்வாகும் ஒரு விஷயம் தாம்பத்யம். அதுவும் குழந்தைகள் பிறந்தபின் அந்த சிந்தனை ஓரமாய் ஒதுக்கி வைக்கப்படும். தாம்பத்யம் என்பது தம்பதியரை இறுக்கமாக்கும் என்பதும், மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் என்பதும் உளவியல் உண்மைகள். எனவே குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமாக அதை எப்போதுமே மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மிஷெல் வெய்னர் பிரபலமான “டைவர்ஸ் பஸ்டிங்” எனும் நூலின் ஆசிரியர். “திருமணங்கள் ஏன் டைவர்சில் முடிவடைகின்றன” எனும் கேள்வியை அவரிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதில் ஆச்சரியமூட்டுகிறது. “திருமணங்கள் டைவர்ஸ் ஆவதற்கு ஏதோ மிகப்பெரிய காரணங்கள் இருப்பது போல எல்லோரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. டைவர்ஸ்களுக்கு மிக மிக முக்கியமான காரணம் கணவனும், மனைவியும், தேவையான அளவு நேரம் ஒதுக்காதது தான். திருமணமான பின் அவர்களுக்கு வேலை, குழந்தைகள், ஹாபி, தனிப்பட்ட விருப்பங்கள், போன்ற இத்யாதிகள் முதலிடத்தை அபகரித்துக் கொள்கின்றன. அதனால் கணவன் மனைவிக்கு இடையேயான தனிப்பட்ட நேரங்கள் களவாடப்பட்டு விடுகின்றன. அதுவே பெரும்பாலான டைவர்ஸ்களுக்கான காரணம்”

குழந்தைகள் முக்கியம் தான். ஆனால் உங்களுடைய குழந்தைகள் உங்கள் வாழ்வில் வருவதற்கு முன்பே வந்தவர் உங்கள் வாழ்க்கைத் துணை என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகள் உங்களை விட்டுத் திருமணமாகிப் பிரிந்து போனபின்பும் உங்களுடன் இருக்கப் போவது உங்கள் வாழ்க்கைத் துணை தான். அவருடன் தனிப்பட்ட முறையிலான அன்யோன்ய நேரம் செலவழித்தல் மிகவும் முக்கியம். எப்போதுமே தனியே நேரம் செலவிட முடியாது, ஆனால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் நீங்கள் சேர்ந்து நேரம் செலவிடலாம்.

சில விஷயங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, ஒரு மாலை வேளையில் நீங்களும் உங்கள் பார்ட்னரும் தனித்திருக்கும் சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரட்த்தில் ஏதோ ஒரு நாலு பொண்டாட்டிக் காரனுடைய சீரியலைப் பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். அல்லது டோனி அடிக்கப் போகும் ஹெலிகாப்டர் ஷாட்டுக்காக இமைக்காமல் டிவியை விழுங்க வேண்டாம். டிவியை ஆஃப் செய்து விடுங்கள். கையில் ஆறாவது விரல் போல செல்போனை ஒட்டி வைக்காதீங்க. மாற்றி வைக்க முடியாமல் இருக்க செல் போன் ஒன்றும் பச்சை குத்திய விஷயம் அல்ல. அதை தூரமாய்ப் போடுங்கள். எந்த விதமான இடஞ்சல்களும் இல்லாமல் பேசுங்கள், சிரியுங்கள், ஏதாச்சும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வீட்ல ஒரு வேலை செய்ய மாட்டேங்கறே, இதெல்லாம் நான் தான் செய்யணுமா, எல்லாரும் சேந்து செஞ்சா தான் வீடு நீட்டா இருக்கும் – போன்ற பல்லவிகளெல்லாம் உண்மையில் கணவன் மனைவியிடையே போதுமான அளவு தனிப்பட்ட நேரம் செலவிடவில்லை என்பதன் விளைவுகள் தான். உன்னால தான் நேரம் செலவிட முடியல – போன்ற பரஸ்பர குற்றச்சாட்டுகள் உண்மையில் அர்த்தமற்றவை. அவற்றை அப்படியே மூட்டை கட்டி மூலையில் எறிந்து விட்டு கிடைக்கும் நேரத்தை இயல்பாகச் செலவிடுங்கள்.

இன்றைக்கு தம்பதியர் சேர்ந்தே இருந்தாலும் அவர்களைப் பிரிப்பது தொழில் நுட்பம். அதே போல பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் உணர்வைத் தருவதும் அது தான். அதை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு வேணும். இருவரும் தூர தூரமாக இருக்கும்போது செல்பேசலாம், சேட்டிங் செய்யலாம். ஆனால் ஒரே வீட்டில் இருக்கும்போது உங்களுடைய ஃபேஸ்புக், டுவிட்டர், செல்போன், கேம்ஸ் இத்யாதிகளையெல்லாம் மூடி வைத்து விடுங்கள்.

கடைசியாக ஒன்று ! குடும்பம் என்பதை ஒரு மரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் அதன் வேரும் நிலமும் போல ! வேர்கள் மண்ணில் இறுக்கமாகப் பற்றியிருப்பதே மரத்தின் அடிப்படைத் தேவை. வெளியே கிளைகள் விரியலாம்,பூக்கள் மலரலாம், கனிகள் தொங்கலாம், பறவைகள் வந்து வந்து போகலாம். எல்லாமே எந்த அளவுக்கு மண்ணும் வேரும் இறுக்கமாய், நெருக்கமாய் இருக்கின்றன என்பதில் தான் இருக்கிறது. வேர் தனது பிடிப்பை விட்டு விட்டு கிளைக்கும், பறவைக்கும், மலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியேறினால், ஒட்டு மொத்த மரமே சரிந்து விடும் அபாயம் உண்டு !

குடும்ப வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமா ? வேராகவும், மண்ணாகவும் கணவன் மனைவி இருக்க வேண்டும். அதற்கு “உங்களுக்கே உங்களுக்கான” தனிப்பட்ட நேரங்கள் மிக மிக அவசியம்

சேவியர்

 

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 3

மரியாதை கலந்த அங்கீகாரம்

 

kvr3

 

மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.

அதற்காக ஏதோ ஐயா, அம்மா என்று அழைத்து மரியாதை செய்ய வேணுமா என டென்ஷனாகாதீர்கள். பொதுவாகவே திருமணம் முடிந்தவுடன் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்க்கையைத் துவங்குவார்கள். அப்புறம் இவர் தனக்கானவர்,, இவள் தனக்கானவள் எனும் எண்ணம் மனதுக்குள் ஆழமாகப் பதிந்து விடும். இது நல்ல விஷயம் தான். ஒரே ஒரு சிக்கலைத் தவிர. அதாவது கணவனோ மனைவியோ என்னதான் செய்தாலும், “இது அவருடைய கடமை”, “இது அவளுடைய கடமை” என மனம் நினைக்கத் துவங்கி விடுவது தான்.

அந்த சிந்தனை மனதில் இருக்கும்போ ஒரு செயலுக்கான மரியாதையைக் கொடுக்க நினைக்க மாட்டோம். அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். ஒரு பாராட்டோ, அங்கீகாரமோ, செயலுக்கான மரியாதையோ கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் ? மரியாதை தெரியாத மனுஷங்க கூட மாரடிக்க வேண்டியிருக்கு என புலம்புவீர்கள் தானே ! ஒரு ஆராய்ச்சி முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஏன் மக்கள் அடிக்கடி தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்கிறார்கள் ? என்பது தான் ஆய்வுத் தலைப்பு. நல்ல பணம் கிடைக்கிறதனால வேலையை மாற்றுவது தான் நமக்குத் தோன்றும் பதில். உண்மை அப்படியில்லையாம். “செய்ற வேலைக்கான மரியாதை கிடைக்கல” என்பது தான் முக்கியமான காரணமாம் !

அத்தகைய சிந்தனை உறவுகளிடையேயும் நிச்சயம் எழத் தான் செய்யும். மென்மையாக ! உங்களுடைய சட்டையை ஒரு நாள் உங்கள் நண்பனோ, சகோதரனோ அயர்ண் பண்ணிக் கொடுத்தால் ரொம்ப நன்றி சொல்கிறீர்கள். அதே வேலையைத் தினமும் உங்கள் மனைவி செய்தாலும் நீங்கள் நன்றி சொல்லாமல், அல்லது அதை “மனைவி செய்ய வேண்டிய கடமை” போல நினைத்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே தான் இந்த சிக்கலின் முதல் சுவடு பதிகிறது. அதற்காக அலுவலகத்தில் சொல்வது போல “டியர் மனைவி” என ஆரம்பித்து ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு, ஒரு நன்றி வார்த்தை, ஒரு பாராட்டு.. இப்படி சின்னச் சின்ன விஷயம் தான் ! அதைக் கவனமுடன் செய்ய ஆரம்பிப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி !

வார்த்தைகளை விட, நமது செயல்களில், நமது நடவடிக்கைகளில் அந்த மரியாதை வெளிப்படுவது இன்னும் அதிக பயன் தரும். உதாரணமாக, மனைவி சமையல் செய்து வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமையலுக்கான மரியாதை என்ன தெரியுமா ? ஆர்வத்துடனும், பொறுமையுடனும் அதை ருசித்துச் சாப்பிடுவது தான். ஹோட்டலுக்குச் செல்லும் போது உணவுகளின் ருசியைப் பாருங்கள். விலையைப் பாருங்கள். இல்லங்களில் சாப்பிடும்போது சாப்பாடு தயாரித்தவரின் மனதையும், உழைப்பையும், அன்பையும் பாருங்கள். அதுவே முக்கியமானது ! உப்பு இல்லை, காரம் இல்லை என்று சொல்லி உணவை நிராகரிப்பவர்களும், விலக்கி வைப்பவர்களும் அதிகபட்ச அவமரியாதையைச் செய்கிறார்கள் !

இன்னொரு முக்கியமான விஷயம் பேச்சு ! மரியாதை இல்லாத பேச்சு ரொம்ப ரொம்பத் தப்பு. குறிப்பாக பிறர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது ஒருமையில் அழைத்துப் பேசுவது, அதிகாரத் தொனியில் பேசுவது, எரிச்சலுடன் பேசுவது, இளக்காரமாய்ப் பேசுவது, மரியாதை குறைவாய் பேசுவது போன்றவையெல்லாம் ரொம்பவே தவறான விஷயங்கள். கணவன் தானே, மனைவி தானே என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு தனி மனிதர், அவருக்கும் உணர்வுகள், சுயமரியாதை உண்டு என்பதை மனதில் கொண்டிருங்கள்.

ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்வதற்கும், வாழ்க்கைத் துணையுடன் இணைந்து பேசி ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ‘ஆமா, எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்ல வந்துட்டாங்க” எனும் சலிப்பு உறவுக்கு நல்லதல்ல. வெறும் தகவல் சொல்லும் ஒரு மனிதராகவோ, உங்கள் கட்டளைகளை ஏற்று நடக்கும் ஒரு மனிதராகவோ மட்டும் அவரைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது அவரை அவமரியாதை செய்வதற்குச் சமம். இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பேசி முடிவெடுப்பதே நல்லது.

கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியும். ராத்திரி முழுக்க குடித்து விட்டுச் சண்டை போடும் கணவனைக் கூட விட்டுக் கொடுக்காமல் பேசுவாள் மனைவி. வீட்டில் எப்போதுமே அடங்காப் பிடாரியாய் பிடரி சிலிர்க்கும் மனைவியைக் கூட பொது இடத்தில் அன்பானவள் என பறைசாற்றுவான் கணவன். வேறு யாரேனும் தனது வாழ்க்கைத் துணையை தரக்குறைவாய் பேச அனுமதிக்க மாட்டார்கள். இது ஒருவகையில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற மனவருத்தங்களைத் தாண்டி ஒருவரை மற்றவர் மதிக்கும் மனப்பான்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.

கணவன் மனைவியராய் இருந்தால் கூட ஒவ்வொருவருக்குமான சில தனித் தனி விருப்பங்கள் இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பெரும்பாலான தம்பதியர் சண்டையிட்டுக்கொள்ளும் விஷயம் இது தான். அல்லது இது தான் மன வருத்தங்களை தோற்றுவிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கிறது. உதாரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பிடிக்கலாம், நடிகரைப் பிடிக்கலாம், ஆன்மீக வழிகாட்டியைப் பிடிக்கலாம், அல்லது ஒரு ஸ்பெஷல் ஹாபி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என அதற்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் விஷயம் தான் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ பிடிக்க வேண்டும் என முரண்டு பிடிக்காதீர்கள். இருவருக்குமான தனிப்பட்ட சில விஷயங்கள் இருப்பதில் தவறில்லை. அது ஒட்டு மொத்த குடும்ப உறவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

கண்ணை மூடிக்கொண்டு “இதெல்லாம் தப்புப்பா” என சொல்லும் ஒரு விஷயம் கை நீட்டி அடிப்பது, அல்லது மனம் காயப்படுத்தும் படி பேசுவது. ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் இல்லாமல் இதில் சமத்துவம் வீசுகிறது. கையால் அடிக்கும் அடி வலிப்பதில்ல்லை, ஆனால் அடித்துவிட்டாரே எனும் நினைப்பு தான் வலிகொடுக்கிறது. சொல்லும் சொல்லும் அப்படியே. என்னைப் புரிந்து கொண்ட இந்த மனுஷி இப்படிச் சொல்லிட்டாளே என்பது தான் வலிகொடுக்கும். அது உங்கள் வாழ்க்கைத் துணைக்கான மரியாதையை நீங்கள் தர மறுக்கின்ற தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். நம்பிக்கை ! உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரமுடிந்த அதிகபட்ச மரியாதை அவரை முழுமையாய் நம்புவது. அதே போல, அந்த நம்பிக்கைக்கு உரியவராய் நீங்கள் இருப்பது பதில் மரியாதை ! இது மட்டும் அழுத்தமாய் இருந்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாய் ஓடும். நள்ளிரவில் வாழ்க்கைத் துணையின் செல்போனை நோண்டுவது, டைரியை புரட்டுவது, கணினியை ஆராய்வது போன்ற இத்யாதிகளெல்லாம் நீர்த்துப் போன நம்பிக்கையின் அடையாளங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்வது அடுத்தவர் செய்யும் விஷயங்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளம். அது எலக்ட்ரிக் பில் கட்டுவதாக இருக்கலாம், உங்கள் துணியை அயர்ன் பண்ணுவதாக இருக்கலாம், ஒரு கப் காபி கொண்டு தருவதாகக் கூட இருக்கலாம். புன்னகையுடன் கூடின மனமார்ந்த நன்றி அந்தச் செயலை அர்த்தப்படுத்தும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நன்றியெல்லாம் சொல்லிகிட்டு என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். நீங்கள் முயன்று பாருங்கள், மாற்றம் நிச்சயம் உங்களுக்கே தெரியும்.

விட்டுக் கொடுத்தல் கூட அடுத்த நபரையோ, அல்லது அந்த உறவையோ நீங்கள் மரியாதை செலுத்துகிறீர்கள் என்பதன் வெளிப்பாடு தான். ஒருவேளை உங்கள் மனைவி அவருடைய அம்மாவிடம் ரெண்டு மணி நேரம் போனில் பேசுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்னதான் பேசறீங்க ? என கேட்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை கேட்டு, உங்கள் மனைவி சொல்லத் தயங்கினால் அதை அப்படியே விட்டு விடுங்கள். துருவித் துருவி கேட்பதோ, வீணான அனுமானங்களுக்குள் இறங்கி உங்கள் தலையைக் குழப்பிக் கொள்வதோ தேவையற்ற விஷயம் !

“உங்கள் மனைவி ஏதாச்சும் ஒரு நல்ல முடிவெடுத்தா பாராட்டுங்க. தப்பான முடிவெடுத்தா சைலன்டா இருங்க” என்கிறார் ஒரு வல்லுநர். நல்ல முடிவுகளுக்குப் பாராட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், தப்பான முடிவு எடுக்கும்போ அவங்களுக்கே புரியும். ‘இந்த விஷயத்துக்குப் பாராட்டு வரல, அப்படின்னா இது சரியில்லை’ என அவருடைய உள்மனசே காட்டிக் கொடுக்கும். பாராட்டு என்பது மரியாதையின் ஒரு பகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை !

மரியாதை பரிமாறப்படாத இடங்களில் உறவுகள் நிலைப்பதில்லை. அலுவலகத்தில் போய் மரியாதை குறைவாய் ஒரு மாதம் நடந்து பாருங்கள். உங்களுடைய வேலையே போய் விடலாம். நண்பர் கூட்டத்தில் போய் மரியாதை வழங்காமல் ஒரு சில மாதங்கள் இருந்து பாருங்கள். நட்புகளெல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் மரியாதை இல்லாமல் சில நாட்கள் தங்கிப் பாருங்கள், அந்த உறவு அதோடு முறிந்து போய்விடும். இப்படி எல்லா இடங்களிலும் மரியாதை கொடுப்பதும், வாங்குவதும் தேவைப்படும் போது, ஏன் குடும்பத்தில் மட்டும் அது தேவையற்ற ஒன்று என நினைக்கிறீர்கள் ?

இருக்கும் போது வாழ்க்கைத் துணையின் அருமை பெருமைகள் பலருக்கும் புரிவதில்லை. இழந்தபின் புலம்புவதில் பயனும் இல்லை. ” நீ இல்லேன்னா என்னால இதெல்லாம் சாதிச்சிருக்கவே முடியாது”, ” நீ இல்லேன்னா லைஃபே வெறுத்துப் போயிருக்கும்”, ” நீ எனக்குக் கிடைச்சது கடவுள் வரம்” என்றெல்லாம் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் என்றேனும் சொல்லியிருக்கிறீர்களா ? மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா ? ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? அன்பாகப் பேசுங்கள். அன்பான பேச்சு வாழ்க்கையை ஆழப்படுத்தும் ! உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக பிரார்த்தியுங்கள். அது உங்களுடைய அன்பின் வெளிப்பாடு.

கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து தான் துவங்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து துவங்கவேண்டும் என நினைப்பது நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதன் அடையாளமே !

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2

வித்தியாசங்களே வலிமையானவை !

kvr2

சின்ன வயதில் நிறைய பாட்டிக் கதைகள் கேட்டிருப்போம். அரசகுமாரியின் உயிரை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் ஒளித்து வைத்திருப்பான் அரக்கன். அந்த அரக்கனைக் கொன்று இளவரசியை மீட்பான் இளவரசன். பிரம்ம பிரயர்த்தனத்துடன் இளவரசன் நடத்தும் வீர தீரப் போராட்டங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். குடும்ப வாழ்க்கையும் இத்தகைய ஒரு மிகப்பெரிய சவாலான, கஷ்டமான, போராட்டமான விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. பெரிய பெரிய போர்களிலல்ல, சின்னச் சின்ன விஷயங்களில் தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

ஒரு மிகப்பெரிய தேரின் வலிமை சின்ன அச்சாணியில் இருக்கிறது. இந்த காலத்தில் தேரும் அச்சாணியும் மறந்து போயிருக்கும். வேண்டுமானால் ஒரு காரின் பயணம் அதன் உள்ளே உலவும் சில துளி பெட்ரோலில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். என்ன தான் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து போஸ் ஸ்பீக்கர் வாங்கி மாட்டினாலும், பெட்ரோல் இல்லாத வண்டி ஓடாது. எனவே இது சின்ன விஷயம் தானே, முதல்ல பெரிய விஷயங்களைக் கவனிப்போம் என்று இருந்து விடக் கூடாது. அடிப்படை விஷயங்களில் கவனம் தேவை !

ரசனையும் அப்படிப்பட்ட ஒரு சின்ன விஷயம் தான். ஆனா குடும்பத்தில் எத்தனை பெரிய கீறலை வேண்டுமானாலும் அது உருவாக்கிவிடும். ரசனைகளை மதியுங்கள், இது முதல் தேவை ! அதாவது உங்க மனைவிக்கு ஓவியத்துல ஆர்வம் ன்னு வெச்சுக்கோங்க, அதை முதலில் மதியுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். உங்களுக்கு ஓவியம்ன்னாலே அலர்ஜியா இருக்கலாம். அதுக்காக உங்க மனைவிகிட்டே போய், இதெல்லாம் ஒரு ரசனையா ? வெளங்கினாப்ல தான் என்றெல்லாம் எரிச்சல் மூட்டாதீர்கள்.

அதே போல தான் உங்கள் கணவருக்கு ஒருவேளை சிக்ஸ் பேக்ஸ் மோகம் இருக்கலாம். அதுக்காக டெய்லி காலையிலேயே தெருத்தெருவா ஓடிட்டே இருக்காரு, இல்லேன்னா ஜிம்ல போய் ஆஜராயிடராருன்னா அதை மதியுங்கள். ஆமா இவரு சிக்ஸ் பேக்ஸ் வெச்சா அப்படியே காசு கொட்டும் பாருங்க, சிஸ்க்த் சென்ஸை யூஸ் பண்ணுங்கப்பா என கடுப்படிக்காதீங்க. ஒவ்வொருவருக்குமான விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் தனித்தனியானவை. தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம் தான்னு சொல்லுவாங்க இல்லையா அது மாதிரி. அடுத்தவர் ரசனையை மதிப்பது முதல் தேவை.

இரண்டாவது, அந்த ரசனைக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஊக்கம் ஊட்டுவது. ஓவியக்கார மனைவிக்கு நீங்கள் ஓவியம் சார்ந்த ஏதாவது பரிசுகள் வாங்கிக் கொடுக்கலாம். பொருட்கள் வாங்கிக் குடுக்கலாம். “ஹேய்… அடுத்த வாரம் ஒரு ஓவியக் கண்காட்சி நடக்குது. சேலத்துல. டீட்டெயில்ஸ் எல்லாம் கேட்டு வெச்சுட்டேன். நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாமே” என்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுங்கள். புரியாத ஓவியம் பற்றி உங்கள் மனைவி ஒரு லெக்சர் அடித்தால் பொறுமையாய் கேளுங்கள். காதுல ரத்தம் வருது கொஞ்சம் வாயை மூடறியா என சொல்லாதீங்க. ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசனைகளைப் பகிர்ந்து கொள்வதில் அலாதி இன்பம் இருக்கும் என்பது சர்வதேச உண்மை.

கொஞ்சம் ரிவர்ஸ் கியர் அடித்து உங்களுக்குத் திருமணமான அந்த ஹனிமூன் காலத்துக்குப் போய்ப் பாருங்கள். அல்லது திகட்டத் திகட்டக் காதலித்த காலத்துக்குப் போய்ப் பாருங்கள். “ம்ம்.. அப்புறம்” என்பதையே மூன்று மணி நேரம் மெய்மறந்து கேட்டிருப்பீங்க தானே ? என்ன சமையல், என்ன சாப்பாடு, காலைல பல் விளக்கிட்டியா ? இட்லிக்கு சட்னியா சாம்பாரா என்றெல்லாம் போனில் பேலன்ஸ் தீர்ந்து, அப்படியே பேட்டரியும் தீரும் வரை பேசித் தீர்த்திருப்பீர்கள் தானே ! அப்போ காதுல ரத்தம் வரலையா ? சோ, கொஞ்சம் ரிலாக்ஸ்! அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பதற்குத் தேவை காதோ, பொறுமையோ அல்ல, அன்பு !

என்ன தான் கட்டம் கட்டி, தாயம் உருட்டி, குண்ட்லியில் பொருத்தம் பார்த்தாலும் ரசனைப் பொருத்தம் பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகாது. அப்படிப்பட்ட வெவ்வேறு ரசனைகளுடைய இரண்டு பேர் சேர்ந்து வாழும் இடம் தான் குடும்பம். என்னோட ரசனைதான் உனக்கு இருக்கணும், அல்லது என்னோட ரசனைகள் தான் உனக்கும் பிடிக்கணும் என ஒருவர் முரண்டு பிடித்தால் குடும்பத்தில் சிக்கலின் கண்ணி வெடி வெச்சாச்சுன்னு அர்த்தம். ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களிலும் இருவரும் வேறுபடலாம், அடுத்தவர் ரசனைகளை மதிக்கும்போது இருவருமே ஒன்றித்துப் போய்விடுவது வெகு சாத்தியம். இரயில் தண்டவாளத்தின் இரண்டு பாளங்களைப் போல ! முட்டிக் கொள்ளாமல் மோதிக்கொள்ளாமல், அதே நேரம் இணைந்து பயணிப்பதே வாழ்வின் வெற்றி.

ஒரு டி.வி பாப்பதில் இருந்தே அந்த ரசனை வேறுபாட்டை நீங்க பாப்பீங்க. அஞ்சு நாள் டெஸ்ட் மேச்சை ஃபெவிகால் போட்டு ஒட்டினமாதிரி பாத்துட்டே இருப்பீங்க, ஏங்க அந்த தென்றல் சீரியலை கொஞ்சம் போடுங்களேன் ன்னு மனைவி கேட்டா, “ஆமா.. இந்த சீரியல்ஸ் தான் சீரியல் கில்லர்ஸ். இதனாலதான் குடும்பங்கள் கெட்டுப் போவுது. கலாச்சாரம் பாழாகுது. ” என சட்டென ரிமோட்டையே மைக்கா மாற்றி பேச ஆரம்பிக்காதீங்க. சரி நீ பாரு என புன்னகையுடன் ரிமோட் கொடுப்பதில் இருக்கிறது உங்கள் அன்பின் வெளிப்பாடு.

புடிச்ச நடிகன், புடிச்ச நடிகை, புடிச்ச பாடல், புடிச்ச எழுத்தாளர், புடிச்ச நிறம், புடிச்ச டிரஸ் என இந்த புடிச்ச விஷயங்கள் ரெண்டு பேருக்கும் ஒண்ணா இருக்கணும்ன்னு அவசியமே இல்லை. ஆனால் அடுத்தவங்களுக்குப் புடிச்ச விஷயத்தை ஓவரா விமர்சிக்காமல் இருக்கப் பழகணும். அஜித் – விஜய், ரஹ்மான் – இளையராஜா என எதிர் எதிர் ரசனைகள் வீட்ல இருக்கிறது ரொம்ப ரொம்ப சகஜம், ஆனால் அதெல்லாம் தனிமனித சின்னச் சின்ன விருப்பங்கள், ரசனைகள் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவேளை ஒரு ரசனை குடும்பத்தின் நிம்மதியையோ, எதிர்காலத்தையோ பாதிக்குமெனில் அதை கணவன் மனைவி இருவரும் பொறுமையாய், தகவல்களுடன் விவாதித்துக் கொள்வதே நல்லது. உதாரணமா, “திருடுறது எனக்கு ஒரு ஹாபி” என கணவன் சொன்னால் “அப்படியா.. சூப்பர், வாங்க திருடலாம்” என மனைவி சொல்லக் கூடாது ! அத்தகைய விபரீத சூழல்கள் தவிர்த்த விஷயங்களில் இருவருமே வேறுபட்ட சிந்தனைகளுடன் இணைந்து பயணிக்க வேண்டியதும் அவசியம்.

அடுத்த நபருடைய விருப்பங்கள், வேலைகள், பணிகள், செயல்கள், ரசனைகள் குறித்துப் பேசுவது, விசாரிப்பது எல்லாம் ரொம்ப நல்ல விஷயம். “உன்னோட டிராயிங் ரொம்ப நல்லா இருந்துச்சு. போன வாரம் ஒரு டிராயிங் பண்ணிட்டிருந்தியே என்னாச்சு” போன்ற சின்னச் சின்ன விசாரிப்புகள் உறவை வலுப்படுத்தும். ஓ, நீ மியூசிக் போட்டுட்டு இருக்கியா, நான் டி வி வால்யூம் கம்மி பண்ணிக்கிறேன் என்பன போன்ற கரிசனைகள் முக்கியம்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே போன்ற ரசனைகள் அமைந்தால் சிக்கல்கள் பெருமளவில் குறைந்து விடும். ஆனால் அது அமைவது கடினம். அப்படியே அமைந்தாலும் சிக்கல்கள் எழாது என்று சொல்வதற்கில்லை. “நீ என்ன கவிதை எழுதியிருக்கே, நான் எழுதினது தான் கவிதை” என கவித் தம்பதியர் சண்டை போட சாத்தியம் இருக்கு தானே !

ஒருவருடைய விருப்பத்தைப் பற்றி இன்னொருவர் பேசும்போது அது உப்பு சப்பற்ற விசாரிப்பாய் இல்லாமல் ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதம் அல்லது விமர்சனமாய் இருப்பது ரொம்ப நல்லது. “நீ குடுத்த காஃபி நல்லா இருந்துச்சு என்று சொல்லும் முன்னாடி, குடிச்சது காபியா டீயா என்பது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். ஓவியத்துல எனக்குத் தெரிஞ்சு மாளவிகா ஷருகாய் தான் பெஸ்ட் என்று சொல்லும் முன் மாளவிகா ஓவியல் அல்ல நாட்டியம் சார்ந்தவர் என்பதாவது தெரிஞ்சிருந்தா நல்லது. கொஞ்சம் கொஞ்சம் விஷயங்களைப் புரிந்துகொண்டு, தெரிந்து கொண்டு பேசுவது உறவின் இறுக்கத்தை நிச்சயம் அதிகரிக்கும்.

ரசனைகள் தனித்தனியே இருந்தாலும் அவற்றை இருவருமே பகிர்ந்து கொள்ளும்போதும், அதைக்ககுறித்து சிலாகிக்கும் போதும், அது குறித்துப் பேசும்போதும் கணவன் மனைவி உரையாடல் அதிகரிக்கும். அது உறவை வலுப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் வேறு வேறு ரசனைகள் உங்களை ரொம்பவே இறுக்கமாக்க உதவும் ! உங்கள் தனிப்பட்ட ஹாபிக்கள் உங்களுடைய குடும்ப நேரத்தை திருடிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை !

ஒருவேளை கணவன் மனைவிக்கு ஆன்மீகத்தில் கூட வேறுபட்ட சிந்தனைகள் நம்பிக்கைகள் இருக்கலாம். அது உங்களுக்கு கொஞ்சம் கூட உடன்பாடற்ற ஒரு விஷயமாய் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களில் அந்த விஷயத்தைக் குறித்து ஆக்ரோஷமாய் விவாதிப்பது, குத்திப் பேசிக் காயப்படுத்துவது போன்றவற்றை நிச்சயம் விலக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய ஆன்மீகத்தின் வெளிச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

கிரிக்கெட்டில் ஒரு அணி தோற்கும்போதெல்லாம் கேப்டனோ, பயிற்சியாளரோ ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள். “வி ஆர் கோயிங் டு ஃபோகஸ் ஆன் த பேஸிக்ஸ்” !! எளிய உண்மை அது ! அடிப்படையான சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் அணியின் வெற்றிக்கும், குடும்பத்தின் வெற்றிக்கும் தேவை. அவை இல்லாமல் பெரிய பெரிய விஷயங்கள் சாத்தியமில்லை. தொலைவில் இருக்கும் சிகரத்தை அடைய, பாதத்துக்கு முன்னால் இருக்கும் பள்ளத்தை முதலில் சரி செய்ய வேண்டும். காலில் முள் தைத்தவன் பாதமெங்கும் வலி என்பான். முள்ளை அகற்றிவிட்டால் வலி நீங்கி வழி பிறக்கும்.

சுருக்கமாக, தம்பதியரின் ரசனை என்பது தனிப்பட்ட விஷயம். அதை மதியுங்கள். ஊக்குவியுங்கள். அதைப் பற்றிப் பேசுங்கள். அது குறித்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உறவு வலுப்படும்

*

 

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1

நேரம் !!!!

 

kvr1

நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு”  என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். !

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு ? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு ! செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.

கணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இருப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து  இருக்கிறது !

அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் ? என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை.

கணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் ! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை !
கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது ? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது ? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் !

2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.

3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா ? உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.

4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் !

5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.

6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் ! சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.

8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் !

9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.

10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.

டைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி !

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.

ஆன்மீகம் : பெண்மையைப் போற்றுவோம்

couple

ரெண்டு பேர் சீட்டு விளையாடிட்டு இருந்தாங்க. அவங்க கைல இருந்த சீட்டுகள் எல்லாம் மாறி மாறி சண்டை போட்டுச்சாம். ராஜா சொல்லிச்சாம், நான் தான் ராஜா. எனக்கு தான் மரியாதை அதிகம். உடனே ராணி சொல்லிச்சாம், ‘பேச வந்துட்டான் பாரு’ நான் தான் பவர்புல். எனக்கு வேற யாரும் தேவையில்லைன்னு. சட்டுன்னு ஜோக்கர் வந்து சொல்லிச்சாம், நீங்க என்னதான் பெரிய பிஸ்தாவா இருந்தாலும் என்னைத் தான் எல்லாரும் விரும்பி தேடுவாங்க, நான் தான் கேம் ஃபினிஷர் ன்னு ! கொஞ்ச நேரம் கழிச்சு, சீட்டு விளையாடின ரெண்டு பேரும் எல்லா சீட்டையும் அடுக்கி, டப்பாக்குள்ள போட்டு மூடி ஓரமா தூக்கிப் போட்டாங்க. சீட்டுகள் எல்லாம் இருட்டுக்குள்ள போய் பேசாம வாய மூடிட்டு கிடந்துச்சாம்.

இப்படித் தான் மனித வாழ்க்கை. வாழ்க்கை எனும் ஆட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. ஒவ்வொரு தேவை. ஒவ்வொரு எதிர்பார்ப்பு. ஆட்டம் முடிந்து விட்டால் எல்லாருமே ஒன்றாக, ஒரே மூலையில். இப்படி ஒரு பிரபல பழமொழியும் உண்டு. மண்ணிலிருந்து வந்து மண்ணுக்கே திரும்பும் வாழ்க்கை. இந்த ஒரு சின்ன உண்மையைப் புரிந்து கொள்ளாததால் தான் இன்றைக்கு உலகில் நான் பெரியவனா, நீ பெரியவனா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, அடக்குமுறையா அதுவா இதுவா என பல்வேறு போராட்டங்கள், குழப்பங்கள்.

உலகில் வாழ்ந்தாலும், உலகிற்காய் வாழாத வாழ்க்கை தான் கிறிஸ்தவர்களின் அடிப்படை. கிறிஸ்தவராக மாறிவிட்டாலே வேற்றுமைகள் மனதிலிருந்து அகன்று போய்விட வேண்டும் என்பதையே இறைவன் எதிர்பார்க்கிறார். “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலாத்தியர் 3-28, எனும் வசனம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.

எல்லோரும் இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம், இயேசு எனும் திராட்சைக் கொடியின் கிளைகளாக இருக்கிறோம். அவருடைய உடலின் உறுப்புகளாய் இருக்கிறோம். அது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி, ஆணாய் இருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி கடவுளின் பார்வையில் எல்லாரும் ஒன்றே !

இந்த இடத்தில் தான் நம்முடைய சிந்தனைகள் பல வேளைகளில் மாறுபட்டு ஓடுகின்றன. எல்லோரும் ஒன்றாயிருக்கிறோம் என்பதால் எல்லாரும் ஒரே செயலையோ, ஒரே பணியையோ செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. ஒவ்வொருவருக்கும் இறைவன் என்ன பணியைத் தந்திருக்கிறாரோ அதைச் செய்வதே மிக முக்கியம்.
1. துணையாளர் எனும் தூய பணி

பெண்களுக்கு இறைவன் கொடுத்த முதல் பணி துணையாளர் பணி ! ஆதாமைப் படைத்த இறைவன் ஏவாளை ஆதாமின் துணையாளனாக, இணையாளனாகப் படைக்கிறார். ஆதாமுக்குத் துணையாகத் தானே இறைவன் ஏவாளைப் படைத்தார், அப்படியானால் ஏவாள் இரண்டாம்பட்சம் தானே எனும் தவறான எண்ணம் பரவலாக உண்டு. அதற்காகத் தான் இறைவன், யோவான் 14 : 16, ல் தூய ஆவியானவரையும் ‘துணையாளர்” என அழைத்து நமது சந்தேகங்களை விலக்குகிறார். “துணை” எனும் வார்த்தை கடவுளைக் குறிப்பிடுவதாக பைபிளில் பல இடங்களில் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தூய ஆவியானவரின் பணி எப்படி நமக்குள் கரைந்து நம்மை வலுவூட்டு, நன்மையின் பாதையில் நடத்துகிறதோ, அத்தகைய உயரிய பணியே பெண்களுக்கு இறைவன் தந்த முதல் பணி. தந்தைக்குப் பணிந்திருத்தல் எப்படி என்பதை இயேசு தனது வாழ்க்கையில் காட்டினார். ஏவாள் அந்த சிந்தனையிலிருந்து விலகிய கணத்தில் பாவம் மனிதர்களுக்குள் நுழைந்தது. மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல எனக் கண்ட கடவுள் பெண்ணைப் படைக்கிறார். அதாவது ஆணின் முழுமை, பெண்ணால் தான் உருவாகிறது, அப்போது தான் படைப்பின் முழுமையும் உருவாகிறது. பெண், முழுமையின் சின்னமாக இருக்கிறாள்.

நீதிமொழிகள் பெண்களுக்கான இலக்கணத்தை மிக அழகாகச் சித்தரிக்கிறது. ஆண்டவரிடம் கொண்டுள்ள அச்சம் ( நீ.மொ 31 : 30 ), ஆடை நெய்தும், சமையல் செய்தும், ஏழைகளுக்குக் கொடுத்தும் என பணி செய்து இறுக்கமான கைகள், ஞானத்தோடு பேசி அன்போடு அறிவுரை கூறும் நாவு என பெண்மையின் குணாதிசயம் விரிகிறது. புற அழகையோ, பியூட்டி பார்லர்களின் தற்காலிக விளம்பரங்களையோ எந்த இடத்திலும் பைபிள் பேசவில்லை. காரணம் இறைவன் அகத்தைப் பார்க்கிறவர் ! ஆகவே தான் சொல்கிறார் நல்ல மனைவி பவளத்தை விட மேலானவள் ( நீ.மொ 31 : 10 ) !

2. தாய்மை எனும் உயரிய பணி

ஒரு ஆணின் உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அவனைப் பிணம் என்போம். ஒரு பெண்ணின் உடலில் இருந்து உயிர் பிரிந்து வரும்போது அவளைத் தாய் என்கிறோம். பெண்மை தவிர வேறு எவருக்கும் கிடைக்க முடியாத மிகப்பெரிய கவுரவம் இது ! இதையே பவுல் அதை ஒரு இறை பணி என்கிறார். இன்றைய உலகமோ அதை பெண்ணடிமைத்தனம் என்கிறது.

ஒரு சமூகம் கட்டியெழுப்பப் பட வேண்டுமெனில் குடும்பம் மிக ஆரோக்கியமான உறவுகளிலும், மதிப்பீடுகளிலும் கட்டியெழுப்பப் பட வேண்டும். அது தவறும் போது சமூகமே சமநிலை இழந்து விடுகிறது. அந்த குடும்பத்தைக் கட்டியெழுப்பும் உயரிய பணி அன்னையரிடமே இருக்கிறது. “தாயைப் போல பிள்ளை” என்பதன் கிறிஸ்தவப் பார்வையையே பவுலடிகளார் சொல்கிறார்.

ஒரு தாய் இருந்தார். அவருடைய கணவன் இறை நம்பிக்கை இல்லாதவர். அது அந்தத் தாயைப் பாதிக்கவில்லை. மகனை நல்ல வழியில் வளர்க்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார். அந்த மகன் வளர்ந்தான். திருச்சபையின் வலுவான பணியாளர்களில் ஒருவராக மாறினார். அந்தத் தாயின் பெயர். ஐனிக்கேயாள். மகனின் பெயர் திமோத்தேயு. பவுலடிகளாருடன் சேர்ந்து அவர் செய்த பணி எத்தனை அர்த்தமுள்ளது ! ஐனிக்கேயாள் இறை அழைத்தலை முழுமையாய் நிறைவேற்றினார் என்று சொல்லலாமல்லவா !

3. இறைவனுக்கு சான்று பகர்தல்

நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள் ( அப் : 2 : 17 ). இயேசு தனது இறை பணியை முழுமையாய் ஆண்களுக்கென சமர்ப்பிக்கவில்லை. பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் இருந்தாலும் மதலேன் மரியாவுக்கே முதல் காட்சியை இயேசு வழங்குகிறார். உயிர்த்த இயேசுவின் முதல் சாட்சி !

இறைவனுக்குச் சான்றுபகரும் பணி மாபெரும் பணி. அதை நமது வாழ்க்கையின் எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழலிலும் வெளிப்படுத்த முடியும். அதிலும் குறிப்பாக அன்புக்கும், பொறுமைக்கும் இலக்கணமான பெண்களுக்கு, வாழ்க்கையில் இயேசுவைப் பிரதிபலிக்க வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். பழைய ஏற்பாட்டிலும் சரி, முதலாம் நூற்றாண்டிலும் சரி, பல பெண் தீர்க்கத்தரிசிகள், அறிவுரையாளர்கள், மற்றும் நீதிபதிகள் இறைப் பணிக்காக இருந்திருக்கிறார்கள். மிரியம், தெபோராள், அன்னா, பிரிஸில்லா என இந்த பட்டியல் நீளூம்.

லாசரின் வீட்டில் “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்” என இயேசு சொல்வது பெண்களின் இறை அழைத்தலையும், இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு அவருக்கு சான்று பகரும் வாழ்க்கை வாழவேண்டும் எனும் தேவையுமே காட்டுகிறது எனலாம்.

4. மனதில் தியானிக்கும் பண்பு !

இயேசுவின் அன்னை, மரியாள், ஒரு நல்ல வழிகாட்டி, அல்லது எடுத்துக்காட்டு எனலாம். கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம். அதை வெளியே சொல்ல முடியாத நிலமை. வெளியே சொன்னால் ஊர் நிச்சயம் நம்பப் போவதில்லை. நடத்தை கெட்டவள், அல்லது மனநிலை சரியில்லாதவள் என்றே சொல்லும். ஆனாலும் இறைவனின் சித்தத்துக்காக அத்தகைய பேச்சுகள் வாங்குவதைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாத துணிவு மரியாளுக்கு இருந்தது !

பன்னிரண்டு வயதில் மகனின் ஆன்மீக விஷயங்களைக் கண்டு கதிகலங்கினாலும், எல்லாவற்றையும் “உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்த” மனம் மரியாளுக்கு இருந்தது. இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய ஒரு முன்னுதாரணம் தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் ஊருக்கு விளம்புவதும், ஊரார் என்ன சொல்வார்களோ என கலங்கிப் புலம்புவதும் இன்றைக்கு பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது இல்லையா ?
5. குடும்பத்தைக் கட்டியெழுப்புதல்

ஆண் ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்ப ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். அதையே பைபிளும் சொல்கிறது. பெண்களின் முதல் பணியாக பைபிள் சொல்வது, “கர்த்தருக்குக் கீழ்ப்படிவது போல கணவருக்குக் கீழ்ப்படிதல்”. ஆண்களுக்கான பணியாய்ச் சொன்னது “மனைவியரை அன்பு செய்யுங்கள்” என்பது. ஒரு முறை இது குறித்து ஒரு நண்பர் அருமையான விளக்கம் கொடுத்தார். கணவன் மனைவிக்குக் கீழ்ப்படிவது பெரும்பாலும் இயல்பாக வந்து விடுகிறது. சாப்பிடு என்று சொன்னவுடன் பழத்தை ஆதாம் சாப்பிட்டான். அதனால் தான் அவனுக்கு “அன்பு செய்” எனும் கட்டளை தரப்படுகிறது. பெண்கள் அன்பில் எப்போதுமே உயர் நிலையில் இருப்பார்கள். கணவன் மீது உயிரையே வைத்திருப்பார்கள். அதனால் தான் “கீழ்ப்படி” எனும் கட்டளை அவர்களுக்குத் தரப்படுகிறது. இறைவனின் சித்தம் என்பது இருவருமே சமமாய், அன்புடனும் ஒருவருக்கொருவர் புரிதலுடனும் இருப்பது தான் என்றார்.

ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவைகள் பரஸ்பர அன்பும், புரிதலும், கீழ்ப்படிதலும் தான். கணவன் மனைவி தாண்டி குழந்தைகளுக்கும் இறைவன் சொல்வது கீழ்ப்படிதல் போதனைதான் இல்லையா. இத்தகைய கிறிஸ்தவ போதனையின் அடிப்படையில் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்பும் போது அது உலகிற்கே ஒளியாக திகழ்கிறது !

இசைக்கச்சேரியில் மிருதங்கம், புல்லாங்குழல், கீபோர்ட், வயலின் எல்லாமே இருக்கும். என்னிடம் துளைகளே இல்லை என மிருந்தங்கம் கவலைப்படலாமா ? அல்லது நான் ஒல்லியாய் இருக்கிறேன் என புல்லாங்குழல் புலம்பலாமா ? ஒவ்வொன்றின் படைப்பும் அதற்குரிய இசையைத் தருவதற்காகவே. தான் அடுத்த கருவியைப் போல மாறவேண்டுமென்றோ, எனது இசை தான் உயர்ந்தது என்றோ பேசித் திரிவது வடிகட்டிய முட்டாள்தனமன்றி வேறில்லை.

உலக அளவிலுள்ள கிறிஸ்தவர்களில் 60% பேர் பெண்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். கடவுள் ஆணையும் பெண்ணையும் தனித்துவத்துடனும், வெவ்வேறு பணிகளுக்காகவும் படைக்கிறார். ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறாமல், அந்தந்த படைப்புக்குரிய உயர் நிலையை அடைவதே இறை சித்தம். இந்த நிலைகளில் எந்த விதத்திலும் மேன்மை அதிகமானதென்றோ, மேன்மை குறைந்ததென்றோ எதுவும் இல்லை. அப்படி நாம் எண்ணிக் கொண்டால், அது பாரபட்சம் பார்க்காத நமது பரம பிதாவையே அவமானப் படுத்தும் செயல் !

இணைந்தே பயணிப்போம், இறையரசை நிலைநாட்டுவோம்

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

இறைவன் படைப்பில் தாய்.

qw

ஆண் ஒருவரின் உடலில் இருந்து உயிரைத் தனியே எடுத்தால் அவன் பிணமாவான். பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்தால் அவள் தாயாவாள் !

தாய் எனும் உறவு, எந்த விதமான மகத்துவத்தோடும் ஒப்பிட முடியாத உறவு. தன்னலத்தின் ஒரு சிறு துரும்பு கூட இல்லாத தூய்மையைச் சொல்ல வேண்டுமெனில் தாயன்பைத் தான் சொல்ல வேண்டும். எல்லோருடைய மனதிலும் அம்மாவைப் பற்றிய பிம்பங்களும், பிரமிப்புகளும், நினைவுகளில் நீங்காமல் இருக்கும். பெரும்பாலான நினைவுகளை புரட்டிப் பார்த்தால் அவை பால்ய காலத்து நினைவுகளாகவே இருக்கும்.

மழலைக் காலம் தான் அன்னைக்கும், குழந்தைக்கும் இடையேயான தூய்மையான உறவின் முகவுரையை எழுதுகிறது. இறைவனின் படைப்பில் குறை என்று எதுவுமே இல்லை. பச்சைக் குழந்தை பால்குடிக்கத் துவங்கும் போது அந்தக் குழந்தையால் சுமார் 15 இன்ச் தூரம் தான் பார்க்க முடியுமாம். அது ஒரு தாயின் மார்புக்கும், முகத்துக்கும் இடைப்பட்ட தூரம். பாலும், பாசமும் ஒரே நேரத்தில் குழந்தை அருந்த இறைவன் செய்த விந்தை இது என்றால் மிகையில்லை.

“தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” என்கிறது பைபிள். இறைவனின் அன்பை ஒப்பீடு செய்ய ஒரு தாயின் அன்பை இறைவனே தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவர் தாயன்பை உலகின் உன்னத அன்பாய் நிலைநாட்டியிருக்கிறார் என்பது தானே பொருள்.

அன்னையைப் பற்றிப் பேசும்போது ஒரு பிரபலமான யூதப் பழமொழியைச் சொல்வார்கள். “கடவுளால் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது என்பதனால் தான் அன்னையைப் படைத்தார்” என்று ! கடவுளின் பிரதிபலிப்பாகவும், பிம்பமாகவுமே அன்னை நமக்கெல்லாம் தரப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இந்த உலகம் தொழில்நுட்பத்தினாலோ, அழகினாலோ, வளங்களினாலோ கட்டி எழுப்பப்படவில்லை. அது அன்பினால் கட்டி எழுப்பப் படுகிறது. அன்பை நீக்கி விட்டுப் பார்த்தால் உலகம் வெறுமையின் கூடாரமே ! ஒரு மனிதனின் வாழ்நாளை அலசி ஆராய்ந்து பாருங்கள். அவன் நல்ல மனிதனாய் வாழ்கிறானா இல்லையா என்பதை அவன் தனது தாயை நேசிக்கிறானா இல்லையா என்பதை வைத்து அளவிடலாம். தாயை நேசிக்காத மனிதனால் மற்ற எதையும் ஆத்மார்த்தமாய் நேசிக்க முடியாது. தாயின் நேசத்தைப் பெறாதவர்களே பிற்காலத்தின் நிம்மதியற்ற, வரையறயற்ற, ஒழுங்கீனமான வாழ்க்கைக்குள் செல்கின்றனர். அன்னை தான் ஒரு குழந்தைக்கு சரியான வழியையும், வாழ்வையும் காட்ட முடியும்.

உங்கள் பெற்றோர் மீது அன்பும், மரியாதையும் வையுங்கள். அவர்களை முதிர் வயதிலும் பாதுகாத்து நேசியுங்கள். என்கிறது இஸ்லாமிய புனித நூல் குரான். ஒரு தாய் குழந்தையை நேசிக்கும் அதே நேசத்தில் தேசத்தையும் நேசியுங்கள் என்கிறார் புத்தர். கணக்கற்ற தெய்வங்களை அன்னையாய் பாவித்து அன்னைக்கு அதிகபட்ச மரியாதை செலுத்துகிறது இந்து மதம். தாயை நேசிக்க வேண்டாமெனச் சொல்லும் மதங்கள் இல்லை ! தாயின்றிப் பிறந்த மனிதர்களும் இல்லை.

உலகையெல்லாம் உருக உருக நேசித்து விட்டு, தனது தாயை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் போலித்தனத்தின் பிம்பங்கள். அவர்கள் வெள்ளியடிக்கப்பட கல்லறைகள். வெறும் பெருமைக்காகத் திரிபவர்கள். அவர்கள் அன்பின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள். இன்று உலகெங்கும் முதியோர் இல்லங்கள் புற்றீசல் போலக் கிளம்பி விட்டன. மாதம் தோறும் பணத்தைக் கட்டி கால்நடைகளைப் பராமரிக்க குத்தகைக்கு விடுவதைப் போல மனிதர்கள் செயல்படுகிறார்கள்.

தன் குழந்தையை அரை நொடி கூட இடுப்பை விட்டு இறக்கிவிட மனமில்லாமல் சுமந்து சுமந்து மகிழ்வார்கள் அன்னையர். நிலவைக் காட்டியும், நிலத்தைக் காட்டியும் சோறூட்டுவார்கள். இடுப்பில் சுமந்து கொண்டு மைல்கணக்காய் நடந்து திரிவார்கள். வினாடி நேரமும் விடாமல் நெஞ்சில் சுமந்து திரிவார்கள். அத்தகைய அன்னையரைக் கடைசியில் மகன் முதியோர் இல்லங்களில் தள்ளி விடுகிறான்.

முதியோர் இல்லங்களின் மூலைகளில் தன் மகனின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத மகனின் நினைவுகளுடன் ஏக்கத்தில் இறந்து போகும் அன்னையர் ஏராளம் ஏராளம். முதுமை என்பது இறைவனின் ஆசீர்வாதத்தின் அடையாளம். முதுமை வரை வாழ்கின்ற பெற்றோரைக் கொண்டிருப்போர் வாழ்க்கையில் அதீத அன்பை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். அத்தகைய முதுமைப் பெற்றோரை ஒரு குழந்தையைப் போல பாதுகாப்பதில் இருக்கிறது மனிதத்தின் அழகிய வெளிப்பாடு.

இறைவனின் பிம்பங்களான அன்னையர், தாங்கள் உயிராய் நேசித்த பிள்ளைகளாலே உடைபடும் நிலையைக் காண்கையில் விழிகள் மட்டுமல்ல விரல்களும் கூட கண்ணீர் விட்டுக் கதறும். அன்னையைத் தனது இறுதி மூச்சு வரை அன்பில் சுமக்காத மனிதன், வாழ்வதில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனால் உணரக் கூடிய அதிகபட்ச வலியைத் தாங்கி குழந்தையைப் பெறுகிறாள் அன்னை. அந்த வலியைத் தாங்கிய அன்னை அதை விட அதிக வலியை அனுபவிப்பது குழந்தைகள் அவர்களை உதாசீனப்படுத்தும் போது தான்.

கண்டதும் காதல் என்பார்கள், காணாமலேயே வருகின்ற அளவற்ற காதல் அன்னையிடம் தான் உருவாகும். தனது வயிற்றில் சுமக்கும் கருவின் உருவம் தெரியாமலேயே அதில் உயிரை வைத்து உருவாக்க அன்னையால் மட்டுமே முடியும். அதனால் தான் தாய் இரண்டாம் இறைவனாகிறாள். குழந்தையின் முதல் அழுகையில் மட்டும் ஆனந்தமடைந்து, அடுத்தடுத்த அழுகைகளில் கூடவே அழும் அதிசய உள்ளமாகிறாள்.

வாழ்வின் உன்னதத் தருணங்களை இரண்டு இடங்களில் தான் அனுபவிக்க முடியும். ஒன்று உங்கள் அன்னையின் அருகாமையில், இரண்டு, உங்கள் குழந்தைகளின் அருகாமையில். இரண்டுமே தாயன்பு தவழும் இடங்கள்.

தாயன்புக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும் ? கவிஞர் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் கவிதையாய் விழுகின்றன. ” அன்னை தான் எல்லாமே ! கவலைகளின் ஆறுதல். துயர நேரத்தின் நம்பிக்கை. பலவீனத்தை நிரப்பும் பலம். அன்பின் துவக்கம், இரக்கமும் மன்னிப்பும் உறையுமிடம். அன்னையை இழப்பவர்கள் ‘ஆசீர்வதிக்கும், பாதுகாக்கும்’ தூய ஆன்மாவை இழந்து விடுகிறார்கள்.”

தாய் இறைவனின் பிம்பம். சின்ன சொர்க்கத்தை வீடுகளில் இறக்கி வைக்கும் கடவுளின் பிரதிநிதி. அன்னையை நேசிக்கத் தெரியாதவர்கள் வாழ்க்கையை வாசிக்கத் தெரியாதவர்கள். மனிதர் என்று அவர்களை அழைக்க மறுதலித்து விடுங்கள்.

அன்னையை நேசிப்போம். நிஜத்தில் வாழ்த்தாலும், நினைவில் வாழ்ந்தாலும்.

சேவியர்

 Thanks : Vettimani, Germany

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்