காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு !

செக்ஸ். இந்த ஒற்றை வார்த்தையைக் கழித்து விட்டு மனித குல வரலாற்றையோ, இலக்கியங்களையோ, வாழ்க்கை முறையையோ முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதன் தோன்றிய காலத்திலேயே துவங்கிவிட்டது பாலியல் விஷயங்கள். ஒவ்வோர் காலகட்டத்திலும் அதன் பரவலும் பாதிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். மற்றபடி செக்ஸ் எனும் ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒத்துக் கொள்ள முரண்டு பிடிப்பவர்கள் ஏதேனும் ஒரு தினசரியைப் புரட்டிப் பார்த்தாலே போதுமானது. டீன் ஏஜ் பெண்களின் காதல் முதல் முக்கால் கிழடுகளின் கள்ளக் காதல் வரை எல்லாமே சொல்லித் தரும் பாடம் செக்ஸ் பற்றியதாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் சமீபகாலமாக திடுக்கிட வைக்கும் முன்னேற்றம் தொலைபேசி செக்ஸ் உரையாடல் !

அதென்ன போன் செக்ஸ் ? கொஞ்சம் கண்ணியமாய்ச் சொல்ல வேண்டுமெனில் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் இருவர் பாலியல் ரீதியான உரையாடல்களில் லயித்து, உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்வது எனலாம். மின்னஞ்சலில் பேசிக்கொள்வது, இண்டர்நெட் சேட் விண்டோக்களில் பேசிக்கொள்வது போல ஒரு முகம் தெரியா செக்ஸ் தூண்டுதல் தான் இது.

நள்ளிரவு தாண்டியபின்னும் தனியாக அமர்ந்து, வெட்கத்தின் நகத்தைக் கடித்துத் தின்றபடி, போனில் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் இந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். திருமணமாகி தனியே வாழும் தம்பதியரும் இத்தகைய தொலைபேசி உரையாடல்களில் லயிப்பதுண்டு. இவை எப்போது எல்லை மீறுகிறது தெரியுமா ? அறிமுகமற்ற நபர்களை தொலைபேசி செக்ஸ் பேச்சுகளுக்காக நாடும்போது தான்.

இந்தியாவில் இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான அறிமுகமாக இருந்தாலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான பிஸினஸ். பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சட்டபூர்வமான தொழில். ஒருவகையில் இது ஒரு விபச்சாரத் தொழில் போலத் தான். ஆனால் என்ன இங்கே இரு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, உண்மையான தொடுதல் உணர்வுகளைப் பெறவோ முடியாது அவ்வளவு தான். இருவரும் கற்பனையான உலகுக்குள் சுற்றித் திரிவார்கள்.

நல்ல வசீகரிக்கும் குரல் மட்டும் தான் இந்தத் தொழிலில் ஈர்க்கப்படும் அம்சம். அப்படிப்பட்டவர்களைத் தான் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர். அழைக்கப்பட்டவர்களை பேச்சில் குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கான பணி. “உங்களுக்காக இதோ நாங்கள் காத்திருக்கிறோம் தனிமையை இனிமையாக்க கால் பண்ணுங்கள்” என விளம்பரம் வரும். அதில் வரும் எண்ணுக்குப் போன் செய்தால் பெண்கள் பேசுவார்கள். இவர்களெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள். காதலில் கசிந்துருகுவது போலவும், காமத்தின் கால்வாயில் நீந்துவது போலவும் பேசுவதில் எக்ஸ்பர்ட்.

மேலை நாடுகளில் இவற்றுக்கென தனி எண்கள் வைத்து நிமிடக் கணக்கில் டாலர்களைக் கறக்கிறார்கள். பெரும்பாலும் டெலிபோன் பில்லுடன் அந்தக் கட்டணமும் வரும். தொலை பேசி நிறுவனங்கள் அந்தத் தொகையில் கணிசமான ஒரு தொகையை இந்த பாலியல் பேச்சு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும். அமெரிக்காவில் ஒரு பெண் ஒரு வாரத்துக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை சம்பாதித்து விட முடியும் என்கிறது புள்ளி விவரம். 

“உங்களுடைய இரவை இனிமையாக்க வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் லிஸா காத்திருக்கிறார்” என மேற்கத்திய உலகம் விற்றுக்கொண்டிருந்ததை தமிழ்ப்படுத்தியிருப்பது தான் கொடுமை. “உங்களில் யாருக்காவது ஸ்பைஸி சேட் வேணுமா மாலதியும், கல்பனாவும் உங்களுக்காக காத்திருக்காங்க. கால் பண்ணுங்க” என்பது போன்ற ஏதேனும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தால் அப்படியே டிலீட் பண்ணிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுங்கள். அத்தகைய அழைப்புகளெல்லாம், விவகார அழைப்புகள் தான்.

கொஞ்சம் அசந்தால் ஆண்டுக்கு ஐயாயிரம் என பேரம் பேசி, அது பிறகு அப்படியே உங்களுடைய சம்பாத்தியத்தின் கடைசிப் பணத்தையும் உறிஞ்சாமல் விடப் போவதில்லை என்பதே நிஜம். பெரும்பாலும் இத்தகைய போன் பேச்சு பார்ட்டிகள் நேரடியாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் சில சம்பவங்களில் நல்ல வெயிட் பார்ட்டிகளை நேரில் சந்தித்து பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன ! உண்மையான தகவல்களைக் கொடுத்து விட்டால் பிளாக்மெயில், குடும்ப சிக்கல்கள் என்று இதன் தாக்கம் பின்னியெடுக்கும்.

வெளிநாட்டிலுள்ள ஆபாசப் பேச்சு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல இடங்களிலும் கமுக்கமாய் நடந்து வருகிறது. ஆபாசப் பேச்சை விரும்புபவர்கள் “ஆசியப் பெண்களிடம், அல்லது இந்தியப் பெண்களிடம்” பேச வேண்டுமென ஸ்பெஷலாய் விரும்பினால் அந்த அழைப்புகளை இங்குள்ள கிளைகளுக்கு அனுப்பி விடுகிறார்களாம். சில நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள அழைப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன.

எண்பதுகளில் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. இந்த சந்தை இன்னும் அதிகமாக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவை இணைத்தும் ஒரு சர்வதேச வலையமைப்பில் இப்போது இந்த ஆபாசப் பேச்சு தொழில் விரிவடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும்.

ஆபாசப் பேச்சுகள் குடும்ப உறவுகளின் மீதான பிடிப்பைப் போக்கி ஒரு விதமான மயக்க கற்பனை உலகிற்குள் மக்களை சிறைப்படுத்தி விடுகிறது. மேலை நாடுகளில் இத்தகைய ஆபாச அழைப்புகளுக்கான வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் பார்வையிழந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அப்படிப் பார்த்தாலும் 70 சதவீதம் பேர் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கை பலவீனமடைய இது மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.

ஒருவகையான அடிக்ஷனாகவும் இது மாறிவிடும் என்கின்றனர் உளவியலார்கள். இந்தப் புதை குழிக்குள் விழுபவர்கள் பின்னர் சாதாரண தாம்பத்யத்தில் விருப்பம் இழந்து, போனில் பேசினால் தான் தாம்பத்ய உறவு எனும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இந்தியாவைப் பொறுத்தவரை இது சட்ட விரோதமானது. ஒரு வகையில் விபச்சாரத்துக்கான கடுமையுடன் இதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பதின் வயதுப் பசங்களும், பெண்களும் இத்தகைய வலைகளில் சிக்கிக் கொண்டால் அவர்களுடைய எதிர்காலமே ஒட்டு மொத்தமாய் அழிந்து போகும் அபாயமும் உண்டு.

“இதெல்லாம் சும்மா பேச்சுக்குத் தானே ?” என யாராவது நியாயப்படுத்தினால் அவர்கள் நிலமையின் வீரியத்தை உணராதவர்கள் என கருதிக் கொள்ளுங்கள். மன ரீதியான பாதிப்புகளே உடல் ரீதியான பாதிப்புகளை விட நீண்டகாலம் துயரம் தரக் கூடியது என்பதை உணர வேண்டும். மனதின் ஊனத்துக்கு உத்தரவாதம் தரும் இத்தகைய பேச்சுகளை வரவேற்பது என்பது மனுக்குலத்துக்குச் செய்யும் அவமானம் என்பதைத் தவிர வேறில்லை.

பெண்கள் தான் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாய் இருக்க வேண்டும். ஏதேனும் பத்திரிகையின் மூலையில் “வீட்டிலிருந்தே பேசலாம், அலுவலகத்திலிருந்தும் பேசலாம் மாசம் பத்தாயிரம், பதினையாயிரம்” என ஆசை காட்டினால் விழுந்து விடாதீர்கள். அல்லது தவறான வேலை என புரிகின்ற கணத்தில் அந்தத் தொடர்பைத் தாமதமின்றித் துண்டித்து விடுங்கள். வெறுமனே ஒரு வேலையாக இதைச் செய்ய முடியாது என்பதும், இது மனரீதியான கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதையும் உணரவேண்டும்.

பாசிடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் பாசிடிவ் விஷயங்கள் அலைமோதும். நெகடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் நெகடிவ் விஷயங்கள் குடிகொள்ளும். அதே போல செக்ஸ் தொடர்பாகப் பேசிக்கொண்டே இருப்பவருடைய மனதிலும் அத்தகைய எண்ணங்கள் காலப்போக்கில் கால்நீட்டி அமர்ந்து விடும் என்பது தான் நிஜம்.

வெளிப்பார்வைக்கு சாதாரண கால்செண்டர் போல தோற்றமளிக்கும் இடங்களில் கூட திரைமறைவில் இத்தகைய வேலைகள் நடக்கக் கூடும். எனவே எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்பு அழைப்புகள் பிரபல பத்திரிகைகளிலேயே தைரியமாய் அழைப்பு விடுக்கின்றன என்பதில் கவனம் தேவை.

சமீபத்தில் கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஒரு கும்பலைப் பிடித்த காவல்துறையினர் இந்த தொழிலில் வேர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு திரைமறைவு தொழில் இருப்பதே அப்போது தான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

குடும்பவாழ்க்கையைச் சிதைக்கும் பாதையில் மும்முரமாய் இணையமும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் பயணிப்பது அபாயகரமானது. இவற்றின் தேவைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவதே இன்றியமையாதது. இத்தகைய கலாச்சாரச் சீரழிவுத் தொழில்களை விட்டு விலகுவது மட்டுமன்றி, எதிர்த்துக் குரல் கொடுப்பதிலும் நமது கரங்களை இணைக்க வேண்டியது அவசியம்.

சட்டமும் விதிமுறைகளும் ஒழுங்குகளைக் கட்டாயப்படுத்தித் திணிக்கும். ஆனால் தனி மனித கோட்பாடுகளும், சிந்தனைகளும் நேர்வழியில் இருக்கும் போது தான் இத்தகைய ஆபத்துகள் பரவாமல் இருக்கும்.

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !

 

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.

  1. உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !
  2. 

  3. பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க
  4. என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்.
  5. அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !
  6. உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.
  7. “சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !
  8. அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி ! 
  9. நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா ? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !
  10. ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க.
  11.  நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !
  12. திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரியஸ் !  
  13. பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகையறாக்கள்  நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப்போம் ! கவனிங்க.

கடுப்பாகாதீங்க ஆண்களே…..  பெண்களுக்கும் இது பொருந்தும் ! 

நன்றி : விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?!

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கக் கூடாது. முதல்ல லைஃப்ல செட்டில் ஆயிடணும். சின்னதா ஒரு அப்பார்ட்மெண்டாவது வாங்கணும். அப்புறம் தான் குழந்தையைப் பற்றி யோசிக்கணும். இது தான் பெரும்பாலான இளசுகளின் சிந்தனை. முன்பெல்லாம் கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம் கையில் குழந்தை இல்லையென்றால் கொஞ்சம் நக்கலாய்ப் பார்ப்பார்கள். இப்போ நிலமை தலை கீழ். “என்னடா அதுக்குள்ள அப்பாவாயிட்டே” என கிண்டல் தான் வரும்.

திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளத் தான் பலரும் விரும்புகிறார்கள். லைஃபை என்ஜாய் பண்ணணும், சம்பாதிக்கணும், ஹாயா இருக்கணும். இதை இளம் வயதினர் தங்கள் தேசிய கீதமாகவே ஆக்கிவிட்டார்கள். இப்படி திருமணத்தைத் தள்ளிப் போட்டு, அப்புறம் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது ரொம்பவே ஆபத்து என எச்சரிக்கின்றன அடுக்கடுக்காய் வரும் ஆராய்ச்சிகள்.

இளம் வயதில் அப்பாவாகி விடுபவர்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. வயதான பின் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடுகிறது. அவர்கள் நோஞ்சான்களாகவோ, டல்லடிக்கும் பிள்ளைகளாகவோ வளர்கிறார்கள். அவர்களுடைய மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் ஒழுங்கற்ற தன்மை வந்து விடுகிறது. எனும் நிஜம் திகைப்பூட்டுகிறது.

இதைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்ய களமிறங்கியது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். அதனுடன் கைகோர்த்துக் கொண்டது இங்கிலாந்தின் கோபன்ஹாகன் மருத்துவமனை. இதற்கு நிதியுதவி செய்தது வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பும், டானிஷ் புற்று நோய் குழுவும்.

அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. மருத்துவ உலகில் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பல்வேறு நோய்களுக்கான மர்ம முடிச்சை அது அவிழ்த்திருக்கிறது. அதாவது ஆண்கள் வயதாகும் போது அவர்களுக்கு பெனிங் விரை புற்றுநோய் எனும் ஒரு நோய் வந்து விடுகிறது. இந்த நோயை ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ் என்கிறது மருத்துவம். இது ஆபத்தான புற்று நோய் என்று அலறாதீர்கள். இது இருப்பதே கூட பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.

அமைதியாக குட்டிக் குட்டியாக இருக்கும் இந்த புற்று நோய் அணுக்கள் ஜெம் செல்களில் பாதிப்பை உருவாக்கி விடுகின்றன. இந்த ஜெம் செல்கள் தான் உயிரணுக்களை உருவாக்க வேண்டும். அப்படி அவை உயிரணுக்களை உருவாக்கும் போது இந்த நோயின் தாக்கமும் உயிரணுவில் பதிவாகி விடுகிறது. அந்த பாதிப்பு பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏக்களில் சைலண்டாய் போய் அமர்ந்து கொள்கிறது. குழந்தை வளர வளர இந்த டி.என்.ஏ தனது சுய ரூபத்தைக் காட்டுகிறது. இது தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியில் விரும்பத் தகாத மாற்றங்கள் உருவாகக் காரணம். குழந்தை இறந்தே பிறப்பதற்கும் கூட இது ஒரு காரணமாகி விடுகிறது.

மிகச் சிறிய துணிக்கைகளாக இந்த புற்று நோய் ஆரம்பமாகிறது. வயதாக வயதாக இந்த செல்கள் பலுகிப் பெருகுகின்றன. விளைவு ? உயிரணுக்களும் அதிக அளவில் பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் இந்த உயிரணுக்களால் உருவாகும் குழந்தைகள் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றன. வயதான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பொதுவான நோய்கள் வர இதுதான் காரணம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ வில்கீ. பிறவிச் சிக்கல்களுக்கும் விரை புற்று நோய்க்கும் இடையேயான தொடர்பை விளக்கும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. 

இந்த பாதிப்பினால் வரும் நோய்களின் பட்டியல் அதிர்ச்சியூட்டுகிறது. அக்கோண்ரோபிளாசியா எனப்படும் நோய் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதித்து குள்ளமாக்கி விடுகிறது. அபெர்ட் எனப்படும் நோய் ஒழுங்கற்ற முகம், ஒழுங்கற்ற கை, கால்களைக் குழந்தைக்குத் தந்து விடுகிறது.  நூனன் சிண்ட்ரோம் எனப்படும் நோய் குழந்தைகளை குறுகிய கழுத்து, கோணலான முகம், கூடு கட்டும் நெஞ்சு என ஊனமாக்கி விடுகிறது. கேஸ்டிலோ சிண்ட்ரோம் எனப்படும் நோய் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற தோல், வலுவற்ற மூட்டுகள், சமநிலையற்ற ஹார்மோன் வளர்ச்சி என ஏகப்பட்ட சிக்கல்கள். லேட்டாக குழந்தை பெற்றுக் கொள்வது எனும் சிம்பிள் மேட்டர் தான் இத்தகைய அச்சுறுத்தும் நோய்களுக்கெல்லாம் காரணம் என்பது தான் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது. 

நேச்சர் ஜெனடிக்ஸ் எனும் புத்தகம் இந்த ஆராய்ச்சியின் முழு தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது. இப்போது இந்த ஆராய்ச்சி மேலும் சில நோய்களின் மூலத்தை அறிய களமிறங்கியிருக்கிறது. அதில் முக்கியமான மூன்று நோய்கள் ஆட்டிஸ்ம், ஸ்கிட்ஸேப்ரேனியா மற்றும் மார்பகப் புற்று நோய்.

ஆட்டிஸ்ம் ( autism) என்பது  மூளையைத் தாக்கும் நோய். இந்த நோய் வரும் குழந்தைகள் சுமார் மூன்று வயது வரை வெகு சாதாரணமாய் இருப்பார்கள். அதன் பின் குழந்தையின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரியும். இத்தகைய குழந்தைகளிடம் வந்து சேரும் பிரச்சினைகள் கவனச் சிதைவு, ஒரே போன்ற செயல்களைச் செய்து கொண்டே இருப்பது, உற்சாகம் இல்லாமை, பேசுவதில் பிரச்சினை போன்றவை. இந்தக் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்தவும் செய்வார்கள். 

ஸ்கிட்ஸேப்ரேனியா (Schizophrenia) என்பது மூளையின் செயல்பாடுகளில் இயல்பற்ற நிலையை உருவாக்கும் ஒரு நோய். இந்த நோய் வந்த குழந்தைகள் எதையெதையோ பிதற்றுவார்கள், ஏதேதோ கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய சிந்தனை, பழக்கம் எல்லாவற்றிலும் பளிச் என வேறுபாடு தெரியும். இந்த நோய்கள் வரக் காரணம் இந்த ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ்  அல்லது இது போன்ற வேறு ஏதோ ஒன்று என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. 

முன்பெல்லாம் குழந்தைப் பிறப்புக்கு பெண்களின் வயது தான் முக்கியம் என்பார்கள். ஆண்களென்றால் எந்த வயதில் வேண்டுமானாலும் அப்பாவாகலாம் என மீசை முறுக்கினார்கள். ஆனால் சமீப காலமாக வருகின்ற ஆராய்ச்சிகள் ஆண்களின் முறுக்கு மீசையில் மண் அள்ளிப் போடுகின்றன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி முப்பது வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறது. நாற்பதைத் தாண்டி விட்டால் குழந்தைக்கு பெரிய பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கிறதாம்.

இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதே நல்லது. குறிப்பாக உயிரணுக்களின் இயக்கமும், வலிமையும் இளமையில் ஆரோக்கியமாக இருக்கின்றன. எனவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது, பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. வயதான ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன. நவீன தம்பதியரில் ஐந்தில் ஒரு தம்பதியருக்கு கருத்தரிப்பதில் தாமதம் நிலவுகிறது என்பது அதிர்ச்சிகர உண்மை!.

வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் முன்னிருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால், குடும்ப ஆனந்தம் பின் இருக்கைக்குத் தள்ளப்பட்டு விடும். இந்த கசப்பான உண்மையையே இந்த ஆராய்ச்சிகள் அதிர்ச்சியுடன் விவரிக்கின்றன.

நன்றி : ஜூனியர் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

மல்லுக்கட்டும் பதின் வயது !

 “என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன்னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சையும்  கேட்கறதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்கற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு ! என்ன பண்றதுன்னே தெரியலை” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலா இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்தனை வீடுகளிலும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதுல பதட்டப்பட ஒண்ணுமே இல்லை. கொஞ்சம் நாசூக்காக நடந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு களத்துல இறங்கினா உறவுகள் காயப்படும் அபாயம் உண்டு. இந்தப் பதின் வயதுப் பிரச்சினையைக் கையாளணும்ன்னா முதல்ல பெற்றோர் கொஞ்சம் பதின் வயதுப் பிராயத்துக்கு இறங்கி வரணும். அதாவது, உங்க மகளோட செயல்களைப் பார்த்து டென்ஷன் ஆகாம, அந்த செயல்களுக்கான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்தக் காரணம் புரிந்து விட்டால் நீங்கள் உங்கள் மகளுடைய செயல்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். அவளுக்குத் தேவையான அரவணைப்பையும், சுதந்திரத்தையும் கொடுப்பீர்கள் என்பது தான் உண்மை !

பட்டாம்பூச்சி பார்த்திருப்பீங்க. அது கூட்டுப் புழுவா இருந்து வெளிவரக் கூடிய நிகழ்ச்சியைப் பாருங்கள். ரொம்பவே கஷ்டப்பட்டு, கூட்டை உடைத்து வெளியே வரும். அப்படி வெளியே வந்தபிறகு தான் அது முழுமையான பட்டுப் பூச்சியாய் பரிமளிக்கும். அந்தச் செயல்பாடு கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் மாற ரொம்பவே அவசியம். நீங்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லி அந்தக் கூட்டை கொஞ்சம் கிழிச்சு விட்டீங்கன்னா, அந்தப் பட்டுப்பூச்சி காலம் முழுதும் ஊனமாவே இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

பதின் வயதுப் பிராயமும் குழந்தைப் பருவத்தின் கூட்டை உடைத்து பெரிய மனுஷத் தோரணைக்குள் நுழைகின்ற தருணம். பெற்றோர் என்ன செய்தாலும் அது தப்பாவே தோன்றுகிற பருவம். அதற்குக் காரணம் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் சில பகுதிகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள முயல்வது தான் ! இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்.

மூத்த பிள்ளைகளை விட இளைய பிள்ளைகள் பதின் வயதைத் தொடும்போது எதிர்ப்பு உணர்வை அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறார் எழுத்தாளர் பிராங்க் சுல்லோவி. தன்னுடைய “பார்ன் டு ரிபெல்” எனும் நூலில் அவர் இதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார். “மூத்தவர்களுடைய குளோனிங் வடிவமல்ல நான்” என்பதை பெற்றோருக்கு உரத்துச் சொல்வதும் அதில் ஒரு காரணமாம். !

இனிமேல் பெற்றோரின் உதவி இல்லாமலேயே என்னால் தனியாக இயங்க முடியும் என பெரும்பாலான டீன் ஏஜ் பருவத்தினர் முடிவு கட்டி விடுகிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவர்களுக்கு ஏகப்பட்ட எனர்ஜி கதைகள் நண்பர்களிடமிருந்து கிடைத்து விடுகிறது. பெற்றோரைக் கிண்டலடிப்பது, அவர்களை ஒன்றும் தெரியாதவர்களாய்ச் சித்தரிப்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் வெகு சகஜம். அதை ரொம்ப சீரியஸாய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.

சுவிட்ச் போட்டால் லைட் எரிவது பொன்ற திடீர் மாற்றமல்ல இது. கொஞ்சம் கொஞ்சமாய் செயல்பாடுகளில் தெரியும் மாற்றம். இதை கொஞ்சம் அறிவியல் ரீதியாக அணுகினால், “பதின் வயதில் ஏற்படும் உடல் மாற்றம் மற்றும் ஹார்மோன் மாற்றம்” எனும் கட்டத்துக்குள் அடக்கி விடலாம். குறிப்பாக ஹார்மோன் மாற்றங்கள் அவர்களுடைய மனநிலையில் திடீர் திடீர் மாற்றங்களைக் கொண்டு வரும். உடல் வளர்ச்சி மாற்றங்கள், அச்சத்தையோ, தயக்கத்தையோ அல்லது அதற்கு நேர் எதிரான தைரியம் மற்றும் தன்னம்பிக்கையையோ கொண்டு வரும் என்கிறது உளவியல்.

பதின் வயது மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள் ? அது தப்பு. அப்போது தான் பிறரைச் சார்ந்து இருக்கும் மனநிலையே அவர்களுக்குள் வலுப்படுகிறது. பிறர் என்ன நினைக்கிறார்கள், பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள், தன்னைப் பற்றிய பிறருடைய கணிப்பு என்ன போன்றவையெல்லாம் அப்போது அவர்களுக்கு ரொம்ப முக்கியமாய்த் தோன்றுகிறது. இதனால் தான் மற்ற டீன் ஏஜ் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு தங்கள் செயல்பாடுகளை அளவிடுகின்றனர்.

குறிப்பாக பன்னிரண்டு வயதைத் தாண்டும் பருவம் தான் பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலம். அதுவரை அம்மா சொல்லும் ஆடையுடன் பள்ளிக்குப் போவாள். அதன்பின் நண்பர்கள் சொல்லும் பேஷன் டிரஸ் தேவைப்படும். பன்னிரண்டு வயது வரை பவுடர் கூட தேவைப்படாத பெண்ணுக்கு அதன் பிறகு புருவத்துக்கு ஒன்று, கன்னத்துக்கு ஒன்று, உதட்டுக்கு ஒன்று என ஏகப்பட்ட மேக்கப் பொருட்கள் தேவைப்படும் !

அதற்குக் காரணம், அடுத்தவர்களின் விமர்சனங்கள் குறித்தான எதிர்பார்ப்பும், கவலையும் தான். தப்பித் தவறி கூட அவளுடைய அழகு குறித்தோ, உடல் எடை குறித்தோ, அறிவு குறித்தோ எதையேனும் தரக் குறைவாய் பேசவே பேசாதீர்கள்.  இன்னும் குறிப்பாக பிறர் முன்னிலையில் அதைப் பற்றி சிந்திக்கவே செய்யாதீர்கள் என்கின்றனர் உளவியலார்கள்.

எதிர்பாலினரோடான ஈர்ப்பும், எதையேனும் புதிதாய்ச் செய்து பார்க்கும் ஆர்வமும் அவர்களிடம் மேலோங்கியிருக்கும். உடல் தரும் வளர்ச்சியும், அது தரும்  கிளர்ச்சியும் அவர்களுக்கு பாலியல் பாதையில் புது அனுபவங்களாய் விரிகின்றன. அதற்கான சுதந்திரங்கள் வீடுகளிலிருந்து மறுக்கப்படும் போது எதிர்ப்பு காட்டுகிறார்கள். 

பதின் வயது நிறைய சுதந்திரங்களைத் தேடும். தன்னுடைய எல்லைக்குள் பெற்றோர் வரக்கூடாது என விருப்பப்படும். பதின் வயதுப் பிள்ளைகளிடம் கவனமாய் நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார். அவருடைய பார்வையில் பதின் வயது “மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள்” போன்றவை அலைக்கழிக்கும் காலம் என்கிறார். அவர்களுடைய உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் வேலைகளைக் கொஞ்சம் ஒத்தியே வையுங்கள் என்பது தான் அவர் தரும் அறிவுரை.

பதின் வயதினரைக் கையாளும் எளிய வழி, பதின் வயதினரை பதின் வயதினராய் நடத்துவது தான். அவர்களை சின்னப் பிள்ளைகளாக நினைக்காமல் இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டில் ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் அவர்களிடமும் ஒரு வார்த்தை கேளுங்கள் ! தன்னை பெரிய ஆளாய் மதிக்கிறார்கள் என்பதே அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு தரப்படும் டானிக் தான்.

பதின் வயதினரை அடிக்கடி பாராட்டுங்கள். ஆடை நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். எதையேனும் சாதித்தால் பாராட்டுங்கள். இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்கள் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளியை இறுக்குவதுடன், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டும்.

நாடின் காஸ்லோ எனும் அமெரிக்க மனநல மருத்துவர் சொல்லும் கருத்து சுவாரஸ்யமானது. “உலகிலுள்ள எல்லா பெற்றோரும் தங்கள் பதின் வயது மகள் தங்களை வெறுப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோரை வெறுப்பதே இல்லை. அவள் ஒரு பதட்டமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். பெற்றோரும் தன்னோடு இணைந்து அந்தக் காலகட்டத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறாள்” என்கிறார் அவர்.

இந்த வயதில் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நல்ல விஷயங்கள் என்ன என்பதையும் கெட்ட விஷயங்கள் என்ன என்பதையும் அவளுக்குச் சொல்லிவிடுவது மட்டுமே. இந்த புரிதலை குழந்தையாய் இருக்கும்போதே ஊட்டியிருந்தால் ரொம்ப நல்லது. குறிப்பாக புகைத்தல் நல்லதல்ல, மது உடல் நிலையைப் பாதிக்கும் போன்ற விஷயங்கள் அவளுக்குச் சொல்லவேண்டும். தவறான பாலியல் உறவுகள் என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் போன்ற விஷயங்களையும் அவர்களிடம் சொல்வதே நல்லது.

எந்த நட்பு நல்ல நட்பு என்பதைச் செயல்பாடுகளின் மூலமாகச் சொல்லிக் கொடுங்கள். “கல்யாணி கூட சேராதே’ என்று சொல்வது உங்கள் மகளை வெறுப்பேற்றும். அதை விடுத்து நல்ல தோழி என்பவள் உனக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கட்டாயப்படுத்த மாட்டாள். தப்பான செயல்களில் ஈடுபடுத்தமாட்டாள் போன்ற செயல்பாட்டு விஷயங்களைச் சொல்லவேண்டும். அதிலிருந்து நல்ல நட்பு எது, தவிர்க்கப்பட வேண்டிய நட்பு எது என்பதை உங்கள் பதின் வயது மகள் புரிந்து கொள்வாள் !

இந்த பதின்வயதிலும் மூன்று வகையான எதிர்ப்பு நிலைகள் உண்டு என்கிறார் டாக்டர் கார்ல் பிக்கார்ட். 9 முதல் 13 வயது வரை, 13 முதல் 15 வயது வரை, 15 முதல் 19 வயது வரை என மூன்று படிகளாக பதின் வயதைப் பிரிக்கிறார் அவர். முதல் நிலையில் “நாங்கள் குழந்தைகள் அல்ல” என்பதை நிறுவுவதும், இரண்டாம் நிலையில் “தங்களை வலிமை வாய்ந்தவர்களாய் காட்டிக் கொள்வதுமே” பிரதானமான செயல்கள். மூன்றாம் நிலை பெரும்பாலும் முதல் இரண்டு நிலைகளிலும் அமைதியாய் இருக்கும் பதின் வயதினரின் எதிர்ப்புக் காலம் என்கிறார் இவர்.

எல்லா எதிர்ப்புகளுமே தங்களுடைய அனுமதிக்கப்பட்ட எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் பதின் வயதினரின் முனைப்பு என்று சொல்வதில் தவறில்லை. அதில் பெற்றோர் பல விஷயங்களை அனுமதிக்கலாம். குறிப்பாக உங்கள் மகள் தலைமுடிக்கு கலர் அடிக்க விரும்புகிறாள் என வைத்துக் கொள்ளுங்கள் அதை அனுமதிப்பதால் அவளுடைய நடத்தை மாறிவிடப் போவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக அதை விட முக்கியமான இணையப் பயன்பாட்டை வகைப்படுத்துவது நல்லது !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள்.  இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

அதற்காக அறிவுரை மூட்டையை அவிழ்க்காதீர்கள். டீன் ஏஜுக்கு அலர்ஜியான விஷயங்களில் முதலிடம் இந்த அறிவுரை. காரணம் தன்னை விட அறிவாளிகள் இருக்க முடியாது எனும் அவர்களுடைய எண்ணமாய்க் கூட இருக்கலாம். எனவே மகள் சொல்வதை நிறைய கேட்டாலே போதும் அவளை நீங்கள் அவள் போக்கில் சென்று வழிகாட்ட முடியும்.

இந்த காலகட்டத்தில் பெற்றோரின் கடமை இரண்டு தான். ஒன்று, மகளின் உடல், உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது. இரண்டாவது அவர்களுடைய போக்கிலேயே போய் அவர்களுக்கு ஆதரவு கலந்த வழிகாட்டுதலை வழங்குவது !

சேவியர்.

நன்றி பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களிக்கவும்

புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா ?

“புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கவே புடிக்காது” என பல பெண்கள் அங்காலய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒன்று தான் புத்திசாலி என அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது உண்மையிலேயே ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்கள் கொஞ்சம் அலர்ஜியாய் இருக்கலாம்.

பெரும்பாலான புத்திசாலி ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். ஒருவேளை ஒரு பையன் புத்திசாலிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறானென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.

“சும்மா கடல் பக்கத்துல உக்காந்து கடலை போடக் கூப்பிட்டா அங்கே வந்து கூட மால்கம் கிளேட்வெல் எழுதின பிளிங்க் புக் படிச்சியாடா ? வாவ் சூப்பர். த பவர் ஆஃப் திங்கிங், வித்தவுட் திங்கிங் தான் அதோட கான்சப்ட்” என கடுப்படிக்கிறா என ஒரு காதலர் சலித்துக் கொண்டார். ரொம்ப அறிவான பொண்ணுன்னா இந்த மாதிரி உலக விஷயங்களையெல்லாம் பேசுவாங்க. நம்ம ஹீரோவுக்கு அந்த ஏரியா வீக்குன்னா “இந்த புத்தி சாலிப் பொண்ணுகளே இப்படித் தான்” என்று புலம்ப வாய்ப்பு உண்டு.

இன்னும் சிலருக்கு பொண்ணுன்னா நாம வரைஞ்ச கோட்டைத் தாண்டக் கூடாதுங்கற ஒரு ஆணாதிக்க சிந்தனை இருக்கும். புத்தியில்லாத பொண்ணுன்னா நாம சொல்றதைக் கேப்பா. நாம போய் “கிளையண்ட் கான்ஃபரன்ஸ் ல புராஜக்ட் பிளான் டெமோன்ஸ்ட்ரேட் பண்ணினேன்” ன்னு பீட்டர் உட்டா நம்பபிடுவா ன்னு நினைக்கிறாங்க. எப்பவுமே நம்மை விட ஒரு ஸ்டெப் கீழே பொண்ணு இருக்கணுன்னு நினைக்கறவங்களோட மனநிலை இது.

இன்னும் சிலர் என்னன்னா புத்திசாலிப் பொண்ணுன்னாலே “சுயமான பொண்ணு” ன்னு நினைக்கிறாங்க. அதாவது தனியா வாழறதுக்கு அவளுக்கு பயம் கிடையாதுங்கற நினைப்பு இருக்கும். அதாவது தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலை அவளுக்கு இல்லை எனும் சிந்தனை. ஒருவேளை நாம பண்ற டகால்டி வேலையெல்லாம் தெரிஞ்சுபோச்சுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போனாலும் போயிடுவாளோங்கற பயம் இருக்கும். அந்த பயத்துல “எதுக்கு புத்திசாலிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு” என பின் வாங்க வாய்ப்பு உண்டு.

பசங்கதான் இப்படின்னா, பசங்களோட அம்மா, அப்பாக்கள் இன்னும் ஒரு படி மேலே. கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கும்போ  “பொண்ணு பையனை விட அதிகம் படிச்சிருக்கா. பையனுக்கு அடங்கி இருக்க மாட்டா” என பில்டப் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். “தான் கம்மியா படிச்சதனால தான் கணவனுக்கு அடங்கி இருக்கிறோம்” என நினைக்கிறார்களோ என்னவோ ? அது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

இந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இணையா படிச்சிருக்கிற பெண்களை விரும்புகிறார்கள். அதாவது கம்ப்யூட்டர் படிச்ச பையன் அதே லைன்ல படிச்ச பொண்ணை விரும்புகிறான். இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி, இந்த வேலையில உள்ள கஷ்டம் இதே வேலையில இருக்கிற இன்னொருத்தருக்குத் தான் தெரியும்ங்கற மனநிலை. இன்னொன்னு தெரிஞ்ச ஏரியாங்கறதனால வேலை வாங்கிக் கொடுக்கலாம்ங்கற எண்ணம்.

பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு வெச்சுக்கோங்க, புத்திசாலிப் பொண்ணை முடிஞ்ச மட்டும் அவாய்ட் பண்ணுவாங்க. கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவங்க வாழ்க்கைல சிக்கல் வர வாய்ப்பு அதிகம். “ஏங்க, இப்படி பண்ணியிருக்கலாமே” ன்னு ஒரு சின்ன கருத்து சொன்னா கூட “ரொம்ப படிச்ச திமிரு. அதனால நான் செய்றதெல்லாம் தப்பா தெரியுது”. என எகிற ஆரம்பித்து விடுவார்கள். உண்மையிலேயே மனைவி சொல்வது சரியா தப்பா என்றெல்லாம் ஆராய அவர்கள் முயல்வதில்லை.

“ஆண்கள் தங்களை விடப் புத்திசாலித் தனமான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயங்குவார்கள்” என்கின்றனர் சில உளவியலார்கள். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்த ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பல வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னால் அறிவார்ந்த பெண்கள் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. பல ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். உரையாடல்களில் நல்ல அர்த்தத்துடன் பேச அவர்களால் முடியும் என்பது அவர்கள் சொல்லும் ஒரு காரணம்.

முக்கியமான ஒரு விஷயம், தினமும் நியூஸ் பேப்பர் படிச்சுட்டு புள்ளி விவரங்கள் பேசறதெல்லாம் புத்திசாலித் தனத்துல வராது. ஒரு பிரச்சினை வருதுன்னா அதுல இருந்து எப்படி எத்தரப்புக்கும் இழப்பின்றி மீளலாம்ன்னு யோசிப்பதில் தெரியலாம் புத்திசாலித்தனம். குடும்பத்தை ஆனந்தமாகவும், வளமாகவும் கொண்டு போக திட்டமிடுவதில் மிளிரலாம் புத்திசாலித்தனம். குழந்தை வளர்ப்பைக் கையாள்வதில் வெளிப்படலாம் புத்திசாலித்தனம். பெண் புத்திசாலியாய் இருப்பது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஆனால் என்ன, “தான் புத்திசாலி” எனும் தற்பெருமையை உச்சந்தலையில் ஒட்டி வைக்காமல் இருக்க வேண்டும்.

பெண் வீட்டை ஆளணும், ஆண் நாட்டை ஆளணுங்கற கதையெல்லாம் கற்காலமாயிடுச்சு. இந்த கால மாற்றத்தில் தம்பதியர் தங்களோட ஈகோவை மூட்டை கட்டி வெச்சுட்டு, அன்பா பழக ஆரம்பிச்சா இப்படிப்பட்ட  பிரச்சினைகளே வராது என்பது தான் நிஜம். நீயா நானா போட்டி போட குடும்பம் ஒண்ணும் பிளே கிரவுண்ட் இல்லையே ! என்ன சொல்றீங்க ?

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

நூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன ?

 

பாலியல் எனும் வார்த்தையை பலரும் பல விதமான கண்ணோட்டங்களில் அணுகுகின்றனர். சிலருக்கு பாலியல் என்றாலே மிட் நைட் கேள்வி – பதில் நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே பேசப்படும் “சுய இன்பத்தால ஆண்மை போயிடுமா டாக்டர்” டைப் கேள்விகள் தான் சிலரைப் பொறுத்தவரை பாலியல் விழிப்புணர்வு விஷயங்கள். வார இதழ்களுக்குக் கல்லா கட்டும் முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

இன்னும் சிலருக்கு பாலியல் என்பது படுக்கையறைப் புரபசர் வாத்சாயனாரின் வழிமுறைகளை விளக்குவது. பாலியல் கல்வி என்றாலே பலரும் பதட்டப்படுவதற்கு இது தான் காரணம். “ஸ்கூல்ல தியரி சொல்லிக் குடுப்பீங்க. பிள்ளைங்க போய் பிராக்டிக்கல் கத்துகிட்டா என்ன பண்றது ?” என்பது சிலருடைய அங்கலாய்ப்பு !

இன்னும் சிலருக்கு பாலியல் என்பது பழுப்பேறிப் போன காகிதத்தில் கடைகளின் உள்பக்கமாய்த் தொங்கும் “சரோஜா தேவிக் கதைகள்”. யாருக்கும் தெரியாமல் வாங்கி, படித்து பொழுதைப் போக்கும் சமாச்சாரம். “எங்கும் நிறைந்திருக்கும். ஆனால் யார் கண்ணுக்கும் தெரியாது” எனும் புதிருக்கு கடவுள் என்பது மட்டுமல்ல விடை. இத்தகைய புத்தகங்களும் தான். இப்போது டெக்னாலஜியும், பிராட்பேண்டும், ஹைடெக் செல்பேசியும் வந்தபிறகு சரோஜா தேவி இ-புக் வடிவம் எடுத்திருக்கிறது. அது ஒன்று தான் வித்தியாசம்.

கடலின் கரையில் அலைகள் அதிகமாய் இருக்கும். ஆனால் அலைகளே கடலல்ல என்பதைச் சொல்லும் நூல்கள் தமிழில் மிக மிக அரிது. அந்த வெற்றிடத்தை கன கட்சிதமாக நிரப்பியிருக்கிறது எழுத்தாளர், சகபதிவர், நண்பர் பத்மஹரி அவர்களுடைய “பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?” எனும் நூல். தேவையற்ற, அதிகம் அலசப்பட்ட விஷயங்களை லாவகமாய்த் தாண்டி பாலியல் குறித்துத் தெரியாத விஷயங்களை அறிவியல் பூர்வமாக அணுகியதில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் ஆசிரியர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். படித்தது உயிரி தொழில்நுட்பவியல். இப்போது ஜப்பானில் பி.ஹைச்.டி க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதுவும் ஸ்டெம் செல் குறித்த ஆராய்ச்சி. ஏதோ ஒரு நரைத்த தலை பேராசிரியர் அடையவேண்டிய இடத்தை இந்தச் சின்ன வயதிலேயே அடைந்திருக்கும் எழுத்தாளருக்கு, தமிழும் கைவந்திருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த பாக்கியம் என்று சொல்லலாம்.

ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காரே, வாசிச்சா புரியுமா ? எனும் சந்தேகத்துடன் தான் இவருடைய எழுத்தை வாசிக்கத் துவங்கினேன். சரளமாய் ஓடித் திரியும் இவருடைய தமிழ் ஒரு இனிய ஆச்சரியம். அறிவியல் விஷயங்களை ஜஸ்ட் லைக் தேட், தமிழில் விதைத்து விட்டுப் போவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

ஃபீடோ பீலியா எனும் குழந்தைகள் மீதான வன்முறை, கள்ள உறவுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், விலங்குகளோடான உறவுகள் – போன்ற பல விஷயங்கள் இதுவரை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அலசப்பட்டதில்லை. அல்லது அதுகுறித்துத் தமிழில் நான் வாசித்ததில்லை. பத்மஹரியின் நூல் அந்த பணியை சிறப்பாகச் செய்திருக்கிறது.

முதல் நூலையே பாலியல் சார்ந்து எழுதியிருப்பதில் பாலியல் குறித்த புரிதல் சமூகத்துக்குத் தேவை எனும் அவருடைய அக்கறை புலப்படுகிறது.

தொடரும் அவருடைய நூல்களில் சமூகம் மேலும் பயனடையும் எனும் நம்பிக்கை பலப்படுகிறது !

வாழ்த்துக்கள் ஹரி ! தொடர்க உங்கள் பயணம்.

 

நூல் விலை : 130/; –

கிடைக்குமிடம் :

Blackhole Media Publication Limited,  No.7/1, 3-rd Avenue, Ashok nagar,  Chennai-600 083. India

Cell: (+91) 9600086474, 9600123146

Email: admin@blackholemedia.in

Website: http://blackholemedia.in/

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ?

 வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள் ?  கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். முழிக்காதீங்க…

தந்தையின்  நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத பதின் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை ! அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?   

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரிகையான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது. 

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். “என் டாடி சூப்பர்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், “டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

“டாடி பிளீஸ்… டாடி… வாங்கிக் கொடுங்க டாடி” என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் “டாட்… எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா “ என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். “நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்” எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர “அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது” என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

“எங்க காலம் தான் பொற்காலம்… இப்போ எல்லாம் டெக்னாலஜி சாத்தான் ஆட்டம் போடுது” என பழமை பேசாதீர்கள். அது உங்கள் டீன் ஏஜ் மகளை உங்களிடமிருந்து ரொம்பவே விலக்கி வைத்து விடும். காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் மகள் ஏ.ஆர் ரஹ்மான் பிரியை என்றால் ஒரு ஐ-பாட் வாங்கி நிறைய ஏ.ஆர் ரஹ்மான் பாட்டை நிரப்பிக் கொடுங்கள். அவள் ரசிக்கட்டும். அப்போது தான் நீங்களும் உங்களை இளமையாக்கிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், “என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..” என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும் ! அதை விட்டு விட்டு, “என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா….” என புலம்பித் தள்ளாதீர்கள்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி ! மதிக்கிறீர்கள். சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா ? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், காதல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். “எதுவானாலும் கவலையில்லை … அப்பா இருக்கிறார்” எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.

எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.  அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். “அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது” எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, காதல் எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். “அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.  குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.

இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள் ? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். சின்னச் சின்ன மன வருத்தங்களுக்காக தற்கொலை செய்து கொள்வது கூட இந்த வயதில் சகஜம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். பெரும்பாலான இளம் பெண்கள் புகை, போதை என பரிசோதித்துப் பார்ப்பது இந்தப் பதின் வயதில் தான். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.

ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது “அப்பா தான் உலகம்” எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். “ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்” எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். “என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்”  எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

கடைசியாக ஒன்று. “ என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்”  என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.  அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக ஜெயித்து விட்டீர்கள் என்று பொருள் ! ஜெயிக்க வாழ்த்துக்கள் !

பிடிச்சிருக்குன்னா ஓட்டு போடுங்க…

ஆண்களே “பெல் பஜாவோ”

 சாய்வு நாற்காலியில் ஓய்வாக அமர்ந்து ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் ஒருவர். திடீரென காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணின் அழுகுரல் காதில் வந்து விழுகிறது.

“ஐயோ… பிளீஸ்…. நான் வேணும்னே உடைக்கல. தெரியாம உடஞ்சுடுச்சு”

“ஓ… என்னை எதிர்த்துப் பேசறியா நீ… பளார்ர்…”

“ஆ….”

பக்கத்து வீட்டு சண்டையில் கோபமடையும் அந்த நபர். சட்டையை மாட்டிக் கொண்டு இறுக்கமான முகத்துடன் விறுவென நடந்து அந்த வீட்டை அடைகிறார். கதவுக்கு முன்னால் போய் நின்று அழைப்பு மணியை அடிக்கிறார்.

உள்ளே சண்டை நின்று போக, சட்டென நிசப்தம்.

குழப்ப முகத்துடன் கதவைத் திறக்கிறார் அந்த கொடுமைக்கார கணவன். என்ன வேண்டும் எனும் கேள்வி அவருடைய முகத்தில்.

“பால்… கொஞ்சம் பால் கிடைக்குமா ?” வந்தவர் இறுக்கம் தவிர்க்காமல், இமைக்காமல் அவரைப் பார்த்துக் கேட்கிறர்.

“ம்…”

கதவை மூடிக் கொண்டு உள்ளே சென்ற நபர் கொஞ்ச நேரத்தில் ஒரு சின்ன டம்ப்ளரில் பால் கொண்டு வருகிறார். வெளியே அந்த நபர் இல்லை ! குழப்ப முகத்துடன் திரும்பும் அவருக்கு ஒரு விஷயம் புரிகிறது. “வந்த நபருக்கு நம்ம வீட்டுச் சண்டை தெரிஞ்சிருக்கு”

ஒரு நிமிடம் ஓடும் சின்ன குறும்படம் இது. இதே போல பல சின்னச் சின்ன படங்கள். சண்டை நடக்கும் வீட்டில் சென்று பெல்லை அடித்து “உன்னோட தண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும் என சொல்லாமல் சொல்வது தான் இந்தப் படங்களின் கான்சப்ட் !”

பக்கத்து வீட்டில் ஒரு சண்டை நடத்தால் “அவங்க குடும்ப விஷயத்துல எதுக்கு நாம தலையிடறது” என்று ஒதுங்கக் கூடாது. அந்தச் சண்டையை நிறுத்த பக்கத்தில் இருக்கும் ஆண்கள் ஒரு சின்ன துரும்பையாவது எடுத்துப் போடவேண்டும் என்கிறது இந்த இயக்கம்.

“பெல் பஜாவோ” என்பது இந்த இயக்கத்தின் பெயர்.”ரிங் த பெல்” என ஆங்கிலத்திலும் “மணியை அடியுங்கள்” என தமிழிலும் சொல்லலாம். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க ஆண்கள்  முன் வரவேண்டும். இந்த சிந்தனையுடன் குட்டிக் குட்டிக் கிரியேட்டிவ் படங்களுடன் களமிறங்கியிருக்கிறது இந்த இயக்கம்.

அடுத்த வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் நாளை நமது சந்ததியினருக்கு நடக்கலாம். அல்லது நமது சகோதரிகளுக்கு நடக்கலாம். இது எப்போதும் அடுத்தவர் பிரச்சினையாய் இருக்கப் போவதில்லை. இந்த சிக்கலுக்கு ஒட்டு மொத்த முற்றுப் புள்ளி வைப்பதற்கு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் களமிறங்க வேண்டும் என்கிறது இந்த அமைப்பு.

பக்கத்து வீட்டு பெல்லை அடிப்பதற்கு ஆயிரம் நொண்டிச் சாக்குகள் சொல்லலாம். “ஒரு போன் பண்ணிக்கலாமா ?”, “டைம் என்ன ஆச்சுங்க ?”, கிரிக்கெட் பால் உள்ளே விழுந்துதா ?” இப்படி ஏகப்பட்ட ஐடியாக்களைச் சுமந்து வருகின்றன இந்த கனமான விளம்பரப் படங்கள். இந்த ஒரு நிமிடப் படங்களில் வருபவை ஓரிரு வார்த்தைகள் தான். ஆனால் படம் உருவாக்கும் தாக்கமோ அதி பயங்கரமாக இருக்கிறது.

பெண்களில் மூன்றில் ஒருபாகத்தினர் அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் வன்முறைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அத்தகைய விழிப்புணர்வையும், சமூக பங்களிப்பையும் அளிக்கும் இந்தக் குறுப்படங்களை இயக்கியிருப்பது புத்தாயன் முகர்ஜியின் லிட்டில் லேம்ப் பிலிம்ஸ் எனும் நிறுவனம்.

மனித உரிமைகளை மீண்டெடுக்கத் துடிக்கும் “பிரேக்துரூ” எனும் அமைப்பு தான் இந்த பெல் பஜாவோ திட்டத்தின் மூளை. 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பை ஆரம்பித்தவர் மல்லிகா தத் எனும் பெண்மணி. கொல்கொத்தாவில் 1962ம் ஆண்டு மார்ச் 29ம் தியதி பிறந்தவர் இவர். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தலைமையகங்களைக் கொண்டு இந்த அமைப்பு இன்று  வலுவாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

பெல் பஜாவோ, சமூகத்தின் விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும் அதிகரித்திருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் அள்ளிய இந்த படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு உலக அளவிலான கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத் தக்கது.

பெல் பஜாவோ இப்போது “மினிஸ்ட்ரி ஆஃப் விமன்” மற்றும் “சைல்ட் டெவலப்மெண்ட்” போன்ற அரசு அமைப்புகளோடு இணைந்து தனது பணியை விரிவுபடுத்தியிருக்கிறது.

“பெண்களுக்கான பிரச்சினைகளை பெண்கள் அமைப்புகள் முன்னெடுத்துச் செல்வதும், அவர்களே போராடுவதும் தான் வாடிக்கை. பெண்கள் சமூகத்தின் அங்கம். அவர்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்கவேண்டியது அவசியம். சமூக மாற்றத்திற்கு ஆண்கள் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். பெண் உரிமையில் தங்கள் பங்களிப்பை அழுத்தமாய்ப் பதிக்கவேண்டும்” என உணர்வு பூர்வமாகப் பேசுகிறார் பிரேக் துரூவின் கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் இயக்குனர் சோனாலி கான். “இது என் வேலையில்லை” எனும் ஆண்களுடைய மனநிலையை அழிக்க வேண்டியது அவசியம் என்கிறார் தயாரிப்பாளர் முகர்ஜி.

அடுத்த முறை பக்கத்து வீட்டிலோ, அப்பார்ட்மெண்ட்லோ பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்தால் அமைதியாய் இருக்காதீர்கள். தைரியமாகப் போய் “பெல் அடியுங்கள்”. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான முடிவின் துவக்கமாய் அது அமையும்.

பிடித்திருந்தால்….. வாக்களிக்க விரும்பினால்…கிளிக்…

வாடகை மனைவி…கார்ப்பரேட் காமம் !

 இந்தியாவின் குடும்ப அமைப்புகளும், கண்ணியமான காதலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக மக்களால் சிலாகிக்கப்பட்டது. கவனிக்கவும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தான் ! இப்போது இந்தியாவின் கலாச்சார மாறுதல்கள் மேலை நாடுகளின் கலாச்சாரச் சாயலையே ஈயடிச்சான் காப்பியடிக்கின்றன. கலாச்சாரங்களைப் பொறுத்தவரை தண்ணீரை விடுத்து, பாலை அருந்தும் அன்னப்பறவையாய் இந்தியா இப்போது இல்லை. பாலை விடுத்துத் தண்ணீரை அருந்தும் பறவையாக உருமாறியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

“மேலை நாடுகளிலெல்லாம் டைவர்ஸ் ரொம்ப சகஜமாம். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துலேயே பிரிஞ்சுடறாங்களாம்… ” என கன்னத்தில் கை வைத்து நாம் அங்கலாய்த்த காலம் ஒன்று உண்டு. இப்போதோ, நம்ம ஊரிலேயே பத்துக்கு நாலு இளம் ஜோடிகள் டைவர்ஸ் செய்து கொள்ளலாமா என பேசித் திரிகிறார்கள். நகர்ப்புறங்களில் மணமுறிவுகள் சகட்டுமேனிக்கு எகிறிக்கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றன புள்ளி விவரங்கள்.

“அடி ஆத்தி…. அமெரிக்கால கல்யாணம் பண்ணாமலேயே ஆணும், பெண்ணும் சேர்ந்து தங்கறாங்களாமே”  ஒரு காலத்தில் கலாச்சார அதிர்ச்சியாய் பேசப்பட்ட இத்தகைய வாசகங்கள் இப்போது நம்மைச் சலனப்படுத்துவதில்லை. காரணம் இந்தியாவிலேயே இந்த சமாச்சாரம் படு வேகமாகப் பரவி வருகிறது. லிவ்விங் டுகதர் என ஸ்டைலான பேருடன் !  போதாக்குறைக்கு “இதெல்லாம் தப்பில்லை “ என உச்ச நீதிமன்றமே தனது பொன்னான தீர்ப்பை வழங்கி இளசுகளின் மோகத்தில் பால் வார்த்திருக்கிறது. “மணப்பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென படித்த ஆண்கள் நினைப்பதில்லை” சொல்லி ஒரு நடிகை வாங்கிக் கட்டிக்கொண்டது மறந்திருக்காது. அப்போது பரபரப்பாய் இருந்த விஷயத்தை  சுப்ரீம் கோர்ட்டே இப்போது அங்கீகரித்து ஆசீர்வதித்திருக்கிறது.

இதெல்லாம் என்ன பெரிய சமாச்சாரம் என்பது போல அடுத்த புயல் புதிதாய்க் கரை கடந்திருக்கிறது. அதுதான் வாடகை மனைவி கலாச்சாரம். வாடகை மனைவியென்றதும் ஏதோ குழந்தையில்லாதவர்களுக்காக தனது கருவறையை வாடகைக்கு விடும் வாடகைத் தாயை நினைத்து விடாதீர்கள். அது வேறு இது வேறு. வாடகை மனைவி என்பது தற்காலிக மனைவி. இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் “கொஞ்ச நாளைக்கு மனைவிபோல” வாழ்வது !

இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரமும், அங்கே புழங்கும் அதீத பணமும் இத்தகைய விபரீத உறவுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. இதற்கென்றே இருக்கும் புரோக்கர்கள் ஆண்களுக்கு மனைவியரை தயார் செய்து கொடுக்கிறார்கள். மனைவியர் பெரும்பாலும் வட நாடுகளிலிருந்து வாடகைக்காய் அழைத்து வரப்படும் பெண்கள்.

ஒரு வாரத்துக்கு மனைவியாய் இருக்க ஒரு கட்டணம், ஒரு மாதத்துக்கு கொஞ்சம் சலுகை விலையில் இன்னொரு கட்டணம் என இதன் பின்னணியில் நிழல் நிறுவனங்களே இயங்குகின்றனவாம். வேலை அழுத்தத்திலும், பணப் புழக்கத்திலும் இருக்கும் ஆண்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு மனைவியுடன் (!) ஊட்டி, கோடைக்கானல் எங்காவது போய் கொஞ்ச நாளைக்கு அடைக்கலமாகிவிடுகின்றனர். ரெடிமேட் தாலி இலவசமாகக் கிடைப்பதால் இவர்களுக்குக் ஹோட்டல்களில் இடம் கிடைப்பது முதல், பொது இடங்களில் சில்மிஷத்துக்கான அங்கீகாரம் கிடைப்பதுவரை எந்தச் சிக்கலும் இல்லை.

ஒருவாரமோ, இரண்டு வாரமோ புதிய துணையுடன் நேரத்தையும், பர்ஸையும் கரைத்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் ஆண்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள். பார்த்த வேலைக்குச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விடுகிறார்கள் பெண்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஏழ்மை நிலையிலுள்ள மக்களிடையே இந்த பழக்கம் இருந்ததை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஒரு மாதத்துக்கோ, இரண்டு மாதங்களுக்கோ தனது மகளையே வாடகை மனைவியாய் அனுப்பி வைக்கும் துயரத்தை அது படம்பிடித்தது. அது வறுமையின் உச்சத்தில் நிகழ்ந்த துயரம் என்றால், இப்போது நடப்பதோ மோகத்தின் வேகத்தில் நடக்கும் கொடுமை எனலாம்.

மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு வாடகைக்கு பெண்களை அழைத்து வந்த தரகர்களை கடந்த மாதம் காவல்துறை கைது செய்தது. இந்த வாடகை மனைவி சமாச்சாரங்களின் பல விஷயங்கள் அப்போது வெளிச்சத்துக்கு வந்தன. இதில் இன்னொரு துயரம் என்னவென்றால், இதில் சம்பாதிப்பதெல்லாம் புரோக்கர்கள் தான். பெண்களுக்குப் பத்தாயிரம் என்றால், அதே போல பத்து மடங்கு வரை இவர்களுக்குக் கிடைக்கிறதாம் !

எப்படிப் பார்த்தாலும் இது ஒரு ஹைடெக் விபச்சாரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த தொழிலில் கல்லூரி மாணவிகள் போன்றவர்களும் ஈடுபடுவது தான் திடுக்கிட வைக்கிறது. படிக்க பணம் வேண்டும், பாக்கெட் மணிக்கு காசு வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்லி இந்த தொழிலில் இவர்கள் விரும்பியே வருகிறார்களாம். 

இந்தியாவில் விபச்சாரத் தொழில் ஒன்றும் புதிதல்ல. பண்டைய தேவதாசிகள் கதைகளில் தெரிவது கூட பாலியல் தொழிலின் மத பிம்பம் தான். இன்றைக்கு இந்தியாவில் குறைந்த பட்சம் 28 இலட்சம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறது மினிஸ்ட்ரி ஆஃப் விமன். இதில் 35 சதவீதம் பேர் பதினெட்டு வயதுக்கு முன்பே இந்தத் தொழிலுக்குள் தள்ளப்பட்டவர்கள்.

மும்பையில் மட்டுமே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுவதொன்றும் புதிதல்ல. அந்த விஷயம் சமூகத்தின் எல்லா திசைகளிலும் சல்லிவேரைப் போல விரிந்து பரவியிருப்பது தான் கவலைக்குரிய விஷயம். கணவன் மனைவி எனும் புனிதமான உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக நடக்கும் இந்த பிஸினஸ் அச்சுறுத்துகிறது. கூடவே உண்மையான கணவன் மனைவியர் இதனால் சந்திக்கப்போகும் பிரச்சினைகளின் விஸ்வரூபமும் திகிலடைய வைக்கிறது.

வாடகை மனைவிக் கலாச்சார விதை நடப்பட்டாகிவிட்டது, அது முளையிலேயே அழிக்கப்படுமா ? அல்லது விருட்சமாய் வளர்ந்து அடுத்த தலைமுறையினரையே அடக்கம் செய்து விடுமா என்பது போகப் போகத் தெரியும் !

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…