செவிலியர் பணி : ஒரு கிறிஸ்தவப் பார்வை

nurse_1
மனிதம் கலப்போம்.

நர்ஸ் ! எனும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள் என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட உண்டு.

மருத்துவப் பணி என்பது ஒரு மகத்தான பணி என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இவர்களுடைய பணி இருக்கிறது. நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.

நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. போர்களினால் பாதிக்கப்பட்டவர்களிடையே தான் அவருடைய பணி பெருமளவில் இருந்தது.

1820 க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர் முழுநேர மருத்துவப் பணி செய்தது வெறும் மூன்று ஆண்டுகள் தான் என்பது வியப்பூட்டுகிறது. “எவ்வளவு காலம் பணி செய்கிறாய் என்பதல்ல, எப்படி பணி செய்கிறாய் என்பதே முக்கியம் என்பதே முக்கியம்” என்பதையே இவருடைய வாழ்க்கை சொல்கிறது. “நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.

வேலைகள் எல்லாமே வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு தாதியர் பணி ஒரு சிறந்த உதாரணம். வெறும் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தப் பணியில் சேர்பவர்கள் பணியின் அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள். நீடிய பொறுமை, இரக்கம், சுயநலமின்மை என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களே நல்ல நர்ஸாக பணிபுரிய முடியும் என்கிறார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.

ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

1. செவிலியர் பரிவுகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்போருக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவதெல்லாம் நகையோ, பணமோ, வீடோ, காரோ அல்ல. பரிவு காட்டும் இதயம் தான். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” எனும் இறைவாக்கு ( கலாத் 6:2 ) நம்மிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்.

2. செவிலியர்கள் இதயத்தின் ஆழத்தில் இரக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரக்கத்தின் வேர்கள் இதயத்தில் தான் மையம் கொள்ளும். வேரற்ற இரக்கம் வெயிலில் காய்ந்து விடும். “இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” எனும் இறைவார்த்தை நினைவுக்கு வருகிறதா ?

3. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது செவிலியர்களின் பண்புகளில் ஒன்று. நோயாளிகள் ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து திரிபவர்கள். அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் காரணிகளாக செவிலியர் இருக்க வேண்டும். ஒரு புன்னகை, ஒரு உற்சாகமான பார்வை, ஒரு மலர்ச்சியான முகம் இது நோயாளிக்கும் பரவி அவர்களுடைய சுமையைத் தணிக்க உதவும் என்பது உளவியல் உண்மை.

” ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” எனும் பிலிப்பியர் 4:4 ம் வசனமும், ” மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” எனும் நீதிமொழிகள் 14:22ம் வசனமும் செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளோடு இணைந்து பயணிக்கிறது.

4. பதட்டப்படாமல் வேகமான முடிவெடுக்கும் திறமை செவிலியர்க்கு அவசியம். நோயாளிகளோடான வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போல ரம்மியமானதல்ல, அது பாறைமீது காரோட்டுவது போன்றது. கவனம் சிதையாமல் இருக்க வேண்டியதும், தேவையான நேரத்தில் சரியான முடிவை வேகமாய் எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்கு கடவுளின் ஞானம் தேவை.

“உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” எனும் இறை வார்த்தைகள் ( யாக்கோபு 1 : 5 ) செவிலியருக்கு ஊக்கம் ஊட்டட்டும்.

5. வார்த்தைகளில் இனிமையும், எளிமையும் இருக்க வேண்டியது இன்னொரு முக்கியமான தேவை. நோயாளிகளின் துயரக் கதைகளைச் சலிக்காமல் கேட்கும் காதுகளும், அவற்றுக்கு எரிச்சல் படாமல் பொறுமையாய் பதிலளிக்கும் மனமும் செவிலியருக்குத் தேவை. ஒரு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லும் அன்னையைப் போல அவர்கள் செயல்பட வேண்டும்.

” உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்” எனும் கொலோசேயர் 4 : 6 , செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.

6. கடின உழைப்பு தேவை. அதை அற்பண உணர்வோடு செய்தலும் வேண்டும். அலுவலக வேலை போல காலை முதல் மாலை வரை எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செவிலியர் பணி முடிவதில்லை. அது தொடர்ச்சியான ஒரு பணி. அலுவலக எல்லைக்கு வெளியேயும் அதே மனநிலையை நீடித்துக் கொள்ளும் தேவை ஏற்படலாம். உழைக்கச் சலிக்காத இதயம் அவர்களுக்கு வேண்டும்.

“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” ( கொலோ 3 :23 ) எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.

7. தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக்கூடாது: மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” (1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.

8. செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு குணாதிசயம் பணிவு. கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. பணிவை விலக்கும்போது மனிதன் இறை பிரசன்னத்தை விட்டு சாத்தானில் எல்லைக்குள் நுழைந்து விடுகிறான். “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள்” எனும் எபேசியர் 4:2, செவிலியருக்கும் மிகப் பொருத்தமே.

9. நீடிய பொறுமை செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் பதட்டத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு கேட்கும் கேள்விகளை பொறுமையுடன் எதிர்கொள்வதானாலும் சரி, நோயாளிகளின் உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு பொறுமையுடன் கையாள்வதானாலும் சரி, பொறுமை மிக மிக அவசியம். “பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்” எனும் நீதிமொழிகள் ஒரு அறிவுறுத்தல்.

10. செபத்தில் நிலைத்திருப்பவராக இருக்க வேண்டும். இறைவனை விட்டு விட்டுச் செய்யும் செயல்கள் எல்லாம் செத்த செயல்களே. செய்கின்ற செயலை இறைவனின் அருளோடு செய்வதில் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. பிறருக்காக மனம் உருகி செபிப்பதும், யாரையும் காயப்படுத்தாத தினங்களுக்காக செபிப்பதும் செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4 :6 ) என்கிறது வேதாகமம்.

ஏற்கனவே சொன்னது போல, ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

செவிலியர் அனைவரும் தங்கள் பணி ஒருவகையில் இறையழைத்தல் என்பது போல ஆத்மார்த்தமாய் செய்தால் மனுக்குலத்தின் மகத்துவங்களாக அவர்கள் நிலைபெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

( Thanks : Desopakari Magazine )

எல்லைகள் கடந்த மனித நேயம்

k1

 

 

இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள் !

மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்பு தான் !  ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கி விடுகிறது !

தன்னலச் சுவர்களை உடைத்துக் கடக்கும் மனித விரல்கள் மனித நேயத்தை அணிந்து கொள்கின்றன. அந்த மனித நேயம் தேவையான வாசல்களைத் தேடிச்சென்று உறவைப் பகிரும் உன்னத வேலையைச் செய்கிறது. நோயாளிகளின் படுக்கைகளின் அருகே ஆறுதல் கரங்களாய் மாறுகிறது. வறுமையின் வயிறுகளில் சோற்றுப் பருக்கைகளாய் உருமாறுகிறது. பாரம் சுமக்கும் தொழிலாளியின் தோள்களாய் மாறுகிறது. தேவையென நீளும் கரங்களின் உள்ளங்கைகளில் பொருளாதார பரிசுகளாக மாறிப் போகிறது. தன்னலத் தடையுடைக்கும் நதிகள் அன்பின் அருவிகளாக அவதாரம் எடுக்கின்றன.

மதங்கள் மனிதநேயத்தை தங்கள் அடித்தளமாய் அமைத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் மேல்  மதங்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாசி போலப் படிந்து படிந்து உண்மையான அடிப்படையை உலகமே மறந்து கொண்டிருக்கிறது. சடங்குகளின் துகிலுரித்து உண்மையின் நிர்வாணத்தைக் கண்டுகொள்ளும் ஞானம் பலருக்கும் இருப்பதில்லை. அவர்கள் சாரலில் நனைந்து அதையே பெருமழையென புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாண்டுவதும் இல்லை, உண்மையைத் தீன்டுவதும் இல்லை. மதக் கலவரங்களின் வேர்கள் இத்தகைய போலித்தனங்களின் மேல் பற்றி படர்ந்திருக்கின்றன.

இதயத்தில் மனித நேயம் இருக்க வேண்டியது மானுடத்தின் கட்டாயத் தேவை. அதற்கு வேர்களை விசாரிக்கும் வலிமை வேண்டும். மரங்களின் இயல்புகளைப் பொறுத்தே அதன் கனிகளும் அமையும். மாமரத்தின் கிளைகளில் ஆப்பிள் பழங்கள் விளைவதில்லை. ஆனால் போலித்தனமான மனிதர்களோ பட்டுப் போன கிளைகளில் கூட பழங்களை ஒட்டவைத்து நடக்கிறார்கள். வெளிப்படையான சில செயல்களால் தங்களை புனிதர்களாய்க் காட்டும் சுய விளம்பரதாரர்கள் அவர்கள். அவர்கள் மனிதநேயம் உள்ளவர்கள் போல நடிக்கும் வித்தைக்காரர்கள்.

உண்மையான மனிதம் வேர்களில் நிலவும். அதன் கனிகள் அதற்கேற்ப விளையும். ஒட்டவைக்கும் பழங்கள் அங்கே இருப்பதில்லை. மொட்டவிழ்ந்த பழங்களே விளையும். கனிகளால் மரங்கள் அடையாளப்படும். கனிகளால் தோட்டங்கள் அர்த்தப்படும். போலித்தனமில்லா ஒரு பழத்தோட்டம் விழிகளில் விரியும். உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் அன்பு இத்தகையதே ! அது இயல்பிலேயே கனிகொடுக்கும் மரமாக செழித்து வளர்க்கிறது !

மனிதநேயம், கர்வத்தைக் கழற்றி வைக்கும். நான் பெரியவன் எனும் சிந்தனைகளின் படிகளில் மனித நேயம் நடை பழகுவதில்லை. எனவே தான் ஏற்றத்தாழ்வுகளைச் சிந்திக்கும் மனங்கள் மனித நேயத்தை விட்டு வெகுதூரத்தில் கூடாரம் கட்டிக் குடியிருக்கின்றன. கர்வமற்ற மனது தான் மனிதனை மனிதனாய்ப் பார்க்கும். தூணிலும் துரும்பிலும் கடவுளைப் பார்ப்பதை விட, காணும் மனிதர்களில் இறைவனைப் பார்க்கும் ! அப்போது சக மனிதனை நேசிக்கவும், மதிக்கவும், அன்புடன் அரவணைக்கவும் அதற்கு சிக்கல் எழுவதேயில்லை.

மனித நேயம் உலகெங்கும் இருக்க வேண்டிய மனித இயல்பு. அது மட்டும் வாய்த்துவிடின் மதங்களின் சண்டைகளோ, இனப் பாகுபாடுகளோ உலகில் உருவாவதில்லை. சண்டைகளின் வரவு, இறைவனை அறியாததன் விளைவு. மனித நேயம் இல்லாததன் செயல் வடிவமே வன்முறை ! 

உங்களிடம் மனித நேயம் இருக்கிறதா ? ஒரு அவசர பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் மேலதிகாரிக்கும் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் உங்கள் உடன் பணியாளருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் அன்பை உங்கள் சமையல் காரருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் பிள்ளைகளைப் போலவே தெருவோர ஏழையின் அழுக்குக் குழந்தையை அரவணைக்கிறீர்களா ? மனித நேயத்தின் சிதைந்து போன சிதிலங்கள் உங்கள் விழிகளுக்கு முன்னால் புதிய விடைகளை எழுதும்.

இன்னும் கேள்விகள் எழலாம். சகமனிதனின் வெற்றி உங்களை மகிழவைக்கிறதா ? ஆனந்தமாய் ஆடிப் பாட வைக்கிறதா ? அவனுக்குக் கிடைக்கும் வசதிகளும், பெருமையும் உங்களை ஆனந்தமடையச் செய்கிறதா ? இல்லை எரிச்சலின் உச்சியில் எறிகிறதா ? அடுத்தவனின் தோல்வியில் நீங்கள் உடைந்து போய் அழுகிறீர்களா ? இல்லை அவை வெறும் வேடிக்கைக் கதையாகி வெறுமனே செல்கிறதா ? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கேள்விகளின் விடைகளில் இருக்கிறது உங்கள் மனிதநேயத்தின் எல்லைகளும், ஆழங்களும் ! உங்கள் விடைகளின் அடிப்படையில் உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள். 

வாழ்க்கை மிகவும் அழகானது. இணைந்தே வாழ்வதற்காய் நமக்குக் கிடைத்திருப்பது தான் இந்த வாழ்க்கை. எனவே அன்பினால் உலகைத் தீண்டுவோம். நேசத்தால் உயிர்களைத் தொடுவோம். கோபத்தில் எல்லைகளையும், பொறாமையின் தடைகளையும் உடைத்தே எறிவோம்.

அன்பின்றி அமையாது உலகு !
அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !

சேவியர்

வெற்றிமணி – ஜெர்மனி

 

 

 

முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….

Egg3

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .

இதுக்கு “தம்” பரவாயில்லையேப்பா !

 namitha1

வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.

இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது ?

அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.

சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.

(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்

வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.

தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.

 

நான் குண்டாயிருக்கக் காரணம் நானில்லை !

madhu-_11_

அளவுக்கு அதிகமாய் நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளுவதும், சோம்பித் திரிவதும் மட்டும் தான் உடல் குண்டாகக் காரணம் என நம்பியிருந்த நம்மை வியப்பூட்டுகிறது ஒரு புதிய ஆராய்ச்சி.

குண்டாய் இருப்பவர்களைப் பார்த்து, உன்னை ஒரு வைரஸ் தாக்கியிருக்கலாம், அதனால் தான் நீ ரொம்ப குண்டாய் இருக்கிறார் என சொல்வதில் பிழையில்லை என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

AD 36 என அழைக்கப்படும் வைரஸுக்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும் தொடர்பு உண்டு என நிரூபித்திருக்கின்றனர் அறிவியலார். இந்த வைரஸ் மிக எளிதில் தொற்றக் கூடிய தன்மையுடையது. காய்ச்சல், ஜலதோஷம் போல தும்மினாலோ, இருமினாலோ, கைகுலுக்கினாலோ கூட பரவலாம் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி இந்த ஆராய்ச்சியை நிகழ்த்திய நிகில் துராந்தர் எனும் பேராசிரியர்.

உடலில் இந்த வைரஸ் புகுந்தவுடன் நேராக நுரையீரலில் நுழைந்து அதில் முடிந்த அளவு தனது முத்திரையைப் பதித்து விடுகிறதாம். பின் அங்கிருந்து நேராக  உடலிலுள்ள கொழுப்புத் தசைகளுக்குத் தாவி விடுகிறதாம். அப்படி நுழையும் வைரஸ் சும்மா  இருக்காமல் அந்த கொழுப்புத் தசைகளை சட் சட்டென பலுகிப் பெருகச் செய்து உடல் எடை எசகு பிசகாய் அதிகரிக்க காரணமாகிவிடுகிறதாம்.

இப்படி தாக்குதலுக்கு உள்ளாகி தசைகள் பெருகிக் கொண்டே இருக்க, விஷயமே தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு கிலோவுமாய் கூடிக் கொண்டே இருக்கும் உடலைப் பார்த்து நாம் கவலை கொள்கிறோம் என்கிறார் அவர்.

தும்மினாலும், இருமினாலும், கைகுலுக்கினாலும் கூட வைரஸ் பரவுமா, அப்படியானால் இனிமேல் குண்டானவர்களின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என உடனே முடிவு கட்டி விடாதீர்கள், ஏனெனில் குண்டாய் இருப்பவர்கள் எல்லோரிடமும் இந்த வைரஸ் இருப்பதில்லை.

இந்த வைரஸ் உடலில் ஆதிக்கம் செலுத்தும் வரை இந்த உடல் எடை அதிகரித்தல் நிகழும் எனவும், அந்த வைரஸ் பாதிப்பு விலகியபின் உடல் எடை அதிகரிக்காது எனவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆனால். சில மாதங்கள் இந்த வைரஸ் பாதிப்பு உடலில் இருந்தால் உடலின் எடை கணிசமாய் அதிகரித்து விடுமே எனும் நியாயமான அங்கலாய்ப்புக்கு சரியான விடையில்லை.

எனினும், உடல் எடை அதிகரிக்க இந்த வைரஸ் மட்டுமே காரணமில்லை என்பதை கவனத்தில் கொள்தல் இன்றியமையாதது. சரியான உடற்பயிற்சி இல்லாமலும், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம் காரணமாகவும் உடை அதிகரித்துக் கொள்பவர்கள் அந்தப் பழியை இந்த வைரஸ் மேல் சுமத்தாதிருக்கட்டும்.

எங்கே என்ன சாப்பிடலாம் !

சே… நார்த் போக வேண்டியிருக்கு. அங்கே போய் எதைச் சாப்பிடறதுன்னே தெரியலையே என தென்நாட்டு வாசிகளும், சவுத் போனா சோறு, சாம்பார் தவிர வேற என்ன இருக்கு என குழம்பும் வட வாசிகளும் இந்த படத்தை கிளிக்கிப் பாருங்கள்.

 

எந்த ஊருக்குப் போனா, என்ன சாப்பிடலாம் எனும் பட்டியல். சுவாரஸ்யமாய் இருந்ததால் பகிர்கிறேன்.

 

பின் குறிப்பு : எவ்வளவு சாப்பிடலாம் என்பது உங்கள் வயிறையும், பர்சையும் பொறுத்தது

நீங்க சுறுசுறுப்பான பார்ட்டியா ?

 

சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே  ஆய்வுகள் முன்னிலைப்படுத்தும். இந்த ஆராய்ச்சி வெறும் உடற்பயிற்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்யப்பட்ட நபரின் முழு வாழ்க்கை முறையையும் பரிசீலித்தது.

தினசரி வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இயங்குகிறார் என்பதும், தினமும் உடலுக்கு எப்படிப்பட்ட வேலை தரப்படுகிறது என்பதும் கவனத்தில் இந்த ஆய்வு கவனத்தில் கொண்டது.

ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மக்களின் ஓய்வு, தூக்கம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு, தினசரி அலுவலின் தன்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு விரிவாக நடத்தப்பட்டது. இதன் முடிவில் தான் சுறுசுறுப்பான வாழ்க்கை எனில் புற்று நோய் பயத்தைக் குறைக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பொதுவாக இன்றைய நவீன உலகத்தில் உடலுழைப்புக்கு அதிகம் தேவையற்ற சூழலில் இந்த ஆராய்ச்சி முடிவு நம்மை சற்றே ஓடியாடி உழைக்க உற்சாகப் படுத்துகிறது எனலாம்.

உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் – அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் ?

பாட்டி கேட்டா சிரிப்பாங்க …

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது.

இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள். காயம் பட்ட இடத்தில் சட்டென உமிழ் நீர் தொட்டு வைக்கும் மருத்துவர்கள் அல்லவா அவர்கள்.

சரி, பாட்டி தாத்தத இல்லேன்னா பரவாயில்லை. உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு சின்ன காயம் பட்டா என்ன செய்யும். அது உமிழ்நீரால் அந்தக் காயத்தை நக்கி ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் தானே. அதற்குத் தெரிந்த மருத்துவம் இப்போது தான் நெதர்லாந்து வாசிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

வாயில் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதற்கான காரணத்தை நாங்கள் விளக்கியுள்ளோம் என பீற்றிக் கொள்கின்றனர் நமது வைத்திய தேசத்தின் வலிமை அறியாதவர்கள்.

இனி என்ன, உமிழ்நீரில் இருக்கக் கூடிய ஹிஸ்டெயின் எனும் பொருளைப் பிரித்தெடுத்து அதன் தன்மையில் மருந்து தயாரிப்பார்களாம், நாமும் மறக்காமல் வெளிநாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்து பயன்படுத்துவோம். பேடெண்ட் நெதர்லாந்துக்கு போட்டுக் கொண்டு.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது, கல்லில் கால் இடித்து காயம் ஏற்பட்டால் அந்தக் காயத்தின் மீது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதை எந்த நாட்டுக்காரன் ஆராய்ந்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளியிடப் போகிறானோ தெரியலையே

பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து.

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்

 புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த  வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை – அதை
விட்டொழித்தால் தவழுமே புன்னகை